இந்திய அரசியல்

அமித்ஷாவை மாட்டிவிட்ட எடியூரப்பா??!!

Share

அமித்ஷாவை மாட்டிவிட்ட எடியூரப்பா??!!

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்த மத சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்து குமாரசாமியை வீட்டுக்கு அனுப்ப எடியூரப்பா தீட்டிய திட்டம் கட்சி தாவல் தடை சட்டத்தை கேலிக்குரியதாக்கியதுதான்.

17 உறுப்பினர்கள் கட்சி மாறினால்தானே தகுதி இழப்பு ?

அந்த 17 பேரையும் ராஜினாமா செய்ய வைத்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டு அவர்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்த்தார் எடியூரப்பா.

அவர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்தார்கள். எங்களுக்கு எதுவும் பங்கில்லை  என்று அன்று சொன்னார் எடியூரப்பா.

இன்று ஆட்சிக்கு வந்த பிறகு கட்சி மாறிய அவர்களுக்கு தேர்தலில் போட்டி போட வாய்ப்பு கொடுக்க நினைத்த அவருக்கு உட்கட்சியில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக ;உறுப்பினர்கள் கூட்டத்தில் ‘தியாகம் செய்த அவர்களுக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்க வில்லை என்றால் நான்  குற்றம் செய்தவன் ஆகி விடுவேன். எனது முயற்சியாலும் பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா வழி காட்டுதல் படியும்தான் இந்த 17 பேரும் ராஜினாமா செய்தார்கள். மும்பை ரிசார்ட்டில் அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் அவர்கள் பாதுகாக்கப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்கும் வகையில் பாஜக பிரமுகர்கள் நடந்து  கொள்ள வேண்டும்.” என்று எடியூரப்ப பேசிய பேச்சு சமூக வலை  தளத்தில் வீடியோ ஆடியோ வெளியாகி அதை எதிர்கட்சிகள் பிரச்னை ஆக்கி அவரது ராஜினாமாவை கோரியுள்ளார்கள்.

இனி இது நீதிமன்றம் செல்லும். அமித் ஷாவுக்கு தலைவலி கொடுக்கும். எடியூரப்பா மறுப்பார். ஆனால் சோதனையில் உண்மையா பொய்யா என்று தெரிந்து விடுமே?

இடைத்தேர்தலில் இந்த பேச்சு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆட்சியை பிடிக்கவும் கலைக்கவும் பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு கர்நாடகாவில் அது கடைப்பிடித்த மலிவான தத்திரங்கள் சாட்சி சொல்லி நிற்கும்.

This website uses cookies.