நிலம் கையகப் படுத்தும் சட்டம் முந்தைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப் பட்டு இப்போதைய மோடி அரசால் சில திருத்தங்களோடு அவசர சட்டமாக கொண்டுவரப்பட்டு நாடாளுமன்ற மேலவையில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தை கூட்டியாவது சட்டமாக கொண்டு வர பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கூட்டணி கட்சிகள் சிலவும் , இது விவசாயிகளுக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் எப்படியாவது இந்த சட்டத்தை கொண்டு வர மோடி துடிப்பது ஏன்?
பா. ஜ.க. தலைவர் அமித் ஷா இதற்காக சங்க தலைவர்களை பார்த்து சம்மதம் கேட்டு விளக்கியிருக்கிறார். எதற்காக? சட்டம் வந்தால்தான் வெளி நாட்டு முதலாளிகள் நிதிகளைக் குவிப்பார்களாம்! மோடியின் ' மேக் இன் இந்தியா " திட்டம் வெற்றி அடையுமாம்?
இந்த சட்டம் முன்பே அமுலில் இருப்பதுதான்! பிரச்சினை என்னவென்றால் இப்போது இருக்கும் சட்டத்தில் விவசாயிகளுக்கு இருந்த பாதுகாப்பு இந்த சட்டத்தில் நீக்கப் படுகிறது.
அதாவது, தேசிய பாதுகாப்பு தொடர்பாகவோ , ராணுவம் தொடர்பாகவோ, மின்சார திட்டத்தை உள்ளடக்கிய ஆதார வசதிகள் தொடர்பாகவோ, தொழில் பூங்காக்கள் தொடர்பாகவோ ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் தொடர்பாகவோ நிலத்தை கையகப் படுத்தும்போது , அது விவசாயம் செய்ய ஏற்ற நிலமா என்பது கவனிக்கப் படவேண்டும் என்று இருந்த நிபந்தனை இப்போது நீக்கப்பட்டு விட்டது. அதாவது அந்த நிலம் விவசாயம் செய்கின்ற நிலமா என்பதை பார்க்க தேவை இல்லை..
அதேபோல் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப் படாவிட்டால் நிலம் விவசாயிகளுக்கே திரும்ப தந்து விட வேண்டும் என்ற பிரிவும் நீக்கப் பட்டு விட்டது.
இழப்பீடு அதிகப் படுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப் பட வில்லை.
கவனிக்க வேண்டிய அம்சம் ,- தொழில் பூங்காக்கள் ( இன்டஸ்ட்ரியல் காரிடார் ) அதாவது வெளி நாட்டவர்கள் இந்திய விவசாயத்தை அழித்தாலும் கூட தொழில் பெருகும் என்றால் அதற்கு இந்த அரசு கவலைப்படாது.
மோடி மீது அதிகமாக கூறப்படும் குற்றச்சாட்டு – அவர் கார்பரேட் நிறுவனங்களின் கூட்டாளி என்பதுதான்.
அதானியுடன் ஆஸ்திரேலியா சென்று வியாபார ஒப்பந்தம் போட்டது- பதினைந்து லட்சம் சூட்டை நாலேகால் கோடிக்கு ஏலம விட்டது- தொள்ளாயிரம் கோடி அளவு தேர்தல் நிதி வாங்கி செலவு செய்தது. – எல்லாம் ஏழை பங்காளர் செய்யும் செயல்களாக தெரிய வில்லை.
மக்கள் விரோத சட்டத்தை எப்படியாவது கொண்டு வந்து விட மோடி பிடிவாதம் காட்டினால் ,, பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் அது நிறைவேறினாலும் கூட அமுல் படுத்த முனையும்போது , அரசே ஆட்டம் காணும் விதத்தில் , மோசமான எதிர்ப்புகளை விவசாயிகள் காட்டுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
—
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)