தயாநிதி மாறன் தொலை தொடர்பு துறை அமைச்சராக மத்தியில் இருந்தபோது பெற்றிருந்த ஒரு தொலைபேசி இணைப்பில் 323 இணைப்புகள் பதுக்கப்பட்டு சன் டி.வி. யில் இணைத்து முறைகேடு புரிந்தார் என்ற குற்றச்சாட்டு விசாரணையில் இருந்து இப்போது சன் டி.வி. ஊழியர்கள் மூவர் கைது செய்யப் பட்டநிலையில் இதற்கெல்லாம் காரணம் ஆடிட்டர் குருமூர்த்தி தான் என்று தயாநிதி மாறன பேட்டி கொடுக்க பிரச்சினை நீதிமன்றத்தையும் தாண்டி தனிப்பட்ட முறையில் போய் நிற்கிறது.
” ஏன் மீது மான நஷ்ட வழக்கு போடுங்கள் என்றேன். ஏன் போடவில்லை. ;மானம் உள்ளவர்கள்தானே மான நஷ்ட வழக்கு போட முடியும்” -ஆடிட்டர் குருமூர்த்தி .
சி.பி.ஐ.அரசியல் காரணங்களுக்காக பயன் படுத்தப் படுகிறது என்று முலாயம், மாயாவதி, மமதா , என்று பலர் பிரச்சனைகளில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. யார் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் அவர்களது கையாளாக சி.பி.ஐ. மாறி விடுகிறது.
எட்டாண்டுகளுக்குப் பிறகு விசாரணைக்கு ஒத்துழைத்து வரும் நிலையிலும் அவசர அவசரமாக கைதுப் படலம் துவங்கி இருக்கிறது.
யார் குற்றம் இழைத்தாலும் தண்டிக்கப் பட வேண்டும் . அரசியல் புகுந்து சாட்சியங்களை உருவாக்குவது என்பது அநீதி.
சட்டம் தன் பணியை செய்வதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது.
ஒரே இணைப்பு இருந்ததா அல்லது ஒரு இணைப்பில் பல இணைப்புகள் பொருத்தப்பட்டு இருந்ததா என்பது விசாரணைக்கு உட்பட்டது.
எது எப்படி இருந்தாலும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவது ஏற்றுகொள்ள முடியாதது.
அதிகாரம் கையில் இருந்தால் துணிவு தானாக வரும் என்பதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு உதாரணம்.
—
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)