இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினாலும் குஜராத்தின் படேல் சமூகத்தினர் ஹர்திக் படேல் தலைமையில் நடத்தும் போராட்டத்தின் உண்மை நோக்கம் இட ஒதுக்கீடு கொள்கையை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்பதே!
படேல் சமூகத்தினர் வசதி மிக்கவர்கள். முற்பட்ட சமூகத்தினர் என்று வகைப் படுத்தப்பட்டவர்கள் .
திடீரென்று பத்து லட்சம் பேரைக் கூட்டி ஒன்று இட ஒதுக்கீட்டிலிருந்து நாட்டை விடுவிப்போம் ! அல்லது எல்லாரையும் இட ஒதுக்கீட்டின் அடிமைகள் ஆக்குவோம் ! என்று குரல் கொடுப்பதன் நோக்கம் வெளிப்படையாக தெரிகிறது. யாருக்கும் கிடைக்கக் கூடாது இட ஒதுக்கீடு சலுகை!!
தனக்கு தொடர்பு இல்லாதது போல் காட்டிக் கொள்ள ஆர்.எஸ் எஸ் முயற்சித்தாலும் மக்கள் புரிந்து கொள்வார்கள். மூன்றில் ஒரு பங்கு பா ஜ க சட்ட மன்ற உறுப்பினர்கள் பட்டிதார்கள் என்கிற படேல்கள் . .பா ஜ க விற்கு எதிரான போராட்டமாக இதை எடுத்துக்கொள்ள முடியாது.
பொது கோட்டாவிலும் இடம் பெறுகிற வர்களுக்கு தனியிடம் ஏன் ??? இதுதான் அவர்கள் வைக்கிற வாதம்.
பொது கோட்டா என்று ஒன்றில்லை. பொதுப்போட்டி என்றுதான் இருக்கிறது. பொதுபோட்டியில் தாழ்த்தப்பட்டோர் பிற்பட்டோர் போட்டியிட என்ன தடை? தகுதி படைத்தவன் போட்டியிடுகிறான் . தகுதி மறுக்கப் பட்ட இதர பிரிவினர் சலுகை கோருகிறார்கள் ..
இதில் என்ன முரண்பாடு?
தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்தில் உள்ளது. மாற்ற முடியாது. மற்றவர் இட ஒதுக்கீடு பின்னால் வந்தது. ஆனால் அடிப்படை ஒன்றுதான் . சமூக , கல்வி ஆகிய இரண்டின் அடிப்படையில் பிற்பட்ட தன்மை. ஆம். நீ தாழ்த்தப்பட்டவன் , நீ பிற்பட்டவன் , உன்னுடைய இடம் இது , மற்றவர்களுடைய இடம் அது என்றெல்லாம் சமுதாயத்தையே பிரித்துப்போட்ட வேத விதிகளை சட்டமாக வைத்திருந்த காலம். நீ படிக்கக் கூடாது , படித்தால் நாக்கை அறுப்பேன் வேதத்தை கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவேன் என்றெல்லாம் எழுதி வைத்து அடக்கி ஒடுக்கி வைத்திருந்த காலம். எனவேதான் சமூக கல்வி தன்மையை மட்டும் அடிப்படையாக அரசியல் சட்டம் வகுத்து ஒதுக்கீடு வழங்கியத.
பொருளாதார ரீதியில் அல்ல. இருந்தாலும் உச்சநீதி மன்றம் கிரீமிலேயர் என்கிற பசையுள்ளவர்கள் என்ற அடிப்படையில் பிற்பட்டோரில் உள்ளவர்களே கூட ஒதுக்கீடு உரிமை இல்லாதவர்கள் என்று தீர்ப்பு அளித்தது..
ஐம்பது சதத்துக்கு மேல் ஒதுக்கீடு கூடாது என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பு கூட தமிழ் நாட்டில் 69 % என்ற அளவில் ஆண்டாண்டு இடங்களை அதிகப் படுத்தி அமுல்படுத்தப் பட்டு வருகிறது.
வி. பி. சிங் மண்டல கமிஷன் பரிந்துரைப்படி 27 % ஒதுக்கீடு செய்ய முனைந்த போதும் இதே போல்தான் போராட்டம் வெடித்தது என்பது மறக்க முடியாது.
மருத்துவர் ராமதாஸ் போன்றவர்கள் கூட எல்லாருக்குமே அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்து விடலாம் என்கிறார்கள்.
இதில் மறைந்திருக்கும் சூழ்ச்சியை அவர்கள் . கவனிக்க தவறுகிறார்கள்.
சாதியை உறுதி செய்ய எல்லா சாதிகளும் வேற்றுமை மறந்து ஒன்றுபடுவதை தடுக்க எல்லாருக்கும் சாதி அடிப்படையில் ஒதுக்கீடு தவிர வேறு ஆயுதம் அவர்களுக்கு கிடைக்காது. நம் கையை வைத்து நம் கண்ணை குத்தும் கலை இது என்பதை தவிர வேறு என்ன?.
ஒர்வேளை சாதி நீடிக்க வேண்டும் என்று ஆசைபடுபவர்கள் வேண்டுமானால் எல்லாருக்குமே சாதி அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க விரும்பலாம்.
ஹர்திக் படேல் குஜ்ஜார் இனத்தவரையும் சேர்த்துக் கொண்டு போராட திட்டமிடுகிறார். எல்லா முற்பட்ட சமூகத்தவரையும் இணைத்து ஒதுக்கீட்டுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணை க்கிறார். இதற்கு ஆர் எஸ் எஸ் துணை போகிறது.
ஏனென்றால் அப்போதுதானே தலையில் பிறந்தவர்கள் முதல் நிலையில் நீடித்து குருவாக கோலோச்சி ஆன்மிக பீடங்களை அலங்கரிக்க முடியும். கீழே இருப்பதற்கு யார் போட்டியிட்டால் அவர்களுக்கு என்ன/ ?
இவ்வளவு பேசுகிறார்களே ஒதுக்கீடு என்ன விளைவுகளை ஏற்படுத்தியி ருக்கிறது என்று ஏன் இவர்கள் ஆய்வு செய்து முடிவை வெளியிட மறுக்கிறார்கள். அரசியல் சட்டத்தில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறதே?
வர்ணாசிரம தர்மம் நிலைக்க பாடுபடும் யுத்தத்தின் ஒரு பகுதிதான் படேல்களின் போராட்டம். அதை வெற்றி பெற அனுமதிக்க கூடாது.
ஜனநாயக நெறிமுறைகளின் படி நடக்கும் போராட்டம் அல்ல இது. இருந்தால் பேச்சு வார்த்தைக்கு
உடன் பட்டிருப்பார்களே?
காங்கிரஸ் அல்லாத அரசுகள் மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் ஒதுக்கீடு பிரச்சினை முன்னுக்கு வருவது முதலில் வி பி சிங் ஆட்சிக்காலத்திலும் இப்போது நரேந்திர மோடி ஆட்சிக்காலத்திலும் தொடர்கிறது..
சதியின் ஆணிவேரை கண்டறிந்து களைவோம்??!!!!