Home Latest News தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்ட மோசடிக்கு மத்திய அரசு அனுமதி!!!

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்ட மோசடிக்கு மத்திய அரசு அனுமதி!!!

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்ட மோசடிக்கு மத்திய அரசு அனுமதி!!!

1993  ல் மத்திய அரசின் பெட்ரோலிய இயற்கை எரிவாயு அமைச்சரவையின் கீழ்  Directorate General of hydro Carbon என்ற அமைப்பு  ஏற்படுத்தப் பட்டது.

அது எண்ணெய் எரிவாயுவிற்கு மாற்றாக இதர காற்று எரிவாயு கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கத்தை கொண்டது.

முன்பே மீத்தேன் , ஷெல் வாயு திட்டங்களை அமுல் படுத்த திட்டமிட்ட போது போது மக்களின் எதிர்ப்பால் அந்த திட்டங்கள் கைவிடப் படுவதாக அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அறிவித்தார்.

இப்போது எதிர்ப்புகளை திசை திருப்பி  வேறு பெயர்களில் அதே திட்டத்தை அமுல் படுத்த மத்திய அரசு திட்டமிடுகிறது.

புதுக்கோட்டை நெடுவாசல் , காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இந்த விவசாயிகளை வேரறுக்கும் திட்டம் நடைமுறைப் படுத்த இருந்தது.

மண் எண்ணெய் எடுக்கிறோம் அதன் பின்  நிலம் உங்களுக்கே என்று  ஆசை வார்த்தை காட்டி ஏதுமறியா விவசாயிகளிடம் நிலங்களை கையகப் படுத்தி விட்டு இப்போது அதன் விளைவாக நிலங்கள் கருக ஆரம்பித்ததும் விவசாயிகள் விழித்துக் கொண்டு எதிர்ப்பை கையில் எடுத்திருக்கிறார்கள்.

2000 அடிக்கும் மேலே குழாய் தோண்டி நீரை உறிஞ்சி எடுத்ததன் விளைவாக நிலங்கள் காயத் தொடங்கின.     நீர் மட்டம் குறைந்தது.   முன்பு ஓ ஏன் ஜி  சி செய்த வேலையை இப்போது ரிலையன்ஸ் கம்பெனி செய்ய இருக்கிறது.

இதற்கான ஒப்பந்தம் கர்நாடகாவை சேர்ந்த பா ஜ க பிரமுகர் ஒருவருக்கு கொடுக்கப்  பட்டிருக்கிறதாம்.

இப்போது புதுக்கோட்டை மாவட்ட மக்கள் போராடத் தொடங்கி விட்டார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் எதிர்க்கின்றன.   மாநில அரசின் ஆட்சேபணையை மீறி  மத்திய அரசு செயல்பட முடியுமா என்ன?   ஆனால் காரைக்கால் பகுதியில் குழாய் தோண்ட புதுச்சேரி அரசின் அனுமதி பெறப பட வில்லை  என்று  அதன் முதல்வர் கூறுகிறார்.    என்ன நடக்கிறது இங்கே?

பெற்றோலிய எரிபொருட்கள் கிடைப்பது பாலைவன பகுதிகள் கொண்ட நாடுகளில்.   அங்கு விவசாயம்  பாதிக்கும் என்ற கேள்வியே எழவில்லை.    ஆனால் இங்கு அதுவா நிலைமை.

எந்த திட்டமாக இருந்தாலும் அது அந்த பகுதி  மக்களை எந்த வகையிலாவது பாதிப்பதாக இருந்தால் அமுல் படுத்தக் கூடாது.    ஆனால் மறைமுகமாகவும் ரகசியமாகவும் இந்த திட்டத்தை பெருமுதலாளிகள் லாபமடையும்வகையில்  செயல் படுத்த மத்திய அரசு முனைகிறது.

தமிழர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தவிர வாழ முடியாது என்ற நிலையை அரசே ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்.?

இது மட்டுமல்ல.   தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெறும் எண்ணெய் கிணறுகளின் செயல்பாடுகள் பற்றியும் மத்திய அரசு வெளிப்படையான புள்ளி விபரங்கள் அடங்கிய அறிக்கை வெளியிட வேண்டும்.

ஏற்கனவே கூடங்குளம் அணு மின் திட்டம் அந்த பகுதி மக்களின் ஒத்துழைப்பு இல்லாமலேயே மத்திய அரசு  கட்டாயமாக நடைமுறைப் படுத்தி கொண்டு இருக்கிறது.

அதேபோல் பல பகுதிகளில் ஓ ஏன் ஜி சி நிறுவனம் எண்ணெய் வளத்தை சுரண்டிக்கொண்டிருகிறது.

அதனால் விளையும் நீண்ட கால பாதிப்புகள் பற்றி விவசாயிகள் அறியாமல் இருக்கிறார்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டாலே தர மறுக்கிறார்கள்.    மக்களை அறியாமையில்  தள்ளி அவர்களுக்கு நல்லது  செய்கிறோம் என்று எந்த அரசு சொன்னாலும் அது மோசடிதான்.

உடனடியாக மத்திய அரசு தமிழகத்தில் எந்த இடத்திலும் நீர் கரிம வாயு எனப்படும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மாட்டோம் என்று அறிவித்து மக்கள் போராட்டங்களை தவிர்க்க உதவ வேண்டும்.

தவறினால்     ,போராட்டம் வெடித்தால்  அது மத்திய அரசின்  மீதான நிரந்தர வெறுப்பாக மாறிவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்தால் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here