pon-manickavel
ரயில்வே ஐ.ஜி அந்தஸ்தில் இருந்த பொன்.மாணிக்கவேலை சிலை கடத்தல் பிரிவுக்கு உயர் நீதிமன்ற உத்தரவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியத்தை தொடர்ந்து அவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணி புரிந்து ஓய்வும் பெற்றுவிட்டார்.
அவரை உயர் நீதிமன்றம் மேலும் ஓராண்டுக்கு சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அமைச்சர்கள் சிலரை காப்பாற்றவே சிலை கடத்தல் விசாரணைகளை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட அதையும் உயர்நீதி மன்றம் ரத்து செய்து விட்டது.
ஐ ஜி அந்தஸ்திலிருந்த பதவியை டிஜிபி அந்தஸ்த்துக்கு உயர்த்தி அபய் குமார் சிங் என்பவரை சிலை கடத்தல் பிரிவுக்கு ஏடிஜிபி-ஆக அரசு நியமித்தது. ஒருவேளை உயர்நீதிமன்றம் பொன். மாணிக்கவேலு-வுக்கு பதவி நீடிப்பு வழங்கும் என்று ஊகித்தார்களோ என்னவோ?
இப்போது சிலை கடத்தல் பிரிவுக்கு இரண்டு தலைவர்கள். ஒருவர் உயர் நீதி மன்றத்தால் நியமிக்கப் பட்ட சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல். மற்றொருவர் அரசால் ஏடிஜிபி அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட அபய் குமார் சிங். இருவரும் இணைந்து பணியாற்ற முடியாது. யாராவது ஒருவர்தான் முடிவெடுக்க முடியும். யார் அவர் ?
அரசு உயர் நீதிமன்றத்தின் நியமனத்தை ஏற்றுக் கொண்டால் அரசு நியமனம் செல்லாது அல்லது செயல்படாதது என்றாகிவிடும்.
ஏற்கெனவே பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக சம்பளம் பெறவில்லை என்றும் ரயில்வே ஐ ஜி சம்பளம் மட்டுமே பெற்று வந்ததாகவும் கூறுகிறார்.
சிலை கடத்தல் பிரிவு தொடங்கி 28 ஆண்டுகளில் செய்யாததை பொன் மாணிக்கவேல் இந்த ஓராண்டில் மட்டும் சாதித்ததாக உயர் நீதிமன்றம் பதிவு செய்கிறது.
250 க்கும் மேற்பட்டு சிலைகளை பறிமுதல் செய்தது 10-க்கும் மேற்பட்டு ஐம்பொன் சிலைகளை ஆஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து மீட்டு 47 பேரை கைது செய்தது என்று பொன் மாணிக்கவேல் ஆற்றிய சாதனைகள் பேசப் படுபவைதான் என்றாலும் தமிழக அரசு இதை எப்படி எடுத்துக் கொள்ளும் என்பதுதான் கேள்வி?
சிபிஐ-க்கு விசாரணைகளை மாற்றியதை அரசு ஒப்புக் கொள்ளவில்லையே? நீதி மன்றம்தான் ரத்து செய்தது.
உயர் நீதிமன்றம் அபய் குமார் சிங் நியமனத்தை ரத்து செய்யவில்லை. ரத்து செய்யாமல் அதே பொறுப்பிற்கு உயர் நீதி மன்றம் ஓய்வு பெற்ற அதிகாரியை சிறப்பு அதிகாரியாக நியமித்ததை அரசு ஏற்றுக் கொள்ளுமா அல்லது உச்ச நீதி மன்றம் செல்லுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
எது எப்படியோ சிலை கடத்தல் பிரிவு சிறப்பாக செயல் பட்டு குற்றவாளிகளை நீதியின் கூண்டில் நிற்க வைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
This website uses cookies.