Home Blog Page 100

சபரிமலையில் பெண்களுக்கு தடை சரியா??!! நீக்கப்பட வேண்டிய நடைமுறையா??!!

காலத்துக் கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் வல்லமையைப் பெற்றிருப்பதால்தான் மதங்கள் வாழ்ந்து கொண்டிருகின்றன.

எந்த மதமாக இருந்தாலும் தங்களை மாற்றிகொண்டிருக் கிறார்கள்.

இந்து மதம் ஒரு மதமே அல்ல .       பின் ஏன் அதை மதம் என்று அழைக்கிறார்கள்?.

எல்லாம் ஒரு வசதிக்காகத்தான்.

அய்யப்ப பக்தி தமிழர்களிடம் மேலோங்கி நிற்பது உண்மைதான்.       48  அல்லது  41    நாட்கள் விரதம் இருந்து சுவாமியை தரிசிப்பது ஒரு புனிதமான அனுபவமாக உணர்கிறார்கள்.

அதெல்லாம் பல இடங்களில்   ஒரு வாரம் பத்து நாட்கள் என்றும்   சில இடங்களில் ஒரே நாள் என்று சுருங்கி  அப்போதே  கூட இருமுடி கட்டி பதினெட்டாம்படி அடிவைத்து தாண்டி வழிபடுகிறார்கள்.

பக்தி பல நிலைகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பெண்களை அவர்களுக்கு மாத விலக்கு காலத்தில் ரத்தப் போக்கு இருப்பதால் விதிப்படியான  41  நாள் அல்லது   48 நாள்  விரதத்தை அவர்களால் கடைபிடிக்க முடியாது என்ற காரணத்தினால் அவர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கும் தடை சரியே என்று கேரள உயர்நீதி மன்றம் சொன்ன தீர்ப்பு செல்லுமா என்பது கேள்விக்குறி.

உச்ச நீதி மன்றம் அந்தத் தீர்ப்பின் மீது விரைவில்  என்ன தீர்ப்பு  சொல்லும்    என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது .

மாத விலக்கு என்பது இயற்கையானது.     அதற்கும் வழக்கமான பணிகளை  செய்வதற்கும் தொடர்பில்லை என்று ஒப்புக் கொண்டுதான் பெண்கள் அரசுப்  பணிகளில் தொடர்கிறார்கள்.

அலுவலகம் போகலாம்  கோயிலுக்கு போகக் கூடாது என்பது அறிவுக்குப்  பொருத்தமானதா?       செயற்கை கோள்களில் பெண்கள் மாதக் கணக்கில் பயணம் செய்து சாதனை செய்வதற்கு இவைகளெல்லாம் தடைகள் இல்லையென்றால் இறைவனை தரிசிக்க மட்டும் தடையாக அமைய அனுமதிக்கலாமா?

உச்சநீதி மன்றம் இந்த தடைகளை உடைக்கட்டும்.

 

 

சசிகலா புஷ்பா வை அறைந்தாரா ஜெயலலிதா??? பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு கிளப்பிய புயல்???

சசிகலா புஷ்பாவையும் திருச்சி சிவாவையும் இணைத்து மார்பிங் செய்து நெருக்கமாக இருப்பதுபோல் புகைப்படங்கள் பத்திரிகைகளில் செய்திகள்  வந்து பின்பு அடங்கிப் போனது.

இப்போது டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவா வெளியே வரும்போது எதிரே வந்த அ தி மு க எம்பி சசிகலா புஷ்பா அவரை சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தார் என்ற செய்தி வெளிவந்து பரபரப்பை கிளப்பியது.

ஜெயலலிதாவையும் அதிமுக அரசையும் மோசமாக பேசியதால் அடித்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்தார் சசிகலா புஷ்பா.

சிவா புகார் ஒன்றும் கொடுக்கவில்லை.    சென்னை திரும்பி கலைஞரை சந்தித்து விளக்கம் கொடுத்துவிட்டு அமைதியாக இருக்க சொன்னார் கலைஞர் என்று சொல்லிவிட்டு அமைதியானார் சிவா.

சசிகலா புஷ்பா தம்பிதுரையை அழைத்துகொண்டு ஜெயலலிதாவை பார்த்ததாக செய்திகள் வந்தன.    சசிகலா புஷ்பா செய்தி ஏதும்வெளியிடாத நிலையில் இன்று  பாராளுமன்ற மேலவை கூடிய   போது சசிகலா சுமத்திய குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஜெயலலிதா தன்னை ராஜினாமா செய்ய சொல்லி  வற்புறுத்துவதாகவும் தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும்   தனது உயிருக்கு ஆபத்து  இருப்பதாகவும் பாதுகாப்பு வேண்டும் என்று கதறியபடி புகார் சொல்லி   பேச   அ தி மு க உறுப்பினர்கள் அவர் பேச அனுமதிக்க கூடாது என்று குரல் எழுப்ப  ,   காங்கிரசின்  குலாம் நபி ஆசாத் உறுப்பினர் எவரையும் பேசக்கூடாது என்று தடுக்கும் உரிமை  அ தி மு க உறுப்பினர்களுக்கு இல்லை  என்று ஆதரவுக் குரல் எழுப்ப , எழுத்து மூலம் புகார் கொடுக்க வெங்கையா நாயுடு கூற , தமிழகம் இதுவரை கேட்டிராத திரை மறைவு சம்பவங்கள் அம்பலத்துக்கு வந்திருக்கின்றன.

ஜெயலலிதா அடித்தாரா என்பது ,உடன்  தம்பிதுரை இருந்தார் என்ற செய்தியுடன் சேர்த்து உணர வேண்டிய செய்தி.     அவர் சாட்சி  சொல்வாரா அடித்தார்  ஜெயலலிதா என்று?

ஜெயலலிதா மீது ஒருவர் இத்தகைய குற்றச்சாட்டை சுமத்துவதும்  அவர் கட்டளையிட்டாலும் ராஜினாமா  செய்ய மாட்டேன் என்று பாராளுமன்றத்திலேயே அவர் கட்சி எம்பியே  சவால் விடுவதும் ஜெயலலிதா இதுவரை சந்தித்திராத பிரச்சினைகள் .

இதை அவர் சரியாக கையாள வில்லையென்றால் இனி எதிர் காலத்தில் யார் வேண்டுமானாலும் எதிர்த்து கலகம் செய்துவிட்டு நிற்க முடியும் என்ற நம்பிக்கையை அவரது எதிரிகளுக்கு விதைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடி வாங்கிக்கொண்டு அமைதியாகி விடும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்க முடிவு செய்த சசிகலா புஷ்பா வித்தியாசமானவர்தான்.

எல்லார் மனதிலும் விடை தேடி அலையும் ஒரே கேள்வி ,   ஜெயலலிதா சசிகலா புஷ்பாவை கன்னத்தில் அறைந்தாரா இல்லையா என்பதுதான்.

குற்றச்சாட்டை பாராளுமன்றத்திலேயே சுமத்திய  பிறகு விடை கிடைக்காவிட்டால் பாராளுமன்றத்துக்கு என்ன மரியாதை???!!!

 

 

அப்துல் கலாமிற்கு சிலை வைத்தது இஸ்லாத்துக்கு எதிரானதா?? ஜவாஹிருல்லாவின் கருத்தில் நியாயம் இருக்கிறதா??~!!

மறைந்த குடியரசுத் தலைவர்  ஏ பி ஜெ அப்துல் கலாமிற்கு ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற  இடத்தில் மணி மண்டபம்  கட்டி அதில் அவரது  ஏழு அடி உயர வெண்கல சிலையை மத்திய அரசு  நிறுவியிருக்கிறது.

அதற்கு மனித  நேய மக்கள் கட்சி தலைவர்   ஜவாஹிருல்லா கருத்து சொல்கையில் அவருக்கு  சிலை வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றார்.    காலப் போக்கில் அது வழிபடுமிடமாக மாறும் அபாயம் இருப்பதாக அவர் கருத்து இருக்கிறது.

முஸ்லிம்கள் சிலை வணக்கம் செய்யாதவர்கள்.     நாயகத்தையே அவர்கள் உருவ வடிவில் வடிப்பதில்லை.       நாயகத்துக்கு உருவம் கொடுத்து கார்ட்டூன் போட்ட விவகாரத்தில் ஐரோப்பாவில் பெறும் பிரச்சினையை கிளப்பியது மட்டுமல்ல பல கொலைகளுக்கும் காரணமாக அமைந்தது.

உருவம் இல்லாத ஒருவருக்கு உருவம் கொடுப்பது இகழும் நோக்கம் கொண்டது என்று ஆட்சேபிப்பதில் பொருள் இருக்கிறது.     ஆனால்   முஸ்லிம் தலைவர்கள் பலரும்  அவர்களை புகைப்படம் எடுப்பதிலோ அதை பெரிதாக விளம்பரம் செய்வதிலோ பெருத்த ஆட்சேபம் செய்ததில்லை.

அப்துல் கலாம் அவர்களுக்கு வைத்திருக்கும் சிலை அவரது நினைவைப் போற்றும் வகையில் அமைந்தது மட்டுமே.       யாரும் சிலை வணக்கம் செய்யப் போவதில்லை.   அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

மாலை போட்டு மரியாதை செய்வது வழிபடுவது ஆகாது.

சில  முஸ்லிம் தலைவர்கள்  வணக்கம் சொன்னால்கூட எதிர் வணக்கம் சொல்வதில்லை .    மாறாக வாழ்க என்றோ நன்றி என்றோ வேறு வார்த்தைகளில் பதில் சொல்வார்கள்.   காரணம் அவர்கள் வணக்கம் சொல்வதே வணங்குவது என்று பொருள் கொள்கிறார்கள்.    வணக்கம் சொல்லும்போது தலை யை சற்று குனிந்து சொல்வது வழக்கம்.

அல்லாவைத்தவிர வேறு  யாருக்கும் தலை வணங்கக் கூடாது  என்ற கொள்கைக்கும்  சக மனிதனுக்கு வணக்கம் தெரிவிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை தெரியாமாலா சொல்கிறோம்!?

ஒருவேளை பா ஜ க அரசு இந்த மரியாதையை அப்துல் கலாம் அவர்களுக்கு செய்ததின் மூலம் பா ஜ க முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற கருத்துக்கு பலவீனம் ஆகிடுமோ என்ற அச்சம் ஜவாஹிருல்லாவிற்கு இருக்குமேயானால் அது சரியே.

பா ஜ க உள்நோக்கத்தோடு செய்திருந்தாலும்  அதையும் புரிந்து கொள்ளும் சக்தி படைத்தவர்கள் நாம்.

பா ஜ க வை விமர்சிக்க வேறு  எத்தனையோ வழிகள் இருக்கின்றன.

அப்துல் கலாமிற்கு தமிழர்கள் செய்யும் மரியாதையில் அதை காட்ட வேண்டாம்.

தமிழர்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் கலாம்  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக இருப்பதே நமக்கு பெருமை.

கள்ளுக்கு தடையில்லை ??!! பிற மது வகைகளுக்கு மட்டுமே தடை??! பீகார் அரசு ஆணை !!!

மதுவிலக்கை பீகாரில் அமுல்படுத்த முன்வந்த நிதிஷ் குமார் அரசு அகில இந்திய அளவில் பெருத்த வரவேற்பை பெற்றது.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமுல்படுத்த கோரியவர்கள் கூட பீகாரை மேற்கொள் காட்டித்தான் பேசினார்கள்.

நேற்று  பீகார் சட்டமன்றத்தில் மதுவிலக்கு  சட்டத்தை தாக்கல் செய்த நிதிஷ் குமார் போதை தரும் பொருட்களின் பட்டியலில் இருந்து கள்ளை  மட்டும் விலக்கி இருந்தார்.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  துணை முதல்வரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி பிரசாத் பேசுகையில் கள் இறக்கும் சமுதாயமான பாசி வகுப்பினருக்கு தகுந்த மாற்று வருவாய் ஏற்பாடு செய்து தரும் வரையில்  கள்ளுக்கு தடை இருக்காது என்றார்.

தமிழ்நாட்டில் கூட கள் வேண்டுவோர் கழகம் சார்பில் கள் போதை வஸ்து அல்ல அது ஒரு உணவுப் பொருள் என்று வாதிட்டு வருகிறார்கள்.

தென்னை பனை மரங்களின் நீர் எப்படி போதை வஸ்து ஆகும் என்பது அவர்களின் வாதம் .

அதையே பத நீராக வடித்தால் அது மிகச் சிறந்த சத்து பானமாகும் .

எது எப்படியோ கள் தடை செய்யப் பட வேண்டிய போதைப் பொருள் அல்ல என்ற விவாதத்தை பீகார் அரசு  துவங்கி இருக்கிறது என்று எடுத்துக்  கொள்ளலாம்.

மண்டகப்படி உரிமை அல்லது மதமாற்றம் – மிரட்டும் நாகை தலித்துகள்??!!! திருவிழாவை ரத்து செய்த ஆட்சியர்!!! தீர்வு என்ன???!!!

நாகை மாவட்டம் கள்ளிமேடு கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிகிழமை திருவிழா உற்சவத்தில் தங்களுக்கு ஒருநாள் உற்சவம் உபயத்தை தர வேண்டும் என்று ஆதி திராவிடர்கள் கோரிக்கை வைத்தனர்.

மற்ற சாதியினர் நடைமுறையை மாற்றி தர முடியாது என்று மறுத்து விட்டனர்.

இவர்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறுவதாக மனு கொடுக்க அவர்களுக்கு குரான் புத்தகமும் கொடுக்கப் பட்டிருக்கிறது.     இடையே  கிறிஸ்தவர்களும் தங்கள் மதத்துக்கு மாற்ற முயற்சிக்க பலரும் சமாதானம்  பேசி ஆட்சியர் தலைமையிலும்  பேச்சு வார்த்தை நடந்து அதிலும் எந்த முடியும் எட்டப்படவில்லை.

கடைசியில்  மாவட்ட ஆட்சியர் நடக்க இருந்த திருவிழாவை ரத்து செய்து உத்தரவிட்டு  தற்காலிகமாக இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இடையே கரூரில் மலைகோவிலூர் லிங்கதுபாறை காலனி  ஆதி திராவிடர்கள்  தாங்கள் 2009 ல் கட்டிய  மகாசக்தி மாரியம்மன் கோவிலை சாதி இந்துக்கள் கைப்பற்ற முயற்சிப்பதை எதிர்த்து நீதி மன்றத்தை நாடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். .

சமாதான கமிட்டி கூட்டம் கூட இருக்கிறது.

இந்து ஒற்றுமை பற்றி பேசுபவர்கள்.     இந்து சாதிகளுக்குள் முதலில்  ஒற்றுமையை உறுதி படுத்தட்டும்.

இந்துக்களே இந்துக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத நிலை நீடிக்கலாமா??!!

சாதிகளை பிரித்து வைத்து அரசியல் செய்பவர்கள்  ஒன்று படுத்த  முயற்சிப்பார்களா ?     எப்படியோ போகட்டும் என்று விட்டு விடுவார்களா ???!!!

 

 

பாலாற்று தடுப்பணையில் தற்கொலை செய்த தமிழக விவசாயி??!

33  கிலோ மீட்டர் மட்டுமே பாயும் பாலாற்றில் ஆந்திர அரசு  22  தடுப்பணைகள் கட்டியிருக்கிறது.

புல்லூரில்   5   அடியில் இருந்து  12  அடியாக உயர்த்தும் வேலையை ஆந்திர அரசு துவங்கிய உடனேயே தமிழக அரசு விரைந்து செயல் பட்டிருந்தால் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிகுக்க முடியும்.

2006  ல் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பது தெரிந்தும் கவலைப்படாமல் ஆந்திர அரசு தனது திட்டத்தை நிறைவேற்ற முனைந்தது அவர்களது நம்பிக்கையை காட்டுகிறது.   அதாவது  தமிழக அரசு விரைந்து செயல்படாது என்பது  அவர்களுக்கு  தெரிந்திருக்கிறது.

கனக நாச்சியம்மன் கோவிலில் இதுவரை தமிழக மின்தொடர்பு இருந்ததை மாற்றி ஆந்திர அரசு புதிய இணைப்பு கொடுத்ததை ஏன் இவர்கள் ஆட்சேபிக்கவில்லை.  ?

தமிழர்கள் கோவில் கட்டியபோது அவரகள் ஆட்சேபிக்க  வில்லை.

1892 ல் மதராஸ் அரசாங்கத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துகும்  ஒப்பந்தம் உள்ளது.             அதில் நீர்தேக்க பகுதிகளின் உயரத்தை அதிகரிக்க கூடாது என்று உள்ளது.

ஐந்து மாவட்டங்களுக்கு  குடிநீர் தேவைகளுக்கும்  4.2 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு  விவசாயம் செய்யவும் தமிழ் நாட்டுக்கு பாலாற்று நீர் தேவை இருக்கிறது.

தமிழக அரசு கால தாமதமாக உச்சநீதிமன்றம் சென்றதால் உடனடியாக தடையாணை பெற முடியவில்லை.

அப்பொழுதே உங்களுக்கு ஹைதராபாத்தில் சொத்துக்கள் இருப்பதால் நடவடிக்கை எடுக்க தயங்கு கிறீர்களா என்று ஜெயலலிதாவை பார்த்து ஸ்டாலின் கேட்டார்.

அதற்குள் ஆந்திர அரசு 5   அடியில் இருந்து   12  அடியாக அணையை உயர்த்தி விட்டது.       நீர் ததும்பி வடியும்  நிலையில்  தமிழக எல்லைக்குள் நீர் வரவில்லை.

இதனால் பாதிக்கப் பட்ட சீனு என்ற தமிழக விவசாயி  அதே அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

கொடுமை என்னவென்றால் தமிழக முதல்வர் ஜெயலலிதா   சீனு   அணையில் தவறி விழுந்து இறந்து விட்டதாகவும் அவரது குடும்பத்துக்கு  மூன்று லட்ச ரூபாய்  இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறார்.

சுற்றியிருக்கும் எல்லா மாநிலங்களோடும்  தண்ணீர் பிரச்சினைக்காக உச்ச நீதிமன்றம் அல்லது ஆணையம் சென்றுதான் தீர்ப்பு வாங்க வேண்டிய நிலை நீடிப்பது சரியல்ல.

பேச்சு வார்த்தை தொடர வேண்டும்.     முடியும்போது அதற்கு சட்ட வடிவம் கொடுக்க வேண்டும் . அதற்கு நீதிமன்றத்தை நாடலாம்.     மாறாக பக்கத்து மாநிலங்களோடு நீதி மன்ற மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்று நம்புவது நல்ல நிர்வாகம் ஆகாது.

நீதிமன்ற நடவடிக்கை தொடர்கின்ற அதே நேரம் பேச்சு வார்த்தையும் தொடர வேண்டும்.

ஜெயலலிதா அதற்கெல்லாம் தயாராக இருப்பாரா??!!!

 

15 ரூபாய் கடனுக்கு வெட்டி சாய்க்கப்பட்ட தலித் தம்பதிகள்? பிராமண மளிகை வியாபாரியின் வெறிச்செயல்??!! உ. பி யில்.

முலாயம் சிங்கின் தொகுதி. மைன்புரி .

தெருவில் ஆடிபிழைக்கும்  வகுப்பை சேர்ந்தவர்கள் பரத்சிங்கும் மம்தாவும்.    மாதாமாதம் அசோக் மிஸ்ரா என்ற மளிகை வியாபாரியிடம் பொருள்கள் வாங்கி வந்த வகையில் ரூபாய் பதினைந்து பாக்கி இருந்து அதை திருப்பிக் கேட்ட போது இன்னும் சிறிது அவகாசம் வேண்டும் என்று கேட்டிருக்கிரார்கள்.

கோபமடைந்த மிஸ்ரா வீட்டிற்கு போய் கோடரியை எடுத்து வந்து  இருவரையும் சரமாரியாக வெட்டி கொன்றிருக்கிறார்.

போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிரார்கள்.

இதற்காகவெல்லாமா  கொலை செய்வார்கள்?    கேட்கவே தலை சுற்றுகிறதே?

நம்ப முடியவில்லை என்னும் அளவுக்கு சமுதாயம் பின் தங்கிய நிலையில் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

ஆராயப் பட வேண்டிய சமுதாய பிரச்சினைகள் ஏராளம் .     முலாயம் தொகுதியிலேயே இப்படி என்றால் மற்ற தொகுதிகளில் எப்படி இருக்கும்.

வெட்கித் தலை குனிய வேண்டிய செய்தி.

கொலை நகராகும் தலைநகர் சென்னை??!! ஜெயிலுக்கு போக கொலை? தெருவில் அடித்து நகை பறிப்பு???!!

சாதாரண குற்றங்களே அதிகரிக்கும் நிலையில் சென்னையில் எப்போது நடக்கும் குற்றங்களின் தன்மைகள் பயத்தை ஏற்படுத்து கின்றன.

மனைவி தன்னை விட்டு பிரிந்ததால் ஜான் என்பவன் ஜெயிலுக்கு போக எண்ணம கொண்டான்.    அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கையில் அவன் தேர்ந்தேடுத்த வழி கொலை.  குடிபோதையில் தெரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த  ராஜா  என்ற கூலித் தொழிலாளியை குத்திக் கொல்கிறான்.   இது தாம்பரத்தை அடுத்த கன்னட பாளையம் பகுதியில்.

இதுவரை மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து தெருவில் போகும்போது  செயின் பறித்தவர்கள் தெருவில் போகிற பெண்களை உருட்டு கட்டையால் தாக்கி சங்கிலி  பறிக்கிறார்கள்.. இது நடந்தது செங்குன்றத்தில் ஹேமாவதி என்ற பெண்ணுக்கு.

வணிகர்கள் மீது தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை கோரி வணிகர் சங்கம் டி ஜி பி இடம் மனு கொடுக்கிறது.

குற்றம் செய்பவர்களுக்கு   ஏன் பயம் அற்றுப் போய் விட்டது.      இந்த ஆட்சியில் எப்படியும் தப்பித்து விடலாம் என்ற நிலை  இருப்பதாலா??!!

தினமும் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.  தன்மையும் மோசமாகிக் கொண்டே வருகிறது.

காவல் துறையின் நம்பகத் தன்மை குறைந்து கொண்டே வருவதை யார் தடுப்பது. ???

நிலைமை அத்து மீறும் முன் விழித்துக் கொள்ளுமா காவல் துறை ?    அதற்கு வழி விடுவார்களா  ஆட்சியாளர்கள்!!!

 

 

மணிப்பூரில் தோற்றதா காந்தியம்?? 16 ஆண்டு உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வருகிறது தீர்வைக் காணாமலே??!!!

ஆங்கிலேயர்களை தனது உண்ணா விரதப் போராட்டம் மூலம் அடி  பணிய வைக்க காந்தியால் முடிந்தது.

ஆனால் இரோம் சர்மிளாவால்  16  ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் இந்திய அரசை ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வைக்க முடியவில்லை.

மணிப்பூரிலும்,   ஜம்மு காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் இந்த சட்டம் அமுலில் இருக்கிறது.     சுட்டுக் கொன்றதை யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத அந்த சட்டம் இன்னமும் அமுலில்தான் இருந்து கொண்டிருக்கிறது.

2000 ம் ஆண்டு  மணிப்பூரில்  போலீஸ் வாகன அணிவகுப்பில் குண்டுவெடிப்பு அதை தொடர்ந்து  அஸ்ஸாம் ரைபிள்ஸ்  பத்து பொதுமக்களை சுட்டுக் கொன்றனர்.   அதில் ஒரு தேசிய வீர குழந்தைகள் போட்டியில் பரிசு பெற்ற குழந்தையும் அடங்கும்.  அப்போது ஆரம்பிக்கப் பட்ட உண்ணாவிரதம் .

காந்தி போராடியதற்கும்  சர்மிளா போராடியதற்கும் உள்ள வேறுபாடு அவர் போராடினால்  நாடு முழுவதும் எதிரொலி இருக்கும்.   மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள் .       மணிப்பூர் மக்கள் அமைதியாக ஆதரவு மட்டும் அளித்தார்கள்.   இந்திய அரசு அசைந்து கொடுக்க வில்லை.

ஆங்கிலேயர்களை விட இந்திய  அரசு கொடுமையானது என்ற விமர்சனம் கூட எழுந்தது.

மூக்கில் செருகப்பட்ட டியுப் மூலமாக திரவ உணவு மட்டும் செலுத்தப் பட்டு இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் தனது போராட்ட முறையை சர்மிளா மாற்றியிருக்கிறார்.

44 வயதாகும் சர்மிளா ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டு அரசியலில் குதித்து அடுத்த ஆண்டு வர விருக்கும் தேர்தலில் தனித்து நிற்கவும் சட்ட மன்ற  வழியில் போராட்டத்தை தொடரவும் தீர்மானித்தி ருக்கிறார்.

இந்திய ஒற்றுமையை தாங்கி நிற்பது ஆயுதம்தானா???!!!

கபாலி- வெற்றியா தோல்வியா? வைரமுத்து என்ன சொன்னார்?

நல்லவர்கள் கூட வன்முறையை நாடாமல் வெற்றி பெற முடியாது ??!!

இதுதானே கபாலி கூறும் செய்தி!!!

ரஜினிகாந்த் படம் வெற்றியா தோல்வியா என்று ஒரு பட்டி மன்றமே நடந்து வருகையில் ஒரு  விழாவில் பேசும்போது, கவிஞர் வைரமுத்து   ‘ சில விஷயங்களை விளக்கவோ நியாயப் படுத்தவோ முடியாது  …. காணாமல் போன  ராணுவ விமானம்….  கபாலியின் தோல்வி ..’     என்று பேசி விட்டார்.

பிரச்சினை பெரிதானதும் எனது கருத்தை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம். நானே ரஜினியிடம் விளக்கம் சொல்லி விட்டேன்.  வெற்றி தோல்வி என்று பேசுவதற்கு பதில் தோல்வி என்று மட்டும் வாய் தவறி சொல்லிவிட்டேன்  என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

வைரமுத்து யார் என்று தெரிந்து விட்டது என்று தாணுவும் சொல்ல ரஜினி மௌனம் காக்கிறார்.

இவர்களுக்குள் இருக்கும் சண்டை இப்படி இருக்க ரஜினியின் அறிக்கையில் வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்.

வெளியான அன்றே இணையத்திலும் வெளியானது கபாலி.    நீதிமன்ற ஆணை இருந்தும் தடுக்க முடியவில்லை.

ரஜினியிடம் இருக்கும் மவுசு காரணமாக  ரசிகர்களால் படம் வெற்றி பெற்றிருக்கலாம்.     ஆனால் படம் சொல்லும் செய்தி என்ன?

மலேசியாவில் தமிழ் தாதாக்கள் மலேசியா சீன தாதாக்களுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.    அங்கேயும் பலம் இருந்தால்தான் வாழ முடியும். ஓரளவு அங்கே நிலவும் உண்மைகளை படம் பிடிக்கிறது கபாலி.

பிடிக்கிறதோ இல்லையோ , தமிழர் வாழ்வில் ,   ரஜினி திரையில்   தோன்றும்போது ,குடும்பத்தோடு பார்க்கப் பட வேண்டிய வராக நிலைக்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.