Home Blog Page 117

மீன்பிடித் தொழிலை கைவிட்டு வேறு தொழிலை தேடுங்கள்! பாதுகாப்பு கோரி சென்ற தமிழக மீனவர்களுக்கு சுஷ்மா சுவராஜ் அறிவுரை? தமிழக அரசியல் கட்சிகள் மவுனம்?!!! தீர்வு கிடைக்க வழி என்ன?


தமிழக பா ஜ க முயற்சி எடுத்து 122  மீனவர்களை அழைத்துக் கொண்டு டெல்லி சென்றார்கள்.   சென்றது எதற்காக?   தாக்கும் இலங்கை கடற்படையிடம் இருந்து பாதுகாப்பு கோரி! 
              செப்டம்பர் 2013 ல் நரேந்திர மோடி திருச்சியில் முழங்கினார்.   “மீனவர் பிரச்சினை கடலில் இல்லை.   பலவீனமான மத்திய அரசிடம் உள்ளது. அதை தூக்கி எறியுங்கள். ” 
              தூக்கி எறிந்தாகி  விட்டது.     இப்போதுதான் பலமான மத்திய அரசு வந்து விட்டதே?    இலங்கை அரசுக்கு சுடும் தைரியம் வராது? 
              மண்டையில் அடித்தால் போல் சிறிசெனவும் இலங்கை அமைச்சர்களும் சொன்னார்கள்.  ”  எல்லை தாண்டினால் சுடுவோம்! “
              படகுகள் பறிமுதல் தொடர்ந்தது.   மீனவர்களை அழைத்துக்கொண்டு சென்றது தமிழக  பா.ஜ.க.       அமைச்சரிடம் பேசிவிட்டு அழைத்து சென்றார்களா?   அமைச்சர் என்ன சொல்வார் என்பது இவர்களுக்கு தெரியாதா/ 
             சர்வதேச கடல் எல்லையை தாண்டாதே? ஆழ் கடல் மீன்பிடிப்புக்கு போ !   வேறு வேலை தேடு!     இதை சொல்வதற்கா ஒரு அமைச்சர்?    இதை கேட்டுக் கொண்டு வரவா மீனவர்களை அழைத்து சென்றீர்கள்? 
              இதை விட கொடுமை ! மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பாதுகாப்பு கோரி மனு செய்தால் அதிலும் மத்திய அரசு பதில் மனு போட்டது. ”   இந்திய மீனவர்கள் அத்துமீறி சென்று மீன் பிடிப்பதால் தாக்கப் படுகின்றனர். .   தடை செய்யப் பட்ட வலைகளை பயன்படுத்துகின்றார்கள். அதிக திறந கொண்ட விசைப் படகுகளை பயன் படுத்து கிறார்கள். தங்கம் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். இந்திய கடலோர காவல் படை பொறுப்பு ஏற்க முடியாது. “
             இந்திய மீனவர்கள் தவறு செய்தால் கட்டுப்படுத்த வேண்டிய கடமை இந்திய கடலோர காவல் படைக்கு உள்ளது.   தவறு செய்தால் இவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும்.    மாறாக அந்நிய நாட்டு கடற்படை சுடும் இவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றால் இவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? 
               சர்வதேச கடல் எல்லை என்பது நம் நாட்டு எல்லையில் இருந்து வரையறை செய்வது.     கச்சதீவு நம்நாட்டு எல்லையில் இருந்தது.   அதை தாரை வார்த்து கொடுத்தது யார்? 
               அப்போது செய்து கொண்ட ஒப்பந்தம் பாரம்பரிய மீன்பிடி உரிமையை தக்க வைத்துக் கொண்டது அல்லவா?
               சிங்கள இன வாத அரசுக்கு தமிழக மீனவர்கள் ஒரு இடைஞ்சலாகவே  பார்க்கப் படுகிறார்கள்.     மீன்பிடி தொழிலில் இருந்து இவர்களை விரட்டுவதில் குறியாக இருகிறார்கள்.   அதற்கு டெல்லி துணை போகிறது. 
            பா. ஜ. க வின் உண்மை சொரூபம் இவ்வளவு விரைவில் வெளிவரும் என்று யார்தான் எதிர்  பார்த்திருப்பார்கள்.? 
           மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் வந்தாலும் இதைத்தான்சொல்லப் போகிறார்கள்
              மிஸ்டு கால் கொடுத்தவர்கள் மீண்டும் ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் . விலகுகிறோம் என்று!  மிஸ் பண்ணிடாதீங்க !!!!!. 

தோற்றுக் கொண்டிருக்கும் திராவிடம் ? திராவிடத்தால் எழுந்தவர்கள் திராவிடத்திலேயே அழிய வேண்டுமா?

ஆரியத்தால் வீழ்ந்தோம் என்று நம்பினோம்! 
திராவிடத்தால் எழுந்தோம் என்றும் நம்பினோம்! 
சென்னை மாகாணமாக இருந்தபோது தெலுகு கேரள பகுதிகள் நம்மோடு சேர்ந்து இருந்ததால்  ஆரிய ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்  கொள்ள பார்ப்பனர் அல்லாதார் ஒன்று சேர வேண்டிய சூழ்நிலையில் திராவிடம்  பொருள் பொதிந்ததாக இருந்தது. 
அன்றைய கால கட்டத்தில் அது சரி. 
இன்று சூழ்நிலை என்ன? 
மலையாளி கன்னடர் தெலுகர் எவருக்கும் திராவிடர் என்ற உணர்வு அறவே இல்லை.  
 அல்லது எவரும் திராவிடர் என்ற பெயரில் கட்சிகள் நடத்தியதில்லை. 
எதனாலும் நாம் திராவிடர் இல்லை என்று ஆகிவிடப் போவதில்லை. 
ஆனால் திராவிடம் பேசிக் கொண்டு இருப்பதாலேயே நமக்கு நாம் தமிழர் என்ற உணர்வு மரத்துப்போனது உண்மைதானே? 
“திராவிட ” என்ற சொல் இடத்தையே  குறிக்கும் .    ஆனால் அந்த உண்மையைக் கூட அவர்கள் உணர்வதாக இல்லை. 
தென்னிந்திய நடிகர் சங்க பெயரைக் கூட இங்கே  மாற்ற முடியவில்லை. 
காவிரி, பெரியாறு அணை, பாலாறு பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ள 
திராவிடர்களால்  முடியவில்லை. 
முடிவுரை எழுதும் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். 
முத்தாய்ப்பாக அப்பாவி தமிழ்க் கூலித் தொழிலாளர்கள்  இருபது பேர் ஆந்திர போலிசால் என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டு இறந்திருப்பது இன ஒற்றுமைக்கு அடித்த சாவு மணியாகவே கருதப்படும்.
காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு செய்து மத்திய அரசின் இதழில் வெளி வந்தும் கூட அதை அமுல் படுத்த ஆணையம் அமைக்க மத்திய அரசு தயங்குகி றது.    
தமிழகத்திற்கு ஒதுக்கப் பட்ட நீரை தந்து விட்டால் மீதம் உள்ள நீரை நாங்கள் எப்படி வேண்டும் என்றாலும் பயன் படுத்துவோம் என்று சொல்லிக் கொண்டே மேக்கே தாதுவில் அணை கட்டி முடித்த பிறகு எங்களுக்கு போகத்தான் மீதி தமழ் நாட்டுக்கு என்று தகறாரு செய்யலாம் என்று திட்டமிட்டு செயல்படும் கர்நாடக அரசு , அதை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு . பொறுத்துப் பார்த்து விட்டு தமிழர்கள் வேலை நிறுத்தம் செய்தால் போட்டியாக கன்னடர்களும் முழு அடைப்பு செய்கிறார்கள். 
திடீர் என்று பேருந்துகள் இரண்டு  மாநிலத்துக்கும் நிறுத்தப் படுகின்றன. 
மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. 
இதே நிலைமைதான் கேரளத்துக்கும் நமக்கும் இடையில்.
நடப்பது நடக்கட்டும்.    போதும் திராவிடம்.  இனி தமிழர்கள் என்றே  பறை சாற்றுவோம். 
திராவிடம் சொல்லி இனி வெல்ல முடியாது.    ஏமாளிகள் என்ற பெயர் தான் திராவிடம் பேசுபவர்களுக்கு பரிசு. 
திராவிடத்தை எடுத்து விட்டால் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? 
வைத்துக் கொண்டு ஏமாறுவதை விட விட்டுவிட்டு வருவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளலாம். 
ஆரியத்தால் வீழ்ந்தோம் என்பது எப்படி உண்மையோ திராவிடத்தால் எழுந்தோம் என்பதும் உண்மைதான். 
 ஆனால் தமிழியத்தால் மட்டுமே தமிழர்கள்  வெற்றி பெற முடியம் என்பதை நமக்கு கற்றுக் கொடுத்து கொண்டு  இருக்கிறார்கள் நமது திராவிட சகோதரர்கள். 
                       
வி.வைத்தியலிங்கம் 
(Vaithiyalingam.V)
,. 

20 தமிழர்களை என்கவுண்டர் செய்த சந்திரபாபு நாயுடு – சி.பி.ஐ. விசாரணை வந்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.

                 அப்பாவி கூலித் தொழிலாளர்கள்  20 பேரை ஆந்திர மாநில போலீசார் செம்மரக் கடத்தல் காரர்கள் என்று குற்றம் சுமத்தி சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். . 
                  துப்பாக்கி குண்டுகளோடு வெட்டுக் காயங்களும் இறந்தவர்கள் உடலில் இருந்ததால் உடற்கூறு ஆய்வை இரண்டாம் முறை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவுள்ளதால் அதை உத்தரவிடகோரி ஆந்திர உயர்நீதி  மன்றத்தில் மனுப்போட அவகாசம் கொடுத்து வழக்கு அடுத்த வாரம் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. 
                  ஆந்திர பஸ்கள முடக்கம். பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் என்று தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன.
                 இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 111 போலி என்கவுன்டர்கள் நடப்பதாக தகவல்கள் .  12  பேர் மணிப்பூரில் கொல்ல பட்ட போது  உச்ச நீதி மன்றம் நீதிபதி ஹெக்டே மூலம் அறிக்கை ஒன்றைப் பெற்று  துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக விளக்கமாக எடுத்துக் கூறினார்கள். 
                  இதற்கிடையில் ஆந்திர மாநில எதிர்க் கட்சிகளே நாயுடு அரசு மீதி வெளிப்படையாக இது ஜகன் ரெட்டி மீதான தாக்குதல் என்று குற்றம் சுமத்தி இருப்பதுடன் இந்தக் கொலைகளை செய்யச் சொன்னதே சந்திரபாபு நாயுடுதான் என்றும் சொல்கிறார்கள். 
                 இறந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் எதுவும் தர மாட்டோம் என்று ஆந்திர அமைச்சர்கள்  கூறுகிறார்கள். 
               அ இஅ தி மு க சார்பில் மூன்று லட்சம் தி மு க சார்பில் ஒரு லட்சம் தேமுதிக சார்பில் ஐம்பதாயிரம்  என்று தமிழகத்தில் நிதி குவியும்போது  ஆந்திர அரசு நிவாரணம்  எதுவும் தர  மாட்டோம் என்று அறிவித்து இருக்கிறது. 
                மத்திய அரசு தலையிட்டு இதில் நியாயமான விசாரணை நடை பெற்று உண்மைக் குற்றவாளிகள் தடிக்கப் பட  வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும். 
                   
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

காவிரிப் பிரச்சினையில் குற்றவாளி மத்திய அரசே!! மேலாண்மை வாரியம் அமைக்க தயங்குவது ஏன் ? பா.ஜ.க. அரசின் இரட்டை நிலை அம்பலம்.!!!

                   05.02.2007 ல் இறுதித் தீர்ப்பு வந்து  20.02.2013  ல் அரசிதழில் வெளியான பின்பு உச்ச நீதி மன்றத்தில் 08.04.2013 ல் தமிழக அரசு மேன்முறையீடு செய்தது.
                      10.05.2013 ல் நடுவர் மன்றம் சொல்லாத காவிரி மேற்பார்வைக் குழுவை உச்ச நீதி மன்றம் அமைக்கிறது.   அதை 03.06.2014 ல் ஜெயலலிதாவும் 14.06.2014 ல் கலைஞரும் ஆட்சேபித்து பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்கள். 
                      18.11.2014 ல் உச்சநீதி மன்றத்தில் தமிழ் நாடு அரசு மனுப் போடுகிறது.  05.12.2014 ல் தமிழ் நாடு சட்ட மன்றம் ஒருமனதாக தீர்மானம் போட்டு மேலாண்மை வாரியம் அமைக்க கோருகிறது. 
                      இதற்கிடையே கர்நாடக அரசு மேக தாதுவில் அணை கட்ட ரூபாய்  25   கோடி ஒதுக்கீடு செய்து அறிவிக்கிறது.  குடிநீர்த் தேவைக்கென அறிவிக்கப் பட்டாலும்  45  டி.எ,ம்.சி. தண்ணீர் தேக்கும் அளவுக்கான அணை குடிநீர்த் தேவைக்கானது மட்டுமல்ல என்பது தெளிவு.. 
                     காவிரி பாசன விவசாயிகள் சார்பில் நடந்த போது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக தமிழகத்தில் நடைபெற்றது.   எதிர்வினையாக  கர்நாடகத்திலும் அங்குள்ள விவசாயிகள் போராட்டங்களை அறிவித்து பிரச்சினையின் தீவிரத்தை கூட்டியுள்ளார்கள். 
                 03.12.2013 ல் உச்ச நீதிமன்றம்  ஆர்.எம். லோதா  தலைமையில் ஆன பெஞ்சில் உத்தரவிடும்போது  இந்தப் பிரச்சினையில் அவசரம் ஏதும் இல்லை என்றும் மத்திய அரசு தாங்கள் எந்த திட்டத்திற்கும் அனுமதி அளிக்க வில்லை என்று  அவிடவிட்டு தாக்கல் செய்திருப்பதாலும் தாங்கள் ஒரு தற்காலிக ஏற்பாடு செய்திருப்பதால் ( காவிரி மேற்பார்வைக் குழு ) அது பயனளிக்காத போது தாங்கள் எப்போதும் தலையிட முடியும்   என்றும் உத்தரவு பிறப்பித்தது. 
                      பிரச்சினை உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது உண்மை.   இறுதித் தீர்ப்பு உறுதி செய்யப் படலாம் அல்லது சிறிய மாறுதல்களை செய்யலாம்.   இரண்டில் ஒன்றைத் தவிர வேறு மார்க்கம் ஏதும் இல்லை. இரண்டில் எது நடந்தாலும் அந்த தீர்ப்பை நிறைவேற்ற மேலாண்மை வாரியமும் , அதற்குத் துணையாக ஒழுங்குமுறைக்குழுவும் அமைத்தே ஆக வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 
                    இந்த நிலையில் மத்திய அரசு செய்ய வேண்டியது என்ன?   மேலாண்மை வாரியமும் ஒழுங்கு முறைக்  குழுவும் அமைக்க வேண்டியது தானே?   அதில் தயக்கம் தாமதம் காட்டுவது ஏன் ?
                    இங்குதான் அரசியல் புகுந்து விளையாடுகிறது.    கர்நாடகத்தில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி.     ஆட்சியை பிடிக்க துடிப்பது பா.ஜ.க.    எனவே கர்நாடக மக்களின் எதிர்ப்பை சந்திக்க பா.ஜ.க. மத்திய அரசு தயாராக இல்லை. 
                      இதைவிட வேறு காரணம் இருக்க வாய்ப்பே இல்லை. சமீபத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்   கர்நாடக அரசிடம் இருந்து அணை கட்ட அனுமதி கோரி எந்த விண்ணப்பமும் பெறப்பட வில்லை என்று அறிவித்திருக்கிறார்.  
                     அது அல்ல முக்கியம்.  அவர்கள் அனுமதி கோறுகிறார்களா அல்லவா என்பது முக்கியம் அல்ல.   எந்த இறுதித் தீர்ப்பாக இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டிய மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்கு முறைகுழுவையும் அமைத்து விட்டால் இரு தரப்பும் எழுப்பும் எந்த பிரச்சனையையும் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு அந்த அமைப்பிற்கு போய் விடும் அல்லவா?   
                        சந்தேகம் எழுந்தால் அந்த அமைப்பே உச்ச நீதி மன்றத்தில் விளக்கம் கோரிப் பெற்றுக் கொள்ளும் அல்லவா?  
                       பின் ஏன் மத்திய அரசு தயங்க வேண்டும்?   கால தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் ஏற்படுத்தும் எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசே பொறுப்பு!!!       மோடியே பொறுப்பு!!!!
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

சோனியா மாப்பிள்ளை ராபர்ட் வதேரா மீது மெகா மோசடிக் குற்றச்சாட்டு!!! ராகுலும் பிரியங்காவும் தங்களுக்கு தொடர்பில்லை என்று சொல்ல முடியுமா??? குற்றம் உறுதி செய்யப் பட்டால் சோனியா குடும்பம் அரசியலில் இருக்கலாமா??????

             தொழில் செய்து சம்பாதிப்பது என்று கேள்விப்பட்டு இருக்கிறோம்.    வியாபாரமே செய்யாமல் லைசென்சை கைமாற்றி விட்டு மட்டுமே ஐம்பது கோடி சம்பாதித்து இருக்கிறார் வதேரா .
                இவரது ஸ்கைலைட் ஹாச்பிடாலிடி நிறுவனம் அரியானா அரசு தனக்கு வழங்கிய குடியிருப்புகள் கட்டும் லைசென்சை எட்டு மடங்கு விலைக்கு கைமாற்றி விட்டிருக்கிறார். 
                 அதாவது டி.எல்.எப். நிறுவனத்திடம் எட்டு கோடி ஜாமீன் இல்லாக் கடன் வாங்கி அதை வைத்து  3.5   ஏக்கர் நிலத்தை      7.5  கோடிக்கு  அரியானா அரசிடம் வாங்கி குடியிருப்பு லைசென்சுடன் விவசாய நிலத்தை குடியிருப்பு பகுதி யாக மாற்றி   58  கோடிக்கு டி.எல்.எப். கம்பெனியிடமே விற்று ஐம்பது கோடி சம்பாதித்த சாமர்த்தியம் சோனியா மருமகன் வதேராவைத் தவிர வேறு யாருக்கு வரும்???
                     இந்த மோசடியை கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரி அசோக் கெம்கா முந்தைய  காங்கிரஸ் அரசால பழி வாங்கப் பட்டார். .   
                      இன்னும் வேறு நான்கு நிறுவனங்களும் இதே போல்  அதே கம்பெனிக்கு   267   கோடிக்கு லைசென்சுகளை  விற்றிருக்கிறார்கள்     
                 அரசுக்கு சில நூறு கோடிகள் இழப்பு ஏற்படுத்தியது தவிர இதில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. 
                   இதில் சோனியா, ராகுல், பிரியங்கா  ஆகியோரின் பங்கு என்ன என்பதுதான் நாடு அறிந்து கொள்ள வேண்டிய செய்தி  இது வரையில் வதேரா இந்த குற்றச்சாட்டு பற்றி விளக்கம் ஏதும் சொல்ல வில்லை.
                  சோனியா குடும்ப ஆதிக்கம் இல்லாத காங்கிரசை காங்கிரஸ்காரர்கள் சிந்திக்க வேண்டிய  கால கட்டம் இது. 
             
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

விவசாய விளைபொருள் விலை நிர்ணயத்தில் மத்திய அரசின் கொடுஞ்செயல் !!! லாபவிலை நிர்ணயிக்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் வாக்குமூலம்.!!!! விவசாயிகளின் எதிர்காலம் என்ன????

                   விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கலானது .     விவசாயம் லாபமில்லாத தொழிலாகி விட்டதால் , உற்பத்தி செய்பவர்கள் பெருங்கடனாளிகளாக மாறி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செல்கின்றனர் என்பதால் தேசிய விவசாயிகள் கொள்கை ஒன்றை உருவாக்கி குறைந்த பட்ச ஆதரவு விலையை அதிகப் படுத்தி விவசாயிகளை காக்க வேண்டும் என்பது கோரிக்கை.
               நீதிபதிகள் முகோபாத்யாயா மற்றும் ரமணா அமர்வு முன் வந்த விசாரணையில் மத்திய அரசு அவிடவிட்டு தாக்கல் செய்தது. 
              ”    இருபத்தி இரண்டு விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான லாபம் தரும் விலையை நிர்ணயம் செய்யும் பணியை விவசாய செலவு மற்றும் விலை கமிஷன் பரிந்துரை பேரிலேயே செய்யப் படுகிறது.      உற்பத்தி செலவு , தேவையும் கிடைப்பதும் (  demand and supply ) உள்நாட்டு மற்றும் சர்வதேச மார்க்கெட்டில் விலை நிலவரம், தானியங்களுக்கிடையே ஆன விலை ஒப்பீடு , விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத துறைகளுக்கு இடையே ஆன வியாபார நிபந்தனைகள் , மற்றும் குறைந்த பட்ச ஆதரவு விலை பயன்பாட்டாளர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம்  இவை களின் அடிப்படையிலேயே  குறைந்த பட்ச ஆதரவு விலையும்     நியாயமான லாபம் தரும் விலையும் நிர்ணயம் செய்யப் படுகின்றன. ”      இதுதான் அந்த அவிடவிட்டின் சாராம்சம். 
                     அதிலும் குறிப்பாக குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது உற்பத்தி செலவுக்கு மேல் நிர்ணயிக்கப் படுவது அல்ல .     செலவு முக்கியமான அம்சமான ஒன்றாக இருந்தாலும்  என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறது மத்திய அரசு. 
                     இதைவிட கேவலம் ஒன்று இருக்க முடியுமா?      
                    வேறு தொழில் செய்பவர்களிடம் போய் உங்கள் உற்பத்தி செலவை விட லாபம் வைத்து விலை நிர்ணயம் செய்யாதீர்கள் என்று மத்திய அரசு சொல்லுமா?  
                    அவர்கள்தான் கேட்பார்களா?  
                      உச்சநீதி மன்றம் என்ன சொல்லப்போகிறது?    பொறுத்திருந்து பார்ப்போம்???
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

கருத்துரிமை காத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு !!! தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 66 A செல்லாது!! ஆனால் விமர்சனத்தில் எச்சரிக்கை தேவை??


               முந்தைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டப்பிரிவு கோபமூட்டும் அல்லது அச்சுறுத்தும் வகையில் தகவல் அனுப்புவது, மிரட்டல், விரோதம், வெறுப்பு , கெட்ட நோக்கம் , காரணமாக தகவல் அனுப்புவது ஏமாற்றுதல் அல்லது தவறாக வழி காட்டும் விதமாக மின் சாதனம் மூலம் தகவல் அனுப்புவது ஆகியவை  இரண்டு  ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கத்தக்க சட்டம். 
               பேஸ்புக், வாட்ஸ் அப் , போன்ற வலைத் தளங்களில் இனிமேல் எச்சரிக்கையாக கருத்து தெரிவிப்பது நல்லது.  
               விவாதம், பரிந்துரை செய்தல் என்ற இரண்டு நிலை வரைக்கும் அடிப்படை உரிமையாக இருக்கும் இந்த செயல் தூண்டுதல் என்ற மூன்றாம் நிலைக்கு செல்லும்போதுதான் அது தண்டிக்கதக்க குற்றமாக மாறுகிறது என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம். 
               ஆனால் கெட்டவார்தைகளை பயன்படுத்துதல் , திட்டுதல், ஆபாசமாக வர்ணித்தல் போன்றவை தொடர்ந்து தண்டிக்கத் தக்க குற்றங்களாகவே தொடரும். 
              அரசியல் சட்டம் தரும் அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றிற்கும் நியானமான கட்டுப் பாடுகளை அரசியல் சட்டமே வகுத்திருக்கிறது .   
              கட்டுபாடுகளை கடைபிடிக்காமல்  அடிப்படை உரிமைகளை பிறர் புண் படும் படி பயன் படுத்துவோம் என்பதே சிலரின் நோக்கமாக இருக்கின்றது.    
              மாறுபடுவது என்பது அடிப்படை உரிமை.   அதை அனுமதிக்க மறுப்பது ஒருவகை சர்வாதிகாரம்.    மனித குல வளர்ச்சியே  மாறுபடுவது என்ற குணத்தில் தான் வந்தது. இன்று பலருக்கும்  பிடிக்காதது நாளை எல்லாருக்கும் பிடிக்கும் என்று மாறுவதுதான் வாழ்க்கை. 
            எந்த நல்ல சட்டத்தையும் ஒரு கெட்ட நபர் சுயநல நோக்கத்தில் செயல் படுத்தும்போது அந்த நல்ல சட்டமே கெட்ட சட்டமாகி விடுகிறது. 
            சமுதாயம் விழிப்புணர்வு நிலையில் நிலைத்திருந்தால் மட்டுமே சட்டத்தை தவறாக பயன் படுத்தும் கயவர்களிடம் இருந்து  உரிமைகளை தக்க வைக்க முடியும். 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? சென்னை உயர் நீதி மன்ற பரிந்துரையில் அவசரம் ஏன் ?

              பதினெட்டு நீதிபதிகள் காலி இடங்கள் இருக்கும்போது ஒன்பது பேரை மட்டும் ஏன் பரிந்துரைக்கிறீர்கள் அதன் மூலம் பிற்பட்டோர் நலன் பாதிக்கிறது என்று முறையீடு செய்த பின்பும் சென்னை உயர் நீதி மன்றம் ஒன்பது பேரை பரிந்துரைக்க அதை பரிசீலிக்க வேண்டாம் என்று வழக்கறிஞர்கள் மீண்டும் மனுப்போட பிரச்சினை பெரிதாகி நிற்கிறது.
                 ஏற்கெனவே பிராமணர்களும் முற்பட்ட வகுப்பினரும் அதிக பிரதிநிதித்துவம் பெற்று இருப்பதை சுட்டிக் காட்டி இதிலும் சமூக நீதி பின் பற்ற வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கி இருக்கிறது.   
                    நீதிபதிகள் தாங்களே புதியவர்களை நியமித்துக் கொள்ளும் முறையில் குறைபாடுகள் இருப்பது அறியப் பட்டு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது குறித்த வழக்கு உச்ச நீதி மன்ற பரிசீலனையில் இருக்கிறது. 
                     இந்நிலையில் பதினெட்டு பேர்களுக்கு பதிலாக ஒன்பது பேரை மட்டும் ஏன் பரிந்துரைக்க வேண்டும் என்ற கேள்விக்கு உயர் நீதி மன்றம் ஏற்றுக்கொள்ளத் தக்க பதிலை தராமல் எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது எனவே அனுப்புகிறோம் என்ற ரீதியில் செயல் படுவது சரியல்ல .
                 ஒன்று பதினெட்டு பேர்களையும் தக்க ஆய்வு நடத்தி  சமூக நீதியை அமுல்படுத்தி அனுப்புங்கள்  அல்லது உச்ச நீதி மன்ற தீர்ப்புக்காக காத்திருங்கள். .   இதுவே நீதி.       நியமனத்தில் நீதி இல்லை என்றால் நியமிக்கப்பட்டவர்கள் எப்படிப்பட்ட  நீதியை  வழங்குவார்கள்.? 
               
           
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

தீக்குளிக்கும் தமிழர்கள்!! வெட்கமா? வேதனையா? நிதி கொடுத்து விளம்பரப் படுத்துவது சரியா? தவறா? ஜெயலலிதா வுக்கு ஒரு வேண்டுகோள்!!!!!

        நாடும் இனமும் மொழியும் பாதிக்கப் படும்போது செய்வதறியாத நிலையில் பலர் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள்.    அவர்கள் ஈகிகள் எனப்படுவர்.  முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஈழப்போரின் இறுதியில் கொடூரமாக  தமிழர்கள்  கொல்லப்பட்ட நினைவைத் தாங்க முடியாமல் இருபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள்  உடலை நெருப்புக்கு இரையாக்கி  மாய்ந்தனர் .   அது வரலாற்றுக்கு  ஒரு பாடம்.  
           வைகோ தி மு க வில் இருந்து  நீக்கப்பட்டபோது தீக்குளித் தவர்களின்   ஆன்மா அவர் மீண்டும் திமுகவோடு கூட்டு வைத்தபோது துடித்திருக்காதா ?       
             ஜெயலலிதாவுக்கு சிறை தண்டணை என்றவுடன் பேருந்து கொளுத்தப் பட்டதில் இறந்த மூன்று மருத்துவ மாணவிகளின் கனவை சிதைத்து விட்டு இன்று வழக்கில் சிக்கி வாடுகிறார்களே அவர்கள் என்ன சாதித்து விட்டார்கள்?   அவர்களை தூண்டியது எது? 
             ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி இறந்தபோது தீக்குளித்து இறந்தார்கள் என்று எழுநூருக்கும் மேல் பட்டியல் இட்டா ர்களே அவர்களது ஆன்மாக்கள் , இன்று அவர் மகன் ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் சிக்கினாலும் போராடிக் கொடுத்தான் இருக்கிறாரே தவிர , தற்கொலை செய்து கொள்ள வில்லை என்பதை பார்த்து தங்கள் செய்கையை எண்ணி நிச்சயம் வெட்கப் படும். 
          ஏன் சமீபத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்டபோது     மாரடைப்பிலும் தீக்குளித்தும் இறந்தார்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பட்டியலிட்டு அவர்கள் குடும்பத்துக்கு ரூபாய் மூன்று லட்சம் வீதம் நிவாரணம் கொடுத்தார்கள்.      அப்படிக் கொடுக்கும் ஒவ்வொரு முறையும் இப்படிச் செய்வது தவறு என்று சொல்லி விட்டுத்தான் கொடுத்தார்கள்.           தொண்டர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் உரிமையும் கடமையும் கட்சிக்கு இருக்கிறது என்பதில் யாருக்கு கருத்து வேறுபாடு இல்லை. 
         ஆனால்   மாறி மாறி வரும் அரசியல் காரணங்களுக்காக  தொண்டர்கள் தீக்குளிப்பது சரிதானா?     அது தமிழர் களுக்கு இழிவைத் தருவது ஆகாதா?    அந்த இழிவை  தவிர்க்கும் கடமை அரசியல் தலைவர்களுக்கு உண்டா? இல்லையா? 
            இப்போது  ஜெயலலிதா கிரிமினல் வழக்கில் தண்டனைக்கு உள்ளாகி முதல் அமைச்சர் பதவியை இழந்து  நிற்கிறார்.  மேன் முறையீட்டில்  தண்டனை உறுதி செய்யப் படவோ விடுதலையாகவோ வாய்ப்பு இருக்கிறது .    அது சட்டத்தின் கையில். 
             சமீபத்தில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் இவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக கோவில்பட்டி நகர மன்ற உறுப்பினர் நாகராஜன் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி இறந்ததால் , தனது ஆழ்ந்த வேதனையை பதிவு செய்து விட்டு குடும்பத்துக்கு மூன்று லட்சம் நிவாரணம் அறிவித்தார். 
            ஒருவேளை இவர் பெற்ற தண்டணை  உறுதி செய்யப் பட்டு இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாமல் போனால் அப்பாவி தொண்டர்கள் என்னென்ன முடிவுகளை எடுப்பார்களோ  என்று சிந்திக்கவே பயமாக இருக்கிறது. 
             அதுஎன்ன  இறப்பவர்கள் எல்லாமே சாதாரண தொண்டர்களாக இருக்கிறார்கள்?       நகர செயலாளர் அளவுக்கு மேல் இருப்பவர்கள் யாருமே தீக்குளிப்பதில்லை?      அவர்களுக்கு இது நிரந்தரம் அல்ல என்பது தெரியும்.  
              தலைவர்களே!!       தீக்குளித்தால்  அஞ்சலியை வெளிப்படையாகவும் நிவாரணத்தை மறைமுகமாகவும் செய்யுங்கள்!   
              கட்சி  கண்டு கொள்ள வில்லையே என்று மற்ற தொண்டர்கள் கேள்வி கேட்பார்களே என்ற கவலை வேண்டாம்?       அதுதான் மாவட்ட கட்சி    தெரியப் படுத்திக் கொள்ளுமே?                
                இறந்தவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் செயல் கொடுமையானது.     
                  நிவாரணங்களுக்காக  உயிரை விட்டார்கள் என்ற அவப் பெயர் யார் குடும்பத்திற்கும் வேண்டாம் !!!
                  இந்த இழிவு அரசியல் கலாசாரத்தை கட்டுப் படுத்தும் கடமை மானமுள்ள  தலைவர்கள் அனைவருக்கும் இருக்கிறது. 
                   
         
       
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

பொது நல வழக்குகள் – நீதிமன்றங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் நியாயம்தானா?

           அதிகார  வர்க்கம் ,இழைக்கும் அநீதிகளை களைய பொதுமக்களுக்கு கிடைத்திருக்கும் வரப்ரசாதம்  பொது நல வழக்குகள்.
           கடிதங்கள் ,தந்திகள், நாளேட்டுச் செய்திகள் கூட பொது நல வழக்குகள் ஆகமாறியநிகழ்வுகள் ஏராளம். 
            குல்டிப் நாயர் ஜனநாயகத்துக்கான குடிமக்களின் அமைப்பின் தலைவர் ஆக அனுப்பிய கடிதத்தையே  ” தடா” சட்டம் எப்படியெல்லாம் தவறாக பயன் படுத்தப் பட்டது என்பதை பொது நல வழக்காக மாற்றி வெளிச்சம் போட்டு காட்டியது உச்ச நீதி மன்றம்.    
             அதே நேரத்தில் குஜராத்தில் அஸ்பெஸ்டாஸ் பயன்பாடு மக்களுக்கு தீங்கானது என்பதால் அதை தடை செய்ய கோரும் வழக்கு உண்மையில் அஸ்பெஸ்டாஸ்  பொருளுக்கு  மாற்றான பொருளின் உற்பத்தியாளர்கள் தூண்டி விட்டுதான் அந்த வழக்கு பதிவானது என்பது வெளிப்பட்டவுடன் அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்தது. 
             எனவே இந்த அதிகாரம் தவறாக பயன் பயன்படுத்தப் பட்டு விடக் கூடாது என்பதற்காக நியாயமான கட்டுபாடுகளை விதிப்பது சரிதான் .   
            ஆனால் வழக்கு தொடுப்பவர்கள் வருமானம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், பான் அட்டை என்ற வருமான வரி இலாகா தரும் அட்டையை தாக்கல் செய்ய வேண்டும், வழக்கறிஞர் மூலம்தான் தாக்கல் செய்ய வேண்டும்   என்ற  நிபந்தனைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை மட்டுமல்ல சட்டப்படி நிற்கத் தக்கவை யுமல்ல. .   இவைகளை செல்லாதது என அறிவிக்கச் செய்ய கோரிய மனுக்களை டெல்லி உயர் நீதி மன்றம் தீர்ப்பு தள்ளுபடி செய்தது சரியல்ல. 
             உச்ச நீதி மன்றம் தலையிட்டு இந்தக் குளறுபடிகளை நீக்க தக்க வழிமுறைகளை உடனடியாக வகுக்க வேண்டும்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)