Home Blog Page 120

காஷ்மீரில் இந்து முஸ்லிம் கூட்டாட்சி ! வென்றது மோடியா? முப்தியா?

                இந்தியாவில் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலம்

 காஷ்மீர் மட்டுமே!

                 இந்துக் கட்சி என்று பெயர் வாங்கிய பா.ஜ.க.. முஸ்லிம் பிரிவினைவாத கட்சி என்று பெயர் வாங்கிய மக்கள் ஜனநாயககட்சியோடு கூட்டணி வைத்து ஆட்சியில் பங்கு பெற்று அரசு அமைத்திருப்பது மோடியின் வெற்றியா?  அல்லது முப்தி முஹம்மது சயீதின் வெற்றியா? 
                 காங்கிரசோடு கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்காமல்  எதிரியான பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்தது  முப்தி முகமது சயீதின் ராஜ தந்திரம் என்றாலும் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ..க.வை பகைத்துக் கொண்டு ஆட்சி நடத்தி சாதிப்பது கடினம் என்பதே  இந்த முடிவுக்கு காரணம் என்பதே உண்மை. 
              தேர்தல் அமைதியாக நடக்க பாகிஸ்தானும் ஹூரியத் அமைப்பும் காரணம் என்ற முப்தியின் பேச்சும் பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் உடலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எதிர்பார்த்த படியே புயலைக் கிளப்பினாலும் இரு தரப்புமே சாதுரியமாக பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக் கொண்டார்கள். 
               தேர்தல் அமைதியாக நடந்ததற்கு தேர்தல் கமிஷனும் ராணுவமும் காஷ்மீர் மக்களுமே காரணம் என்றும் குருவின் உடலை ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பா.ஜ.க.தெளிவாக தெரிவித்து பிரச்சினையை முடித்துக் கொண்டது. 
                 முப்தியை பொறுத்தவரை எல்லா தரப்பையும் அனுசரித்துப் போக வேண்டிய நிலையில் அவர் இருப்பதை மறுக்க முடியாது. 
                     எந்த கோணத்தில் பார்த்தாலும் நடந்திருப்பது நல்லதற்கே என்றே கருத வேண்டி உள்ளது. 
                      அதை உறுதி படுத்த வேண்டிய கடமை ஆட்சியில் பங்கு பெற்றிருக்க கூடிய பா.ஜ.க. மற்றும் மக்கள் .ஜனநாயக .கட்சியினருக்கே உள்ளது..

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

பெயிலில் வந்தும் ஜெயலலிதா ஆட்சி ஜெயிலுக்குப் போனாலும் ஜெயலலிதா ஆட்சி தூக்கில் போடப்படும் சட்டம்?

சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் தண்டனை  பெற்ற ஜெயலலிதாதான் மக்களின் முதல்வர் என்றும் நடப்பது அவர் ஆட்சிதான் என்றும் எல்லா வகையிலும் காட்டிக் கொள்வதன் மூலம் நீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதை எல்லா அமைச்சர்களும் பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டனர்..

அதாவது பெயிலில் வந்தாலும் ஆள்வது ஜெயலலிதாதான் என்ற குற்றச்சாட்டை இதுவரை ஜெயலலிதாவும் மறுக்க வில்லை. அவரிடமிருந்து ஆட்சி நடத்துவது யார் என்பது பற்றி எந்த விளக்கமும் வரமில்லை.  முதல்வர் படம் , குடியரசு தின ஊர்வலம், அறை ஒதுக்குதல் , இரட்டை அதிகாரிகள் என்ற எந்த குற்றச்சாட்டுக்கும் விளக்கம் தர தேவையில்லை  என்றே எல்லாரும் கருதுகிறார்கள். மௌனமும் ஒரு ஒப்புதல் வாக்குமூலம்தான் .

          இவர்கள் திட்டமிட்டபடி       உச்சநீதிமன்றத்தின்  உத்தரவுபடி

ஒரு கால வரையறைக்குள் தீர்ப்பு வரும் வகையில் ஒரு அமர்வை கர்நாடகா உயர் நீதி மன்றம் அமைத்து அந்த மேல்முறையீட்டில் வெற்றி பெற்று  மீண்டும் முதல்வராகி திருவரங்கத்தில் மீண்டும் தேர்தல் கொண்டு வந்து  வெற்றி பெற்று அதன் பிறகுதான் தமிழக அரசின் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப் படும் என்பது அறிவிக்கப்படாத திட்டமாக இருக்கிறது.      அப்படி நடந்தால் அது ஒரு சரித்திர சாதனையாகவும்  உச்ச நீதி மன்றம் முதல் உயர் நீதி மன்றம் வரை நிலவுவது எல்லாருக்குமான சமநீதி தானா என்ற விவாதம் உச்சத்துக்குப் போகும் என்பதும்  வெளிப்படை.

         ஒருவேளை திட்டம்  தப்பிப் போய் மேல்முறையீட்டில் தண்டனை  உறுதிப் படுத்தப் பட்டால்  அதையும் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?    அல்லது உச்ச நீதிமன்றம் சொல்லும்வரை சிறையில் இருந்தாலும் ஜெயலலிதாதான் முதல்வர் என்று சொல்வார்களா? 
       சட்டத்துக்கு தூக்கு தண்டனை கொடுத்தாவது ஜெயலலிதாவை காட்சிப் பொருளாக்கி ஆட்சி நடத்துவோம் !      பணம் எங்கள் கையில் ! அதிகாரம் எங்கள் பையில் !      பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப போடும் மக்கள் இருக்கும் வரை  எங்களுக்கே வெற்றி என்று ஆனந்தக் கூத்தாடுவார்களா ? 
அதுசரி! எங்கே போய் ஒளிந்துகொள்வாள்  நீதி தேவதை ?

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

ஈழ அகதிகள் -தமிழக அரசின் கடமை

சுஷ்மா ஸ்வராஜும் மங்கள சமரவீரவும் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின் மத்திய அரசு ஒரு கூட்டத்தைக் கூடி அதில் தமிழக அரசின் பிரதிநிதியை அனுப்ப கோரியது.    முதல்வர் ஒ.பி.எஸ். ஒரு கடிதத்தை அனுப்பி அதில் அகதிகளை திருப்பி அனுப்பும் காலம் கனியவில்லை என்பதை சுட்டி காட்டி கூட்டத்தில் பங்கேற்க யாரையும் அனுப்ப வில்லை.     கடிதத்தில் எழுதியதையே கூட்டத்தில் பங்கேற்று வலியுறுத்தி இருக்கலாமே என்று கலைஞர் சுட்டி காட்டியதை கடுமையாக சாடி ஒ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டுள்ளார்.

      மொத்த அகதிகள்  3,04,269 பேரில்  2,12,000  பேர் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரின் இலங்கைக்கு திரும்பி விட்டனர்.    அவர்களது அனுபவம் என்ன என்பதை இந்திய அறிந்து கொள்ளவில்லை. 
     இந்தியா அகதிகளை அகதிகளாக நடதுவதில்லை .   அவர்களை அயல்நாட்டவர் சட்டம் மற்றும் குடியுரிமைச்சட்டம் ஆகிய வற்றை மீறி சட்டத்துக்கு புறம்பாக குடியேறிய வர்களுக்கு தற்காலிகமாக உதவிக் கொண்டுள்ளது. 
     அகதிகள் அவர்களாக விரும்பும் வரை அவர்களை திருப்பி அனுப்பும் பேச்சே கூடாது. 
     அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை விரும்பினால் கொடுக்க வேண்டும். 
உதவித் துகையை அதிகப் படுத்தவேண்டும்.     திபெத்திய  அகதிகளுக்கு பல மாநிலங்களில் நிலம் ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பது போல இவர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 
    திபெத்திய அகதிகள் தங்களின் அரசை புலம் பெயர்ந்து இந்தியாவில் தர்மசாலாவில் செயல்பட அனுமதி அளித்திருப்பதை நினைவில் இருத்தி இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்பட வில்லை என்றால்  இங்கு ஈழ அரசு புலம் பெயர்ந்து அமையும் என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்தால் ஈழப் பிரச்சினை ஒரே நாளில் தீர்ந்து விடும்.

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

யாகம் வளர்த்தால் ஜெயலலிதா விடுதலையாவாரா?

   சிறப்பு நீதி மன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்  பட்ட ஜெயலலிதா விடுவிக்கப் பட வேண்டும் என்று ஊர் ஊராக யாகம்
 வளர்த்துகொண்டும்  கோவில் கோவிலாக பலவிதமான சடங்குகளை செய்து கொண்டும் அ தி மு க அமைச்சர்கள் செய்து வரும் காரியங்கள் நமது அரசியல் எந்த அளவு தரங்கெட்டு போய்க் கொண்டு இருக்கிறது என்பதற்கு சான்றாக விளங்கி வருகிறது. 
     சொத்துக் குவிப்பு வழக்கின் தன்மைகள் விவாதிக்கப் படுவதற்கு மாறாக இவர்கள் செய்து வரும் காரியங்கள் பக்திக்கு புது அர்த்தம் கொடுக்கின்றன .   
     அர்த்த ராத்திரியில் கன்னகோல் திருடன் பூஜை போட்டு விட்டு திருட கிளம்புவது பற்றி கேள்விப் பட்டு இருக்கிறோம்.     இறைவன் திருட்டை ஆசிர்வதிப்பானா?    திருடன் பிரார்த்திப்பது அவன் விருப்பம்.  ஆனால் இறைவன் அதற்கு உடந்தையாக இருப்பான் என்று நம்புவது  சரியா? 
     அ தி மு க நாளேட்டில் பக்கம் பக்கமாக அமைச்சர்கள் கோவில் கோவிலாக ஏறி இறங்கும் காட்சிகள்  .   இவர்கள்தான் பெரியார் அண்ணா கண்ட இயக்கத்தின் வாரிசுகளாம். 
     சாமியை நம்பினால் பிறகு ஏன் பெரிய வக்கீல்களை வைத்து மாதக்கணக்கில் வாதாடுகிறார்கள். நாங்கள்  குற்றவாளிகள் அல்ல என்று சொல்லிவிட்டு அமர வேண்டியது தானே. 
     ஜெயலலிதா மெச்ச வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்து வரும் காரியங்கள் தமிழ் நாட்டின் பெயரைக் கெடுத்துக் கொண்டிருப்பதுதான் மிச்சம். 
     உங்கள் குற்றத்தை சுவாமி மேல் போட்டு பக்தியை கொச்சைப் படுத்தாதீர்கள். .   
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

+91-91766-46041

வழிகாட்டும் கர்நாடகம்! தாய்மொழி வழிக்கல்வியில்!

தமிழகத்தில்  தமிழை ஒரு பாடமாகக் கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவல நிலை இருக்கிறது. 
     தாய் மொழி வழிக் கல்விதான் குழந்தைகளின் சிந்தனையை தூண்டும் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது. 
     கர்நாடக அரசின் முந்திய முயற்சிகளுக்கு உச்ச நீதி மன்றம் துணை செய்யாது பயிற்று மொழி  ஆணை கருத்துரிமைக்கு எதிரானது என்று கூறி அந்த ஆணையை ரத்து செய்து விட்ட நிலையில்,,  விளக்கம் கோரும் மனுவை தாக்கல் செய்து விட்டு,   கர்நாடகா வில் தற்போது கன்னடம் தொடர்ந்து பயிற்று மொழியாக கடைபிடிக்கப் பட்டு வருகிறது. 
     இந்த நிலையில் மத்திய அரசின் சட்டமான கல்வி உரிமை சட்டத்தின் பிரிவு  29 ( எப் ) ல் இடம் பெற்றுள்ள நடைமுறைக்கு சாத்தியமான வரையில் தாய் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற வாசகத்தில் நடைமுறைக்கு சாத்தியமான வரையில் என்ற வாசகத்தை நீக்குவதன் மூலம் தாய்மொழி  அதாவது கன்னடம் பயிற்று மொழியாகிவிடும் என்று அந்த அரசு கருதி அதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர இருப்பதை சுட்டிக் காட்டி அதேபோல் தமிழ் நாட்டு அரசும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் கோரியிருப்பது மிகவும் சரியான ஒன்றேயாகும். 
     தமிழ் நாட்டில் ஐந்தில் ஒரு பங்கினர் தமிழை தாய் மொழியாக கொண்டிராதவர்கள். 
     அவர்கள் வாழட்டும் !    அவர்கள் தமிழ் மொழிக் கல்விக்கு எதிரானவர்கள் என்பதில்  உண்மையில்லை. 
     தமிழ் நாட்டில் தமிழ் மொழிக்  கல்விக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் கட்டுப் படுத்தப் பட வேண்டியவர்கள். .
    தமிழில் அரசியல் வேண்டவே வேண்டாம். ! 
     
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

கோட்சேவுக்கு சிலையாம் ? உட்பொருள் என்ன?

இந்து மகாசபை கோட்சே வுக்கு சிலை வைக்க திட்டமிட்டு சாமியார்களை அணி திரட்டி வருகிறார்கள் . 
காந்தியை உலகமெங்கும் போற்றி வருகிறார்கள். போரினால் உலகம் அழியும் என்ற ஆபத்தினின்று அகிம்சை தத்துவமே காக்கும் என்ற உண்மையை உலகம் உணரத் தொடங்கி விட்டது. 
       அகிம்சை தான் உலகின் வலுவான ஆயுதம் என்ற காந்தியின் கொள்கை பரவிக் கொண்டுள்ள நேரத்தில் இந்தியாவில் அவரைக் கொன்று தூக்கில் ஏற்றப்  பட்ட கொலைகாரனுக்கு நாடெங்கும் சிலை வைப்போம் என்று அறிவித்து செயல் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் எந்த தைரியத்தில் இதை செய்கிறார்கள்? 
     பா.ஜ.க. ஆட்சி இருக்கிற தைரியம்தானே ?  
     மத வெறிக் கொள்கைகளை அமுல் படுத்துவதற்கும்  இந்தி சமஸ்க்ரிதத்தை புகுத்துவதிலும்  அவர்கள் பயன் படுத்தும் பாணியை மக்கள் புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 
     யாரையாவது விட்டு பேசச் சொல்லி ஆழம பார்ப்பது .    எதிர்ப்பின் அளவுக்கேற்றவாறு புகுத்தும் நேரத்தை தீர்மானிப்பது என்பது தான் அந்த உத்தி. 
     மத்திய மாநில அரசுகள் உடனே செயல் பட்டு இம்மாதிரி பேசுபவர்கள் செயல்படுபவர்கள் மீது கடுமையான குற்ற தடுப்பு நடவடிக்கை எடுத்தால் தவிர இவர்கள் அடங்க மாட்டார்கள். 
    பார்ப்பனர்கள் கொலை செய்தால் அவர்களுக்கு தண்டணை அவர்களது சிகையை களைவது மட்டுமே என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்து மனு நீதி யை அமுல்படுத்த முயற்சிக்கும் முன் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். 
     இது எங்கு போய் முடியுமோ ? 
     
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

+91-91766-46041

இந்தியா மத சார்பற்ற , சோசியலிச நாடாக நீடிக்க வேண்டுமா ? வேண்டாமா?

பா. ஜ. க . அரசின் அடுத்த நகர்வு இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் இருந்து மத சார்பற்ற , சோசியலிச அடைமொழிகளை நீக்குவது. 
     குடியரசு தின விளம்பரத்தில் இந்த இரண்டு சொற்களையும் விட்டு விட்டு  பிறகு அதை நியாயப் படுத்தி சிவசேனா பாராளு மன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்தை விட்டு பேச செய்து , பின்பு ரவி சங்கர் பிரசாத்தை விட்டு இதுபற்றி தேசிய அளவில் விவாதம் தேவை என்று பேச விட்டது எல்லாம் ஒரு நாடகம் போலவே நடக்கிறது. 
     இருக்கும் பெரும்பான்மை பலத்தை வைத்து தங்கள் கொள்கைகளை நிறைவேற்றும் நோக்கிலேயே பா.ஜ.க அரசு செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. 
     அவசர கால சட்டம் பிரகடனப் படுத்தப் பட்ட காலத்தில் இந்திராகாந்தி கொண்டு வந்த 42 வது அரசியல் சட்டதிருத்தத்தின் மூலம் தான் இந்த இரண்டும் முகவுரையில் இடம் பெற்றன. 
      ஆனால் இதுவரை  எவராலும் இந்த திருத்தங்கள் கேள்விக்கு உள்ளாகப் படவில்லை. ஏனெனில் அவைகள்  இந்த நாட்டின் குணாதிசயங்கள்.    
     இந்த பன்முகம் கொண்ட நாட்டுக்கு பெருமை சேர்ப்பவை . 
அவைகளை எடுத்து விட்டால் இது இந்து நாடாகிவிடும். இந்து மதத்தில் நிலவும் சாதிய கொடுமைகளுக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும்நியாயம் கற்பிக்கப் பட்டுவிடும். 
     வளர்ச்சியை பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் வந்தபின் மக்களை அடக்கு முறைக்கு  தலை வணங்க  தயார் படுத்தும் வேலையில் இறங்குவது சரியல்ல.      
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

தமிழர்களை அவமானப் படுத்தும் ஜெயலலிதா

நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால் என்ன நான்தான் முதலமைச்சர் என்று பறை சாற்றிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

    இவர் மேன்முறையீட்டு வழக்கில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக வர முடிந்தால் அது வேறு.!
     ஆனால் தீர்ப்பு வரும் வரை கூட தற்காலிக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெயர் படம் எதுவும் அரசு விழாக்களில் வர அனுமதிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது தமிழர்களை அவமதிப்பதாக ஆகாதா?
     சென்னையில் நடந்த   குடியரசு தின அணிவகுப்பில் ஜெயலலிதா படமே ஆக்கிரமித்துக்கொண்டு இருந்தது.  டெல்லியில் நடந்த அணிவகுப்பில் தமிழகம் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லையாம்.
     தீவுத் திடலில் நடக்கும் பொருட்காட்சியில்   ஜெயலலிதா படங்களே காட்சியளிக்கின்றன.   பன்னீர்செல்வத்தின் ஒப்புதலோடு இது நடந்திருந்தாலும் அது சரியா என்பதுதான் கேள்வி?
     இங்கு எது நடத்தினாலும் கேட்க யாரும் இல்லை என்ற அளவில் காரியங்கள் நடப்பது இன்னும் எத்தனை நாளுக்கோ ?
     சென்னை உயர் நீதி மன்றம் சமீபத்தில் ஜெயலலிதா படங்களை அகற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து விட்டது.  முன்னால் முதல்வர் படம் என்று அரசே கட்சியாடும்போது  நீதிமன்றம் தலையிட முடியாமல் போனது.
    தார்மீக கடமை என்பதே இல்லையா?     வாக்காளர்களுக்கு   பணம் கொடுத்து வெல்வேன் யார் கேட்பது?   முன்பு அவர்கள் செய்ய வில்லையா?    என்று அக்கிரமங்களை நியாயப் படுத்தும் போக்கு நிறுத்தப் பட்டே ஆக வேண்டும்.

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V) 

பணம் கொடுத்தால் வாங்கிகொள்வேன்-ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்ற இளங்கோவன் அதற்கு காரணம் வாக்காளர்களுக்கு ஐந்தாயிரம் வரை பட்டுவாடா செய்ய இருப்பதை காரணமாக காட்டியவர் மேலும் சொன்னார், ” என்னிடம் கூட ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால்  வாங்கிகொள்வேன் .   ஆனால் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்க மாட்டேன்.” என்றார்.

     இதேபோல் டெல்லி தேர்தலில் கேஜ்ரிவால் சொல்லி விட்டு பின்பு அதை வாபஸ் வாங்கினார்.   
இளங்கோவனுக்கு வேண்டுமானால் ஒரு லட்ச ரூபாய் பெரிதாக இருக்கலாம். சாதாரண குடிமகனுக்கு ஐநூரும் ஆயிரமும் பெரிது.   பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதை இவர் கண்டிக்கிறாரா?  இல்லையா? 
     இப்படியெல்லாம் பொறுப்பற்றுப் பேசும் தலைவர்களால் விளைவது கேடல்லாமல் வேறென்ன? 
     ப. சிதம்பரத்தை முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் காங்கிரஸ் கட்சிக்காரன் கூட காங்கிர சுக்கு வாக்களிக்க மாட்டான் என்பதும் அவர் கூற்று. 
   காங்கிரஸ் மக்களை விட்டு வெகு தூரம் சென்று விட்டது . யார் முதல் அமைச்சர் வேட்பாளர் என்று ஏன் சிரமப் படுவானேன்?

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V) 

ஆங்கிலத்தை எதிர்ப்பவர்கள் இந்தி வெறியர்கள் ?

தாய் மொழி தவிர்த்து எந்த மொழியை கட்டாயப் படுத்தினாலும் அது திணிப்புதான்

     எப்படியாவது இந்தியை ஏற்றுக்கொள்ள செய்ய வேண்டும் என்பவர்கள் என்ன சொல்கிறார்கள் ?   இரண்டாவது மொழியாக அந்நிய மொழி ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை படித்தால்தான் என்ன ? 
     இந்தியை தாய் மொழியாக கொண்டவன் இந்தியையும் ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டு உலகம் சுற்றப் போய்விடுவான்.  நாம் மட்டும் தமிழையும் இந்தியையும் மட்டும் கற்றுக்கொண்டு இந்தியாவிலேயே முடங்கி விடவேண்டும்.       இதுதானே திட்டம்.  ? 
            ஆங்கிலம் அந்நிய மொழி என்றால் எனக்கு தமிழ் தவிர்த்து எல்லா மொழிகளும் அன்னியம்தான். 
            இந்தியோ , மராத்தியோ வங்காளியோ  எதுவாக இருந்தாலும் தேவைக்கு ஏற்ப தமிழன் கற்றுக் கொள்வான். 
          தமிழுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தமிழை ஆட்சி மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் ஆக்குவார்களேயானால் பாராட்டலாம். அப்போது இந்தியோ ஆங்கிலமோ எதையோ இரண்டாவது மொழியாக கற்றுக் கொண்டு போய் விடுவேன். 
       இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து இங்கு கூலி வேலைக்கு வருபவன் தமிழ் கற்றுக் கொண்டா வருகிறான்.  டெல்லியில் கூலி வேலை செய்யும்  தமிழன் இந்தி கற்றுக் கொண்டா வேலைக்குக் போனான். ? போனபின்  கற்றுக் கொள்ள வில்லையா? 
       என் தாய் நாட்டை என் தாய் மொழியில் வாழ்த்தி ஒலி முழக்கம் செய்ய முடியாது.   பாரத் மாதா கீ ஜெய் என்றுதான் கோஷம் போட வேண்டும்.  
       எனது நாட்டு மக்களவையில் எனது தாய் மொழியில் உணர்வு பூர்வமாக பேச முடியாது.     ஆயிரத்தெட்டு நிபந்தனைகள்.  
     உயர் நீதி மன்றத்திலோ உச்ச நீதி மன்றத்திலோ என் தாய் மொழியில் நான் வாதிட முடியாது  .   அதற்கு இந்தியோ ஆங்கிலமோ வேண்டும். 
     வங்கி , அஞ்சல், மத்திய அரசின் அலுவலகங்கள் , இன்னும் பல துறைகளிலும் நான் தொடர்பு கொள்ள  கருத்துப் பரிமாற என் தாய் மொழி தவிர்த்து இந்தி ஆங்கிலம் இரண்டில் ஒன்றில்தான் நான் பழகியாக வேண்டும். 
     இதே நிலைமைதான் எல்லா இந்தி அல்லாத மற்ற மொழிக் காரர்களுக்கும். 
     நான் இந்த நாட்டுக் காரன்தானா?   சந்தேகம் வந்தால் தவறா? 
     இந்தியன் எல்லோரும் சமம் என்றால் மொழியை கற்றுக் கொள்ள வேண்டிய பளுவும் எல்லாருக்கும் சமமாகத் தானே இருக்க வேண்டும்.      இந்தி அல்லாதவரை ஏமாற்றத் தானே மும்மொழித் திட்டம். !
இதுவரை எந்த இந்திக்காரன் தமிழ், தெலுகு, கன்னடம் , ஒரியா என்று கற்றிருக்கிறான் ? 
     இந்தியை எதிர்த்து விட்டு ஆங்கிலத்தை புகுத்தியதுதான்      இந்தி எதிர்ப்பு போரின் சாதனை என்று எழுதுபவர்களின் உள்நோக்கம்  ஆங்கிலத்துக்கு பதிலாக  இந்தியை கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான். 
        தமிழனுக்கு எது வேண்டும் என்பதை அவனே தீர்மானித்துக் கொள்ளட்டும்.     
        முதலில் தமிழுக்கும் ஏனைய அட்டவணை எட்டில் கண்ட எல்லா இந்திய மொழிகளுக்கும் உரிய சம அந்தஸ்தை ,ஆட்சியிலும் நீதிமன்றத்திலும் தந்து விட்டு பிறகு உபதேசம் செய்ய வாருங்கள். 
     நான் என் நாட்டில்தான் வாழ்கிறேன் என்ற உணர்வு முதலில் எனக்கு வரட்டும்.  அதற்கு உதவுங்கள். 
      பிறகு உபதேசிக்கலாம்.. 
     
      
     

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V).