Home Blog Page 123

சேது சமுத்திர கால்வாய்த்திட்டம் –எதிர்ப்பவர்கள் யார்? ஏன் எதிர்க்கிறார்கள் ?

தமிழர்களின் கனவுத் திட்டம் என்று ஏதாவது இருக்குமானால் அது சேதுக்கால்வாய்த் திட்டம்தான் நூற்று அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனை முயற்சிகள்? சுதந்திரம் பெறுவதற்கு முன்னால்  ஒன்பது கமிட்டிகள்.  பெற்ற பின்பு ஐந்து கமிட்டிகள்.
அத்தனை கமிட்டிகளிலும் நிலவழிக் கால்வாய், சுற்றுச் சூழல் பாதிப்பு , மீனவர் நலன் , பொருளாதார மேம்பாடு , லாப வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் , மாற்று வழிப் பாதைகள் , என்று எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து முடிவுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.
இரண்டாயிரத்து ஐந்தில் பிரதமர் தொடங்கி வைத்த பிறகு எண்ணூற்று ஐம்பது கோடி செலவழித்து விட்டாகிவிட்டது.  அதுவரை இலங்கை அரசும் கொழும்புவின் கப்பல் முதலாளி களும் மட்டுமே எதிர்த்து வந்த இந்த திட்டத்திற்கு இந்தியாவில் முதல் எதிர்ப்பை துவங்கியவர் சுப்பிரமணிய சாமி . அவர்தான் முதன் முதலாக இரண்டாயிரத்து ஒன்பதில்  உச்ச நீதி மன்றத்தில் ராமர் பாலத்தை சேதப் படுத்தி கால்வாய் திட்டம் அமுல் படுத்த கூடாது என்று வாதிட்டார். கொழும்பின் பண முதலைகள் சேதுத் திட்டத்தை முறியடிக்க இந்தியாவில் ஆதரவு திரட்டுகிறார்கள் என்று பேட்டி கொடுத்தவரும் இவர்தான்.
அதுவரை தமிழகத்தில் தி மு க , அ இ அ தி மு க, காங்கிரஸ், பா ஜ க , இடதுசாரிகள் என்று எல்லா கட்சிகளும் தங்கள் செயற்குழு பொதுக்குழு கூடினால் சேது சமுத்ர திட்டத்தை நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றாமல் இருக்க மாட்டார்கள்.
சு சாமியின் குரலை பா ஜ க சுவீகரித்துக் கொண்டது.   திடீர் பல்டி அடித்து அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு மாறாக ராமர் பாலம் சேதப் படுத்தக் கூடாது ,திட்டமே கூடாது என்று குரல் கொடுக்க தொடங்கினார்கள்.
தமிழகத்தில் வேரூன்றாத நிலையில் இந்தியாவின் பிற மாநிலங்களில் அரசியல் செய்ய சரியான ஆயுதம் கிடைத்து விட்டதாக அந்தக் கட்சி சேதுவைக் காப்போம் என்று குரல் கொடுக்க தொடங்கி விட்டது.   அதன் தமிழ் மாநில கிளைக்கு தலைமையை எதிர்த்து மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் தைரியம் கிடையாது.
ராமர் பாலம் என்றதும் முதல்வர்  ஜெயலலிதாவும் சு சாமியின் வழியில் செல்ல தயாரானார்.   விளைவு உச்ச நீதி மன்றத்தில் மாநில அரசு திட்டமே வேண்டாம் என்று அவிடவிட்டு தாக்கல் செய்தது.     இந்தியாவிலேயே தன் மாநிலத்திற்கு கிடைக்க இருக்கும் மத்திய அரசின் திட்டத்தை வேண்டாம் என்று மறுத்த ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். 
திடீர் என்று மீனவர்களின் நலன் பாதிக்கப் படும் என்று குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.   மாநில அரசின் பின்புலம் இருப்பதாக கேள்விகள் !
அதுவும் தி மு க தலைவர் கலைஞர் சேதுத்திட்டத்தை நிறைவேற்ற மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டங்களை அறிவித்ததும் தூண்டி விடப் பட்ட மீனவர் அமைப்புகளின் பேரால் சுவரொட்டிகள் வெளிவந்தன.
முதலில் அது ராமர் பாலமா ஆதாம் பாலமா என்பதே முடிவு செய்யப் படவில்லை தனுஷ்கோடி பக்கம் ஒன்றும் கோடியக்கரை பக்கம் ஒன்றும் என்று இரண்டு மணல் திட்டுகள் இருக்கின்றன. இவற்றில் எனது ராமர் பாலம் ? முக்கியமாக மணல் திட்டுகளை முழுவதுமாக யாரும் அழிக்கப் போவதில்லை.   முப்பது மீட்டர் அகலம் உள்ள பகுதி மட்டுமே அதுவும் குறிப்பிட்ட நீளத்திற்கு மட்டுமே திட்டுப்பகுதி பயன்படுத்தப் பட உள்ளது.
அதனால் பக்தர்கள் எவரும் மற்ற மணல் திட்டுப் பகுதியை பாலமாக பாவித்து வணங்குவதை யாரும் தடுக்கப் போவதில்லை.
மத்திய அரசின் கொள்கை முடிவை உச்ச நீதி மன்றம் அமுல் படுத்த தேவையான உத்தரவை பிறப்பிக்கும் என்று தமிழர்கள் எதிர் பார்க்கிறார்கள். .
ராமரின் பேரைச் சொல்லி தமிழகம் வளம் பெறுவதை தடுப்பவர்களை ராமரே மன்னிக்க மாட்டார்.
திட்டத்திற்கு ராமர் பேரை வைப்பதில் கூட தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றுகூட கலைஞர் அறிவித்துவிட்டார்.
திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாக மத்திய அமைச்சர்கள் வாசனும் நாராயணசாமியும் அறிவித்து இருக்கிறார்கள்.
சிங்களர்களின் குரலை  எதிரொலிக்க தமிழகத்தில் இத்தனை பேர்களா?
எல்லா சதிகளையும் முறியடித்து சேதுத் திட்டம் நிறைவேற உச்ச நீதி மன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருப்போம் .
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

புலிகள் மீதான தடையை நீடிக்கும் இந்திய அரசின் நோக்கம் என்ன ?

விடுதலைப் புலிகள் போராளிகளா பயங்கர வாதிகளா என்ற விவாதம் மறைந்து நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன.    அவர்கள்தான் ஒழிக்கப்   பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசே மார் தட்டிக் கொண்டிருக்கிறதே? 

சிங்கள அரசோடு கை கோர்த்து விடுதலைப் புலிகளை ஒழித்ததில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு என்ற களங்கத்தை சுமந்து கொண்டிருக்கும் சோனியா ,ராகுல் அதிகாரத்தில் இயங்கும் இந்திய அரசு மேலும் மேலும் களங்கத்தை பெரிதாக்கிக் கொண்டே போகிறது.
லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை காவு கொண்ட இறுதிக் கட்ட  போரின்போது அவர்கள் பட்ட துயரங்களை விட பல நூறு மடங்கு துயரத்தை தற்போது உயிர் வாழும் தமிழர்கள் அனுபவித்து வருகிறார்கள்.
இன்னும் இருபது ஆண்டுகளுக்கு ஆயுத போராட்டத்தை தமிழர்கள் கனவு கூட காண முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.   
அதுவும் இந்தியாவின் ஆதரவு இல்லாமல் அங்கு எந்த மாற்றமுமே நிகழ முடியாது.   அதனால்தான் இந்திராகாந்தி தமிழர்களுக்கு இந்தியாவில்  ஆயுத பயிற்சி அளித்தார்.    அதன் விளைவாகத்தான் இலங்கை அரசும் பணிந்து வந்தது.      ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் உருவானதும் இந்தியாவின் மீதான அச்சத்தின் விளைவாகத்தான்.    அந்த அச்சம் இப்போது இல்லை.   ஏன்?  போரில் பங்காளியான அரசின் மீது அச்சம் எப்படி வரும் ?   
இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு அவ்வப்போது மறுத்து வருகிறது.    இந்த மறுப்பில் உண்மை இருந்தால் என்ன செய்ய வேண்டும் இந்திய அரசு?
விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
அவர்கள்தான் இல்லையே?   இல்லாதவர்கள் மீது தடை எதற்கு?
சமீபத்தில் தமிழர் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அரசின் மீதான தன் அதிருப்தியை  வெளியிட்டார். தமிழர்களுக்கு ஓரளவுக்கு அதிகாரம் அளிக்கும் பதின்  மூன்றாவது சட்ட திருத்தத்தை ரத்து செய்ய முயலும் சிங்கள அரசின் முடிவை இந்தியா ஏற்காது என்ற பொருளில் கருத்து தெரிவித்தார்.
போர் முடியும் வரை அரசியல் தீர்வே இறுதியானது என்று சொல்லிக் கொண்டிருந்த இந்திய அரசு போர் முடிந்து நான்காண்டுகள் கழிந்தும் அரசியல் தீர்வைப் பற்றிப் பேச மறுக்கிறதே காரணம் என்ன?
இந்திய அரசு தமிழர்களுக்கு உதவும் என்ற உணர்வு சிங்களர்களுக்கு வந்தால் ஒழிய அவர்கள் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்க ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
அந்த உணர்வை சிங்களர்களுக்கு வர வைப்பது எப்படி? முதல் படியாக புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்.   
தடை நீங்கினால் தமிழர்கள் தெருவில் நின்று போராடுவார்கள்.  போராட்டத்தை அரசு அடக்க சட்டத்தை நாட முடியாது. மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இலங்கையில் மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்போம் என்று இந்திய அரசு சொல்ல முடியும். ஏன் தலையிடுவதற்கான காரணத்தை உருவாக்கி கொள்ள முடியும் . ஈழம் அமைய இந்தியா தன் படையை அனுப்ப தயங்காது என்ற நிலை உருவானால் தவிர அங்கு அரசியல் தீர்வு கிடைக்காது.
சோனியா –ராகுல் கட்டுப் பாட்டில் உள்ள இந்திய அரசு அத்தகைய முடிவை எடுக்காது என்றால் தலைமை மாறும் வரை உணர்வாளர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.   அல்லது தலைமையை மாற்ற முயற்சிக்க வேண்டியதுதான். வேறு வழி கண்ணுக்கு தெரிய வில்லை.
அதுவரை புலிகள்  மீதான தடை என்பது தமிழ் உணர்வாளர்கள் மீது ஈழம் பற்றி பேசுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க மிரட்ட மட்டுமே பயன்படும்.
அதாவது சிங்களர்கள் எதை விரும்புவார்களோ அதைத்தான் இந்திய அரசும் செய்யும் என்பது உறுதிப் படும்.    
தமிழகத்தில் உலவும் காங்கிரஸ்காரர்கள் இதை மறுத்தால் அவர்கள் செய்ய வேண்டியது தங்கள் தலைமையை உடனடியாக புலிகள் மீதான தடையை நீக்க குரல் கொடுக்க வேண்டும்.  
ராஜீவ் காந்தி படுகொலை மட்டுமல்ல பிரபாகரன் படுகொலையும் மறக்க முடியாததுதான்.    ஆனால் அவைகள் தீர்வுகள் ஏற்பட தடைகளாக இருக்க முடியாது.
ஆயுத போராட்டம் தராத வெற்றியை அனைத்து மக்களின் எழுச்சிப் போராட்டம் தரும்  என்ற உணர்வில் தான்   இப்போது உணர்வாளர்கள் இருக்கிறார்கள்.
அந்த உணர்விற்கு உயிர் கொடுத்து அரசியல் தீர்வு ஏற்படச் செய்ய இந்திய அரசினால்தான் முடியும்.
அதற்கு சிங்களர்கள் உடன்பட வேண்டும் என்றால் , இந்தியாவின் நிலைப்பாட்டில் மாறுதலை தெரிவிக்க வேண்டும்.   அதற்கு முதல்
படி புலிகள் மீதான தடை நீக்கம்.     சிந்திக்குமா இந்தியா?
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

ஐக்கிய இந்திய நாடுகள் -அதுதான் இந்தியா

நமது நாட்டின் பெயரை இந்தியா என்கிற பாரதம் என்று அழைக்கிறது நமது அரசியல சட்டம் .
அது மட்டுமல்ல . அது பல மாநிலங்களின் மைய அரசாகவும் விளங்கும் என்றும் ( shall be a Union of States ) என்றும் அது விளக்கம் சொல்கிறது. இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு ஒன்று அரசின் பெயரையும் தன்மையையும் மேற்கண்டவாறு விவரிக்கிறது.
இந்தியாஅதாவது பாரதம் பல்வேறு மாநிலங்களின் மைய அரசாக விளங்கும் என்பது சரியானால் அதன் பெயர் ஐக்கிய இந்திய நாடுகள் என்றுதானே இருந்திருக்க வேண்டும்? இருந்தாலும் சுருக்கமாக இந்தியா அல்லது பாரதம் என்று சௌகரியதுக் காகஅழைக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோரி போராட்டம் எழும் போதெல்லாம் நமது அரசியல சட்டம் மத்திய அரசை மையமாக கொண்ட மய்யத்தன்மை கொண்டதா அல்லது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரும் சமஷ்டி தன்மை கொண்டதா என்ற கேள்வி எழுவது வழக்கம். Whether it is Unitary or Federal is yet to be finally decided.
இந்தியாவில் ஒருமைத்தன்மை நிலைத்துவிட்டது. யாருக்கும் பிரிந்து போகும் மனநிலை இல்லை. பிரிவினை தடை சட்டம் இருப்பது உண்மைதான். ஆனால் பிரிவினை கோரிக்கை எழாமல் இருப்பதற்கு சட்டம் மட்டுமே காரணம் இல்லை. சௌகரியம்தான் காரணம்.யாரும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் தொழில் செய்யலாம் என்று அரசியல சட்டம் நமக்கு தந்திருக்கும் உரிமை தனிச்சிறப்பு.
இந்த ஒருமைத்தன்மைக்கு இரண்டு அம்சங்கள் பாதகமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது. ஒன்று மாநிலங்களின் தனித் தன்மையை பாதிக்கும் அளவிற்கு மாநிலங்களுக்கு இடையே யான மக்கள் தொகை பரிவர்த்தனை . இரண்டு மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரக் குவியல். மாநில சுயாட்சி கோரிக்கை அவ்வப்போது எழுவது மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரம் தவறாக பயன்படுத்தப் படும்போது. அதற்கு நாட்டின் பெயர் கூட ஒரு காரணம்.
இந்தியா என்ற பெயரில் தனித் தன்மை கொண்ட மாநிலங்கள் இருப்பது மறைக்கப்படுகிறது. மாறாக ஐக்கிய இந்திய நாடுகள் என்னும்போது மாநிலங்களின் தனித் தன்மை வெளிப்படையாக தெரிகிறது.
மேலாகப் பார்க்கும்போது இது இந்திய ஒற்றுமைக்கு எதிரான கருத்து போலத்தான் தோன்றும்.
உண்மையில் இது இந்திய ஒற்றுமையை பாதுகாக்கும் சிந்தனைதான்.
அமெரிக்காவில் ஐம்பது மாநிலங்கள் பிரிந்து போகும் உரிமை கொண்டவைகளாக விளங்கினாலும் இதுவரை யாரும் பிரிவினை பற்றி சிந்தித்ததே இல்லை. அதுதான் உண்மையான தேசியம்.
பெயரில் என்ன இருக்கிறது என்போருக்கு சொல்கிறேன். பெயரில்தான் எல்லாம் இருக்கிறது.
எனவே ஐக்கிய இந்திய நாடுகள் என்ற பெயர்தான் சரி. அப்போதுதான் விழிப்புணர்வு பெருகும். தன்னம்பிக்கை பிறக்கும். ஒற்றுமை நிலைக்கும்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
vaithiyalingamv@gmail.com

நீதிபதிகளை மிரட்டுவது யார்?

நம்முடைய முதல்வரின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீது பனிரண்டு வருடங்களாக ஹீராயின் போதைப் பொருள் வைத்திருந்த தாக வழக்கு நடப்பதும் அதன் மீதான விசாரணை ஒரு வழியாக முடிந்து தீர்ப்பு வழங்க இருப்பதும் மக்களுக்கு தெரியும்.
தெரியாத விஷயம் தீர்ப்பு சொல்லும் நேரத்தில் சொல்லக் கூடாது என்று நீதிபதிகளை மிரட்டுவது யார் என்பதுதான்?!
தீர்ப்பு சொல்லும் தேதி அன்று நீதிபதி ராமமுர்த்திக்கு அனாமதேயக் கடிதம் ஒன்று வந்ததாகவும் அவர் அதன் மீது உயர் நீதி மன்றத்துக்கு அனுப்பி  உரிய ஆலோசனை கோரியதாகவும் செய்திகள் வெளி வந்தன.  அவருக்கு என்ன ஆலோசனை தரப்பட்டது என்பது மக்களுக்கு தெரியாது.  ஆனால் அவர் பணிமாற்றம் செய்யப் பட்டது மட்டும் செய்தி வெளியானது.  வழக்கும் திரு சின்னப்பன் என்பவருக்கு மாற்றப்பட்டது.  அவருக்கும் அதே போன்று மிரட்டல் கடிதம் வந்ததாகவும்  அவரும் உயர் நீதி மன்ற அறிவுரையை கோரப் போவதாகவும் அறிவித்து வழக்கை இருபத்து ஆறாம் தேதிக்கு மாற்றியதுடன் விசாரணையை வேறு கோர்ட்டுக்கு மாற்றவும் கோரியிருக்கிறார்.
அதுவும் மிரட்டல் கடிதம் அனுப்பியது தொழில் செய்து வரும் வழக்கறிஞர் ஒருவர் என்று செய்தி வெளியாகிறது.
இப்படி எல்லாம் நடந்தால் பொது  மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது எப்படி நம்பிக்கை ,மதிப்பு வரும்.  எல்லாவற்றுக்கும் மேலாக காவல் துறையும் நீதிபதிகளும் இந்த வழக்கில் எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள்?
மிரட்டியவர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை?     யார் என்று ஏன் அடையாளம் காட்ட வில்லை ?   இதில் காவல் துறைக்கும் நீதிபதிகளுக்கும் பொறுப்பு ஏதும் இல்லையா?  யார் மீதும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவானதாக தகவல் இல்லை. புகார் கொடுத்து விசாரிப்பதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை?  புகார் கொடுக்க வேண்டாம் என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் தடுத்தால் தவிர நீதிபதிகளும் காவல் துறையும் இப்படி மௌனமாக இருக்க மாட்டார்கள்.
அவரது நோக்கம் என்ன?  விடுதலை வாங்கிகொடுப்பதா? தண்டணை வாங்கி கொடுப்பதா?
பெங்களுருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வரையில் இந்த தீர்ப்பு வரக்கூடாது என்பதற்காக இந்த மிரட்டல் என்றால் என்ன பொருள்?     விடுதலையாகி விட்டால் சுதாகரன் ஆட்சியாளர்களுக்கு எதிராக திரும்பி விடுவார் என்று எதிர் பார்கிரார்களா?  அவர் விடுதலை யாவதிலும் தண்டணை பெறுவதிலும் பொதுமக்களுக்கு எந்த கருத்தும் இல்லை. ஆனால் ஒரு கிரிமினல் வழக்கில் தீர்ப்பு சொல்லப் படும் நேரத்தில் யாரோ ஒருவர் தலையிட்டு தீர்ப்பை நிறுத்த முடியும் என்பது மிகவும் கவலையளிக்க கூடியது.    ஆளும் கட்சியின் தலையீடு ஏதும் இல்லை என்பதை நிரூபிக்க வாவது மிரட்டியவர்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும்.   இல்லையென்றால் இதற்கெல்லாம் ஆளும் கட்சியே பொறுப்பு என்று மக்கள் மன்றம் தீர்ப்பளித்து விடும்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)