Home Blog Page 15

சீட்டும் இல்லே சட்டமும் இல்லே ! மூன்று நம்பர் லாட்டரி கோடிக்கணக்கில்?!

சீட்டும் இல்லே சட்டமும் இல்லே!

மூன்று நம்பர் லாட்டரி கோடிக்கணக்கில்?!

கேரளாவில் மூன்று நம்பர் லாட்டரி நடக்கிறதாம். ஆனால் அதை வைத்து தமிழ்நாட்டில் சீட்டே இல்லாமல் கோடிக்கணக்கில் மூன்று நம்பர் லாட்டரி வியாபாரம் கொடிகட்டி பறக்கிறதாம்.

காவல்துறை தன் பங்கிற்கு மூவாயிரம் வழக்கிற்கு மேல் பதிவு செய்திருக்கிறதாம்.    எத்தனை பேர் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது கேள்வி?

யாரோ நடத்தும் லாட்டரியை வெறும் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து வியாபாரம் செய்கிறார்கள் என்றால் அதையும் மக்கள் நம்பி அதில் பணத்தை முதலீடு செய்கிறார்களே அவர்களை என்ன சொல்வது?

இதில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டதும் தான் விவகாரம் வெளியில் வந்திருக்கிறது.

பொதுமக்கள் ஏமாறாமல் இருந்தால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும்.   சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் அதில் பணத்தை முதலீடு செய்யும் மக்களும் சரியான நடவடிக்கை எடுத்து தண்டிக்காமல் இருக்கும் காவல் துறையும் தான் இதற்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

காவல் துறையை சரிக்கட்டாமல் இந்த சட்ட விரோத வியாபாரம் நடத்த முடியாது என்பதால் காவல் துறையே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

ராகவா லாரன்ஸ் அமெரிக்காவில் பிறந்தவரா?! அவரே எழுப்பிய கேள்வி?

ராகவா லாரன்ஸ் அமெரிக்காவில் பிறந்தவரா?! அவரே எழுப்பிய கேள்வி?

ரஜினி பிறந்த நாள் விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ் சீமானை தாக்குவதற்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.

அதில் நாங்கதான் இங்கே பிறந்தோம் என்று பேசுகிறீர்களே நாங்கள் எல்லாம் அமெரிக்காவிலா பிறந்தோம் என்று ஒரு கேள்வியை அவரே எழுப்பினார். அதை அவர்தான் விளக்க வேண்டும்.

லாரன்ஸ் பேச்சில் ரஜினியின் மேல் இருக்கும் விசுவாசம் தெரிந்ததே தவிர முதிர்ச்சி தெரியவில்லை.

அரசியலுக்கு வராதே என்று ரஜினியை பார்த்து யார் சொன்னார்கள்? யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் உன் கொள்கை என்ன என்று சொல் என்றுதானே கேட்கிறார்கள். சொல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் எப்படி?  

அரசியலுக்கு வருவதற்குக் உனக்கு உரிமை இருக்கும்போது கொள்கை சொல்லாமல் வந்தால் உன்னை தோற்கடிப்போம் என்று சொல்ல மற்றவர்களுக்கு உரிமை இல்லையா?

ஓட்டப்பந்தயத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். உண்மைதான்.   வெற்றி பெற்றால் கோப்பையை பெற்றுக் கொள். ஆனால் யாரும் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதற்காக ஆட்சியை கையில் கொடுத்து விட மாட்டார்கள்.

சினிமாவில் வெற்றி பெற்று விட்டாய். கோடிகளை குவித்துக் கொண்டாய், போதாது.  ஆட்சியை தூக்கி என் தலையில் வை என்றால் எப்படி?

எம்ஜியாரோடும் ஜெயலலிதாவோடும் ரஜினியை ஒப்பிடுவதே தவறு.

லாரன்ஸ் சீமான் அண்ணா என்று பேசியபோது ரசிகர்கள் பேரை சொல்லாதே என்று கூச்சல் இட்டார்கள்.

ரஜினி வருவது உறுதி என்றும் முதல் அமைச்சர் ஆவது நிச்சயம் என்றும் அவரது அண்ணன் சொல்கிறார்.

மற்றவர்கள் சொல்ல வேண்டியதை குடும்பம் சொன்னால் சரியா?

ராகவா லாரன்ஸ் தனது கொடை வழங்கும் உள்ளத்தால் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர். எதிரிகள் இல்லாத நல்ல கலைஞன். அதனால் சொல்கிறோம்.

ராகவா லாரன்ஸ் கொஞ்சம் அடக்கி வாசிப்பா?

ஈழத் தமிழர்களை கைவிட்ட எடப்பாடி – ஒபீஎஸ் கூட்டணி?

குடிஉரிமை சட்ட திருத்தம் இரு அவைகளிலும் நிறைவேறிவிட்டது.

மற்றவர்களைப்போல் இலங்கைத் தமிழர்களையும் சேர்த்து அவர்களுக்கும் குடிஉரிமை வழங்க வேண்டும் என்று ஆந்திராவின் ஒய் எஸ் ஆர் கட்சி கூட குரல் கொடுத்தது.

திமுக எம்பிக்கள் உரத்துக் குரல் கொடுத்தார்கள்.

ஆறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு  கொடுக்கபட்ட சலுகை முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கப் பட்டது.

இலங்கையில் மத ரீதியிலும் மொழி ரீதியிலும் இன ரீதியிலும் அடக்கு முறைக்கு  உள்ளானவர்கள் அகதிகளாக இந்தியாவில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களுக்கு குடிஉரிமை தர முடியாது என்று அமைச்சர் கூறுகிறார். அமித் ஷா அது வேறு பிரச்னை என்கிறார்.

அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினர் ரவீந்திர நாத் கூட இதைப்பற்றி  பேச மறுக்கிறார்.

மாநிலங்கள் அவையிலும் எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் மட்டும் ஏன் இலங்கை தமிழர் களுக்கு  இந்த உரிமையை வழங்கக் கூடாது என்று  கேட்டார். ஆனால் அதிமுக ஆதரித்து வாக்களித்து விட்டது.

ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தாததின் மூலம் தன் பாஜக விசுவாசத்தை அதிமுக நன்றாக வெளிக்காட்டிவிட்டது.

ஏலம் போடப்படும் பஞ்சாயத்து தலைவர் பதவிகள்?

உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் வந்தது. அரசியல் வியாபாரிகளுக்கு கொண்டாட்டமாக போய்விட்டது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வாக்குகளை பெற்று வெற்றி பெறுவதை விட சுலபமான வழி ஊரில் உள்ளவர்களை சரிக்கட்டி பதவியை ஏலத்துக்கு விடச்செய்து காசைக்கொடுத்து பதவியை விலைக்கு வாங்கி விடுவது என்று கண்டுபிடித்து அமுல் படுத்தவும் துவங்கி விட்டார்கள்.

கடலூர் பக்கத்தில் ஒரு ஊராட்சி தலைவர் பதவியை அதிமுக முன்னாள் தலைவர் ஒருவர் ஐம்பது லட்சத்துக்கும் துணைத் தலைவர் பதவியை தேமுதிக தலைவர் ஒருவர் பதினைந்து லட்சத்துக்கும் ஏலம் எடுத்திருக்கிறார்கள்.

பத்திரிகைகளின் வந்தபின் எனக்கு ஏது அவ்வளவு பணம் என்று அதிமுக பிரமுகர் மறுத்தாலும் உண்மை விளங்கிவிட்டது.

இனி பதவிகள் பணத்துக்குத்தான் என்று.

தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் ஏலம் விடப்பட்டு பணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதால் இப்போது அதே தொகைக்கு விடுவதா அல்லது புது ஏலம் விடுவதா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் பனைகுளம்பஞ்சாயத்து தலைவர் பதவியும் இருபத்தி  ஐந்து லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக தெரிகிறது.

நாமக்கல் மாவட்டம் பெரமாண்டம் பாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவியை ஒருவர் இரண்டு லட்சத்து நாற்பத்தி ஐந்து லட்சத்துக்கு ஏலம் போயிருக்கிறது.

விருத்தாசலம் அருகே பிஞ்சனூர் பஞ்சாயத்து தலைவர் பதவி பதினாறு லட்சத்துக்கு  ஒருவர் ஏலம் எடுத்துள்ளாராம்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஊராட்சி தலைவர் பதவியும் இருபத்தி  ஐந்து  லட்சத்துக்கு கேட்கப்பட்டு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

ஒரு ஊராட்சியில் ஏலம் விடுவதை தட்டிக் கேட்ட ஒருவர் அடித்துக் கொலை செய்யப் பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வந்திருக்கிறது.

இது பற்றியெல்லாம் மாவட்ட ஆட்சியர் விசாரணை  நடத்தி அறிக்கை தர கோரப்பட்டுள்ளதாக தகவல் வந்தாலும் அது எந்த அளவு பயன்படும் என்பது  தெரியவில்லை.

மக்களாட்சியை கேலிக்குள்ளாக்கும் இத்தகைய ஏலங்கள் நிறுத்தப்பட்டால்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் பொருள் இருக்கும்.

முடியாவிட்டால் அதிகாரபூர்வமாகவே பதவிகளை ஏலத்தில் விட்டு விடுங்களேன் .

தேர்தல் நடத்தும் செலவாவது மிஞ்சும்.

கட்சி பதிவான பின்பும் தினகரனுக்கு சின்னம் கொடுக்க மறுக்கும் தேர்தல் கமிஷன்?

தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு  ஆதரவாக சின்ன சின்ன விடயங்களுக்கு கூட பாரபட்சம் காட்டுகிறது.

எந்த கட்சிக்கு ஆதரவு என்பது மக்களின் மனநிலையை பொறுத்தது.

ஏற்கெனெவே தினகரன் நீதிமன்றத்துக்கு போய்தான் பரிசுபெட்டி சின்னம் வாங்கினார். ஐந்து சதம் வாக்கும் வாங்கினார். இப்போதும் நீதி மன்றம் சென்றால்  ஏதாவது ஒரு சின்னம் கொடுக்கும். நீதிமன்றம் சென்றுதான் அதை வாங்க வேண்டுமா?

தேர்தல் கமிஷன் தானாக அதை கொடுக்கக் கூடாதா?

இப்படி எல்லாம் நடந்து கொண்டால் தமிழர்கள் ஜனநாயகத்துக்கு அருகதை அற்றவர்கள் என்ற பெயர் தான் கிடைக்கும்.

எடப்பாடி தனது அதிகாரத்தை இப்படி எல்லாம் பயன் படுத்தக் கூடாது. கேட்டால் எங்களுக்கும் அதற்கும் தொடர்பே கிடையாது என்பார்கள். வேண்டாம் இந்த விளையாட்டு!

தோற்க வேண்டிய கட்சிதான் தினகரன் கட்சி. அது தானாக நடக்கட்டும். அதை தேர்தல் கமிஷன்தான் முடக்கி விட்டது என்ற குற்றச்சாட்டு வேண்டாம்.

ஆளும் கட்சி  தேர்தல் ஆணையத்தை ஆட்டுவிக்கிறது என்ற குற்றச்சாட்டு இதன் மூலம் உறுதியாகும் என்பது தான் உண்மை.

ரசிச்ச பாவத்துக்கு வெச்சு செய்றீங்களா ரஜினி, கமல்?

இதுவரை நடிகர்கள் அரசியலில் செய்யாததை இப்போது  ரஜினியும் கமலும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மக்களை சோதிப்பது. ரொம்பத்தான் சோதிக்கிறார்கள்.!

விஜயகாந்த் வந்தார். திராவிட பெயரை கைவிட வில்லை. அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பத்தரை சதம் வரை சென்று இப்போது இரண்டு சதத்துக்கு வந்து விட்டார்.

உடல்நலமின்றி இருக்கும் அவரை தொந்தரவு செய்ய யாருக்கும் விருப்பம் இல்லை.    நல்ல மனிதர் என்ற பெயரோடு நீடிக்கிறார். அவரை வைத்து அவர் குடும்பம் அரசியல் செய்கிறது. போகட்டும்.

ஆனால் கமலும் ரஜினியும் செய்வது சகிக்க முடியவில்லை.

ரஜினியை இழுக்கப் பார்த்தார் கமல். ரஜினி மாட்டவில்லை. உள்ளாட்சி தேர்தலில் படம் பெயரை பயன்படுத்தினால் நடவடிக்கை என்று அறிவித்திருக்கிறார்.

இப்போதைக்கு தர்பார் வெளியாகி இன்னொரு படமும் பண்ணியபிறகு 2021 தேர்தல் வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் வந்தால் போதும் என்று நினைக்கிறாராம். அதுதான் மகா எரிச்சலை தருகிறது.

கமல் பலம் 3-72% தான் என்று தெரிந்து விட்டது. கொள்கையே சொல்லாமல் வாங்கிய இந்த வாக்கு எந்த வலுவுள்ள சுயேச்சைக்கும் கிடைக்கும். கமல் பார்ப்பனீயத்தின் பிரதிநிதி என்ற சந்தேகத்தை துடைக்க அவர் ஒருபோதும் முன்வரவில்லை. சும்மா தானும் ஒரு நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு நடைமுறையில் சனாதனிகளை கண்டிக்காத வரை யாரும் உங்களை நம்பப்போவதில்லை.

இந்த இரண்டு பேரும் தமிழர்களை எப்படி எடை போட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்தால்தான் கோபம் பல மடங்காகிறது.

இந்த இருவரையும் தமிழகம் நாற்பதாண்டுகளாக தலையில் தூக்கி கொண்டாடி இருக்கிறது. அந்த அன்பைக் காட்டியதற்குத்தான் இப்போது இருவரும் தமிழர்களை வெச்சு செய்கிறார்கள்.

நீதிக்கட்சியும் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் போற்றி வளர்த்த திராவிட சித்தாந்தத்தை ஒழித்துக் கட்ட புறப்பட்டிருக்கும் இந்த இருவரும் யாரை கொண்டாடப் போகிறார்கள் எந்த சித்தாந்தத்துக்கு வலு சேர்க்கப் போகிறார்கள் என்பது தெரியாமல் அதை அவர்களும் சொல்லாமல் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்களே அதை தமிழகம் அனுமதித்தால் தன் தலையில் தானே கொள்ளி வைத்துக் கொண்டது போல.

பேசாமல் ரஜினி இப்படியே சொல்லிக் கொண்டு காலத்தைக் கடத்தி விட்டால் தமிழர்களுக்கு ஒரு நிம்மதி.

யாரோ சொல்லிக் கொடுத்து இதுதான் சமயம் இவர்கள் தலையில் மிளகாய் அரைக்க என்று ரஜினி வந்து விட்டால் ரசித்தவர்கள் கையாலேயே வலியையும் அவர் ருசிக்க வேண்டி வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

குடி உரிமை தருவதில் ஈழத் தமிழர்களுக்கு வஞ்சகம்?

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கலாகி உள்ளது.

அதில் பங்களா தேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து 31/012/2014க்கு முன் இந்துக்கள் என்பதற்காக அடித்து விரட்டப்பட்ட அகதிகளுக்கு இந்தியக் குடிஉரிமை வழங்குவதற்கு இந்த மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

உலகநாடுகள் எதிர்க்கும் என்பதால் கிறிஸ்தவர்களுக்கு உரிமை கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களுக்கு இந்த உரிமை இல்லை. ஏன் என்றால் அவர்கள் மதத்தின் காரணமாக அந்த நாடுகளில் ஒடுக்கப்படவில்லையாம்.

ஈழத் தமிழர்கள் தொண்ணூறு சதம் பேர் இந்துக்கள் என்றாலும் அவர்களை இந்திய அரசு இந்துக்களாக கருதியதில்லை. தமிழர்கள் என்ற அடையாளத்தை அவர்கள் வலியுறுத்துவதால் அவர்கள் இந்துக்கள் என்றாலும் இந்துக்களாக பாவிப்பதில்லை.

ஏன் இந்த பாரபட்சம்? இந்தியாவில் இருக்கிறோம் என்பதால் தமிழர்கள் தங்கள் முடிவுகளை எடுப்பதில் இருந்து ஏன்  தடுக்கப்பட வேண்டும்?

தமிழர்கள் தொடர்புடைய பிரச்னை என்றால் அதை தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்க வேண்டும். அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஆனால் இந்திய வெளியுறவுக் கொள்கையை டெல்லியில் இருக்கும் உயர் அதிகாரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் உயர்சாதி செல்வாக்கு  மிக்கவர்களாக இருப்பதால் சாமானியர்கள் சொல் அங்கே அரங்கேறுவதில்லை.

இன்றைக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஏன் குடிஉரிமை வழங்கக் கூடாது என்று திமுக டி அர் பாலு கேட்கும் போது மற்றவர்கள் ஆட்செபிக்கிரர்கள்.

சட்ட பூர்வ அனுமதி பெறாமல் இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு குடி உரிமை  கொடுக்க முடியாது என்று அமைச்சர் பதில்  கூறுகிறார்.

பங்களாதேசத்தில் இருந்தும் பாகிஸ்தான ஆப்கானிஸ்தானில் இருந்தும் வந்தவர்கள் அனுமதி பெற்று குடி வந்தவர்களா? அதிலும் இந்துக்களுக்கு மட்டுமே இந்த சலுகை என்றால் நாம் மத சார்பற்ற நாடு என்ற நிலையில் இருந்து மாறி விட்டோமோ?

இந்த மசோதா நிறைவேறினால் இந்தியாவின் பிம்பம் ஒரு மத வெறி நாடாகிப்போகும். அது நடவாது என்று நம்புவோம்?

தமிழாய்வு நிறுவனத்தில் இந்தி கற்பித்தல் ரத்து; அமைச்சர் பாண்டியராஜன்

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தியை கற்பிக்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டு அதற்குப் பதிலாக தெலுங்கு மொழியை கற்பிக்கப் போவதாக அமைச்சர் பாண்டியராஜன் இன்று அறிவித்தார்.

இப்படி ஒவ்வொரு இந்தி திணிப்பு முயற்சியையும் எதிர்ப்புக் குரல் எழுப்புவதன் மூலமாகவே தடுக்க முடிகிறது.

ஆனாலும் அவர்களும் இந்தி திணிப்பு முயற்சியை கைவிடப் போவதில்லை.
நாமும் திணிப்பை அனுமதிக்கப் போவதில்லை.

எப்படி இருந்தாலும் எதிர்ப்புக்கு பிறகாவது இந்தி திணிப்பு முயற்சியை கைவிட்ட அமைச்சருக்கு பொது மேடையின் பாராட்டுக்கள்.

வெங்காயம் சாப்பிடாதவர்கள் உயர்ந்த சாதியா? என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்?

வெங்காயம் விலை உயர்வு பற்றி நாட்டில் பெறும் கொந்தளிப்பு நிலவுகிறது. கிலோ முன்னூறு ரூபாய் அளவுக்கு மேல் போய்க்கொண்டு இருக்கிறது.

வெங்காய விலை நாட்டில் பெரிய பேசு பொருளாகி மீம்ஸ் போடுவோருக்கு தீனி தரும் பொருளாகி விட்டது. அதை அரசு எப்படி சமாளிக்கிறது என்பது ஒரு புறம இருக்கட்டும்.

அதைப்பற்றி பேச வந்த மத்திய நிதித்  துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேவையின்றி அலட்சிய விமர்சனம் செய்தது இப்போது பிரச்னை ஆகி இருக்கிறது. நான் வெங்காயம் சாப்பிடாத குடும்பத்தில் இருந்து வந்ததால் எனக்கு வெங்காய விலை உயர்வு பற்றி ஏதும் தெரியாது .” என்று விமர்சித்து இருக்கிறார்.

அவர் பார்ப்பன குடும்பத்தில் இருந்து வந்ததைத் தான் அப்படி குறிப்பிடுகிறார் என்று நாம் புரிந்து கொள்ளலாம். பொதுவாக பார்ப்பனர்கள் வெங்காயம் பூண்டு சமையலில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று கேள்விபட்டு இருக்கிறோம். அது அவர்களின் வழக்கமாக இருந்தால் அதைப்பற்றி மற்றவர்களுக்கு கவலை இல்லைதான்.

ஆனால் ஏதோ வெங்காயம் சாப்பிடாதவர்கள் எல்லாம் உயர்சாதி என்பது போலவும் சாப்பிடுபவர்கள் எல்லாம் கீழ் சாதி என்பது போலவும் அவரது கருத்து இருந்தால் அது மிகவும் கண்டிக்கத் தக்கது. வெங்காயம் சாப்பிடாதவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் அல்ல. சாப்பிடுபவர்கள் கீழ் மக்களுமல்ல. இப்படி எல்லாம் கருத்து தெரிவிப்பவர் ஒரு அமைச்சர் என்பதுதான் துயரம்.

அவர் அமைச்சர் பதவிக்கே தகுதி யானவர்தானா என்ற கேள்வியை யும் அவரது இந்த கருத்து எழுப்பி உள்ளது. மோடிக்கு பொருளாதாரம் தெரியாது என்று இன்று சுப்பிரமணிய சாமி கூறியிருக்கிறார். வெங்காய விலை உயர்வு பற்றி கூறும்போது இப்படி விமர்சிக்கிறார் சாமி. முதலில் அதற்கு பதில் சொல்லட்டும் நிர்மலா சீதாராமன்.

இஸ்ரோ சிவனின் அற்பத்தனம்; விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்து விட்டார்களாம்?

ஒரு தமிழர் இஸ்ரோவின் தலைவராக இருப்பதில் நமக்கு எல்லாம் பெருமைதான். ஆனால் அவருக்குத்தான் தமிழர் என்ற உணர்வு இல்லை. அது போகட்டும்.

விக்ரம் லேண்டரை தரை இறக்குவதற்கு முன்பாக நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கி மீ தொலைவில் இருந்தபோது இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடன் ஆன தொடபை இழந்ததால் அதனால் மெல்ல தரை இறங்க முடியாமல் போய்விட்டது. அது நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது. அதை நாசாவும் இஸ்ரோவும் தேடி வந்தனர்.

ஒரு தமிழர் சென்னை என்ஜினியர் சண்முக சுப்பிரமணியன் என்பவர் அது மோதி விழுந்து கிடந்த இடத்தில் இருந்து 750 மீட்டர் தொலைவில் கிடந்ததை கண்டுபிடித்து நாசாவுக்கு தெரியப்படுத்தினார்.

நாசாவும் அதை உறுதிபடுத்தி அவருக்கு ஒரு வாழ்த்து செய்தி அனுப்பியது.
இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் நாங்கள் விக்ரம் லேண்டரை விழுந்த இடத்தில் கண்டுபிடித்து நாங்கள் ஏற்கெனெவே எங்கள் இணையதளத்தில் அறிவித்து இருக்கிறோம் என்றார்.

ஆனால் சுப்பிரமணியம் அனுப்பிய தகவலுக்கு ஏன் பதில் அனுப்பவில்லை என்று கேட்ட போது நாங்கள் கண்டிபிடித்து விட்ட பிறகு மற்றவர்களுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும் என்றுபதில் சொன்னார்.

நாம் கேட்கிற கேள்வி; நாசா சுப்பிரமணியனுக்கு வாழ்த்து சொல்லும்போது அவர்களுக்கு இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்ட விபரம் தெரியுமா தெரியாதா?
அவர்களுக்கு இருக்கிற பெருந்தன்மை ஏன் உங்களுக்கு இல்லை?

பரிசீலிக்கும் போது ‘விகரம் லேண்டர் விழுந்து கிடந்த இடத்தை சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கண்டு பிடித்து உள்ளது. ஆனால் அதனுடன் இன்னும் தகவல் தொடபு ஏற்படுத்த முடியவில்லை. அந்த லேண்டருடன் தகவல் தொடர்பு ஏற்படுத்த சாத்தியமாகக் கூடிய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.” என்றுதான் சொல்லப் பட்டிருக்கிறது.

சிவன் அவர்களே கொஞ்சம் பெரிய மனதுடன் நடந்து கொள்ளுங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.