Home Blog Page 16

கொடுமை; உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி?

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை எம் பில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான இந்திமொழி பயிற்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்து ஆறு லட்ச ரூபாயை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்து இருக்கிறார்.

இந்த ஒரு வருட பயிற்சியை சென்னையில் இயங்கி வரும் இந்தி பிரச்சார சபா மூலமா நடத்தப்பட்டு அவர்களாலேயே சான்றிதழும் வழங்கப் படுகிறதாம் .

தமிழ்க்கல்வியில் உயராய்வினை வலுப்படுத்துதல் தமிழ், தமிழர் இலக்கியம்,  வரலாறு, கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் என்று துறை தோறும் தமிழாய்வினை மேம்படுத்த வேண்டிய துறை ஏன் இந்தியை  கற்பிக்க வேண்டும்?

தமிழை தாய் மொழியாக கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் தமிழைக் கற்பித்தல் நோக்கம் என்று சொல்கிறார்கள்.

இதை பயன்படுத்தி இந்தி பிரசார சபா செய்யும் காரியத்தை தமிழ் ஆராய்ச்சி நிறுவனமே செய்ய வைத்து விட்டார்கள்.

அவர்கள் ஏமாற்றுவார்கள். நாம் ஏன் ஏமாற வேண்டும் என்பதே கேள்வி?

கொடூரக் கொலையாளிகள் நால்வரையும் என்கௌண்டர் செய்தது சரியா தவறா?!

ஐதராபாத் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி இரண்டு லாரி டிரைவர்கள் அவர்களின் உதவியாளர்கள் இருவர் ஆகியோரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கொடூரமாக எரித்திருக்கிறார்கள்.

நால்வருக்கும் உடனடியாக தண்டனை தர வேண்டும் என்று பொது மக்கள் போராட ஆரம்பித்து விட்டனர்.

முதல்வர் சந்திரசேகர ராவ் விரைவு கோர்ட்டில் விசாரித்து தீர்ப்பை வெளியிட உத்தரவிட்டு இருந்தார்.

மேலவையில் பேசிய அதிமுக எம்பி நால்வரையும் தூக்கில் இட வேண்டும் என்றார். ஜெயா பச்சன் அவர்களை அடித்துக் கொல்லவேண்டும் என்றார். காங்கிரஸ் தெலுகு தேசம் உறுப்பினர்களும் இதையே சொன்னார்கள்.

ஒட்டு மொத்த இந்தியாவும் கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே திடீர் என்று நேற்று காலை காவல் துறை  அவர்களை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்று விட்டது.

பொதுமக்களிடம் இருந்து இதற்கு பெருத்த வரவேற்பு.

கருணை காட்ட தகுதி இல்லாதவர்கள் அந்த கொலையாளிகள் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் அவர்களை காவல் துறை நீதி மன்றமாக தன்னை பாவித்து சுட்டுக்  கொன்றது தான் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

லாரி டிரைவர்கள் என்பதால் சுட்டுக் கொன்று விட்டார்கள்.

பணக்கார வீட்டுப் பிள்ளைகளாக இருந்தால் இப்படி  சுட்டுக் கொன்று இருப்பார்களா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

வழக்கு பதிவு செய்வதில் தொடங்கி எந்த எல்லையில் குற்றம் நடைபெற்றது என்பதற்காக ஏற்பட்ட தாமதம் கொலையாளிகளை உடனடியாக அடையாளம் காண தடையாக இருந்திருக்கிறது. அதிகாரிகள் சிலர் இதற்காக  பணி இடை  நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நாடு முழுதும் கற்பழிப்பு கொலைகள் பெருக காவல் துறைதான் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

பயம் அற்றுப் போய் விட்டது.

35 ஆண்டுகள் கன்னியாஸ்திரி ஆக தொண்டு செய்த லூசி தன்னை பேராயர் நான்கு முறை கற்பழிக்க முயற்சி செய்தார் என்று புகார் செய்தார். என்ன நடவடிக்கை? இது தொடர்பாக அவர் ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார்.

பொள்ளாச்சி கற்பழிப்பு சம்பவத்தில் என்ன நடந்தது? காவல் துறை பெரிய இடத்துப் பிள்ளைகளிடம் மெத்தனமாக நடந்து கொள்ள வில்லையா?

குற்றம் கொடிது! ஆனால் அதற்கு காவல் துறையே நீதி மன்றமாக மாறி தண்டனை கொடுத்தது அதைவிட கொடிது.

பிறகு எதற்கு நீதி மன்றம்?

சாட்சிகளை விசாரித்து பத்து நாளில் விசாரணையை முடித்து இதே தண்டனையை நீதி மன்றம் மூலமாக நிறைவேற்றிட காவல் துறையால் முடியாதா? நிச்சயமாக முடியும்.

என்கவுண்டர் தொடர்பாக உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்புகளை புறந்தள்ளி காவல் துறை செயல்பட்டிருப்பது எதிர்காலத்தில் பல பிரச்னைகளை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கைலாச நாடு; நித்தியானந்தாவின் இந்து நாட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?

நித்தியானந்தா மீது வழக்குகள் இருந்தால் அவற்றை அவர் சந்தித்துத் தான் ஆகவேண்டும்.

குற்றம் செய்திருந்தால் சிறையில் தள்ளட்டும். யாருக்கும் எந்த ஆட்சேபணை யும் இருக்காது.

எத்தனையோ சாமியார்கள் சிறையில் கிடக்கிறார்கள். அவர்கள் பட்டியலில் இவரும் சேர்க்கப் பட வேண்டும் என்றால் நடக்கட்டுமே?

ஆனால் விசாரித்து தீர்ப்பு வழங்கும் முன்பே ஊடகங்கள் தீர்ப்பு வழங்குவதை எப்படி ஏற்க முடியும்? 

எல்லா சாமியார்களும் மக்களின் அறியாமையை நம்பிக்கையை தேவையை பயன்படுத்தி சௌக்கியமாக வாழ்கிறார்கள்.

வெளிநாடு செல்லும் எந்த சாமியாரும் இந்தியாவில் சொல்லும் புராணக் கதைகளையோ சாத்திரங்களையோ உபதேசித்து அங்கே பேர் சொன்னதில்லை. எல்லாம் தத்துவ முத்துக்கள். அதுவும் ஆங்கிலத்தில் புலமை பெற்று அவர்களையே அசத்துவது அவர்களின் கைவந்த கலை.

பெரும்பாலும் பார்ப்பன சாமியார்கள் தான் அதிகம். அவர்கள் வேறு யாரையும் விடுவதில்லை. யாராவது  அப்படி இருந்தால் அவர்கள் பார்ப்பனர்களின் பிடியில் கட்டுண்டு கிடப்பவர்களாகவே இருப்பார்கள்.

நமக்குத் தெரிந்தவரை வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முதன்மையானவர்.    கிரிஷ்ணபக்தி இயக்கத்தை  பரப்பியவர்களும்  அவர்கள்தான். சுவாமி நாராயண் இயக்கமும் அவர்களின் பிடியில். இன்னும் நூற்றுக் கணக்கில். எல்லாரும் ஆயிரக்கணக்கான கோடியில்தான் புரள்கிறார்கள். யாரும் அவர்களை மோசமாக விமர்சித்ததில்லை.

ஆனால் நித்தியானந்தா என்று வந்தால் பிடி பிடி என்று பிடித்துக் கொள்கிறார்கள்.

நித்தியானந்தாவும் ஆன்மிக சொற்பொழிவாளர் தான். நூற்றுக் கணக்கான புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவருக்கென சீடர்கள் இருக்கிறார்கள்.  எவரும் வயதுக்கு வராதவர்கள் அல்ல. எல்லாம் மெத்தப் படித்தவர்கள். 

எல்லாரையுமா மூளை சலவை செய்து விட முடியும்?

யாராவது பார்ப்பனர் கூடவே இருந்து கடைசியில்  குழி பறிப்பான். அதுதான் நித்தியானந்தாவுக்கும் நடந்தது.   நடந்து கொண்டு இருக்கிறது .

சிறுமிகளை வைத்து நிதி வசூலித்தார் என்பது நன்கொடை கொடுப்பவர்களையும் அவமானப் படுத்துவதாகும். அவ்வளவு மலிவானவ்ர்களா கோடிக்கணக்கில் நிதி  தர முடியும்?

சரி. இப்போது அமெரிக்க அருகே ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு   கைலாச நாடு என்று பெயர் சூட்டி அவர் தன் சீடர்களுடன் தங்கி இருப்பதாக  தகவல்.

                  இதில் ஏதேனும்  குற்றம் இருந்தால் அதை ஈக்வடார் நாடு அல்லவா சொல்ல வேண்டும்? 

அவருக்கு அமெரிக்கா நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் சட்ட ஆலோசனைகளை கொடுத்து செயல் படுத்தி வருவதாக தெரிகிறது.

இந்திய பாஸ்போர்டை முன்பே ரத்து செய்து விட்டதாகவும் அவரிடம் இந்திய பாஸ்போர்ட் இல்லை என்றும் சொல்கிறார்கள்.   அவர் வேறு எந்த நாட்டிடமும் குடிஉரிமை கேட்டு மனுக்  கொடுத்ததாகவும் தெரியவில்லை.

இந்திய குடிஉரிமை சட்டத்துக்கு எதிராகவோ இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ ஏதேனும் செய்திருந்தால் அதையும் விசாரிதுத்தான் முடிவு செய்ய வேண்டும்.   எதையும் அவருக்கு விளக்கம்  கொடுக்க அவகாசம் கொடுக்காமல் முடிவு செய்ய முடியாது. 

இன்டர்போல் அறிவிப்பு கொடுத்து இருப்பதாகவும் அவர்கள்  இதில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும்  தெரிகிறது.

எப்படியோ உண்மை  வெளிவர வேண்டும் என்றுதான் எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள்.

கைலாச நாடு  பாஸ்போர்ட் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அதில்

” By the grace of Parmashiva the holder of this passport is allowed free entry in all eleven dimentions and fourteen lokas including Kailasa.

“Paramashiva accepts the passport holders devotion and Integrity to Paramashiva and to this Avatar on Planet Earth, His Divine Bhagawan Nithyaananda the website said.  It has space for making donations to the course of reviving Sanatana Hindu Dharma and building the world’s greatest Hindu Nation. ” He claims to have converted about 3 Lakh foreigners to Hindusim.

நித்யானந்தா பார்ப்பனர் அல்ல.   அவர் எப்படி நான்கு  வர்ணத்தை நியாயப் படுத்தும் சனாதன தர்மத்தை புதுப்பிக்கப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை.

மூன்று லட்சம் வெளிநாட்டவரை அவர் இந்து மதத்துக்கு மாற்றி இருப்பதாக வரும் செய்திகளில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதும் தெரியவில்லை. 

நித்தியானந்தாவின் வீடியோ தான் இதில்  முக்கியம்.

தான் ஏதோ  பிள்ளையார் கோவில்  ஆண்டி போலவும் தன்னை ஒழிக்க சர்வதேச சதி நடைபெறுவதாகவும் சொல்லும் அவர் தன்னை பொறம்போக்கு  என்றும் பரதேசி  என்றும் அழைத்துக் கொள்கிறார்.   தன்னை பரமசிவனும் காலபைரவரும் பராசக்தியும் காத்து வருவதாக கூறும் நித்தியானந்தா தான் யாருக்கும் பயப்படப் போவதில்லை என்று கூறுகிறார்.

அவர்  சொல்வது உண்மையென்றால் பணம் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் ஒரு நாட்டை உருவாக்கி கொள்ள முடியுமே?   அதுவா சர்வதேச சட்டம்.?   நிச்சயமாக இருக்க முடியாது.   ஆனால் அவருக்கு சட்ட ஆலோசனை கொடுப்பவர்கள் அவருக்கு  அந்த நம்பிக்கையை ஊட்டி  இருக்கிறார்கள்.  அது எந்த அளவு செல்லும் என்பது இனிதான் தெரியும்.

பொதுவாக இந்து ஒருவர் ஒரு நாட்டை உருவாக்குகிறார் என்றால் எல்லாருமே பாராட்ட வேண்டுமே ?  ஏன் நித்தியானந்தா விடயத்தில் அது நடக்க வில்லை?

அதை ஒரு பார்ப்பனர் அல்லாதவர் செய்வதா?   அதுவும் ஒரு தமிழ் நாட்டில் பிறந்த ஒருவன் செய்வதா ?   இவை மட்டுமே இத்தனை எதிர்ப்புகளுக்கும் காரணம் என்றால் அதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

நடப்பது சர்வதேச சமூகம் சார்ந்தது.  எனவே இதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் .

அதாவது இந்திய சட்டமும் சர்வதேச சட்டமும் .

 

பாஜகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார் அரசகுமார் ?!

பொதுமேடையில் நாம் பரிந்துரைத்த படி கடைசியில் பி டி அரசகுமார் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் அதன் தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பாஜகவில் இருந்து கொண்டே இவர் அன்று பேசியது கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் இதையே வேறு யாரும் பேசி இருந்தால் ஒன்றும் செய்திருக்க  மாட்டார்கள்.

சுப்பிரமணியசாமி பேசி வருவதை விடவா யாரும் அதிகம் பேசி விட முடியும்?   இதற்கு அவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

இதை எல்லாம் பற்றி கவலைப் படுகிற மன நிலையில் பாஜகவினர் இல்லை. அவர்கள் நடிகை நமீதா பாஜக வில் சேர்ந்ததை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

எப்படியோ அர்சகுமாருக்கு போதுமேடையின்  வாழ்த்துக்கள்?!

பாஜகவில் சூத்திரன் பேசக்கூடாது.. பேசி மாட்டிக் கொண்ட அரசகுமார்?

அரசகுமார் தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர்.

புதிதாக சேர்ந்தவர் ஆதலால் பாஜகவின் நடைமுறைகள் அறியாதவர்.

அதற்கு முன்பு திமுகவில் மாவட்ட அளவில் பொறுப்பில் இருந்திருக்கிறார்.

எல்லா பாமர மக்களையும் ஈர்க்கும் இந்துத்துவ தத்துவத்தில் ஈடுபாடு கொண்டோ அதிகாரத்தில் மோடி வருவார் என்பதில் நம்பிக்கை கொண்டோ தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டவர்.

சமீபத்தில் புதுக்கோட்டை திருமண நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்ட அவர் மேடையில்  முக ஸ்டாலினை வைத்துக்கொண்டு தனது திமுக அனுபவங்களை பகிர்ந்து கொண்டவர் பிறரைப்போல் அல்லாமல் முறையாக தேர்தல் மூலம்  முதல் அமைச்சராக வர தனது வாழ்த்துக்களை தெரிவித்தவர் கொஞ்சம் கூடுதலாகவே வார்த்தைகளை அள்ளி விட்டு விட்டார்.

விடுவார்களா பார்ப்பனர்கள். உடனேயே துணைத் தலைவர் நரேந்திரனை விட்டு இனி அரசகுமார் பொது நிகழ்ச்சிகளில் பாஜக சார்பில் கலந்து கொள்ளக் கூடாது என்று நோட்டிஸ் கொடுத்து விட்டனர்.

இது வேறு யாராவது பேசினால் நடந்து இருக்குமா?

இதையே வேறு யாரும் பேசி இருந்தால் அதிமுக சரியாக இல்லாத நிலையில் திமுகவை உள்ளிழுக்க இது சரியான வியூகம்  என்று பாராட்டி இருப்பார்கள். இதைப் பேச ஒரு சூத்திரனுக்கு நிச்சயம் உரிமை இல்லை என்பதை அவர் அறியமாட்டார்.

முன்பு இதேபோல் சி பி ராதாகிருஷ்ணனும் தான் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.   ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை.   அவர் கொஞ்சம் வலுவானவர்.   நடவடிக்கை  எடுத்தால் கோவையில் கட்சி காணாமல் போகும் அல்லது பலவீனப்பட்டுப் போகும்.  எனவே அடக்கி  வாசித்தார்கள்.

அரசகுமாருக்கு அவ்வளவு செல்வாக்கு இல்லை. தூக்கி  எறிய தயாராகி விட்டார்கள்.

பாஜகவின் உயர் மட்டக் குழுவில் இருந்து கொண்டே நாளும் பொழுதும் மத்திய பாஜக அரசையும்  மோடியையும் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார் சுப்பிரமணிய சாமி. அவர் ஒரு பாராளுமன்ற மேலவை உறுப்பினர். நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியாது என்கிறார் அவர். தகுதி இல்லாதவர் என்று யாரை அவர்  கருதினாலும் தயக்க மில்லாமல் கூறக் கூடியவர்.

அவருக்கு எந்த பதவியும் கொடுக்கக் கூடாது என்று தமிழகத்தில்  இருந்து சங்கர மடம் மூலமாக  அப்போது குரல் வந்தது .என்று சொன்னார்கள்.

ஆனாலும் இன்னமும் எந்த பாஜக தலைவரும் சு.சாமிக்கு எதிராக எந்த குரலையும் எழுப்பி விடவில்லை.

இத்தனைக்குப் பிறகும் இனி அரசகுமார் பாஜகவில் இருப்பதை விட பேசாமல் திமுகவுக்கே சென்றுவிடலாம்.

உள்ளாட்சித் தேர்தலில் ஆட்டங்காட்டும் தேர்தல் ஆணையம்? தேர்தல் நடக்குமா?

டிசம்பர் 6ம் தேதி முதல் வேட்பு மனு தொடங்கி  27, 30 ஆகிய இரண்டு தேதிகளில் தேர்தல் நடக்கும் என தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதை உச்சநீதிமன்றத்தில் வரும் 13 ம் தேதி தாக்கல் செய்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க வழி தேடி இருக்கிறது தேர்தல் ஆணையம்.

ஊரக பகுதிகளுக்கு மட்டும்தான் இந்த தேர்தல்.

நகர்ப்புற ஊராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. நிர்வாக காரணம் என்று  காரணம் சொல்லப்படுகின்றது. எப்போது  வரும் என்ற அறிகுறியும் இல்லை. விரைவில் அறிவிப்போம் என்ற தேர்தல் கமிஷனரின் அறிவிப்பு மட்டுமே வந்திருக்கிறது.

இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்கள் இதுவரை நடத்தப்பட்டதே இல்லை.   முதல் முறையாக இரண்டு கட்ட தேர்தல்.

திமுக உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்திருந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகளை உச்சநீதி மன்றம் வரும் 5ம் தேதி அவசர வழக்காக விசாரிக்க இருக்கிறது.

அப்போதுதான் இட ஒதுக்கீடு, மறுவரையறை, போன்றவற்றில் சுட்டிக்காட்டப் பட்ட குறைகள் களையப்பட்டு தேர்தல்  நடத்தப்படுமா அல்லது அவைகளை புறந்தள்ளி தேர்தல் நடத்தப்படுமா அல்லது தேர்தலே தள்ளி வைக்கப் படுமா என்பது தெரிய வரும்.

முன்பும் இதுபோல்தான் 2016ல் உள்ளாட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்ட பிறகு தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பதை நினைவு கூர்ந்தால் மீண்டும் அதே நாடகத்தை அரங்கேற்றுகிறதா தேர்தல் ஆணையம் என்ற கேள்வி எழுகிறதா இல்லையா?

எம்ஜியார் காலத்திலும் இதேபோல் தான் நகர்ப் புறங்களுக்கு தேர்தல் நடத்தாமல் அதை திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

31 மாவட்டங்களுத்தான் தேர்தல். இப்போது செங்கல்பட்டையும் சேர்த்து 37  மாவட்டங்கள். புதிதாக உருவாக்கப் பட்ட மாவட்டங்கள் பின்னால் வரையறை செய்யப் பட்டு மாவட்ட பஞ்சாயத்துக்கள் உருவாகப்படும் என்பது  எந்தளவு நியாயாம் என்பதையும் நீதிமன்றம் பரிசீலிக்கும்.

எது எப்படியோ எல்லார் பார்வையும். உச்ச நீதிமன்றத்தின் பக்கம் குவிந்திருக்கிறது.

தேர்தல் கமிஷன் ஏற்படுத்தியுள்ள இந்த தலைவலியை உச்ச நீதி மன்றம் போக்கி விடும் என்று எதிர்பார்ப்போம்.

திமுக தேர்தலை நடத்த தடை கேட்கவில்லை. குறைகளை களைந்து நடத்துங்கள் என்றுதான் கேட்கிறார்கள்.

இடையில் பொங்கல் பரிசாக எடப்பாடி அறிவித்த ரூபாய் ஆயிரம் அன்பளிப்பு தேர்தலை மனதில் வைத்துத்தான் என்பதை  மக்கள் அறியமாட்டார்களா?

ஜனவரி 2018ல் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் என்று அறிவித்து விட்டு ஓராண்டில் ஏன் மறைமுக தேர்தலுக்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்ற கேள்விக்கு எடப்பாடி அரசின் பதில் ஏற்றுக் கொள்கிற மாதிரி இல்லையே.

பொய்மையும் வஞ்சகமும் கொண்ட தமிழர்களின் ஆட்சியாக அதிமுக அரசு செயல்படும் போது தமிழர்களுக்கு ஆளுகின்ற தகுதியே இல்லை என்று மாற்றார் வசை பாடுவார்களே என்ற எண்ணம்தான் நம்மை வருத்துகிறது.

தனது கூட்டணி கட்சிகளையே தன் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிக்க  வைக்க அதிமுகவால் முடியவில்லையே?

இறுதிப் புகலிடம் உச்சநீதி மன்றம்.

ஐந்தாம் தேதி அது என்ன செய்கிறதென்று பார்க்க காத்திருப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

பொன் மாணிக்கவேல் – தமிழக அரசு மோதலால் தமிழர்களுக்கு இழப்பு?

உயர் நீதிமன்றத்தின் நன்மதிப்பை பெற்ற சிலை கடத்தல் பிரிவு ஒய்வு பெற்ற ஐ ஜி பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தின் உத்தரவில் ஓராண்டு பணி நீட்டிப்பு பெற்று  சிறப்பு  அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவர் தனது பதவியை மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்ய மனு செய்திருந்த நிலையில் தமிழக அரசு மறுத்து உடனே ஆவணங்களை ஒப்படைக்க கோரி கடிதம் எழுதியிருக்கிறது.

அவரும் நான் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி எனவே என்னிடம் நீங்கள் ஆவணங்களை கேட்கக் கூடாது என்று பதில் எழுதி இருக்கிறார்.

ஒரு  நல்ல அதிகாரியிடம் அரசுக்கு ஏன் இத்தனை வன்மம்.?

பணி நீட்டிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றும் அங்கும் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நீட்டிப்பு செய்து ஐந்து மாதம் கழித்தே அரசு அவரது பணிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்பதில் இருந்தே அரசு அவரை எந்த அளவு உதாசீனப்படுத்தி வந்திருக்கிறது என்பது தெரிகிறது.

ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் ஆவணங்களை அரசு கேட்கிறது என்றும் அதில் அமைச்சர்களுக்கு அக்கறை இருக்கிறது என்றும் புகார்கள் எழுப்பி இருந்தார் அவர்.

விலை மதிப்பற்ற தமிழக கலைச் செல்வங்கள் திருடு போனது பற்றி எல்லாருக்கும் இருக்கும் பதற்றம் அரசுக்கு ஏன் இல்லை.?

அதை மீட்பது முக்கியமான கடமை என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

ஆனால் அந்தப் பணியில் சுயநலமுடன் சிலர் குறிக்கிட்டு குந்தகம் செய்வதை அரசு எப்படி அனுமதிக்கிறது?

எப்படி இருந்தாலும் ஒரு கடமை வீரருக்கும் அதிகாரத்தில் இருக்கும் கட்சிக்கும் ஏற்பட்ட மோதல் மிகவும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உரியதாகும்.

ஆனால்  எந்த அதிகாரியும் ஆவணங்களை தான் வைத்துக்கொள்ளமுடியாது.

ஒன்று  அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும். இரண்டில் ஒன்றை பொன்.மாணிக்கவேல் செய்து  இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

அரசும் அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுத்து மீட்கப் பட வேண்டிய கலைச்செல்வங்களை மீட்க வேண்டிய பணிக்கு வலு சேர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

இப்போது உச்சநீதிமன்றம் பொன் மாணிக்கவேலுக்கு ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு இருக்கிறது.   பணி நீட்டிப்பு தொடர்பாக உயர்நீதி மன்றம் முடிவு செய்யும் என்றும் கூறியிருக்கிறது .      இனி உயர்நீதி மன்றம் இதில் தலையிடுவதற்கான வாய்ப்பு  குறைவு.

எந்த அதிகாரியும் ஓய்வு பெறாமல் உழைக்க முடியாது. அரசுப் பணி தொடரும். அதிகாரிகள் மாறலாம். நான்தான் தொடர்வேன் என்று எந்த அதிகாரியும் உரிமை கோர முடியாது.

அதிக பட்சம் அரசிடம் நம்பிக்கை இல்லையென்றால் என்னிடம் இருக்கும் ஆவணங்களை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் பார்த்து யாரிடம் ஒப்படைக்கிறீர்களோ செய்யுங்கள் என்று ஒப்படைப்பது மட்டும்தான்  அவரின் கடைமையாக இருக்கும்.   அதிலும் இப்போது உச்சநீதி மன்றம் அரசிடமே ஒப்படைக்க உத்தரவிட்டு விட்டது.

இந்த விவகாரம் தமிழக  அரசுக்கு ஒரு களங்கம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

அதிமுக -பாஜக உறவு கணவன் மனைவியைப் போன்றது? முரளிதர் ராவ் அதிர்ச்சி வர்ணனை

இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு இடையே இருக்கும் உறவை இதுவரை பாஜக செயலாளர் முரளிதர் ராவைப் போல் யாரும் சொன்னதில்லை.

அதிமுக -பாஜக இடையே இருக்கும் உறவு கணவன் மனைவி உறவைப் போன்றது என்றார் ராவ்.

இந்துக்கள் மட்டுமே கணவன் மனைவி உறவு புனிதமான பந்தமாக பாவிக்கிறார்கள். இஸ்லாம் அதை ஒரு ஒப்பந்தம் என்றே கருதுகிறது. கிறித்துவம் இறைவன் போட்ட முடிச்சை மனிதன் பிரிக்காதிருக்கக் கடவான் என்கிறது.

அதிமுக இனி எங்களிடம் இருந்து பிரிந்து போக முடியாது நாங்கள் தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டோம் என்பதைத் தான் முரளிதர் ராவ் அப்படி கூறுகிறாரா?

மேயர் தேர்தலை மறைமுக தேர்தலாக்கி பாஜகவின் கனவை உடைத்த எடப்படியின் மேல் உள்ள கோபத்தில் அப்படி கூடுகிறாரா ராவ்?

அதிமுக கூட்டில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என்பதை வெளியில் சொல்ல மாட்டோம் என்கிறார் ராவ். கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவை யாராவது வெளியில் விவாதிப்பார்களா என்கிறார் ராவ்?

அதிமுகவுக்கு கூட்டணி கட்சிகள் அதிகம். அப்படியானால் எத்தனை திருமணங்களை அதிமுக செய்திருக்கிறது? யாருக்கு விசுவாசமாக இருக்கும்?  நவீன பாஞ்சாலி கதையாக இருக்கிறதே என்று கேட்க தோன்றுகிறது அல்லவா? 

மத்திய பாஜக அரசின் அடிமையாக அதிமுக அரசு நடந்து கொள்கிறது என்ற விமர்சனங்கள் வலுவடைந்துள்ள நிலையில் அதற்கு வலு சேர்க்கிற வகையில் இருக்கிறது முரளிதர் ராவின் பேச்சு?

எம் ஆர் ராதாவின் பெயரைக் கெடுக்க வந்த மகன் ரவி?

அரசியலில் எல்லாக் கட்சிகளிலும் ஒரு ரவுண்டு போய் வந்தவர் ராதாரவி.

திமுக எல்லா சலுகை களையும் கொடுத்து எம் எல் ஏ ஆக்கி அழகு பார்த்தது. அதிமுகவுக்கும் போய் அங்கும் பல சலுகைகளை அனுபவித்தார்.

இரண்டு  கட்சிகளிலும் நட்சத்திர பேச்சாளர்.

இங்கிருந்து அவர்களை திட்டுவதும் அங்கிருந்து இவர்களை திட்டுவதும் இவருக்கு கைவந்த கலை.

இவருக்கும் மறைந்த நடிகர் எஸ் எஸ் சந்திரனுக்கும் ஜெயலலிதா பல சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறார்.

இத்தனைக்கும் எம் ஜி ஆரை சுட்ட எம் ஆர் ராதாவின் மகன் என்றாலும் திராவிட இயக்கத்தில் எம் ஆர் ராதாவுக்கு இருந்த செல்வாக்கு அவரது வாரிசுகளுக்கு இரண்டு திராவிட கட்சிகளிலும் பதவிகளை அள்ளித் தந்தது.

வாயை வைத்துக் கொண்டு  சும்மா இருக்க மாட்டார் ரவி. எதையாவது சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்வது இவருக்கு விருப்பமான பொழுது போக்கு .

திமுகவில் இருந்து  நயன்தாரா பற்றி ஏடா கூடமா பேசி விலக்கப்பட்ட பின் அதிமுகவில் சேர்ந்தார்.

அங்கே வசூல் முன்ப  போல் இல்லை போல் இருக்கிறது.

திடீர் என்று நேற்று அகில இந்திய பாஜக செயலாளர் முரளிதர் ராவ் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்து விட்டார்.

இனி என்ன ஆகப் போகிறதோ பாஜக?

அதுவும் பாஜக வுக்கும் அதிமுகவுக்கும் உள்ள உறவு கணவன் மனைவி உறவு போன்றது என்று சொன்ன முரளிதர் ராவ் முன்னிலையிலேயே சேர்ந்திருக்கிறார். இனி அதிமுகவை எப்படி விமர்சிப்பார்.?

எல்லாம் சரி. எம் ஆர் ராதா பெரியாரின் தொண்டர். அந்தக் காலத்திலேயே சுயமரியாதை பிரசாரம் செய்த தூய நாத்திகர். எந்தக் காரணம் கொண்டும் தன் கொள்கையை எம் ரா ராதா விட்டுக் கொடுத்ததே இல்லை. அதுதான் எம் ஆர் ராதாவுக்கு தனிச்சிறப்பு. 

ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதாவின் வரலாற்று ஓவியம. அதை ரவி நடத்தி பெயர் எடுத்திருக்கிறார். அதில் வரும் திருவாரூர் தங்கராசுவின் நாத்திக வசனங்களை இனி ரவி நாடகம் போட்டால் மாற்ற வேண்டி வரும் என்பதால் நடத்த மாட்டார் என்று நம்பலாம்.

அதனால் தான் பெரியார் திடலில் அவர் பெயரில் திடல் அமைத்திருக்கிறார்கள்.

பாஜக சனாதனிகளின் கூடாரம். இனி ராதாரவி அங்கே போய் பஜனை பாட வேண்டியதுதான்.

அவர்களும் இவரை நன்றாக பயன்படுத்தி எம் ஆர் ராதா பேசிய கருத்துக்களுக்கு எதிராக இவரை பயன்படுத்துவார்கள். அதற்கும் இவர் உடன் பட்டே ஆக வேண்டும்.

உனக்கு என்ன சொத்தா இல்லை?

ஏன் தந்தையை காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ரவி?

தந்தையைப் போல் நாத்திகர் இல்லையென்றாலும் சுயமரியாதை உள்ள இந்துவாக மற்ற திராவிட இயக்க நண்பர்களைப் போல் இருந்திருக்கக் கூடாதா என்ற கேள்வி எழுகிறதல்லவா?

அமித்ஷா விளையாட்டு இன்னும் என்னவெல்லாம் சித்து விளையாட்டுகளை அரங்கேற்றப் போகிறதோ?

ரவியின் பின்னால் அவரது வளர்ப்பு நாய் கூட போகாது என்றாலும் இப்படி தனி மரமாக அவர் நிற்கப் போவது வருத்தமாகத்தான் இருக்கிறது.

ஒரே ஒருவர் மகிழலாம். அவர் சின்மயி. தன் சமுதாயக் கூடாரத்துக்குள் கடைசியில் புகலிடம் தேடி வந்துவிட்டார் ரவி என்பதால் இருக்கலாம் அந்த மகிழ்ச்சி. 

உள்ளாட்சி தேர்தல் நடத்த அஞ்சுவது ஆளும்கட்சியா திமுகவா?

குறை இல்லாமல் சட்டப்படி தேர்தல் நடத்த நீதிமன்றம் சென்று தடை வாங்கியது திமுகவின் குற்றம் என்றால் அந்தக் குற்றச்சாட்டில் உள்ள உண்மையை அங்கீகரித்து தடை கொடுத்த நீதிமன்றத்தை என்ன சொல்வது?

தேர்தலை நடத்த நீதிமன்றத்தை நாடியது திமுக. நடத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி தண்டிக்க மனு போட்டது திமுக.

டிசம்பர் மாதம் 13 ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கோரி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதி மன்றம்.

அதற்குள் புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்கி அதில் மறுவரையறை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கி தேர்தலை நடத்த சிக்கலை ஏற்படுத்தியது ஆளும்கட்சி. கேட்டால் அதற்கும் தேர்தல் நடத்துவதற்கும் தொடர்பு இல்லை   என்கிறார்கள்.

அதை உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொள்ளுமா?

எந்த குறைகள் இருந்தாலும் அவைகளுடன் கூடவே தேர்தலை நடத்துங்கள் என்று கூறுமா?

கூறினால் அப்படியே  தேர்தலை நடத்தட்டுமே?

பொங்கல் வர இன்னும் ஒன்றரை  மாதம் இருக்கும்போதே அரிசி அட்டை தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு அறிவித்ததன் பின்னணி தேர்தல் என்பதை உணர்ந்து கொள்ள முடியாதவர்களா வாக்காளர்கள்?

பாராளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் வென்றவர்களுக்கு பயம் என்று ஆளும்கட்சி கூறுகிறது. இரண்டு இடைத்தேர்தல்களில் வென்று விட்டதால் அவர்களுக்கு தைரியம் வந்து விட்டதா? கூட்டணி கட்சிகள் மிரட்டிக் கொண்டு இருப்பதை கண்டும் காணாமல் இருந்து கொண்டு சமாளிக்கிறது அதிமுக அரசு.

உள்ளாட்சி அமைப்புகள் இல்லாமல் பல பணிகள் தேங்கி கிடப்பது உண்மைதான்.      உள்ளாட்சி நிதியை மத்திய அரசிடமும் இருந்து பெற முடியவில்லை.

உச்ச நீதிமன்றம் மட்டுமே தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தர விட முடியும்.

தேர்தல் வரட்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை.

அஞ்சியது யார் என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லட்டுமே?