Home Blog Page 18

முஸ்லிம் சமஸ்கிருதம் கற்றுத் தரக்கூடாதாம்? ஏபிவிபி போராட்டம்?

ஒரு பக்கம் சமஸ்கிருதம் இந்தியாவின் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று பிரச்சாரம்.

மறுபக்கம் ஒரு முஸ்லிம் தன் இரண்டாம் வகுப்பில் இருந்து சமஸ்கிருதம் கற்றுக் கொண்டு சாஸ்திரி ஆச்சாரியா சிக்ஷா சாஸ்திரி என்று டாக்டர் பட்டமும் பெற்று நெட் மற்றும் ஜே ஆர் எப் தகுதிகளையும் பெற்று வாரனாசி இந்து பல்கலை கழகத்தில் துணைப் பேராசிரியராக நியமிக்கப் பட்டும் கூட அந்தப் பணியை  ஏற்க முடியவில்லை. அவர் பெயர்  பெரோஸ்கான்.

ஒரு முஸ்லிம் எப்படி சமஸ்கிரிதம் கற்றுத் தரலாம் என்று துணை வேந்தர் வீட்டின் முன் கலகம் செய்து வருகிறார்கள் ஏ பி வி பி அமைப்பினர். அவர்களை உள்ளே தூக்கி வைக்க பல்கலை நிர்வாகம் தயாராக இல்லாமல் அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே ஆறுதல் வாரனாசி பல்கலையின் சக பேராசிரியர்கள் பெரோஸ்கானுக்கு  ஆதரவாக நிற்பதுதான்.

போராடுபவர்களை  தண்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் குரல் எழுப்புகிறார்கள்.

நான் வேதம் கற்பிக்க வரவில்லை. நான் சமஸ்கிருத இலக்கியம் தானே கற்பிக்கப்  போகிறேன். அதற்கு நான் எந்த மதத்தவனாக இருந்தால் என்ன என்று அவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்தரத்தான் ஆள் இல்லை.

கமல்-ரஜினி கூட்டணி முளையிலேயே கிள்ளி எறியவேண்டிய நச்சு மரம்?

தமிழர்களை அவமானப்படுத்துவது  அடிமைப் படுத்துவது என்பதையே கமலும் ரஜினியும் இலட்சியமாக வைத்திருக்கிறார்கள்.

கமல் பரமக்குடி ரஜினி கிருஷ்ணகிரி மாவட்டம் எனவே அவர்களும் தமிழர்களே .எப்படி அவர்கள் தமிழர்களை அவமானப் படுத்துவார்கள் என்று கேட்கலாம்?

ஒருவர் பார்ப்பனர் மற்றவர் மராட்டியர் என்பதால் மட்டும் இதை சொல்ல வில்லை.   அவர்கள் தங்களை தமிழர்களாக கருதுகிறார்களா? இதுதான் கேள்வி!

அரசியலுக்காக நானும் தமிழன் என்பது வேறு.

உள்ளத்தால் தமி ழனாக உணராமல் இன உணர்வு இல்லாமல், தன் தாய்மொழி எதுவாக இருந்தாலும்  இங்கே வசிப்பதால் தமிழ் மொழி பாதுகாப்பு , வளர்ச்சியை உறுதி செய்வது தன் கடமை என்று கருதாமல் வாழும் எவரும் தமிழராகி விட முடியாது. 

கமலிடம் சம்ச்கிரிதம் உங்கள் தாய் மொழியா என்றும் ரஜினியிடம் உங்கள் தாய் மொழி எது என்றும் கேட்டுப் பாருங்கள்.

தங்களை வாழ வைத்த தமிழகத்திற்கு இவர்கள் செய்யும் நன்றிக் கடன் இதுதான்.

இவர்களின் கூட்டணி இதுவரை உருவாகாத ஒன்று.

ஆனால் உருவாகிவிடும் என்ற அச்சத்தை உருவாக்குகிறார்கள்.

அரசியலுக்கு யாரும் வரலாம். ஆனால் இவர்கள் வருவதற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு?

என்ன உங்கள் கொள்கை என்றால் அதை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் கமல்.

தனிப்பட்ட வாழ்வில் வேண்டுமானால் லிவிங் டுகெதர் என்று சேர்ந்து வாழ்வது பின்னால் பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்வது என்பது சாத்தியமாகலாம்.

அரசியலில் அப்படி இருக்க முடியாது. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள்.   ஆனால் நீங்கள் யார் என்பதை சொல்லியாக வேண்டும்.

இன உரிமை, தாய்மொழிப் பாதுகாப்பு அத்துடன் இணைந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு, சமூக நீதி அத்துடன இணைந்த இட ஒதுக்கீடு உரிமை, வேற்றுமையில் ஒற்றுமை காக்க எல்லா தனித்துவங்களையும் அங்கீகரித்தல் போன்ற பிரச்னைகள் பற்றி  உங்கள் நிலைப்பாடு என்ன?

சனாதன தர்மம் பேசி இழிவு படுத்துகிறார்களே எப்படி தடுக்கப் போகிறீர்கள்?

யார் உங்கள் தலைவர்? எது உங்கள் தத்துவம்?

நீதிக் கட்சித் தலைவர்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா எல்லா திராவிட இயக்கங்களுக்கும் பொதுவான தலைவர்கள்.

கலைஞருக்கும் எம்ஜியாருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட போட்டி பிளவை ஏற்படுத்தினாலும் அவரும் பெரியாரை போற்றி அண்ணா பெயரில்தான் கட்சி தொடங்கினார்.

இன்று பாமக  தேமுதிக மதிமுக விடுதலை சிறுத்தைகள் கம்யுனிஸ்டுகள் ஏன் காங்கிரஸ் கூட திராவிட இயக்க முன்னோடிகளை இகழ்ந்ததில்லை.

பாஜக மட்டுமே கழகங்கள் இல்லா தமிழகம் என்று கனவு காணுகிறது.

ஹே ராம் எடுத்த கமலின் உண்மை உருவம் என்ன?

அக்கிரமங்களை செய்யும் முஸ்லிம்களுக்கு காந்தி ஆதரவாக இருப்பதால் அவரைக் கொலை செய்யும் எண்ணத்தில் கமல் இருக்கும்போது அந்தக் காரியத்தை யாரோ ஒருவன் செய்து விடுகிறான். இதற்கு என்ன பொருள்? ஜனசங்கம் காலம் முதற்கொண்டு இதைத்தானே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

காந்தி கொல்லப் பட வேண்டியவர் என்ற நம்பிக்கை  கொண்டவர்கள் ஆட்சிக்கு வரவும் வந்தபின் அவரையே பயன்படுத்திக் கொள்வதும் இங்கே சாத்தியமாகி இருக்கிறதே?

ரஜினி ஆசைப் படலாம். அந்த ஆசையை  தோற்றுப் போன கமல் பயன்படுத்திக் கொள்ள முனைகிறார்.

கடைசி நிமிடத்தில் கூட ரஜினி தன் கலைப் பயணத்தை தொடரும் வாய்ப்புகள் தான் அதிகம்.

ஆனால் இவர்கள் இருவரையும் கழகங்கள் இல்லாத தமிழகம் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எப்படி பயன் படுத்தப் போகிறார்கள் என்பதுதான் புதிர்.

பிரஷாந்த் கிஷோரின் திட்டப்படிதான் இவர்கள் இருவரும் செயல்படப் போகிறார்களாம்.

கமல் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஏற்கெனெவே தமிழகம் தன்னை ஏற்காது என்று  அவருக்கு தெரிந்து விட்டது.

ஆனால் எதிரிகளே இல்லாமல் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி அரசியல் என்ற தவறான முடிவால் இருக்கும் அத்தனையையும் இழக்க வேண்டியது அவசியம் தானா?

இனிமேல் தமிழர்களை இத்தனை துச்சமாக எண்ணி இங்கே அரசியல் கனவுகளை யாரும் காணக் கூடாது என்ற உண்மையை அரசியலுக்கு வந்தால் ரஜினிக்கு ஏற்படும் இழிவு உலகுக்கு உணர்த்தும்.

கோத்தபயவின் வெற்றி இந்தியாவின் தோல்வி?!

 

கோத்தபயவின் வெற்றி இந்தியாவின் தோல்வி ?!

மீண்டும் ராஜபக்சேக்கள் இலங்கையில் ஆட்சியில் அமர்ந்து விட்டனர்.

இனி தமிழர் பிரச்னை நிரந்தரமாக கிடப்பில் போடப்படும்.

எல்லாருக்குமான அதிபராக கோத்தபய பணியாற்றுவார் என்று யாரும் எதிர்பார்த்தால் அவர்கள் கடந்த கால சிங்கள ஆட்சியாளர்களின் செயல்களை அறியாதவர்களாகத்தான் இருப்பார்கள்.

இனி அவர்கள்  சீனாவுக்கு வால் பிடிப்பார்கள். இந்தியாவுடன் பெயரளவுக்கு சுமுகமாக காட்டிக் கொண்டு சீனாவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்.

இந்திய அரசு என்று தமிழர்களின்  பிரச்னையில் உண்மையான அக்கறையை காட்டுகிறதோ அப்போதுதான் சிங்களர்கள் நம் வழிக்கு வருவார்கள்.

தொடர்ந்து இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் இலங்கையை நட்பு நாடு என்று சொல்லிகொண்டே வந்திருக்கிறோம். ஆனால் அவர்கள் அங்குள்ள தமிழர்களின் உரிமையை பறிப்பதற்குத்தான் இந்தியாவை பயன் படுத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அங்கே தமிழர்களுக்கு உறிமை கொடுத்தால் இந்தியாவின் தமிழர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவின் ஒருமைப்பாட்டு க்கு குந்தகம் விளைவிப்பார்கள் என்பதே அவர்களின் பிரச்சாரமாக இருந்தது.

இந்திரா விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காலத்தில் சிங்களர்கள் அடங்கித்தான் இருந்தார்கள்.

ராஜீவ் மரணம் இந்தியாவை தமிழர் பிரச்னை பற்றி கண்ட கொள்ளாமல் இருக்கச் செய்து விட்டது என்பது ஓரளவுக்குத்தான் உண்மை.

எப்போதுமே இந்தியா தன் மேலாதிக்கத்தை மட்டுமே முன்னிலைப் படுத்தி இருக்கிறது.

பிரச்னை தமிழர்களுக்கும்-சிங்களர்களுக்கும்.

ஆனால் ஒப்பந்தத்தில் இந்தியாவும் சிங்களர்களும் கையெழுத்திட்டது எப்படி?   தமிழர்கள் எப்போது தங்கள் பிரதிநிதியாக இந்தியாவை நியமித்தார்கள்?

இந்த முரண்பாடுகளுக்கு விடையே கிடைக்காது. ஏன் என்றால் இந்தியாவின் ஒப்புதல் இல்லாமல் இந்த துணைக் கண்டத்தில் ஒரு தீர்வு என்பது ஏற்பட முடியாது.

இந்தியாவின் வெளி நாட்டுக் கொள்கையை நிர்ணயிப்பவர்கள் தமிழர்கள் உரிமையைப் பற்றி மட்டுமே கவலை கொள்பவர்களாக இருந்தது இல்லை. அவர்கள் சிங்களர்களின் நலன்களையும் சேர்த்தே கொள்கை முடிவு எடுப்பார்கள். இலங்கை சீனா பக்கம் சாய்ந்து விடும் என்ற அச்சம் .

ஆனால் வரலாறு அந்த அச்சத்தை உண்மையாக்கி வருகிறது.

பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்னைக்கு தீர்வு என்று விடுதலைப்புலிகள் வலுவோடு இருந்த வரை சொல்லிக் கொண்டிருந்த இந்தியா அவர்கள் வீழ்த்தப் பட்ட பிறகு மௌநித்தது ஏன்?

இந்தியாவில் இந்து மத வாதம் வெற்றி பெற்றது போல் இலங்கையில் பௌத்த மத வாதம் வென்றிருக்கிறது. இதில் ஆச்சரியப் பட ஒன்றுமே இல்லை.

தன் மக்களை அடக்கி ஆண்டு கொண்டு பொருளாதார ரீதியில் எவரும் வெல்ல முடியாது.

அந்த பொது நியதி இந்தியாவுக்கும் பொருந்தும்..

தன் சட்டத்தை தானே ரத்து செய்த அதிமுக அரசு?

சென்ற ஆண்டுதான் உள்ளாட்சித் தலைவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்து எடுக்கும் வகையில் சட்டத்தை இயற்றியது அதிமுக அரசு.

உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கால் உடனடியாக தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டிய நிலையில் இருக்கும் அதிமுக அரசு சென்ற ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை மாற்றி மறைமுகமாக உள்ளாட்சி தலைவர்கள் தேர்ந்து எடுக்கப்படும் வகையில் அவசர சட்டம் கொண்டு வந்து உள்ளது.

அதுவும் மக்களால் தேர்ந்து எடுக்கப் படும் மேயர்கள் தலைவர்கள் கவுன்சிலர்களின் தயவில் செயல் பட வேண்டி உள்ளது என்று காரணம் காட்டித்தான் சட்டம் கொண்டு வந்தது அதிமுக. .

அதிமுகவின் கூட்டணி கட்சிகளே இந்த நடவடிக்கையை கண்டிப்பதை பார்க்கும்போது இவர்களிடம் இருந்து தப்பிக்கவே அதிமுக அரசு இந்த நடவடிக்கையை  எடுத்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இரண்டு மேயர் தொகுதிகளை குறிவைத்த பாஜக வுக்குத்தான் ஏமாற்றம் அதிகம். பாமகவும் தேமுதிகவும் ஏமாற்றத்தின் உச்சியில்.

நேரடி தேர்தல் என்றால் மக்கள் வாக்கு செலுத்த வேண்டும். மறைமுக தேர்தல் என்றால் பிரதிநிதிகளை விலைக்கு  வாங்கி விடலாம் என்று கணக்குப்  போடுகிறது அதிமுக.

பிரதிநிதிகள் தங்கள் சொந்தக் காசை செலவு செய்து வெற்றி பெற்று வந்து மேயர் வேட்பாளரிடம் கறந்து விடலாம் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள்.

முறைகேடுகளை செய்யும் போதுதான் நாம் மக்களாட்சிக்கு தகுதி யானவர்கள் தானா என்ற கேள்வி எழுகிறது.

நேரடித் தேர்தல் என்றால் கட்சி செலவு செய்யும். இப்போது கவுன்சிலர்கள் தாங்களாகவே செலவு செய்து வரவேண்டும்.

இதிலும் பலருக்கு ஏமாற்றம்.

தேர்தலுக்கு முன்பே தன் தோல்வியை அதிமுக ஒப்புக்கொண்டது போல் இது இருக்கிறது.

இதில் நீதிமன்றம் தலையிட்டு செய்யப் போவது எதுவுமில்லை. அரசின் கொள்கை முடிவுகளில் எப்போதும் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை.

இது எடப்பாடியின் வியூகத்துக்கு கிடைத்த வெற்றியா தோல்வியா என்பதை  பொறுத்திருந்து பார்க்கலாம். அதாவது தேர்தல் நடந்தால்.?!

நேரடியோ மறைமுகமோ உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும்.

அதுவே மக்களின் எதிர்பார்ப்பு.

திருமாவளவனை கண்டால் அடிக்கச் சொன்ன காயத்ரி ரகுராமை காவல் துறை கைது செய்திருக்க வேண்டும்?

திருமாவளவனை கண்டால் அடிக்கச் சொன்ன காயத்ரி ரகுராமை காவல் துறை கைது செய்திருக்க வேண்டும்?

திருமாவளவன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவரை கண்டால் அடியுங்கள் என்று ஒரு பெண் பதிவிடுகிறார். அவர் பாஜகவை சேர்ந்தவராக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசிவிடுவதா?

சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் துறை அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

திருமாவளவன் அசிங்க சிற்பம் இருந்தால் அது இந்து கோவில் என்று பேசியது உண்மையென்றால் அதுவும் தவறுதான்.

இந்துக் கோவில்களில் உள்ள சிற்பங்களில் கலை நயத்தை தான் பார்த்திருக்கிறோம். ஆபாசமாக யாரும் எடுத்துக்கொண்டதில்லை.

வேண்டுமென்றால் அவர்மீதும் நடவடிக்கை எடுக்கட்டும். அவர் தன்னிலை விளக்கம் கொடுத்து விட்டார். பேச்சு வேகத்தில் அப்படி பேசி விட்டேன் என்ற விளக்கம் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்றால் நீதிமன்றம் அதை முடிவு செய்யட்டும்.

அதற்காக காயத்ரி பேசியதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

அதிமுக அரசு ஏற்றுக் கொள்கிறதா?

இருவர் பேச்சையும் ஒப்பீட்டளவில் ஒன்றுபடுத்த முடியாது.

தமிழக அரசியல் தரம் தாழ்ந்து போகிறது. அதற்கு அரசுதான் கடிவாளம் போடவேண்டும்.

பாஜகவில் அந்தப் பெண்மணி இருப்பதால் அதிமுக அரசு பாராமுகமாக இருப்பது நல்லதல்ல.

அய்யப்ப அரசியல் பாஜகவை கரை சேர்க்காது?

அயோத்தி அல்ல சபரிமலை??!!

ராமரை வைத்து அரசியல் செய்து வடமாநிலங்களில் ஆட்சியை பிடித்தது பாஜக.

அதேபோல் சபரிமலையை வைத்து தென்னாட்டை வசப்படுத்த முயற்சிக்கிறார்கள்.   அது ஒரு போதும் நடவாது..

அதிக பட்சம் சிலகாலம் தள்ளிப் போகலாம். ஆனால் அனைத்து வயது பெண்களும் அய்யபனை தரிசிக்கும் காலம் வரத்தான் போகிறது.

இதுவரை பாவப்பட்ட இந்து மக்கள் விடுவிக்கப்பட்ட போதெல்லாம் சனாதனிகள் எதிர்த்தே வந்திருக்கிறார்கள். அதுவும் பாதிக்கப்பட்ட மக்களையே தங்கள் கேடயமாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

நீங்கள் அடிமை சேவகம் செய்யத்தான் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அவர்களை வைத்தே சொல்ல வைத்த கூட்டம் எதைத்தான் செய்ய மாட்டார்கள்?

நம்பூதிரிகள் சொல்வதை எல்லாம் கேட்டால் இன்னமும் பெண்கள் திறந்த மார்போடுதான் நடமாட முடியும்? தோள் சீலை அணியும் உரிமைக்கு எந்த மாநிலத்தில் போராட வேண்டி வந்தது?

சுவாமி விவேகானந்தரே கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி என்று வர்ணித்தது அங்கு நிலவிய இத்தகைய கொடுமைகளை கண்டுதான்.

அங்குதான் கீழ்சாதி மக்கள் ஒவ்வொருவரும் இத்தனை அடி தூரம் தள்ளி நிற்க வேண்டும் என்ற இழிநிலை நிலவியது. அங்குதான் நம்பூதிரிகள் முதல் இரவை யாரோ தாலி கட்டிய பெண்ணுடன் கொண்டாடினார்கள். அதற்கும் ஒரு காரணத்தை சொல்லி ஏற்க வைத்தார்கள். அதனால்தான் பெரியார் வைக்கம் சென்று தெருவில் நடமாடும் உரிமைக்காக போராடினார்.

இப்போது நிலவும் சமத்துவம் சும்மா வந்து விட்டதா?

உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் அய்யபனை தரிசிக்க உரிமை பெற்றவர்கள் என்று தீர்ப்பு சொல்லிய பிறகும் அமுல் படுத்துவதை தடுக்கிறார்களே எந்த தைரியத்தில்?

இடது சாரி ஆட்சியே தீர்ப்பை அமுல்படுத்துவதை தள்ளி வைக்கிறது. தரிசனம் செய்ய வரும் பெண்களை திருப்பி அனுப்புகிறார்கள்.

ஏழு நீதிபதிகள் தீர்ப்பு சொல்லும் வரை நிறுத்தி வைக்கப்படாத தீர்ப்பு அமுலுக்கு வருவதை தடுக்கலாம்.

ஆனால் தள்ளிபோடப்படும் ஒவ்வொரு நாளும் உச்சநீதி மன்றம் இகழப்படுகிறது.

அதற்கு ஒரு கம்யுனிச அரசு துணை போவதுதான் வருத்தம் அளிக்கிறது.

ஆளுனரை ஆட்டுவிக்கறதா மோடி அரசு?

மக்கள் தீர்ப்பை அலட்சியம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்திய மத்திய அரசு?

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க தயாராக இல்லை. தயாராக இருக்கும் சிவசேனையையும் ஆட்சி அமைக்க விட வில்லை. இதுதான் பாஜக வின் பாசிசம்.

ஆளுனரை எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிக்கலம் என்பதையும் செய்து காட்டி விட்டார்கள்.

எவருக்கும் ஒரு நாள் மட்டுமேதான் இதுவரை அவகாசம் கொடுத்து வந்திருக்கிறார்களா?

யார் தயார் என்று சொன்னாலும் அவர்களை சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டியதுதான் ஆளுநர் கடமை. ஆனால் எங்கே அவகாசம் கொடுத்தால் ஆட்சி அமைத்து விடுவார்களோ என்று உடனடியாக குடி அரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்தி விட்டர்ர்கள்.

உச்சநீதிமன்றம் இவர்கள் தலையில் குட்டு வைத்தால்தான் திருந்து வார்களோ?

சின்மயிக்கு வால் பிடிக்கும் மேல்தட்டு ஊடகங்கள்?!

சின்மயி எதை செய்தாலும் அதை பெரிதாக்கி அவரை தூக்கிப் பிடிப்பதை ஒரு வேலையாகவே செய்து வருகிறார்கள் மேல்தட்டு ஊடகங்கள்.

அதிலும் குறிப்பாக வைரமுத்துவுக்கு எதிராக ஒருதலைப்பட்ச கருத்து உருவாக்கத்தில் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

கமல் பிறந்த நாள் விழாவில் வைரமுத்து கலந்து கொண்டதையே பெரிதாக்கி அவர் ஏதோ செய்யக் கூடாத குற்றத்தை செய்ததைப் போல் இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

வைரமுத்து குற்றம் செய்து இருந்தால் அவரை எப்படி வேண்டுமாலும் தண்டிக்கட்டும். ஆனால் அதை சட்ட அமைப்புகள் மட்டும்தான் செய்ய வேண்டுமே தவிர இவர்களிடம் ஊடகங்கள் இருக்கின்றன என்பதற்காக அவர் வெளியில் தலை காட்டக் கூடாது என்பதைப் போல் இவர்களே தீர்ப்பு தருவது பெரிய கொடுமையல்லவா?

மி டூ வில் யார் குற்றம் சுமத்தினாலும் எந்த விசாரணையும் இல்லாமல் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது என்ன நியாயம்? அவர்களே குற்றம் சுமத்துவார்கள். அவர்களே தண்டிப்பார்களா?

ஏன் சின்மயி காவல் துறையை அணுகவில்லை? ஏன் அச்சப்பட வேண்டும்? ஆதாரம் இல்லை அதனால் புகார் கொடுக்கவில்லை என்றால் அது பொய் குற்றசாட்டுதானே ?

ஒன்று வைரமுத்து விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அல்லது பொய் குற்றச்சாட்டு சுமத்திய சின்மயி தண்டிக்கப் பட வேண்டும்? இரண்டில் ஒன்று நடந்தால் தான் ஊடகங்கள் இதை விவாதிக்கலாம்;

நடவடிக்கை எடுக்க மாட்டாராம். ஆனால் தண்டிக்கப் பட வேண்டுமாம். எப்போது இந்த பிரச்னை தீரும்?

மிசாவில் ஸ்டாலின் கைது சிறுபிள்ளைத் தனமான பாண்டியராஜனின் குற்றச்சாட்டு?!

நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க அமைச்சர் பாண்டியராஜன் திமுக தலைவர் முக ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது அரசியல்  காரணங்களுக்காக அல்ல என்று பேசி யாரோயோ திருப்தி படுத்த முயற்சித் திருக்கிறார்.

1971 முதல் 1977 வரை அமுலில் இருந்த மிசாவில் லட்சக்கணக்கானவர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் வைக்கப் பட்டனர். இந்திரா காந்தியின் அப்பட்டமான  சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடிய காலம் அது. எதிர்க்கட்சிகள் சொல்லொணா தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில் திமுக தொண்டர்களும் தலைவர்களும் அடக்கம்.

அப்போது முக ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் மிருகத் தனமாக தாக்கப் பட்டிருக்கிறார். அவரைக் காப்பாற்ற முயன்ற சிட்டிபாபு என்ற திமுக தொண்டர் உயிர் இழந்தார். அந்த அளவு கொடுமை அரங்கேற்றப் பட்டது.

ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்குப்  பிறகு ஸ்டாலின் கைது தனிப்பட்ட காரணங்களுக்காக என்று அமைச்சராக இருக்கும் ஒருவர் பேசுவதில் ஏதாவது பொருள் இருக்கிறதா?

ஆதாரங்களை திரட்டிக்  கொண்டிருக்கிறாராம் இரண்டு நாளில் வெளியிடுவாராம். பொன்முடி சொல்லவில்லை. இரா செழியன் சொல்லவில்லை என்பதால் மிசாவில்  கைது ஆகவில்லை என்று ஆகி விடுமா? அப்போது ஸ்டாலின் தலைவரின் மகன் என்றாலும் சாதரண தொண்டர் என்பதால் சிலர் குறிப்பிடாமல் விட்டிருக்கலாம்.

பாண்டியராஜனுக்கு துறை சார்ந்து செய்ய வேண்டிய வேலைகள் ஏராளம் இருக்கின்றன. இது போன்ற அசட்டுத் தனங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு உருப்படியாக செயல் பட்டால் நல்லது.

ரயில்வே ஒப்பந்தக்காரரின் சாதி வெறி?!

இந்திய ரயில்வேயின் உணவு தயாரிக்கும் ஒப்பந்தக்காரர் ஒருவர் நூறு ஆண் பணியாளர்கள் வேண்டும் என்று கொடுத்த விளம்பரத்தில் அவர்கள் அகர்வால் அல்லது வைஷ் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது அதிர்ச்சியை அளித்திருக்கிறது .

பிரச்னை ஆனதும் மேலாளரை மட்டும் தற்காலிக நீக்கம் செய்து விட்டு ஒப்பந்தக்காரர் மன்னிப்பு கோரியிருக்கிறார்.

ஆர் கே மீல்ஸ் என்ற அந்த நிறுவனம் தாங்கள் வேறு ஏதோ நிகழ்ச்சிக்கு இரண்டு விளம்பரங்கள் தர விரும்பியதில் தவறு நிகழ்ந்து விட்டதாக கூறி சமாளிக்க முயற்சித்திருக்கிறார்கள். .

ஆக சாதி வெறி எந்த அளவு வேரூன்றி இருக்கிறது என்பதற்கு இது ஒர் அளவுகோல்.