Home Blog Page 2

ரஜினி ரசிகரால் விஜய் ரசிகர் கொலை.. ரசிகர் மன்றங்களை தடை செய்யும் நேரமிது?

கொரொனா நிவாரண நிதி யார் அதிகம் கொடுத்தது என்ற வாக்குவாதத்தில்  விஜய் ரசிகரை  ரஜினி ரசிகர் கொலை செய்திருக்கிறார்.

கொலையான யுவராஜ் கூலி தொழிலாளி.கொலை  செய்த தினேஷ் பாபு வும் தொழிலாளிதான். மது அருந்தி வாதத்தில் ஈடுபட்ட போது இந்த விபரீதம் நிகழ்ந்திருக்கிறது.

இதை விட ஒரு இழிவான செய்தி தமிழ் சமுதாயத்தில் இருக்க முடியுமா?

யாருக்காவது ரசிகராக இருப்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் இந்த சினிமா ரசிகர் கூட்டம் எத்தனை விரும்பத் தகாத விளைவுகளை சமுதாயத்தில் ஏற்படுத்தி வருகிறது.

ரசிகர் மன்றங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் படுகின்றனவா ?

சினிமா வெளிவந்தால் பால் அபிஷேகம் செய்வதில் தொடங்கி நடிகரை  பூஸ்ட் செய்யும் அத்தனை  வேலைகளையும் செய்கிறார்கள். நடிகர்களே அதற்கு துணை  போவது  உண்மைதானே ?

இது ஒரு சமுதாய தீமை. முடிந்தால் தடை.   முடியாவிட்டால்  கடுமையான கட்டுப்பாடுகள் .

ஏதாவது செய்து இவர்களை திருத்த அல்லது தடுக்க அரசு ஆராய வேண்டும்.

ஆட்சியில் இருப்போர் ரசிக மன்றங்களின் தயாரிப்பு என்பதில்  ஓரளவு உண்மை இருந்தாலும் அவர்களும் இப்போது மறு பரிசீலனை செய்ய தயாராகவே இருப்பார்கள்.ஏனென்றால் அவர்களிடம் தான் இப்போது கதாநாயகர்கள் யாரும் இல்லையே?

வெளிநாடு சென்று கொரொனாவைக் கொண்டு வந்த மதுரைகோவில் பட்டர்..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் ஒருவரின் தாயார் கொரொனாவால் இறந்தது  வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

பட்டர்  வெளிநாடு சென்று  திரும்பியவராம். ஆனால் அதை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டாராம். அதனால் கோயில் முழுதும் அதிகாரிகள் மருந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் அவரும் அவர் குடும்பத்தினரும் நோயின் பாதிப்பில் இருந்து  மீள விழைகிறோம்.

ஆனால் பட்டர்  மீது நடவடிக்கை கோரி இந்து இயக்கத்தவர்கள் குரல் எழுப்புவார்களா ? டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த முஸ்லீம்கள் கொரொனாவை பரப்பியதாக மதசாயம் பூசி கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தவர்கள் இப்போது அமைதி காப்பதன் பொருள் என்ன?

இனிமேலாவது கொரொனாவிற்கு மதசாயம் பூச கூடாது என்பதை இந்த சம்பவம் ஏற்படுத்தினால் நல்லது.

ஜோதிகா சொன்னதில் என்ன தவறு? வெறுப்பை உமிழும் சங்கிகள்

கோயில் என்று சொல்லிவிட்டு எதைச் சொன்னாலும் விமர்சிக்கிற ஒரு கூட்டம் ஒன்று தமிழகத்தில் இருக்கிறது. அதில் சங்கிகளும் இருக்கிறார்கள். சங்கி அடிமைகளும் இருக்கிறார்கள்.

ஜோதிகா தஞ்சாவூர் போயிருக்கிறார். கோயிலுக்கும் போய் வந்தபின் ஒரு                        மருத்துவமனைக்கும் சென்றிக்கிறார். அங்கே அவர் பல குறைபாடுகளை பார்த்தபின் கோவிலுக்கு செய்வதைவிட மருத்துவமனைகளில் கவனம் செலுத்துவது நல்லது அவசியம் என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதில் என்ன பெரிய  தவறை கண்டார்கள்? கோவிலை எங்கே அவர் விமர்சித்தார்? அவர் இந்துவாக வாழ்பவர். கோவிலுக்கு போய் வந்துதான் மருத்துவ மனைகளை பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

எதற்கு எடுத்தாலும் மசூதி சர்ச் பற்றி பேசுவீர்களா என்று கேட்பதை நிறுத்துங்கள். இந்து பிரச்னையை மட்டும்தான் இந்து பேசுவான். மற்ற மத பிரச்னைகளை மற்றவர்கள்  பேசிக்கொள்வார்கள்.

அதிலும் திரௌபதி இயக்குனர் பெரியகோவில் பற்றி  பேசாதீர்கள் என்று மிரட்டுகிறார். புரிந்துதான் பேசினாரா யாரையாவது தாங்கி பிடிக்க பேசினாரா என்று தெரியவில்லை.

சபாஷ் ஜோதிகா ?!

கொரோனா கொள்முதலில் கோடிக்கணக்கில் இழப்பு! யார் ஈடு செய்வது?

கொரொனா விரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் தமிழக அரசுக்கு ஒரு கோடியே நாற்பத்து ஏழு லட்சம் கூடுதல் விலை கொடுத்த வகையில் இழப்பு ஏற்பட்டிருப்பது முதல் கட்ட  ஆய்வில் தெரிகிறது.

திமுக முதன்மை செயலாளர் கே என் நேரு கொடுத்த அறிக்கையில் இது தெளிவாகிறது. சத்தீஸ்கர் மாநிலம் ஒரு கருவிக்கு ரூபா 337 என்றும் ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் 377.44 எனவும் கொள்முதல் செய்ததாக அம்மாநில அமைச்சரின் டிவீட்டில் தெரிகிறது. அதையே நமது மருத்துவ சேவை கழகத்தின் இயக்குனர் உமாநாத் ஐஏஎஸ் அவர்கள் வெளியிட்ட கொள்முதல் உத்தரவு நகல் மூலம் ரூபாய் 600 எனவும் ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் 672 எனவும் வாங்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதனால் தமிழகம் கூடுதலாக ரூபாய் 294.56 கொடுத்து வாங்கியிருப்பது தெரிய வருகிறது. இந்த விலை மத்திய அரசு நிர்ணயித்ததா நாம் நிர்ணயித்ததா என்பதை தாண்டி கூடுதல் விலை நாம் கொடுத்தோம் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த இழப்பு யாரால் ஏற்பட்டது? யார் இதை ஈடு காட்டுவது?

இதில் அந்த கருவியை நான்கு லட்சம் அளவில் கொள்முதல் செய்ய திட்டமிட்டு இருந்தார்கள்.   தேவை அவ்வளவு இருக்குமா என்பது வேறு.

இப்போது அதே கருவியை பிரிட்டிஷ் அரசு தரம் குறைந்தது என்ற காரணம் காட்டி கொள்முதலை ரத்து செய்து இருப்பதாக செய்திகள் வருகின்றன.

அது ஊர்ஜிதமானால் நமது கொள்முதலும் நின்று போகும். ஆக திட்டமிட்டது நடவாது. போகிற போக்கை பார்த்தால் இந்த பிரச்னை இத்தோடு போகும் என்று தெரியவில்லை.

கொரொனா ஊழலையுமா கொண்டு வரும்? விசாரணையில்  நடந்தால் தெரிந்து விடப் போகிறது. பொறுத்திருப்போம். 

மருத்துவரை கல்லறையில் அடக்கம் செய்ய காவல் துறையால் முடியாமல் போனது ஏன்?

கொரானாவால் இறந்த கிறிஸ்துவ மருத்துவருக்கு அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் இந்து மயானத்தில் அடக்கம் செய்த அவலம் சென்னையில்  நடந்துள்ளது.

அந்த மருத்துவர் கொரொனா வார்டில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தவர். கொரொனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தவர். அவரது உடலை  கீழ்பாக்கம் கிறிஸ்தவ கல்லறையில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவித்து கலவரம் செய்து தாக்குதல் நடத்தி பணியாளர்களை காயப் படுத்தி அராஜகம் செய்திருக்கிறார்கள்.

காவல் துறை  சமாதானம் செய்ய முடியாமல் பக்கத்து இந்து மயானத்தில் அடக்கம் செய்திருக்கிறார்கள்.

அவரது மனைவியின் முறையீட்டின் பேரில் இப்போது மறை மாவட்ட  பேராயர் தலையீடு செய்து  கல்லறையில்   அடக்கம் செய்ய  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதுவரை 13 மருத்துவர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கலவரம் செய்தவர்கள் மீது கைது நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வழக்கு நடக்கிறது. அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை வேண்டும்.

இந்த அராஜகம் அனுமதிக்கப்பட்டால் கொரொனாவை  வெல்ல முடியாது.

ஆனால் இதற்கும் மத சாயம் பூச ஒரு கூட்டம் அலைகிறது. கலவரம் செய்தவர்கள் அறியாமையால், அச்சத்தால், விரோதத்தால், எதனால் அப்படி நடந்து கொண்டார்கள் என்பது  விசாரணையில் தெரிந்து விடும்.

ஆனால் இதில் காவல் துறையின் இயலா தன்மை  புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு நூறு கலவரக்காரர்களை அடக்க முடியாத நிலையிலா காவல்  துறை இருக்கிறது.

பின்னர் அவர்கள் மீது  தக்க நடவடிக்கை எடுத்து விட்டோம் என்பது முன்பு தடுக்க  தவறிய   இயலாமையை மறைத்து விடுமா?

அரசை குற்றம் சொன்னால் அது அரசியல் என்று பொருள் அல்ல. இனி இந்த தவறு நடக்கக் கூடாது என்ற அக்கறை.;

அதிமுக செய்யும் அம்மா உணவக அரசியல்?

கொரொனாவால்  பாதிக்கப் பட்ட மக்களுக்கு திமுக தனது மாவட்ட நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கி நல்ல பெயர் எடுப்பதை சகிக்காத அதிமுக அரசு அதற்கு தடை  போட முயற்சித்து உயர்நீதி  மன்ற தீர்ப்பால் இன்று அனுமதிக்க  வேண்டிய கட்டாயத்துக்கு  ஆளானது.

அப்படியும் பல முட்டுக் கட்டைகளை அதிகாரிகள் மூலம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது அரசு.

அதே அதிமுக இன்று என்ன செய்கிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்க திட்டமிட்டு  அந்த செலவை மாவட்ட கழகங்கள்  ஏற்றுக் கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறது. இது மட்டும் அரசியல் இல்லையா?

வேண்டுமானால் திமுகவினரும் அம்மா உணவக செலவை ஏற்றுக் கொல்லட்டுமே என்றால் அது அதிமுக அரசு செய்வதாகத்தான் மக்கள் நினைப்பார்கள்.

ராயபுரத்தில் அமைச்சர்  ஜெயக்குமார் முதலில் அறிவிக்க பின்பு  முதல்வர் பழனிசாமி சேலத்தில் அறிவிக்க  மதுரையில்  செல்லூர்  ராஜு  என்று எல்லா மாவட்டங்களிலும்  அம்மா உணவகங்கள் அதிமுக நடத்தப் படுவதைப்போல் தோற்றம் உருவாகி விட்டது.

முகஸ்டாலின் இதை  ஆட்சேபித்து அறிக்கை வெளியிட்டதில் நியாயம் இருக்கிறது.

கொரொனாவில் அரசியல்  வேண்டாம் என்று  சொல்லிக் கொண்டே அரசியல் செய்து  கொண்டிருக்கிறது அதிமுக. 

சரி. வசூல் செய்ததில் ஒரு  பகுதியாவது   பொது மக்களின் உணவுக்கு  செய்கிறதே ?!

கச்சா எண்ணையை விலை வீழ்ச்சியை ஏன் இந்தியா பயன்படுத்த வில்லை ?

அமெரிக்க எண்ணையை உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுமகி செய்ய முடியாமல் தவித்து வருகின்றன.

கொரொனா விளைவித்த ஊரடங்கால் உலகத்தில் பெட்ரோல் டீசல் பயன்பாடு  வெகுவாக குறைந்து  போய்  கச்சா எண்ணையை வாங்குவதற்கு ஆள் இல்லை.

உற்பத்தி செய்ததை ஸ்டாக் செய்யவும் இடமில்லை.. உற்பத்தியை நிறுத்தவும் முடியவில்லை.

கச்சா எண்ணைய் வாங்கும் நாடுகள் பணம் கொடுக்காமலே பெற்றுக்  கொண்டால்  போதும் என்பது மட்டுமல்ல  அதற்கு ஆகும் செலவையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்  என்ற அளவுக்கு அமெரிக்கா  வந்து விட்டது.

எண்ணையையும் வாங்கிக்கொண்டு  அதற்கு அமெரிக்கா பேரலுக்கு ஐம்பத்து மூன்று டாலர் பணமும் தர தயாராக இருந்து வந்த நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு  பேரல் விலை வெறும் பதினெட்டு டாலராக குறைந்து  விட்டதுதான் இன்றைய நிலை.

ஆனால் இந்த நிலைமையை இந்தியா பயன் படுத்திக் கொள்ள தயாராக இல்லை.

அப்படியே குறைந்த விலைக்கு  வாங்கினாலும் அதன் பலனை மத்திய அரசு எடுத்துக் கொள்ளுமே தவிர பொதுமக்களுக்கா  தரப் போகிறது?

சீனா திட்டமிட்டு பரப்பியதா கொரொனா வைரஸ் ?!

அப்படித்தான் சில அமெரிக்க சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள். அவர்கள் சீனா மீது பல லட்சம் கோடி நட்ட ஈடு  கேட்டு  வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

போதாததற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா வேண்டுமென்றே செய்திருந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்  என்று வழக்கம்போல் மிரட்டி இருக்கிறார்.

ஐரோப்பாவில் பல நாடுகள் இந்த சந்தேகத்தில்  இருக்கின்றன. ஆனால்  அதற்கு ஆதாரம் வேண்டுமே?

வூகானில் சீனா சில உயிரிகள்  தொடர்பான ஆராய்ச்சிகள் செய்து வருவதை   மறுக்க வில்லை. ஆனால் இந்த ஆட்கொல்லி உயிரி தங்கள் கட்டுப்பாட்டில் என்றுமே இருந்ததில்லை   என்று சீனா சொல்கிறது.

சீன விஞ்ஞானிகள் கொரொனாவை மனிதர்கள் உருவாக்க முடியாது என்று சொல்கிறார்கள். 

மனிதர்களால் உருவாக்க முடியாததை சீனர்கள் உருவாக்கியதாக சொன்னால் அது தவறுதான்.

சீனாவில் பாதிப்பு அதிகம் இல்லை என்பதை மட்டும் வைத்து அவர்களை குற்றம் சொல்வது தவறு.

ஆனாலும் எப்படி இந்த வைரஸ் தோற்றம் கொண்டது  பரவியது என்பது பற்றிய ஆழமான ஆராய்ச்சி அவசியம் தேவை. 

எதிர்காலத்தில் வைரஸ் ஒரு ஆயுதமாக பயன் படுத்தப் படாது  என்பதை  உறுதி படுத்தும் வரை மனித இனத்துக்கு ஆபத்து நீங்காது.

கொரொனாவிற்கு எதிராக ஊரடங்கை எதிர்க்கும் உலகின் ஒரே அதிபர் ?!

ஆம். கொரொனாவிற்கு எதிராக ஊரடங்கை எதிர்க்கும் ஒரே அதிபர் பிரேசிலின் அதிபர் போல்சனரோ .

இத்தனைக்கும் அந்த நாடு ஏறத்தாழ 2500  பேரை கொரொனாவினால் இழந்திருக்கிறது.  இன்னும் அச்சுறுத்தல் இருக்கிறது.

அந்த நாட்டின் சுகாதாரதுறை அமைச்சர் அதிபரின் கருத்தை எதிர்த்து கருத்து சொல்லி மக்களை ஊரடங்கை கடைபிடிக்க கோரினார். உடனே அவரை பதவி நீக்கம் செய்து விட்டார் அதிபர்.

நாட்டில் மக்கள் ஊரடங்குக்கு எதிராக போராட்டம் கூட நடத்தினார்கள். அதற்கு அதிபரின் ஆதரவு இருந்தது.

இன்று உலகின் பல பகுதிகளில் ஊரடங்குக்கு  எதிராக போராட்டங்கள் நடக்கின்றன.

ஆனால் நோயின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகும்போது சமூக விலகலை விலக்க முயற்சிப்பது அறிவுடைமை அல்ல.

நல்லவேளையாக இந்தியாவில்  அந்தக்  குரல்கள் எழவில்லை.

நிவாரணத்திற்கு ஜீடிபியில் 15% ஒதுக்கிய டிரம்ப் எங்கே? 0.05% ஒதுக்கிய மோடி எங்கே?

அமெரிக்கா வலுவுள்ள நாடாக இருக்கட்டும்.  நமது  பொருளாதார நிலை ஒப்பீட்டளவில் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டின் மொத்த  உள்நாட்டு உற்பத்தி  மதிப்பில் கொரொனா நிவாரணத்துக்காக 15% நிதியை ஒதுக்கி உள்ளார். அதாவது  74  லட்சம் கோடி ரூபாய்.

ஒவ்வொரு  அமெரிக்கனுக்கும் நிவாரண துகை நேரடியாக அரசிடம் இருந்து போகும். ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய். ஆனால் நமது  மோடி கொரொனா நிவாரணத்துக்காக  ஒதுக்கிய துகை நமது உள் நாட்டு  உற்பத்தி மதிப்பில் 0.05% தான்.

நமது ப சிதம்பரம் புள்ளி விபரம் கொடுத்தார். அதாவது வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் எல்லா இந்தியருக்கும் ஐந்தாயிரம் கொடுத்தால் கூட அறுபதாயிரம் கோடி ரூபாய் தான் செலவாகும். அதையாவது கொடுங்கள் என்றார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

மத்திய அரசு கொடுக்கும் அனைத்து நிவாரணமும் நேரடியாக நிறுவனங்களுக்கும்  மறைமுகமாக மக்களுக்கும் சென்றடையும்  விதத்தில் தான் இருக்கிறது. அதை நேரடியாக கொடுத்தால் என்ன என்று கேட்கிறார்கள்.

இதுவரை கொரொனாவை வைத்து மத்திய அரசை யாரும் விமர்சிக்க வில்லை. ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டிய நேரமிது.அரசும் விமர்சனங்களுக்கு  இடம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் கீழே இறங்கிய  மோடியின் மதிப்பு கொரொனாவில்  மேலும் இறங்கிக் கொண்டிருக்கிறது .

அதை தவிர்க்கும்   நோக்கத்தில்தான் பிரதமர் மோடியும் எதிர்க்கட்சிகளை ஆலோசனை கேட்கிறார்.

ஆனால் நடவடிக்கையில் அது பிரதிபலிக்க வேண்டுமே? பிரதிபலித்தால் மதிப்பு  உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

செய்வாரா மோடி?