Home Blog Page 23

பேனர் வைப்பதில் அரசியல் கட்சிகளுக்கு ஒரு நீதி! அரசுக்கு ஒரு நீதியா! விலக்கு விதித்த உயர்நீதிமன்றம்

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்து போனதின் காரணமாக அரசியல் கட்சிகள் பேனர் வைப்பது தடை செய்யபட்டது.

ஒரு வழியாக இனி பேனர் கலாசாரம் இருக்காது என்று நினைத்த நேரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் சென்னை வருகையை ஒட்டி அவர்களை வரவேற்பதற்கு பேனர்  வைக்க அனுமதி  கேட்டு மாநில அரசு உயர் நீதிமன்றத்தை அணுக நீதிமன்றமும் அனுமதி அளித்து உத்தரவிட்டு  இருக்கிறது.

நீதிமன்றம் தானாக இந்த அனுமதியை தரவில்லை அரசு அணுகியது. அதுவும் பிரதமரும் சீன அதிபரும் வருவதை ஒட்டி அனுமதி கேட்கும்போது நீதி மன்றத்தால் மறுக்க முடியவில்லை.

அனுமதியையும் வழங்கி விட்டு பேனர் விழுந்து யாராவது இறந்தால் அதிகாரிகளின் மேல் குற்ற வழக்கு  பதியுங்கள் என்று உத்தரவும் இட்டிருக்கிறது. 

பேனர் வைக்காமல் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடியாது என்பதா நிலைமை.

கட்டுபாடுகளை விதித்து  ஐந்து நாட்களுக்கு மட்டும் இந்த அனுமதி அதற்கு வாக்குமூலம் தாங்கள் செய்யுங்கள் என்று எல்லாம் உத்தரவிட்டு இருந்தாலும் நாளை வேறு  சிலர் தங்களுக்கும் அனுமதி வேண்டும் என்று இதே நீதிமன்றத்தை அணுகினால் மறுக்க முடியுமா நீதிமன்றம்??

நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு அரசியல் கட்சிகளுக்குத்தான் அரசுக்கு அல்ல என்றாலும் அரசு தார்மீக ரீதியாக முன் உதாரணமாக பேனர் கலாச்சாரத்துக்கு  முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா? 

இந்த விதி விலக்கு கோரியதில் மத்திய அரசின் பங்கு என்ன?

கவனிக்கத் தக்க அம்சம் என்னவென்றால் உயர்நீதி மன்றம் அரசுக்கு அனுமதி பெற தேவையில்லை என்ற கருத்தையும் பதிவு செய்திருப்பதுதான். 

அரசு அனுமதி பெற தேவையில்லை என்றே வைத்துக் கொள்வோம்.   பிறருக்கு அனுமதி மறுக்கும் அரசு தான் மட்டும் பேனர் வைப்பது எப்படி நியாயமாகும்.?

தான் விதித்த விதியை தானே மீறலாமா?

பேனர் வைப்பதில் அரசியல் கட்சிகளுக்கு ஒரு நீதி! அரசுக்கு ஒரு நீதியா!!

ராதாபுரம்; வாக்கு எண்ணிக்கை வழக்கில் மறுக்கப்படும் நீதி??!!

தாமதிக்கபடும் நீதி மறுக்கப்பட்ட நீதியே!

2016 ல் நடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கில் முடிவு தெரிவதற்குள் ஐந்து ஆண்டுகள் கடந்து விடும் போல் தெரிகிறது.

ராதாபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை வழக்கில் இனி திமுகவின் அப்பாவு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டாலும் அவருக்கு இழக்கப் பட்ட அநீதிக்கு எப்படி ஈடு செய்ய முடியும்?

இந்த தாமதத்திற்கு யார் பொறுப்பு?

அதிமுகவின் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லும் என்றே அறிவித்தாலும் அப்போதும் தமிழக அரசு குற்றவாளியாகத் தான் பார்க்கப் படும். ஏனென்றால் தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்றாகி விடும். அதாவது நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கெஜெட்டட் அதிகாரி என்ற  தமிழக அரசின் உத்தரவு,

நடுநிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர் கெஜெட்டட் அதிகாரி என்ற பெயரில் சான்றொப்பம் வழங்கியது தான் பிரச்னை. அவரை அதிகாரமுள்ளவர் என்று அறிவித்தது தமிழக அரசு. அதை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்ளாமல் 203  தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் முடிவை அறிவித்தார். இன்று உயர்நீதி மன்ற நீதிபதி அவர் அதிகாரமுள்ளவர் என்று அறிவித்து அந்த வாக்குகளையும் சேர்த்து எண்ணி முடிவை அறிவிக்க உத்தரவிட்டார். இதுதான் இப்போது உச்சநீதிமன்ற பரிசீலனையில் இருக்கிறது.

அதை சேர்த்தால் வெறும்  49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இன்பதுரை தோற்றவராக அறிவிக்கப் படுவார்.

மேலும் மூன்று சுற்று வாக்குகளையும் மறு எண்ணிக்கை  செய்ய வேண்டும் என்பது அப்பாவுவின் கோரிக்கை.

வேறு பல அம்சங்களில் ஒரு தேர்தல் வழக்கு நீண்ட காலம் நிலுவையில் இருந்தால் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இந்த வழக்கில் வாக்கு எண்ணிக்கை மட்டுமே முக்கிய கேள்வி. மூன்று சுற்று வாக்கு மறு எண்ணிக்கையும் கூட வேறு சாட்சியம் தேவைப் படாத பிரச்னை.

இந்த் வழக்கு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நிலுவையில் இருந்தது நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க வைத்து விடும்.

சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்தும் கூட இன்னும் கால தாமதம் ஏற்படுவது சரியல்ல.

வழக்குகளை நாள்தோறும் நடத்தி வந்திருந்தால் இந்த தாமதம் ஏற்பட்டிருக்காது. 

தீர்ப்பு வருவதற்குள் சம்பத்தப் பட்ட உறுப்பினர் தனது பதவி காலத்தை நிறைவு செய்து விடுவார் என்பதுதான் இதுநாள்வரை நிலைமை, அந்த நிலை தொடரக் கூடாது.

உச்சநீதிமன்றம் விரைவாக இந்த பிரச்னையை விசாரித்து முடிக்கும் என்று நம்பி இருப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை.

 

வள்ளலார் பிறந்த நாளை மறந்ததா தமிழகம்??!!

05/10/1823   –   வள்ளலார் ராமலிங்க அடிகள் திரு அவதார திருநாள்.

சனாதனத்தின் முதல் எதிரி வள்ளலார். அதனால்தான் அவர் ஓரங்கட்டப்பட்டார்.

வள்ளலார் கொண்டாடப் பட்டிருந்தால் பெரியாரின் தேவையே  எழுந்திருக்காது.  வள்ளலார் நாத்திகர் அல்லர்.   நாத்திகம் பேசுபவர் தம் நாக்கு முடை நாக்கு என்றார் வள்ளலார்.

ஆனால் கடைசிவரை சாதி மத பேதங்களை எதிர்த்தே நின்றார். அதனால் தான் அவரை சனாதனம் சதி செய்து வீழ்த்தியது.

காவிக்குப் பதில் வெள்ளை ஆடை. மத சின்னங்கள் ஒதுக்குதல். உருவ வழிபாட்டை தவிர்த்தல். வள்ளலார் கண்ட சமரச சுத்த சன்மார்க்கம் களங்கங்கள் அற்ற   தூய ஆன்மிகம். 

இன்று மதத்தின் பேரால் நடக்கும் அத்தனை அட்டூழியங்களும் எந்த மதமும் போதித்தல்ல. மதத்தின் பேரால் ஆசாமிகள் திணித்த கொடுமைகள். அதில் ஊறிப்போன கறை சாதி.

இந்த கொடுமைகள் அகல இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டும். நாத்திகர் ஆக பெரியார் சொன்ன காரணம் மூட நம்பிக்கைகளுக்கு மதம் மரமாக இருக்கிறது என்பதால்தான் .

வள்ளலாரின் போதனைகளை பெரியார் தனது குடியரசு பத்திரிகையில் வெளியிட்டார் என்றால் அப்போதாவது தமிழ் சமூகம் அவரது முக்கியத்துவத்தை உணர்ந்திருக்க வேண்டாமா?

இன்னும் சுகி சிவம் போன்றவர்கள் தமிழ் உணர்வு பேசிக்கொண்டே ச்னாதனத்துக்கு எதிராக வெளிப்படையாக பேச தயங்குவதன் காரணம் பேச மேடை  கிடைக்காது என்பதால் தானே. ஆக பிழைப்புக்காக உண்மையைப்  பேச தயங்குகிறவர்கள்தான் நமது ஆன்மிக பேச்சாளர்கள்.

வள்ளலார்தான் சரியான முறையை சொன்னார். சனாதனத்தை ஒதுக்கினாரே தவிர எதிர்க்க வில்லை, அதற்காக சனாதனம் அவரை விட்டு விட்டதா?

வள்ளலார் நாம் செய்ய வேண்டியதை சொன்னாரே தவிர நமது எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்ட வில்லை. அதுதான் அவரது பலவீனமாக போய் விட்டது.

ஆனால் இறையருள் அவரை கைவிட வில்லை. இன்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் அவரது சன்மார்க்க கொள்கைகளை பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கெடுவாய்ப்பாக சன்மார்க்க தொண்டர்கள் ஒருங்கிணைக்கப் படாமல் சிதறிக் கிடக்கிறார்கள்.

சன்மார்க்கத் தொண்டர்கள் ஒருங்கிணையும் நாள் தான் நமக்கு ஆன்மிக விடுதலை நாள்.

உதட்டில் காந்தி உள்ளத்தில் கோட்சே?

அண்ணல் காந்தி அடிகளின் 150வது பிறந்த தினத்தில் நாட்டை ஆளும் பாஜக அவருக்கு மரியாதை செலுத்துகிறது.

அது உண்மையானதா?

உதட்டளவில் காந்தியின் பெயரை உச்சரித்துக் கொண்டே கோட்சேவின் கனவைத்தானே நிறைவேற்றி வருகிறார்கள்.

காந்தி சுடப்பட்ட போது அறிஞர் அண்ணா திராவிட நாடு இதழில் உலக உத்தமர் மகாத்மா காந்தி என்று ஒரு கட்டுரை வனைந்தார். அதில் காந்தி யின் செய்தியை இலட்சியத்தை நேருவின் வழி அறிவிக்கிறார். ஆம். ‘பரம ஏழைகளும் இது தாங்கள் நாடு என்று எண்ண வேண்டும். அதன் அமைப்பி௯ல் தங்களுக்கு முக்கியத்துவமும் அதிகாரமும் இருக்கிரதுன்று அவர்கள் நினைக்க வேண்டும். மக்களில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பதே இருக்கக் கூடாது. எல்லாச் சமூகத்தினரும் அன்யோன்மாக வாழ வேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே நான் பாடுபடுவேன். ‘இதுவே அவரின் லட்சியம்.

அது மட்டுமல்ல அண்ணா காந்தியாரின் கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு அவருக்கு  எதிராக நடந்த இந்துக்களின் சதிகளை விவரிக்கிறார். ‘இந்து மதத்திலே ஏறிப்போய், ஊறிப்போய் இருந்த கேடுகளை எல்லாம்  தமது பரிசுத்த வாழ்க்கையாலும், தூய்மையான உபதேசத்தாலும் புதிய தத்துவார்த்ததாலும் நீக்கும்  காரியத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். அவர் யாரிடமிருந்து அன்பு மார்க்கத்தை எதிர்பார்த்தாரோ அங்கிருந்தே அவர் உயிரைக் குடிக்கும் ஒரு வெறி பிடித்த இந்து கிளம்பினான். ‘அண்ணாவை மிகவும் பாதித்தது அண்ணலின் மறைவு என்பதை அவரது கட்டுரை பிரதிபலித்தது .

காந்தி வேளாண்மை செய்வோரின் உரிமைகளுக்கு போராடி இருக்கிறார். ஆனால் இன்று என்ன நடக்கிறது. விவசாயிகளின் வயிற்றில் அடித்து பெரு முதலாளிகளுக்கு லாபம் தேடித்தர மாநில மத்திய அரசுகள் உழைத்துக் கொண்டிருக்கின்றன.

காந்தியடிகளின் கனவை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது என்று மனசாட்சி உள்ள யாராவது சொல்ல முடியுமா?

காந்தியின் உருவ பொம்மைக்கு தீயிட்டு கொளுத்துவதுடன் அந்த பொம்மையை சுட்டு அதையும் வெளியிட்டார்களே அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுத்தார்களா?

சத்தியமும் அகிம்சையும் இறுதி வெற்றியை அடையும். அதுவே காந்தியின் கனவு.

உலக நாடுகள் பலவற்றுக்கும் காந்தி ஒரு உன்னதமான வழிகாட்டி. இந்தியாவில் நோட்டில் மட்டும் இருக்கிறார்.

இந்த உதட்டு வாழ்த்து இலங்கையில் இருந்தும் வருகிறது. காந்தி பிறந்த நாளில் அவரது உருவம் தாங்கிய அஞ்சல் தலை வெளியிடுகிறார்கள். ஆனால் நடைமுறையில் உரிமைக் குரல் கொடுக்கும் சிறுபான்மையினரை மிதித்துக் கொண்டிருக்கிறார்களா இல்லையா?

என்றைக்கு ஆட்சியாளர்கள் காந்தியை உள்ளத்திலும் இருத்தி அவர் வழி ஆட்சி நடத்த முனைகிறார்களோ அன்றுதான் நாட்டுக்கு உண்மையான விடிவு காலம். 

கரை வேட்டிகளால் அரசியலில் கறை படிந்து விட்டதாம்? பாஜக சொன்னதை வழி மொழியும் கமல்ஹாசன்!

திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை ஒழிக்க ஐம்பதாண்டுகளாக சனாதன சக்திகள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன.

அதன் ஊது குழலாக கமல்ஹாசன் அவ்வப்போது ஏதாவது உளறிக் கொண்டுதான் இருக்கிறார்.

கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முயன்று தோற்றுப் போய் ஏதாவது ஒரு கழக புல்லுருவியை பற்றிக் கொண்டு கரை என்று தவித்துக் கொண்டிருக்கும் பாஜகவின் கோஷத்தை கமல் ஹாசன் எடுத்துக் கொண்டு கரை வேட்டிகளால் தமிழக அரசியல் கறை படிந்துவிட்டதாக லயோலா கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.

திமுக அதிமுக மட்டுமல்ல தேமுதிக, பாமக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சி பிரமுகர்களும் தங்கள்  கட்சிகளின் கரை வேட்டியைத்தான் கட்டுகிறார்கள்.

இதில் யாரை குறிப்பிட்டு பேசுகிறார் கமல். ?

சொல்வதும் புரியவில்லை. எதிலும் உறுதியும் இல்லை. எதிலும் பட்டும்படாமலும் பேசி வரும் கமலை தமிழக மக்கள் கண்டு கொள்ளாவிட்டாலும் பத்திரிகைகள் அவர் பேச்சை பெரிது படுத்துவதால் கருத்து சொல்ல வேண்டியிருக்கிறது.

மொழி ஒரு தொடர்பியல் கருவிதானாம். எனவே அதை வைத்து அரசியல் செய்ய கூடாதாம். இதைவிட ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத் தனம இருக்க முடியுமா?

தொடர்புக்குத்தான் மொழி. அதை மற்றவன் மீது திணிக்கும் போது கமல் வாய்  திறப்பதில்லையே?

தமிழுக்காக போராடாதே. அது ஒரு தொடர்பு மொழிதான் என்கிறாரா?

கமலைப் போன்றவர்கள் அரசியலுக்கு வந்ததால்தான் அரசியலில் கறை படிந்து விட்டது. கறைகளை துடைத்தெறிவோம். 

தமிழை ஆட்சி மொழி ஆக்குவாரா மோடி?! மு க ஸ்டாலின் கேள்வி?!

தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சமீப காலமாக பிரதமர் மோடி தமிழின் தொன்மைத்தன்மை குறித்து வானளாவ புகழ்ந்து வருகிறார்.

தமிழர்களும் அக மகிழ்ந்து ஆகா நம்முடைய பிரதமர் போலாகுமா என்று புளகாங்கிதம் அடைகிறார்கள்.

உதட்டளவில் பாராட்டா உள்ளொன்று வைத்து பாராட்டா என்பதைக்கூட அறியாதவர்களா தமிழர்கள்?

உள்ளபடியே பிரதமர் தமிழ் உலகின் மிகத் தொன்மை வாய்ந்த மொழி என்று ஒப்புக் கொள்ளும் நிலையில் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழி  ஆக்குவதில் என்ன தடை? செய்வாரா பிரதமர். ?

முதலில் இந்தியாவின் 22 மொழிகளை ஆட்சி மொழி ஆக்கட்டும்.

மொழிப் பிரச்னையே வராது.

தான் பிறந்த மண்ணான இந்தியாவைத் தவிர பிறநாடுகள் பலவற்றில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகாரம் பெற்று விளங்குவதையும் ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார். 

தான் பிறந்த இந்தியாவில் வலுவிழந்து சென்ற பல நாடுகளில் கோலோச்சும் புத்த மதத்தைப் போல.

அமித் ஷா முன்பு சொன்னதை இப்போது சுப்பிரமணிய சாமி உரத்து சொல்லி வருகிறார். இந்தியாவில் ஒரு மொழிதான் பேச வேண்டுமாம். நீதி மன்ற மொழி சமஸ்கிரிதமாக இருக்க வேண்டுமாம். இன்னும் பா ஜ க வின் உயர் பொறுப்பில் அவரை வைத்துக் கொண்டிருக்கிறீர்களே ஏன் இந்த இரட்டை வேடம்?

 இந்தியை திணிக்க மாட்டோம் என்று உறுதி கூறினால் போதாது அதற்கு சட்ட வடிவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உங்களை நம்ப முடியும். 

                              செய்வீர்களா மோடி?

கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக நிதி கொடுத்தது தவறா?!

திமுக தனது கூட்டணி கட்சிகளான இந்திய கம்யுனிஸ்டு கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்டு கட்சிக்கும் கொங்கு நாடு முன்னேற்ற கட்சிக்கும் 25 கோடி ரூபாய் நிதி கொடுத்ததாக கணக்கு காட்டியிருக்கிறது.

இந்த தகவல் தேர்தல் கமிஷனுக்கும் வருமான வரித்துறைக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இப்படி வங்கி மூலம் வெளிப்படையான பண பரிவர்த்தனை குறித்து விமர்சனம் செய்கிறார்கள்.

இதில் ஏதாவது முறைகேடு இருந்தால் சட்ட பூர்வமான அமைப்புகள் கேட்கவேண்டும்.

எதிர்க் கட்சிகள் இதை கேள்வி கேட்க உரிமை இருக்கிறதா?

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனது வரவு செலவு தொடர்பாக மற்ற கட்சிகளுக்கு பதில் சொல்ல என்ன கடமை இருக்கிறது?

நிதி பெற்ற கட்சிகள்  தாங்கள் பெற்ற நிதியை எப்படி செலவு செய்தார்கள் என்பதை அந்தந்த கட்சி நிர்வாகிகளும் வருமான வரித்துறையும் தெளிவுபடுத்திக் கொள்வார்கள்.

மற்ற கட்சிகள் குறை சொல்வதை விட்டு விட்டு அவர்களும் தாங்கள் செய்யும் நிதி பரிவர்த்தனைகளை வங்கி மூலம் வெளிப்படையாக செய்து தங்கள் நேர்மையை நிரூபிக்க வேண்டும்.

ஐஐடி யில் மோடி; போற்றுவது தமிழை! நிகழ்ச்சி தொடங்குவது சமஸ்கிருதத்தில்?

சென்னை ஐஐடி-யில் பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வந்திருந்தார்.

விமான நிலையத்தில் வரவேற்பில் தமிழ் மொழியில் தொன்மை பற்றி தான் அமெரிக்காவில் பேசியதை நினைவு கூர்ந்தார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் பாடலை ஐநாவில் நமது நாட்டு  பிரதமர் ஒலித்த போது நமக்கு பெருமையாகத்தான் இருந்தது. பிரதமருக்கு நன்றி.

இதேபோல் வாஜ்பாயும் பலமுறை தமிழ் பாடல்களை நினைவு கூர்ந்திருக்கிறார். அவர் கவிஞர். அவரது தமிழ் நேசம் போலியானதாக யாரும் குற்றம் சாட்டியதில்லை.

ஆனால் மோடி தமிழை உயர்த்தும் போது மட்டும் சிலர் ஐயம் எழுப்புகிறார்கள்.

தமிழை உயர்த்தினால் போதுமா? தமிழை வாழ வைக்க வேண்டாமா? அலுவல் மொழியாக வாழ வைக்க வேண்டாமா? மாநிலத்திலும் மத்தியிலும்.

இது உதட்டளவில் ஆன வாழ்த்தா? மயங்க வைத்து மிதிக்கும் நோக்கம் கொண்டதா என்று மோடியை மட்டும் கேட்பதில் அர்த்தம் இருக்கிறதா இல்லையா?

ஏன் இந்த கேள்வியை வாஜ்பாயியை நோக்கி கேட்டதில்லை யாரும்?

மோடி அவ்வளவு புகழ்ந்து தமிழை பேசியபிறகு அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி சமஸ்கிருத பாடலுடன் தொடங்குகிறது என்றால் அது அவரின் கட்டுப்பாட்டில் இல்லையா?

தமிழ்நாட்டில் ஐஐடி இருந்தால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஏதாவது சட்டமா?

இதே நிலை பிரதமர் தமிழ்நாட்டில் கலந்து கொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளிலும் தொடர்கிறதே காரணம் என்ன?

இவர்களை எப்படி நம்புவது?

தமிழ்நாட்டில் தெலுங்கர்; குட்டையைக் குழப்பிய ராதாரவி ?!

பல காலங்களில் பலர் கிளப்பிய தமிழ்நாட்டில் தெலுங்கர் பிரச்னையை நடிகர் ராதாரவி இப்போது கிளப்பி இருக்கிறார்.

அவர் தந்தை எம் ஆர் ராதாவுக்கு திராவிட இயக்க தலைவர்கள் சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்பது ஒரு காரணம். மற்றொன்று சீமான் போன்ற சிலர் தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசுவோருக்கு அரசியல் அதிகாரம் ஏன் என்று கேள்வி எழுப்புவது.

எம் ஆர் ராதா திராவிட இயக்க தலைவர்களிலேயே ஒருவரான எம்ஜிஆரை சுட்டு சிறை தண்டனை பெற்றவர். எனவே அங்கீகாரம் தருவதில் திராவிட இயக்க தலைவர்களுக்கு தயக்கம் இருப்பதில் காரணம் இருக்கிறது. ஆனால் ராதாரவி அவரை காந்தியை கொன்ற கோட்சே உடன் ஒப்பிட்டிருக்க வேண்டாம். கோட்சே வுக்கு சிலை வைத்தால் நாங்களும் ராதாவுக்கு வைப்போம் என்கிறார். தேவையில்லாத சரியில்லாத உவமை. தன் தந்தையை ரவி இப்படி கொச்சைப் படுத்தியிருக்க வேண்டாம். அடுத்து சீமானின் பிரச்சாரம் எடுபடவில்லை என்பதோடு இப்போது அவர் தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டுவிட்டதாகத் தான் தெரிகிறது.

பெரியாரை எவனாவது தெலுங்கன் என்று உரிமை கொண்டாடினால் அவனை விட அடி முட்டாள் எவனும் இருக்க முடியாது.

சாதி மத ஒழிப்புக்காகவே தன் வாழ்நாளை செலவிட்ட ஒரு மகத்தான மனிதனை, மனித இனத்துக்கே அறியாமையில் இருந்து விடுதலை பெற்றுத் தர உழைத்த ஒரு உத்தமனை பாராட்ட மனமில்லை என்றாலும் இகழ எவருக்கும் உரிமையில்லை.      தெலுங்கு குடும்பத்தில் பிறந்தது ஒரு இயற்கை நிகழ்வு. அவ்வளவுதான். தன் வாழ்நாளில்தான் தெலுங்கன் என்ற உணர்வோடு வாழ்ந்தார் என்றோ தமிழ் தமிழர் உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றோ யாராவது நிரூபிக்க முடியுமா?

ஒரு வகையில் ராதா ரவி நாணயமானவர் தான்.

என் தாய்மொழி தெலுங்கு  எனவே நான் தெலுங்கன். இது ஒரு நாணயமான ஒப்புதல். வீட்டில் தெலுங்கு பேசுவேன். ஆனால் வெளியில் நான் தமிழன் என்று சொல்லிக் கொள்வேன் என்றெல்லாம் போலியாக உரிமை கோரவில்லை ராதாரவி. தெலுங்கராக குற்றமா என்ன?

அதற்கான அவசியமும் அவருக்கு  இல்லை. ஏனென்றால் எம் ஆர் ராதா திராவிட இயக்க முன்னோடி. நடிகவேள் என்ற பட்டம் பெற்றவர். ராதா இல்லாத சினிமா இல்லை என்ற அளவுக்கு தமிழ் சினிமாவில் கோலோச்சியவர். அவரை தெலுங்கர் என்றே பலருக்கு தெரியாது. அவர் அப்படி வாழ்ந்ததாகவும் தெரியவில்லை.

திராவிட இயக்கம் என்பது பார்ப்பனர் அல்லாத இயக்கம். அதில் தமிழர், கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் எல்லாரும் பங்காளிகள் என்பதை புரிந்து கொண்டால் அந்த காலத்தில் ஏன் தமிழ் தெலுங்கர் பிரச்னை வரவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியும். பொது எதிரியை வீழ்த்த நான்கு மாநிலத்தவரும் ஒருங்கிணைந்த காலம் அது.

இப்போது பிரிந்து விட்டோம். பிரிவினையின் எச்ச சொச்சங்கள இருக்கத்தான் செய்யும். கேரளாவில் தமிழர் மாவட்டங்கள் உள்ளன கர்நாடகத்தில் தமிழர் மாவட்டங்கள் உள்ளன. ஆந்திராவில் சித்தூர் போன்ற தமிழர் மாவட்டங்கள் உள்ளன. அதேபோல் தமிழகத்தில் தெலுங்கர்கள் மட்டுமா இருக்கிறார்கள்? கன்னடர்கள், இல்லையா? மலையாளிகள் இல்லையா?

வந்தாரை வாழ வைத்த தமிழகம் என்பதுதான் இந்நாட்டின் பெருமை.

தமிழ் நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும் என்பதில் ராதாரவிக்கு கருத்து வேறுபாடு இல்லை.

எங்களுக்கு உரிய பங்கும் மரியாதையும் இருந்தால் போதும் என்பதுதான் அவரது ஆதங்கமாக தெரிகிறது. அதுதான் இப்போது இருக்கிறதே? அதை சுட்டிக் காட்டி  பேசுவதால் எதை அவர் சாதிக்கப் போகிறார்.?

தெலுங்கர் இல்லாமல் அமைச்சரவை அமைக்க முடியாது என்கிறார். அதாவது நடப்பில் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். அதுதான் நடைமுறையில் இருக்கிறதே அதை சுட்டிக்காட்ட வேண்டிய  அவசியம் என்ன வந்தது?.

பொதுவாக தன்னை சமுதாய தலைவர்களாக காட்டிக் கொள்ள ஆசைப்படுபவர்கள் தான் இப்படியெல்லாம் பேசுவார்கள். அது சுய நலம். எல்லாருக்கும் புரிந்து அவர்களை கண்டுகொள்ள மாட்டர்கள் யாரும்.  இதுவும் நடைமுறைதான்.

அந்த லிஸ்டில் ராதாரவி சேரவேண்டிய அவசியம் வந்து விட்டதா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.

இவர் சகோதரியே ராதிகாவே பச்சைத் தமிழர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு பிள்ளையை பெற்றுக் கொண்டிருக்கிறார். அந்த பிள்ளை தமிழரா தெலுங்கரா என்ற கேள்வியை எழுப்பி அந்தப் பிஞ்சின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமா?

இப்போது இருக்கும் சுமுக சூழ்நிலையை கெடுக்கும் விதத்தில் யார் பேசினாலும் செயல்பட்டாலும் அவர்கள் தமிழகத்தின் எதிரியாகவே பார்க்கப்படுவார். 

அநேகமாக அடுத்து ரஜினி கட்சி ஆரம்பித்தால் அங்கு சென்று விடுவார் என்பது உறுதியாக தெரிகிறது. அதிமுகவில்  இருந்து கொண்டே ரஜினி முதல்வர் வேட்பாளர் என்றால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சொல்பவர் எப்படி அதிமுகவில் நீடிக்க முடியும்? அநேகமாக அவர்கள் இவரை விலக்கலாம். அல்லது ஒதுக்கி வைக்கலாம். அல்லது இவரே ரஜினியிடம் ஒட்டிக கொண்டு விடலாம்.

இப்படி எதையாவது சொல்லி தமிழர் – தெலுங்கர் பிரச்னையை கிளப்ப முயற்சிப்பவர்கள் எதையும் சாதிக்க முடியாது என்பதுடன் இதனால் தெலுங்கர் களுக்கு எந்த நன்மையையும் விளையப் போவதில்லை என்பதுதான் உண்மை. 

ஒரு சில சிந்திக்கத் தெரியாத பாமரத் தமிழர்கள் மத்தியில் வெறுப்பைத் தவிர. 

தமிழ் அறியாதவர்கள் தமிழ் நாட்டில் நீதிபதிகளா? டி என் பி எஸ் சி செய்யும் புதுக் குழப்பம்?!

விதிமுறைகளில் எல்லாரும் தமிழ்நாட்டில் நீதிபதிகள் தேர்வை எழுதலாம் என்று இருந்தாலும் இதுவரை பிற மாநிலத்தவர் எவரும் இங்கே வந்து தேர்வு எழுதி நீதிபதி ஆக முயற்சிக்க வில்லை. அதனால் விதி இருந்தாலும் அது நடைமுறைக்கு வராததால் எந்த பிரச்னையும் எழாமல் இருந்தது.

ஆனால் இப்போது நிலைமை என்ன. ரயில்வே, அஞ்சல் துறை, வங்கித்துறை என்று எல்லாவற்றிலும் பிற மாநிலத்தவர் தமிழகத்தில் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் விதிமுறைகள் இருப்பதை சாக்கு வைத்து பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதிகள் தேர்வை பிற மாநிலத்தவரும் எழுதலாம் என்று அறிவித்து இருப்பது குழப்பத்தைதான் ஏற்படுத்தும்.

விதிகள் மாற்றப்பட வேண்டும் என்றால் அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டுமே தவிர விதியை காரணம் காட்டி பிற மாநிலத்தவர் இங்கு நீதிபதிகள்  ஆகும் வாய்ப்புக்கு வழி விடக்கூடாது.

தமிழக அரசின் நிலைப்பாடு இது பற்றி என்ன என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

எல்லா கட்சிகளும் தாங்கள் எதிர்ப்பை தெரிவித்து விட்டன. அரசு ஏன் மௌனம் காக்க வேண்டும்?