Home Blog Page 26

விதிக்கப்படாத அபராதத்தை எதிர்த்து மேன்முறையீடு செய்த தமிழக அரசு

சென்னையில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசுபட்டு விட்டதாகவும் அதை தமிழக அரசு தடுக்க தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டி தொடுக்கப்பட்ட வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் நீர்நிலைகளை சாக்கடையாக மாறிவிட்டதை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதாவும் எனவே மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழக அரசு ரூபாய் 100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் ஆனால் இதில் இறுதி முடிவு எடுக்கும் முன்பு நிபுணர் குழு சிபாரிசு அறிக்கையுடன் தலைமை செயலாளர் தீர்ப்பாயத்தின் முன்பு ஆஜர் ஆக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதாவது இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அதன்படி தலைமை செயலாளர் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரூபாய் நூறு கோடி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது உறுதி செய்யப்படாத அபராதத்தை எதிர்த்து மேன்முறையீடு. இதை எப்படி மாநில அரசு வழக்கறிஞர்கள் அங்கீகரித்தார்கள் என்பது தெரியவில்லை.

இறுதி விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம் அபராதத் துகை எதுவும் விதிக்கப்பட வில்லை என்று கூறி மேன்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

இதில் யார் குற்றவாளி? பொறுப்பில்லாமல் செயல்பட்ட தமிழக அரசு வழக்கறிஞர்கள் குழுதான்.

தமிழக அரசின் சட்டத்துறை இவை எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் மானத்தை காக்க வேண்டும்.

திருமலையில் வேற்று மதத்தவர் வேலை செய்யக் கூடாதாம்?!

திருப்பதி தேவஸ்தானத்தில் சுமார் 48 பேர் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருக்கிறார்கள்.

அவர்கள் பணி விலக வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு உத்தரவிட்டுள்ளது.

எந்த மதத்தில் இருப்பது அவரவர் விருப்பம். ஆனால் அவர்கள் இந்துக் கோவில்களில் பணிபுரிந்தால் இந்துவாக மட்டுமே இருக்க வேண்டுமா?

திருமலையில் மதமாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் அதை  தடை செய்ய வேண்டும் என்றும் பாஜக கோரி வருகிறது.

அவர்கள் பணியில் சேர்ந்தபோது இந்துக்கள் என்று சொல்லி சேர்ந்தார்களா? அல்லது பணியில் சேர்ந்த பிறகு மதம் மாறினர்களா?

செய்யும் பணிக்கும் நம்பும் மதத்திற்கும் என்ன தொடர்பு?

அவர்கள் இறைப்பபணிக்காக என்று சொல்லி சேர்ந்தால் அவர்கள் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் மத நம்பிக்கை சாராத பணிகளுக்கு வேற்று மதத்தவர் பணியில் இருக்க என்ன தடை.?

சர்ச்சுகளில் மசூதிகளில் வேற்று மதத்தவர் பணி புரிகிறார்களா என்பது முக்கிய கேள்வி.

பிற மதங்களில் வேற்று மத நம்பிக்கைகளுக்கு இடம் இல்லை.

ஆனால் இந்து மதத்தில் மட்டும் நாத்திகம் பேசுகிறவர்கள் கூட இந்துக்கள் தான்.

ஜெகன் மோகன் ரெட்டி கூட கிறிஸ்தவர்தான். சமீபத்தில் குடும்பத்துடன் இஸ்ரேல் சென்று வந்தார். அவர் அவ்வப்போது ஏழுமலையான் கோவிலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்.

எனவே பிற மதங்களில் இல்லாத சுதந்திரம் இங்கு இருக்கிறது என்பதே நமக்கு பெருமை. அதை ஏன் இழக்க வேண்டும்?

எழுவர் விடுதலையில் தமிழக அரசின் இரட்டை வேடம்?!

நளினியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது.

இது சரியான தீர்ப்பு அல்ல. மேன்முறைஈட்டில் நிற்காது.

ஆனால் நளினி மேன்முறையீடு செய்வாரா என்பது தெரியவில்லை.

09.09.2018ல் எழுவரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். அது சரியா என்ற கேள்விக்கும் மாநில அரசின் பரிந்துரையை நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா என்பதற்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை.

நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் முன்வைத்த வாதம் அரசின் இரட்டை நிலைப்பாட்டை தோலுரித்து காட்டுகிறது.

அகில இந்திய சிறை சீர்திருத்த கமிட்டி பரிந்துரையை ஏற்று மோசமான குற்றங்களில் சம்பந்தப்பட்ட கைதிகளை விடுவிப்பதில்லை என்று அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாகவும் அதன்படி அரசியல் சட்ட பிரிவு 161 ஐ பயன்படுத்தி விடுதலை செய்ய போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டார்கள்.

161ஐ பயன்படுத்தப் போவதில்லை என்ற அரசின் கொள்கை முடிவு உண்மையா அல்லது 09.09.2018ல் அரசு விடுதலை செய்ய கேட்டு ஆளுனருக்கு செய்த பரிந்துரை உண்மையா? எது அரசின் நிலைப்பாடு? 

இதையும் ஏற்றுக் கொண்டு அரசு பரிந்துரை செய்து விட்டது எனவே அதற்கு மேல் அரசுக்கு உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் தீர்பளித்து இருப்பது சரியல்ல.

ஆக எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்று மாநில அரசு கருதுகிறதா? யார் இந்த மாநிலத்தை ஆளுகிறார்கள். தமிழக அரசா? மத்திய அரசீன் பிரதிநிதி ஆளுநரா? இதுதான் ஜனநாயகமா?

கூட்டணியில் இருந்து  கொண்டு அதற்கு மேல் பேசமுடியாது என்று ஆளுநர் செப்டம்பர் 9க்கு முன் முடிவெடுக்க வேண்டும் என்று ராமதாஸ் அறிக்கை விடுகிறார்.

ஆளுநர் நிராகரித்தால் வேறு ஒன்றுமே செய்ய முடியாதா?

மீண்டும் அரசு பரிந்துரைத்தால் ஆளுநர் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும் என்கிறார் ராமதாஸ். அப்போது மட்டும் என்ன உறுதி?

மாநில அரசு உறுதியாக இருந்தால் மட்டுமே இது முடியும்.

காந்தியை கொன்றவனை பதினைந்து வருடத்தில் விடுவித்தவர்கள் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை மட்டும் சாகும் வரை சிறையில் கிட என்கிறார்கள்.

யார் கொலை செய்தாலும் சிரச்சேதம் பார்ப்பான் கொலை செய்தால் மட்டும் அவனது தலைமயிரை சிரை என்று மனு நீதி எழுதியவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

அடிமைகளின் ஆட்சி என்றால் கோபப்படுவார்கள் அதிமுக வினர். நீங்கள் செய்வதற்கு என்ன பெயர் என்று நீங்களே கூறுங்கள்.

வன்முறைக்கு வித்திடும் முகமது ஷெரிப், பாஜக நாராயணன், ஆளுநர் சத்ய பால் மாலிக்??!!

கருத்து வேறுபாடுகள் எத்தனை இருந்த போதும் அவற்றை ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வெல்வதுதான் நீதி.

ஆனால் சிலர் வன்முறைக்கு வித்திடும் பேச்சுக்களால் ஜனநாயகத்திற்கே சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக பேச்சாளார் முகமது ஷெரிப் ‘நாங்கள் முஸ்லிம்களுக்காக மட்டும் பேசுவதாக இருந்தால் முத்தலாக் சட்டம் கொண்டு வந்தவுடனேயே பிரதமர் மோடியின் தலையை எடுத்திருப்போம். உள்துறை மந்திரி அமித் ஷா உயிரோடு இருந்திருக்க மாட்டார்.’ என்று பேசியிருக்கிறார். உடனே அந்த  கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அவரை கண்டித்து பொறுப்பில் இருந்து  நீக்கியுள்ளார். கட்சியில் இருந்தே நீக்கியிருக்க வேண்டும். அவர் அரசியலில் இருப்பதற்கே அருகதை அற்றவர்.

இன்று புதிய தலைமுறை தொலைகாட்சியில் அருணனுடன் கலந்து கொண்ட பாஜக நாராயணன், வைரமுத்து தலையை வெட்டுவதாக நயினார் நாகேந்திரன் பேசியது தவறில்லை என்கிறார். அவர் வணங்கும் ஒருவரை வேசி என்று எழுதினால் என்ன செய்வீர்கள் என்றும் கேட்கிறார். அப்படி எழுதவில்லை என்று மறுத்ததை பேச விடாமல் தடுக்கிறார். ஏன் வழக்கு போட வேண்டியதுதானே என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாமா? அப்படி ஒருவர் ஆராய்ச்சி செய்து  எழுதியதை மேற்கொள் காட்டியது எப்படி குற்றம் ஆகும் என்ற கேள்விக்கு எவரிடமும் பதில் இல்லை. ஒன்று விளக்கம் சொல்வதை கேள். இல்லையா சட்டப்படி நடவடிக்கை எடு. தண்டனை கொடு. அல்லது நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு பிறகாவது திருந்து. நான் அறிவை பயன்படுதாதவரை தூண்டி விட்டு தலையை எடுக்க சொல்வேன் என்கிறாரா?

காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் பொறுப்பான பதவியில்  இருப்பவர். அவர் கூறியதாக இன்று சி என் என் டிவியில் ஒரு செய்தி வெளியாயிற்று. அவர் சொல்கிறார். இனி காங்கிரஸ்காரர்களை 370 ஆதரவாளர்கள் என்றே அழையுங்கள்.  அவர்கள் அவர்களை ஷூவால் அடிப்பார்கள்  என்று பேசியிருக்கிறார். அப்படி பேசியிருந்தால் அது எப்படி சரியாகும். மக்களை வன்முறைக்கு தூண்டுவதாக ஆகாதா? அதை ஒரு அரசியல் சட்ட பொறுப்பு வகிக்கும் ஆளுநர் பேசலாமா? மற்றவர் பேசினால் வழக்கு? ஆளுநர் பேசினால்?

சட்டம் ஆளும் கட்சிக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரே மாதிரி இருக்கவேண்டும்.

சர்வாதிகாரத்தை நோக்கி நாடு பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

பியுஷ் மானுஷை பாஜகவினர் தாக்கியபோது காவல் துறை என்ன செய்தது??!

சேலம் மாவட்ட பாஜக அலுவலகத்துக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர் பியுஷ் மானுஷ் காஷ்மீர் நிலைப்பாடு மற்றும் பல பிரச்னைகள் பற்றி பேசுவதற்காக முன் அறிவிப்பு கொடுத்து விட்டு காவல் துறையினர் இருக்கும்போது  நுழைகிறார். அவரை மாவட்ட  தலைவர் வரவேற்று பேசிக்கொண்டிருக்கிறார்.

பேச்சு சூடாகி அவருக்கு பாஜகவினர் செருப்பு மாலை போட்டு அடிக்கத் துவங்குகிறார்கள். காவல் துறை அதிகாரிகள் ஏனோதானோ என்று தடுக்க முயற்சித்து அதனையும் மீறி அவருக்கு பலமான அடிகள் விழுகின்றன.

இந்த சம்பவத்திற்கு யார் காரணம்.?

தாக்குதலை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி கொடுக்கிறார். இன்னும் சிலரும் கொடுக்கிறார்கள் .

முதலில் பியுஷ் மனுஷ் பாஜக அலுவலகம் சென்றுதான் தனது மாற்றுக் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று இல்லை. தவிர்த்திருக்கலாம்.

காவல் துறை பாதுகாப்பில் இருக்கிறது. அவர்கள் இந்த சந்திப்புக்கு அனுமதி கொடுத்திருக்கக் கூடாது. கொடுத்தால் தகுந்த பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அடிக்க விட்டு விட்டு வேடிக்கை பார்க்க எதற்கு காவல்துறை. ?

இந்தப் பிரச்னையில் குற்றம் காவல்துறையின் மீதுதான் அதிகம் இருப்பதாக தோன்றுகிறது.

இரண்டு தரப்பின் மேலும் வழக்கு பதிந்திருக்கிறது காவல் துறை.

இப்படி சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் நடவடிக்கைகளுக்கு காவல் துறை  துணை போனது போல் இருக்கிறது நடந்த சம்பவம்.

உலகின் நுரையீரல் எரிகிறது; யாருக்கும் பதட்டமில்லை ??!!

அமேசான் மழைக்காடுகள் உலகின் 20% ஆக்சிஜனை தருகின்றன. ஐந்தரை லட்சம் கிலோ மீட்டர் பரப்பளவு. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பைப்போல் இரண்டு மடங்கு பெரியது. பிரேசில் ,பெரு , ஈக்வடார், பொலிவியா, கயானா என்று பல நாடுகளில் பரவி இருந்தாலும் பிரேசிலில் மட்டும் அறுபது சதம் காட்டின் நிலப்பரப்பை பிரேசில் கொண்டுள்ளது.

உலகின் ஒட்டு மொத்த தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் மூன்றில் ஒரு பங்கு இங்குள்ளது

நானூறுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் இன்னமும் வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்கின்றனர்.

இந்த ஆண்டு மட்டும் 73000 தீ விபத்துக்கள் என்றால் இவை இயற்கையானவையா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எல்லாம் மனிதர்களின் பேராசை.

காட்டை அழித்து வேளாண்மை செய்யப் போகிறார்களாம். உலகிற்கு ஆக்சிஜனை அளித்து எங்களுக்கு என்ன என்ற எண்ணம்தான்.

உலக நாடுகள் தீயை அணைக்க உதவ தயாராக இருந்தும் வேண்டாம் என்று மறுத்து விட்டது பிரேசில். என்ன காரணம்?

ஏன் அவரவர் நாட்டில் மரங்களை வைத்து காத்துக் கொள்ளுங்களேன் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

பூமிப்பந்தில் வாழும் மனிதர்கள் செய்யும் பூமியின் அமைப்பில் மாற்றம் செய்யும் காரியங்கள் ஏதோ அவர்களை மட்டுமே பாதிப்பதாக இருந்தால் பரவாயில்லை.      ஒட்டு மொத்த மனித  இனத்தையே பாதிப்பதாக இருந்தால்?

அமேசான் நெருப்பு இப்போதைக்கு அணையுமா? அணைந்தாலும் மீண்டும் தொடங்காமல் இருக்குமா?

காஷ்மீர் மக்களை நலத்திட்டங்கள் மூலம் வளைக்க மத்திய அரசு திட்டம்??!!

மோடி அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தவிர எந்த முஸ்லிம் நாடும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

சவுதி இளவரசர் இந்தியா என்பது இந்துக்களுக்கானது என்ற தனது புரிதலை வெளிப்படுத்தி விட்டார்.

ஐநாவிலோ வேறு எங்குமோ இனி சர்வதேச அளவில் காஷ்மீர் பற்றி விவாதமோ பேச்சு வார்த்தையோ நடவடிக்கையோ வர வாப்புக்கள் குறைவு.

உள்நாட்டிலும் பெருத்த ஆட்சேபணை இல்லை. காங்கிரசே இதில் பிளவு பட்டிருக்கிறது. சில தலைவர்கள் ஆதரவு தெரிவித்த பிறகு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

எதிர்கட்சிகளை இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஒரே கட்சி திமுக. அகில இந்திய ரீதியில் இன்று பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக செயல்படுவது திமுகதான்.

திமுகவின் மதிப்பு இதனால் மிகவும் கூடியிருக்கிறது.

அதுவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் நடந்த ஆர்ப்பாட்டம் காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க மட்டுமே என்று தெளிவு படுத்திவிட்டார். 370 பிரிவு நீக்கத்தை பொருத்தவரை எங்களது எதிர்ப்பு அதை நீக்க கடைபிடிக்கபட்ட விதிமுறை மீறல்கள்தான் என்றும் கூறினார். அதாவது எதிர்ப்பு இருந்தாலும் இந்த ஆர்ப்பாட்டம் தலைவர்களை விடுவிக்கத்தான் என்றார்.

காஷ்மீரில் நிலவரம் உண்மை என்னவென்று தெரியவில்லை. பார்வையிடச் சென்ற எதிர்கட்சித் தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். நிலவரம் அமைதியாக இருந்தால் ஏன் திருப்பி அனுப்ப வேண்டும்?

கல்லெறிதல் தினமும் நடக்கிறது என்றும் இல்லை என்றும் தகவல்கள் மாறி மாறி வருகின்றன. உண்மை நிலவரம் என்ன?

எத்தனை மாதங்களுக்கு ராணுவ கட்டுப்பாட்டில் மக்களை வைத்திருக்க முடியும்?

காஷ்மிரிகளை வென்றெடுக்க மத்திய அரசு 85 மக்கள் நலத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி இலவச மின்வசதி, சமையல் காஸ், கடன் உதவி, பென்ஷன் திட்டம் என்று பட்டியல் நீளுகிறது. இதற்கு மக்கள் மயங்குவார்களா? 

மத்திய அரசின் திட்டமே அங்கு வசிக்கும் விளிம்பு நிலை மக்கள் நிச்சயம் மயங்குவார்கள் என்பதுதான். அரசியல் அக்கறை இல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தை மட்டுமே அளவுகோலாக பார்ப்பவர்கள் இங்கே இல்லையா? அங்கு மட்டும் இருக்க  மாட்டார்களா? அவர்கள்தான் மத்திய அரசின் இலக்கு.

இதை நிறைவேற்ற ஒரு மாதம் கெடு வைத்திருக்கிறது மத்திய அரசு. அதற்குள் அவர்களை வளைக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறுவழியை யோசிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் இனி லடாக் தனி பிரதேசம்தான். ஏனென்றால் இதற்காக அவர்கள் வெகுகாலம் போராடி வந்திருக்கிறார்கள். இனி ஒருபோதும் அதை இழக்க அவர்கள் சம்மதிக்க மாட்டர்கள். அந்த பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பாஜக என்பதில் இருந்தே மக்கள் ஆதரவு யாருக்கு என்பது புரியும். காஷ்மீரிகள் லடாக் மக்களை அரவணைத்து செல்வதில் இருந்து தவறி விட்டார்கள் என்பது உண்மை.  அதுவும் லடாக்கை முஸ்லிம் பிரதேசமாக முயற்சித்தார்கள் என்பதும் குற்றச்சாட்டு.

இனி சட்ட மன்ற வரையறை ஒரு பிரச்னை ஆகும். எத்தனை லட்சம் மக்களுக்கு ஒரு சட்ட மன்ற உறுப்பினர் என்ற வரையறையை காஷ்மீர் அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக செய்து கொண்டார்கள்  என்பது பழைய குற்றச்சாட்டு. இனி அதுவும் விவாதத்துக்கு வரும்.

இட ஒதுக்கீட்டுக்கு குழி பறிக்கும் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் ?!!

ரெட்டை நாக்குக்கு பேர் பெற்றவர்கள் ஆர் எஸ் எஸ் தலைவர்களும் அதன் கிளை பாஜக தலைவர்களும்.

ஒரே நேரத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் பேசுவார்கள், மேல் மட்ட தலைவர்கள் கூடாது என்றும் பேசுவார்கள்.

அதாவது இறுதி இலக்கு இட ஒதுக்கீடு ஒழிப்பு.

அப்படித்தான் சில நாட்களுக்குமுன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசும்போது ‘இட ஒதுக்கீடு வேண்டும் என்போரும், வேண்டாம் என்போரும் உட்கார்ந்து பேசி ஒரு சுமுக சூழ்நிலையில் ஒரு முடிவுக்கு வர வேண்டும்’ என்று பேசி உள்ளார்.

இட ஒதுக்கீடா இன்றைய முக்கிய தலையாய பிரச்னை.? இட ஒதுக்கீட்டின் மூலம் என்ன? பிற்பட்ட தாழ்த்தப்பட்டோர் கல்வி வேலை வாய்ப்புகளில் மிகவம் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பதுதானே?

ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இட ஒதுக்கீட்டின் பலன்கள் அவர்களுக்கு கிடைதிருக்கிறதா என்பதை ஏன் புள்ளி விபரங்களுடன் ஆய்வு செய்ய வில்லை? எல்லாருக்கும் போதுமான பிரதிநிதித்துவம் கிடைத்து  இருந்தால் பிறகு இட ஒதுக்கீடு தேவை  இல்லை. ஆய்வு செய்து புள்ளி விபரங்களை வெளியிடாதது யார் தவறு? வெளியிட்டால் இன்னமும் மேற்குலத்தார் ஆதிக்கம் நீடிக்கிறது என்பது தெரிந்துவிடும் என்பதால் தானே? 

அதைப்பற்றி மோகன் பகவத் பேசாமல் இட ஒதுக்கீட்டை ஒழிப்பது பற்றி பேசுகிறார் என்றால் இவர்களின் தந்திரத்தை மக்கள் உணர மாட்டார்கள் என்று இன்னும் நம்புகிறார் என்றுதான் பொருள் .

சாதி ஒழிப்பை சட்ட பூர்வமாக்கப்படுவது பற்றி ஆர் எஸ் எஸ் பேசட்டும்.

அதைக்கூட பேசுவார்கள் ஏனென்றால் பார்ப்பனீயத்தை ஒழிக்கவே முடியாது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

சாதி வேறு பார்பனீயம் வேறு என்பார்கள்.

கீழ்பட்ட இரண்டு சாதிகளுக்கு இடையே மோதலை வளர்த்து இடையில் குளிர் காய நினைப்பது ஆர் எஸ் எஸ் வழக்கம். அதுதான் பாஜகவுக்கும் இன்று கைகொடுத்துக்  கொண்டிருக்கிறது.

போதுமான வளர்ச்சி யை உறுதி செய்யும் வரை இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது.

அலுவல் மொழி ஆங்கிலம் கூடாதென்று ஏன் கூறுகிறார் மோகன் பகவத் ??!!

ஆர் எஸ் எஸ் தலைவர்கள் நேரிடையாக எதையும் கூற மாட்டார்கள்.

நோக்கம் இந்தி திணிப்பு என்றால் அதை நேரிடையாக கூறினால் இந்தி பேசாதவர்களின் எதிர்ப்பு வரும். எனவே அதற்கு மாறாக ஆங்கிலம் கூடாது  என்பார்கள். ஏனென்றால் ஆங்கிலம் இல்லாமல் இருந்தால்தான் அந்த இடத்தை இந்தி பிடிக்க முடியும். ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிக்கும் வரை இந்தியோ வேறு மொழிகளோ அந்த இடத்தை பிடிக்கவே முடியாது. எனவேதான் அந்நியமொழி இன்னமும் தேவையா என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

அந்த வகையில்தான் மோகன் பகவத் சமீபத்தில் இதே கருத்தை கூறியிருக்கிறார்.    இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அந்நிய மொழியில் அலுவலக உத்தரவுகளை எழுதிக் கொண்டிருப்பீர்கள்? ஏன் நீங்கள் உள்ளூர் மொழியில் எழுதக்கூடாது?  இதுதான் அவர் வைத்த கேள்வி.

உள்ளூர் மொழி என்றால் அவருக்கு இந்தி.

அதாவது மறைமுகமாக இனிமேல் இந்தியில் அலுவலக உத்தரவுகளை எழுதுங்கள் என்கிறார். ஆங்கிலம் எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்கும் பகவத் எத்தனை பேருக்கு இந்தி தெரியும் என்று கேட்க மாட்டார்.

அதேபோல் இந்தி பேசாத மாநிலமக்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் நீங்களும் இந்தியில் எழுதுங்கள் என்பார். இந்தி எங்களுக்கு அன்னியமாயிற்றே என்றால் ஆங்கிலமும் அன்னியம்தானே என்பார். ஆனால் நாங்கள் ஏன் இரண்டு அந்நிய மொழிகளை கற்க வேண்டும் என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டார்.  ஏனென்றால் அதற்குத்தான் மூன்று மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம் என்று நாமாகவே புரிந்து கொள்ள வேண்டும். 

மொழியைக் கற்கும் பளு இந்தியர் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி அவரவர் தாய்மொழியும் ஆங்கிலமும்தான்.

நேருவின் உறுதிமொழியை ஏற்றுக்  கொண்டதே மாபெரும் தவறு. அந்த உறுதிமொழியை சட்டமாக்க பாராளுமன்றத்தில் வடிவம் கொடுத்திருக்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ்-சின் மொழிக் கொள்கை நாட்டை நாசப்படுத்திவிடும்.

என்றைக்கு பன்முகத் தன்மையை ஆர்எஸ்எஸ் அங்கீகரிக்கிறதோ அன்றுதான் அமைதி நிலவும்.

சுவர் ஏறிக் குதித்து ப சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ ??!!

இன்று நடந்தது வரலாற்றில் ஒரு திருப்பு முனை .

முன்ஜாமீன் மனு  உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது நாளை மறுநாள் அது விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் இன்று ப சிதம்பரத்தை அவர் வீட்டு சுவரின்  ஏறிக் குதித்து கைது செய்திருக்கிறது சிபிஐ.

உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை ஏழு மாதங்கள் கழித்து தள்ளுபடி செய்கிறது. நிறுத்தி வைக்க மறுக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் அவரது மனு டெக்னிகல் காரணங்களை சொல்லி திரும்பக் கொடுக்கப் படுகிறது. வேறு மனு தாக்கல் செய்த பின் தலைமை நீதிபதி அதை நாளை மறுநாள் விசாரிக்க உத்தரவிடுகிறார். இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி சிபிஐ கைது செய்யும் என்பதால் ப சிதம்பரம்  காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்கிறார். வீட்டுக்கு போகிறார். வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்  படுகிறார்.

நீதிமன்ற வாரன்ட் அடிப்படையில்தான் கைது  என்று சிபிஐ சொல்கிறது. எந்த நீதிமன்றம் வாரன்ட் கொடுத்தது என்பது நாளைதான் தெரியும்.

நாடு சர்வாதிகாரத்தை நோக்கி பீடுநடை போட துவங்கி விட்டது என்பது தெளிவாக தெரிகிறது.

இனி எல்லாரையும் இப்படித்தான் அச்சுறுத்துவார்கள் என்பதும் தெளிவாகி விட்டது. முன்னாள் உள்துறை அமைச்சர் மூத்த வழக்கறிஞருக்கே இந்த கதி என்றால் சாமானியர் கதி? இந்த அச்சத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கைது போல்தான் தெரிகிறது.

காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவில் திமுகதான் முன்னெடுத்து ஒரு போராட்டத்தை நாளை டெல்லியில் நடத்துகிறது. நாளை அதற்கும் இப்படிப்பட்ட அச்சுறுத்தல் வரலாம்.

இனி ப சிதம்பரம் ஜாமீன் தான் கோரமுடியும். அதுவும் சிபிஐ காவல் கேட்கும்.  ஒரிருநாள் கொடுக்கப் படலாம். அதன்பின் ஜாமீன் தான் கோரலாம். கிடைக்கும்.  முன்ஜாமீன் மனு அவசியம் அற்றுப் போய்விட்டது.

உள்ளே வைக்க வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமே தவிர அவரை வழக்கில் தண்டிக்க முடியுமா என்பது கேள்வி?

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் எதுவும் சொல்ல முடியாது.

வழக்கின் தன்மை பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.

மகளை கொன்ற வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி- பீட்டர் முகர்ஜி இருவரும் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் தான் இந்த வழக்கு தொடர்கிறது. அது எந்த அளவு நிலைக்கும் என்பது தெரியாது.

அதேபோல் ஒரு அமைச்சர் மட்டும் இதை செய்து விட முடியாது. அவருக்கு கீழே இருக்கும் ஐந்தாறு ஐஏஎஸ் அதிகாரிகள் கையெழுத்து போட்ட பின்தான் கடைசியில்  அமைச்சர் ஒப்புதல் இடுவார். எனவே அவர்களும் இந்த வழக்கில் குற்றவாளிகள் ஆவார்கள். அவர்கள் இல்லாமல் அமைச்சரை மட்டும் குற்றம் சுமத்தி விடமுடியாது.    அமைச்சர் வற்புறுத்தினார் என்று அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்களா?   அப்படி கொடுத்தாலும் கூட என்ன வற்புறுத்தினாலும் அது குற்றம் என்றால் அதை செய்தவர்கள் அவர்களும்தான். எனவே அவர்களை விட்டு விட முடியுமா?

என்ன இருந்தாலும் அவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறதா என்பதை சிபிஐ தான் விளக்க வேண்டும். அரசியல் தலையீடு காரணமாக நடந்த கைது என்றுதான் என்பதுதான் பொதுவான மக்கள் கருத்து.

இன்னும் விடை காண வேண்டிய பல கேள்விகள் இந்த வழக்கில் எழுகின்றன.    காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.