Home Blog Page 32

சாதி ஆணவக் கொலைகள் மிகப் பெரிய சமுதாய சீர்திருத்த சவால்?!

உடுமலை சங்கர்- ஓமலூர் கோகுல் ராஜ் கொலைகள் சாதி ஆணவக் கொலைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.

ஆனால் அவைகள் சமுதாயத்தில் சின்ன அதிருப்தி அலைகளை மட்டுமே உருவாக்கி விட்டு மறைந்துவிட்டன.

எந்த விழிப்புணர்வுகள் இவற்றை ஒழிக்க முடியுமா அது மலர்ந்ததா? இல்லை என்பதே பதில்.

ஆனால் கோவையில் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை விரும்பிய குற்றத்திற்காக ஒரு அண்ணன் தன் தம்பியையே வெட்டிக் கொன்றதுதான். தம்பியின் மனைவியும் அவனது கொலைவெறித் தாக்குதலில் உயிர் இழந்துவிட்டார்.

உருளைக் கிழங்கு மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்பங்கள்  தங்களை துப்புரவுத் தொழிலாளிகளை விட மேல் சாதி மக்களாக மனோபாவம் கொண்டிருந்ததுதான் பிரச்னை.

சாதிவெறி அடித்தட்டு மக்களிடம் அதிகம் இருப்பதுதான் வேடிக்கை. இந்த கொடுமையை எப்படி ஒழிப்பது? விழிப்புணர்வை எப்படி கொண்டு வருவது? சட்டம் ஒன்றே இவர்களை திருத்தும். ஆம். சொன்னால் கேட்க மாட்டார்கள். சட்டம் சொன்னால் கேட்பார்கள். சில நியாயங்கள் தடி கொண்டுதான் சொல்லப்பட வேண்டும்.

அதற்கான முயற்சிக்கு பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேசி அடித்தளம் போட்டிருக்கிறார். அரசுகள் முன் முயற்சி எடுக்க வேண்டும். அதிமுக அரசு  எடுக்குமா?

அதிமுக அரசு நடுத்தர மேல்சாதி மக்களை நம்பி இருக்கிற கட்சி.

சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் சக்தி அதற்கு ஏது?

மத்தியிலோ மத ஆதிக்க ஆட்சி.

மதம் சாதிகளின் பிறப்பிடம். எப்படி ஒழியும் சாதி வெறி?

நீதிபதிகள் போராட்டங்களுக்கு எதிராக கருத்து சொல்வது நியாயமா?!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் முன்பு அமமுக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு போட்டனர்.

அதை விசாரித்த நீதிபதி அந்த திட்டத்தால் என்ன பாதிப்பு? தமிழகத்திற்கு கொண்டு வரும் திட்டங்களை எல்லாம் பொத்தாம் பொதுவாக எதிர்க்கக் கூடாது என்றும் என்ன பாதிப்பு என்றும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமுல்படுத்த போவதில்லை என்று தமிழக அரசு அறிவித்து விட்டது. பின் ஏன் போராட்டம் என்றும் கேட்டார்.

போராட்டம் நடத்துவது முழு நேர வெளியாகி விட்டது என்றும் கருத்து தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே எல்லா வேலைகளிலும் வெளி மாநிலத்தவர் வந்துவிட்டனர். ஓட்டல வேலை, முடி வெட்டும் வேலை கட்டிட வேலை என்று எல்லா பக்கமும் அவர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மாண்புமிகு நீதிபதி அவர்களின் கருத்துக்கள் எல்லாம் சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுகிறது. அவைகள் எல்லாம் தனிப்பட்ட கருத்துக்கள். தீர்ப்பு அல்ல. அவரே விசாரணையின் போது தரப்படும் விபரங்களை வைத்து தனது கருத்துக்கு முரணாகவே கூட தீர்ப்பு சொல்ல வேண்டி வரலாம். அதற்குள் ஏன் இப்படி எல்லாம் கருத்து சொல்ல வேண்டும்?

நீதிமன்ற மாண்பு இதனால் பாதிக்கப்படலாம்.

                 ஹைட்ரோ கார்பன் திட்டமும் வெளி மாநிலத்தவர் தமிழ் நாட்டில் அனைத்து தளங்களிலும் வேலை வாய்ப்புகளை பறிப்பதும் எதிர்த்து போராட வேண்டிய பிரச்னைகள் இல்லையா?

போகிற போக்கைப் பார்த்தால் வெளிமாநிலத்தவர்க்கு ரேஷன் கார்டு கொடுத்து மேலும் அவர்களுக்கு இங்கே வாக்குரிமையும் கொடுத்து தமிழ்நாட்டின் அரசியல் தளத்தை கைப்பற்ற சூழ்ச்சி நடக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

மாண்புமிகு நீதிபதிகள் கருத்து சொல்லும்போது மிக கவனமாக மாற்றுக் கருத்துக்கு இடம் அளிக்காமல் பேசவேண்டும் என்றே பொதுமேடை பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.

பாகிஸ்தான் வரக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே தோனி நன்றாக விளையாடவில்லையா ??

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தின் 337 ரன்களை எடுக்க முயன்று 306 ரன்களில் இந்தியா சுருண்டது.

31 ரன்களை தோனி நினைத்திருந்தால் எடுத்திருக்க முடியும் என்றும் 42 ரன்கள் எடுத்து வெளியேறாமல் இருந்த தோனி வேண்டுமென்றே பாகிஸ்தான் அரைஇறுதி போட்டிக்குள் நுழைவதை தடுக்கும் எண்ணத்திலேயே ஏனோ தானோ என்று ஆடினார் என்றும் வலைதளங்களில் விமர்சனங்கள் எழுகின்றன.

இப்படியெல்லாம் எழுதுகிறவர்கள் விளையாட்டையே கொச்சைப்படுத்துகிறார்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை இந்தியாவின் தோல்வி பாகிஸ்தானுக்கு இழப்பு என்று எழுதியிருந்தது குறிப்பிடத் தக்கது.

தோனி மௌனம் காப்பது சரியே. விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொன்னால் விளையாடவே முடியாது.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்பது மாநில ஒழிப்புத் திட்டத்தின் ஒரே இலக்கு?!!

மாநிலங்களை இல்லாமல் ஆக்க முடியாது. ஆனால் செல்லாதது ஆக்கி விட முடியும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது பாஜக வின் மத்திய அரசு.

முடிந்த வரை மாநிலங்களை வெறும் பொம்மை அமைப்புகள் ஆக்குவதன் மூலம் வலுவான் மத்திய அரசை அமைத்து அங்கு மேல்சாதி ஆதிக்கத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அந்த நோக்கில்தான் பாஜக அரசின் அனைத்து திட்டங்களும் வடிவமைக்கப் படுகின்றன.

இல்லாவிட்டால் இப்போது நாடு முழுமைக்கும் ஒரே ரேஷன் கார்டு வேண்டும் என்று  யார் அழுதார்கள்? எந்த அமைப்பு கோரிக்கை வைத்தது? அல்லது எந்த தனி மனிதர்தான் கோரினார்?

எப்படிஎல்லாம் மாநில உரிமைகளை பறிப்பது என்பது ஒன்றே அவர்களது  குறிக்கோளாக இருக்கிறது.

நாடு முழுக்க சுமார் 81கோடிப்பேர் மானிய விலையில் உணவு தானிய பொருட்களைப் பெற்று பயன் அடைந்து வருகிறார்கள். இந்திய உணவுக கழகம்  மத்திய உணவுக கழகம், மற்றும் தனியார் உணவுக கழகங்களின் கிட்டங்கிகளில் சுமார் 61.2 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் கையிருப்பு வைக்கப் பட்டுள்ளன.

இதற்கென அனைத்து தகவல் களையும் தொழில்நுட்ப கட்டமைப்புக்குள் வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கூறுகிறார்கள்.

தொழில் நுட்ப தகவல்களை ஒருங்கிணைக்க ஒரே ரேஷன் கார்டு தேவையில்லையே?  மாநிலங்களிடம் இருக்கும் தகவல்களை ஒருங்கிணைத்தால் போதுமே? அல்லது மாநிலங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் கொடுத்து அவற்றை ஒருங்கிணைக்க முடியுமே? எதற்கு மாநிலங்கள் வசம் இருக்கும் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறீர்கள்?

நாங்கள் மானியம் கொடுக்கிறோம் அதனால் எல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிறீர்களா? நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு மானியத் துகையிலும் மாநிலங்களின் பங்கும் இருக்கிறது!! எங்கள் பணத்தை எங்களுக்கே திருப்பி கொடுக்கிறீர்கள். அவ்வளவுதான்!

ஆந்திரா குஜராத், அரியானா, ஜார்கண்ட், கர்நாடகம், கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா ,திரிபுரா ஆகிய பத்து மாநிலங்களில் போது விநியாக திட்டங்களின் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் வசதிகள் உள்ளதாம்.

எனவே இன்னும் ஓராண்டுக்குள் அதாவது ஜூன் 30, 2020 க்குள் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமுல்படுத்த மாநிலங்களுக்கு ‘கெடு’ விதித்திருப்பதாக வந்திருக்கும் செய்திதான் அதிர்ச்சி அளிக்கிறது.

நமது உரிமைப் பட்டியலில் உள்ள அதிகாரத்தை நம்மிடீமிருந்து பறிக்க கெடுவிதிக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.?

மாநில அரசு நினைத்தால் இந்த திட்டத்தை நிறைவேற்ற மறுக்க முடியும்?

ஆனால் இந்த ஆமாம்சாமி அரசு எதிர்க்குமா? அல்லது தலைவணங்கி ஏற்றுக் கொள்ளுமா?

மாநில அரசின் கட்டுப்பாட்டில்  இருக்கும்போதே பொது மக்கள் அட்டையில் மாற்றங்கள் செய்யவும் புது அட்டை பெறவும் அல்லாடுகிறரர்கள். அகில இந்திய கட்டுப்பாட்டுக்குள் சென்றால்?

பிற மாநில மக்களுக்கு உதவுமாம்?  ஏன் அவர்கள் இங்கே பதிவு செய்து  கொண்டு வாங்க விதிமுறைகளை உருவாக்குங்கள். அல்லது அந்த  கார்டுகளுக்கு இங்கே பொருட்கள்  பெற ஒரு வழிமுறைகளை வகுங்கள்.

குடும்ப அட்டையில் இந்தியை இடம்பெற செய்ய இது ஒரு வழியாக கூட பாஜக அரசு திட்டமிடலாம். 

எந்த நியாயமும் இந்த திட்டத்தில் இல்லை.

எதுவாக இருந்தாலும் அமுலில்  இருக்கும் மாநில திட்டத்தில் சேர்த்துக் கொள்வது மட்டுமே ஒரே  தீர்வு!!

ரஜினியின் தர்பார் கட்சியின் கொ ப செ ஆகிறாரா கராத்தே தியாகராஜன் ??!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார் கராத்தே தியாகராஜன். அவர் தென் சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர். நடவடிக்கை எடுத்தது காங்கிரஸ் அகில இந்திய பொறுப்பாளர் கே சி வேணுகோபால். எனவே ராகுல் காந்திக்கு தெரியாமல் நடவடிக்கை எடுத்திருக்க முடியாது.

கொஞ்ச காலமாகவே அதிகமாக பேசி வருகிறார் கராத்தே. காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்கbவேண்டும் அதிக இடங்களை பெற வேண்டும் என்றெல்லாம் பேசி பதிலடியாக் கேஎன் நேரு இன்னும் எத்தனை காலத்துக்கு காங்கிரசை தூக்கி சுமப்பது என்று கேட்க வைத்தார்.

உண்ணா விரத போராட்டத்தில் திமுக தலைமை மேலிட பொறுப்பாளர்களை அனுப்பாமல் சட்ட துறை செயலாளரை அனுப்பியதை விமர்சித்து பேசி பிரச்னையை கிளப்பினார்.

தூத்துக்குடி போராட்டத்தின் போது ரஜினிகாந்த் போராட்டத்தை விமர்சித்து பேசியபோது அவருக்கு சப்போர்ட் செய்து பேசினார். அவரை சந்தித்து அடிக்கடி ஆலோசனை நடத்தினார்.

எனவே தொடர்ந்து பிரச்னை ஏற்படுத்தி வந்ததால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானார். எடுத்த பிறகும் உள்கட்சி பிரச்னைகளை தொடர்ந்து பொதுவெளியில் பேசிவருகிறார்.

எல்லாவற்றுக்கும் மேல் அவரது தலைவர் ஆன ப சிதம்பரத்தை சந்தித்து பேசிய பிறகும் உள்கட்சி பிரச்னைகளை பேசி வருகிறார்.

ப சிதம்பரம் தனது ட்விட்டரில் தான் தியாகராஜன் பேசியதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் மாநில தலைவர் அழகிரியை சந்தித்து வருத்தம் தெரிவிக்க அறிவுறித்தியதாகவும் சொல்லிய பிறகும் வருத்தம் தெரிவிக்காமல் பேட்டி கொடுக்கிறார்.

ரஜினிகாந்த் 200% கட்சி ஆரம்பிப்பது உறுதி எனவும் போட்டி ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும்தான் இருக்கும் எனவும் சொல்லும் அளவு தியாகராஜன் சென்று விட்டார்.

                       எனவே ரஜினி தர்பார் படத்தை முடித்து விட்டு கட்சி ஆரம்பிக்கும்போது அதில் கொள்கை பரப்பு செயலாளர் ஆக தியாகராஜன் முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது. 

அங்காவது உறுதியாக நிற்கட்டும். தியாகராஜன், மணியன், போன்றோர் ரஜினி எப்போது கட்சி  ஆரம்பிப்பார் என்று இலவு காத்த கிளியாக காத்து இருக்கின்றார்கள்.

பாஜக வலையில் விழுந்த ரஜினி தனியாக நிற்பது போல பாவனை செய்து கூட்டத்தை கூட்டி காவிக்கட்சி தீட்டும் திட்டத்திற்கு துணை போவார் என்பதும் அதற்கு இன்றைய ஆளும் அதிமுகவும் துணை போகும் என்பதும்தான் எல்லாராலும் எதிர்பார்க்கப்படும் எதிர்கால அரசியல்.

அதில் பங்கேற்க தன்னை தயார் செய்துகொள்ளும் தியாகராஜன் காங்கிரஸ் தலைவர் அழகிரியை குற்றம் சாட்டி அவரை ப சிதம்பரத்திற்கு எதிரானவர் போல சித்திரிக்க முயல்வது அவர் சமாதானமாக போவதற்கு அறிகுறியாக தெரியவில்லை. காரைக்குடி தொகுதிக்கு கார்த்தி சிதம்பரத்திற்கு பதிலாக நாசே ராமச்சந்திரனை அழகிரி  பரிந்துரை செய்தார் என்று அவரை சிதம்பரத்திற்கு எதிரானவர் ஆக சித்தரிக்கிறார்.

இன்றோ நாளையோ தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து அழகிரியை  தியாகராஜன் சந்திக்காமல போனால் ரஜினியின் தர்பார் கட்சியில் தியாகராஜன் கொ ப செ தான் என்பது உறுதியாகி விடும்.

பாராளுமன்றத்தில் பொளந்து கட்டிய திருமாவளவன் ?!

தமிழ்நாடு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தமிழில் பிரமாணம் செய்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.

திருமாவளவன் தனது முதல்  பேச்சை தமிழில் பேசி பாராட்டுதல்களை பெற்றார்.    பாராட்டு தமிழில் பேசியதற்காக மட்டுமல்ல. காவிரிப் பிரச்னை, தண்ணீர் பற்றாக்குறை, இலங்கையை நட்பு நாடு என்று பாராட்டுவது, இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு குற்றங்கள் போன்று தமிழர்களின் மனத்தில் நிறைந்திருந்த குமுறல்களை வார்த்தைகளால் கொட்டினார்.

சபாநாயகர் இது ரொம்ப சென்சிடிவ் மேட்டர் என்று எச்சரித்த போதும் இடைவிடாமல் தனது கருத்தை  பதிவு செய்தார்.

ஒரு கட்டத்தில் தமிழர்களின் உணர்வுகளை நீங்கள் புறக்கணித்தால் நாங்கள் இந்தியர்கள் அல்ல என்று சொல்லும் நிலைக்கு ஆளாக்கி விடாதீர்கள் என்று  பேசியபோது பாஜக உறுப்பினர்கள் பெருத்த ஆட்சேபனைகளை எழுப்பினார்கள்.

இதனால்தான் தான் சிதம்பரம் தொகுதி தேர்தல் முடிவுகள் தாமதப்படுத்தப் பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் தமிழ் ஊடகங்கள் திருமாவின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்காதது ஏன் என்ற கேள்வியும்  எழுகிறது.

தொடர்ந்து திருமா தமிழிலேயே பாராளுமன்றத்தில் பேசவேண்டும்.

அவர் மட்டுமல்ல அனைத்து தமிழ் உறுப்பினர்களும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக கலந்துபேச வேண்டும் அல்லது தமிழில் மட்டம் பேச வேண்டும். மொழிபெயர்ப்பு வசதி இருக்கும்போது எல்லாரும் அவரவர் மொழியில் கேட்டுக் கொள்ளுவார்கள்.

மொழிபெயர்ப்பு வசதி இருப்பதால் தமிழில் பேசுவதால் எந்த குறைபாடும் வரப்போவதில்லை.

திருமா தமிழில் பேசிய அளவு ஆங்கிலத்தில் உணர்ச்சி பூர்ப்வமாக பேசியிருக்க முடியாது.

பிரதமர் மோடி டி20 மாநாட்டில் இந்தியில் பேசுகிறார். பிறநாட்டு தலைவர்களுடன் இந்தியில் பேசுகிறார். அந்த உரைகள் மொழி பெயர்த்து தரப் படுவதால் எந்த தகவல் பரிமாற்ற பிரச்னையும் ஏற்படுவது இல்லை.

அதே போல் எல்லா மாநில உறுப்பினர்களும் அவரவர் தாய் மொழியில் பேசினால் எந்த தவறும் இல்லை.

தமிழ்நாடு வழிகாட்டி எல்லாரும் அவரவர் தாய்மொழியில் பேசினால் நல்லதுதானே?

திருமாவளவன் தமிழர்களின் பெருமிதம்!!

அதிமுகவை இயக்குவது பாஜக; திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் ???!!

ஒருவழியாக அமமுக வில் இருந்து விரட்டப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் அறிவாலயத்தில் முக ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

திரும்பவும் அதிமுகவுக்கு போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கும் ஒபிஎஸ் கும் இருக்கும் பகை காரணமாக வேறு எங்கும் போக முடியாத நிலையில் திமுகவில் ஐக்கியமானாலும் அதற்கு ஒரு தத்துவ விளக்கம் கொடுத்துள்ளார் அவர்.

அதாவது அதிமுகவை  இயக்குவது பாஜக என்றும் எனவே தன்மானம் இழந்து  அங்கே செல்ல மனம் இடம் தரவில்லை என்றும் கூறுகிறார்.

கட்சி மாறும் எவரும் ஏதாவது  சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனால் இவர் சொல்வதில் உண்மை  இருக்கிறதா என்றால் ஒரு பாதி உண்மைதான். அதாவது அதிமுக வை இயக்குவது பாஜக தான். ஆனால் அதற்காகத்தான் நான் அங்கே செல்ல வில்லை என்று  தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது ஆய்வுக்குரியது.

ஆட்சியில் இருப்பதால்தான் இன்று அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது.   ஆட்சியில்  இல்லாமல் அதிமுக என்ற கட்சி வலுவான தலைமை  இல்லாமல் இயங்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது.

ஒபிஎஸ் – இபிஎஸ் என்ற இரட்டை தலைமை அதிமுகவை ஆட்சியில் இல்லாமல் இயக்க முடியுமா? அந்த ஆட்சியை பாஜக உதவியில்லாமல் தக்க வைத்திருக்க  முடியுமா? 

அந்தக் காரணத்தினால்தால் மக்கள் அவர்களை நிராகரித்தார்கள்.

ஐந்து தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்தாலும் 13 தொகுதிகளில் இருந்ததை பறி கொடுத்து விட்டார்களே?

எப்படியோ அடிமைகள் கூடாரம் காலியானால் சரி!!!

பார்ப்பன எதிர்ப்பாளர்கள் சாரங்கியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்??!!

ஓடிசாவின் பிரதாப் சந்திர சாரங்கி முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்டார். பார்ப்பனர் என்பது கூடுதல் செய்தி.

64 வயதில் மத்திய அமைச்சர் ஆனது மட்டும் இவர் சாதனை அல்ல. திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்க்கையை சமுதாய முன்னேற்றத்திற்கு தன்னை  அர்ப்பணித்துக் கொண்டவர். ஆங்கிலம், இந்தி சமஸ்கிருதம், ஓடியா ஆகிய நான்கு மொழிகளில் பேசுபவர். சொத்து சேர்க்காதவர். குடிசையில் வசிப்பவர். ஜோல்னா பையிலேயே தன் தேவைகளை அடக்கி கொள்கிறவர். சைக்கிளையே தன் வாகனமாக வைத்திருப்பவர். சுயேச்சையாகவே நீலகிரி தொகுதியில் வெற்றி  பெற்றவர். இதுபோல் பாராட்டத் தக்க குண நலன்களை கொண்டிருப்பதால் எல்லாராலும் பாராட்டப்படுகிறவர்.

ஆனால் இவர் எந்த சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறார் என்று பார்த்தால் இந்து  சனாதன தர்மத்தை பரப்புவதை தன் வாழ்நாள் கடைமையாக வைத்திருப்பவர்.

ஓடிசாவில் வசித்தாலும் தன் தாய் மொழியாக சமஸ்கிரிதத்தையே பாவிப்பவர்.    ஓடியா தெரிந்திருந்தும் பாராளுமன்ற உறுப்பினராக சமஸ்கிருதத்தில் பதவி  ஏற்றுக் கொண்டார். எங்கு வாழ்ந்தாலும் பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்தை மட்டுமே தங்கள் தாய் மொழியாக கருதுவார்கள். தனது முதல் பாராளுமன்ற உரையையும் இந்தியிலேயே பேசினாலும் ஆங்காங்கு சமஸ்கிருதம், ஓடியா, வங்காளி, ஆங்கிலம் என்று தெளித்து பேசியிருக்கிறார்.

கிரஹாம் ஸ்டைன் என்ற கிறிஸ்தவ பாதிரி மனைவி குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இவர் பெயரும் அடிபட்டாலும் வேறு சிலர்தான் தண்டிக்கப்பட்டார்கள். மதமாற்ற எதிர்ப்பு இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்.

சாரங்கி பெருமைக்குரிய ஸ்வயம் சேவகர் என்று அதன் சங்க சாலக் பெருமிதப்பட்டுக் கொள்வதில் வியப்பு  ஒன்றும் இல்லை. ஏன் என்றால் ஆர்எஸ்எஸ் இயக்கம் பார்ப்பனர்களுக்கு சலுகை காட்டுவதில் என்ன வியப்பு? அது அவர்கள் இயக்கம்.

அதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் சுய தேவைகளை புறக்கணித்து துறந்து பார்ப்பனீயத்தை கட்டிக் காப்பதில் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறவர்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருக்கும் சேவகர்கள் தன் நலம் கருதாதாவ்ர்கள் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அவர்கள் தங்கள் இனத்துக்காக பாடுபடுகிறார்கள். அதுதான் வேறுபாடு. மற்றவர்களை தங்கள் இனத்துக்காக இனத்தின் மேலாதிக்கத்துக்காக உழைக்கசெய்பவர்கள். அத்துடன் அதுதான் தங்கள் கடமை என்று நம்பச்செய்பவர்கள். 

பிராமணீயம் தழைப்பதன் ரகசியம் அவர்களிலே ஒரு பகுதியினர் தங்கள் இனப் பாதுகாப்பிற்காக தங்களை இழந்து உழைப்பதனால்தான். 

எந்த இனத்தில் இப்படி தங்களை இழந்து உழைப்பவர்கள் இருக்கிறார்கள்.

யூத இனமே கூட இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து கொள்ளவில்லை. ஆனாலும் உலகில் யூதர்களும் பார்ப்பனர்களும் தான் தங்கள் இன பாதுகாப்பை கடமை என கருதி உழைப்பவர்கள்.

ஏன் இவரை பார்ப்பனர் என்று அடையாளபடுத்துகிறீர்கள் என்றால் அவர் அதன் பிரதிநிதியாக செயல்படுகிறாரே ?

சுயமரியாதை, சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமத்துவம், சமநீதி, மத சுதந்திரம், மத சார்பின்மை போன்ற எதிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை.  எப்படி பாராட்டுவது? 

அதே நேரத்தில் மற்றவர்கள் சாரங்கியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது என்பதையும் பொதுமேடை பதிவு செய்கிறது.

ராஜ்ய சபா தேர்தலில் பாஜக மோசடிக்கு துணை போகும் தேர்தல் கமிஷன் ??!!

குஜராத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அமித்ஷாவும் ஸ்மிருதி இரானியும்.

இருவரும் இப்போது மக்களவைக்கு ஒரே சமயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள். இருவரது இடங்களும் ஒரே நேரத்தில் ராஜ்ய சபாவில் காலியாகின்றன.

பாஜகவுக்கு 100 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரசுக்கு 71 சட்டமன்ற உறுப்பினர்களும் இருப்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் பாஜக சார்பில் ஒருவரும் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

இங்கேதான் பாஜகவின் சதி அரங்கேறுகிறது. இரண்டு உறுப்பினர் காலியாக உள்ள இடங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தினால் இரண்டு இடங்களிலும் பாஜக  வென்று இரண்டு பேர் ராஜ்ய சபா செல்வார்கள். காங்கிரசுக்கு வாய்ப்பு பறி போகும்.

பாஜக திட்டமிடலாம். அதற்கு தேர்தல் கமிஷன் துணை போகலாமா? இதுதான் கேள்வி!

தேர்தல் கமிஷன் பாஜக வின் சதிக்கு துணை போகிற வகையில் ஜூன் 15 ல் இரண்டு காலியிடங்களையும் தனியான இடங்கள் போல ஒரு அறிவிப்பை வெளியிட்டது.   அதன்படி தேர்தலை தனித்தனியாக நடத்த முடியும்.

இந்த அறிவிப்பை எதிர்த்து காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் பரேஷ்பாய் தனனி என்பவர் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்.

அங்கேயும் தனது நிலைப்பாடு சரியே என்று தேர்தல் கமிஷன் வாதிடுகிறது. உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்று பார்க்கலாம். விடுமுறை காலம் முடிந்து இது பற்றி இறுதி உத்தரவு கிடைக்கலாம்.

அதிகாரம் கிடைத்தால் எப்படியெல்லாம் பாஜக விதிமுறைகளை சின்னா பின்னப்படுத்தும் என்பதற்கு இது ஒரு சிறிய சான்று.

கமிஷனர் உயிருக்கு ஆபத்து என தேர்தல் கமிஷன் கொடுத்த பதில் ?!

மோடியும் அமித் ஷாவும் தேர்தல் நேரத்தில் பேசிய பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் முன்பு மனுக்கள் இருந்தன.

அவற்றில் தலைமை கமிஷனர் சுனில் அரோராவும் சுஷில் சந்திராவும் நடவடிக்கை தேவை இல்லை என்றும் அசோக் லவசா மட்டும் மாறுபட்டும் உத்தரவிட்டு இருந்தனர்.

அதில் லவசா வின் குறிப்பு அல்லது கருத்து என்ன என்று தகவல் அறியும் உரிமை  சட்டத்தில் கேட்டதற்கு அதை தரக்கூடாத தகவல் என்றும் அதற்கான காரணம் கொடுத்தால் ஒருவரது உயிருக்கு ஆபத்து அல்லது நபர் பாதுகாப்பின்மை ஏற்படலாம் என்றும் பதில் கொடுத்துள்ளது தேர்தல் கமிஷன்.

அப்படி என்ன லவசா குறிப்பு எழுதினார் என்பதை உச்ச நீதிமன்றம் சென்றுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் தேர்தல் கமிஷனர் உயிருக்கே ஆபத்து என்னும் அளவில்தான் அங்கே நிலைமை இருக்கிறது என்றால் தேர்தல் ஆணையம் எப்படி நடுநிலையாக இயங்கும் என்ற சந்தேகம் எழுகிறது அல்லவா?

லவசாவின் குறிப்பு ஆவணமாக இருக்கும் எனவும் ஆனால் ஆணையில் ஒரு பகுதியாக இருக்காது என்றும் தேர்தல் கமிஷன் வினோதமான உத்தரவை பிறப்பித்தது நினைவில் இருக்கலாம். 

எல்லாம் மேலே உள்ளவர்களுக்குத்தான் வெளிச்சம் !