Home Blog Page 34

100 கோடி சொத்து, 5.5 கோடி கடனுக்கு ஏலம்? விஜயகாந்த் நிலைமை உண்மையா??!!

100 கோடி சொத்து வைத்திருப்பவர்கள் தங்களின் 5.5 கோடி கடனுக்கு சொத்தை ஏலம் போக விட்டு விட மாட்டார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் அது விஜயகாந்த் விஷயத்தில் நடக்கும்போது சந்தேகத்துக்கு உள்ளாகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் நூறு கோடி இருநூறு கோடி வாங்கி விட்டார்கள் என்று பிரேமலதா மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் இப்போது தான் ஒரு தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்த நேரத்தில் சொத்தை ஏல அறிவிப்பு வரும்வரை விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பார்களா என்ற கேள்வி எழுவது இயல்புதானே.

சிலர் இது ஒரு நாடகம் என்கிறார்கள். அதற்கு காரணம் வேண்டுமே? சம்பத்தப் பட்டவர்களுக்கு மட்டுமே அது தெரியும்.

நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம் என்று பிரேமலதா கூறுகிறார். ஆனால் இது கட்சிக்காரர்களை சோர்வடையச் செய்யும் என்பதை அவர் உணர்ந்திருகிறாரா அல்லது சோர்வடைய விடும் என்று விரும்புகிறாரா என்பதும் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் இனி அரசியல் கட்சிகளில் நடக்கும் எந்த நிகழ்வுகளிலும் பாஜக சம்பத்தப்படாமல் இருக்காது என்பதனால் இப்படியெல்லாம் சிலர் சிந்திக்கிறார்கள். 

தெலுகு தேசம் கட்சியை பாஜக எப்படியெல்லாம் சிதற அடித்திக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோமே?

சந்திரபாபு நாயுடு வெளிநாடு சென்ற நேரம் பார்த்து அவரது கட்சியின் மூத்த தலைவர்களும் ராஜ்ய சபா உறுப்பினர்களும் ஆன நான்கு பேரை பாஜகவில் இணைத்துக் கொண்டுவிட்டார்கள்.

புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் தெலுகு தேசம் கட்சிக்காரர்கள்.

பாஜக-வின் ஒரே நாடு ஒரே கட்சி லட்சியத்தில் விஜயகாந்தின் தேமுதிக சேதாரம் அடையாமல் இருந்தால் சரி!

தண்ணீர் பஞ்சம்; சென்னையை விட்டு மக்கள் எங்கே போவார்கள்?

தண்ணீர் பஞ்சம் சென்னையில் தலைவிரித்து ஆடுகிறது.

பத்தாயிரம் லாரிகள் தண்ணீர் கொண்டு வந்து கொட்டினாலும் மக்கள் தண்ணீருக்கு அலைகிறார்கள்.

அரசு என்ன செய்கிறது என்று உயர் நீதிமன்றம் கேட்கிறது. பதில்தான் கிடைக்கவில்லை.

புறநகர் பகுதிகளில் இருந்து தனியார் தண்ணீர் கொண்டுவரும்போது அரசால் ஏன் முடியவில்லை என்ற கேள்விக்கு விடை இல்லை.

ஒருவேளை தனியாரை  ஊக்குவிக்க அரசு சும்மா இருக்கிறதா? பருவமழை வரட்டும் என்று பொறுமையாக காத்திருக்கிறது அரசு என்றால் அப்படி ஒரு அரசு எதற்கு என்ற கேள்வி எழுகிறதே?

எதுவும் செய்யாமல் இருப்பதற்கு அரசு எதற்கு? கேரள அரசு கொடுப்பதாக சொன்ன தண்ணீர் போதாது என்பதிருக்கட்டும். ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.?  கொடுத்தால் தினமும் கொடுங்கள் இல்லாவிட்டால் வேண்டாம் என்பது என்ன கொள்கை? தினமும் கொடுங்கள் என்று இப்போது கடிதம் கொடுக்கப் போகிறார்களாம்.

சென்னையில் இருக்கும் நான்கு ஏரிகளும் முறைப்படி தூர் வாரப்பட்டிருந்தால் சென்னைக்கு தேவைப்படும் ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீரும் அங்கிருந்தே கிடைத்திருக்கும் என்கிறார்கள். ஏன் தூர் வாரவில்லை என்பதற்கும் எந்த பதிலும் இல்லை.

2020ம் ஆண்டில் 21 பெரு நகரங்களில் தண்ணீர் இருக்காது என்று மத்திய நிதி ஆயோக் அமைப்பு அறிவிக்கிறது. அந்த நிலை இப்போதே துவங்க ஆரம்பித்து விட்டதா?

எப்படி இருந்தாலும் ஆளும் கட்சி தனது தோல்வியை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

மீண்டும் முத்தலாக் தடை சட்ட மசோதா; இவர்களுக்கு வேறு வேலையே கிடையாதா??!!

முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் வழக்கம் சட்டப்படி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி விட்டது.

ஆனால் அப்படி முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முஸ்லிம்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை தரும் பாஜக வின் சட்டத்தை தான் எல்லாரும் எதிர்க்கிறார்கள்.

இது முஸ்லிம் பெண்கள் மீதான அக்கரையில் செய்யும் நடவடிக்கை அல்ல.    இஸ்லாத்தின் சட்டத்தின் மீது கை வைக்க வேண்டும். அவர்களை அச்சத்தில் ஆழத்த வேண்டும். இதுதான் பாஜக அரசின் திட்டமா?

இது நாட்டுக்கு நல்லதா? இந்து திருமண சட்டப்படி மனைவிகளை கைவிடும் கணவர்களுக்கு ஓராண்டு சிறை என்று இருக்கும்போது முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் மூன்றாண்டு சிறை என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த சட்டம் ராஜ்ய சபையில் முன்பு  நிறைவேறாமல் காலாவதி ஆனபடியால் இப்போது மீண்டும் அதே சட்டத்தை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இதைத்தவிர இவர்களுக்கு சிந்திக்க செயல்பட வேறு பிரச்னைகளே இல்லையா ?

ஒரு சிவில் பிரச்னையை கிரிமினல் ஆக்கும் வேண்டாத வேலை!!

இன்று சர்வதேச யோகா தினம்; தமிழரின் பங்கும் உண்டு !!!

இன்று சர்வதேச யோகா தினம் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்து இருக்கிறது.

எல்லா நாடுகளிலும் யோகா பரவியிருக்கிறது.

இதற்கு மத சாயம் பூசக் கூடாது. யோகாவிற்கு மதமில்லை. இது ஏதோ இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமானது போல பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது.

பதஞ்சலி யோகம் தந்த முனிவரின் காலம் கிமு 1ம் நூற்றாண்டு. அதற்கும் முன்பே யோகக் கலை இருந்திருக்கிறது.

திபெத்திய புத்த பிட்சுக்கள் கடுமையான யோகா பயிற்சியாளர்கள். அவர்களால் எத்தகைய உறைபனி நிலையிலும் சாதரணமாக வாழ முடியும். உடைகளை தங்கள் உடற்சூட்டினாலேயே காய வைத்துக் கொள்வார்களாம். இத்தகைய பயிற்சிக்கும் மதத்துக்கும் என்ன தொடர்பு?

தமிழர் சமயம் நூலில் கண்டவாறு “ஆதி தமிழர் காலத்தில் சித்தர்கள் யோகம் பயின்றவர்கள். அவர்கள் அதை ஓகம் என்று அழைத்தார்கள். இரசவாதம் பயின்றவர்கள் அவர்கள். காய கற்பத்தின் துணை கொண்டு மூச்சினை அடக்கி அதனால் ஏற்படும் வெப்பத்தினால் உடம்பின் சத்தை அமிர்தமயமாக்குதல், உடம்பை இலேசாக்குதல், கனமாக்குதல், கூடு விட்டு கூடு பாய்தல் முதலிய அருந்தொழில்கள் யோக முயற்சியின் பயனாகும். யோக முயற்சியை தமிழர்கள் தவம் என்ற சொல்லாற் குறிப்பித்தனர்.

தவத்தினால் வேண்டிய வேண்டியாங் கெய்துப எனவும் கூற்றங் குதித்தலுமாகும் எனவும் ஆசிரியர் திருவள்ளுவர் கூறியது காண்க.

ஏற்றி யிறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப்  பிடிக்கும் கணக்கறிவாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக் கூற்றை உதைக்குங் குறியது வரமே என்று திருமூலர் கூறியது காண்க. ”

உடற்பயிற்சி என்பதைத் தாண்டி மனம் தூய்மைப்படுவதே யோகம் எனலாம்.

பிரதமர் மோடி முதல் எல்லா மாநிலங்களிலும் பாஜக வினர் முன்னெடுப்பதால் அது அவர்களுக்கு சொந்தம் என்று எண்ணாமல் எல்லாரும் தினமும் யோகா பயிற்சி செய்வதே நலம் பயக்கும்.

நமக்கு சொந்தமானதை நாம் மறந்ததை மீண்டும் நினைவில் கொண்டு பயிற்சியை தொடர்வோம்.

அச்சமூட்டும் மோடியின் அடுத்த ஐந்து ஆண்டுகள்? குடியரசுத் தலைவர் உரையே சான்று!!

சொல்வது ஒன்று செய்வது வேறு என்பதுவே மோடியின் தாரக மந்திரம். 

கடந்த ஐந்து ஆண்டுகளிலும் மோடி இதைத்தான் செய்தார்.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை வெளிக்கொணருவேன் என்பதுதான் மோடியின் தொடக்க உறுதிமொழி.

எல்லாருக்கும் பதினைந்து லட்சம் தருவேன் என்பதை மறந்து விடுவோம். என்ன ஆயிற்று அந்த முயற்சி என்பதை யாவது பொறுப்புடன் சொன்னாரா? கடைசி வரையில் தனது சாதனை பட்டியலில் அதை சொல்லவே இல்லையே?

இந்த ஆண்டு மட்டும் காஷ்மீரில் நமது ராணுவ வீரர்கள் 74 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நம்மால் தடுக்க முடியவில்லையே?

விவசாயிகளுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்துவோம் என்கிறார் மோடி. முழுமையாக முடியுமா?

ஜிஎஸ்டி கொண்டு வந்து சிறு வியாபாரிகளை ஒழித்து விட்டு அவர்களுக்கு பென்ஷன் என்பது நல்ல திட்டமாம்.

அதேபோல் விவசாயிகளுக்கு 2022-க்குள் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை என்பது கனவாகவே போய்விடும் போல் இருக்கிறது. பாசனத்திற்கு தண்ணீர் தராமல் எப்படி விவசாயம் செய்வார்கள்?

வேளாண் பொருளாதார வளர்ச்சி ஆண்டிற்கு 10.5% இருந்தால்தான் அது சாத்தியம் . இப்போது இருக்கும் வெறும் 2.9% வளர்ச்சியை கொண்டு அதை எப்படி சாதிப்பீர்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

2030 ஆண்டில் நாட்டின் 40% மக்களுக்கு குடி தண்ணீரே இருக்காது என்று நிதி ஆயாக் சொல்கிறது. 21 பெருநகரங்களும் குடி தண்ணீர் இல்லாமல் போகும் என்று வேறு பயமுறுத்துகிறது. என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் அச்சத்தைப் போக்க?

அதேபோல் புதிய கல்வித் திட்டம் என்பது வேறு உள்நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கும் உரிய பதில் இல்லை.    கல்விக்கு வெறும் 4.3% பட்ஜெட்டில் நிதி ஒதுக்குபவர்களால் எதையும் சாதிக்க முடியாது.

இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளையும் செயலற்றதாக்கி விட்டு அல்லது தனது ஆதரவு கட்சிகளாக மாற்றி விட்டு சீனாவில் எப்படி கம்யுனிஸ்டு கட்சி மட்டுமே இருக்கிறதோ அப்படி இதியாவில் பாஜக மட்டுமே கட்சி என்ற நிலையை உருவாக்குவதே மோடியின் லட்சியமாக இருக்குமோ என்ற அச்சம் எல்லாருக்கும் வந்து விட்டது.

நேற்று சந்திரபாபு நாயுடுவின் தளபதிகளாக இருந்த ராஜ்ய சபா உறுப்பினர்கள்  நான்கு பேரை சத்தமில்லாமல் பாஜக தனக்குள் இணைத்துக் கொண்டது. இது பலருக்கும் விடப்பட்டிருக்கும் சமிக்ஞை. யார் வந்தாலும் காப்பாற்றப்படுவீர்கள் என்பதே அந்த சமிக்ஞை.

கோவாவிலும் வட கிழக்கு மாநிலங்கள் பலவற்றிலும் பாஜக செயல்படுத்திய கட்சி தாவல்களை நினைத்துப் பார்த்தால் இவர்களிடம் ஜனநாயகம் என்ன பாடு படப் போகிறதோ என்ற அச்சம் தான் எழுகிறது.

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் விவசாயத்தை அழித்து விடும் என்றாலும் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது நிறைவேற்றுவதில்.

பெருமுதலாளிகள்பாடு தான் கொண்டாட்டமாக இருக்கும்.

இன்னும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மோடி இந்தியாவை ஒரு வழியாக்கி விடுவார் என்ற அச்சத்தில் முகாந்திரம் இருக்கிறதா இல்லையா?   

அச்சத்தை போக்க ஏதாவது செய்யட்டுமே?!!வரவேற்போம்??!

சிவி சண்முகத்தை அவமதித்த பாஜக தலைமை??!!

எவ்வளவு அடித்தாலும் தாங்குவாண்டா என்ற வடிவேலுவின் காமெடியை மிஞ்சி விட்டது அதிமுகவை அவமானப்படுத்தும் பாஜகவின் செயல்.

துணை முதல்வர் ஒபிஎஸ்-ஐ பார்க்க முடியாது என்று வாசலில் காத்திருந்தவரை திருப்பி அனுப்பிய நிர்மலா சீதாராமன் இன்று நிதி அமைச்சர். கேட்டதற்கு ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்று அண்ணா சொன்னார் என்று தத்துவம் பேசினார் ஒபிஎஸ். அத்தோடு சரி. சாதாரண ராஜ்ய சபா எம்பி யான மைத்ரேயனை சந்தித்த நிர்மலா தன்னை அவமானப்படுத்தியதை  ஒபிஎஸ் எப்படி விழுங்கினாரோ அப்படியே இன்று சட்ட அமைச்சர் சிவி சண்முகமும் ராஜ்ய சபா உறுப்பினர் நவநீதகிரிஷ்ணனும் விழுங்கி இருக்கிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய பாஜக பாதி அரசியல் கட்சிகள் புறக்கணித்த நிலையில் வந்திருந்த கட்சிகளை அரவணைக்காமல் குறிப்பாக அதிமுகவை அவமதிக்க வேண்டிய அவசியம் என்ன?

இது என்ன அரசு சம்பந்தப்பட்ட கூட்டமா? விதிமுறைகள் இடம் தர வில்லை என கூற?    

அதிமுகவின் சார்பாக இருவரும் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்த அதிமுக தலைமையும் இந்த அவமானத்தை கண்டு கொள்ளவில்லை.

மீசையில் மண் ஒட்டாத குறையாக அமைச்சர் ஜெயக்குமார் இங்கே வியாக்கியானம் தருகிறார் அது ஒன்றும் பெரிதல்ல சாதாரணமான ஒன்றுதான் என்று. திமுகவின் டிஅர் பாலு இருந்தும் கலந்து கொள்ளவில்லை என்றும் சொல்கிறார். திமுக புறக்கணித்து விட்டது. எனவே அனுமதிக்கவில்லை என்ற பிரச்னை எழவில்லை.

ஒரு கூட்டணி கட்சியை இப்படி அவமானப்படுத்தலாமா என்றால் ஆடிட்டர் குருமூர்த்தி ஆர் கே நகரில் அதிமுக தோற்றபோது விமர்சித்த ‘ஆண்மையற்றவர்கள்’ என்ற ஆணவக் குரல் தான் நினைவுக்கு வருகிறது.

என்னதான் இருந்தாலும் தமிழ்நாட்டு அமைச்சரை அவமதித்தது நம்மையே அவமானப்படுத்தியது போல் இருக்கிறது.

கிராமக் கோவில்களை அறநிலையத்துறை கைப்பற்ற நடந்த முயற்சியை முறியடித்த 62 கிராம மக்கள்?!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் நாடு பகுதி 62 கிராமங்களை உள்ளடக்கியது.

அதன் காவல் தெய்வங்களாக ஏழை காத்த அம்மன், வல்லடிகாரர் கோவில் போன்றவை உள்ளன.

அவற்றை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த முயற்சி செய்தது.

இந்த முயற்சியை முறியடிக்க மக்கள் ஒன்றுசேர்ந்து போராட தீர்மானித்தனர்.

கடைகளை அடைத்து விட்டு ஊர்வலமாக சென்று மதுரை செல்ல தீர்மானித்தனர்.

பிரச்சனையை பெரிதாக்க விரும்பாத உதவி ஆணையர் எம்எல்ஏ மற்றும் காவல் துறை அதிகாரிகள்  அங்கே வந்து கையகப் படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் முன்பு போலவே கிராம மக்களே நிர்வகிக்கலாம் எனவும் தெரிவித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

கேள்வி; ஏன் அறநிலையத்துறை முன்பே மக்கள் கருத்தறிந்து நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது?  

யாரோ சொல்லி மக்களை கலந்து கொள்ளாமல் ஏன் இந்த முயற்சியில் இறங்க வேண்டும்.?

சமீபத்தில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மன் கோவில் நிர்வாகத்தையும் அற நிலையத் துறை கைப்பற்ற முயற்சி செய்தது.

கிராமக் கோவில்களை பொறுத்த வரை பாரம்பரியமாக நடைமுறையில் இருந்து வரும் வழக்கங்களை மாற்றம் செய்யாமல் இருப்பதே நல்லது. அப்படி ஏதேனும் புகார் வந்தால் மக்களை விசாரணை செய்து அதன் பின் முடிவெடுக்க வேண்டுமே தவிர அதிகாரிகள் தாங்களே முடிவு எடுப்பது சரியல்ல.

தமிழ் நடிகர்கள் சங்கமாக பெயர் மாற்றம் செய்யாமல் விஷால் வந்தாலென்ன, ஐசரி கணேஷ் வந்தாலென்ன?!!

ஆந்திர, மலையாள, கன்னட நடிகர் சங்கங்கள் எல்லாம் தங்கள் மாநில பெயர்களையே கொண்டிருக்க இங்கு மட்டும் எதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர்?

இதுவே தமிழர்களுக்கு அவமானம்.

பாரதிராஜா அவ்வப்போது குரல் கொடுக்கிறார். அதனை மறுப்போரும் இல்லை.  முயற்சிப்போரும் இல்லை.

இத்தனைக்கும் தமிழ் சினிமாவில் வேற்று மொழிக்காரர்களின் ஆதிக்கம்தான் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

தமிழ்நாட்டு கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் விரல் விட்டு எண்ணி  விடலாம்.

இதற்குமா இட ஒதுக்கீடு என்றால் ஏன் கூடாது என்பதே பதில்.

32 கோடி பட்ஜெட்டில் கட்ட வேண்டிய கட்டடத்திற்கு 18 கோடி செலவு செய்து விட்டு  மீதி 20 கோடி தேவை என்று அறிவித்து புது நிர்வாகிகளை தேர்ந்தேடுக்க ஒரு பொதுத்தேர்தலை விட மக்கள் கவனத்தை திருப்பி தமிழ்நாட்டையே திரும்ப பார்க்க வைத்து தேர்தல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் நடிகர் சங்கத்தினர்.

இதில் சாதி, அரசியல், பணம் என்று எல்லாம் விளையாடுகிறது.

ஒன்று மட்டும் இல்லை. நேர்மை !!!

அது இரு தரப்பிடமும் இருந்திருந்தால் உட்கார்ந்து பேசி தேர்தல் நடைமுறையை நியாயமாக உருவாக்கி இருப்பார்கள். ஒருவரை ஒருவர் விழுங்கப் பார்ப்பதால் எழுந்த போட்டி இது..

சரி. வலு உள்ளவர்கள் வெற்றி பெற்று வாருங்கள்.

யார் வந்தாலும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ் நடிகர்கள் சங்கம் என்றோ தமிழ்நாட்டு நடிகர்கள் சங்கம் என்றோ பெயர் மாற்றம் செய்து இந்த மண்ணுக்கு விசுவாசம் காட்டுங்கள்.

வெகு மக்கள் குரல் கொடுத்தால்தான் மாற்றுவீர்களா??!!

குருமூர்த்தியின் ஆசை அதிமுக மீண்டும் எழவேண்டுமாம்? ஆடுகளின் மீது ஓநாய்க்கு எவ்வளவு அக்கறை??!!

ஆடிட்டர் குருமூர்த்தி அதிமுக உறுப்பினர் அல்ல.

அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவாளர். சுதேசி இயக்கத்தின் நிர்வாகியாக  இருந்தவர். இப்போது அது இயங்குகிறதா என்பது தெரியவில்லை. உலக மயமாக்கலில் அது கரைந்து விட்டதாகவே தெரிகிறது.

பாஜக ஆதரவாளர் என்பதால் அவருக்கு ரிசெர்வ் வங்கியின் இயக்குனர்களில் ஒருவராக பொறுப்பு இருக்கிறது.

அதிமுகவின் தோல்வியை விட திமுகவின் வெற்றி குருமூர்த்தியி ரொம்பவும் பாதித்திருக்கிறது. அதனால் எப்படியாவது அதிமுக மீண்டும் எழ வேண்டும் என்று விரும்புகிறார். அது அதிமுக பாசத்தினால் அல்ல. அதிமுக உடைந்து அதில் ஒரு பகுதி பாஜகவை நாளை தமிழ்நாட்டில் காலூன்ற வைக்க உதவும் என்பதால் எழுந்த ஆசை.

அதற்கு ஒபிஎஸ் போன்றோர் கைகொடுக்க தயாராக இருக்கிறார்கள். அவர் மகன் வந்தேமாதரம் ஜெய் ஹிந்த் என்று சொன்னவுடன் அத்தனை பாஜக தலைவர்களும் கைகொடுத்து பாராட்டினர்களே ?

நம்ம ஆள் என்று அடையாளம் கண்டு கொண்டு விட்டார்கள்.

பணத்தால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது என்பதை அதிமுக உணர வேண்டும் என்கிறார் குருமூர்த்தி. பணம் தான் தங்கள் பலம் என்பதை எல்லா அதிமுக தலைவர்களும் நம்புகிறார்கள். அதை விட்டால் அவர்களை ஒன்று சேர்க்கும் கொள்கைதான் என்ன? வெறும் திமுக எதிர்ப்பு மட்டுமா?

எம்ஜியார் திமுக எதிர்ப்பில் அதிமுக வை உருவாக்கினார் என்பது உண்மை தான்.  ஆனால் அதற்கும் மேல் அவர் திராவிட இயக்கத்தின் ஒரு கூறாக தன் கட்சியை வைத்திருந்தாரா இல்லையா? பெரியார் அண்ணா கொள்கைகளுக்கு எதிராக அவர் பேசியோ சிந்தித்தோ இருக்கிறாரா? கட்சியே அண்ணா பெயரில் இருக்கும்போது கொள்கையில் பெருத்த அளவில் அதிமுக -திமுக கட்சிகளுக்கு இடையில் என்ன வேறுபாடு?

தலைமை யார் என்பது மட்டுமே இரு கட்சிகளுக்கு இடையில் இருக்கும் அதிகபட்ச வேறுபாடு.

ஜெயலலிதா அம்மையார் கூட பெரியார் -அண்ணா பாதையை விட்டு விலகி கட்சியை கொண்டு செல்ல வில்லையே? தனக்கு இருந்த தனிப்பட்ட நம்பிக்கைகளை கட்சியின் மீது அதிகாரபூர்வமாக திணித்தாரா?

ஆனாலும் மறைமுகமாக ஜெயலலிதா கட்சியை பெரியார்-அண்ணா பாதையை விட்டு மெதுவாக நகர்த்திக் கொண்டு போனார். பிராமணீய எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்தார்.

குருமூர்த்தியின் எண்ணம் எல்லாம் அதிமுக தொண்டன் திமுக பக்கம் போய்விடக் கூடாது என்பதுதான்.

சொன்னாலும் சொல்லா விட்டாலும் அதிமுக தொண்டன் திராவிட இயக்க  தொண்டன்தான். ஒருக்காலும் பாஜக பக்கம் சிந்தித்துக் கூட பார்க்க மாட்டான்.

குருமூர்த்திகள் இலவு காத்த கிளிகளாக காத்திருக்க வேண்டியதுதான்.

பாஜகவின் அடுத்த ஆயுதம்; ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கட்சி ???!!!

ஆள வந்திருக்கும் பிரதமர் மோடி ஆட்சியை மேம்படுத்தும் வேலையை விட்டு விட்டு வேண்டாத வேலைகளில் கவனத்தை செலுத்தி பிரச்னைகளை திசை திருப்பும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.

அதில் ஒன்றுதான் ஒரேநாடு ஒரேதேர்தல் திட்டம்.

இது ஒன்றும் புதிதும் அல்ல.1983 தேர்தல் கமிஷன் பரிந்துரைத்து மீண்டும் 1999  வாஜ்பாய் அரசால் நியமிக்கப்பட்ட ஜீவன் ரெட்டி கமிஷன் பரிந்துரைத்த 170வது அறிக்கையில் சொல்லப்பட்டவைதான்.

ஆனால் அதில் உள்ள பல சிக்கல்களுக்கு விடை கிடைக்காத நிலையில்தான் அந்த பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டன.

இப்போது தூசி தட்டி அவற்றை மீண்டும் பரிசீலிக்க அவசியம் என்ன?

காங்கிரஸ் அல்லாத பாரதம் அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்த கட்சி பாஜக.

ஓரளவு அதை முடித்துவிட்டார்கள். தனி பெரும்பான்மை கிடைத்துவிட்டது.

கம்யுனிசம் ஆட்சி நடத்தும் சீனாவில் ஒரே கட்சிதான். அது கம்யுனிஸ்டு கட்சி.

அதேபோல் இந்து மதவாதம் ஆட்சி நடத்தும் இந்தியாவில் ஒரே கட்சிதான். அது பாஜக என்று ஆக்க திட்டம் இடுகிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

அரசியல் சட்டத்தை திருத்தாமல் ஒரே தேர்தல் முடியாது என்று பலரும் கருத்து சொல்லிவிட்டார்கள்.

1952, 1957, 1962, 1967 இந்த நான்கு ஆண்டுகளில்தான் பாராளுமன்றத்துக்கும் சட்ட மன்றங்களுக்கும் சேர்த்து தேர்தல்கள் நடைபெற்றன. அதற்குப் பிறகு எல்லாம் மாறி விட்டன.

பெரும்பான்மை இழந்த கட்சி ஆட்சியில் தொடர முடியாமல் போனால் சிறிது காலம் குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கலாம். பின்பு பொதுத்தேர்தல் நடத்தி தானே ஆக வேண்டும். பாராளுமன்ற தேர்தல் வரை குடி அரசுத் தலைவர் ஆட்சியை  நீடித்தால் அது ஜனநாயகமா ?

செலவினத்தை மிச்சப்படுத்த என்ற கேள்வியே தவறு. மக்களாட்சியை தேர்ந்து எடுக்க செலவு ஒரு தடையாக இருக்க முடியாது.

சர்வாதிகாரத்தை நோக்கி பாஜக அரசு பீடு நடை போடுகிறது. வெற்றி காண்பது மட்டும் அரிது. ஏன் என்றால் எந்த சர்வாதிகாரமும் நீடித்தது இல்லை.