Home Blog Page 36

காந்தியை இழிவுபடுத்தி கோட்சேயை பாராட்டிய பெண் ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்?!

மராட்டிய மாநில பெண் ஐஏஎஸ் அதிகாரி நிதி சவுத்திரி.

பாஜகவின் தலைவர்களும் இந்து மகா சபை தலைவர்களும் மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியது போதாது என்று இவரும் தனது த்விட்டார் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

‘மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாடப் படவுள்ளது. அவரது படத்தை ரூபாய் நோட்டில் இருந்து அகற்றுவதற்கு இதுதான் சரியான நேரம். அவரது சிலைகள் உலகம் முழுவதும் இருந்து அகற்றப் பட வேண்டும். அவரது பெயர் சூட்டப்பட்ட நிறுவனங்கள் சாலைகளுக்கு மறுபெயர் சூட்ட வேண்டும். இதுதான் நாம் அனைவரும் செய்யவேண்டிய முக்கிய கடமையாகும். 30.01.1948ல் கோட்சே செய்த செயலுக்காக (மகாத்மா காந்தி கொலை) அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’

இதைவிட கொடுமையாக ஒருவர் எழுத முடியுமா? அவர் எவ்வளவு அழுகிய மனம் கொண்டவராக இருந்தால் இப்படி எழுதியிருப்பார்.?

மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திரா அவுகத் போன்றவர்கள் அவரை பதவி நீக்கம் செய்ய வற்புறுத்தி  இருந்தனர்.

மாநிலத்தில் ஆளுவது பாஜக கூட்டணி ஆட்சி. எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.  அதிகபட்ச நடவடிக்கை இட மாற்றம். அதைத்தான் செய்தார்கள்.

கண்டனம் அதிகமானவுடன் தனது பதிவை நீக்கியவர் சொன்னது அதைவிட மோசம். நான் எனது மனதில் பட்ட கருத்தை தான் கூறியிருந்தேன். அது தவறாக உணரப்பட்டுள்ளது. நான் மகாத்மா காந்தி குறித்து அவதூறாக எதுவும் சொல்ல வில்லை என்று கூறியிருக்கிறார்.

பாஜக ஆட்சியில் காந்தி மீதான தாக்குதல் இன்னும் அதிகரிக்கும் என்றுதான்  தோன்றுகிறது.

சாத்வி பிரக்யா சிங்கின் கோட்சே தேசபக்தர் என்ற பேச்சைதான் மன்னிக்கப் போவதில்லை என்று பிரதமர் மோடி கூறியதெல்லாம் சும்மா.

அமைச்சர் வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூற தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு?!

அமைச்சர் வேலுமணி மீது பலவிதமான குற்றச்சாட்டுகளை அறப்போர் இயக்கம் சுமத்தியது.

அதில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் விதி முறைகளை மீறி ஒப்பந்தங்களை கொடுத்ததன் மூலம் பல கோடி ரூபாய்களை அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக அமைச்சர் மீது குற்றம் சுமத்தி இருந்தது.

அதற்காக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை கோரியும் ஒரு ரிட் மனுவும் தாக்கல் செய்திருந்தது அந்த இயக்கம்.

இந்நிலையில் தன் மீது குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது எனவும் தடை விதிக்கவும்  தனக்கு ஏற்பட்ட மான நட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் ஈடு கேட்டும் அமைச்சர் வேலுமணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அதன் விசாரணையில் இடைக்கால உத்தரவு எதையும் கொடுக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதனால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்தில் அந்த அமைப்பு  கொண்டு செல்ல தடை ஏதும் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருகிறது.

வழக்கின் இறுதி விசாரணையில் தான் அமைச்சருக்கு ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்பது தெரியும். அது இன்னும் பல வருடங்கள் ஆகும்.

மான் நட்ட வழக்குகளில் உண்மையை அல்லது அதற்கு முகாந்திரம் உள்ளதை , ஒரு சட்ட அமைப்பு விசாரிக்க கோருவதை என்று பல அம்சங்கள் இருந்தால் அவைகள் குற்றமாக கருதப்படாது என்பது சட்டம்.

ஆக அமைச்சர் தேர்ந்தெடுத்த மிரட்டல் வழிமுறை அவருக்கு கைகொடுக்கவில்லை.

விசாரணைக்கு பல வருடங்கள் ஆகும்.

வழக்கு போடாமலாவது இருந்திருக்கலாம்.

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பாளர்களுக்கு முன் ஜாமீன் கிடையாது; உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியா??!!

மும்பை உயர் நீதிமன்றத்தில் சிலர் ஜிஎஸ்டி வரி தொடர்பாக தாங்கள் கைது செய்யப்படலாம் என்று முன் ஜாமீன் கேட்டனர். அதை உயர் நீதிமன்றம் அனுமதித்து ஜாமீன் வழங்கியது.

ஏனெனில் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை ஏதும் பதியப்படா நிலையில் அவர்களுக்கு பிணை பெற உரிமை உள்ளது என்று உயர் நீதிமன்றம் கருதியது.

அதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் உச்ச நீதிமன்றம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் இருந்து வேறுபடுத்தப்பட்டு தனி வரைமுறைகளை கொண்டு இயங்குவதால் முதல் தகவல் அறிக்கை இல்லாமலேயே விசாரணை துவங்கவோ கைது செய்யவோ செய்யலாம் என்று தீர்ப்பு அளித்திருக்கிறது.

இது மத்திய அரசுக்கு மிகவும் சாதகமான தீர்ப்பு  என்பதில் சந்தேகம் இல்லை.

விசாரணை நடத்துவதிலும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதிலும் எந்த தவறும் இல்லை. ஆனால் தனி நடைமுறைகளை கொண்டிருந்தாலும் அதிலும் இயற்கை நீதி காக்கப்பட்டாக வேண்டும்.

எந்த விதிமுறையும் இயற்கை நீதிக்கு முரணாக அமைய முடியாது கூடாது.

தெலுங்கானா உயர் நீதிமன்றமும் சரக்கு சேவை வரி ஆணையருக்கு உள்ள உரிமைகளை உறுதிபடுத்தியுள்ளது.

ஆனால் எத்தகைய பொருளாதார குற்றத்தை செய்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய பிணை உரிமைகளை மறுப்பது இயற்கை நீதிக்கு உகந்ததல்ல.

இயந்திர வாக்கு எண்ணிக்கையும் பதிவான வாக்கு எண்ணிக்கையும் 373 எம் பி தொகுதிகளில் ஒத்துப்போகவில்லை ??!!

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஒரு தொகுதியில் ஐந்து வாக்குச் சாவடியில் பதிவாகும் ஒப்புகை வாக்கு எண்ணப்பட்டு சரிபார்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

நியாயமாக தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் முன்பே இது சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்க வேண்டும். கால தாமதம் ஆகும் என்பதால் முடிவுகளை வெளியிட்டு விட்டார்கள்.

இப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்களை ஆய்வு செய்து ஒரு தனியார்  இணைய தளம் ஒரு செய்தியை வெளியிட்டு உள்ளது.

அதன்படி நாடு முழுதும் 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை பதிவான வாக்கு எண்ணிக்கையுடன் ஒத்துப்போகவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விட கூடுதலாக 8000 – 15000 வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றன.

இது எப்படி சாத்தியம்?

எல்லா தொகுதிகளிலும் பாஜக லட்சக் கணக்கில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

சரத் பவார் கூறியது போல பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே அதற்கு முன் நடந்த மூன்று சட்ட மன்ற தேர்தல்களில் பாஜக தோற்றதா என்று கேட்டிருக்கிறார்.

வித்தியாசம் இருந்தாலே எங்கோ திட்டமிட்டதில் தவறு நடந்திருக்கிறது என்று பொருள்.

தேர்தல் ஆணையம்தான் இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் திமுக பெருவாரியான வெற்றி பெற்றிருக்கிறது என்ற கேள்வி எழலாம்.

அவர்களுக்கு தேவையான 303 இடங்களை தவிர வேறு எங்கும் என்ன நடந்தால் அவர்களுக்கு என்ன?

இருபது வாக்கு பதிவு இயந்திரங்களை காணவில்லை என்ற புகார் அப்படியே இருக்கிறது.

மொத்தத்தில் தேர்தல் ஆணையம் தான் தவறு நிகழவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதுவரை மக்களுக்கு  இருக்கும் தேர்தல் முடிவுகளின் மீதான சந்தேக கறை அழியாது.

சித்தா, ஆயுர்வேத படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாம்??!!

ஏற்கெனெவே எம்பிபிஎஸ், பல் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற விதியில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கேட்டு நம்மால் இயற்றப்பட்ட சட்டம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு சித்தா ஆய்ர்வேத படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று மீண்டும் சுற்றறிக்கை வந்துள்ளது.

கடந்து ஆண்டே இப்படி சுற்றறிக்கை வந்த போது முதல் அமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் கொண்ட குழுவினர் விவாதித்து மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதின் பேரில் சென்ற ஆண்டு நீட் அமுல்படுத்தப்படவில்லை.

இப்போது மீண்டும் சுற்றறிக்கை அனுப்புகிறார்கள் என்றால் இங்கே யாருக்கும்  எதிர்க்க துணிவில்லை என்பதுதான்.

அமைச்சர் விஜயபாஸ்கர் சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு விரைவில் முடிவெடுத்த அறிவிப்பதாக கூறுகிறார்.

எதிர்க்கிறோம் என்றோ நாங்களே தேர்வை நடத்தி மாணவர்களை சேர்ப்போம் என்றோ கூறவில்லை.

கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும்போது மாநில அரசு தன் அதிகாரத்தை பயன்படுத்த என்ன தடை?

காங்கிரஸ் அரசு வந்திருந்தால் கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க அனுமதி அளிப்போம் என்று கூறியிருந்தது .

இவர்கள் மாநில உரிமைகளை பறிப்பவர்கள். இவர்களிடம் நீதியை எதிர்பார்த்து காத்திருக்க முடியாது.

மாநில அரசு மாநில உரிமைகளை பாதுகாக்க தவறினால் மக்கள் எழுச்சியை தடுக்க முடியாது.

மாணவர்களுக்கு கத்தி விநியோகம் செய்த இந்து மகாசபையினர் ?!!

இந்து மகா சபையினர் வீர சவர்க்கார் பிறந்த நாளை கொண்டாடினார்கள்.

ஆக்ராவில் நடைபெற்ற விழாவில் இந்து மகாசபையினர் பத்து முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கத்திகளை வழங்கினார்கள்.

இந்து மகாசபை செய்தி தொடர்பாளர் அசோக் பாண்டே என்பவர் வீர சவர்காரின் கொள்கைகளை விவரித்து பேசினார்.

‘அரசியலை இந்து மயமாக்குவதும் இந்துக்களை போராளிகளாக்குவதும்தான் ‘(Hinduisation of politics and Militarisation of Hindus) வீர சவர்காரின் லட்சிய கனவு என்றவர் பிரதமர் மோடி சவ்ர்காரின் முதல் கனவை நினைவாக்கிவிட்டார் என்று புகழ்ந்து பேசினார். அதாவது அரசியலை இந்து மயமாக்கி விட்டாராம் மோடி.  எனவே இந்துக்களை போராளிகளாக்கும் அடுத்த கனவை நாம் நினைவாக்குவோம்  என்றவர் மாணவர்களுக்கு கத்தி விநியோகிப்பதன் நோக்கம் மாணவர்களுக்கு தங்களை பாதுகாத்துக் கொள்வதும் நாட்டை பாதுகாப்பும் நோக்கம் என்றால் அவர்களுக்கு இந்த ஆயுதங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்றார்.

அது மட்டுமல்ல இளவர் மாணவ மாணவிகளுக்கும் கத்தியுடன் பகவத் கீதை  புத்தகத்தையும் அவர் விநியோகித்தார்.

இதையெல்லாம் அனுமதிக்கும் அரசுதான் அங்கே ஆட்சி புரிகிறது.

குழந்தைகளின் மனதில் இப்படியெல்லாம் விஷ வித்தை தூவுகிறோமே என்ற குற்ற உணர்வு அவர்களுக்கு இல்லவே இல்லை.

இதெயெல்லாம் நியாயப்படுத்துகிறார்கள்.

இவர்களை இங்கே வளரவிட்டால் என்னவெல்லாம் செய்வார்கள்.?

பாஜக அதிகாரபூர்வமாக இந்த நடவடிக்கைகளை ஆதரித்து அறிக்கை விட தயாரா?

எப்படி விடுவார்கள்? மோவ் தொகுதி பா ஜக சட்டமன்ற உறுப்பினர் உஷா தாகூர் கோட்சே பற்றி கேட்டதற்கு ‘அவர் ஒரு தேசியவாதி’ என்று பதில் சொல்லி இருக்கிறார்.

பிரக்யா சிங் கோட்சேயை தேச பக்தி கொண்டவர் என்று சொன்னதை மன்னிக்க மாட்டேன் என்று சொன்னவர் மோடி. அதற்குப் பிறகு பிரக்யா சிங் எம்பி ஆகி விட்டார். இவர்களா கண்டிப்பார்கள்?

பாழ்பட்டுக் கிடக்கும் மறைமலை அடிகள் நினைவில்லம் ??!!

பல்லாவரத்தில் உள்ள சாவடி தெருவில் சைவத் தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் நினைவில்லம் அமைந்திருக்கிறது.

இதன் ஒரு பகுதியில் நியாய விலை கடை இயங்கி  வருகிறது. அதற்குத்தான் மக்கள் வருகிறார்கள்.

நினைவில்லத்திற்கு யாரும் வருவதில்லை.

இதனை தென்னிந்திய தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு பராமரித்து வருகிறதாம்.

ஏன் இதை அரசு பராமரிக்கக் கூடாது?

செடி கொடிகளுக்கு இடையே பாழ் அடைந்து கிடக்கும் அந்த கட்டிடம் ஒரு நினைவு  இல்லம் என்பதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

மறைமலை அடிகளின் நூல்களை அங்கே மக்கள் பயன்பாட்டுக்கும் கொடுத்து பாதுகாக்கவும் செய்யலாம். ஒரு நூலகம் வைத்தால் கூட மக்கள் வருவார்கள்.

நினைவில்லம் அமைப்பது ஒருவரை பெருமைப்படுத்தத்தான்.

அதுவும் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலை அடிகள் நினைவில்லம் வரும் தலைமுறையினருக்கு ஒரு ஊக்க சக்தியாக விளங்க வேண்டும்.  பல மறைமலைகள் தோன்ற அது வழி வகுக்க வேண்டும். அதுதான் நினைவில்லத்தின் நோக்கம்.

இப்படி பாழடைய விடுவது அவரை அவமதிப்பது ஆகும்.

தமிழக அரசு உடனே தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்.

வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு மட்டும்தான் வெளிமாநிலத்தவரின் வேட்டைக்காடா?

தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தொண்ணூறு லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து விட்டு காத்துக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாகிக் கொடுக்க தமிழக அரசுக்கு மனமில்லை.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்காக நேரடித் தேர்வு அண்ணா பல்கலை கழகம் மூலமாக நடத்தப்பட்டது.

எழுத்துத் தேர்வு நேர்முக தேர்வு மூலம் உதவி மின் பொறியாளர்களாக 300 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். இவர்களில் 39 பேர் கர்நாடகம், ஆந்திரா, கேரளா, உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதைப்போல் ஒரு அக்கிரமம் இருக்க முடியுமா?

இதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களுக்குத்தான் அரசுப் பணி என்று சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே அது தமிழக அரசுக்கு தெரியுமா தெரியாதா? 

ஏன் அதேபோல் தமிழ்நாட்டிலும் ஒரு சட்டம் இயற்றிக் கொள்ள முடியாதா?

வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு மட்டும்தான் வெளிமாநிலத்தவரின் வேட்டைக் காடா?

தமிழர்களுக்கு வெளி மாநிலங்களில் வேலைவாய்ப்பு கொடுத்தால் மற்றவர்களுக்கு இங்கே வேலைவாய்ப்பு கொடுக்கலாம். தவறில்லை. ஆனால் அதிலும் ஒரு வரையறை இருக்க வேண்டும்.

அதேபோல் எல்லா மாநிலங்களும் ஒரு வரையறை ஏற்படுத்தில் கொண்டால் அதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இருக்காது.

இது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பலர் கண்டனம் செய்திருக்கிறார்கள்.

ஆளும் கட்சி என்ன சொல்கிறது?

வேட்டியை கைவிடு பைஜாமாவுக்கு மாறு??!! தமிழ்க் கலாச்சாரத்தின் மீதான அடுத்த தாக்குதல்?!!

தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் அரசு அலுவலர்களுக்கு ஆன ஆடை கட்டுப்பாடு இப்போது தேவைதானா?

அதன் நோக்கம் உண்மையில் என்ன?

தமிழ்க் கலாச்சாரத்தை முடக்குவதுதான் நோக்கமா?

தமிழர்களின் வேட்டி துண்டு கலாசாரம் சிலரின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அதை ஒழிக்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள். தேவையே இல்லை. தமிழக இளைஞர்கள் தாங்களாகவே வேட்டியை விட்டு விலகி எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறார்கள். பாதி வயதை  தாண்டியவர்கள்தான் வேட்டியை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் வேட்டு வைக்க திட்டமிட்டு விட்டார்கள்.

தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணி தனது செய்திக் குறிப்பில் நம் கவலையை பகிர்ந்து கொள்கிறார். முதலில் வந்த ஆணையில் வேட்டி இடம் பெற வில்லை என கவலைப்பட்டோம். திருத்தி அமைக்கப்பட்ட ஆணையில் வேட்டி அணியலாம் என்று தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறுகிறார்.

ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் இந்த பிற்போக்குத் தனத்தை கண்டித்து உள்ளனர். இதுவரை அரசு அலுவலர்கள் முறையற்ற உடை அணிந்து வந்ததை போலவும் இவர்கள் வந்து அதை திருத்தம் செய்ய முற்படுவது போலவும் ஒரு கருத்து உருவாக்கம் செய்தது யார்?

முதலில் வந்த ஆணையில் வேட்டியை அணியக்கூடாது என்று திட்டமிட்டவர் யார்?    

அலுவலர்கள் மத்தியில் ஒரு ஒழுங்கை கொண்டுவருவதுதான் நோக்கம் என்றால் இதுவரை ஒழுங்கு குன்றி இருந்ததா?

அலுவலர்கள் அப்படி என்ன தகாத உடை அணிந்து வந்தார்கள்?

டி ஷர்ட் தான் அதிகபட்ச தகாத உடை என்றால் அதை மட்டும் தடை செய்து விட்டுப்போகட்டுமே? 

பெண்கள் சேலை, சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற உடைகள் அணியலாமாம்.  ஆண்கள் பேன்ட், சட்டை அணியலாமாம். இது பற்றி சந்தேகம் கேட்டதற்கு வேட்டி பற்றி அறிவிப்பு ஏதும் இல்லை என்றார்கள். பிறகு என்ன நினைத்தார்களோ என்னவோ அணியலாம் பட்டியலில் வேட்டியை சேர்த்துவிட்டார்கள்.

தமிழர்கள் என்றால் வேட்டி சட்டை துண்டு தான் பாரம்பரிய உடை. பேண்டுதான் புதிது. ஆனால் இப்போது வேட்டி அரிதாகி விட்டது. இந்நிலையில் வேட்டியை பயன்படுத்துவதை குறைக்கும் நோக்கில் இந்த புதிய திட்டம் வெளியிடப் பட்டிருக்கிறதோ என்ற ஐயம் எழுவதில் தவறில்லை.

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தானாக முன்வந்து இந்த கட்டுப்பாட்டை அமுல்படுத்தினாரா முதல் அமைச்சருடன் கலந்து அறிவித்தாரா என்பதும் தெரியவில்லை.

அமைச்சர்கள் எல்லாம் வேட்டி கட்டிகொண்டிருக்கும்போது அலுவலர்களுக்கு தடை விதிப்பது என்பது நடவாது.

என்றாலும் இன்று அதிமுக இருக்கும் நிலையில் யார் யாரெல்லாம் எப்படி எல்லாம் மிரட்டுவார்களோ என்று சந்தேகப்படுவது சரிதானே?

ஆனால் இந்திய பாரம்பரிய உடைகளையும் ( பைஜாமா, ஜிப்பா போன்றவை ) அணிய அனுமதிக்கப்படுகிறது என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அந்த விதியில் மேலும் ஒரு திருத்தம் செய்து உத்தரவை வெளியிட்டார். கூடவே ஆண் ஊழியர்கள் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்  வேட்டியை அணியலாம் என்று கூறுகிறார். அதாவது முதலில் வேட்டியை விட்டு விட்டு அதனால் பிரச்னை ஏற்படும் என்பதை உணர்ந்து அடுத்த உத்தரவில் வேட்டியை  சேர்த்து வெளியிடுகிறார் என்றால் இதெல்லாம் தமிழக அமைச்சர்களுக்கு தெரிந்துதான் நடக்கிறதா அல்லது ஆளுநர் மாளிகையில் இருந்து ஏதாவது உத்தரவுகள் வந்ததா என்பது தெரியவில்லை.

நல்லவேளை குர்தா பைஜாமா ஜிப்பாவை கட்டாயமாக்காமல் விட்டு விட்டார்கள்??!!

நன்றி !   நன்றி  !  நன்றி !

சங்கீத வாத்யாலயாவை சென்னையில் இருந்து டெல்லிக்கு மாற்ற திட்டமா??!!

மோடி அரசு எல்லா மாநிலங்களில் இருந்தும் எல்லவற்றையும் டெல்லிக்கு கொண்டு செல்லும் திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்ற ஐயம் வலுப்பெற்றுள்ளது .

இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் சங்கேத வாத்யாலாவை டெல்லிக்கு மாற்ற இருப்பதாக தகவல் கிடைத்து தென்னிந்திய கைவினை பொருட்கள் தொழில்  சங்கத்தின் தலைவர் பி சுப்பிரமணியன் மத்திய கைவினை பொருட்கள் வளர்ச்சி ஆணையருக்கு அனுப்பி உள்ள மனுவில் தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா வழிகாட்டி கையேட்டில் சென்னையில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலமாக இந்த கண்காட்சி கூடம்  இடம் பெற்றுள்ளது.

தமிழக அரசு இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அகில இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள முக்கிய அலுவலங்களை டெல்லிக்கு மாற்றுவதை ஒரு கொள்கையாக கொண்டிருக்கிறதா பாஜக அரசு?

தமிழக அரசு விளக்கம் தர வேண்டும்.

குறைந்தபட்சம் பிரச்னை எழுப்பினால்தான் இந்த தவறான முயற்சிகளை கைவிடுவர்.