Home Blog Page 40

விவசாயிகளிடம் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்ட பெப்சிகோ வழக்கு வாபஸ் ?!

1989ல் தொடங்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனமான பெப்சிகோ கம்பெனி விவசாயிகளிடம் உருளைக்கிழங்கு FC 5 ரக விதைகளை கொடுத்து அவர்கள் விளைவித்த உருளைக்கிழங்குகளை கம்பெனியே வாங்கி அதை சிப்ஸ் ஆக விற்பனை செய்து வந்தார்கள்.

அந்த ரக விதைகள் பலருக்கு கைமாறி புது வடிவம் பெற்றன. விவசாயிகளும் பெருத்து விட்டதால் பல நிறுவனங்களும் அதை கொள்முதல் செய்ய துவங்கினார்கள்.

சந்தைக்கு தனக்கு போட்டியாக வந்த உருளை கிழங்கு பெப்சியை உறுத்த தன் ஆட்களை கொண்டு அதை கொள்முதல் செய்து அதை கம்பெனி மூலமாகவே ஆய்வு  செய்து அது தங்கள் கம்பெனி கொடுத்த விதையின் பகுதிதான் என்ற அடிப்படையில் நான்கு விவசாயிகள் மீது தலா ஒரு கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

வேறு நாட்டில் இது சாத்தியமா என்பது தெரியவில்லை.

நம்நாட்டு விவசாயிகளுக்கு எதிராக நம்நாட்டு நீதிமன்றத்தில் இழப்பீடு வழக்கு அதுவும் கோடிக்கணக்கில் கேட்டு வழக்குப் போடுபவர்கள் நெஞ்சில் ஈரமில்லாதவர்களாக தான் இருக்க முடியும்.

எதிர்ப்பு கிளம்பியவுடன் பெப்சிகோ தன் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டிருக்கிறது.

லேஸ் LAYS சிப்ஸ் பிரியர்கள் இனி அதை தொடுவர்களா?

பாஜகவில் இணைக்க- அதிமுகவை துண்டாட அடித்தளம் இடும் ஒபிஎஸ்-ன் அறிக்கை??!!

மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஒபிஎஸ் குடும்பத்துடன் பாஜகவில் இணையப்போகிறார் என்ற தங்க தமிழ்ச்செல்வனின் அறிக்கை பற்றி ஒபிஎஸ் பதில் சொன்னபோது அது முட்டாள்தனமானது என்று கூறினார்.

அப்படியே விட்டிருந்தால் கூட பிரச்னை ஆகியிருக்காது.

ஆனால் இரண்டு நாள் கழித்து அவர் கொடுத்த அறிக்கைதான் அவர் தான் மட்டும் சேரப் போவதில்லை தன் கட்சியையே கொண்டு போய் பாஜக விடம் இணைக்க திட்டமிடுகிறார் கேள்வியை எழுப்பி இருக்கிறது.

தன் அறிக்கையில் பாஜக வுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் கொள்கை முரண்பாடுகளை பற்றி ஒரு வரி கூட இல்லை. அதிமுக என்பது திராவிட இயக்கத்தின் கூறு என்பதையும் பெரியார் அண்ணா காட்டிய வழியில் செல்லும் இயக்கம் என்பதையும் மறந்தும் கூட சுட்டிக் காட்டவில்லை.

ஏன் எம்ஜிஆர் எந்த வழியில் கட்சியை கட்டமைத்தார் என்பதையும் வலியுறுத்தி கூறவில்லை.

மாறாக எவ்வாறெல்லாம் ஜெயலலிதா பாஜக வோடு மோடியோடு உறவாடினார் நல்ல நட்பு வைத்திருந்தார் என்பதையே கோடிட்டு காட்டுகிறார்.

தலைவி மதித்த மோடியை இவரும் இவர் இயக்கமும் மதிக்கிறார்களாம்.  அதிமுகவின் எதிர்காலத்திற்கு உகந்த முடிவாம். 1998ல் பாஜக வோடு கூட்டணி வைத்தது, 2004ல் கூட்டணி வைத்து 7 இடங்களை வழங்கியது மட்டுமல்ல எல்லாவற்றுக்கும் காரணம் பாஜக வுடன் அதிமுகவுக்கு இருக்கிற தேசப்பற்று தெய்வ நம்பிக்கை போன்ற ஒத்த கொள்கைகளும் காரணங்களாம் . 

   இனிமேல் பெரியார் அண்ணா படங்களுக்கு பதில் கோல்வால்கர் தீனதயாள் உபாத்யாய படங்களை அதிமுக விளம்பரங்களில் எதிர்பார்க்கலாமா? 

ஜெயலலிதா வகுத்து கொடுத்த பாதத் தடத்தில் அதிமுகவின் பிரகாசமான எதிர்காலத்துக்காக இவர்கள் மேற்கொண்ட இணக்கம் தான் கூட்டணி என்கிறார்.

மோடியா லேடியா என்று கேட்டது, பாஜக அரசின் பல திட்டங்களை ஏற்க மறுத்தது, வாஜ்பாய் அரசை கவிழ்த்தது போன்ற ஜெயலலிதாவின் பாஜக எதிர்ப்பு நடவடிக்கைகள் எதுவும் ஒபிஎஸ் க்கு நினைவுக்கு வரவில்லை.

வேறு கட்சிக்கு போகப்போகிறேன் என்பதெல்லாம் வதந்தி வடிகட்டிய பொய் என்று கதறும் ஒபிஎஸ் ஏன் இத்தனை நாளாக ஜூனியர் விகடன் பத்திரிகை விலாவாரியாக பியுஷ் கோயலிடம் வாரணாசியில் இவரும் இவர் குடும்பத்தினரும் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியும் இவருக்கு பாஜக மாநில தலைவர் பதவியும் கேட்டதாக எழுதி இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தோ  அவதூறு வழக்கு போட்டோ நடவடிக்கை எடுக்கவில்லை. 

உங்களின் 40 எம்எல்ஏக்கள் என்னிடம் தொடர்பில் இருக்கிறார்கள் என்று மிரட்டிய மோடியின் கட்சி இவரை என்ன மிரட்டி இப்படியெல்லாம் பேச வைத்திருக்கிறது ?

சுயநலத்திற்காக எதையும் செய்யத் துணிந்தவர் ஒபிஎஸ் என்பதை நாடு நன்கு அறிந்திருக்கிறது.

அது திராவிட இயக்கத்தை பிளவு படுத்தி அதில் ஒரு பகுதியை காவிக்கட்சியுடன் இணைக்கும் எல்லைக்கும் கூட செல்லும் என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

தப்புத்தாளங்கள் தமிழக அரசியலில் கேட்க ஆரம்பித்துவிட்டன. 

கரை வேட்டிக்கு சண்டை போடும் சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்?!!

தினகரன் கட்சிக்காரர்கள் அதிமுக-வினர் கட்டும் கரை வேட்டியை கட்டக்கூடாது என்று தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருக்கும் சட்ட அமைச்சர் சிவி சண்முகத்தின் செயல் அவர் சட்டம் தெரிந்தவர்தானா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

அரசியல் கட்சிகள் பெயரையும் கொடியையும் மட்டும்தான் பதிவு செய்கின்றன.  என்ன கலரில் உடை உடுத்தலாம் என்றோ வேட்டி கட்டலாம் என்றோ பதிவு செய்வது கிடையாது.

அதேபோல் கட்சிகள் பிளவு பிளவுப்படும்போது பொதுவான தலைவர்களின் படங்களை எல்லாரும்தான் பயன்படுத்துகிறார்கள். பெரியார் அண்ணா படங்களை திமுக அதிமுக மதிமுக தேமுதிக என எல்லா திராவிட கட்சிகளும்தான் பயன்படுத்துகிறார்கள் .

அதிமுக -அமுமுக கொடிகளே வேறுதான். திமுகவின் கருப்பு சிவப்பு கொடியைத்தான் அண்ணாவின் படத்தை மட்டும் வெள்ளையில் போட்டு  பயன்படுத்தினார் எம்ஜியார். தடுக்க முடிந்ததா?

அமைச்சர் மணிகண்டன் இதேபோல் முன்பு கரை வேட்டி கட்டினால் உருவுங்கள் என்று பேசினார். முடிந்ததா?

தமிழ்நாட்டு உரிமைகளை பாதுகாக்க வேண்டி சட்ட போராட்டம் நடத்த வேண்டிய சட்ட அமைச்சர் சட்டம் தெரியாமல் கரை வேட்டிக்கு தடை கோரி நடவடிக்கை எடுக்க நேரத்தை வீணடிப்பதும் இப்படிப்பட்ட சட்ட அமைச்சரை பெற்றிருப்பதும் தமிழர்களின் தலை எழுத்து என்று நொந்து கொள்வதை விட நாம் என்ன செய்ய முடியும்?

எடப்பாடி ஆட்சி கவிழுமா தொடருமா??!

திமுக பொருளாளர் துரைமுருகன் மே மாதம் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தபிறகு எடப்பாடி ஆட்சி தூக்கி எறியப்படும் திமுக ஆட்சி மலரும் என்று பேசியிருக்கிறார்.

அதிமுக அமைச்சர் ஜெயகுமார் அதை மறுத்து இன்னும் இரண்டாண்டுகள் இந்த ஆட்சி தொடரும் என்றும் திமுகவின் கனவு நிறைவேறாது என்றும் பேசியிருக்கிறார்.

ஆட்சியை காக்க எடப்பாடி போராடுவதன் விளைவுதான் மூன்று எம் எல் ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை. அவருக்கே நம்பிக்கை இல்லாமல்தானே நடவடிக்கை எடுக்கிறார் தாமதமாக.

இப்போது எடப்பாடிக்கு இருக்கும் ஆதரவு வெறும் 109 உறுப்பினர்கள் மட்டுமே.    எப்படியாவது பெரும்பான்மை நீடிக்க குறைந்தது 8 இடங்களில் ஆவது அவர் வெற்றி பெற வேண்டும். முடியுமா?

ஓட்டுக்கு ரூபாய் 2000 வீதம் கொடுத்துமே மக்கள் மாற்றி வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அதிருப்தியின் அளவை சொல்லவும் வேண்டுமா?

உச்சநீதிமன்றம் 11 எம் எல் ஏக்கள் தகுதி இழப்பு வழக்கில் தீர்ப்பு சொல்லியாக வேண்டும். அதில் பாதகமாக வந்தால் ஈடு கட்ட எடப்பாடியிடம் எண்ணிக்கை இல்லை.

தினகரன் நாற்பது முதல் ஐம்பது லட்சம் வரை வாக்குகள் வாங்கிவிட்டால் கூட  அணிமாற்றங்கள் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.

எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி அரசு தேறுவது கடினம்.

40 திரிணாமுல் எம் எல் ஏக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா மோடி?!!

மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 சட்ட மன்ற உறுப்பினர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் பாராளுமன்ற தேர்தல் தீர்ப்பு வந்தவுடன் உங்களை கைவிட்டு விடுவார்கள் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மோடி அவர்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது அல்லவா? எப்படி அவ்வளவு உறுதியாக கூறுகிறார்?

தான் வெற்றி பெற என்னவேண்டுமானாலும் செய்வார் மோடி என்று இதன் மூலம் மீண்டும் உறுதிபடுத்தி இருக்கிறார் மோடி.

ஒரு பிரதமர் இந்த அளவு தரம் தாழ்ந்து கட்சி தாவலை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது இதுவரை நடந்திராதது.

வங்க மக்கள் மம்தாவின் மீது வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றவில்லை என்றால் தேர்தலில் மக்கள் தீர்ப்பளிக்க போகிறார்கள்.

ஆனால் திரிணாமுல் எம் எல் ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று சொல்லும் பிரதமர் அவர்களிடம் என்ன சொல்லி இருக்க வேண்டும்? அதிருப்தி  இருந்தால் கட்சியை விட்டு உடனே வெளியேறுங்கள் என்றுதானே சொல்லி இருக்க வேண்டும். அதை விடுத்து தேர்தல் முடிவுக்குப் பின்னர் வெளியே வருவார்கள் என்றால் அவர்கள் தேர்தல் முடிவு மம்தாவிற்கு சாதகமாக இருந்தால் வெளியே வர மாட்டார்கள் என்றுதானே அர்த்தம்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் திருட்டுத்தனமாக தொடர்பில் இருக்கிறேன் என்று சொல்வதே ஒரு பிரதமருக்கு அழகா?

தனது தரத்தை நாளுக்கு நாள் மோடி தரம் தாழ்த்திக்கொண்டே போகிறார்.

தேர்தல் கமிஷனில் மமதா கட்சியினர் புகார் கொடுக்க இருக்கிறார்கள். மோடியை மிஞ்சியா தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும்?

இந்திய அரசியலை அசிங்கப்படுத்தி வருகிறார் மோடி.

நரேந்திர மோடி என்ன சாதி என்ற விவாதம் எதற்கு??! தூண்டியது யார்??

முதல் முதலில் தன்னை ஒரு தேநீர் விற்பனையாளர் என்று பெருமையுடன் கூறிக்கொண்டவர் நரேந்திர மோடி.

பொதுவாக அவர் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவராக தான் பார்க்கப்படுகிறார். உண்மை என்ன?

அவர் ‘ காஞ்சி ‘ ‘Ghanchi ‘ என்ற வியாபாரிகளின் வகுப்பை சேர்ந்தவர். எண்ணெய் மற்றும் தானியங்கள் விற்பவர்கள் என்று பெயர். அவரது வகுப்பு முன்பு முற்பட்ட வகுப்பில் தான் இருந்திருக்கிறது. 

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1999ல் தான் மோடியின் சாதி பிற்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. 

பொதுவாகவே வட மாநில மக்களின் சாதியை கேட்கவேண்டியதில்லை. ஏனென்றால் சாதி பெயருடன் கூடவே ஒட்டிக கொண்டிருக்கும். அதுபோல்தான் நரேந்திர தாஸ் தாமோதர்தாஸ் என்ற பெயரோடு அவரது சாதியான மோடியும் சேர்ந்தே பயணிக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் பெயரை விட சாதி பெயரால் தான் அவர் அதிகம் அறியப்படுகிறார்.

மாயாவதி தேர்தல் பிரசாரத்தில் மோடியின் சாதி குறித்து பேசியிருக்கிறார். அவர் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர் அல்ல என்றும் அரசியலுக்காக தன் சாதியை பிற்பட்ட வகுப்பில் சேர்த்துக்கொண்டார் என்றும் பேசியிருக்கிறார்.

அதுவெல்லாம் முக்கியம் அல்ல. மோடி நாட்டுக்கு என்ன நன்மை செய்தார்? எது அதிகம்? நன்மையா தீமையா என்ற விவாதம்தான் முக்கியம்.

சாதியை ஒழிப்பேன் என்று சொல்லக்கூடியவர் அல்ல நரேந்திர மோடி. பிறகு அவர் எந்த சாதியாக இருந்தால் என்ன?

ஆனால் இந்த விவாதத்தை, தான் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்று கூறி, தூண்டி விட்டவர் மோடியேதான்.                       

மாண்புமிகு நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒபிஎஸ்- இபிஎஸ் நடத்தும் நாடகம்??!!

ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மங்களை வெளிக்கொணருவதில் ஒபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் உண்மையிலேயே அக்கறை இருப்பதாக தெரியவில்லை.

இருந்திருந்தால் நேரடியாகவே வழக்கை சிபிஐ-க்கு விசாரிக்க சொல்லி கொடுத்திருப்பார்கள். அவர்கள் விசாரித்து குற்றம் இருந்தால் நடவடிக்கை இல்லையென்றால் வழக்கை முடித்து வைத்து பிரச்னையை எப்போதோ தீர்த் திருப்பார்கள்.

அப்படி முடிவதில் இருவருக்கும் உடன்பாடு இல்லாமல் தான் ஏதோ நாங்களும் நடவடிக்கை எடுத்தோம் என்று தொண்டர்களை சமாதானப்படுத்த இந்த கமிஷனை போட்டிருக்கிறார்கள் என்றுதான் பொதுமக்கள் கருதுகிறார்கள்.

விசாரணை கமிஷன் சட்டம் பிரிவு 5 (5)ன் படி விசாரணை வெளிப்படையாக நடத்த வேண்டியதுதானே. ஏன் பத்திரிகைகளை சாட்சிகளின் வாக்குமூலங்களை சுதந்திரமாக வெளியிட அனுமதிக்காமல் கமிஷன் அனுமதிக்கும் செய்திகளை மட்டும் வெளியிட அனுமதிக்கிறார்கள்? கலைஞர் மீதான சர்க்காரிய கமிஷன் வழக்கு வெளிப்படையாக நடந்து விசாரணை விபரங்கள் வெளிவந்து மக்களிடையே பெருத்த அலைகளை ஏற்படுத்த வில்லையா? ஆனால் அதன் அடிப்படையில் போடப்பட்ட வழக்கில் போதிய சாட்சியம் இல்லாமல் எம்ஜிஆர் தலைமையில் ஆன அரசு பத்து வருடங்கள் கிடப்பில் போட்டு பின்னர் சட்ட அறிவுரைப்படி வழக்கில் குற்ற வனைவு செய்ய முடியாமல் கைவிடப் பட்டது.

அப்போல்லோ மருத்துவமனை மருத்துவ ரீதியில் தவறிழைத்ததா என்பது விசாரணையின் ஓர் அம்சம் இல்லா நிலையில் மருத்துவர் குழுவை அமைப்பதில் ஏன் அரசு அத்துணை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது? அதனால் தான் இப்போது உச்சநீதிமன்றம் தடை கொடுத்து இருக்கிறது. இதனால் ஒபிஎஸ் சாட்சியம் அளிப்பதில் இருந்து  தப்பித்து அவகாசம் எடுத்து கொண்டிருக்கிறார்.

இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடும் முயற்சியில் விசாரணை கமிஷன் இயங்கி வருகிறது.

தேவையற்ற சாட்சிகள் நேரம் கடத்துவதற்குத்தான் பயன்படும். எம்ஜிஆர் காலத்து சிகிச்சை ஆவணங்களை கேட்கும்போது எதற்காக கேட்கிறார்கள் நோக்கம் என்ன கேள்வி எழுகிறது அல்லவா?

கமிசன் அமைத்த போதே 26/09/2017ல் திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். அது இப்போது உண்மையாகிவிட்டது.

 சட்ட அமைச்சர் சிவி சண்முகம் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணனை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் உண்மை வெளியே வந்து  விடும் என்றும் உடனே எப்.ஐ.ஆர் போட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார். அப்படி நடவடிக்கை எடுப்பதில் இருந்து யார் உங்களை தடுத்தார்கள்? அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு தொண்டர்களை ஏமாற்றும் நோக்கில் மனம் போனபடி பேசுவதை எப்படி ஏற்று கொள்ள முடியும்?

இனி எப்போது தடை உடைவது? எப்போது சாட்சியம் முடிந்து அறிக்கை கிடைப்பது?    அதுவும் ஏற்றுக்  கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் வழக்கு போட்டு எப்போதுஉண்மை வெளி வருவது?

கமிஷன் என்றால் மூன்று மாதத்தில் விசாரணை முடித்து நடவடிக்கை எடுத்தால் அதில் பொருள் இருக்கும். இப்படி ஆண்டுக் கணக்கில் இழுத்து அடிப்பதற்கு பெயர் என்ன?

                    விசாரணைக் கமிஷன் ஏன் அமைத்தார்கள் என்பதற்கு ஒரு விசாரணைக் கமிஷன் போட்டால்தான் உண்மை வெளி வரும்போல. 

வள்ளலார் வழி தனி வழி என அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் மனு?! இருட்டடிப்பு செய்த தமிழ் பத்திரிகைகள்

பொதுமேடை பலமுறை வலியுறுத்தி வந்ததை இப்போது உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனுவாக கொடுத்திருக்கிறார்.

வள்ளலார் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் அவரை இந்து மதத்துக்குள் முடக்கி விட ஆதிக்க சக்திகள் முயன்று கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக நால்வருணக் கொள்கை உடைய சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டவர் இல்லை.

முதல் ஐந்து திருமுறைகள்– ஆறாம் திருமுறை- வள்ளலாரின் உரைநடை இவையே திருஅருட்பா.

முதல் ஐந்து திருமுறைகளை அவர் இயற்றி இருந்தாலும் அவர் எழுதிய ஆறாம் திருமுறையும் அதற்கு அவர் கொடுத்த உரைநடை விளக்கமுமே முடிபாகும்.   அதுவும் அவரே முதல் ஐந்து திருமுறைகளை ஒதுக்கிவிடுங்கள் என்று கட்டளை இட்ட பின் அவர் தொண்டர்கள் என்பவர்கள் ஐந்து திருமுறைகளை போற்றுவதும் பின்பற்றுவதும் வள்ளலாருக்கு  கெட்ட பெயர் ஏற்படுத்தும் செயலாகவே ஆகும்.

மதச்சண்டைகளை தீர்க்கும் மாமருந்து

வள்ளலார் கண்ட சமரச சுத்த சன்மார்க்கமே !!!

வள்ளலார் கண்ட  சமரச சுத்த சன்மார்க்கம்–மதமல்ல- ஓரிறை வழிபாடு- அதுவும் சோதி வடிவிலான ஆண்டவர் வழிபாடு.

சாதி சமய சழக்கை விட்டேனருள் ஜோதியைக் கண்டேனடி– என்பது வள்ளலார்  வாக்கு .

உயிர்க்குலத்திற்கே இயக்கத்தின் ஆதாரமாக உள்ள சோதிதான் இறைவன்

யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்- எம்மதத்தவரும் கடைப்பிடிக்கலாம்.

எந்தச் சடங்கும் தேவையில்லை-குருவும் தேவையில்லை

எந்தக் கோயிலுக்கும், எந்த வழிபாடு போகக் தேவையில்லை இருக்கும் இடத்திலேயே கடைப்பிடிக்கலாம்.

தயவே வடிவமாக இருந்து ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் நாம் வாழ வேண்டும். -இறைவனின் திருவடியை இறுகப் பற்றிக்கொண்டு உயிர்களிடம் இரக்கம் காட்டி அவைகளுக்கு பணி புரிந்து கொண்டு வாழவேண்டும்.

எல்லா உயிர்களிடத்திலும் தயவு- பிரபஞ்சத்தில் பற்றின்மை- சிவத்தினிடத்தில் மாறாத அன்பு – அவ்வருள் நம்மை அடையும்- நாமும் அதனை அடைந்து ஒப்பற்ற சுகத்தில் இருப்போம். -லட்சியம் மரணமிலாப் பெருவாழ்வு  இவைதான் வள்ளலார் கண்ட தத்துவத்தின் சாரம். 

வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே ( 186 )

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என் தனக்கே“  (187 )

இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

தெருட்சாறும் சுத்தசன் மார்க்கநன் நீதி

சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருட்ஜோதி வீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவர் நீரே.             (496)

சாதியும் மதமும் சமயமும் பொய் என

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி                  ( 4 )

ஆக பாடல் மற்றும் பேருபதேசம் ஆகிய இரண்டையும் பொருந்திப் பார்த்து வள்ளலார் சாதி, மதம், தவிர்த்த சன்மார்க்க சங்கத்தைத்தான் இறுதியாக தன் அன்பர்களுக்கு விட்டுச் சென்றார் என்பது பற்றி யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.

ஆனால் வள்ளலார் நாத்திகர் அல்லர்.

“நாத்திகம் சொல்கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு“ என்பதே அவர் முடிபு.

எனவே வள்ளலார் வழி என்பது நாத்திகமும் அல்ல எந்த மதமும் அல்ல –

ஆனால் வள்ளலார் பக்தர்கள் இந்துக்கள் என்றுதான் அறியப்படுகிறார்கள். – வள்ளலார் பாடல்களிலே எங்குமே இந்து என்ற சொல் இல்லை. இந்து என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது – கிழக்கு இந்தியக் கம்பெனி கொண்டுவந்த  Hindu Widows Remarriage Act 1856 / 25/07/1856 Lord Dalhousie-Lord Canning ஆல் தான்.

இன்றைக்கு இந்து என்றால் புத்த ஜைன, சீக்கிய மதங்களை உள்ளடக்கி, பார்சி  கிறிஸ்தவ, இஸ்லாமிய மதம் தவிர்த்தவர்கள்தான்.

உலகமெங்கும் நாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்னைகளுக்கு மதங்களே மூல காரணிகளாக இருக்கின்றன. மதங்களுக்கு இடையே இருக்கும் மோதல்களை முரண்பாடுகளை பேசித் தீர்க்கவே முடியாது. மதப் பிரச்னைகளை தீர்க்க ஒரேவழி மதங்களில் இருந்து வெளியேறுவதுதான்.   

அதைத்தான் சொன்னார் வள்ளலார். இறை நம்பிக்கைக்கும் மதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் நம்பிக்கையாளன். ஆனால் எந்த மதத்தையும் சாராதவன். பிரச்னை என்னவென்றால் அரசு ஆவணங்களிலே அப்படி குறிப்பிட எந்த சொல்லும் இல்லை. அதை ஆவணப் படுத்த சன்மார்க்கிகள் முயல வேண்டும் என்ற பலரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை  உயர் நீதிமன்றத்தில் ஒருவர் ஓரு மனு தாக்கல் செய்து வள்ளலார் வழி வழிபாட்டை தனி வழிபாடு முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக்  கொண்டிருக்கிறார்.  நீதிமன்றமும் அறிவிப்பு அனுப்பி அரசு பதில் அளிக்க அவகாசம் அளித்திருக்கிறது. 

இந்த செய்தியை ஒரே ஒரு தொலைகாட்சியில் கேட்க முடிந்ததே தவிர எந்த தமிழ் அல்லது ஆங்கில பத்திரிகைகளிலும் படிக்க முடியவில்லை. 

ஏன் இந்த இருட்டடிப்பு?

Religion- இந்து கிறிஸ்தவர் முஸ்லிம் பார்சி என்று எழுத முடியும். நாத்திகன் என்றோ மதமற்ற கடவுள் நம்பிக்கையாளர் என்றோ குறிப்பிட இடமில்லை.

குஜராத்தில் ராஜ்விர் பிராமின் என்ற கரோடா பிராமின் தாழ்த்தப் பட்ட வகுப்பை சேர்ந்தவர்.. சாதி அடக்கு முறைக்கு ஆளாகி தன்னை இந்து என்று குறிப்பிடாமல் நாத்திகர் என்று குறிப்பிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு போட அவர் நிராகரிக்கிறார். வேறு மதம் மாறு நாத்திகனாக முடியாது என்று உத்தரவு.  குஜராத் உயர் நீதிமன்றம் ஏன் கூடாது என்று விளக்கம் கேட்டு அறிவிப்பு அனுப்பி இருக்கிறது. .

லிங்காயத்துக்கள், கேரளாவின் நாராயண குரு, குமரியின் அய்யா வைகுண்டர் போன்றோர் தனித்தனி வழிபாட்டு வகை கண்டவர்கள். எல்லாரையும் விழுங்கி இந்து என்ற மாயை ஆண்டு கொண்டிருக்கிறது. அது மதமே அல்ல என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு சொன்ன பிறகும் எப்படி உயிர் வாழ்கிறது என்பது இறைவனுக்கே வெளிச்சம். அந்த வகையில் சன்மார்க்கிகளையும் இந்து விழுங்கி விட்டது. அதில்  இருந்து விடுதலை பெறும் வழியை சன்மார்க்கிகள் ஆராய வேண்டும் என்ற வேண்டுகோளை பணிவோடு வைக்கிறேன்.

பெரும்பான்மை சமூகத்திலிருந்து விலகி சிறுபான்மை ஆக வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல.

எல்லா மதங்களையும் சட்டப்படி தடை செய்ய முடியும் என்றால் அதற்காக அனைவரும் ஒன்று சேரலாம். ஆதரிக்கலாம்.

அதுவரை தன்மானமுள்ள இறை நம்பிக்கையாளனாக வாழவேண்டும் என்பதே வள்ளலார் பக்தர்களின் எதிபார்ப்பு.

-வைத்தியலிங்கம்

சொந்த சாதி பெண்களையே ஆபாசமாக பேசி ஆடியோ வெளியிட்ட முத்தரையர் இளைஞர்கள்??!!

பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து நாமும் பொதுமேடையில் எழுதியிருந்தோம்.

முத்தரையர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் ஏற்படும் வகையில் இருந்த அந்த ஆடியோ பெருத்த கிளர்ச்சிக்கு வித்திட்டு பல போராட்டங்களை அந்த அப்பாவி மக்கள் முன்னெடுத்தனர்.

ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவல் வாகனங்கள் தாக்கப்பட்டன. 13 போலீசார் காயமடைந்தனர்.

இத்தனை கலவரத்துக்கும் மத்தியில் எந்த இரண்டு சமூகத்துக்கும் இடையே மோதல் எதுவும் ஏற்படாதது மட்டுமே ஆறுதல்.

காவல் துறை விசாரணையை முடுக்கிவிட்டதில் உண்மை வெளிவந்தது. மஞ்சவயல் கரிசல்காடு செல்வகுமார் சிங்கப்பூரில் இருக்கிறார். அவரை பட்டுகோட்டை வசந்த் என்பவர் தூண்டிவிட்டு நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு சிங்கப்பூரில் இருந்து செல்வகுமார் சர்ச்சைக்குரிய அவதூறு ஆடியோவை பதிவு செய்து சமூக வலை தளத்தில் பதிவு செய்ததும் அதை சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த ஒருவர் மூலம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவவிட்டதும் தெரியவந்தது .

இப்போது காவல் தனிப்படை செல்வகுமாரையும் வசந்த்தையும் கைது செய்து  விசாரித்து வருகிறார்கள்.

கொடுமை என்னவென்றால் அந்த இருவரும் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான். தங்கள் சமூகத்து பெண்களைப்பற்றி அவதூறாக பேசி சொந்த சமூகத்தையே இழிவுபடுத்த அவர்கள் சொன்ன காரணம்தான் தமிழ் சமூகம் சாதிப்பேயின் பிடியில் எவ்வளவு அழுத்தமாக அடிமைப்பட்டு கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது. தனது சமுதாயத்தில் ஒரு பற்று உணர்வை ஏற்படுத்த வேண்டிதான் இந்த பதிவை வெளியிட்டார்களாம். 

ஏற்கனெவே அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்னையில் முக்குலத்தோர்-முத்தரையர் பிரச்னை ஏற்பட்டு பின்னர் அமைதி ஏற்பட்டது.

வேற்றுசமூகத்து ஆட்கள் நம் சமூக பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் என்றால் தன் சாதிக்காரர்கள் ஒன்று திரண்டு சாதி ஒற்றுமையை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எதனால் உருவானது.? முன்பே புரையோடிப் போயிருக்கும் சாதிப்பகைமை.

இந்த இருவருக்கும் தரப்படும் கடுமையான தண்டனைதான் இனி எவருக்கும் இத்தகைய இழி செயலில் ஈடுபட திட்டமிடுவோருக்கு தரப்படும் எச்சரிக்கையாக இருக்கும் .

               போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் இனி எவரும் இப்படி செய்தால் கவனமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

தோல்வி பயத்தில் 3 எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி முயற்சி??!!

பாராளுமன்ற தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் முடிந்துவிட்டது. மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. எல்லாவற்றுக்கும் சேர்த்த மே மாதம் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன.

இப்போது 114 பேர் எடபாடியோடு இருப்பதாக கணக்கு இருந்தாலும் தினகரனோடு இருக்கும் மூன்று பேரையும் தமிமும் அன்சாரி, கருணாஸை சேர்த்து ஐந்து பேர் எதிராக இருப்பதால் உண்மையான பலம் 109 தான்.

இந்நிலையில் ஆட்சியை தக்க வைக்க குறைந்தது 9 இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஓட்டுக்கு ரூபாய் 2000 கொடுத்தும்கூட எடப்பாடிக்கு வரவில்லை.

எனவே குறுக்கு வழியில் பெரும்பான்மையை தக்க வைக்க எல்லா வழிகளிலும் முனைப்பு காட்டுகிறார்.

அதில் ஒன்றுதான் இன்று அதிமுக வின் சட்டமன்ற கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் கொடுத்திருக்கும் கடிதம். அதில் கட்சிக்கு விரோதமாக செயல்படும் தினகரன் ஆதரவு எம் எல் ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி  பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சபாநாயகர் விளக்கம் கேட்டு அறிவுப்பு கொடுப்பார். விளக்கம் தந்ததும் அது ஏற்றுக் கொள்கிற விதத்தில் இல்லையென்று அவர்களை தகுதி நீக்கம் செய்வார்.

தேவைப்பட்டால் இதே நடவடிக்கையை தமிமும் அன்சாரி மீதும் கருணாஸ் மீதும் கூட எடுக்க முனைவார். ஏனென்றால் அவர்கள் தனி கட்சியாக இருந்தாலும் இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்றதால் அதிமுகவின் கொறடா கட்டளைக்கு கட்டுப் பட்டவர்கள்.

அதன் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடிக்கு  தேவைப்படும் வாக்குகள் குறைந்து விடும். இதுதான் திட்டம். இதைவிட மோசடி வேறு என்ன இருக்க முடியும்?

உடனே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அப்படி எதுவும் நடந்தால் சபாநாயகர் மீது  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என எச்சரித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில்தான் இத்தனை பித்தலாட்டங்கள் நடக்கின்றன. எல்லாம் சட்டப்படியே நடக்கின்றன. அதுதான் சோகம்.

எதிர்த்து வாக்களித்த ஒபிஎஸ் உள்ளிட்ட பதினொரு பேர் மீது நடவடிக்கை இல்லை.  ஏனென்றால் சபாநாயகர் எந்த உத்தரவும் இடாத நிலையில் அவரை நாங்கள் உத்தரவு பிறப்பியுங்கள் என்று உத்தரவிட முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது புதிதாக என்று அலுத்துக் கொண்டு சாமானியன் தலையை பிய்த்துக் கொள்கிறான்.  என்னங்கடா உங்க சட்டம் என்று !

18 பேர் தகுதி இழப்பு வழக்கிலும் ஒரு நீதிபதி சரி என்றும் மற்றொருவர் சரியில்லை என்றும் தீர்ப்பளிக்க மூன்றாவது நீதிபதியும் சரி என்று என்று தீர்ப்பளித்து எடப்பாடி  ஆட்சியை காப்பாற்றினார்கள்.

18 பேர் வழக்கு தீர்ப்பு இந்த 3 பேருக்கும் பொருந்தும்தானே என்று எடப்பாடி துணிந்து விட்டார்.

இப்படி முறைகேடுகளை துணிந்து செய்பவர்கள் எப்படி நியாயமான ஆட்சியை நடத்த முன்வருவார்கள்.

மோடி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு எல்லா கட்சிகளிலும் ஒருவர் கலந்து கொண்டால் அதிமுக வில் தம்பிதுரை, ஒ பி எஸ், வேலுமணி, வேணுகோபால் என்று நான்கு பேர் கலந்து கொள்கிறார்கள். அவ்வளவு விசுவாசம்.

ஆனால் இந்த முறை இந்த மூன்று பேரைஅவ்வளவு சுலபமாக தகுதி நீக்கம் செய்ய முடியாது. நீதிமன்றம் தடை கொடுக்கும். வேண்டுமானால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லலாம்.

எடப்பாடி ஆட்சியே நீடிக்க முடிந்தாலும் தினகரன் தொகுதிக்கு ஒரு லட்சம் என்று நாற்பது முதல் ஐம்பது லட்சம் வரை வாக்குகள் வாங்கி விட்டால் அதிமுகவில் இருந்து மூழ்கும் கப்பலில் இருந்து எலிகள் துள்ளிக் குதித்து தப்பிக்க முயல்வதை போல் வெளியேறுவார்கள். அப்போது இந்த கணக்கெல்லாம் துணைக்கு வராது.

தகுதி நீக்க நடவடிக்கைக்கு முன்னர் நல்ல புத்தி வரவேண்டும் ஆட்சியாளர்களுக்கு!