Home Blog Page 41

மோடியா மற்றவர்களா என்பதல்ல, சங்கமா மற்றவர்களா என்பதே போட்டி??!!

இந்த தேர்தல் மோடியா மற்றவர்களா என்பதை போல ஒரு சித்திரம் வரையப்படுகிறது. அது உண்மையல்ல.

மோடி என்பவர் தனி சக்தியா? தனி கொள்கை கொண்டவரா? தனி சிந்தனையாளாரா? தனித்து தொண்டர்களை கொண்டவரா? தனி கட்சி எதையாவது கண்டவரா? தன் சக்தியால் குஜராத் முதல்வராகவும் இப்போது பிரதம அமைச்சராகவும் ஆனவரா? எதுவும் இல்லை.

மோடி என்பவருக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கம் இருக்கிறது. ஆர் எஸ் எஸ் கொள்கையே மோடியின் கொள்கை. ஆர்எஸ்எஸ் சிந்தனையே மோடியின் சிந்தனை. ஆர்எஸ்எஸ் தொண்டர்களே இன்று மோடியின் தொண்டர்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கிளையான பாஜக தான் மோடியின் கட்சி. சங்கத்தின் பின்புலனால்தான் முதல் அமைச்சராகவும் பிரதம அமைச்சராகவும் ஆனார்.

மோடி என்றும் தன்னை சுய சக்தி கொண்டவராக நினைத்துக் கொண்டோ கற்பிதம் செய்து கொண்டோ செயலாற்றியதும் இல்லை.

அதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்படுபவர்- பெரு நிறுவனங்களின் ஆதரவாளர் -நிர்வாகத்தில் – இந்த இரண்டும்தான் அவரது அடையாளம்.

வாஜ்பாய் எல்லா மதங்களுக்கும் பொதுவானவர் என்ற முத்திரையோடு  பணியாற்றியவர்- அவரையே சங்கம் எப்படி பயன்படுத்தியது?

வாஜ்பாய் எங்களுக்கு ஒரு முகமூடி என்று வர்ணித்தார் கோவிந்தாச்சார்யா !

மோடி தன் தலைமையை பாதுகாக்க சங்கத்தை பயன்படுத்துகிறார்- சங்கம் தன் கொள்கையை அமுல்படுத்த மோடியை பயன்படுத்துகிறது.

இதில் உண்மையான சக்தி என்று யாரை கூறுவீர்கள்?

மோடி போன்றவர்கள் இன்றைக்கு  வருவார்கள்- நாளை போவார்கள். சங்கம் என்றும் நிலைத்து இருக்கும். அடுத்து நல்ல அடிமை கிடைக்கும் வரை, அல்லது இவரது பயன்பாடு செல்லுபடியாகும் வரை.

எனவே மோடியை தனி நபராக பாவித்து வாராது வந்த மாமணி போல் போற்றுபவர்கள் இந்த உண்மையை உணர்ந்து கொண்டு அதன் பின் மதிப்பிடவேண்டும்.

சங்கம் ஏற்புடைத்தா அல்லவா என்ற விவாதம் வேறு. சங்கம் வேண்டும் என்பவர்களுக்கு சங்கத்தின் சித்தாந்தம் சரி என்பவர்களுக்கு மோடிதான் இப்போதைய கதாநாயகர்.

சங்கத்தின் கொள்கை நாட்டுக்கு நல்லதல்ல- ஏற்புடைத்தல்ல- நாட்டை துண்டாடக் கூடிய அளவு ஆபத்தானது என்ற கருத்தைக் கொண்டவர்கள் மோடியின் தனிப்பட்ட குண நலன்களைக் கொண்டு மட்டும் ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடாது என்பதுதான், ஆதரித்து விடக்கூடாது என்பதுதான் நாம் சொல்லும் கருத்து.

தங்கம் வென்று சாதித்த கோமதி! சின்ன புத்தியை காட்டிய தினமலர்??!!

வாய்ப்பு கிடைத்தால் தமிழர்களால் சாதிக்க முடியும் என்று ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் திருச்சி முடிகண்டம் கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாயியின் மகள் கோமதி.

விடாமுயற்சி காரணமாக இருபது வயதில் தொடங்கி பல போட்டிகளில் பங்கேற்று தந்தை இறந்து பயிற்சியாளர் இறந்து பல தடைகளை கடந்து முப்பது வயதில் இந்த சாதனையை அவர் புரிந்திருக்கிறார்.

முதல்வர் தொடங்கி எதிர்கட்சி தலைவர் உட்பட எல்லாரும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

சாதாரண பின்னணி கொண்டவர்கள் கூட பயிற்சியும் வாய்ப்பும் கிடைத்தால் விளையாட்டில் சாதிக்க முடியும் என்பதற்கு கோமதி ஒரு சான்று.

தமிழக அரசு தகுந்த முறையில் அவரை கௌரவிக்க விக்க வேண்டும். மற்றவர்களுக்கு அந்த கௌரவம் உந்து சக்தியாக மாற வேண்டும்.

விளையாட்டுக்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும். திறமை உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து சாதனைகளை படைக்க உதவ வேண்டும்.

komathi-marimuthu-dinamalar
komathi-marimuthu-dinamalar

                     கொசுறு; தினமலர் பத்திரிகை மூன்றாம் இடம் பிடித்த வீராங்கனையை மிகப் பெரிதாக படம் போட்டு பாராட்டி விட்டு அதே போட்டியில்  முதல் இடம் பிடித்து தங்கம் வாங்கிய கோமதியை சிறிதாக படம் போட்டு தனது பெரிய புத்தியை காண்பித்து இருந்தது. அவர்கள் திருந்த மாட்டார்கள் ?!!

அணுகுண்டை தீபாவளி வெடியுடன் ஒப்பிடும் மோடியின் அச்சம் தரும் மனநிலை ??!!

அணுகுண்டு – மனித குலத்துக்கு விளைத்த நாசத்தால் அதை கண்டு பிடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனே பின்னர் வருந்தினார் என்பது வரலாறு. உண்மையில் அணுகுண்டை கண்டுபிடித்தவர் ராபர்ட் ஒப்பென்ஹீமர் என்றாலும் ஐன்ஸ்டீன் பெயரே முதன்மைபடுத்தப் படுகிறது. நிற்க.

வாஜ்பாய் காலத்தில் போக்ரான் அணு சோதனை நடத்தி நமது வல்லமையை உலகுக்கு உணர்த்தி விட்டோம். மூன்று முறை நம்மிடம் அடிவாங்கி ராணுவ ரீதியில் இந்தியாவை ஒருபோதும் வெல்ல முடியாது என்பதை பாகிஸ்தான் உணர்ந்தே இருக்கிறது. பங்களா தேசம் பிறந்த போது 90000 பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் பிடியில் இருந்தனர். உலகநாடுகள் தலையீட்டில் விட்டோம். அப்போது அவர்களை விடாமல் காஷ்மீர் பிரச்னையை நிபந்தனை வைத்து தீர்த்திருக்க வேண்டும் என்கிறார் நமது பிரதமர்  மோடி. நல்ல வாய்ப்பை இந்திரா காந்தி நழுவ விட்டு விட்டாராம். நல்லவேளை இவர் அப்போது பிரதமராக இல்லை.

இன்று பாகிஸ்தானுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அணுஆயுதம். ஆனால் அவர்களுக்கும் தெரியும் அவர்கள்  அணு  ஆயுதத்தை எடுத்தால் இந்தியா வாவது இழப்புகளை தாங்கியும் வாழும். ஆனால் இந்தியா அணுகுண்டுகளால்  தாக்கினால்  பாகிஸ்தான் நாடே இருக்காது.    இருந்தாலும் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் எப்போதாவது தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதற்காவும் தேர்தல் வெற்றிக்காகவும் அணு ஆயுதத்தை பற்றி பீற்றிக் கொள்வது வழக்கம். அதற்கெல்லாம் எந்த இந்திய பிரதமரும் முறைகேடாக பதில் சொன்னது இல்லை.

ஆனால் வர வர மோடியின் பேச்சுக்கள் தரம் தாழ்ந்து கொண்டே போகிறது. ஒரு கட்சி தலைவராக அவர் எப்படி பேசினாலும் பரவாயில்லை. ஒரு பிரதமராக பொறுப்புடன் பேச வேண்டும்.

அபிநந்தன் விடுதலை தான் கொடுத்த மிரட்டலால் தான் நடந்தது என்கிறார். இப்படியெல்லாம் மிரட்டல் செய்யக்கூடாது என்றால் நான் எதற்கு பஜனை செய்யவா இருக்கிறேன் என்கிறார்? பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருந்தால் எங்களுக்கு என்ன?  நாங்கள் மட்டும் தீபாவளிக்கு வெடிக்கவா அணுகுண்டுகளை பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்கிறார்.

உலக நாட்டுத் தலைவர்கள் நம்மை மதிப்பார்களா?   போர் வெறி கொண்ட நாடாக அல்லவா நாம் பார்க்கப் படுவோம்.

ஆனால் சீனாவை நோக்கி மட்டும் எந்த சவாலையும் மோடி விடுக்க மாட்டார்.

மோடி ஆதரவாளர்கள் புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆகா நமது மோடி எப்படி சவால் விடுக்கிறார் பாருங்கள் என்று??!   சவால் விடுவதும் சவடால் அடிப்பதுவமா பிரதமர் வேலை?

இவருக்கு பதிலை இம்ரான்கான் சொல்லவில்லை. காஷ்மீரின் மெகபூபா முக்தி சொன்னார், ‘பாகிஸ்தான் மட்டும் ஈத் பெருநாளுக்கு வெடிக்கவா அணுகுண்டு வைத்திருக்கிறது’ என்று.

இந்த வெறிப்   பேச்சுக்கள் இரு நாடுகளுக்கு இடையே இணக்கத்தை பேண உதவுமா?

எனவே  சிந்தனையாளர்கள், நல்லோர் அச்சமடையவே செய்வார்கள்.

ஒரு பிரதமர் வெறும் தலைவர் அல்ல. நாட்டின் எதிர்காலத்தின் பாதுகாவலர்.  அதனால்தான் தன்னை சௌகிதார், காவலாளி, என்று மோடி சொல்லிக் கொள்கிறார். ஆனால் நடத்தையில் நேர் மாறாக இருக்கிறது மோடியின் வார்த்தைகள். மக்களின் உணர்ச்சிகளை தூண்டி தன் தலைமையை ஏற்றுக் கொள்ளசெய்வதே அவரது இலக்கு.

சமாதான காலத்துக்கான பிரதமர் மோடி அல்ல. எப்போதும் சண்டையை எதிர் பார்க்கச் செய்து  அரசியல் வெற்றி பெற நினைக்கும் சாதாரண அரசியல்வாதி.

பிரதமர் தரத்தில் இருக்கிறதா நரேந்திர மோடியின் பேச்சுக்கள் என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.

2014  ல்  ஹீரோவாக பார்க்கப் பட்டவர்  2019 ல் ஜீரோவாக ஆகிவிட்டார்.      பயனில்லை என்றால் இவரையும் அமித் ஷாவையும் தூரத்தில் வைத்து விடும் சங்கம்.    அத்வானி ஜோஷியை விட இவர்கள் எம்மாத்திரம்!

ஒன்று மட்டும் உறுதி. தேர்தல் முடிவுகள் எப்படியோ. இவர் மட்டும் பிரதமராக மீண்டும் ஆனால் இந்தியா பெயரளவுக்குத்தான் ஜனநாயக நாடாக நீடிக்கும்.    சர்வாதிகாரம் புது வடிவில் அரங்கேறும். அதையும் நியாயப் படுத்தும் ஆதிக்க சக்திகள்.

ஆம். உண்மையில் மோடியை நினைத்தால் அச்சமாகத்தான் இருக்கிறது.

பெரிய கோவில் கல்வெட்டுகளை மாற்ற முயற்சியா? அதிகாரிகள் ஏன் அறிக்கை தரவில்லை?

பெரிய கோவில் தமிழ் கல்வெட்டுகளை அகற்றி விட்டு இந்தி கல்வெட்டுகளை பொருத்தி வருவதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வந்து தமிழர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை எழுப்பிவிட்டது.

இதற்கு இந்து தமிழ் மட்டும் ஒரு விளக்க செய்தி வெளியிட்டது.

தமிழக நுண்ணறிவுப் போலிசும், உளவுப் பிரிவு போலிசும் கோவிலுக்கு வந்து அங்குள்ள கல்வெட்டுகளை பார்வையிட்டதுடன் அவற்றை படமாவும் பதிவு செய்து கொண்டு சென்றுள்ளனர்.

பெரிய கோயில் இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருக்கிறது. அதன் முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் செய்தியாளர்களிடம் விளக்கம் தந்தார்.

“ராஜராஜ சோழன் காலத்தில் கோவில் பணியாளர்கள் விபரம் கொடுக்கப்பட்ட தானங்கள், கோவில் நிர்வாகம், ஆட்சி முறை, பாதுகாப்பு முதலான பல தகவல்கள் அனைத்தும் கோவில் முழுவதும் கல்வெட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

அனைத்தும் தமிழ் மொழியில்தான் உள்ளன. மராட்டியர் காலத்தில் திருச்சுற்று மாளிகையின் சுவரில் மராத்தி மொழியின் தேவநாகரி எழுத்துக்களை கொண்டு கோவில் திருப்பணிகள் தொடர்பாக கல்வெட்டுகளை பொறித்து வைத்திருந்தனர்.

இவற்றைத்தான் தமிழ் மொழி கல்வெட்டுகளை அகற்றி இந்தி மொழி கல்வெட்டுகளை பதிப்பதாக சமூக வலைத்தளங்கள் பதிவிட்டு வருகின்றன. இது தவறு. திருச்சுற்று மாளிகையில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் வாசகங்கள் அடங்கிய கருங்கற்கள் அனைத்தும் கோவிலின் கிரிவலப் பாதையை சீரமைத்தபோது பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டவை. அவற்றை பாதுகாக்கும் பொருட்டு கோவிலின் தென் மேற்கு பகுதியில் பூட்டிய அறையில் வைத்துள்ளோம்.

இங்கேதான் சந்தேகம் வலுக்கிறது. வலைதள புகைப்படத்தில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கிற கல்வெட்டுகள் வெளியில்தான் கிடக்கின்றன. அவை பூட்டிய அறையில் இருந்தால் எப்படி வெளியில் கிடக்கும்?

மராத்திக்கும் இந்திக்கும் உள்ள வேறுபாடு எல்லாருக்கும் தெரியாது. ஆனால் தொல்லியல் துறைக்கு தெரியும் அல்லவா? கிரிவலப் பாதையை சீரமைத்தபோது  கிடைத்தது என்றால் அதன் கால விபரம் என்ன? அது அப்போதே வெளியிடப்பட்டதா? அது பற்றி வேறு ஆவணங்கள் உள்ளனவா இல்லையா? தொல்லியல் துறை அல்லாமல் இந்து அறநிலைய  துறையின் அதிகாரிகள் யாரும் இல்லையா? ஏன் பொறுப்பான அதிகாரிகள் எவரும் எழுத்து பூர்வமான விளக்கம் தர முன்வரவில்லை.?

பெரியகோவிலில் ராஜராஜ சோழனால் பொறிக்கப்பட்ட 64 கல்வெட்டுகளும்  ராஜேந்திர சோழனால் பொறிக்கப்பட்ட 21 கல்வெட்டுகளும் இரண்டாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜேந்திர சோழன் காலங்களில் தலா ஒரு கல்வெட்டும் பாண்டியர் கால கல்வெட்டுகள் இரண்டும், விஜயநகர நாயக்கர் கால கல்வெட்டுகள் நான்கும், மராட்டியர் கால கல்வெட்டுகள் நான்கும் உள்ளதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கே திடீரென்று மராட்டியர் கால கல்வெட்டுகள் பூமிக்கடியில் இருந்து கிடைக்கப் பெற்றவை என்று சொல்லும்போதுதான் பிரச்னை எழுகிறது.  கல்வெட்டு பொறித்தவர்கள் பூமிக்கடியிலா புதைப்பார்கள்? 

                அவற்றின் உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு கோவிலில் திடீர் என்று யார் வேண்டுமானாலும் எதைவேண்டுமானாலும் பொறுத்திவிட முடியுமா? அது கோவிலின் தொல்லியல் தன்மையை பாதிப்பதாக அமையாதா? 

                பொறுப்புள்ள அதிகாரிகள் முன்வந்து இந்த சந்தேகங்களை தீர்த்து வைத்தால் தவிர வரலாற்றை மராட்டியர்களுக்கு ஆதரவாக திருப்ப சதி முயற்சியாகத்தான் இதை மக்கள் கருதுவார்கள்.

ஏற்கெனெவே பெரியகோவில் நிர்வாகத்தில் மராட்டிய மன்னர் வாரிசுகளுக்கு இன்னமும் கொடுக்கப்படும் உரிமைகள் குறித்து பெருத்த ஆட்சேபணைகள் இருந்து வரும் நிலையில் இத்தகைய முயற்சிகள் மக்கள் மத்தியில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் அறிய மாட்டார்களா?  

சோழர்கள் வலு குன்றிய பின் தமிழர்கள் ஒற்றுமையின்மையால் சிதறி நின்றார்கள்.    அதனால் மராட்டியர், நாயக்கர், நவாபுகள், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் என்று பல இனத்தார்களும் இடையில் ஒரு ஐநூறு ஆண்டுகள் தமிழர்களை ஆண்டு விட்டனர்.

ஆங்கிலேயர் ஆட்சியை விடவா மற்றவர் வலுக் கொண்டவர்? காலம் சென்றிருந்தால் மற்றவர் ஆட்சிகளும் ஏதோ ஒரு வகையில் மாற்றப் பட்டிருக்கும்.

எனவே அதையே இந்த மக்களாட்சி காலத்திலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு நியாயமுமில்லை.

பொறுப்புள்ள அதிகாரிகள் அறிக்கை தந்து மக்களுக்கு அமைதி ஏற்படுத்த வேண்டும் என்றுதான் பொதுமேடை கேட்டுக் கொள்கிறது.

ஊழல் ஒழிப்பு அமைப்பின் உறுப்பினர்களை நியமிப்பதிலேயே ஊழலா; வெளங்கிடும்

ஊழலை அறவே ஒழிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு லோக் ஆயுக்தா.

இதை நியமிக்க வேண்டிய தமிழக அரசு தானாக இதை செய்யவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின் வேண்டாவெறுப்பாக செய்தது.

விரும்பி செய்திருந்தால் நியமனங்களில் எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

இதற்கு தலைவர் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு முன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். ஏன் அதை தமிழக அரசு செய்யவில்லை?

லோக் ஆயுக்தா தலைவராக ஒய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான தேடுதல் குழுவில் முதல் அமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல் உறுப்பினர்களும் சட்ட விரோதமாகத்தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா கர்நாடக மாநிலங்களில் லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமிக்கும் முன்பாக அந்தந்த மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை கலந்து ஆலோசிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரணங்களுக்காக லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமித்த  அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் யோகாநந்தன் என்பவர் மனு செய்திருக்கிறார்.

அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி லோக் ஆயுக்தா உறுப்பினர்களை தேர்வு செய்வது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என்று கூறியதை அடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

என்ன கொள்கை? கொள்ளையடிப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கும்படி ஒரு சார்பான நபர்களை நியமித்துக் கொள்வதுதான் கொள்கையா? 

மாண்புமிகு நீதியரசர் தேவதாஸ் மீது நடுநிலை வழுவாதவர் என்ற நற்பெயர் நிலைத்திருப்பது உண்மைதான். அது வேறு. அவரையும் மற்ற உறுப்பினர்களையும் தலைமை நீதிபதியின் ஆலோசனையின் பேரில் நியமிப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபணை? தலைமை நீதிபதியின் ஆலோசனை தேவையில்லை என்ற முடிவை ஏன் கொள்கை யாக்குகிறீர்கள்?

இப்போதிருக்கும் கமிட்டியில் எதிர்க்கட்சி தலைவர் ஆட்சே பித்தாலும் முதல்வரும், சபாநாயகரும், பெரும்பான்மை முடிவாக எந்த முடிவையும் எடுக்க முடியும். அதுவா முறை?

அதுவும் குறிப்பாக மத்திய அரசின் சட்டத்தில் தலைமை நீதிபதியை கமிட்டியில் நியமிப்பதை கட்டாயமாக ஆக்கி இருக்கும்போது தமிழக அரசு ஏன் அவரிடம் ஆலோசிப்பதை கூட தவிர்த்தது?

நீதிபதி தேவதாஸ் தவிர்த்து நீதித்துறையை சேர்ந்த ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே ஜெயபாலன், ஆர்.கிரிஷ்ணமூர்த்தி, ஆகியோரும் நீதித்துறையை சாராத முன்னாள் அரசு பணியாளர் தேர்வு கழக தலைவர் ராஜாராம் மற்றும் கோவை அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆறுமுகம் நியமிக்கப்பட்டார்கள். நீதித்துறையை சார்ந்தவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் குறையும் இல்லை. இதில் ராஜாராம் மற்றும் ஆறுமுகம் நியமனங்களை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.

இந்த லட்சணத்தில் இருக்கிறது அதிமுக அரசு ஊழலை ஒழிக்கும் அமைப்பை உருவாக்குவது.

டெல்லி மட்டும் என்ன வாழ்கிறது? நாட்டின் முதல் ஊழல் ஒழிப்பு அமைப்பான லோக் பால் அமைப்பு, ஒரு தலைவர், எட்டு உறுப்பினர்கள், அவர்களுக்கான அதிகாரிகள் எல்லாருக்கும் ஒரு அலுவலக இடத்தை மத்திய அரசு தேர்வு செய்ய முடியாமல் அவர்களை ஐந்து நட்சத்திர தி அசோக் ஓட்டலில் தங்க வைத்திருக்கிறார்கள்.  தற்காலிக ஏற்பாடாகவே இருக்கட்டும். நிரந்தரமாக இருக்கப்போகிற ஒரு அமைப்புக்கு முன்பே திட்டமிட்டு ஒரு அலுவலகம் அமைத்து தர முடியாத நிலையில்தானே இருக்கிறது மோடி அரசு?

இலங்கையில் குண்டு வெடிப்பு- இனி ராணுவ ஆட்சிதான்!! அரசியல் தீர்வு இப்போது இல்லை!

மனிதத்தை மாய்த்திருக்கிறது மதம்.

ஏசு உயிர்த்தெழுந்த நாளில் இலங்கையின் தேவாலயங்களில் ஸ்டார் ஓட்டல்களில் நடந்த 9 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 295 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். 500 பேருக்கு மேல் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த கொடுமையை செய்தவர்கள் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் என்ற தீவிரவாத இஸ்லாமிய அமைப்பு என்று  சிங்கள அரசு முடிவு செய்து 24 பேருக்கு மேல் கைது செய்திருக்கிறது. அவர்கள் யார் என்று சொல்ல மாட்டார்களாம். ஏன் என்றால் அதனால் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுமாம். அவர்களுக்கு விளம்பரம் தந்தது போல் ஆகிவிடுமாம்.

மத வெறியர்களுக்கு மனித உணர்வு அற்றுப்போய்விடும் என்று இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.

இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுப்போம் இடிந்த தேவாலயங்களை அரசு செலவில் புதுப்பித்து கொடுப்போம் என்றெல்லாம் சிங்கள அரசு சொன்னாலும் நடந்த நிகழ்வுகளில் எங்கோ தவறு தெரிகிறது.

பயங்கரவாதிகள் எப்போது தாக்கினாலும் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.  ஏன் என்றால் அப்போதுதான் உலகம் அவர்களை கண்டு அஞ்சும். அதுதான் அவர்களுக்கு வேண்டும். இதுவரை இலங்கை குண்டு வெடிப்புகளுக்கு எந்த தீவிரவாத இஸ்லாமிய அமைப்பும் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. 

இலங்கை தௌஹீத் அமைப்பு சில புத்த சிலைகளை உடைத்தார்கள் என்று வழக்குகள் உள்ளன.

ஆனால் இலங்கையில் சிங்கள பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பெரிய அளவில் பிரச்னை வெளிப்படவில்லை.

அதிலும் குறிப்பாக இலங்கை கிறிஸ்தவர்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும்  இடையே பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. பின் ஏன் முஸ்லிம் தீவிரவாத அமைப்பு கிறிஸ்தவர்களை குறி வைக்க வேண்டும்? 

ஒரு மேலை நாட்டில் மசூதிக்குள் புகுந்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தவர்களை ஒரு கிறிஸ்தவன் கொன்றான் என்பதற்காக  இது நடந்திருக்கும் என்றால் ஏன் அவர்கள் அதற்கு சிறிலங்காவை தேர்ந்தெடுக்கவேண்டும்?

srilanka-blast-afp

அங்கே 70% சிங்கள பௌத்தர்கள், 13% தமிழர்கள், 9% முஸ்லிம்கள், 7% கிறிஸ்தவர்கள் என்றால் சிங்களர்களுக்கு எதிராக மற்றவர்கள் என்ற நிலைதானே இருக்கிறது. சிறுபான்மையர் தங்களுக்குள் ஏன் மோதிக் கொள்கிறார்கள்?  

இறந்தவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு, டென்மார்க் நாட்டினர்.  நால்வர் இந்தியர். மற்றவர்கள் இலங்கை  தமிழர்கள். இவர்கள் யார் பேரிலும் சிங்கள பௌத்தர்களுக்கு அதிக அக்கறை இருந்ததில்லை.

வருகிற டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல். மைத்ரிபாலவுக்கும் ரணில் விக்கிரம சிங்கேவுக்கும் எத்தனை மோதல்கள் இருந்தாலும் பதவி பிடிக்க இனி சேர்ந்துதான் ஆக வேண்டும்.

2009ல் விடுதலை புலிகளுடன் ஆன போர் முடிவுக்கு வந்து விட்ட போதிலும் இதுவரை அமைதியாக இருந்த தமிழர்கள் இப்போது அரசியல் தீர்வை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ராணுவத்தின் மேலாதிக்கம் குறைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் குரல் கொடுக்க தொடங்கிய நிலையில் தமிழர்கள் அறவழி போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கி விட்டார்கள்.

எல்லாவற்றுக்கும் ஒரே வழி ராணுவத்தின் ஆதிக்கத்தை  மீண்டும் கொண்டு வருவதுதான். அதற்கு பயங்கர வாதிகளின் ஆபத்து இருந்தால் தான் முடியும். 

நடந்து முடித்த பயங்கரவாதிகள் தாக்குதல் அவசர நிலை பிரகடனத்துக்கு வழி ஏற்படுத்தி கொடுத்து விட்டது.

ஆக இதனால் பயன் அடையப் போவது சிங்கள பௌத்த தீவிரவாதிகள்தான்.  தாக்குதல் பற்றி உளவு அமைப்பு பத்து நாட்களுக்கு முன்பே எச்சரித்தது என்பவர்கள் ஏன் மெத்தனமாக இருந்தார்களாம்? நடக்கட்டும் என்று காத்திருந்தர்களா ?

பயன் அடையப்போகிறவர்கள் தான் இதை நிகழ்த்தி இருக்க வேண்டும்  என்ற எண்ணம்  தோன்றுகிறதா இல்லையா?

             ஒரு சிங்கள அமைச்சரின் மகன் தன்னை தன் தந்தை  சர்ச்சுக்கு போகவேண்டாம் என்று  தடுத்ததாக கூறியிருக்கிறார். முன்கூட்டியே குண்டு வெடிக்கும் என்று தெரிந்தவர்தானே எச்சரித்திருக்க முடியும்.

இன்டெர் போல் இதை விசாரிக்க ஒரு குழுவை அனுப்ப போவதாக கூறியிருக்கிறது.

மனித வெடிகுண்டு என்கிறார்கள். அதுதான் இடிக்கிறது. எவ்வளவு சதி செய்தாலும் சிங்களர்களையே மனித வெடிகுண்டாக மாற்றியிருக்க முடியாது. மனித வெடிகுண்டு என்பதே பொய்யாக இருந்தால்? இறந்து கிடந்தவர்களில் யார் அப்பாவி யார் பயங்கரவாதி என்று எப்படி கண்டறிவது?

மனிதத்தை மதம் மாய்த்திருக்கிறது. 

பயங்கரவாதம் இந்தியாவில் நிகழ்த்தப்பட்டது. பாகிஸ்தானில் மையம் கொண்டிருக்கும் பயங்கரவாதிகள் அதை நடத்தினார்கள். அவர்களுக்கும் ஸ்ரீலங்கா சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

குண்டு வெடிப்புகளை கண்டித்த தமிழ் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதனால் தமிழர் பிரச்னை தீர்வும் தள்ளிப் போகும் என்பதையும் கவலையுடன் தெரிவித்து இருக்கிறார்.

எல்லா கோணங்களிலும் ஆராய வேண்டும் என்பதே பொதுமேடையின் கருத்து.

இந்தியாவும் தன் பங்கை செலுத்தி உண்மையை கொண்டு வர முயற்சி  செய்ய வேண்டும். நமக்கும் அக்கறை இருக்கிறதே??!!

7 பேர் இறந்தபின்னும் பிடிக்காசு வாங்க நின்ற பக்த மிருகங்கள்??!!

திருச்சி அருகே முத்தையம்பாளயத்தில் கருப்புசாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அமாவாசையில் சிறப்பு பூசை நடத்தி அருள்வாக்கு கூறும் பூசாரி தனபால் பூசை முடித்து பக்தர்களுக்கு பிடிக்காசு வழங்குவதை ஒட்டி பல மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினார்கள்.

பிடிக்காசை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

அப்போது கூட்ட மிகுதியால் பக்தர்களுக்கு இடையே போட்டாபோட்டி ஏற்பட்டு ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னேறி செல்ல முயன்ற போது இரும்பு தடுப்பு சரிந்து விழுந்து அதன் கீழ் சிலர் சிக்கி இருக்கின்றனர். கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்துக் கொண்டு சென்று இருக்கிறார்கள். அதில் சிக்கி நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் அதே இடத்தில இறந்திருக்கிறார்கள். 

எல்லாம் 50-60 வயதுடையவர்கள். 12 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப் பட்டதா மனு கொடுத்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை. பூசாரிக்கு அந்த முன்னேற்பாடு செய்ய தெரியவில்லையா ஆலோசகர்கள் இல்லையா என்பதும் தெரியவில்லை.

அதற்குபின் நடந்ததுதான் கொடுமை. ஏழு பேர் இறந்து கிடக்கையில் விழா தொடர்ந்து நடந்திருக்கிறது. பூசாரியும் தொடர்ந்து ஏராளமான மூட்டைகளில் சில்லறை காசுகளை நிரப்பி வைத்துக் கொண்டு பிடிக்காசு வழங்கிக் கொண்டு இருந்திருக்கிறார். பக்தர்கள் என்போரும் தங்களுக்கு பிடிக்காசு  கிடைத்தால் போசும் என்ற மனநிலையில் பூசாரியை நோக்கி சென்று கொண்டு இருந்திருக்கிறார்கள். 

மாவட்ட ஆட்சியர் அங்கு வந்து எச்சரிக்கை செய்த பின்னர்தான் பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த மிருகங்களை பக்தர்கள் என்று யாரேனும் ஏற்றுக் கொள்வார்களா? பக்தர்கள் என்று இவர்கள் சொல்லிக் கொள்ளலாமா?

தமிழ்நாட்டில் பக்தர்கள் என்பவர்களின் தன்மை எப்படிப் பட்டது என்பதற்கு இதைவிட ஒரு சான்று இருக்க முடியாது.

பிரதமர் மோடி இறந்தவர்களுக்கு இரண்டு லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு  தலா ஐம்பதாயிரமும் அறிவித்திருக்கிறார். முதல்வர் தலா ஒரு லட்சம் அறிவித்தார்.

அவர்களுடைய நம்பிக்கை சரியா இல்லையா என்பது வேறு. அது அவர்கள் உரிமை.

                 ஆனால் சக மனிதர்கள் இறந்திருக்கிறார்களே என்ற உணர்வைக்கூட  ஒரு நம்பிக்கை தடுக்குமானால் அது பக்தியா முட்டாள்தனமா??!! 

காவல்துறை ஏன் தன் கடமையில் இருந்து தவறியது என்பதற்கும் ஒரு விசாரணை தேவை. பூசாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை நடக்கட்டும்.

தமிழ் அமைப்புகள் இதிலும் கவனம் செலுத்த வேண்டும்..

இந்து அறநிலைய துறை என்பது சொத்து பாதுகாப்புக்கு மட்டுமல்ல. மக்களை வழி நடத்தவும் வேண்டும். நம்பிக்கையின் பேரால் நடக்கும் அத்துமீறல்களை அனுமதிப்பது அல்ல மத சுதந்திரம்.

ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்??!! பின்னணியில் பிரதமர் அலுவலகமா?

பெரிய மனிதன் நல்லவனாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை.

அதுவும் பாலியல் புகாரில் சிக்கிய பிறகு அந்த அனுமானம் அர்த்தமற்றது.

அதேநேரம் சதிவேலை என்ற குற்றச்சாட்டை ஒதுக்கி விடமுடியாது. எந்த குற்றச்சாட்டும் அதனதன் சாட்சியங்களின் அடிப்படையிலேயே முடிவு கட்டப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயது முன்னாள் பெண் உதவியாளர் கூறியிருக்கும் குற்றச்சாட்டும் அந்த வகையை சேர்ந்ததுதான்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெறப் போகிறவர் அவர். முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு கூறிய நான்கு நீதிபதிகளில் இவரும் ஒருவர்.    அவரது சட்ட அறிவும் பாரபட்சமற்ற தீர்ப்புகளும் ஐயத்துக்கு அப்பாற்பட்டவை.  பணத்தால் விலைக்கு வாங்க முடியாதவர் என்று ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியை புகழ்வதே அவமானம்.  அப்படியென்றால் மற்றவர்கள் என்ற கேள்வி தானாகவே எழுமே?

அந்த பெண் உச்சநீதிமன்றத்தில் குறைந்த காலமே பணியாற்றியிருக்கிறார். அவரது கணவரும் கணவரின் சகோதரரும் தலைமைக் காவலர்கள். குற்றச்சாட்டு கூறிய பெண்ணும் கணவர் கணவர் சகோதரர் ஆகியோரும் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

குற்றச்சாட்டை 22 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பிரமாண வாக்குமூலமாக அனுப்பி வைக்கிறார். நான்கு இணைய தளங்களிலும் அந்த  வாக்குமூலம் வெளியாகிறது. அதன் அடிப்படையில் அரசு தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முன்வைத்து வாதிடுகிறார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதினைந்து நிமிடம் தன்னிலை விளக்கம் அளிக்கிறார். விசாரணையை மற்ற நீதிபதிகள் நடத்தட்டும் என்கிறார். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் தான் மிக முக்கியமானவை. பிரதமர் அலுவலகத்தின் மீதே சந்தேக ரேகை படரும் வகையில் அது இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

” என்மீதான பாலியல் புகார் அடிப்படை ஆதாரம் அற்றது. நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. எனது பனிக்காலம் முடியும் வரை பயமின்றி செயல் படுவேன். 20 ஆண்டு கால சுயநலமில்லாத என் சேவையில் தற்போது கூறப்பட்டுள்ள புகார் நம்ப முடியாதவை.

அடுத்த வாரம் மிக முக்கியமான வழக்குகளை விசாரிக்க உள்ள நிலையில் இது போன்ற பாலியல் புகார் தெரிவிக்கப்  பட்டுள்ளது. பாலியல் புகார் கூறிய பெண் குற்றப்பின்னணி உள்ளவர். அவர் மீது ஏற்கனெவே இரண்டு எப்ஐஆர்-கள் உள்ளன. அவர் ஒன்றரை மாதங்கள் மட்டுமே பணியாற்றினார். அப்போதே இந்த புகார் கூறப்பட்டது.

இது குறித்து பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதினேன். எப்படி அவர் உச்சநீதி மன்றத்தில் வேலைக்கு சேர்ந்தார்? நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்க மிகப் பெரிய சதி நடக்கிறது என சந்தேகிக்கிறேன். இதே நிலை தொடர்ந்தால் நேர்மையானவர்கள் நீதித் துறைக்கு வேலைக்கு வரவே தயங்குவார்கள்.

என்னிடம் பணம் பிடுங்க முயற்சித்து முடியாததால் இந்த புகார் கொடுக்கப் பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் பணியாற்றியும் என்னிடம் 6.80 லட்சம் மட்டுமே வங்கிக்கணக்கில் இருப்பு உள்ளது. இதை ஒரு சாதாரண உதவியாளர் மட்டுமே கூறுவதாக நான் நினைக்க வில்லை. மிகப்பெரிய சக்தி இதன் பின்னால் இருக்க வேண்டும்.  இரண்டு பதவிகள்தான் முழு சுதந்திரத்துடன் இயங்க கூடியவை. ஒன்று பிரதமர் மற்றொருவர் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி. அடுத்து வருகிற வாரங்களில் தலைமை நீதிபதி விசாரிக்க இருக்கிற மிக முக்கியமான வழக்குகள், தேர்தல் நேரத்தில், விசாரணைக்கு வர இருக்கிற நிலையில் அவர்கள் தலைமை  நீதிபதியை அசைத்துப் பார்க்க விரும்புகிறார்கள். நீதித்துறை அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது என்பதை நான் நாட்டுக்கு சொல்ல விரும்புகிறேன். ” 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த கருத்தை அரசு வழக்கறிஞர் மேத்தா, கே கே வேணுகோபால், வழக்கறிஞர் சங்க தலைவர் ராகேஷ் கன்னா போன்றோர் ஆமோதித்தனர்.

    தலைமை நீதிபதி குறிப்பிட்ட அந்த முக்கியமான வழக்குகள், ராகுல் காந்தி  மீது பாஜக எம்பி மீனாட்சி லேகி கொடுத்த நீதிமன்ற அவமதிப்பு புகார் , நரேந்திர மோடியின் வாழ்க்கை  திரைப்பட வெளியீட்டிற்கு தேர்தல் கமிஷன் அளித்த தடை, தமிழ்நாட்டில் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்கப் பட்ட லஞ்சப் பணத்தால் தேர்தலை தள்ளி வைக்கக் கோரும் மனு, போன்றவையாகும். அதற்கும் முன்பு ரபேல் விமான கொள்முதல் ஊழல் வழக்கை தள்ளுபடி செய்ததை பத்திரிகைகள் வெளியிட்ட ஆவணங்கள் அடிப்படையில் மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது குறிப்பிடத் தக்கது. 

எல்லாம் ஏதோ ஒருவகையில் பாஜக தொடர்புடையவை.

 ” பணத்தால் என்னை விலைக்கு வாங்க முடியாதென்று என் நல்ல பெயரைக் கெடுத்து நீதித்துறையை அசைத்துப் பார்க்க இந்த புகாரை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஊடக செய்திகளுக்கும் இதற்கும் ஒரு ஒற்றுமை இழை ஓடுவதை என்னால் உணர முடிகிறது”. என்கிறார் ரஞ்சன கோகாய். 

மற்ற இரண்டு நீதிபதிகள் ஆன அருண் மிஸ்ராவும் சஞ்ஜீவ் கன்னாவும் இதை விசாரிக்க முடிவு செய்தபோது இதை பத்திரிகைகள் பிரசுரிக்க தடை ஏதும் இல்லை என்றவர்கள் ஆனால் அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள் .

அந்தப் பெண் கொடுத்த பிரமாண வாக்குமூலம் நான்கு இணைய தளங்களில் முழுவதுமாக வெளியாகி இருக்கிறது. அதில் சில ஆவணங்களையும் அவர் இணைத்துப் இருக்கிறார். அது அவரே வரைந்தது போலவே இல்லை. ஒரு நிபுணத்துவம் வாய்ந்த வழக்கறிஞர் வடிவமைத்து போலவே இருக்கிறது. எனவே யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்பதை தெளிவாகவே உணர முடிகிறது. ஆனால் அது உண்மையா புனைந்ததா என்பதை விசாரணை மட்டுமே வெளிக்கொணரும்.

தன்னை முதலில் சகஜமாக நடத்தியது. தன் மைத்துனருக்கு உச்ச நீதிமன்றத்தில் வேலை வாங்கி கொடுத்தது. அதற்கு நீ என்ன செய்வாய் என்று நீதிபதி கேட்டது.  அவராகவே தன்னை அணைக்க முயற்சித்தது. தான் தள்ளி விட்டு விட்டு வெளியே ஓடி வந்தது.  தன்னையும் தன் கணவரையும் அரசு விழாவுக்கு அழைத்து உபசரித்தது.   தன்னிடம் தன் கைப்பட பல விபரங்களை எழுதி வாங்கிக் கொண்டது. தன்னை அழைத்து நீதிபதியின் மனைவியின் முன்னால் நிறுத்தி அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது. பிறகு பணி இட மாற்றம் செய்து கடைசியில் தன்னை மட்டுமல்லாமல்  தன் உறவினர்களையும் பணி நீக்கம் செய்தது  என்று அந்த பிரமாண வாக்குமூலம் ஒரு நீண்ட கதையாக தொடர்கிறது.

காலமும் இதில் மிக முக்கியம். 2018ம் ஆண்டு ஆகஸ்டு 27ம் தேதி தலைமை நீதிபதி வீட்டு அலுவலகத்துக்கு பணி நியமனம் செய்யப்பட்ட அந்த பெண் தனக்கு இழைக்கப் பட்ட பாலியல் தொல்லை அதே ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி நீதிபதி வீட்டில் இழைக்கப் பட்டதாக கூறுகிறார். ஆனால் அந்த புகாரை 2019ம்  ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ம் தேதிதான் பிரமாண வாக்குமூலம் ஆக நீதிபதிகளுக்கு அனுப்புகிறார். ஏன்  இந்த தாமதம்? இடையில் அவரும் அவரது உறவினர்களும் பணி நீக்கம் செய்யப் பட்ட போது அதற்கு  இந்த பாலியல் சம்பவம்தான் காரணம் என்று அவர் ஏன் சொல்லவில்லை?

ஏன் இந்த விசாரணையையும் உச்ச நீதிமன்றமே கண்காணிக்க கூடாது? புலனாய்வு அமைப்புகள் தவறு செய்யாது என்பதை எப்படி  நம்புவது? ஏனென்றால் இதைப்போல் ஒரு குற்றச்சாட்டு இதுவரை எழும்பியதில்லை. நீதித்துறை தான் குரலற்றவர்களின் கடைசிப்  புகலிடமாக இருக்கிறது. 

அதுவும் சுதந்திரமாக இல்லை என்றால் ஜனநாயகம் பிழைப்பது அரிது.    ஜனநாயகத்திலேயே சர்வாதிகாரத்தை நியாயப்படுத்தி பேசுபவர்கள் அதிகாரம் நிலைத்து விட்டால் என்ன செய்ய மாட்டார்கள்?

பிரதமர் அலுவலகத்தின் மீது சந்தேக நிழல் படிந்திருக்கிறது. அதை துடைத்து  எறியவேண்டிய கடமை அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. ஏனென்றால் தலைமை நீதிபதி இரண்டு நிறுவனங்களை மட்டுமே குறிப்பிடுகிறார். ஒன்று பிரதமர் இரண்டாவது தலைமை நீதிபதி. அதுவும் அடுத்த வாரம் வர இருக்கிற முக்கியமான வழக்குகளை குறிப்பிடுகிறார். அவை மத்திய அரசும் பிரதமர் அலுவலகமும்  சம்பத்தப்பட்டவை. அவைகளை அவர் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

ஆளுநர் பந்வாரிலால் புரோஹித் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது அவசர அவசரமாக ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து ஒரு அறிக்கையை வாங்கி தவறு ஏதும் நிகழவில்லை என்று அவர் காட்டிய துரிதம்தாம் அவர் மீது சந்தேகத்தை அதிகப் படுத்தியது.

அதுவும் வரலாற்றில் இல்லாத வகையில் கூற்றம் சாட்டப்பட்ட நிர்மலாதேவிக்கு ஒரு வருடம் வரை பிணை கிடைக்காமல் செய்தபோதும் பிணையில் விட்ட பிறகும் அவர் ஏதும் பேசி விடக் கூடாதென்று அதிகாரிகள் காட்டும் தேவைக்கதிகமான கண்டிப்புகளும் சந்தேகத்தை இன்னும் அதிகப் படுத்திக்கொண்டே செல்கின்றன. என்றாவது ஒருநாள் உண்மை வெளியில் வந்துதானே தீர வேண்டும்.

அதைப்போல செய்யாமல்  ரஞ்சன் கோகாய் தான் மீது குற்றச்சாட்டு இருக்கும்போது அதை அவர் விசாரிக்காமல் மற்ற நீதிபதிகள் வசம் விட்டு விட்டதுதான் சரி.

ஒன்று நடந்தே  ஆக வேண்டும். இரண்டில் ஒருவர் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் தலைமை நீதிபதி.   இல்லையென்றால் பொய்யாக குற்றம் சாட்டிய பெண்மணியும் அவருக்கு பின்புலமாக இருந்து இயக்கியவர்களும். அவர்கள் பிரதமர் அலுவலகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட. 

சுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத நீதித்துறையின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு இது. இதை உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் எப்படி கையாளப்  போகிறது என்பதை பொறுத்துத்தான் இந்தியாவில் ஜனநாயகம் பிழைக்குமா மறையுமா என்பதை கணிக்க முடியும்.

பொன்னமராவதி, பொன்பரப்பியில் சாதிய வன்முறையில் தடுமாறும் தமிழர் அடையாளம் ??!!

பொன்பரப்பி – இரண்டாவது முறையாக பிரபலப்படுகிறது.

முதல் முறை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தமிழரசன் வங்கியை கொள்ளையடிக்கும் போது பொதுமக்களாலேயே கல்லால் அடித்து கொல்லப்பட்டார்.

இப்போது பாராளுமன்ற தேர்தலில் திருமாவளவனின் பானை சின்னத்திற்கு வாக்களிக்க இருந்த குற்றத்திற்காக தலித் வீடுகள் இந்து முன்னணி யினர் – பாமக கூட்டு முயற்சியில் அடித்து நொறுக்கப் பட்டிருக்கின்றன. 

இரு தரப்பும் வழக்கு – சாலை மறியல்  போராட்டம் என்று இறங்கி விட்டார்கள்.    காவல் துறை வழக்கம் போல நடவடிக்கையில் சுணக்கம் காட்டி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி – யாரோ இரண்டு பேர் வெளிநாடு ஒன்றில் இருந்து வாட்ஸ் அப்பில் ஒரு சமுதாயத்தை குறித்து இழிவாக பேசுவது வைரலாக மாவட்டம் முழுதும் பரவி அவர்கள் சாலை மறியல் என்று இறங்க மறு தரப்பினர் மோதலுக்கு தயாராக காவல்துறை 144 தடை உத்தரவு போடும் வரை சென்றிருக்கிறது.

இங்கே முக்குலத்தோர்-முத்துராஜா வகுப்பினரிடையே மோதல் கூர் படுத்தப்படுகிறது. யாரோ இரண்டு பேர் பேசினால் அவன்தானே குற்றம் செய்கிறான். நடவடிக்கை எடுத்தால் பதற்றம் குறையும். காவல் துறை தான்  பொறுப்பு ஏற்று பதட்டத்தை தணிக்க வேண்டும். கால தாமதம் ஆனால் பிரச்னை மற்ற மாவட்டங்களுக்கும் பரவும் என்பது தெரியாதா?

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியை பாமக வினர் கைப்பற்றி வாக்குப் போட்டுக் கொண்டதாக குற்றச்சாட்டு.  தேர்தல் ஆணையம் மறுத்தாலும் போராட்டம் தொடர்கிறது.அன்புமணி ராமதாஸ் தேர்தலுக்கு முன் வாக்குச்சாவடியில் நாம்தான் இருப்போம் என்று உசுப்பேற்றி பேசியதுதான் பிரச்னைக்கு மூலம் என்கிறார்கள்.

வன்னியர் – தலித் ஒற்றுமைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தடையாக இருப்பது உண்மையா இல்லையா? திருமாவளவன் மட்டும்தான் தலித் மக்களின் அடையாளமா என்றால்  ராமதாஸ் மட்டும்தான் வன்னியரின் அடையாளம் என்பதை எப்படி ஏற்பது?

ஒற்றுமையை விதைக்க வேண்டிய நேரத்தில் பகைமையை விதைக்கிறார்கள்.    தேர்தல் இன்று வரும் நாளை  போகும். தொடர்ந்து ஒன்றாக வசிக்க வேண்டிய மக்களை சாதி, மதம் காட்டி பிரித்து வைப்பது என்ன கொடுமை?!

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதை விட காவல்துறை தலையிட்டு கடுமையான நடவடிக்கை களை குற்றம் செய்தவர்கள் மீது எடுத்தால்தான் அந்தப் பகுதிகளில் அமைதி திரும்பும். இல்லையென்றால் நீறு பூத்த நெருப்பாக வன்மம் புகைந்து கொண்டே இருக்கும். 

இன்னும் நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல்கள்  நடக்க வேண்டி இருக்கிறது.   இதுவரையே   பாராளுமன்ற தொகுதிக்கு  வாக்குக்கு ரூபாய் 200-300 யும்   சட்ட மன்ற தொகுதிகளுக்கு ரூபாய் 500, 1000, 4000 என்று கொடுக்கப் பட்டுவிட்டதால் இனி வர இருக்கிற நான்கு தொகுதிகளுக்கும் ரு 5000மும் அதற்கும் மேலும் கொடுக்கப் படலாம் என்கிற சூழ்நிலைதான் நிலவுகிறது.

அங்கும் மக்களை திசை திருப்ப சாதி கலவரங்களை தூண்டி வாக்குகள் வாங்கவும் திட்டமிடும் வாய்ப்புகள் அதிகம். எனவே காவல் துறை மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.

தேர்தல் லாபத்திற்காக மக்களின் எதிர்காலத்தையே பாழாக்க தயங்காத அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு ஒதுக்க  வேண்டும் தமிழ்ச்சமுதாயம்.

சாதியை ஒழித்து தமிழனாய் ஒன்றிணைய வில்லையென்றால் தமிழன்னை நம்மை மன்னிக்கவே மாட்டாள். நமது அடையாளம் தமிழர் என்பது உண்மையானால் தமிழ் ஒன்றே தமிழர்களை ஒன்றிணைக்கும். சாதி மதங்கள் அல்லவே அல்ல. ஏனெனில் இரண்டுமே இடையில் வந்தவை.

நாத்திகர் என ஏன் சான்றளிக்கக் கூடாது? குஜராத் உயர் நீதிமன்றம் கேள்வி??!!

ராஜ்வீர் உபாத்யாய ஒரு ஆட்டோ ரிக்சா ஓட்டுனர்.

அவர் கரோடா பிராமின் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.

வாழ்க்கை முழுதும் சாதி காரணமாகவே ஒவ்வொரு கட்டத்திலும் போராடிக் கொண்டே வாழ்ந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்து மதத்தில் இருந்து விலக முடிவெடுத்தார். ஆனால் வேறு எந்த மதத்திலும் சேர விரும்பவில்லை. எனவே நாத்திகர் ஆக வேண்டும் என முடிவெடுத்தார்.

குஜராத்தில் ‘மத சுதந்திர சட்டம்” அமுலில் உள்ளது. அங்கு மதம் மாறினால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

அதுவே வேடிக்கை. மத சுதந்திரம் அமுலில் இருந்தால் எந்த குடிமகனும் தன் விருப்பப் படி மதம் மாற உரிமை உண்டு என்றுதானே பொருள். அதற்கு எதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி?. வேண்டுமானால் அவருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று விதி வைக்கலாம். அனுமதி வேண்டும் என்பது சுதந்திர உரிமையை கட்டுப்படுத்துவதாக ஆகாதா?

ஆனால் ராஜ்வீர்  மாவட்ட ஆட்சியரிடம் தான் இந்து மதத்தில் இருந்து நாத்திகர் ஆகி விட்டதாகவும் அதற்கான சான்றிதழை தரும்படியும் கேட்டார். அதை இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போட்ட மாவட்ட ஆட்சியர்   மத சுதந்திரம் என்பது ஒரு மதத்தில் இருந்து வேறொரு மதத்துக்கு மாறுவது தானே தவிர நாத்திகம் என்பது ஒரு மதம் ஆகாது என்பதால் சான்று வழங்க முடியாது என மறுத்தார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு செய்த ராஜ்வீரின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அரசுக்கு அறிவிப்பு  அனுப்ப உத்தரவிட்டு ஏன் நாத்திகர் என சான்று வழங்க கூடாது என கேட்டு வழக்கை ஒத்தி வைத்திருக்கின்றனர்.

மத சுதந்திர சட்டத்தில் தகுந்த திருத்தம் செய்யும்படியும் ராஜ்வீர்  கேட்டுக்  கொண்டிருக்கிறார். ஒரு சட்டத்தையே ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி  திரித்து கூறுகிறார் பாருங்கள். ஐஏஎஸ் படித்த அவருக்கு சட்டம் தெரியாமல் இருக்க  முடியாது.

பொதுமேடை வலியுறுத்தி வருவதைப் போல நாத்திகராக இல்லாமல் அதே நேரம் எந்த மதத்தையும் சாராமல் ஆத்திகராக இருப்பவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்.     

அதைத்தான் வள்ளுவரும், திருமூலரும், வள்ளலாரும் வலியுறுத்தி வந்தார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதுவே தமிழர் ஆன்மிகப் பாதை. 

அதுவே உண்மையான ஆன்மிகப் பாதை. அது தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் அகில உலகத்தாருக்கே வழி காட்டும் பாதை.

உலகில் மத சண்டைகள் தீர இது ஒன்றே வழி.!