Home Blog Page 45

பரிசுப்பெட்டகம் தினகரனுக்கு தோதான சின்னம்? உள்ளே என்ன இருக்கும்??!!

தொப்பி  குக்கர், சாவி மூன்றும் கேட்டு கடைசியில் பரிசுப்பெட்டகம் சின்னத்தை தினகரனின் அமமக வுக்கு வழங்கி இருக்கிறது தேர்தல் கமிஷன்.

இருபது ரூபாய் டோக்கன் ஆர் கே நகரில் கொடுத்தது போல் இங்கு தினகரன் என்ன கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருக்கிறது.

ஜெயலலிதா கொடுத்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான பதினாறு பொருட்களை இது காட்டுகிறது என்று தினகரன் சொல்லும்போது இப்போது நீங்கள் என்ன வைத்துக் கொடுக்கப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

இந்த சின்னத்துக்கு 500 வாக்குகள் தான் கிடைக்கும் என்று ஜெயக்குமார் சொல்கிறார்.

சுயேச்சைகள் ஆகத்தான் இவரது கட்சி வேட்பாளர்கள் கருதப்படுவார்கள் என்பதால் எல்லா சுயேச்சைகள் வாங்கும் வாக்குகளை எப்படி ஒரு கட்சியின் வாக்குகள் ஆக தேர்தல் கமிஷன் எடுத்துக் கொள்ளும் என்பதும் கேள்விக்குறி.

எப்படி இருந்தாலும் இனி தினகரன் அதிமுக கட்சிக்கு உரிமை கோர முடியாது.

தனிக்கட்சி என்பதால் மற்றவர்களிடம் இருந்து எவர் என்னென்ன வகையில் வேறுபட்டு நிற்கிறார் என்பதை இவர் விளக்கியாக வேண்டும்.

ஒரு ஆர் கே நகர் வெற்றியை வைத்து இதுவரை கட்சி நடத்த இவரால் முடிந்தது.   ஆனால் இந்த தேர்தலில் தோற்றால் கட்சி நடத்தும் தகுதியை இழந்து விடுவார்.

எப்படியோ பரிசுப்பெட்டகம் தினகரனை கரை சேர்க்குமா அல்லது அரசியலில் இருந்து விலக்கி வைக்குமா என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வந்தபின் தான் தெரியும்.

செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் திறனையும் அரசியலாக்கிய மோடி??!!

இஸ்ரோ விஞ்ஞானிகள் 300  கிலொ மீட்டர் தூரம் பயணம் செய்து செயற்கைக் கோள்களை அழிக்கும் ஏவுகணை தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது இந்தியாவின் ஆற்றலை உலகுக்கு பறை சாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்து இந்த தொழில் நுட்பம் கொண்ட நாடாக இந்திய விளங்குகிறது. நமக்கு  பெருமைதான். இந்திய விஞ்ஞானிகள் இந்த ஏவுகணை 1000 கிமீ தூரம் வரைகூட போகும் என்கிறார்கள்.

முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் இந்த தொழில் நுட்பத்தை நாம் 2007 லேயே கொண்டிருந்தோம் என்கிறார். சீனா 12 ஆண்டுகளுக்கு முன்னரே இதை செய்து காட்டிவிட்டது.

இதை ஏன் பிரதமர் அறிவிக்க வேண்டும். நான் நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்லப் போகிறேன் என்று மோடி அறிவித்ததுமே ஏதோ அரசியல் அறிவிப்பாக இருக்கும் என்று பரபரத்தது ஊடகங்கள். ஆனால் மோடியோ விஞ்ஞானிகளின் சாதனையை கூறி விட்டு ஏதோ தன் அரசால் தான் இது முடிந்தது என்று தேர்தல் சாதனையாக கூறிக்கொண்டார்.

மக்கள் இதனால் எல்லாம் மோடி மீது கொண்டிருக்கும் கருத்தை மாற்றிக் கொள்ளப்போகிறார்களா என்ன?

ஏற்கனெவே விண்வெளியில் மாசுகள் படர்ந்திருப்பதற்கு அமேரிக்கா கவலை  தெரிவித்திருக்கிறது .

எல்லா நாடுகளும் செயற்கை கோள்களை தங்கள் வசதிக்காக ஏராளமாக விண்வெளியில் ஏவி விட்டிருக்கிறார்கள்.  இவை எல்லாம் கொஞ்ச காலத்திற்கு  பிறகு வலு விழந்து விடும். ஆனாலும் விண்வெளியில் மிதந்து கொண்டிருப்பதால் என்னென்ன ஆபத்துக்கள் நேரும் என்பதை கணிக்க வேண்டும்.

இது தொடர்பாக மோடியின் இந்த அறிவிப்பு தேர்தல் விதிமுறைகளை மீறியதா என்பது குறித்து மார்க்சிஸ்டுகள் புகார் கொடுத்திருக்கிறார்கள்.  தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கையா எடுக்கப் போகிறது.

கடைசிவரையிலும் மக்களை திசை மாற்ற முயற்சிப்பதை மோடி மாற்றவே மாட்டார்.

மத்திய அரசுப் பணி நியமனங்களில் வட நாட்டவரே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துவது எப்படி?

தமிழகத்தில் மத்திய அரசின் துறைகளாக ஐம்பதுக்கும் மேலான அலுவலகங்கள் இருக்கின்றன.

வருமான வரித்துறை, கலால், பாஸ்போர்ட், சுங்கம், ரயில்வே, என்று ஏராளமான துறைகள்.

இவை அத்தனையிலும் 90% வட மாநிலத்தவரும் 10% மட்டுமே தமிழர்களும் இருப்பது மர்மமாக உள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் செயல்படுவது முன்பு மண்டல அளவில் தேர்வு முறை இருந்ததால் இங்கே உள்ளவர்களுக்கு உரிய பங்கு கிடைத்தது. பின்னர் உச்ச நீதி மன்ற உத்தரவின் பேரில் அகில இந்தியாவும் ஒரே  ரேங்க் முறையை பின்பற்ற வேண்டி வந்ததால் வட மாநிலத்தவர் ஆதிக்கம் அதிகமாகி விட்டது என்று காரணம் சொன்னாலும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாட்டு சார்பில் ஏன் தகுந்த முறையில் வழக்காட வில்லை என்ற கேள்வி எழுகிறது.

எல்லாவற்றையும் விட இங்கே அரசியல் செய்பவர்கள் ஏன் இந்த முக்கியமான பிரச்னையை கையில் எடுத்து கொண்டு பரிகாரம் காணவில்லை.?

இந்தி ஆங்கிலம் மட்டுமே  தேர்வு மொழி என்றால் தமிழ் படித்தவன் மத்திய அரசின் துறையில் பணி புரிய தகுதி படைத்தவன் ஆக மாட்டானா?

தேர்வு முறையில் முறைகேடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஹரியானாவில் உள்ளவன் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெறுகிறான்.  தமிழ் நாட்டு மாணவன் தோல்வியடைகிறான் என்றால் தேர்வு முறையில் ஊழல் நடைபெருகிறது என்றுதான் பொருள்.

கடந்த பத்தாண்டுகளில் நடந்த மத்திய அரசுப் பணி தேர்வுகளை ஒரு தகுதி படைத்த ஆய்வுக் குழுவிடம் ஆராயச் சொல்லி தவறு செய்தவர்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுத்தால் தான் இது போன்ற தவறுகள் இனி நடவாமல் தடுக்க முடியும்.

கேள்வித்தாள்கள் அந்தந்த பிராந்திய மொழிகளில் தயார் செய்ய வேண்டும். அதேபோல் தேர்ச்சி பெற்றவர்களை அந்தந்த மண்டலங்களில் பணி அமர்த்த வேண்டும்.

அகில இந்தியா என்ற பெயரில் தமிழகத்தை வடவர்களின் காலனியாக மாற்றிட அனுமதிக்கக் கூடாது.

இங்கே இயங்கும் சாலை சுங்க வரி வசூலிக்கும் நிறுவனங்கள் கூட வட மாநிலத்தில் இருந்து ஊழியர்களை நியமித்தால் இங்கே இருப்பவர்களுக்கு வேறு என்ன வேலை தருவீர்கள்?

ஏழைகளுக்கு மாதம் ரூபாய் 6,000 தருவோம் என ராகுல் சொல்வது நடக்குமா?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 கோடி குடும்பங்கள் அதாவது 25 கோடி மக்கள் பயனடையும் வகையில் ஆண்டுக்கு ரூபாய் 72,000/- அதாவது மாதம் ரூபாய் 6,000/- கொடுத்து குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்வோம் என்று ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார்.

முடியுமா என்பது பெரிய கேள்வி. பிரதமர் மோடி சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6,000/- கொடுப்போம் என்று அறிவித்ததை ஒட்டி காங்கிரசின் உறுதிமொழியாக நாங்கள் ஆண்டுக்கு  ரூபாய் 72,000/- தருவோம் என காங்கிரஸ் அறிவித்திருக்கிறது .

3.6 லட்சம் கோடி செலவு  அல்லது உள்நாட்டு உத்தேச மொத்த உற்பத்தியில் 1.88%  அல்லது ஆண்டின் மொத்த வரி வருவாயில் 24% அல்லது உத்தேச குறைந்த பட்ச வருவாயில் இது இந்தியாவின் தனி நபர் வருவாயாக  57% என்று மதிப் பிடப்பட்டிருகிறது.

ஏறத்தாழ 950 மத்திய அரசின் நலத்திட்டங்களில்  11 மட்டுமே  50% நிதிநிலை ஒதுக்கீட்டை பெறுகின்றன என்றும் மற்ற 939  திட்டங்களும் மறு  மதிப்பீடு செய்யப் பட வேண்டும் என்றும் கூறப் படுகிறது.

படிப்படியாக இது அமுல்படுத்தப் படும் என்று  கூறினாலும் இது சாத்தியக் கூறா அல்லது  முடியாததா என்பது பற்றி விவாதங்கள் நடக்கின்றன.

ப.சிதம்பரத்தின் உத்தி இது என கருதப்படுகிறது. அதை உறுதி படுத்தும் வகையில்  சென்னையில்  இன்று ப சிதம்பரம் இது எப்படி சாத்தியம் என விளக்கி பேட்டி கொடுத்தார்.

இந்திரா காலத்தில் ஏழ்மையை ஒழிப்போம், Garibi Hatao என்ற முழக்கத்தை முன்னெடுத்தார். வென்றார். ஆனால் வறுமைதான் ஒழியவில்லை.

ஆனால் இன்றைய கால கட்டத்தில் பொருளாதார ரீதியில் பிற்பட்டோருக்கு அரசு நிதி  உதவி செய்வது அவசியம் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது.

பிரதமர் அறிவித்தால் முடியும் எதிர்க்கட்சி தலைவர் அறிவித்தால் முடியாதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஆக ஏழைகளை அந்த நிலையிலேயே வைத்துக்கொண்டு இனி ஆட்சிக்கு வரமுடியாது  என்ற உணர்வு ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும்  வந்திருப்பது நல்லதே.

முடியுமா முடியாது என்பதை தாண்டி மக்கள் நிச்சயம் இந்த அறிவிப்பால் ஈர்க்கப் படுவார்கள் என்பது மட்டும் உறுதி.

நான் பிராமணன் எனக்கு பணி செய்யத்தான் காவலாளிகள் தேவை; சுப்பிரமணியன் சுவாமியின் திமிர் பேச்சு ??!!

” சவுக்கிதார் மோடி ‘” அதாவது காவல்காரர் மோடி என்று தன்னைத்தானே நாட்டின் காவலாளி என்று அழைத்துக் கொண்டார் பிரதமர் மோடி.

உடனே அடுத்த கட்ட தலைவர்கள் அனைவரும் அமித்ஷா, அருண்ஜெட்லி, சுஷ்மாசுவராஜ் உட்பட தங்களை சவுக்கிதார் என்று பெயருக்கு  முன்னே போட்டுக் கொண்டு விளம்பரப் படுத்திக் கொண்டனர்.

ஆனால் சுப்பிரமணியசாமி பாஜக வின் உயர் மட்டக் குழுவில் இருந்தாலும் மோடியையும் அமைச்சரவை சகாக்களையும் நேரம் வரும்போது எல்லாம் தாக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அவருக்கு பதவி கொடுக்காமல் அதே நேரத்தில் வெளியிலும் விட்டு விடாமல் பாஜக சலுகை கொடுத்து வருகிறது.

பார்ப்பனர் என்பதால் சு. சாமிக்கு கிடைக்கும் சிறப்பு  சலுகை  அது. வேறு யாரும் சு. சாமி  போல் பேசிவிட்டு பாஜக வில் நீடிக்க முடியுமா?

தான் தன்னை சவுக்கிதார் என்று அழைத்துக்  கொள்ள விரும்பாத சு. சாமி  அதற்கு சொன்ன விளக்கம் தான் அவரது சனாதன திமிரை காட்டுகிறது.

இவர் பார்ப்பனராம். இவர்  மற்றவர்களுக்கு காவலாளியாக இருக்க மாட்டாராம். மாறாக மற்றவர்கள்  தான் இவருக்கு காவல் வேலை செய்ய வேண்டுமாம். இதைவிட சனாதன திமிரை வெளிக்காட்ட முடியுமா?

அருன்ஜெட்லிக்கும் பிரதமர் மோடிக்கும் பொருளாதாரம் தெரியாது என்று சொல்கிறாரே?  இவரை ஏன் பாஜக கட்சியில் வைத்திருக்கிறது?

தமிழ்நாட்டுக்கு  வந்து ஏழு பேரை விடுவிக்க முடியாது என்கிறார். பாஜக வின் தேர்தல் அறிக்கையை  குப்பையில் போட வேண்டும் என்கிறார்.  பார்ப்பனீயம் அதிகாரத்தில் இருந்தால் எப்படிஎல்லாம் மற்றவர்களை அடக்கி ஒடுக்கும் என்பதற்கு சு. சாமி  சிறந்த உதாரணம்.

சின்னத்தில் தேர்தல் கமிஷன் செய்யும் சின்னத்தனம்??!!

தேர்தல் கமிஷன் ஆளும் பாஜக வின் ஊதுகுழலாக செயல்படுகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் அதை கொஞ்சமும் வெட்கமில்லாமல் செய்கிறார்கள் என்பது கவலைக்குரியது.

அங்கீகாரம் இழந்தாலும் பாமக கேட்டவுடன் மாம்பழம் கிடைக்கிறது. அது பாஜக வின் கூட்டணிக்கட்சி.

ஆனால் சீமான் பழைய சின்னம் கேட்டால் மறுக்கப் பட்டு புதிய சின்னம் கொடுக்கப் படுகிறது.  பாஜகவுக்கு எதிரிக்கட்சி.

திருமாவளவன் கேட்டால் மோதிரம் மறுக்கப்பட்டு பானை கொடுக்கப் படுகிறது. எதிர்க்கட்சி கூட்டணி.

தினகரன் குக்கர் கேட்டால்  பதிவில்லை  என்ற காரணம் காட்டி மறுக்கப் பட்டு புது சின்னம் என்கிறது. இது சம்பந்தமாக உச்சநீதி  மன்றம் இன்று தினகரன் கட்சி வேட்பாளர்களை சுயேச்சைகள் ஆக பாவித்து அனைவருக்கும் குக்கர் சின்னம் இல்லாமல் ஒரு பொது சின்னம் கொடுக்க பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது. இதுவே அவருக்கு வெற்றிதான்.

இவர்களுக்கு என்ன வரையறை? ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களா வேண்டாதவர்களா என்ற ஒரே வரையறைதான்.

தேசிய  மலர் தாமரை பாஜக வுக்கு தரப்பட்டது எப்படி? அவர்கள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்கள் .

கை சின்னம் காங்கிரசுக்கு. எல்லாருக்கும் இப்படி  எளிய சின்னம் கிடைக்குமா?

மிருகங்கள் முடியாது என்றால் யாணை பகுஜன் சமாஜ் கட்சிக்கு எப்படி?  சிங்கம், குதிரை சின்னங்கள் கிடைக்கின்றனவே?

லாந்தர் சைக்கிள் இரட்டைப்பூ, கடிகாரம், சீப்பு, டெலிபோன், தீபம், தராசு, சங்கு, வில் அம்பு, கண்ணாடி, கலப்பை, கார், என்று ஏராளமான சின்னங்கள்.

இங்கு திமுகவும்  உதயசூரியனும் பிரிக்க முடியாதவை.

அதிமுகவும் இரட்டை இலையும் பிரிக்க முடியாதவை.

வாக்களிப்பவர்கள் சின்னத்தை மட்டுமே பார்த்து வாக்களிப்பதில்லை.  வேட்பாளரையும் பார்த்துதான் வாக்களிக்கிறார்கள்.

தீவிரமான கட்சிப் பற்றுள்ளவர்கள் மட்டுமே சின்னத்திற்கு வாக்களிப்பார்கள்.

ஆனால் தேர்தல் கமிஷன் எப்படி இருக்க வேண்டும்.? நடுநிலையாக இருக்க வேண்டுமல்லவா?

யார் எதைக் கேட்டாலும், மற்றவர்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லாதபோது இருந்தாலும் அதில் நியாயம் இல்லாதபோது கொடுக்க வேண்டியதுதானே தேர்தல்  கமிஷனின் வேலை.

தேர்தல் கமிஷன்  ஒருதலைப் பட்சமாக செயல்படுவது  ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. 

இப்படி பாகுபாடு பார்க்கும் தேர்தல் கமிஷன் தேர்தல்  முடியும் வரை இன்னும் என்னென்ன செய்யும் என்பதுதான் கவலைக்குரியது.

தேர்தலில் போட்டிடாததற்கு வெட்கப் படாத கமல்ஹாசன் தமிழினத்தின் எதிரி ??!!

கமல்ஹாசன் கட்சி தொடங்கி தேர்தலில் நிற்பது அவரது உரிமை.

மக்கள் ஏற்றுக்கொண்டால் தாராளமாக எந்தப் பொறுப்பிற்கும் வரலாம்.

ஆனால் ஏமாற்றுவதையே ஒரு கலையாக செய்து வருவத்தைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அரசியலுக்கு வந்த பின் எத்தனை வேடம் போட்டிருக்கிறார் என்பதை நினைத்துப்  பாருங்கள்.

முதலில் மீசை வைக்காமல், பிறகு சண்டியர் பாணி மீசை, பிறகு இளைஞர் மீசை, தாடியோடு கொஞ்ச நாள், இப்போது அரைகுறை மீசை என்று சினிமாவில் சீனுக்கு சீன் கெட்டப்பை மாற்றுவதுபோல் அரசியலிலும் செய்து வருகிறார்.

ஏன் இந்த அரசியல் நாடகம்.?

கொள்கை என்றாலே என்னவென்று விளக்கம் சொல்லவே மாட்டார். சொன்னால் யாராவது எதிரியாவார்களே? சொல்லாமல் விட்டால் எல்லாரும் ஏமாறுவார்கள்.

ஒரே நேரத்தில் தேசியத்தையும் திராவிடத்தையும் தமிழியத்தையும் ஏமாற்ற வேண்டும். அதற்கு கொள்கை சொல்லக் கூடாது.

அவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் சொல்லக் கூடாது. எதிரியாகி விடுவார்களே?

அதேபோல் எந்தப் பிரச்னையிலும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவே மாட்டார். யாருக்கும் புரியாமல் பேசுவதை திட்டமிட்டே செய்கிறார்.

ஸ்டெர்லைட், காவிரி , முல்லை பெரியாறு, பெட்ரோலிய மண்டலங்கள் , இலங்கை தமிழர், தமிழ் மொழி பாதுகாப்பு, இந்தி திணிப்பு , தமிழர் உரிமை என்று எதை எடுத்தாலும் உறுதியான நிலைப்பாட்டை கமலஹாசன் சொன்னதே கிடையாது. எதற்கெடுத்தாலும் மழுப்பலான இரட்டை நிலைப்பாட்டைத் தான் பதிலாக கூறுவார்.

நோகாமல் நோன்பிருப்பது, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன், என்ற பழமொழிகள் அவர் போன்றவர்களால் தான் உருவாகி இருக்க முடியும்.

நாத்திகர் என்று பீற்றிக் கொள்கிறவர் எப்போதாவது பெரியாரை உயர்த்திப்  பிடித்திருகிறாரா? அண்ணாவை பாராட்டி பேசியிருக்கிறாரா? அடக்கி வைக்கப்பட்டவர்கள் மீள் எழுவது எப்படி என்று பேசியிருக்கிறாரா?  நூற்றாண்டுக் காலமாக தமிழ் தன் இடத்தை பெறுவதை தடுத்தவர்கள் யார் என்று பேசியிருக்கிறாரா?

இனத்தைப் பற்றி மொழியைப் பற்றி பேசாத கமல்ஹாசன் தமிழ்நாட்டில் அரசியல் செய்யத் துணிகிற செயல் பார்ப்பனீயத்தின் சூழ்ச்சி இல்லையா?

ஏமாந்த தமிழர்கள் அவருடன் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்கள் மீது  தவறில்லை.

அரசியலில் அணிவகுத்து நிற்கும் அவலங்கள் அவர்களை அவரிடம் அடைக்கலம் அடையச்  செய்திருக்கிறது.

ஆனால் உங்கள் வெற்றி யாரை பலனடையச் செய்யும்? இன எதிரியை உள்ளிருந்தே கொல்லும் நோயை?

தான் உண்மையானவர் என்று நிரூபிக்க கமல்ஹாசன் எதையுமே செய்ய வில்லை.

எத்தனையோ பார்ப்பனர்கள் பொதுஉடைமை இயக்கங்களில் பங்கேற்று  மிக உயர்ந்த பதவிகளில் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். யாரும் அவர்கள் மீது இனப் பாகுபாடு குற்றச்சாட்டு கூறியதில்லை.

இப்போதும் கூட எல்லாரையும் களத்தில் இறக்கி விட்டுவிட்டு தான் ஒதுங்கி நிற்க வேண்டிய அவசியம் என்ன என்பதற்கு அவர் கூறும் விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படியாகவா இருக்கிறது?

சொல்லுவதைக் கேட்கும்போதே யோவ் நீ சரியான ஏமாற்றுக் காரனைய்யா என்றுதானே எண்ணம் தோன்றுகிறது.

ஏமாறும் தமிழினம் இவரிடமும் ஏமாந்து விடக் கூடாதே என்ற ஏக்கமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை .

  தோல்வி நிச்சயம். ஆனால் தோல்வியால் பார்ப்பனீயம் ஒருபோதும் துவண்டு விடாது.  அதுதான் நமக்கு அச்சம்.    

    அச்சம் அகல ஒரே வழி பெரியாரைத் துணைக் கொள்வதுதான். 

தேர்தலுக்குப் பிறகு காணாமல் போகும் கட்சிகள் பட்டியல்??!!

மத்தியில் ஆட்சி மாற்றம் வரலாம் அல்லது நீடிக்கலாம்.

தோற்றாலும் வெற்றி பெற்றாலும் தேசிய கட்சிகள் காணாமல் போய் விடப் போவதில்லை.

மாநிலத்தில் அப்படி அல்ல. ஆட்சி நீடித்தால் அஇஅதிமுக கட்சி நீடிக்கும். தோற்றால் ?????

ஆனால் தேர்தலுக்குப் பிறகு சில கட்சிகள் காணாமல் போகப் போவது உறுதி.  அவை எவை ?

மாநிலக் கட்சிகளில் வென்றாலும் தோற்றாலும் கட்சி தொடர்ந்து செயல்படும் என்ற நிலையில் உள்ள கட்சிகள் எவை. ?

விவாதத்திற்கு அப்பாற்பட்டு நிற்கும் கட்சி திமுக.. கொள்கை பலம் அடிமட்ட தொண்டர் பலம் இரண்டும் பின்னிக் கிடக்கும் கட்சிக்கு ஏது வரையறை?

திமுக அணியில் உள்ள கட்சிகளில் தேசிய கட்சிகள் தவிர மாநிலக் கட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மறுமலர்ச்சி திமுகவும் சித்தாந்த அடிப்படையில் செயல்படும் கட்சிகள். எனவே அவைகளை வெற்றி தோல்விகள் அரசியல் களத்தில் இருந்து அகற்றிவிட முட முடியாது. அவர்களும் பல வெற்றி தோல்விகளை சந்தித்து வந்திருப்பவர்கள்.

kalaignar-admk
kalaignar-admk

இந்திய ஜனநாயக கட்சி இப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறது. அவர்கள் தனி அடையாளத்தை வலியுறுத்தவில்லை. தவிரவும் அது சாதி அடிப்படையில் இயங்கும் கட்சி. ஒன்று தன் அடையாளத்தை இழக்க வேண்டும் அல்லது திமுகவில் கரையவேண்டும். கொங்கு வேளாளர் கட்சி சாதி கட்சி.  உதய சூரியன் சின்னத்தில் நிற்பதால் மெல்ல மெல்ல தன் தனித்தன்மையை அது இழக்கும். ஆனால் செயல் படும்.

ஆனால் அதிமுக அணியில் உள்ள கட்சிகளில் தேசிய கட்சியான பாஜகவைத் தவிர மற்றவர்கள் அப்படி அல்ல. புதிய தமிழகம் சாதிக்கட்சி. சாதி இருக்கும்வரை கட்சியும் இருக்கும். புதிய நீதி கட்சி முதலியார் கட்சி. ஏ சி சண்முகம் பணம் உள்ளவர்.  கட்சியை நடத்துவார் பெயர் அளவுக்கு. ஜி கே வாசன் காங்கிரஸ் போர்வையில் கட்சி நடத்தினாலும் அது காணாமல் போகும் கட்சி பட்டியலில் முதலில் இருக்கிறது.

அதிமுகவும் அமமுகவும் என்ன ஆகும் என்பதே முக்கியம். தொவியை தாங்கிக் கொண்டு கட்சியை நடத்த எடப்படியும் ஒ பி எஸ் சும் தயாராக இருப்பார்களா?    செலவு செய்வார்களா?  எந்த தத்துவத்தை முன்னெடுப்பார்கள்? எந்த பரப்புரையிலும் அண்ணாவையும் பெரியாரையும் மருந்துக்கு கூட சொல்லாதவர்கள் அவர்கள். பாஜக கோபித்துக் கொள்ளுமே?  சில அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளும் பாஜகவினர் பாரத் மாதா கீ ஜெய் என்று கோஷம் எழுப்பி இவர்களையும் கோஷம் போட தூண்டுகிறார்கள் என்று செய்தி வருகிறது.

neet bjp
neet bjp

கடைசியில் பாஜகவில் கரைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை பாஜக உருவாக்கி வருகிறது.  அதன் மூலம் தமிழ்நாட்டில் வலுவான அடித்தளத்தை அதிமுகவின் செலவில் கட்டி எழுப்புவதுதான் பாஜக வின் திட்டம்.

அதற்கு தெரிந்தோ தெரியாமலோ அதிமுகவினர் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக திமுகவை விட அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் கட்சிதான். ஆனால் அதற்கு காரணம் ஆன எம்ஜியாரும் ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் கலைஞர் எதிர்ப்பும் பொருள் அற்ற நிலையில் அதிமுகவை கட்டிக் காப்பது எது. பதவி மட்டும்தான். அது போனால் கட்சியும் போய்விடும் என்பதுதான் இன்றைய உண்மை நிலை.

எனவே வெற்றி தோல்விகளை தாண்டி இது ஒரு திருப்பு முனை தேர்தலாக இருக்கப்  போகிறது.

அமமுக எந்தக் காரணம் கொண்டும் பாஜகவோடு இணக்கம் காட்ட மாட்டோம் என்று சொல்லி வந்தாலும் தோல்வி காட்டப் போகும் பாதை அதுவாக இருந்தால் ஏற்றக் கொள்ள தயங்க மாட்டார்கள்.

தேமுதிக – விஜயகாந்த் உடல்நிலையை பொறுத்து அதன் உயிர்ப்பு இருக்கும். பேச முடியாமல் இருக்கும் விஜயகாந்தால் எத்தனை காலம் கட்சியை முகத்தை காட்டி மட்டும் கட்டி இழுத்துக் கொண்டு போக முடியும்? வென்றால் கட்சி தொடரும்.    தோற்றால் காணாமல் போகும்.

நாம் தமிழர் வென்றாலும் தோற்றாலும் தொடரும். அவர்கள் பரப்பி வரும் கருத்துகள் மேலும் மேலும் விவாதங்களை வளர்க்கும்.

kamal_haasan_polparty_epsகமல்ஹாசன் வென்றாலும் தோற்றாலும் தொடர்வார். ஏனென்றால் அவர் பார்ப்பனீயத்தின் பிரதிநிதி. அவரது வெற்றி அவரைப் பற்றிய உண்மையை கூட இருப்பவர்களே உணராமல் இருப்பதுதான். எனவே தோற்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு உறுதி தொடர்வதும்.

 தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம்  நடக்கிறதோ இல்லையோ பல கட்சிகள் காணாமல் போனால் தமிழகம் நலம் பெறும்.

திருப்பரங்குன்றம் தேர்தல் செல்லாது!! தீர்ப்பு தாமதமாக வந்ததற்கு யார் பொறுப்பு?

அரசியல் வழக்குகளில் தீர்ப்புகள் தாமதமாக வந்து ஆட்சியின் போக்கையே திசை திருப்பி விடுகின்றன.

திருப்பரங்குன்றம் தேர்தலில் ஏ கே போஸ் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்றார். ஆனால் அவரது வேட்பு மனுவில் கையெழுத்திட வேண்டிய செல்வி ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்ததால் தேர்தல் கமிஷன் அவரது கைரேகையை பெற அனுமதித்தது. மருத்துவர் பாலாஜி அதற்கு சாட்சியாக இருந்தார்.

திமுக சார்பில் மருத்துவர் சரவணன் தாக்கல் செய்த வழக்கில் ஏ கே போஸ் இறந்து போய் விட்ட நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டு அங்கே தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இப்போது வந்திருக்கிறது தீர்ப்பு.

தேர்தல் சட்டம் வழக்கை ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் விசாரணையை தினந்தோறும் நடத்த வேண்டும் என்றும் கூறுகிறது. ஏன் நீதிமன்றங்கள் இத்தனை ஆண்டுகள் தீர்ப்பு சொல்ல எடுத்துக் கொள்ளவேண்டும்?

தேர்தல் கமிஷன் மீது குற்றம் சாடுகிறது நீதிமன்றம். ஏன் அரசு அலுவலர்களை சான்றளிக்க பயன்படுத்தாமல் ஒரு மருத்துவரை பயன் படுத்த அனுமதிக்க வேண்டும் என்று  கேள்வி எழுப்புகிறது.

டாக்டர் பாலாஜி தனது சாட்சியத்தில் தான் வரும் முன்பே ஜெயலலிதா கைரேகை இட்டு விட்டார் என்று சொல்லி இருந்தால் அவர் ரேகைக்கு சாட்சியாகவே இருக்க முடியாது .

இப்போது தேர்தல் கமிஷன் அங்கும் தேர்தல் அறிவிக்குமா?  அல்லது தேர்தலை தள்ளிபோடுமா என்பது தெரியவில்லை.

ஆனாலும் நீதிமன்றம் தினந்தோறும் விசாரணையை நடத்தி இருந்தால் தீர்ப்பு  முன்பே வந்திருக்கும். நிலைமையே மாறியிருக்கும்.

எனவே நீதிமன்றங்கள் அரசியல் வழக்குகளை தினந்தோறும் விசாரணை நடத்தி   தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது மிக மிக அவசியம்.  

தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயித்தது ஜெயலலிதா வழக்கின் தீர்ப்புகள். ஆனால் அதற்கு நீதிமன்றங்கள் அனுமதித்த தாமதம் ஏற்றுக்கொள்ளவே முடியாதது.

ஜெயலலிதாவை தவிர வேறு யாருக்கும் இப்படி தாமதிக்க அனுமதி தரப் பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே??

ஆக நீதிமன்றங்களே ஆள் பார்த்து வாய்தா வழங்குகின்றன என்பது கசப்பான உண்மை.

காரணம் என்ன என்பதை ஆராய முடியாது. பல காரணங்கள். ஆனால் பாதிக்கப் பட்டது தமிழ் நாட்டின் தலைவிதி.

அரசியல்வாதிகளின் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்தால் மட்டும் போதாது .

அவற்றில் விசாரணையை விரைந்து நடத்தி குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள்  தீர்ப்பை வழங்கவும் நீதிமன்றங்கள் உத்தரவாதம் வழங்க வேண்டும்.  அப்போது மட்டுமே வழங்கும் தீர்ப்புகளுக்கு மரியாதை இருக்கும்.

வலிமையான மாநிலங்கள் வளமான பாரதம்!!! 2019 பொதுத்தேர்தல் முடிவுகள் காட்டப்போகும் புதியபாதை??!!

மாநிலங்களை பலவீனமாக்கி, மத்தியில் ஆட்சியில் அமரும் ஆட்சிகள் இதுவரை இந்தியாவை புதுவிதமான மேலாதிக்க ஆட்சி முறையை அறிமுகப்படுத்திவிட்டன.

வெள்ளையர்கள் ஆண்டது போலவே சற்று மாறுதலாக வடநாட்டார் மற்ற மாநிலங்கள ஆள்வதும் இந்தி பேசாத மாநிலங்களை அடக்கி ஆள்வதும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

2019 பொதுத்தேர்தல் முடிவுகள் இத்தகைய மேலாதிக்க முறைக்கு முடிவு கட்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது.

தேசிய கட்சிகளின் செல்வாக்கு நாளுக்கு நாள் தேய்ந்து வருவதும் மாநிலங்களின் கட்சிகள் நாளுக்கு நாள் செல்வாக்கு பெருகுவதும் இந்திய ஒற்றுமையை மேலும் கட்டிக்காக்கும் வல்லமையை உருவாக்கி வருகிறது.

காங்கிரஸ் பாஜக கட்சிகள் தனித்து ஆட்சிக்கு வருவது இனி நடக்காது.

இரு கட்சிகளுமே மாநில கட்சிகளின் கூட்டுறவால் மட்டுமே ஆட்சியில் அமர முடியும.

சென்ற தேர்தலில் இந்து மத மேலாதிக்கத்தை வலியுறுத்தி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது.

இந்தி பேசும் உ பி, ராஜஸ்தான், ம பி, பீகார், உத்தரகாண்ட், சட்டிச்கார் மாநிலங்களில் சரிந்து விட்ட பாஜக-வின் செல்வாக்கு சென்ற சட்டமன்ற தேர்தல்களில் வெளிப்பட்டுவிட்டது.

modi-farmers
modi-farmers

மோடி பிராமணர் அல்லாதார் என்பதும், சொத்து சேர்க்காதவர் என்ற பெயரும், நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்தவர் என்ற மதிப்பும், அவர் பிரதிநிதித்துவபடுத்துவது பெரு நிறுவனங்களை என்பதும், உயர்த்த நினைப்பது இந்தியை என்பதும், இலக்கு தன் ஆட்சியை நிலைப்படுத்துவதும், என்ற உண்மை மக்களுக்கு தெரிந்தபின் அவரது செல்வாக்கு மங்கிவிட்டது.

யார் பாஜகவுக்கு சொத்தாக இருந்தாரோ அவர் இன்று பாஜக-வின் சுமையாக மாறிவிட்டார்.

இன்றைக்கு பாஜக தோற்றால் அதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணமாக இருப்பார். 

திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்த மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி தத்துவம் இன்று பெருத்த வெற்றியை பெறும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

மாநிலங்கள் வளமாக இருந்தால் போதும். வலிமை வேண்டாம் என்பது பழைய சித்தாந்தம். மாநிலங்களுக்கும் வலிமை வேண்டும். இதுவே புதிய  சித்தாந்தம்.

பாஜக-வுக்கும் காங்கிரசுக்கும் வேட்பாளர்களை டெல்லியில் இருந்துதான் அறிவிக்க வேண்டும் என்றால் இங்கே எதற்கு மாநில அமைப்புகள்? மாநில அமைப்புகளுக்கு என்ன அதிகாரம்?

உரிமையை கேட்டால் பிரிவினைவாதி முத்திரை குத்தி அடக்கி விடுவது இனி நடக்காது. ஏனென்றால் இந்தியாவில் பிரிவினை கேட்கும் தேவை எழவே இல்லை. இங்கே இருக்கும் அரசியல் சட்டம் எல்லா குடிமக்களுக்கும் சம உரிமை வழங்கி இருக்கிறது. உரிமை சட்டத்தில் இருக்கிறது.ஆனால் அமுலில் இல்லாமல் இருக்கிறது. இந்த முரண்பாட்டை களையும் பணியை நீதிமன்றங்கள் செய்து கொண்டிருக்கின்றன. எனவே இந்திய ஜனநாயகம் சமத்துவத்தை கட்டிக் காக்கும் வலுவான அரசியல் சட்டத்தின் மேலே கட்டி எழுப்பப் பட்டிருப்பதால் யாரும் பிரிவினை கேட்கும் தேவை எழவில்லை.

தேசிய கட்சிகள் இந்தி பேசும் மாநிலங்களில் அடங்கி விட வேண்டியதுதான்.

   மத்தியில்  மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி மலரும் நாளே இந்தியாவின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் நன்னாள்.