Home Blog Page 47

இரட்டை இலை கிடைத்ததால் எடப்பாடி- ஒபிஎஸ் அணிக்கு வெற்றியா?!

இரட்டை இலை கிடைத்ததால் அதிமுகவுக்கு வெற்றியா?!

இரட்டை இலை சின்னத்தை  எடப்பாடி ஒபிஎஸ் அணிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியதை டெல்லி உயர்நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது.

அது தினகரனுக்கு வேண்டுமானால் பின்னடைவாக இருக்கலாம்.

தமிழக மக்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் என்ன பயன்?

மக்களின் அதிகாரத்தை பாஜக-விடம் அடகு வைத்த கட்சி என்ற பெயரை வைத்துக்கொண்டு இரட்டை இலை எப்படி வெற்றி  பெறும்?

ஆர்கேநகர் தொகுதியில் இரட்டை இலை தோற்றது. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அன்று ஒரு காரணம். இன்று வேறு ஒரு காரணம்.

ஆக தோற்கத் தயாராக இருக்கும் சின்னமே இரட்டை இலை. எம்ஜிஆர் ஜெயலலிதாவோடு இரட்டை இலை சின்னத்தின் மீதான பாசம் அதிமுக தொண்டர்களுக்கு  போய்விட்டது.

தினகரனின் தனிக்கட்சி அதிமுக தொண்டர்களை பிரித்து விட்டது உண்மைதான். யாருக்கு எவ்வளவு என்பது தேர்தலில் தான் தெரியும்.

திராவிட இயக்கத்தின் கூறு என்ற முத்திரையை இழந்த அதிமுக எப்படி வெற்றிபெறும்?

இசைக்கருவிகளின் கண்காட்சிக் கூடம் சென்னையிலிருந்து டெல்லிக்கு மாற்றப்படுவது ஏன்?

1956 சென்னையில் நிறுவப்பட்ட இசைக்கருவிகளின் கண்காட்சிக் கூடம் இப்போது சங்கீத் வாத்யாலயா என்ற பெயரில் அண்ணா சாலை டிவிஸ் பேருந்து நிறுத்தம் அருகே இயங்கி வருகிறது.

இது மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இருந்து வரும் கைவினைப் பொருட்கள் ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல் பட்டு வருகிறது.

அதில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வில்யாழ், மகரயாழ் , மச்சயாழ், பேரியாழ், செங்கோட்டு யாழ், போன்றனவும், வீணை , தம்புரா, மிருதங்கம், தவில் , நாகசுரம், தபேலா, ஆகிய இசைக்கருவிகளும் வைக்கப்  பட்டுள்ளன. இசை மாணவர்களுக்கும் ஆய்வு செய்பவர்களுக்க்ம் இக்கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இதை டெல்லி பிரகதி மைதானத்தில் நிறுவ தீர்மானித்ததின் காரணம் என்ன? இதைப்பற்றி மாநில அரசு என்ன கருத்து கொண்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை.

முரசொலி நாளிதழ் எழுதிய தலையங்கம் இந்த வஞ்சக நடவடிக்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

சென்னையில் வேண்டாம் எல்லாம் டெல்லியில் தான் என்றால் மாநிலங்கள் எதற்கு என்றும் அது கேள்வி எழுப்பி இருக்கிறது.

பதில் சொல்லத்தான் யாரும் இல்லை?

தமிழர் ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் பாமக ??!!

மீண்டு எழவே முடியாத நிலைக்கு போய் விட்டது பாட்டாளி மக்கள் கட்சி.

ஒரு மகளிர் அணி செயலாளர் விலகிவிட்டார். நடிகர் ரஞ்சித் துணைத்தலைவர் பதிவியில் இருந்தும் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகிய கையோடு தினகரனின் அ ம மு க வில் இணைந்து விட்டார்.

ஒரு காலத்தில் தமிழர் ஒற்றுமையை கட்டிக் காக்கும் என நம்பப் பட்ட கட்சி இன்று தமிழர் ஒற்றுமைக்கு உலை வைக்கும் கட்சியாக மாறிப்போய் விட்டது.

சாதிகள்தான் தமிழர் ஒற்றுமைக்கு தடை என்பது உண்மையானால் சாதிக் கட்சியான பாமக எப்படி தமிழர் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்ததால் மருத்துவர் ராமதாஸ் திருமாவளவனோடு கைகோர்த்து வன்னியர் தலித் ஒற்றுமையை வலியுறுத்தி வந்தார்.

ஒரு தேர்தலில் வெற்றி  பெற முடியவில்லை  என்பதற்காக அதன் காரணம் தலித் கட்சியோடு காட்டிய உறவுதான் என தவறாக கணக்கிட்டு வாக்கு வங்கி அரசியலுக்காக தலித் உறவையும் திருமாவளவன் உறவையும் துண்டித்தவர் மருத்துவர் ராமதாஸ்.

அதுவரை போராளியாக இருந்தவர் அதுமுதல் வணிகராக மாறிப்  போனார்.

இன்று அதிமுக வுடன் கூட்டணி கண்டவுடன் அன்புமணி பத்திரிகையாளர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று நிலவும் வன்னியர்-தலித் பகைமைக்கு ராமதாஸ் காரணமா? திருமாவளவன் காரணமா?

இருவரும் கடைப்பிடிக்கும் விரோதம் தமிழர்களுக்கு நல்லதல்ல என்பதை இருவரும் உணர்ந்து இருக்கிறார்களா ?

பாமக இருக்கும் இடத்தில நான் இருக்க மாட்டேன் என்று திருமா கூறுகிறார்.  நிரந்தரமாக வன்னியர் எதிரியாக இருக்கப் போகிறாரா?    குறைந்த பட்சம் வேல்முருகனோடு கூட சேர்ந்து வலம்வரக்கூடாதா?

சாதிக் கட்சி என்ற முத்திரை விழக் கூடாது என்பதற்காகத்தான் முகமூடி பெயர்களை சூட்டிக் கொள்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி -வன்னியர் கட்சிதான்

புதிய தமிழகம்-தேவேந்திர குல வேளாளர் கட்சிதான்

புதிய நீதி கட்சி -முதலியார் கட்சிதான்

இந்திய ஜனநாயக கட்சி- உடையார் கட்சிதான்

கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி- கவுண்டர் கட்சிதான்

அ இ சமத்துவ மக்கள் கட்சி- நாடார் கட்சிதான்

விடுதலை சிறுத்தைகள் கட்சி- பறையர் கட்சிதான்.

தேவநாதன் யாதவர் கட்சி நடத்துகிறார். ஜான் பாண்டியன், வேல்முருகன், என்று பலரும் கட்சிகளின் பெயரை பொதுவாக வைத்துக்  கொண்டு  சாதிக்கட்சிகள் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முத்தரையர், வேளாளர், கிருத்துவர், முஸ்லிம் என்று மதம் சாதி அடிப்படையில்தான் கட்சிகள் இயங்கி வருகின்றன.

இவர்களது சாதி அமைப்புகளை ஒழித்தால் தான் தமிழர் ஒற்றுமை உருவாகும்.

சாதிகளை வைத்துக் கொண்டு தமிழர் ஒற்றுமையைக் கொண்டு வரவே முடியாது.

எனவே தமிழர் ஒற்றுமையை கொண்டு வரவேண்டும் என்று விரும்பும் எவரும் இந்த சாதிக் கட்சிகளை ஆதரிக்கவே முடியாது- கூடாது.

வேறு விதமாக சொல்லுவதென்றால் பாமக வலுவாக இருந்தால் தமிழர் ஒற்றுமை உருவாகாது  என்பதால் அதை தோற்கடித்தே ஆக வேண்டும்.  வலுவிழக்கச் செய்தே ஆக வேண்டும்.

பாமகவை தோற்கடிப்போம் சாதி ஒழிப்பை நிலை நாட்டுவோம்.

போர்ச்சூழலில் நடக்க இருக்கும் தேர்தல் மோடிக்கு சாதகமா??!

இந்திய போர் விமானங்கள் நடத்திய துல்லிய தாக்குதல்கள் பரவலான வரவேற்பை பெற்றுள்ளன.

புல்வாமா பயங்கரவாத தற்கொலை  தாக்குதலில் கொல்லப்பட்ட நாற்பதுக்கும் மேலான இந்திய வீரர்களின் மரணத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்திருக்கிறது.

தாக்குதல் நடத்திய இடம் தீவிரவாதிகளின் முகாம்கள். எனவே இது இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய போர் ஆகாது. ஆனாலும் இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது.

எனவே நிச்சயம் அடுத்து ஒரு தாக்குதலை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அதற்கும் பதிலடி கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

புல்வாமா தாக்குதலை நடத்தி கொடூரமாக நாற்பதுக்கும் மேல் இந்திய வீரர்களை தற்கொலைத் தாக்குதலில் கொலை செய்தவன் பாகிஸ்தானியல்ல.  காஷ்மீரி இளைஞர்தான். ஆனால் அவனுக்கு பயிற்சியளித்தது பாகிஸ்தானில் நிலை கொண்டுள்ள தீவிரவாத இயக்கம்.   தாக்குதலுக்கு பொறுப்பு  நாங்கள் தான் என்று பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று நாமும் விடுதலையான காஷ்மீர் என்று பாகிஸ்தானும் சொல்லும் இடத்தில்தான் இயங்கி வருகிறது.  லஷ்கர் இ தொய்பா, ஐ எஸ் ஐ எஸ், ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற தீவிரவாத இயக்கங்களும் அங்கு இயங்கி வருகின்றன. எதையும் பாகிஸ்தான் அரசால் கட்டுப் படுத்த முடியவில்லை.

எப்படி இருந்தாலும் பிரச்னை இப்போது ஓயப்போவதில்லை.

பாகிஸ்தான் எப்படி  எப்போது பதிலடி கொடுக்கும்?. அதற்கு இந்தியா எப்படி பல மடங்கு திருப்பிக் கொடுக்கும்? இது போரில் முடியுமா? போர் வருமா வராதா? சர்வதேச நாடுகள் தலையிட்டு சமரசம் செய்ய வாய்ப்புகள் உண்டா இல்லையா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தேடுவதற்குள் அல்லது பதில் கிடைப்பதற்குள் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து விடும்.

ராணுவ தாக்குதல்களை அரசியல் ஆக்க வேண்டாம் என்று பாஜக அறிவித்திருக்கிறது. ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய வெற்றிக்கு சொந்தக்காரர் மோடி என்றும் அவரால்தான் முடியும் என்றும் பிரச்சாரத்தை பாஜக சார்பில் தொடங்கி யாகி விட்டது. பாஜகவின் வேண்டுகோள் செவி சாய்க்கப் படும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை.

எல்லா எதிர்க்கட்சிகளும் விமானப் படையின் தாக்குதலை வரவேற்று இருக்கின்றன. ஆளும் கட்சி எதிர்க்கட்சி வேறுபாடு தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இல்லை.

கார்கில் போர் வாஜ்பாய்க்கு தந்த புகழை இந்த தாக்குதல் மோடிக்கு தருமா என்றால் சந்தேகம்தான். ஏனென்றால் வாஜ்பாய் மதவாதி என்ற பெயரை எடுக்க வில்லை.

இந்திய வாக்காளர்கள் அறிவுக்கூர்மை மிக்கவர்கள். அவர்களுக்கு பிரச்னைகளை பகுத்துப்பார்க்கத் தெரியும்.

மோடி இந்த ஐந்து ஆண்டு  கால ஆட்சியில் உருவாக்கிய பிரச்னைகள் அடுத்த பத்தாண்டுகளில் தீர்க்க முடியாதவை என்பதை அவர்கள் உணர்வார்கள். மீண்டும் நீடித்தால் அவரால் உருவாகும் பிரச்னைகள் இந்தியாவை நிரந்தர படுகுழிக்குள் தள்ளி விடும் என்பதையும் உணர்ந்தவர்கள். எனவே சூழ்ந்திருக்கும் போர்மேகம் மோடிக்கு எந்த வகையிலும் தேர்தல் வெற்றிக்கு உதவாது.

தகுதி நீக்க எம் எல் ஏ வாங்கிய சம்பளத்தை திருப்பித் தர உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்? தவறான தீர்ப்பு?!

தகுதி நீக்க எம் எல் ஏ வாங்கிய சம்பளத்தை திருப்பித் தர உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்?

2006-2011 ல் காங்கிரஸ் உறுப்பினராக போட்டியிட்ட வேல்துரை வெற்றி பெற்றபின் சந்தித்த தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் வெற்றி பெற்றது செல்லும் என்றும், உச்ச நீதிமன்றம் செல்லாது என்றும் தீர்ப்பளித்தது.

காரணம் அவர் பதிவு செய்த அரசு ஒப்பந்தக்காரர் என்பதுதான். அந்த தகுதிகுறைவுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் அவர் பதவிக் காலத்தை நிறைவு செய்துவிட்டார்.

வழக்கு போட்டது 2006ல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது 13.04.2011ல். இடையில் ஏற்பட்ட தாமதத்திற்கு  யார் காரணம்? நீதிமன்ற நடைமுறைகள் தானே.

சட்ட மன்ற செயலாளர் ஜூலை மாதம் 2011 ல் அறிவிப்பு ஒன்றை அனுப்பி  அதில் வேல்துரை தன் சம்பளமாக  2006-2011 காலகட்டத்தில் பெற்ற  ரூபாய் 21.58 லட்சத்தையும் திருப்பி செலுத்த கோருகிறார். அதில்  2019 ல் தீர்ப்பளிக்கும் உயர்நீதி மன்றம்  வழக்கில்  ஏற்பட்ட தாமதம்  தகுதி நீக்கத்தின்  தாக்கத்தை  நீக்கி விட்டது என்றாலும் அந்த தாமதத்தின் பலனை வேல்துரை பெற முடியாது என்று தீர்ப்பளித்து  துகையை திரும்ப செலுத்த உத்தரவிட்டுள்ளது.

இது சரியான தீர்ப்பாக தெரியவில்லை.

வேல்துரை தேர்தல் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன நேரத்தில் அவர் தனக்கு சேர வேண்டிய சம்பளம் என்று நினைத்துத்தான் பெற்று செலவு செய்திருப்பார்.

உச்ச நீதிமன்றம் மாற்றி தீர்ப்பு சொல்லும் என்று அவருக்கு தெரியுமா?  அப்படியே இருந்தாலும் தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு சொன்ன உச்சநீதி மன்றம் அவர் பெற்ற சம்பளம் பற்றியும் விளக்கம் தந்திருக்கலாம்.

இப்போது மீண்டும் வழக்கு உச்சநீதிமன்றம் போகவேண்டுமா. அல்லது தனி  நீதிபதி தீர்ப்பு என்றால் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மேன்முறையீட போக வேண்டும்.

அவர் இறந்திருந்தால் அவரது வாரிசுகளிடம் வசூல் செய்வார்களா? அல்லது சொத்து இல்லையென்றால் கைது செய்து சிறையில் அடைப்பீர்களா ?

அரசு ஊழியர்களுக்கு தவறுதலாக கணக்கிடப் பட்டதன் காரணமாக கூடுதல் சம்பளம்/ படிகள் தரப்பட்டிருந்தால் அப்படி தவறாக தரப்பட்ட பணப்பயன்கள்  திரும்பப் பெறத் தக்கவை அல்ல என்று  உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கிறது.

சம்பளம் பெற்ற காலத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோதே நீதி மன்றங்கள் இந்த சம்பளப் பட்டுவாடா பற்றியும் ஏதாவது ஒரு நிபந்தனை உத்தரவு இட்டிருக்கலாம் அல்லவா?    நீங்கள் பெறும் சம்பளம் நீதி மன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப் பட்டது, தோற்றால் திரும்பப் செலுத்த நேரலாம் என்று உத்தரவிட்டிருந்தால் இந்த முரண்பாடு எழுந்திருக்காது.

நீதிமன்றங்கள் இன்னும் கொஞ்சம் நீதிசெய்யலாம்.

குழந்தைகளின் படிப்பை கெடுக்க முனைந்த கயவர்கள்?!

ஐந்தாவது எட்டாவது வகுப்பு வரையில் பள்ளிக் குழந்தைகளை தேர்வில் வெற்றி பெற வில்லை என்ற காரணத்திற்காக நிறுத்தி வைப்பதில்லை என்ற முடிவை பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி நெடிய விவாதத்திற்குப் பின் எடுத்து இலவச கட்டாய கல்விச்சட்டம்  2009 ன் படி அமுல்படுத்தப் பட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது.

இதனால் கல்வியின் தரம் கெட்டுவிட்டதாக குற்றச்சாட்டு எதுவும் இல்லை.

தமிழக அரசின் நிலைப்பாடும் அதுதான். அதையே கடந்த 2016 ம் ஆண்டு டெல்லியில் நடந்த மத்திய கல்வி ஆலோசனை குழு கூட்டத்திலும் ( Central advisory  board of education ) தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப் பட்டது.

இந்நிலையில் மாநில பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்  பட்டது. அதில் ஐந்தாவது எட்டாவது வகுப்புகளுக்கு கட்டாயக் கல்வி சட்டத்தின் படி தேர்வுகள் நடத்தப் படும் என்றும் தேர்வில்  வெற்றி பெறாத குழந்தைகளுக்கு மறு வாய்ப்பும் அளிக்கப் பட்டு  தேர்வு பெறாவிட்டால் அவர்களை நிறுத்தி வைப்பது அந்த பள்ளியின் விருப்பம் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதை பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அனுமதியில்லாமல் அனுப்பினார்களா? சென்ற ஆண்டு கட்டாயக்  கல்வி சட்டத்தில் மாற்றம் செய்து தேர்வு வைக்கலாம் நிறுத்துவதும் நிறுத்தாததும் அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என்று ஒரு திருத்தம் செய்தார்கள்.  அந்த திருத்தத்தை பயன் பயன்படுத்தி இப்போது இந்த சுற்றறிக்கை  அனுப்பப் பட்டிருக்கிறது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எந்த ஆண்டும் போர்டு தேர்வு  இருக்காது என்று சொன்னாரே தவிர இந்த சுற்றறிக்கையை அனுப்பியது எப்படி என்ற கேள்விக்கு பதில் சொல்ல வில்லை. இன்று வரை அந்த சுற்றறிக்கை திரும்ப பெறப்படவுமில்லை.   அனுமதி இல்லாமல் அனுப்பப் பட்டிருந்தால் அனுப்பியவர் மீது என்ன நடவடிக்கை என்பது குறித்து விளக்கம் தரவும் இல்லை.

பெரும்பாலும் பிற்பட்ட தாழ்த்தப் பட்ட மாணவர்கள் பயனடையும் இந்த திட்டத்தில் கை வைப்பதின் நோக்கம் அவர்களில் ஒரு பகுதியினரை யாவது மேலே படிக்க விடாமல் செய்வது என்ற நோக்கத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும்?

   பத்தாயிரம் ஆண்டுகளாக கல்வி கற்கும் உரிமையை மற்றவர்களுக்கு மறுத்தவர்கள் எல்லா கால கட்டத்திலும் அதே முயற்சியை மீண்டும் மீண்டும் வெவ்வேறு தளங்களில் முயற்சித்துக்  கொண்டே இருக்கிறார்கள். 

                  சாதாரண தேர்வுகள் சுமுக சூழ்நிலையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஓரளவு முதிர்ச்சி பெற்ற எட்டாவது தாண்டிய பிள்ளைகள் பிளஸ் டூ படிப்பில் பொதுத்தேர்வை எதிர்கொண்டால் போதும் என்ற நிலையைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்த செய்த முயற்சிக்கு யார் காரணம் என்று கண்டறிந்து தக்க தண்டனை வழங்கினால் தான் எதிர்காலத்தில் இத்தகைய முயற்சியை கைவிடுவார்கள்.

இடையில் உடனடியாக,  போர்டு தேர்வு என்ற சுற்றறிக்கையை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்.

சேர நாடு கேரளாவில் உருவான எம்ஜிஆர் நினைவகம்!!!

கேரளாவை நாம்தான் சேர நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் அதை உணர்ந்ததாக தெரியவில்லை.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளம் இல்லை. அதற்கு முன்பு அவர்கள் தமிழ் தானே பேசிக்கொண்டிருந்திருக்க முடியும்.

பெரியார், தெருவில் அனைவரும் நடக்கும்  உரிமையை பெற வைக்கம் சென்றுதான் போராடினார். கர்நாடகாவுக்கோ ஆந்திராவுக்கோ செல்லவில்லை.

எம்ஜிஆர் தன்னை கோவை மன்றாடியார் என்று சொன்னார்.

தற்போது அவரது பூர்விகம் தொடர்பாக ஒரு முற்றுபுள்ளி. கேரளாவின் சித்தூர் தாலுகா வடவன்னுர் கிராம பஞ்சாயத்தில் அவரது பூர்விக வீடான சத்யா விலாசத்தில் சைதை துரைசாமியால் ஒரு நினைவகம் அமைக்கப்  பட்டிருக்கிறது.

மேலக்காத் கோபால மேனன் -வடவன்னுர் சத்யபாமாவின் இரண்டாவது மகன் எம் ஜி யார். கண்டியில் பிறந்து வடவன்னுரில் வளர்ந்து சென்னையில் நடிகராகி   திமுகவில் இணைந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆருக்கு நாட்டை ஆளும் வாய்ப்பை தமிழகம் தந்தது .

எந்த தலைவருக்கும் கிடைக்காத அன்பையும் ஆதரவையும் அவருக்கு தமிழகம் தந்தது. பொன்மனச் செம்மலாக போற்றப்பட்டார். தான் சம்பாதித்த எதையும் எங்கும் கொண்டு செல்லாமல் இங்கேயே விட்டுச் சென்றார்.

அதனால்தான் அவருக்கு ஊருக்கு  ஊர் சிலைகளையும் நினைவுச் சின்னங்களையும் வைத்து கொண்டாடுகிறது தமிழகம்.

அவர் செய்த ஒரே தவறு ஜெயலலிதாவை அடையாளம் காட்டியதுதான் என்பது பலரது கருத்து. அதிமுகவினர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அது அவர்களது உரிமை.

அவரது நினைவகத்தை பார்க்கும் மலையாளிகள் தாங்கள் சேர நாட்டினர் என்பதால் தானே தமிழர்கள் எம்ஜியாரை தலைவராக ஏற்றுக் கொண்டார்கள் என்ற உணர்வு வந்தால் அதுவே எம்ஜிஆருக்கு  அவர்கள் செலுத்தும் மரியாதை.

காட்டை விட்டு விரட்டினால் பழங்குடிகள் எங்கே போவார்கள்? உச்ச நீதிமன்ற தீர்ப்பு திருத்தப் படவேண்டும்?!

உச்ச நீதிமன்ற தீர்ப்பு திருத்தப் படவேண்டும்?!

சட்டிச்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் குஜராத், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மற்றும் வட கிழக்கு  மாநிலங்களில் கணிசமாக பழங்குடிகள், தலித்துகள்  தலைமுறை தலைமுறையாக வசித்து வருகிறார்கள்.

வனப்பாதுகாப்பு சட்டத்தின் படி அவர்கள் கோரிய நில உரிமையை உச்சநீதி மன்றம் நிராகரித்து உத்தரவிட்டதால் அவர்கள் காட்டை  விட்டு வெளியேற்றப் படும் நிலை உருவாகி இருக்கிறது.

பழங்குடிகள் தலித்துகள் உரிமை பாதுகாப்புக்கென தனி அரசு  அமைப்புகள் இருக்கின்றன. இவைகள்  தங்கள் கடமையை செய்திருந்தால், நீதிமன்றத்தில் வலிமையாக வாதாடியிருந்தால் உச்சநீதி மன்றம் இப்படி ஒரு  உத்தரவை இட்டிருக்க வாய்ப்பே இல்லை.

நில உடமை ஆவணங்கள் அவர்களிடம் இல்லையென்றால் அதற்கு  யார் பொறுப்பு? அரசுகள் தானே?   தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருபவர் களிடம் பட்டாவை கொடு வரி ரசீதை கொடு என்று கேட்டு இல்லையென்றால் வெளியேறு என்பது என்ன நியாயம்?   ஏனென்றால் ஆவணங்களை தர வேண்டியவர்கள் தவறினால் அவர்களுக்கு என்ன தண்டனை?

படிப்பறிவில்லாத அதிகாரம் இல்லாத பாமரர் களுக்கு வாழவே உரிமை இல்லையா?  சொந்த நாட்டிலேயே அவர்களை அகதிகள் ஆக்குகிறீர்களே?

இன்றைக்கு மார்ச் 5 ம்  தேதி பந்த் அறிவித்திருக்கிறார்கள். பாஜக – காங்கிரஸ் உள்ளிட்ட அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன. என்ன ஒரு ஏமாற்று வித்தை?

அவசர சட்டம் இயற்றி எங்களை பாதுகாத்து விட்டு சட்டப்படி போராடுங்கள் என்று போராட்டக் குழு கேட்டுக் கொண்டிருக்கிறது.

மத்திய மாநில அரசுகளின் இரட்டை வேடத்தை பறை சாற்றும் நாடகம் இது.

மனிதாபிமானம் அற்ற, ஈவிரக்கம் அற்ற, கொடுமையான நடவடிக்கையை இனியாவது பாஜக -காங்கிரஸ் அரசுகள் தவிர்க்க வேண்டும்.

உடனடியாக அவர்களுக்கு தேவையான சான்றாவணங்களை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப் படுத்தும் வேலையை பாஜக -காங்கிரஸ் அரசுகள் செய்ய வேண்டும் என்பதே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு.

என்ன ஆனது முகிலனுக்கு? ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு இதுதான் கதியா?

என்ன ஆனது முகிலனுக்கு?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டின் போது கொல்லப்பட்ட 13 பேர் தொடர்பாக ஒரு ஆவணப் படத்தை முகிலன் என்பவர் பெப்ரவரி 15ம் தேதி வெளியிடுகிறார்.

அன்றைய தினமே அவர் எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணமாக வேண்டியவர் மாயமாகிறார்.

அந்த ஆவணப்படத்தில் காவல்துறை திட்டமிட்டு மே மாதம் 22ம் தேதி 2018 ல்  இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது என்று குற்றம் சாட்டி இருந்ததுதான் இப்போது பிரச்னை ஆகி இருக்கிறது.

ரெயில்வே காவல் துறை வழக்கு பதிவு செய்தும் நகர காவல் துறை ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் இப்போது சிபிசிஐடி விசாரிக்க காவல் துறை தலைவர் உத்தரவிட்டிருக்கிறார்.

அதுவும் பலரும்  முகிலனின் கதி குறித்து கவலை தெரிவித்த பின் இந்த விசாரணை.  காவல் துறை மீதே குற்றம் சுமத்தியவர் காண வில்லை என்றால் அதே காவல் துறை எப்படி நியாயமாக விசாரிக்கும் என்ற சந்தேகம் எழுந்தாலும் நம்புவதை தவிர வேறு வழியில்லை.

முதல் அமைச்சரிடம் கேட்டபோது எல்லா குடிமக்களையும் கண்காணிக்க முடியாது என்று கூறிய பதில் அதிர்ச்சியை அளித்தது. இது எடப்பாடி நியாயம்.

உண்மையை வெகு காலம் மறைக்க முடியாது.

விளக்கம் சொல்ல திணறிய அன்புமணி ராமதாஸ் பேட்டியை பாதியில் முடித்தார்?

விளக்கம் சொல்ல திணறிய அன்புமணி ராமதாஸ்

கார் உள்ளளவும் பார் உள்ளளவும் திமுக அதிமுக வோடு  கூட்டு  கிடையாது என்று மார் தட்டிய மருத்துவர் ராமதாஸ் கடைசியில் அதிமுகவோடு கூட்டு சேர்ந்து அதை விருந்து வைத்தும் கொண்டாடி விட்டார்.

ஆனால் மக்கள்தான் ரசிக்கவில்லை.

அதிமுக அரசு மீது ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்த பாமக எந்த முகத்தோடு இப்போது கூட்டணி வைக்கிறது?

விளக்கம் சொல்கிறேன் என்று அன்புமணி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  ஏடாகூடமாக கேள்விகள் எழுந்தவுடன் பதில் சொல்ல மிகவும் திணறிப் போனார் அன்புமணி. ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்தவர் நிதானம் இழந்து நிருபர்களை பார்த்து உட்காருங்கள் என்று கட்டளை  இட தொடங்கினார்.  மீண்டும் மீண்டும் பழைய நிலைப்பாடுகளை நினைவு படுத்தவே பாதியில் பெட்டியை முடித்துக் கொண்டு  கிளம்பினார் அன்புமணி.

இப்படி எரிச்சல் அடைந்த  முகத்தோடு அன்புமணியை யாரும் பார்த்ததில்லை.

இப்போதும் அதிமுக மீதான ஊழல் புகாரில் உறுதியாக இருக்கிறோம் என்றவர் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை கோருவோம் என்றார். முகாந்திரம் இல்லாமலா ஊழல் புகார் கூறினார்?

தாங்கள் கொடுத்த பத்து கோரிக்கைகளை அதிமுக அரசு பரிசீலிக்க தயாராக இருந்ததால் இந்த முடிவு என்றதுதான் இடித்தது. இதுவரை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால் இந்த முடிவு என்று கேள்விப் பட்டிருக்கிறோம் .  பரிசீலனை செய்வதாக கூறியதை ஏற்றுக் கொண்டு  முடிவு எடுத்தது இதுதான் முதல் முறை.

பாமக வைத்த பத்து கோரிக்கைகளும் மாநில அரசு மட்டுமே ஏற்றுக் கொண்டு  அமுல் படுத்தக் கூடியது அல்ல. மத்திய அரசும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டியவை.

கோதாவரி-காவிரி இணைப்பு, ஏழு தமிழர்கள்  விடுதலை சாதிவாரி கணக்கெடுப்பு, மேகதாது அணை தடுத்தல், நீட் தேர்வு கைவிடல் ஆகியன மத்திய அரசு முடிவெடுக்க வேண்டியவை. தமிழ் நாட்டின் இருபது பாசன திட்டங்கள், காவிரி வேளாண்மை மண்டலம், மதுக்கடைகள் மூடல், மணல் குவாரி  மூடல், பழைய பென்ஷன், உழவர் ஊதிய குழு மற்றும் கடன் தள்ளுபடி மாநில அரசு முடிவெடுக்கக் கூடியவை.

இதில் எந்த மோரிக்கையை மாநில அரசு ஏற்றுக்  கொண்டது என்பதில்  கூட விளக்கம் ஏதும் இல்லை. பரிசீலிக்கிறோம் என்பது எப்படி ஏற்றுக் கொண்டது ஆகும்?

கொள்கை என்று எல்லாம் இனிமேல் மருத்துவர் ராமதாசோ அல்லது அன்புமணியோ பேச முடியாது. யாரும் நம்ப மாட்டார்கள்.

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி,

பதவி, பணம், வாரிசு என்றாகிவிட்டது.