Home Blog Page 48

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு Rs.6000 மோடி கொடுப்பது லஞ்சமா? சாதனையா?

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு Rs.6000 மோடி கொடுப்பது லஞ்சமா?

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆண்டுக்கு  எட்டாயிரம் , ஓடிசாவில் நவீன் பட்நாயக் ஆண்டுக்கு பத்தாயிரம் கொடுத்தால் நான் ஆண்டுக்கு ஆறாயிரம் கொடுப்பேன் என்று மோடி விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்திருக்கிறார்.

ஓடிசாவில் குத்தகைதாரர்களுக்கு கிடைத்திருக்கும் நிவாரணம் தெலுங்கானாவிலும் மோடி அறிவித்திருக்கும் திட்டத்திலும் இல்லை.

நாடு முழுதும் 12 கோடி விவசாயிகளும் தமிழ்நாட்டில் மட்டும்   75லட்சம் விவசாயிகளும் பயனடைவார்கள் என்று எதிர்பார்ப்பு.

மத்திய அரசுக்கு 75 ஆயிரம் கோடி செலவு.  முதல் தவணையாக  ரூபாய் 2000  வீதம் ஒரு கோடி பேருக்கு வழங்கப் பட்டு விட்டது.

கருப்பு தினம் என்று ப.சிதம்பரம் விமர்சித்து இருப்பது முழுவதும் தவறல்ல.  ஏனென்றால் மோடியின் நோக்கம் பாராளுமன்ற தேர்தலில்  வாக்குகளை வாங்குவதுதான் என்பது மறுக்க முடியாத உண்மை.  அது லஞ்சம்தானே .

இன்னும் மெருகேற்றப்பட வேண்டிய திட்டம் இது. ஆனால் ஏதோ மோடி விவசாயிகளின் நண்பன் என்ற தோற்றத்தை  இது உருவாக்கி விடும் என்று பாஜக நம்பினால் ஏமாந்துதான்  போவார்கள்.

மோடி  அரசு கார்பரேட் அரசு என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த தோற்றத்தை உடைக்க எந்த முயற்சியையும் மோடி செய்ய  வில்லை.  இருந்து விட்டுப் போகட்டுமே என்று தான் நினைக்கிறார். அதனால் வாக்குகள் வருவது நின்று  விடப் போவதில்லை என்பது அவரது நம்பிக்கை.

ஒருவேளை  தேர்தல் நேரத்துக்கு முன்னால் செய்திருந்தால் மக்கள் நம்பியிருப்பார்கள். இப்போதும் வாங்குவதில் ஆர்வம காட்டும் அத்தனை  பேரும் மோடிக்கு வாக்களித்து விடப் போகிறார்களா என்ன?

மோடி மீது   விவசாயிகளின் நண்பன் என்ற பெயரை  விட மதவாதி ,மாநில உரிமை பறிப்பாளர் , கார்பரேட் ஆதரவாளர்  என்ற முத்திரைதான் ஆழமாக பதிந்து விட்டது.

உண்மையிலேயே விவசாயிகளின் நண்பன் என்றால் விளைபொருட்களுக்கு கட்டுபடி ஆகக் கூடிய லாப விலை நிர்ணயித்திருக்க வேண்டும்.  அதற்கு இவர் நிர்ணயித்திருக்கும் கெடு இன்னும் மூன்றாண்டுகள். ஏன் ஆட்சியில்  இருந்த ஐந்தாண்டுகளில் செய்ய  வில்லை?

நோக்கம் பழுது

காரியம் நல்லது

எனவே வரவேற்போம்.

நெல் கொள்முதலில் மூட்டைக்கு ரூபாய் 30-40 லஞ்சம் ?! கேட்க நாதியில்லையே??!!

நெல் கொள்முதலில் மூட்டைக்கு ரூபாய் 30-40 லஞ்சம் ?

விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து மத்திய அரசுக்கு ,  இந்திய உணவுக்கழகத்துக்கு கொடுக்கிறது தமிழக அரசு.

இந்த கொள்முதலில் பல ஆண்டுகளாக நிலவும் லஞ்சத்தை ஒழிக்கவே முடியவில்லை.

எத்தனை கண் துடைப்புகள். நேரடியாக பணம் கொடுத்தால் கமிஷன் எடுத்துக் கொண்டு விடுகிறார்கள் பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவோம் என்றார்கள். அது ஒரு வாரம் முதல் பத்து நாட்களுக்குள் வந்து  சேரும். பரவாயில்லை என்றால் கொள்முதல் செய்யும் போதே மூட்டைக்கு முப்பது ரூபாய் கொடுத்தால் தான் கொள்முதல் ஆகும் என்பதுதான் எதார்த்தம்.

மறுத்தால் நிலையத்தின் முன்னால் கொட்டி விட்டுப்  போங்கள் வரிசைப்படி வாருங்கள் என்பார்கள். மழை பெய்தால் அவ்வளவுதான். எப்போது காய வைத்து எப்போது விற்பது? திருட்டுப் போனாலும் பாதுகாப்பு இல்லை. நெல்லை தூற்ற வைத்து கொண்டு வரவேண்டும். அதற்கு தனியாக  செலவு செய்ய வேண்டும்.  தூற்ற என்று ஒரு  மிஷின் இருக்கிறது. அதில் 17 % க்கு மேல்  ஈரப்பதம் இருந்தால்  கொள்முதல் செய்ய  மாட்டார்கள்.  சாக்கு இல்லை என்று  கொள்முதல் செய்ய மாட்டார்கள்.

எப்போது சாக்கு வருவது எப்போது கொள்முதல் நடக்கும்?  வந்தாலும் ஒரு  நாளைக்கு அறுநூறு மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்ய மாட்டார்கள். தூற்றும் மெஷின் அத்தனை மூட்டைகளை தான் ஒரு நாளைக்கு தூற்றும். அதற்கு  மேல் வாங்கினால் தூற்றாமல் வாங்கினீர்கள் என்று அர்த்தம்  என்பதால் அதற்கு மேல் கொள்முதல் செய்ய மாட்டார்கள்.

இதெல்லாம் கட்டுப்பாடுகள் என்றால் அதையும் சந்தித்து விற்கப் போனால் ஏதாவது  புதிது புதிதாக கண்டுபிடித்து கொள்முதல் செய்யாமல் இருக்க காரணம் சொல்வார்கள்.

வேறு வழியில்லாமல் தான் அத்தனை விவசாயிகளும் மூட்டைக்கு முப்பது ரூபாய் கொடுத்து வருகிறார்கள். கணக்குப் பார்த்தால் பல கோடிகள்.  கேட்டால் அமைச்சர் முதல் கணக்கர் வரை பிரித்து போகிறது என்கிறார்கள்.  யார் கேட்பது இந்த அநியாயத்தை?

சில இடங்களில் துணிச்சல் கொண்ட ஓரிருவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்து சிலர் கைது செய்யப் படுவதும் நடக்கிறது. எத்தனை பேர் புகார் கொடுக்க முன்வருவார்கள்?

விவசாய சங்கங்கள் அரசியல்  கட்சிகள் பொதுநல அமைப்புகள் என்று எத்தனை இருந்தாலும் எவருக்கும் கட்டுப்படாமல் இந்த ஊழல் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் இருந்தாலும்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் இருக்கத்தானே செய்கிறது??!!

பாராளுமன்ற தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துமா தேர்தல் ஆணையம்?!

அவசர அவசரமாக திருவாரூருக்கு மட்டும் இடைதேர்தல் என்று அறிவித்து பின்னர் அதை ரத்து செய்து யாருடைய உத்தரவையோ நிறைவேற்றும் அமைப்பாக தன்னை காட்டிக் கொண்டது தேர்தல் ஆணையம்.

இப்போது பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது. 21  சட்ட மன்ற இடங்கள் காலியாக இருக்கின்றன. சேர்த்து அறிவிக்க வேண்டியதுதானே?

திமுக தலைவர் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் தேர்தலை  சேர்த்து நடத்துங்கள் என்று கோரிக்கையை வைத்துவிட்டார்.

நடத்த மாட்டார்கள் என்ற கணிப்புதான் கோரிக்கைக்குக் காரணம்,

மத்திய அரசின் அரசியல் நோக்கங்களுக்கு இரையாகும் அமைப்பாக தேர்தல் ஆணையம் இருக்கக் கூடாது.

21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தால் மத்தியில்  யார் வந்தாலும் மாநிலத்தில் நடக்கும் ஆட்சி ஆட்டம் கண்டுவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

இதற்கும் நீதிமன்றம் போகவேண்டுமா?

கமலை காங்கிரசின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி அழைக்கும் மர்மம்??!!

திமுக – அதிமுக இரண்டோடும் கூட்டு இல்லை தனித்தே நாற்பது தொகுதிகளிலும் போட்டி என்று கமல்ஹாசன் அறிவிக்கிறார்.

திமுகவோடு கை குலுக்கி என் கையை கறையாக்கிப் கொள்ள மாட்டேன் என்று சொல்லி தன் திமுக வெறுப்பை வெளிக்காட்டினார் கமல்.

முன்பே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தனது புதிய தலைவர் மூலமாக கமலுக்கு அழைப்பு விடுத்திருப்பது விந்தையாக இருக்கிறது.

பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் கமல். மறைமுகமாக அது அதிமுக ஆதரவு நிலை தான்.

இந்நிலையில் கே.எஸ்.அழகிரியின் அழைப்பை ஒருவேளை கமல் ஏற்றால் காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு விலகி கமலுடன் சேருமா?  அதற்கு வாய்ப்பே இல்லை.

கமல் திமுக கூட்டணியில் சேர தயார் என்று சொன்னாரா?

தனது முதல் எதிரி என்று கமல் யாரை அடையாளம் காட்டுகிறார் ?

மோடி அரசு மீண்டும் வரவேண்டும் என்கிறாரா? அல்லது மோடி அரசு மீண்டும் வராமல் தடுப்பேன் என்கிறாரா? இந்த இரண்டு நிலைப்பாட்டில் ஒன்றை கமல் அறிவிக்காதவரை அவரை அழைப்பதில் என்ன பொருள் இருக்கிறது?.

நாற்பதிலும் நின்று தனது வாக்கு வங்கியை நிருபித்து சட்ட மன்ற தேர்தல்களில் தனது பேரம் பேசும் சக்தியை உயர்த்திக் கொள்ளும் திட்டம் கமலுக்கு இருப்பதாகத் தான் தெரிகிறது.

கழகங்கள் இல்லா தமிழகம் என்ற  பாஜக-வின் முழக்கத்தை வேறு வகையில் வெளிப்படுத்தும் கமல்ஹாசன் உள்ளிருந்தே கொல்லும் நோய்??!!

திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம் ?!

திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவிலும் கோவில் நகைகள் திருடு போவது வழக்கமாகிவிட்டது.

திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் திருப்பதி தேவஸ்தான பராமரிப்பில் இருப்பது. பாதுகாப்பு அதிகாரிகள் சரிபார்த்து தான் தினமும் இரவில் நகைகள் பாதுகாக்கப் படும். அப்படி பார்க்கும்போது மூன்று தங்க கிரீடங்கள் மட்டும் காணாமல் போயிருப்பது தெரிய வந்திருக்கிறது. மூன்று அர்ச்சகர்கள் இருந்திருக்கின்றனர்.  கண்காணிப்பு காமிராக்கள் பழுதடைந்து இருக்கின்றன.

வெளி ஆட்கள் இந்த திருட்டை செய்திருக்க முடியாது என்று காவல்துறை கருதுகிறது.

களவு போன நகைகளின் மதிப்பு பல கோடி பெறும் என்பது குறிப்பிடத் தக்கது.

என்ன செய்வது? களவு செய்தவர்கள் பக்தர்களாக இருந்தால் அவர்களுக்கு சாமி பற்றிய பயமே இல்லை என்றாகிறது.

குற்றம் செய்தவன் கள்வன். பழி சுமப்பது சாமியா?

நகைகளால் சாமிக்கு மகிமையா? சாமியால் நகைகளுக்கு மகிமையா?

ஆண்டிற்கு ஒருமுறை  மட்டுமே சுவாமிக்கு நகைகள் அணிவிப்பது என்று ஒரு புதிய சம்பிரதாயம் உருவாக்கினால் என்ன?

கோவில்கள் பக்தி செய்ய  மட்டும் என்று உருவானால் தான் இத்தகைய குற்றங்கள் குறையும்.

ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜாவின் பர்தா கிளப்பிய விவாதம்?!

ஏ.ஆர்.ரகுமான் மும்பையில் தாராவியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து  கொண்டார். அவருடன் மேடையில் தோன்றிய மகள் கதீஜா பர்தா அணிந்திருந்தார்.

ரகுமான் சொல்லித்தான் மகள் பர்தா  அணிந்து தோன்றினார் என்று விமர்சங்கள் எழுந்தன. இஸ்லாத்தை தழுவிய பின்பும் ரகுமானின்  இசையை  ரசிக்க மதம் ஒரு தடையாக இருந்ததில்லை. அவர் தன் மகளை பர்தா அணிய நிர்பந்தித்து இருப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது.

பதில் சொல்கிற வகையில் அவர் மனைவியும் இன்னொரு மகளும் பர்தா இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உடை அவரவர் விருப்பம் என்ற ரீதியில் பதிவிட்டிருந்தார்.

உடை சுதந்திரம் தான். ஆனால் எதுவும் நம் நாட்டில் பிரச்னை ஆக்கப்படும் என்பது தெரிந்தது தானே.

அதுவும் திரைத்துறையில் வெளிப்படை தன்மையை எதிர்பார்க்கும் தன்மை அதிகம்.

அதற்காக உடலை வெளிக்காட்ட வேண்டும் என்று பொருள் அல்ல. இதுவரையில் முகத்தை மறைத்துக் கொண்டு எந்த ஒரு சினிமா கலைஞரும் பணி செய்ததாக நமக்குத் தெரியவில்லை.

இதில் ரகுமானை குற்றம் சொல்ல எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் ஒரு மகளை பர்தா இல்லாமலும் மற்றவரை பர்தா வோடும் பார்க்கும் போது  பெற்றோர் மகள்களின் உடைகளில் தலையிடுவது  இல்லை என்பது தெரிகிறது.

எப்படியிருந்தாலும் ஒருவரின் தனிப்பட்ட உரிமையை விமர்சிப்பது நாகரிகம் அல்ல.

வந்தே மாதரம் பாட மறுத்த முஸ்லிம் ஆசிரியர் மீது தாக்குதல் ?!

பீகார் மாநிலம் அப்துல்லாபூரில் அரசு பள்ளியில் அப்சல் உசைன் தலைமை ஆசிரியர்.

குடியரசு தின பள்ளியில் கொண்டாடப்பட்ட போது தேசிய கீதமும் வந்தே மாதரமும் பாடப்பட்டது.

தேசிய கீதத்துக்கு எழுந்து நின்ற அவர் வந்தே மாதரம் பாடப்பட்ட  எழுந்து நிற்கவில்லை.

தனது மதம் வந்தே மாதரம் பாடலில் வரும் பாரத மாதாவை வணங்க சொல்ல வில்லை என்பது அவரது வாதம். அதே நேரத்தில் தேசிய கீதத்தில் அப்படி ஏதும் இல்லாததால் அதற்கு அவருக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை.

எழுந்து நிற்காததற்காகன் அவரை சிலர் உள்ளே புகுந்து அவரை அடித்து உதைத்திருக்கிறாகள்.

முன்பே பலமுறை இந்த பிரச்னை எழுந்து  வந்தே மாதரம் பாடலுக்கு  முஸ்லிம்கள் எழுந்து நிற்க வேண்டியதில் என்று பொது கருத்து இருக்கிறது.

கட்டாயப்படுத்தி பாட வைப்பது எந்த வகையில் நியாயம்.  ?

அதற்கு அவசியம்தான் என்ன?

ஆசிரியரை அடித்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது .

பாமக பிரமுகர் படுகொலை; மதச் சண்டையை தூண்டும் சங்க பரிவார்; எச்சரிக்கை தேவை!!

பாமக பிரமுகர் படுகொலை

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் நகர முன்னாள் பாமக செயலாளர் ராமலிங்கம் .

கொஞ்ச நாட்கள் முன்பு வாட்ஸ் அப்பில் அவர் ஒரு முஸ்லிமுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும்  காட்சி ஒன்று உலா வந்தது. அதில் அவர் அந்த  குல்லா அணிந்த முஸ்லிமை பார்த்து நீங்கள் உங்கள் தெருவில் எங்களுக்கு வீடு தருவீர்களா நாங்கள் எங்கள் தெருவில் உங்களுக்கு வீடு தருகிறோமே, என்றும் நாங்கள் எங்கள் சாமிக்கு படைத்த உணவை கொடுத்தால் வாங்கிக் கொள்வீர்களா நாங்கள் உங்களிடம்  வாங்கிக் கொள்கிறோமே என்றெல்லாம் வாதிட்டுக் கொண்டிருந்தார். அந்த முஸ்லிம் சிரித்துக் கொண்டே ஒரு சில வார்த்தைகளை சொல்லிக் கொண்டு மறுத்து வந்தார்.

நேற்று அவர் இரவில் வீட்டுக்கு வந்தபோது காரில் வந்த சிலர் அவரது இரு கைகளையும் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். மருத்துவமனை செல்லும் வழியில் அவர் இறந்திருக்கிறார். காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

சம்பவம் தொடர்பாக முஸ்லிம் நபர்கள் ஐந்து பேர் கைது செய்யப் பட்டதாக ஊடக செய்தி ஒளிபரப்பியது. முதல் கட்ட விசாரணையில் மத மாற்றம் செய்வதை தட்டி கேட்டதால் இந்த கொலை நடந்த தாக போலீசார் கூறியுள்ளனர். உண்மையாக இருந்தால் அது ஆபத்து.

பாஜக-வின் எச்.ராஜா இறந்த ராமலிங்கம் வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்து விட்டு சென்றதுடன் பாஜக-வின் கருப்பு முருகானந்தமும் இதை பெரிதுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இடையில்  சீமானும் இது தொடர்பாக உண்மை குற்றவாளிகளை கைது செய் என்று ஒரு கோரிக்கையை வைத்து கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.

நடப்பன நல்லதற்கல்ல என்று மட்டும் தெரிகிறது.

காவல்துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு  தண்டனை வாங்கிக் கொடுப்பதன்மூலம் தான் பிரச்னை பெரிதாகாமலும் மதச்சண்டை உருவாகாமலும் தடுக்க முடியும்.

குற்றவாளிகள் முஸ்லிம்களாகவே இருந்தாலும் எல்லா முஸ்லிம்களும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்வது எப்படி சரியாகும்?

குற்றவாளிகள் எந்த மதத்தையும் சேர்ந்தவராக இருக்கலாம். அவன்தான் தண்டிக்கத் தக்க குற்றவாளியே தவிர அவன் சார்ந்த மதத்தை சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் குற்றவாளிகள் என்று முடிவு கட்ட முடியுமா? அவன் இந்துவாக இருந்தாலும்  முஸ்லிமாக இருந்தாலும் அவனை தண்டிக்க வேண்டுமே தவிர அவன் சார்ந்த மதத்தை சேர்ந்தவர்களை எல்லாம் குற்றவாளிகள் ஆக முத்திரை குத்துவது சரியல்ல.

தமிழ்நாடு மதக்கலவரங்கள் அற்ற பூமியாக விளங்கி வருகிறது. அதை கெடுக்க வேண்டாம்.

பாஜக வளர்ந்த இடங்களில் எல்லாம் மதச் சண்டைகள் நிறைந்து காணப்படுகிறது என்பதை மறுக்க முடியுமா?

அதே நேரத்தில் முஸ்லிம்களில் தீவிரவாதிகள் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. ஐஎஸ் இயக்கத்தில் ஆள் சேர்க்க  முயன்ற சிலர் கைது செய்யப்பட வில்லையா? அவர்களை அடக்கி வைக்க வேண்டியதும் அவசியம்.

கொலைகாரர்களுக்கு  மிகக் கடுமையான தண்டனை வாங்கிக் கொடுப்பதன் மூலம்தான் மதச் சண்டையை முளையிலேயே கிள்ளி  எறிய முடியும்.

ஒபிஎஸ் தாக்கல் செய்த உப்பு சப்பில்லாத பட்ஜெட் ?!

ஒபிஎஸ் தாக்கல் செய்த உப்பு சப்பில்லாத பட்ஜெட்

2019-2020 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஒபிஎஸ் இன்று தாக்கல் செய்தார்.

மோடி விவசாயிகளுக்கு அறிவித்த ஆண்டுக்கு ஆறாயிரம் போல தெலுங்கானா முதல்வர் கே சி ஆர் அறிவித்த தைப்போல ரைத்து பந்து திட்டத்தின் வழி  ஆண்டுக்கு எட்டாயிரம் போல ஓடிசாவின் நவீன் பட்நாயக்  அறிவித்த காலியா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு பத்தாயிரம் போல தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் பரிசு ஆயிரம் போல ஏதாவது அறிவிப்பார் என்று எதிர்ப்பார்த்த தமிழ் மக்களுக்கு அறிவிக்க இவர்களுக்கு ஒன்றும் கிடைக்க வில்லை என்பது ஏமாற்றம்தான்.

மத்திய அரசு தங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பங்கு பாக்கியை தரவில்லை என்று மட்டும் தெரிவித்து அதற்கு ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை.

தனியார் வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 143267 ஆக உயர்ந்திருக்கிறது என்று சொல்லி ஏதோ தனி நபர் ஆண்டுக்கு அவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அது ஒரு தனி நபர் ஆண்டுக்கு சேவை மற்றும் பொருள் வரி அளவுக்கு பயன் படுத்துகிறார் என்ற பொருள் தானே தவிர வருமானம் அல்ல. மொத்த உள்நாட்டு உற்பத்தியை மக்கள் தொகையை கழித்தால் வரும் தொகை ஒரு தனி நபர் வருமானமாக கணக்கிடப் படுகிறது. அது ஒரு மாயத் தோற்றம்தான்.

நிதிக் கமிஷன் பரிந்துரைக்கும் அளவுப்படி தமிழ்நாட்டுக்கு வருவது மத்திய வருவாயில் 4.023 % தான். ஆனால் மத்திய பிரதேசத்துக்கு 7.548% மும் மேற்கு வங்கத்துக்கு 7.324 % மும் இன்னும் பல மாநிலங்களுக்கு கூடுதல் அளவிலும் வழங்கப் படுகிறது. ஏன் இந்த பார பட்சம்?  இது பற்றி வாய் திறக்க  தமிழ் நாட்டு அரசு தயாராக இல்லை.

பல வகைகளிலும் மாநிலங்களை பலவீனப் படுத்தும் முயற்சியில் மத்திய அரசு  இறங்கி இருக்கிறது. அது பற்றி கவலைப் படும் அரசாகவும் இல்லை.

நீட்  தேர்வில் விலக்கு  அளிக்கும் சட்டம் ஒப்புதலுக்கு அனுப்பியது என்ன ஆனது என்று கேள்வி கூட கேட்க தயாராக  இல்லை.

நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு   ரூபாய் 1800  ஆக நிர்ணயித்து விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது.  கரும்புக்கும் போதிய விலை இல்லை. கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை சீர்  செய்ய எந்த திட்டமும் இல்லை.

வெறும் 2000 பம்பு செட்டுகளுக்கு 90% மானியத்துடன் சூரிய ஒளி மோட்டார்களை அமைக்க அறிவித்து இருப்பது பிரச்னையை  தீர்க்க உதவாது.

உரிமைகளுக்கு போராடும் சமுதாயத்தின் எந்த பிரிவையும் சமாதானப் படுத்தும் வகையில் அறிவிப்புகள் இல்லை.

எட்டாவது ஆண்டாக பட்ஜெட் தாக்கல் செய்யும் ஒபிஎஸ் பழைய கணக்கை துகை மாற்றி புதிதாக அறிவித்திருக்கிறார்.

எந்த தொலைநோக்கு  பார்வையும் இல்லாத உப்பு சப்பில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்து கடமையை நிறைவேற்றி இருக்கும்  ஒபிஎஸ் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கண்டனங்களுக்கு  என்ன பதில்  சொல்லப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தினகரனுக்கு குக்கர் சின்னம் இல்லை; இரட்டை இலை யாருக்கு என ஒரு மாதத்தில் தீர்ப்பு?!

உச்ச நீதிமன்றம் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க மறுத்துவிட்டது

ஒரு அரசியல் கட்சியாக கூட தன் அமைப்பை பதிவு செய்யாமல் எப்படி தேர்தல் கமிஷன் தன் கட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று தினகரன் எதிர்பார்க்கிறார் என்பது தெரியவில்லை.

ஒரு இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் போதுமா?

டெல்லி உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும் இரட்டை இல்லை வழக்கை நான்கு வாரத்துக்குள் முடிக்க சொல்லியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23 /11/2017 அன்று தேர்தல் கமிஷன் ஒபிஎஸ் – இபிஎஸ் இருவரின் மனுக்களை ஏற்று அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியது. அதை எதிர்த்து தினகரன் தொடுத்த வழக்கு தான் டெல்லி உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

இருவரின் இணைப்பும் மோடியால் அறிவுறுத்தப் பட்டு அமுலுக்கு வந்ததை ஒ பி  எஸ் உறுதிபடுத்தி இருக்கிறார். ஆனால் அஇஅதிமுக வின் சட்ட திட்டப்படி அதன் பொதுக்குழுவே விதிகளை மாற்றும் அதிகாரம் கொண்டது. இல்லாத ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளை ஏற்படுத்தியது அஇஅதிமுக தொண்டர்களை கட்டுப்படுத்தாது என்று கே.சி.பழனிச்சாமி போன்றோர் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இரட்டை இலை தீர்ப்பு தேர்தலுக்கு முன்பே வந்துவிடும். அதன் தாக்கம் எப்படியும் இரு தரப்பிலும் எதிரொலிக்கும்.

சின்னத்துக்காக சண்டை இடுபவர்கள் தமிழ் நாட்டின் உரிமைக்காகவும் மத்திய அரசுடன் சண்டையிட்டால் நாட்டுக்கு  நல்லது.