Home Blog Page 50

ரஜினி ரசிகர்ளை சாகடிக்கணும் அல்லது நாம செத்துப் போகணும் ; சீமானின் உணர்ச்சிப் பேச்சு?!

ரஜினி ரசிகர்ளை சாகடிக்கணும் அல்லது நாம செத்துப் போகணும்

ஒரு திரைப்பட விழாவில் பேசும்போது சீமான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ரஜினி ரசிகர்ளை விமர்சித்து பேசியிருக்கிறார்.

யாரைப்பார்த்தாலும் தலைவர் படத்தை பார்த்தியா அவர் அப்படி பண்ணியிருக்கிறார் இப்படி பண்ணியிருக்கிறார் என்று ரஜினிகாந்த் படத்தை பற்றி பேசுவதை விமர்சித்தார்.

ரஜினி யார். அவர் ஒரு நடிகர். அவர் தலைவர் என்றால் நாட்டிற்கு உழைத்த காமராஜர், கக்கன், ஜீவா, ரெட்டைமலை சீனிவாசன், முத்துராமலிங்க தேவர் எல்லாம் யார்.? ரஜினி தலைவர் என்று சொல்ல அவர் என்ன செய்து விட்டார்.? இதுதான் சீமான் பேச்சின் சாரம்.

தலைவர்களை திரையில் தேடி பழக்கப்பட்டவர்கள் தமிழர்கள். கேரளாவில் அப்படி இல்லை. ஆந்திரா தவிர வேறு எங்கும் அப்படி இல்லை.

இந்த நிலை மாற வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

         தமிழகத்தில் அரசியல் தலைவராக வர வேண்டும் என்றால் அவருக்கு  தமிழ் நாட்டைப்பற்றிய பூகோள அறிவு இருக்க வேண்டும். தமிழ்ச்சமுதாயத்தின் எல்லா பிரச்னைகளும் தெரிந்திருக்க வேண்டும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றிய தொலை நோக்கான தெளிவான பார்வை இருக்க வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறை இருக்க வேண்டும்.   

தொழில் எதுவாக இருந்தாலும் அவருக்கு மேற்கண்ட தகுதிகள் இருந்தால் அவர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம்.

ரஜினிக்கு கமலுக்கு இந்த தகுதிகள் இருக்கிறதா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய  வேண்டும்.

ரசிகர்களை பொறுத்த வரை அவர்கள் ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.  யார் ரசிகர்கள்? நம் தம்பி தங்கைகள். மாமன் மச்சான்கள்.  தவறான வழியில் போனால் திருத்த என்ன செய்வோமோ அதைத்தான் செய்ய வேண்டும்.

சாகடிக்க வேண்டும் என்று சீமான் பேசியது உணர்ச்சி வசத்தால்.   அதனால்தான் உடனேயே அல்லது நாம் செத்துப் போய் விட வேண்டும் என்று பேசினார்.

    ரஜினி ரசிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் சமூக பிரச்னைகள் தொடர்பாக அரசியலில் தங்கள் நிலைப்பாடு என்ன என்று சொல்லி விட்டு தாராளமாக வரலாம். அது இல்லாமல் வெறும் பந்தா காட்டிவிட்டு , பூச்சி காட்டலாம் என்று  அரசியலுக்கு வந்தால் விளைவு என்னவாகும் என்பதைத் தான் சீமான்  பேசியதாக எடுத்துக் கொள்ளவேண்டும். 

கட் அவுட்டுக்கு அண்டா பால் கேட்டு கவுந்திட்டியே சிம்பு??!!

தனது கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் எல்லாம் செய்ய வேண்டாம் என்று  முன்பு சிம்பு அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டிருந்தார்.

கேட்கிறார்களோ இல்லையோ நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று நடிகர்கள் சொன்னால் கொஞ்சமாவது ரசிகர்கள் திருந்துவார்கள்.

அஜித்தின் கட் அவுட்டிற்கு பால் ஊற்றுகிறேன் என்று ரசிகர்கள் கட் அவுட்டோடு கீழே விழுந்து ஒருவர் இறந்தார் என்பது துயர செய்தி.

இன்றைக்கும் ரஜினி ரசிகர்கள் பால் ஊற்றுவதை அவர் கண்டிப்பதோ வேண்டாம் என்று அறிவுறுத்துவதோ இல்லை. ரசிக்கிறார் என்றுதானே அர்த்தம்.

தமிழன் மானம் கப்பல் ஏறுவதை ரசிக்கிறீர்கள்.

தனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஒரே தொடர்பு வாக்கு செலுத்துவதே என்றும் அறிக்கை விடுத்தது அஜித்குமார் முதிர்ச்சியை காட்டி இருக்கிறார். பாராட்டும் குவிகிறது. இனி அஜித்துக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள்.

நம்ப சிம்புவுக்கு என்ன வந்தது. யாரோ உனக்கு இரண்டு மூன்று ரசிகர்கள் . அதனால்தான். பால் அபிஷேகம் வேண்டாம் என்கிறாய் என்று சொன்னார்களாம் .

உடனே ஒரு  பேட்டி கொடுத்து பாக்கெட் பால் எல்லாம் வேண்டாம் அண்டா அண்டாவா ஊற்றுங்கள் என்று சொல்லி இருக்கிறார். தனக்கும் ஆள் இருக்கிறது என்று காட்டிக்கொள்ள ஆள் வைத்து ஊற்றிகொள்கிறார் என்று சொன்னால் என்ன செய்வார்.

இதன் மூலம் எல்லார் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது மட்டுமே மிச்சம்.

சிம்பு தனது நடவடிக்கைகளில் முதிர்ச்சியை காட்ட வேண்டும்.

திறமையுள்ள நடிகர் இது போன்ற சில்லறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு மதிப்பை குறைத்துக் கொள்கிறாரே என்ற நல்ல எண்ணமே நமது கண்டனம்.

பால் முகவர்கள் சிம்பு மீது நடவடிக்கை கேட்டுவழக்கு போட்டிருக்கிறார்கள். இதுவும் விளம்பர உத்தியா?

நீ ராஜாவா வா! வரவேற்கிறோம்! கொண்டாடுவோம்.

இதுமாதிரி பேட்டி கொடுத்து காமெடி செய்யாதே??!! கூஜாவாகி விடுவாய்!!!

நூறாண்டுகளாக ஜனநாயகத்திலும் நிலைத்த குடும்ப ஆட்சி??!

1919-ல்  காங்கிரஸ் தலைவராக மோதிலால் நேரு தொடங்கிய குடும்ப ஆதிக்கம்  ஜவஹர்லால் நேரு , பிரோஸ் காந்தி , இந்திரா காந்தி , சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி , மேனகா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, வருண் காந்தி, என்று கடைசியில் 2019 ல் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு பிரியங்கா காந்தி வரை நூறாண்டுகளாக தொடர்கிறது.

உலகில் வேறு எந்த குடும்பமும் ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்று ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்க முடியுமா என தெரியவில்லை.

மோதிலால் காஷ்மீர் பண்டிட் என்று அறியப்பட்டாலும் ஜவஹர்லால் தொடங்கி எல்லாருமே தங்களை சாதி மதம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்களாகத்தான் அடையாளப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

பிரோஸ் ஒரு பார்சி. அவர் இந்திராவை மணந்தார். ராஜீவ் ஒரு இத்தாலிய கிறிஸ்தவரை மணந்தார். வருண் மட்டும் தான் பிராமணப் பெண்ணை திருமணம் செய்திருப்பதாக பெருமிதம் கொண்டார். பிரியங்காவும் ஒரு கிருஸ்தவரை மணந்தார். ஆனாலும் நேரு குடும்பத்தவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர் ஒரு பிராமணராகவே பாவிக்கப்பட்டு ஆதரவளிக்கப்படுகிறார்.

காங்கிரஸ்காரர்களுக்கு இன்னும் முப்பதாண்டுகளுக்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் கவலை இல்லை. பிரியங்கா வந்து விட்டாரே. அதற்குப் பின்னும் அவரின் குழந்தைகள் தயாராகவே இருப்பார்கள். எனவே காங்கிரஸ் காரர்களுக்கு இனி எப்போதும் தலைவர் பிரச்னை வரவே வராது.

ஏதோ காங்கிரசில் மட்டும்தான் குடும்பமே கட்சி என்று இருப்பது போல் சொல்வது நியாயமாக இருக்காது. நாட்டில் பல கட்சிகளில் இப்படித்தான் இருக்கிறது. மக்கள் ஆதரவு இருக்கும்போது எதையும் குறை சொல்ல முடியாது.

பாஜக ஒன்றும் பெருமை கொள்ள வேண்டாம். அங்கு ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது.  அவர்கள் ஒரு தலைவரை புகுத்த மாட்டார்களே தவிர இன நலனுக்காக ஒரு படையையே தயார் செய்து வைத்திருக்கிறார்களே.

இன நலனுக்காக தியாகம் செய்ய ஒரு படையை உருவாக்கி வைத்திருக்கும் அவர்கள் ஏன் தனி நபரை துதிக்க வேண்டும்?

ஆக நாட்டில் காங்கிரசிலும் சரி பாஜக விலும் சரி ஆதிக்கம் அவர்கள் கையில்.

நேரு குடும்பம் சாதித்த சாதனையை ஒரு தாகூர், ஜாட், குர்மி, யாதவ், போன்ற இதர பிற்பட்டோரோ சிறுபான்மையோரோ செய்திருக்க முடியுமா? பிராமணர்களால் மட்டுமே செய்ய முடிந்த சாதனை இது என்பதை மட்டும் மறுக்க முடியாது.

ஜெயலலிதா குற்றவாளி இல்லையாம்?! திருத்தப் பட வேண்டிய உயர் நீதிமன்ற தீர்ப்பு!!!

ஜெயலலிதா குற்றவாளி இல்லையாம்?

குற்றவாளி ஜெயலலிதாவுக்கு மரினாவில் நினைவிடம் கட்ட தடை கேட்டு தொடரப் பட்ட வழக்கில் உயர்நீதி மன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது.  அதற்கு நீதிமன்றம் கூறிய காரணம்தான் ஏற்க முடியாத , அறிவுக்குப் பொருந்தாத, நியாயமில்லாத  , கேலிக்கூத்தான ஒன்றாக இருக்கிறது.

  ஒருவேளை சட்டப்படி சரியான எல்லாரையும் கட்டுப்படுத்தக்கூடிய  ஆனால் அநியாயமான தீர்ப்புகளில் ஒன்றாக இது  இருந்து விடும் வாய்ப்பும் அதிகம். 

                      நீதிமன்றங்களின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பதற்கு இது போன்ற தீர்ப்புகள் காரணமாக இருந்து விடக் கூடாதே என்ற கவலைதான் நமக்கு.

அரசு மேன்முறையீடு செய்யாது.   வழக்குப் போட்டவர் போடலாம்.   போடுவாரா தெரியாது.   மேன்முறையீடு செய்யப் பட்டு அது அனுமதிக்கப்  படும் வரை இந்த அநியாய தீர்ப்பு அமுலில் இருக்கும் என்பது அவலம்.

உயர்நீதி மன்றம் விடுதலை செய்தது.    அதை உச்சநீதிமன்றம்  ரத்து செய்ய வில்லை.  எனவே ஜெயலலிதா குற்றவாளி இல்லை.  இதுதான் உயர்நீதி மன்ற தீர்ப்பு.

ஆளுக்கு தக்கபடி மாறும் தீர்ப்புகள் என்பது எப்படி நீதியாகும்?  குற்றம் செய்தது ஜெயலலிதா.  அவருக்கு துணை நின்றவர்கள் சசிகலாவும் மற்றவர்களும்.  மற்றவர்கள் குற்றவாளிகள் ஜெயலலிதா குற்றவாளி அல்ல என்ற தீர்ப்பை  எப்படி  விமர்சிப்பது.?   சிறை தண்டனை விதித்து தண்டிக்கப் பட முடியாத குற்றவாளி என்பதுதானே உண்மை. 

வழக்கில் முதல் எதிரி ஜெயலலிதா. இரண்டு முதல் நான்கு வரையிலான எதிரிகள் முதல் எதிரி பதவியில் இருக்கும்போது ஊழல் செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து குவிப்பதற்கு துணை நின்றவர்கள். அதாவது ஜெயலலிதாவின் பினாமிகள். ஜெயலலிதா இறந்ததால் மேன்முறையீடு அற்றுப் போனது. மற்றவர்கள் மீதான மேன்முறையீடு விசாரிக்கப் பட்டு முதல் எதிருக்கு துணை நின்றதற்காக மூவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்  பட்டு சிறையில் இருக்கிறார்கள்.   ஜெயலலிதாவும் உயிருடன் இருந்திருந்தால் அவரும் சிறையில் தான் இருந்திருப்பார்.  வழக்கு அற்றுப் போனால் விளைவு அவர் சிறை தண்டனை அனுபவிக்க முடியாதே தவிர மற்றபடி அவரது சொத்துக்கள் தீர்ப்புக்கு  உட்பட்டதுதான்.  சிறையில் இருந்திருக்க வேண்டியவர் குற்றவாளி  இல்லை     என்பதை எப்படி ஏற்பது?

ஜெயலலிதா ஒரு மக்கள் தலைவர். அவருக்கு மணி மண்டபம் கட்டுவது மரபாக இருக்கலாம். அதில் கூட யாருக்கும் பெரிதாக ஆட்சேபணை இருக்க வாய்ப்பில்லை.

எம்ஜியார் சிலைகளுக்கு  அருகே யாருக்கும் சொல்லாமல் ஜெயலலிதா சிலைகளை ஆளும் கட்சிக்கார்கள் வைக்கிறார்கள். ஏன் திருட்டுத் தனமாக வைக்க வேண்டும்?  ஆட்சேபணை வரும் என்ற பயம்தானே?

அதிகார வர்க்கம் அத்து மீறும்போது நீதிமன்றங்கள் தான் ஜனநாயகத்தை காத்து வருகின்றன. நீதிமன்றத்தின் மாண்பை காக்க வேண்டிய கடமை நம் எல்லாருக்கும் இருக்கிறது. அந்தக் கடமை நீதிமன்றங்களுக்கும் இருக்க வேண்டும். இந்த முரணுக்கும் ஒரு பதிலை நீதி மன்றம்  தர வேண்டும்.   தந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் டெக்னிக்கல் ஆக அணுகி தீர்ப்பு தருவது வெளிப்படையாக இருக்கும் முரண்பாட்டுக்கு விடை தராமல் விட்டு விடுவது என்பதெல்லாம் இது மாற்றப் பட வேண்டிய தீர்ப்பு என்பதையே உறுதிப்படுத்தும்.

சாகுபடி நிலம் வைத்திருந்தால் போதும் ஏக்கருக்கு ரூபாய் 8000 –தெலுங்கானா புரட்சி !!!

சாகுபடி நிலம் வைத்திருந்தால் போதும் ஏக்கருக்கு ரூபாய் 8000

தெலுங்கானாவில் இருக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு சாகுபடி காலத்துக்கு ஏக்கருக்கு ரூபாய் 4000 வீதம் இரண்டு சாகுபடி காலத்துக்கு ரூபாய் 8000 அவரது வங்கிக் கணக்கில் அரசு செலுத்தி விடும். அரசுக்கு இதனால் ஆண்டுக்கு ஆகும் செலவு ரூபாய்  10000 .

அவர் சாகுபடி செய்கிறாரா இல்லையா என்பதெல்லாம் பிரச்னை இல்லை.

இந்தியாவிலேயே இதுவே வெற்றி பெற்ற முதன் முயற்சி. எல்லா விவசாயிகளும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். குறைந்த பட்ச உத்தரவாதம் இருக்கிறதே.

அதனால் தான் காங்கிரஸ், தெலுகு தேசம் ஜனசமிதி கம்யுனிஸ்டு கூட்டணியை முறியடித்து 119 சட்டமன்ற இடங்களில் 88 இடங்களை தனியாகவே பெற்று ஆட்சியில் அமர்ந்தார் கே.சந்திரசேகர ராவ்.

இந்த திட்டத்தை அமுல் படுத்த முதல் தேவை நில ஆவணங்கள் அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்டன. அறுபது ஆண்டுகளுக்கு பிறகு நில ஆவணங்களை ஆய்வு செய்து நவீனப் படுத்த பெரு முயற்சி தேவைப்பட்டது. அதை தெலுங்கானா வருவாய் துறை செம்மையாக செய்தது.

57 லட்சம் விவசாயிகளின் நிலங்களை கணினி மயமாக ஆவணப்படுத்துவது என்பது சாதாரண காரியமா? அப்படி கணினி மயமாக்கப் பட்டால் மட்டுமே இது போன்ற திட்டங்களை அமுல்படுத்த முடியும்.

2000 ஹெக்டேருக்கு ஒரு விவசாய விரிவாக்க அதிகாரி. அவருக்கு தேவைப்படும் கணினி  இன்டர்நெட் வசதிகள் தரப்பட்டன. இந்த அடிப்படை வேலைகள் செய்ததால் திட்டம் அமுலுக்கு வருவது சாத்தியப்பட்டது.

விதை, உரம், பூச்சிகொல்லி மாநியங்கள் தருவதற்கு பதில் இதுபோல் நேரடி நிதி உதவி அளித்தால் விவசாயி என்ன சாகுபடி செய்வது என்பதில் மாற்றி தேர்வு செய்ய வாய்ப்பு அதிகரிக்கும்.

உலக வர்த்தக அமைப்பும் விவசாயிகளுக்கு  நேரடி நிதி தருவதையே ஆதரிக்கிறது.

திட்டமிடலில் இருக்கிறது எல்லாம். இங்கே என்ன நடக்கிறது.? எந்த திட்டம் அறிவித்தாலும் அதில் அரசியல் தலையீடு செய்து கட்சிக்காரர்களுக்கே பயன்படுமாறு செய்வது மற்ற கட்சிக்காரர்களையும் பொதுமக்களையும் எதிரிகள் ஆக்காதா?

        விவசாயத் தொழிலாளிகள் குறைந்து வருகின்றனர்.   அவர்களுக்கும் குறைந்த பட்ச ஆதரவு உதவித்துகையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி கூலி உயர்வை நேரடி கண்காணிப்பில் அரசு வைத்திருந்து சாகுபடி செலவுகளை கட்டுப்படுத்தி வைத்தால் மட்டுமே எதிர்பார்க்கும் நன்மைகள் விளையும்.

எந்த பயிர் சாகுபடி செய்வது  என்பது தொடங்கி கட்டுபடியாகும் விலை நிர்ணயம்  விளைபோருளை சந்தைப் படுத்துவது வரை அரசு கண்காணிக்க வேண்டும்.    அதற்கான அமைப்புகள் இப்போதும் இருக்கின்றன. அவை முறையாகவும் வலிமையாகவும் இயங்குகின்றனவா?  அதைப்பற்றி ஆய்வுகள் உண்டா?   ஏட்டில் இருந்தால் மட்டும் போதாது.  நடைமுறைக்கு வரவேண்டும்.

எந்த திட்டத்திலும் குறைகளே இல்லாமல் நடைமுறைபடுத்த முடியாது. கே.சி.ஆர் திட்டத்திலும் நேரடி குத்தகை சாகுபடி தார்களுக்கு பயன் இல்லாமல் வெளியூர்களில் இருக்கும் உடைமையாளர்களுக்கு பயன் தருவது எப்படி என்று குற்றம் சுமத்தி வழக்கு நடக்கிறது. அனுபவத்தின் அடிப்படையில் திட்டத்தில் மாற்றம் செய்து கொள்ளலாமே. நம்மிடம் திட்டமே இல்லையே.

எல்லா மாநிலங்களும் பின்பற்ற தக்க  ஒரு திட்டத்தை அமுல் படுத்தியிருக்கும் சந்திரசேகர ராவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கொலைப்பழி சுமக்கும் முதல்வர் எடப்பாடி தொடர்வது எப்படி?

கொலைப்பழி சுமக்கும் முதல்வர் எடப்பாடி

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை சம்பவங்கள் ஒரு திகில் நாவலை படித்த உணர்வை தருகிறது.

ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து அவரது எஸ்டேட்டில் இருந்த ஆவணங்களை ஒரு கும்பல் திருடி அதை முதல்வர் எடப்பாடி வசம் கொடுத்ததாகவும் அதன் பின் அதில் சம்பந்தப்  பட்ட நபர்கள் ஒவ்வொருவராக கொல்லப் படுவதும் அதிர்ச்சியை அளித்தது. பின்னால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடந்து வருகிறது.  இரண்டாண்டுகளுக்குப் பிறகு சம்பந்தப் பட்டவர்களை தெஹெல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யு சாமுவேல் தொடர்பு கொண்டு தகவல் சேகரித்து அதை ஒரு ஆவண படமாக வெளியிடுகிறார்.

அதில் சம்பந்தப் பட்ட நபர்  முதல்வர் பழநிசாமியை தொடர்பு படுத்தி கொலைப்பழி சுமத்தி இருந்தார்.

குற்றச்சாட்டுகளை மறுத்து முதல்வர் பேட்டி கொடுத்து குற்றம் சுமத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார். அதன்படியே அவர்களை காவல் துறை கைது செய்து பல மணி நேரம் விசாரணை செய்து அவர்களை நீதிமன்றத்தில் காவலுக்கு அனுப்பியபோதுதான் நீதிமன்றம் அவர்களை காவலுக்கு அனுப்பவும் காவல் துறை விசாரணைக்கு அனுப்பவும் மறுத்தது.

அதன்பின் அவர்களை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்களை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிகிறது. அது சட்டப்படி சரி அல்ல.

தனது மகள் மனைவியை விபத்தில் இழந்து சயான் அதில் இருந்து தப்பியபின் விரக்தி மனநிலைக்கு வந்து அச்சமின்றி உண்மைகளை கூற முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.

edappadi pazhanisamy
edappadi pazhanisamy

எப்படி இருந்தாலும் எடப்பாடி, நத்தம் விஸ்வநாதன், ஒபிஎஸ், வைத்திலிங்கம் ஆகிய நால்வரின் ஆவணங்கள் தான் எடப்பாடியால் மீட்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

சிக்கலின் இருந்து தப்பிக்க மத்திய அரசு உதவும் என்ற எண்ணத்தில் எடப்பாடி  பாஜக-வுடன் கூட்டணி வைக்க இருந்ததாகவும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் மீண்டும் பாஜக ஆட்சியில் அமர்வது அவ்வளவு சுலபம் அல்ல என்பது தெரிந்ததும் அதில் இருந்து விலகி சிந்திக்க ஆரம்பித்து விட்டதாகவும் தெரிகிறது.

கட்சியை அடகு வைத்தாலும் மக்கள் ஏற்க வேண்டுமே?

வேறு வழியில்லாமல் பாஜக வுடன் அதிமுக பாமக கிருஸ்ணசாமி கூட்டணி சேர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். எனவே மத்திய அரசு நியாய விசாரணைக்கு முயற்சி எடுக்கும் என்று தோன்றவில்லை.

திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுனரிடம் மனு கொடுத்து சிபிஐ விசாரணை  கோரியிருக்கிறார்.

நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகி சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டுமா என தீர்மானிக்க இருக்கிறது.

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தனது அரசியல் எதிரிகள் சதி செய்து இந்த குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.  அதை யார் தீர்மானிப்பது?

குற்றம் சுமத்தப் படுபவர் தானே நீதிபதியாக இருந்து குற்றம் இல்லை என்று சொல்ல முடியுமா?

ஒரு முதல்வரின் மீது கொலைப்பழி சுமத்தப் படுகிறது.  அவர் மறுக்கிறார்.  குற்றம் சுமத்தியவர்கள் மீது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் சொல்வது புதிது என்பதால் மட்டுமே அவர்கள் குற்றச்சாட்டு பொய் என்று முடிவு செய்ய முடியுமா என்பதுதான் விடை காண வேண்டிய கேள்வி. 

குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிறதா என்பதை யார் முடிவு செய்வது.? நீதிமன்றம் சொல்லித்தான் நியாயமான விசாரணை நடக்க முடியும் என்பது நமது அரசியல் தலைவர்களின் தரம் எப்படி இருக்கிறது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.

எடப்பாடி தானே முன்வந்து நியாயமான விசாரனை நடைபெறும் என்பதற்கு உத்தரவாதமாக பதவி விலகி வழி காட்டுவதுதான் ஆரோக்யமான அரசியல்.  கடைசி வரையில் பதவில் ஒட்டிக்கொண்டு விசாரணையை தடுப்பேன் என்று முரண்டு பிடித்தால் அவரது மீதான குற்றச்சாட்டு வலுப்பெறும் என்பதில் ஐயமே இல்லை.

அதிமுகவில் வேறு தலைவர்களே இல்லையா ?

இந்தி படிக்க சொல்கிறாரா மருத்துவர் ராமதாஸ்? மோடி வலையில் விழுந்தாரா?

எல்லா பிரச்னைகளிலும் முதன்மை கருத்துக்களை முன் வைப்பவர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஆபிரகாம் சாமுவேல் என்பவர் மும்பை விமான நிலையத்தில் இம்மிகிரஷன் கிளியரன்ஸ் வாங்க முயற்சித்தபோது அங்கே பணியில் இருந்த அதிகாரி இந்தியில் கேட்டதற்கு எனக்கு இந்தி தெரியாது ஆங்கிலம் தான் தெரியும் என்று சொன்ன பிறகும் அவரை நிறுத்தி வைத்திருக்கிறார்.

உடனே விமானத்தை பிடிக்க வேண்டி இருந்ததால் புகார் செய்யாமல் இணைய தளத்தில் சம்பவத்தை வெளியிட்டார். அவர் மீது விசாரனை நடந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அந்த அதிகாரி மீண்டும் அதை உறுதிபடுத்தும் வகையில் இலங்கையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வருபவர்கள் இருப்பதால் இதையெல்லாம் விசாரிக்க வேண்டி உள்ளது என்று நியாயப்படுத்தி இருக்கிறார். இந்தியாவில் இருப்பவர்கள் என்றால் இந்தியில்  பேசினால்தான் ஏற்றுக்கொள்வீர்களா?

இந்த பிரச்னை ஒருபுறம். இதை  கண்டித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவர் ராமதாஸ் அந்த அதிகாரியை கண்டித்திருந்த தோடுவிடவில்லை. ‘ இந்த நிலையை ஏற்படுதியவர்களுக்கு என்ன தண்டனை ?’ என்று ஒரு கேள்வியையும் எழுப்பி இருக்கிறார். 

இந்தி பேச முடியாத நிலையை ஏற்படுத்தியவர்கள் என்று யாரை சொல்கிறார். ?      தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமாக  கற்பிக்கும் முயற்சிகளை வெற்றிகரமாக தடுத்து வருகிறோம். அது தவறு என்கிறாரா? கற்றுக் கொடுத்திருந்தால் அந்த தமிழனுக்கு தடை வந்திருக்குமா என்கிறாரா?

பாமாக சமீபகாலமாக மோடியையும்  பாஜக-வையும் அதிகம் விமர்சிப்பதில்லை.        10% இட ஒதுக்கீடு சட்டத்தை விமர்சித்து பேசிய அன்புமணி எதிர்த்து வாக்களிக்க வில்லை. மாறாக வெளிநடப்பு செய்திருக்கிறார். அதிமுகவும் வெளிநடப்பு செய்தது.

பாஜக – அதிமுக – பாமக கூட்டணி வந்துவிடும் என்று ஆரூடம் சொல்பவர்கள் வெற்றிபெருவார்களோ?

மோடி அரங்கேற்றிய 10% இட ஒதுக்கீட்டு மோசடி அரசியல்??!!

இட ஒதுக்கீடு எதனால் வந்தது.?

நாங்கள் 90% இருக்கிறோம். ஆனால் கல்வியிலும் சமுதாயத்திலும் பின் தங்கி இருக்கிறோம். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 10% உள்ள மேல்தட்டு சிறுபான்மை மக்கள் 90% வாய்ப்பை பெற்று வாழ்கிறார்கள். எனவே எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். இதுதானே இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படை.

இப்போது கல்வியிலும் சமுதாயத்திலும் முன்னேறிய ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்கிறோம் என்பதை விட ஒரு மோசடிதிட்டம் இருக்க முடியுமா?

இட ஒதுக்கீடு பெற்ற மக்கள் எத்தனை சதம் பேர் முன்னேறி இருக்கிறர்கள்? ஏதாவது ஆய்வு செய்திருக்கிறீர்களா? ஒதுக்கீடு பெற்ற எல்லாரும் முன்னேறிவிடவில்லை என்பதுதானே உண்மை. அதனால்தானே 27% பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிஷன் பரிந்துரையை அமுல்படுத்த விபிசிங் முனைந்தபோது மந்திர் பிரச்னையை கிளப்பி அவரை ஆட்சியிலிருந்து அகற்றினிர்கள் .

முக்கியமான கேள்வி. முற்பட்ட பொது வகுப்பினரில் எத்தனை சதம் பேர் கல்வி வேலைவாய்ப்பில் தொழில்துறையில் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள்?  அதே துறைகளில் பின் தங்கிய மிக பின் தங்கிய, பட்டியல், மலைவாழ் மக்கள் எத்தனை சதம் பேர் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள்? இந்த ஆய்வை செய்த பின்தானே யாருக்கு எத்தனை சதம் ஒதுக்கீடு தேவை என்பதை நிர்ணயிக்க முடியும்? 

இட ஒதுக்கீடு நிரந்தர ஏற்பாடாக இருக்க முடியாது. கூடாது. பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை முன்னேறிய வகுப்பினர் எத்தனை சதம் வாய்ப்பை பெற்றிருக்கிறார்களோ அந்த அளவை தாழ்த்தப் பட்டோரும் பிற்பட்டோரும் பெற்ற பிறகு இட ஒதுக்கீடை ரத்து செய்து எல்லாரும் தகுதி அடிப்படையில் வாய்ப்புகளை பெற வைப்பது தான் சமூக நீதி.

ஆனால் ஒதுக்கீடு கொடுத்தவர்களை எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறீர்கள் என்று கணக்கீடு செய்யாமல் அவர்களை பாதிக்கும் வகையில் முற்பட்டோரில் ஏழைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு ஒதுக்கீடு என்பது குட்டையை குழப்பி பின்னால் இட ஒதுக்கீடு முறையை இல்லாமல் செய்வது  என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இதை பார்க்க முடியும்.

நரசிம்மராவ் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இதே ஒதுக்கீடை உச்ச நீதிமன்றம் முன்பு ரத்து செய்தது. இப்போது என்ன செய்யப்  போகிறது என்று பார்ப்போம்.?

அரசியல் சட்டத்தில் இல்லாத பொருளாதார அளவுகோலை நுழைத்து அனுமதிக்கப் பட்ட சமூக கல்வியறிவு பிற்பட்ட நிலை ஒதுக்கீடை அசைத்துப் பார்ப்பதுதான் உள் நோக்கம்.

இப்போது தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் நிலவும் 49.5% பட்டியல் வகுப்பார்,  மலைசாதியினர், பிற்பட்டோர் ஒதுக்கீடு தவிர மிச்சமிருக்கும் 50.5% வாய்ப்புகளை முன்னேறிய சமூகத்தினர்தான் பெரும்பாலும் கைப்பற்று கிறார்கள்.

இதனால் ஏறத்தாழ மக்கள் தொகையில் 95% பேர் ஏதாவதொரு ஒதுக்கீடுக்கு தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள்.

இதுவா சமூக நீதி?

இன்னும் இதைப்போல் பல அஸ்திரங்களை வீசப்போவதாக சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சொல்லியிருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

என்ன வேண்டுமானால் செய்வார்கள். மோடி மீது அச்சம் பரவுவது மட்டும்தான் இந்த அறிவிப்பின் பலன்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய பின் குடியரசுத் தலைவர் ஒப்புதல் என்பது முடிவாகிபோன ஒன்று. சட்ட மன்றங்களில் நிறைவேற்ற முனையும் போது  எதிர்த்துப் பேசிய அதிமுக தலைவர்கள் நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றுவார்களா? வாக்கெடுப்பின் பொது எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தவர்கள் ஆயிற்றே?

உச்ச நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என்பதில் இருக்கிறது சமூக நீதி நிலைக்குமா பறக்குமா என்பது?

பொங்கல் பரிசு ரூபாய் 1000.. தீர்ப்பை மாற்றியது உயர் நீதிமன்றம்!

அரிசி அட்டை தார்களுக்கு  மட்டுமே பொங்கல் பரிசு ரூபாய் 1000 தர வேண்டும் என்று தடை விதித்த உயர்நீதிமன்றம் தன் உத்தரவு அமுலாகும் முன்பே முக்கால் வாசிப்பேர் வாங்கி விட்டதால் வேறு  வழியின்றி சர்க்கரை அட்டை உள்ளவர்களுக்கும் தரலாம் என்று தனது முந்தைய தடையை விலக்கி  கொண்டது.

இப்போது எதுவும் வாங்காமல் இருக்கும் அட்டைதார் சுமார் ஐம்பதாயிரம் பேருக்கு மட்டும் கிடைக்காதா கிடைக்குமா என்பது தெரியவில்லை.

இப்போது இருக்கும் அட்டைகள் எதுவும் வருவாய் சான்று பார்த்து வழங்கப் பட்டதில்லை.

வறுமைக் கோட்டிற்கு மேலே இருப்பவரை அடையாளம் காண எந்த முயற்சியும் எடுக்கப் படவும் இல்லை. எல்லாருக்கும் அரசுப்பணத்தை கொடுத்து அவர்களின் ஆதரவை பெறுவது மட்டுமே நோக்கமாக இருப்பதால் அதில் அவர்கள் அக்கறை  காட்ட வில்லை.

இனிமேல் ஆவது குடும்ப அட்டைகளை வருவாய் அடிப்படையில் இனம் பிரிக்க அரசு முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

என்னென்ன வழிகளில் அரசின் சுமையை குறைக்கலாம் என்பதை அரசியல் காரணங்களுக்காக இல்லாமல் பொதுநலன் ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து கொள்கை வகுக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும்.

அதில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒருமித்த கருத்து உருவாக்க முயற்சிக்க வேண்டும். செய்வார்களா?

சிபிஐ ; உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாதது ஆக்கிய மோடி ?!

அலோக் வர்மாவின் கட்டாய விடுப்பை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து மீண்டும் பணியில் அமர்த்தியது.

அவரும் பணியில் சேர்ந்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

ஆனால் பிரதமர் உச்ச நீதிமன்ற நீதிபதி எதிர்க்கட்சி தலைவர் மூன்று பேரும் சேர்ந்து முடிவெடுக்கலாம் என்று கூறியதால் பிரதமர் நீதிபதி சிக்ரி எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய மூன்று பேரில் பிரதமரும் நீதிபதியும் சேர்ந்து மீண்டும் அலோக் வர்மாவை வேறு இடத்துக்கு தூக்கி அடித்தார்கள். எதிர்கட்சி தலைவரின் ஆட்சேபனைகளை கேட்கவில்லை. அதுவாவது பரவாயில்லை. உத்தரவு போடும் முன் பாதிக்கப்பட்ட அலோக் வர்மாவிடம் விளக்கம் கூட கேட்கவில்லை.   அது இயற்கை நீதிக்கு முரண் இல்லையா? முரண் என்று நீதிபதிக்கு  தெரியாதா?

ஆக தன்னிடம் இணக்கமாக இல்லையென்றால் அவர்களை பழிவாங்க பிரதமர் எந்த எல்லைக்கும் செல்வார்.

நல்ல பிரதமர் . நல்ல சிபிஐ.  விளங்கி விடும் நீதி??!!