Home Blog Page 51

ரசிகப்பசங்க செய்யும் அட்டகாசங்களை தடுக்க சட்டத்தில் வழியே இல்லையா??!!

ரசிகர் மன்றங்கள் செய்யும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சட்டம் வேண்டும்.    அல்லது இருக்கும் சட்டங்களை பயன்படுத்தி அவர்களை கட்டுப்  படுத்த வேண்டும்.

சினிமா நடிகர்களுக்கு என்று இருக்கும் ரசிகர் மன்றங்கள் செய்யும் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சினிமா ரசிகர்களால் அரசியல் அதிகாரம் நிர்ணயிக்கப் பட்டு வந்திருக்கிறது. 

                இனியும் அது தொடர வேண்டுமா?

தொடக்கத்திலேயே அரசியல்வாதிகள் நடிகர்களையும் அவர்களது மன்றங்களையும் தங்கள் அரசியல் இலக்குகளுக்காக பயன்படுத்த துவங்கிய காரணத்தால் இப்போது அவர்கள் தமிழ்நாட்டில்  தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறியிருக்கிறார்கள் .

இன்று ரஜினி, அஜித் படங்கள் இரண்டு வெளியாகி இருக்கின்றன. பேட்ட, விஸ்வாசம்.

சட்டத்தை மதிக்காது அரசு அனுமதி பெறாமல் ஐந்து  காட்சிகள். பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் பணத்தை யார் அதிகம் சுருட்டுகிறார்கள் என்பதில் தான் போட்டி. ஒரு  தியேட்டருக்கு ஐம்பதாயிரம் அபராதம் விதித்து அரசு உத்தரவிட்டிருக்கிறது.

மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் தங்கள் தொழிலை செய்வதிலும் அதில் மக்கள் ஈடுபாட்டுடன் கொண்டாடுவதும் வரவேற்கத் தக்கதே.

கலைஞர்களை  போற்றாத சமூகம் உணர்வற்றுப் போனதாக கருதப் படும். ஆனால் கலைஞர்களை கலைஞர்களாக மட்டுமே போற்ற வேண்டும். ஆட்சியாளர்களாக அல்ல. அதற்கு அந்த கலைஞன் தன்னை தகுதியான அரசியல்வாதியாக நிரூபிக்க வேண்டும். அப்படியா நடக்கிறது இங்கு?

ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது.?

அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பது நியாயமா? அதை ரசிகர்கள் ஊக்கப்படுத்த வேண்டுமா?

அஜித் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய  முயன்ற போது  கட் அவுட் கீழே விழுந்து ஐந்து ரசிகர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். நல்ல வேளையாக வேறு எதுவும் ஆகவில்லை.

ஒரு அஜித் ரசிகன் தந்தை பணம் கொடுக்கவில்லை என்று அவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியிருக்கிறான் .

ஒரு தியேட்டரில் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து பட்டு இருவர் அவசர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஜப்பான் ரசிகர்களை பேட்டி எடுத்து இமேஜை பெரிதுபடுத்துகிறார்கள்.

இரண்டு தியேட்டர்களில் திருமணங்கள் நடத்தி இருக்கிறார்கள். நல்ல காரியம்தான்.  அதை இப்படி நடத்துவது யாருக்கு பெருமை சேர்க்க? யாரை இழிவுபடுத்துகிறீர்கள்?

இவைகள் எல்லாம் வரவேற்கத்தக்க போக்குகளா? மக்களின் தரத்தை நிர்ணயிக்கும் போக்குகளா?

தமிழனின் தரத்தை இந்த நிகழ்வுகள்தான் நிர்ணயிக்கும் என்றால் நாம் தலை கவிழத்தான் வேண்டும்.

தமிழனின் தலையை நிமிர வைக்கும் தலைமை அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டும்.

வாவர் மசூதிக்கு பெண்கள் வரலாம் என்ற அறிவிப்பால் இந்து அமைப்புகள் ஏமாற்றம்??!!

வாவர் மசூதிக்கு பெண்கள் வரலாம்

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் வரலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உருவம் கொடுக்க முயலும் பெண்கள் காவல் துறையால்  தடுத்து திருப்பி அனுப்பப் படுகிறார்கள்.

அதையும் மீறி இதுவரை நான்கு பெண்கள் அய்யப்ப தரிசனம் செய்து இருக்கிறார்கள்.

இடையில் பெண்கள் தரிசனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் இந்து அமைப்புகள் பெண்களை வாவர் மசூதிக்கு அழைத்து சென்று அதன் மூலம் பிரச்னையை கிளப்பி இந்து கோவிலுக்குள் பெண்களை அனுப்பும் நீதிமன்றம் மசூதிக்குள் அனுப்புமா என்ற கேள்வியை எழுப்ப திட்டமிட்டு அதற்காக பெண்களை திரட்டி வாவர் மசூதிக்கு அனுப்பி வந்தனர். காவல் துறையும் சிலரை திருப்பி அனுப்பி வந்தனர். அவர்கள் மீது மதக்கலவரம் ஏற்படுத்தும் முயற்சி உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.

பிரச்னை வேறு திசையை நோக்கி பணிப்பதை அறிந்த மசூதி நிர்வாகிகள் பிரச்னையை தெளிவுபடுத்த தீர்மானித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்கள்.

அதில்’ வாவர் மசூதியில் பல ஆண்டுகளாக பின்பற்ற பட்டு வரும் ஆச்சாரங்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. வாவர் மசூதிக்கு வயது வித்தியாசம் இன்றி ஆண்களும் பெண்களும் வருகிறார்கள். இங்கு வரும் பெண்கள் உட்பட பக்தர்கள் பிரார்த்தனை செய்து காணிக்கை செலுத்தி விட்டு  சபரிமலைக்கு  செல்கிறார்கள். பள்ளி வாசலுக்குள் தொழுகை நடத்தும் இடத்திற்கு பெண்கள் செல்வது கிடையாது. நல்ல எண்ணத்துடன் இங்கு வர யாருக்கும் தடையில்லை. ‘ என்று தெளிவு படுத்தியிருந்தார்கள் .

அதனால் இந்து முஸ்லிம் பிரச்னை ஏற்படுத்த முயன்ற இந்து அமைப்பினர் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இடையில் காவல்துறையின் பாதுகாப்போடு தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா மற்றும் இலங்கை சசிகலா தவிர தற்போது மஞ்சு என்ற பெண் தான் காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் பக்தர்களோடு பக்தராக கலந்து பதினெட்டாம் படி ஏறி இருமுடி கட்டி நெய்யபிஷேகம் உட்பட சடங்குகளை செய்து சுவாமி  தரிசனம் செய்திருக்கிறார்.

இதற்கும் பரிகாரம் செய்வார்களோ? நடையை சாத்திய தந்திரிகள் மீதான விசாரணை முடிந்து அவர்களுக்கு எச்சரிக்கையோ தண்டனையோ அளித்தால் பின்பு எந்த தடையும் இருக்காது.

பாஜக ஆட்சி இருப்பதால் தீர்ப்பை செல்லாதது ஆக்கி விட முடியும் என்று நம்புகிறார்கள்.

கம்யுனிஸ்டு ஆட்சியை அகற்றும் அளவுக்கு  கூட போக பாஜக தயாராக இருக்கிறது.   அதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது என்பது வேறு.

மதவாதம் தோற்பது உறுதி.!

பாதி கிணறு தாண்டிய முதல்வரின் ஆயிரம் ரூபாய் பொங்கல் அன்பளிப்பு திட்டம் ?!

பொங்கலுக்கு அரிசி சர்க்கரை கரும்பு முந்திரி திராட்சை ஏலக்காய் மட்டும் கொடுத்திருந்தால் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும்.

எல்லா குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு என்ற திட்டம் தொடங்கி பாதி கொடுத்திருந்த நிலையில் உயர்நீதி மன்றம் தலையிட்டு வறுமை கோட்டுக்கு மேலே இருப்பவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று தடை விதிக்க அரசின் திட்டம் பாதி கிணறு தாண்டிய நிலையில் இருக்கிறது.

அதுவும் நீதிமன்றம் தமிழக அரசின் நிதி நிலையை சுட்டிக் காட்டி அரசின் பணம் எந்த அளவுகோலும் இல்லாமல் இப்படி விரயம் செய்யலாமா என்று கேட்டது அரசுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கி விட்டது.

நியாயப்படுத்த முடியாத அரசு நீதிமன்றத்தில் தடுமாறியது. பாராளுமன்ற தேர்தலையும் வர இருக்கும் இடைத்தேர்தல்களையும் அரசு மனதில் கொண்டு இந்த அன்பளிப்பு திட்டத்தை உருவாக்கி இருக்கலாம். மக்களுக்கு உண்மை தெரியாதா என்ன?

இன்று நீதிமன்றம் தடை கொடுத்த பின்பும் எங்களுக்கு உத்தரவு நகல் வரவில்லை என்று சொல்லிக்கொண்டு பொங்கல் பரிசுப் பொருட்களோடு ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள் கடை அலுவலர்கள். நாளை என்ன செய்வார்களோ?

தடை கொடுத்த நீதிமன்றம் இனி என்ன செய்யும்?

பாதி கொடுத்திருந்த நிலையில் தகுதி இல்லாதவர்கள் பெற்றிருந்தால் எப்படி திரும்ப பெறுவது? தகுதி இல்லாதவர்களில் எப்படி பாகுபாடு பார்த்து தவிர்ப்பது என்று ஊழியர்கள் திண்டாடி போனார்கள்.

அதிலும் பல கடைகளின் ஆறு பொருட்களுக்கு பதில் ஐந்து பொருட்களே கொடுத்தார்கள். கரும்பு வெட்டிதர ஆள் இல்லையாம். வந்தது வரை லாபம் என்று யாரும் புகார் கொடுக்க தயராக இல்லை.

ஏற்கெனெவே நடப்பு நிதி ஆண்டில் 25,000 கோடி பற்றாக்குறையில் திண்டாடும் அரசு இந்த இரண்டாயிரம் கோடி செலவில் பாதியை மிச்சப் படுத்தி இருக்கலாம்.

நல்ல பெயர் வாங்கி கொடுத்திருக்க வேண்டிய அன்பளிப்பு திட்டம் எடப்பாடிக்கு மேலும் கெட்ட பெயரையே வாரித் தந்திருக்கிறது.

சிபிஐ இயக்குனர் கட்டாய விடுப்பை ரத்து செய்து மோடி அரசின் முகத்திரை கிழித்த உச்சநீதிமன்றம் !!!

மோடி அரசின் முகத்திரை கிழித்த உச்சநீதிமன்றம்

நியாயமான விசாரணை வேண்டுமா கூப்பிடுங்கள் சிபிஐ என்று ஒரு காலத்தில் நம்பிக்கை இருந்தது.

அத்தனையும் மோடி காலத்தில் காலாவதியாகி விட்டது.

இப்போது மோடி எதை செய்தாலும் அது அவருக்கு கரும்புள்ளியாகவே அமைகிறது.

அவர் காலத்தில்தான் இரண்டு மூத்த சிபிஐ அதிகாரிகள் பரஸ்பரம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு இவர்களை நம்பியா நாடு இருக்கிறது என்ற இழிநிலையை உருவாக்கினார்கள்.

இப்போதும் கூட உச்சநீதிமன்றம் அலோக் வர்மாவின் கட்டாய விடுப்பை ரத்து செய்திருக்கும் நிலையில் அவரது பதவிக்காலம் இந்த மாதம் 31 ம தேதி முடிவுக்கு வந்தபின் அடுத்து என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

பிரதமரும் எதிர்கட்சிதலைவரும்தலைமை நீதிபதியும் இணைந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பார்கள் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு நடைமுறைக்கு வரும் என்று தோன்றவில்லை.

அதுவும் இடைக்கால ஏற்பாடாக மோடி நியமித்த இயக்குனர் உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது புதிய குற்றச்சாட்டுகளை கூறி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்து விட்டது. ஆக தனது அரசியல் எதிரிகளை பலவேனப்படுத்த மோடி என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது சிபிஐ கையாளப்பட்ட விதமே சான்று கூறுகிறது.

மோடிதான் யோக்கியர் என்ற பிம்பம் உடைபட்டு விட்டது.

நீதிபதிகளே விசாரணை கூண்டில் நின்றால் குற்றவாளிகளுக்கு கொண்டாட்டம்தான்.   அது தான் சிபிஐ விடயத்தில் நடந்திருகிறது.

பங்கப் பட்டிருப்பது சிபிஐ மட்டுமல்ல, மோடியின் மதிப்பும்தான்.

தேர்தல் ஆணையத்தின் இடைத்தேர்தல் நாடகம் முடிவுக்கு வந்தது??!!

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28 ம் தேதி இடைதேர்தல் என்ற தனது அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று ரத்து செய்தது.

இதன் மூலம் இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருந்த அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப் படும் என்று தெரிகிறது.

டிசம்பர் மாதம் 3 ம் தேதியே இப்போது இடைதேர்தல் நடத்தும் சூழல் இல்லை என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் ஏன் அவசர அவசரமாக தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தது என்பதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை.

தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் அரசியல் விளையாட்டுகளுக்கு உடன் பட்டுசெயல்  படுகிறது என்ற குற்றச்சாட்டு இதன் மூலம் மேலும் வலுப்பெறுகிறது.

அதிமுக-வும் பாஜக வும் தனது வேட்பாளர்களை அறிவிக்காத போதே இந்த சந்தேகம் பலருக்கு இருந்தது.

ஏன் இந்த வீண் விளையாட்டு? கஜா புயல் நிவாரண பணிகள் நிறைவடையாத நிலையில் அதனால் அதிகம் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் தேர்தல் அறிவித்து எந்த அரசியல் கட்சி யாருடன் சேருகிறது என்றெல்லாம் ஆழம் பார்க்க தமிழக மக்கள் தானா கிடைத்தார்கள்?

இன்றைய நிலையில் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடத்தியாக வேண்டிய சூழலில் தேர்தல் ஆணையம் இருக்கிறது. இடையில் பிப்ருவரி மாதம் நடத்துவேன் என்று மீண்டும் விளையாட்டு காட்டாமல் பாராளுமன்ற தேர்தலோடு காலியாக இருக்கும் இருபது தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தலை நடத்துவதே ஒரே தீர்வாக இருக்கும். இதைத்தான் எல்லாரும் எதிர்பார்த்தார்கள்.

இடையில் இடைத்தேர்தல் நாடகம் ஆடியதன் மூலம் தனது மதிப்பையும் நம்பிக்கைத் தன்மையையும் இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம் என்பதே பொதுமக்கள் கருத்து.

அதுவும் நன்மைக்கே. பாஜக வின் உண்மை சொரூபம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருப்பது நல்லதுதானே.

தெருக்களை ஆக்கிரமித்து இருக்கும் வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்படுமா?

தெருக்களை ஆக்கிரமித்து இருக்கும் வழிபாட்டுத்தலங்கள்

பொது இடங்களை ஆக்கிரமித்து எத்தனை வழிபாட்டு தலங்கள் உள்ளன என்று அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டு இருக்கிறது.

அரசு அலுவலக வளாகங்களில் வழி பாட்டு தலங்கள் இருக்கக்கூடாது என்ற 1968-ம் ஆண்டின் தமிழக பொதுத்துறை ( சட்டம் மற்றும் ஒழுங்கு ) அரசாணை மற்றும் அதை வலியுறுத்தி 1994-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஆகியவைகளை அமுல்படுத்த தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் மேற்கண்ட அறிக்கை கேட்டு உத்தரவிட்டிருக்கிறது.

இப்போது, நீதிமன்றம், மருத்துவமனை,  காவல் நிலையங்கள் அரசு அலுவலகங்கள் என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் தெய்வங்களும் சிலுவைகளும், பிறைகளும் அகற்றப் பட்டால்தான் இந்த நாடு மதம் சார்ந்தது அல்ல என்ற உணர்வு  தழைக்கும். மத போட்டி மறையும்.

தெரு ஆக்கிரமிப்பு கோவில்கள் லட்சக் கணக்கில் இருக்கும். கிறிஸ்தவர்கள் தெரு முனைகளில் ஆக்கிரமித்து மேரிமாதா, சிலுவை போன்றவற்றை வைத்து இருப்பார்கள். முஸ்லிம்கள் சில இடங்களில் நட்ட நடுத்தெருவில் தர்காக்களை வைத்திருக்கிறார்கள். நீதிமன்ற கருத்துப்படி எல்லா ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும்.

இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பாகுபாடு கூடவே கூடாது. அவர்கள் அனைவரும் ஆக்கிரமிப்பாளர்கள் என்ற முறையிலேயே அணுகப்பட வேண்டும்.

அநேகமாக எல்லா ஆக்கிரமிப்புக் கோவில்களும் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டவையே. மத உணர்வுள்ளவர்களின் ஆதரவைப் பெற்று பின்னர் விரிவு படுத்திவிடுகிறார்கள்.

அதுவும் சென்னை போன்ற நகரங்களில் தான் தெரு ஆக்கிரமிப்பு கோவில்கள் அதிகம்.

மிகவும் சிறிதாக ஒரு சிலையை வைப்பார்கள். பின்னர் சில மாதங்களில் அது சிறிதாக விரிவு படுத்தப்படும். கோவில் கட்டுவதை ஒரு தொண்டாக இல்லாமல் ஒரு வணிகமாக பார்த்துத் தான் இவை தோன்றுகின்றன.

அதிலும் சில காலமாக சீரடி சாய்பாபா கோவில்கள் நடமாடும் வண்டிகளில் ஆரம்பித்து தெரு முனை கோவில் என்று பல ரூபங்களில் கிளை பரப்பிக்கொண்டிருக்கிறது. அதற்கு என்று முதலீடு போடுவதற்கு என்று சிலர் இருக்கிறார்கள்.

பக்தி வணிகம் பல ரூபங்களில் கிளை பரப்பிக் கொண்டிருக்கிறது.

இதிலே பலி ஆவது உண்மை பக்திதான்.

அதிலும் திடீர் திடீர் என்று கிராமப் புறத்து அய்யனார் கோவில்களுக்கு பக்கத்தில் ஆஞ்சநேயர் கோவில்கள் முளைக்கின்றன. இதெல்லாம் யார் வேலை என்றால் தமிழர் தெய்வங்களுக்கு பதில் சனாதன தெய்வங்களை பிரபலபடுத்தும் வேலையில் யாருக்கு அக்கறை இருக்கிறதோ அவர்களால் முடுக்கி விடப்படுகிறது.

பாமர இந்துக்களுக்கு தெருக்கொவில்கள் பெரிதும் ஆறுதல் என்பதும் உண்மைதான்.    அவர்களுக்கு பக்தியை வீட்டிலேயே கடைப்பிடிக்க கற்றுக்  கொடுக்க வேண்டும்.

உண்மையான் பக்தி மார்க்கம் பரவ தெருக்கோவில்கள், சிலுவைகள், பிறைகள் இடம் கொடுத்து ஒதுங்க வேண்டும் அல்லது அரசு ஒதுக்க வேண்டும்.

அதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

கலைஞர் பற்றிய தீர்மானத்தில் அதிமுக தலைவர்கள் காட்டிய திராவிட இயக்க சகோதர பாசம்!!!

கட்சி வேறுபாடு இன்றி அனைத்து தலைவர்களும் புகழாரம் சூட்டி சட்டமன்றத்தில் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிலும் ஏதோ சம்பிரதாயத்துக்காக என்று இல்லாமல் உளபூர்வமாகவே முதல்வர் எடப்பாடி பழநிசாமியும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வமும் போட்டி போட்டுக்கொண்டு கலைஞரின் சிறப்பு இயல்புகளை பட்டியல்  இட்டதை பார்த்தவர்கள் என்ன இருந்தாலும் இருவரும் திராவிட இயக்கத்துக்குச் சொந்தக்காரர்கள் என்பதை நிருபித்து விட்டார்களே என்ற உணர்வுதான் மிஞ்சியது.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கலைஞரின் சாதனைகளை முதலில் ஒ பி எஸ் அவை முன்னவர் என்ற முறையில் எடுத்து உரைத்தார்.

1957 முதல் தொடர்ந்து 13 முறை தோல்வியே காணாமல் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தது- ஒரு முறை சட்ட மன்ற மேலவை  உறுப்பினர்-   ஐந்து முறை தமிழக முதல் அமைச்சர் –  50 ஆண்டுகளாக திமுக தலைவர் – என்று கலைஞர் சாதனைகளை தொகுத்தார்.

அடுத்து முதல்வர் உரையில், கலைஞர் 14  வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில் இருந்து 17  வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் தலைவர்  அண்ணாவின் திராவிட நாடு பத்திரிகையில் படைப்பாளியாக இளமைப்பலி எழுதி அவரை கவர்ந்தது- நாடக ஆசிரியர் ஆகவும் நாவல் ஆசிரியர் ஆகவும் அவர் எழதிய படைப்புகள் –  75 திரைப்படங்களுக்கு கதைவசனம் எழுதிய பேராற்றல் என அனைத்தையும் நினைவு கூர்ந்து குறிப்பிட்டது உணர்வு பூர்வமாகவே இருந்தது.

அரசியல் செய்வோம். ஆனால் குடும்பத்தை மறக்க மாட்டோம் என்ற இந்த உரை எதிரிகளுக்கு ஒரு உண்மையை உணர்த்தி  இருக்கும்.

இந்த மண் வள்ளலாராலும், வள்ளுவராலும், திருமூலராலும், பெரியாராலும் அண்ணாவாலும் பண் படுத்தப்பட்ட மண்.

இங்கே அன்னியர் வந்து புகல் என்பது நடவாது.

ஒரே ஒரு மாணவியுடன் பள்ளி இயங்க யார் காரணம்? 3000 பள்ளிகளை அரசு மூடுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஓர் பள்ளியில் ஒரே ஒரு மாணவியுடன் ஒரு தொடக்கப் பள்ளி  இயங்கி வருகிறது .

அதற்கு ஒரு தலைமை ஆசிரியர். ஒரு ஆசிரியர். ஒரு சத்துணவு அமைப்பாளர்.

அந்த பள்ளி நீடிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறதா இல்லையா?

அந்த ஊரில் சுமார் ஐம்பது குழந்தைகள் பக்கத்து ஊரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்களாம்.

இதே பள்ளியில் படித்து பலர் அரசு பணிகளிலும் வேறு பல தனியார் பணிகளிலும் பணி புரிந்து வருகிறார்கள்.

பிறகு ஏன் அரசு பள்ளிக்கு மவுசு குறைந்து தனியார் பள்ளிகளை தேடி ஓட வேண்டும்?

சுமார் 3000 அரசு பள்ளிகளை மூட அரசு உத்தேசித்திருகிறது என்ற செய்திகளை அரசு மறுத்தாலும் 25 குழந்தைகளுக்கு கீழே இருக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பக்கத்து பள்ளிகளில் இருந்து மதிய உணவை கொண்டுவரும்  திட்டத்தை மறுக்க வில்லை.

குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தால் இதெல்லாம் நடக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கு இல்லை.

இதெல்லாம் தடுக்கப்பட வேண்டும் என்றால் பொதுமக்களின் பார்வை மாற வேண்டும். அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை தனியார் பள்ளிகள் தான் தரமுள்ளவை என்ற கருத்து நிலை  பெற்றுள்ளது. அதை மாற்ற வேண்டும்.

குறிப்பாக வசதி படைத்தவர்கள் அரசியல்வாதிகள் அரசு ஊழியர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதை கவுரமாக கருதுகிறார்கள். முடியாதவர்கள் கூட பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை கடமையாக கருதுகிறார்கள்.

கல்வித்தரம் அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் ஒன்றாக இருந்தாலும் கூட கவுரவம் பார்த்து தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

                அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். பாடத்திட்டம் அரசு தனியார் பள்ளிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். வேறு பாடத் திட்டம் என்று தவறாக கருத இடம் கொடுக்கும் வகையில் ‘மெட்ரிக்’ என்ற பெயர் சூட்டும் முறை தடுக்கப் பட வேண்டும். 

இந்த தனியார் பள்ளி மோகம் முற்றாக களையப்பட வேண்டும். அதுவும் அரசுப்பள்ளிகள் பாதிக்கப் படா வண்ணம் பாதுகாக்கும் கடமை பொது மக்களுக்கு  இருக்கிறது.

அதை விட்டுவிட்டு நாங்கள் எங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்போம் ஆனால்  அரசு பள்ளிகளை மூடினால் போராடுவோம் என்று குரல் கொடுப்பது கண்டனத்துக்கு உரியது.

அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவோம் என்ற உணர்வு பரவி அதற்கு செயல் வடிவம் கொடுத்தால் மட்டுமே தமிழ் வளரும் தமிழர் வாழ்வு வளம்பெறும்.

ஜல்லிக்கட்டை தடை செய்ய சாதிப் பிரச்னையை கிளப்பும் சதிகாரர்களின் பின்னணியில் ‘பீட்டா” ??!!

தமிழனின் அடையாளங்களை அழிக்கும் திட்டத்தோடு செயல்படும் கூட்டம்  நீண்ட காலமாக திட்டமிட்டு ஜல்லிக்கட்டை சட்ட பூர்வமாகவே தடை செய்ய  வைத்தார்கள். ஜல்லிக்கட்டு பழைய கதை என்று வரலாற்றில் எழுதி வைத்துவிட்டு மறந்து விடவேண்டியதுதான் என்று இந்து பத்திரிகை தலையங்கம் எழுதியது.

அந்த சதியை ‘ மெரீனா புரட்சி’ மூலம் முறியடித்து மத்திய மாநில அரசுகளை பணிய வைத்து இன்று சட்ட பூர்வமாகவே நடந்து வருகிறது ஜல்லிக்கட்டு.

எதிரிகள் விடுவார்களா? இன்னும் ஜல்லிக்கட்டில் வன்முறை நிகழ்வதாகவும் அதில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகமாவதால் ஜல்லிக்கட்டை மீண்டும் தடை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் கதவுகளை தட்டிக் கொண்டே இருக்கிறார்கள் பீட்டா அமைப்பின் கூலிகள்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அமைப்பாளர்கள் இன்னும் கவனக் குறைவாகவே இருக்கிறார்கள். அதனால் ஜல்லிக்கட்டுக்கு வந்த ஆபத்து முற்றிலும் நீங்கி விட்டதாக கருத முடியாத நிலையே இருக்கிறது.

இன்னிலையில் ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவில் எங்களுக்கும் இடம் வேண்டும் என்று சில சாதி அமைப்பை சேர்ந்தவர்கள் நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள் .

எல்லாரையும் அரவணைத்து செல்ல வேண்டிய விளையாட்டில் சாதி வன்மம் புகுவது நல்லதல்ல. கருத்து வேறுபாடுகள் வரலாம். அதை களைய வேண்டிய முறை வழக்கா?

போராடிய பொது சாதி பார்த்தா போராடினார்கள்.? எல்லா சாதிகளும் சேர்ந்துதானே போராடினோம். பெற்ற வெற்றி எல்லாருக்கும் தானே சொந்தம். வெற்றியை இழக்க சாதியை பயன்படுத்தலாமா?     

தமிழர் ஒற்றுமை சாதியால் பாதிக்கப்படுகிறது என்பது உண்மைதான். எனவே சாதி ஒழிப்பை இலக்காகக் கொள்வோம். இலக்கை அடையும் வரை ஒற்றுமையை குலைக்க சாதியை பயன் படுத்த வேண்டாம்.

தொடர்புடைய சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள் அமர்ந்து பேசி தீர்வு காண முயல்வதே நல்லது.

உரிமை கோருவது தவறல்ல. ஆனால் அதன் பின்னால் வேறு யாரும் இருக்கக்கூடாது.

சட்டப் போராட்டத்தில் தோற்ற ” பீட்டா ” இப்போது சாதியை தூண்டி வெற்றி பெற திட்டமிடுகிறது.

தமிழர் வாழ்வில் சாதி புகுந்ததே சதியால் தான். அந்த சதி இப்போது ஜல்லிக்கட்டிலும் சாதி வடிவில் புகுந்து பெற்ற வெற்றியை இழக்க அனுமதிக்க கூடாது.

குழந்தைகளின் மீது ‘ஜெய் ஹிந்தை’ திணிக்கும் குஜராத் அரசு?!

‘ஜெய் ஹிந்தை’ திணிக்கும் குஜராத் அரசு

பள்ளிப் பிள்ளைகள் வருகைப்பதிவின் போது ‘ ஜெய் ஹிந்த் ‘அல்லது ‘ஜெய் பாரத்’ என்று சொல்ல வேண்டும் என்று குஜராத் அரசு சுற்றறிக்கை அனுப்பி இருப்பது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

மாணவர்களுக்கு நாட்டுப்பற்றை வளர்க்க எத்தனையோ வழிகள் உள்ளன. அவர்கள் வளர்ந்து உணர்ந்து வாழ வேண்டிய உணர்வு  நாட்டுப்பற்று. அதை இப்படி திணிப்பது எப்படி சரியாகும்.?     அதற்கு ஒரு வயது வேண்டாமா? புரிந்து கொள்ள வேண்டாமா?

கல்வியின் தரம் மட்டுமே அடிப்படைக் கல்வியின் தேவை. அதில் செலுத்த வேண்டிய கவனத்தை கட்டாயப் படுத்தி ஒரு முழக்கத்தை எழுப்பச் செய்வதன் மூலம் அரசு வேறு ஏதோ இலக்கை வைக்கிறது.

ஒருவகையில் பள்ளிக் குழந்தைகளின் சிறுவயதிலேயே தங்கள் அரசியல் சித்தாந்தத்திற்கு வலு சேர்க்கும் முயற்சி என்று கூட சொல்லலாம்.

ஏன் பிள்ளைகளுக்கு நாட்டுப்பற்றை சொல்லிக் கொடுப்பது தவறா என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை.  ஏனென்றால் ஜெய் ஹிந்த் முழக்கம் வேண்டாம் என்று யாருமே சொல்லவில்லை.   அதிக பட்சம் அவரவர் தம்தம் தாய் மொழியில் நாட்டை வாழ்த்தி முழக்கம் இடுவார்கள்.

  நான் இந்தியா வெல்க என்று முழக்கம் இடுவேன். அது தவறாகுமா? அல்லது அன்னை பாரதம் வாழ்க என்றோ அன்னை பாரதம் வெல்க என்றோ முழக்கம் இட்டால் அது தவறா? 

தேசிய கீதம் பாடுவது நடைமுறையில் இருக்கும் போது வேறு வகையிலும் பாஜக அரசு தனது நோக்கங்களுக்கு பள்ளிப்பிள்ளைகளை பயன்படுத்துவது தவறான விளைவுகளைத் தான் உருவாக்கும்.

தானாக சொல்ல வேண்டிய முழக்கத்தை கட்டாயப் படுத்தி வீணாக்கி விடாதீர்கள்.