Home Blog Page 52

நடையை அடைத்து நீதிமன்றத்தை அவமதித்த கோவில் தந்திரிகள்??!!

பிந்து , கனகதுர்கா இருவரும் சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்து வந்ததும் அதை அறிந்து இரண்டு மணிநேரம் கோவில் நடையை அடைத்து பரிகார பூஜை செய்து பின்னர் திறந்திருக்கிறார்கள் கோவில் தந்திரிகள்.

இது நீதி மன்ற அவமதிப்பு அல்லவா?

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

சங்க பரிவாரங்கள் பெண்கள் தரிசனத்தை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார்கள்.

அந்த இருவரும் தரிசனம் செய்தபோது அதைப்பார்த்த பக்தர்கள் யாரும் ஆட்சேபிக்க வில்லை என்பதும் அப்போது எந்த பிரச்னையும் எழவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. அதாவது ஆட்சேபணை பக்தர்களுக்கு  இல்லை.  அதை வைத்து அரசியல் செய்யும் சங்க ஆதரவாளர்கள் தான் பிரச்னையாக்கி வருகிறார்கள்.

ஒரு அய்யப்ப பக்தர் கல் வீச்சில் பலியான சோக சம்பவமும் நடந்துள்ளது.

இதுவரை எந்த சீர்திருத்தமும் போராடாமல் வந்ததில்லை. எதையும் பக்தர்கள் எனப்படுவோர் தாங்களாகவே ஏற்றுக் கொண்டதும் இல்லை.

சட்டத்தின் மூலமாகவே அத்தனை சீர்திருத்தங்களும் அமுலுக்கு வந்திருக்கின்றன.

அதே வழியில் ஐயப்பன் சன்னதியில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யும்  உரிமையும் அமுலுக்கு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

ஆனால் அதற்கு தூண்டி விடப்படும் போராட்டங்களால் என்னென்ன விலை கொடுக்கப்  படும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

மத்திய அரசு தலையிட்டு மேலும் பிரச்னையை பெரிதாக்கும் என்பதால் மாநில அரசு நிதானமாக செயல்படுகிறது. மாநில காங்கிரசும் இந்த பிரச்னையில் பாஜக வோடு சேர்ந்து கொண்டு அரசை விமர்சிப்பது அதன் இரட்டை வேடத்தை காட்டுகிறது. அகில இந்திய தலைமை மௌனம் காப்பதும் சரியல்ல.

கன்னியாகுமரியில் மட்டும் பாஜக போராட்டத்தை தூண்டி விட்டிருக்கிறது.  இவர்கள் வலுப்பெற்றால் மத நல்லிணக்கம் காணாமலே போய்விடும்.

உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க வில்லையென்றால் கேரள இடது சாரி அரசை கலைக்கும் எல்லைக்கும் கூட மதவாத பாஜக அரசு துணியும். தடுப்பது வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல்தான்.

ஆட்சி செய்யப் போவது சட்டமா சட்டத்தை அமுல்  படுத்த மறுக்கும் மத வாதிகளா என்பதை உச்ச நீதிமன்றம் தான் தெளிவு படுத்த வேண்டும்.

மதத்தில் இருப்பவன் முட்டாள்! மதம் மாறுபவன் படு முட்டாள் !! மதமாற்றத்தை எதிர்ப்பவன் உலக மகா முட்டாள்!! பின் குறிப்பு; நான் மதமற்ற இறை நம்பிக்கையாளன்!!

மதத்தில் இருப்பவன் முட்டாள் ! மதம் மாறுபவன் படுமுட்டாள்

மதத்தின் பேரால் உலகில் நடைபெறும் சர்ச்சைகளும் சண்டைகளும் அமைதியின்மையும் மதங்களின் மீது ஒருவித வெறுப்பை மக்களிடம் தோற்றுவித்திருக்க வேண்டும்.

மாறாக மதப் பிரச்சாரம் வளர்ந்து கொண்டே போவதன் காரணம் மதங்கள் ஆதிக்க சக்திகளின் பிடியில் வலுவாக சிக்கியிருப்பதுதான். மற்ற மதங்களை மதிப்பதாக உதட்டளவில் சொல்லிக்கொண்டே தன் மதப் பிரசாரத்தை வலுவாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
பிறக்கும் குழந்தைக்கு பெற்றோரின் மதத்தை திணிக்கும் செயலில் நியாயம் இருக்கிறதா?

இந்த நடைமுறையை மாற்ற சட்டம் கொண்டு வந்தால் என்ன? பதினெட்டு வயது வந்தபின்தான் ஒருவருக்கு தன் மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப் பட வேண்டும்.

கிறிஸ்துவும் முஹம்மது நபியும் பிறந்து பல நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் பைபிளும் திருக்குரானும் அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் தந்த சாட்சியத்தை அடிப்படையாக வைத்து தொகுத்ததாகவும் அதிலும் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு சாட்சியம் இல்லாதவற்றை நீக்கிவிட்டு  திருத்தி இறுதி  வடிவம் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டால் ஏதோ ஒன்றுதான் உண்மை என்றாகிவிடும். மற்றது பொய் . இந்த விவாதம் தேவைதானா?

எல்லாவற்றிலும் இருக்கிற நன்மைகளை மட்டும் ஏற்றுக்கொள்வோம் என்றால் அதற்கு ஒருவர் அந்த மத அடையாளத்தை சுமந்து திரிபவர் ஆக இருக்க வேண்டும். அறிவாயுதத்தை விட இன்று கொலை ஆயுதமே வெற்றி பெற நம்பப்படுகிறது.

இந்து என்பது ஒரு மதமே அல்ல , அது ஒரு வாழ்க்கை முறை என்று  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகும் , அதன் தீர்ப்பு அனைவரையும் கட்டுப்படுத்தும் , என்று  அரசியல் சட்டம் சொல்லும் நிலையிலும் , அது ஒரு மதமாகவே மாநில மத்திய அரசுகளால் அங்கீகரிக்கப் படுவது எப்படி?

தமிழன் இறை நம்பிக்கை உள்ளவன். அவன் இறைவன் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல. அவன் வணங்கும் கடவுளர் அவன் முன்னோர்களே!! எந்த உருவத்திலும் மதம் சாரா இறைவனை அவனால் உணர முடியும்.    திருக்குரானில்  1,25,000  தூதர்கள் மண்ணில் வந்திருக்கிறார்கள் என்றும் இன்று பல மதங்களால் அடையாளங்காட்டப்படும் அனைவருமே முந்தைய நபிமார்களின் எண்ணிக்கையில் அடங்குபவர்கள் என்றும் சொல்கிறார்கள்.

இன்று எத்தனை பேர் எல்லா மதங்களையும் ஆய்ந்து தெளிந்து மதத்தில் இருக்கிறார்கள்?   திணிக்கப் பட்ட மத அடையாளத்தைதானே சுமந்து திரிகிறார்கள்.
ஆன்மிக பாதை காட்டுகிறோம் என்று சொல்லி இருட்டில் வைத்துக்கொண்டு ஆதாயம் அடைய முயற்சிக்கிறார்கள்.

இப்படி ஆய்ந்து தெளிந்து மதத்தை தேர்ந்தெடுக்காதவர்களை முட்டாள் என்று சொல்வது எப்படி தவறாகும்?

இருக்கும் மதத்தின் உண்மைகளையே முற்று முழுதாக அறிந்து கொள்ளாமல் அல்லது ஆராயாமல் மற்றொரு மதத்தை தேர்ந்தெடுப்பவனை    படு முட்டாள் என்று கூறுவது எப்படி தவறாகும்?

சரியோ தவறோ, ஆராய்ந்தோ ஆராயாமலோ ஒருவன் தனக்கு அதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதற்காக  அல்லது ஆதாயத்திற்காக,  தனக்கு இருக்கும் தனி மனித உரிமையை பயன் படுத்தி மதம் மாறுவது தவறு என்றோ குற்றம் என்றோ சொல்பவனை உலா மகா முட்டாள் என்று சொன்னால் அது எப்படி தவறாகும்???

எவர் மனதையும் புண் படுத்தும் நோக்கம் நமக்கில்லை. ஏதோ ஒரு மதத்திற்கு சாமரம் வீசினால் மட்டுமே உள் நோக்கம் கற்பிக்க முடியும். இது சிந்தனையை தூண்டும் நோக்கத்தை மட்டுமே கொண்டது என்பதால் சிந்திப்பீர் உலகத்தீரே!!!!

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

தரிசனம் செய்து வரலாறு படைத்த பிந்து, கனகதுர்கா; இப்ப என்ன செய்வீங்க??!!

தரிசனம் செய்து வரலாறு படைத்த பிந்து, கனகதுர்கா

ஐயப்பன் கோவிலில் பத்து முதல் ஐம்பது வரையிலான பெண்கள் தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் சங்கப் பரிவாரங்கள் செய்து வந்த அடாவடித்தனத்தினால் தரிசனம் செய்ய முடியாமல் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் தரிசனம் செய்ய சென்றும் செய்ய  முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர்.

இன்னிலையில் நேற்று பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள் அய்யப்ப கோவிலில் இரவு நேரத்தில் பதினெட்டாம் படி ஏறுவதை தவிர்த்து வேறு வழியில் சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து விட்டார்கள். அவர்கள் இருவரும் நாற்பது வயது உடையவர்கள். இனி சங்க பரிவாரங்கள் என்ன செய்வார்கள் ?

தீட்டுக் கழிப்பார்களா? இனி அடுத்தடுத்து பெண்கள் தரிசனம் செய்தால் எத்தனை முறை தீட்டுக் கழிப்பார்கள்? அது சாத்தியம் தானா?

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும் ஏற்க மாட்டோம் என்பது நல்ல செய்தி அல்ல.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வுக்கு மனுவும் செய்து விட்டு தரிசனம் செய்ய விடவும் மாட்டோம் என்று போராட்டம் நடத்தும் சங்க பரிவாரங்கள் எப்படியாவது இதை அரசியல் ஆக்கி லாபம் அடைய திட்டம் போடுவது கேரளத்தில் எடுபடாது.

ஏனென்றால் பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க 620 கி.மீ நீளத்துக்கு பெண்கள் கலந்து கொண்ட  35 லட்சம் பேரை கொண்ட மகளிர் சுவர் போராட்டம் கேரளாவில் பெரு வெற்றி பெற்றிருக்கிறது.

தரிசனம் செய்த பெண்களின் வீடுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு  போடப்பட்டிருக்கிறது. இது சங்க பரிவாரங்கள் அவர்களை மிரட்டவும் இனி வரும் எண்ணங்களோடு இருப்பவர்களை அச்சுறுத்தவும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் போடப்பட்டிருக்கிறது.

எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து பிந்து, கனகதுர்கா இருவரும் வரலாறு படைத்திருக்கிறார்கள். பாராட்டுவோம்.

ரமலான் மாதத்தில் முஸ்லிம்களை கொல்பவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளா ? மனித குலத்தின் எதிரிகளா?

தீவிரவாதிகளா? மனித குலத்தின் எதிரிகளா?

ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் -சிரியா நாடுகளில் மட்டுமல்லாமல் ஏமன், துனிசியா போன்ற பல நாடுகளிலும் வசிக்கும் சியா பிரிவு முஸ்லிம்களை கொல்லுமாறு புனிதமான ரமலான் மாதத்தில் கட்டளை இட்டதன் விளைவாக எண்ணற்ற சியா பிரிவு முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டினர் பலரும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
பகலில் உணவு எடுத்துக் கொண்டதற்காக இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மனித நேயம் அற்றதா இஸ்லாம்? நம்பிக்கை அற்ற காபிர்களை எல்லாம் கொலை செய்வது என்றால் மனித குலத்தின் பெரும் பகுதியை கொல்ல வேண்டி வரும். முடியுமா என்பது வேறு? அதைதான் இஸ்லாம் போதிக்கிறதா? சியா பிரிவினருக்கும் சன்னி பிரிவிற்கும் பெருத்த வேறுபாடு இல்லை. இருவரும்  ஓரிறைக்கொள்கை உடையவர்கள்தான். முஸ்லிம்கள்தான்.
சியா பிரிவினர் இஸ்லாத்தை திரித்து கூறுகிறார்கள் என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் அதற்கு தீர்வு கொலையாக இருக்க முடியுமா? மாற்றுக் கொள்கை உடையவர்கள் வாழக் கூடாது என்பது ஐ.எஸ் பிரிவினரின் கொள்கை என்றால் அவர்கள் ஒருபோதும் வெற்றி அடைய முடியாது. இஸ்லாத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அடக்கப்பட வேண்டியவர்களே! அடக்கும் பொறுப்பு மற்றவர்களை விட உண்மை முஸ்லிம்களுக்கே அதிகம் உள்ளது. என்ன செய்யப் போகிறார்கள் முஸ்லிம்கள்?

திருவாரூரில் மட்டும் இடைத்தேர்தல் ஏன்? பாஜக அரசின் பிடியில் இருக்கிறதா தேர்தல் கமிஷன்?

ஜனவரி மாதம் 28 ம் தேதி இடைதேர்தல் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கிறது.

அதிர்ச்சி அளிக்கும் இந்த அறிவிப்பில் மறைந்து கிடக்கும் அரசியல் இந்த தேர்தல் கமிஷன் சுயமாக செயல்  படுகிறதா என்ற ஐயத்தை  ஏற்படுத்தி  இருக்கிறது.

திருபரங்குன்றம் தொகுதிக்கு  வழக்கு நிலுவையில் இருக்கிறது  என்று காரணம் சொன்னாலும்  17 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவிக்காமல் இருக்க என்ன காரணம் சொல்லும் தேர்தல்  கமிஷன்.?  மேல்முறையீடு இல்லை என தினகரன் அறிவித்த பின் ஏன் இந்த பாரபட்ச முடிவு?

ஏன் திருவாரூருக்கு மட்டும் தேர்தலை அறிவிக்க வேண்டும்?

அங்கு திமுக-வை தோற்கடித்து கலைஞர் பெற்ற மகத்தான வெற்றியை தற்போதைய தலைவர் ஸ்டாலினால் பெற முடியவில்லை என்று கறை பூசி திமுக காங்கிரஸ் கூட்டணியை பலவீனப் படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது பாஜக அரசு.

முடிந்தால் பலவீனப்படுத்துவது. முடியாவிட்டால் அது அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிதானே என்ற சமாதானம்.

திமுக வை தோற்கடிக்க முடியுமா முடியாதா என்பது வேறு. செல்வாக்கு உள்ள  கம்யுநிச்டுகளை எதிர்த்து நின்று கலைஞர் பெருத்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இப்போது கம்யுனிச்டுகளும் திமுக அணியில். வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிமுக வெற்றி  கல்லில் எழுதப் பட்ட ஒன்று என்று பேட்டி கொடுக்கிறார்.

               திருவாரூருக்கு தேர்தலை அறிவித்தது முக்கியம் அல்ல.   மற்ற 17  தொகுதிகளுக்கும் அறிவிக்காததுதான் பிரச்னை. நடத்தினால் தினகரனின் பலமும் வெளிப்பட்டிருக்கும். அது அவர் அணியை இணைப்பதில் தடையை  ஏற்படுத்தும்.

செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியபின் தினகரன் அணியில் இருந்து மேலும் பலர் தாவுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் ஏன் தேர்தல் கமிஷன் தேர்தலை தவர்க்க வேண்டும்? அதுவும் தினகரன் தாங்கள் உச்சநீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்யப் போவதில்லை என்று அறிவித்து விட்ட பின் தேர்தல் கமிஷன் ஏன் தேர்தலை நடத்துவதை தள்ளிப் போட வேண்டும்?

எடப்பாடி அரசை காப்பாற்று வது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும்.      நடத்தினால் ஒன்று எடப்பாடி அரசு கவிழும் அல்லது திமுக அரசு உருவாகும்.

இரண்டையும் தவிர்க்க அதிகார வர்க்கம் எடுத்த முடிவுதான் திருவாரூருக்கு மட்டும்  இடைதேர்தல் .

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை ஆட்டங்களை ஆட இருக்கிறதோ பாஜக அரசு?

இது ஒரு அரசியல் கள்ளாட்டம்?!

ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கி ஆதாயம் அடைய துடிக்கும் அதிமுக ??!! துணை போகிறதா விசாரணை கமிஷன்??

ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கி ஆதாயம் அடைய துடிக்கும் அதிமுக

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் திசை தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது.

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அதிமுக அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கள் விசாரணை கமிஷன் முடிவு எப்படி எடுக்க வேண்டும் என கட்டளை இடுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சசிகலா குடும்பம் ரூபாய் ஒரு கோடிக்கு இட்லி தோசை சாப்பிட்டது என அமைச்சர் சண்முகம் குற்றம் சாட்டுகிறார். இவர்தான் முன்பு  சசிகலாவை அவர் எங்க சின்னம்மா இல்லை அம்மாதான் அம்மாதான் என்று தொலைக்காட்சி முன்பு கதறியவர்.

கமிஷன் முடிவு  எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.   அதன்படி இந்த அரசு நடக்க தயாராக இருக்கிறதா என்பதே தெரியவில்லை.  கமிஷன் முடிவு வந்தபின் அரசு என்ன முடிவு எடுக்கப்;  போகிறது என்பதும் தெரியவில்லை.

முடிவு  வரும் முன்பே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என்று  எதிர்பார்க்கிறார்களா?   அது சட்டப்படி சரியாக இருக்குமா?

அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சட்ட அமைச்சர் கூறுகிறார்.    விசாரணை கமிஷன் ஓராண்டு செயல்பட்டு சாட்சிகளை விசாரித்து வருகையில் மருத்துவ துறை செயலாளரை எதிர்பார்ட்டியாக சேர்க்க வேண்டும் என கமிஷனின் வழக்கறிஞர் மனு  போடுகிறார்.  ஏன் அவரை இன்னும் வைத்துக்  கொண்டிருக்கிறீர்கள். ?

எல்லாமே தவறாக போய்க்கொண்டிருக்கிறது. சட்டம் நாட்டில் ஆட்சி செய்கிறதா அல்லது சட்டத்தை வளைக்கிறவர்கள் ஆட்சி செய்கிறார்களா என்ற கவலையை நடக்கும் சம்பவங்கள் ஏற்படுத்து கின்றன.

எடப்பாடி சசிகலாவை நோக்கி குற்றம் சாட்ட மறுக்கிறார். தினகரனை மட்டுமே ஒதுக்கி  வைத்து மற்றவர்களை வளைக்க திட்டமிடுகிறார்.

கமிஷனும் தன் கடமையை  செய்வதில்  காட்டும் தாமதம் உண்மையை நோக்கித்தான் விசாரணை செல்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

ஏனென்றால் கமிஷன் ஒன்றும் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது.  பரிந்துரை தான் செய்ய முடியும்.   சந்தேகம் இருந்தால் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியும்.   அதையும் வேறொரு அமைப்புதான் மீண்டும் பரிசீலனை  செய்து குற்றப் பத்திரிகை  தாக்கல் செய்யமுடியும்.

நடக்கும் சம்பவங்கள் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தும் சட்ட மன்ற இடைத்தேர்தல்களை எதிர்நோக்கியும் ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கி ஆதாயம் அடையும் நோக்கில் கொண்டு செல்லபடுகின்றனவோ என்ற சந்தேகத்துக்கு இடமில்லாமல் செய்யவேண்டும் என்றால் அதை விசாரணை கமிஷன் தான் செய்ய வேண்டும்.

இத்தகைய விமர்சனங்களை கமிஷன் அனுமதிக்க கூடாது.  அமைதி காத்தால் தவறான ஊகங்களுக்கு இடம் கொடுத்தது போல் ஆகிவிடும்.   கமிஷனும் உடந்தையா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது ஆகி விடும்.

விமர்சனங்களை தவிர்க்க ஆணையிடுவதுடன் விசாரணையை துரிதப் படுத்தி விரைந்து தனது முடிவை வெளியிட வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.

முத்தலாக் மசோதா தோற்கும் எனத் தெரிந்தும் பாஜக நிறைவேற்றத் துடிப்பது ஏன்?

முத்தலாக் மசோதா

முத்தலாக் எனப்படும் முஸ்லிம் விவாகரத்து முறையை செல்லாது என அறிவிக்கும் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றி விட்டு மேலவையில் நிறைவேற்றமுடியாமல் தவிக்கிறது மோடி அரசு. காரணம் பெரும்பான்மை இல்லை.

இருபது முஸ்லிம் நாடுகளில் தடை சட்டம் இருக்கிறது என்று காரணம் சொல்லும் பாஜக அங்கெல்லாம் அது மூன்றாண்டு தண்டனைக்கு உரிய  குற்றமாக இல்லை என்பதை  ஏற்க மறுக்கிறது.

ஒரு சிவில் சட்டத்தை கிரிமினல் சட்டமாக மாற்ற முயற்சிப்பது ஏன் என்ற கேள்விக்கு பாஜக விடம் பதில்  இல்லை.

முஸ்லிம் ஆண்களை மிரட்டுவது  மட்டும்தான் பாஜக வின் நோக்கமாக இருக்கிறது. முஸ்லிம் பெண்கள் திரண்டு வந்து ஆதரிப்பார்கள் என  எதிர்பார்த்தது நடக்க வில்லை.

அதில் உள்ள ஓட்டைகளை அடைத்து விட்டு நிறைவேற்றினால் எல்லா கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும். ஆனால் அதற்கு பாஜக தயாராக இல்லை.

அவசர சட்டம் கொண்டு வந்து எத்தனை நாட்களுக்கு உயிர் கொடுக்க முடியும்?

அஇஅதிமுக வின் அன்வர் ராஜா மிக கடமையாக எதிர்த்து பேசியிருக்கிறார். இது  முஸ்லிம்களுக்கு  எதிரான சட்டம் இல்லை. இறைவனுக்கு எதிரான சட்டம் என்று பேசியிருக்கிறார்.

எடப்பாடி என்னதான் முயன்றாலும் கட்சியை முழுவதும் பாஜக அடிமையாக மாற்ற முடியாது என்பதற்கு சான்றாக  தம்பிதுரை முதல் எல்லாரும் எதிர்த்து பேசியிருக்கிறார்கள் .

இந்த முயற்சி மூலம் மேலும் முஸ்லிம்களின் வெறுப்பை பாஜக சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.  அதனால் இந்துக்களின் ஆதரவை ஒன்று திரட்டி விடலாம் என்று பாஜக எதிர்பார்த்தால் அதுவும் நடவாது என்பதுதான் இன்றைய  நிலைமை.

பார்ப்பனச்சேரி அக்கிரகாரம் ஆனது எப்போது ?

பார்ப்பனச்சேரி அக்கிரகாரம்

கவிப்பேரரசு வைரமுத்து தனது தமிழாற்றுப்படை வரிசையில் கபிலர் குறிஞ்சி ஆணடவர் என்ற தலைப்பில் உரையாற்றினார். நக்கீரன் மட்டுமே அதை முழுவதும் வெளியிட்டது.

சங்க கால புலவரான கபிலர் மட்டுமல்ல தொல்காப்பியர் முதல் இன்னும் பல்வேறு  புகழ் பெற்ற புலவர பெருமக்கள் பார்ப்பனர் குலத்திலே பிறந்தவர்கள் ஆக இருந்திருகிறார்கள்.

ஆனாலும் சங்க கால தமிழ் இலக்கியங்களில் அவர்களது பங்கு குறிப்பிடத் தக்க இடத்தில இருந்தது.

சாதி இல்லாத சமுதாயம் ஆக தமிழ் சமுதாயம் விளங்கி வந்த காலத்தில் பார்ப்பனர் மட்டும் எங்கே இருந்து வந்தார்கள்.? ஏனென்றால் பார்ப்பனர்களோடு பிணைந்தது வர்ண தர்மம்.  வர்ண தர்மத்தோடு பிணைந்தது சம்ச்க்ரிதம். அதற்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இல்லை. பின் எப்போது எப்படி வர்ண தர்மம் தமிழர்  வாழ்வில் புகுந்தது.?   எப்போது சமஸ்க்ரிதம் தமிழில் கலப்பு செய்ய தொடங்கியது? எந்த அரசர்  அதற்கு இடம் கொடுத்தார்? ஏனென்றால் அரச ஆதரவு இல்லாமல் தூய தமிழில் சமஸ்க்ரித்த கலப்பு செய்தல் இயலாது.

நட்புக்கு சான்றாக வேள்பாரி-கபிலர் நட்பு வைரமுத்துவால் எடுத்துக் காட்டப் பட்டிருகிறது.

மன்னர் பாரி போரில் கொல்லப்பட்டபிறகு அவரது மகள்கள் இருவரையும் பிற மன்னர்கள் ஏற்றக் கொள்ளாத நிலையில் அவர்களை பார்ப்பனசேரியில் விடுத்து அவர் வடக்கிருந்து உயிர் நீத்தார் என்று வரலாறு பேசுவதாக வைரமுத்து குறிப்பிடுகிறார்.

ஆக பார்ப்பனர்கள் வாழ்ந்த இடமும் கூட சேரி என்றுதான் அழைக்கப் பட்டிருக்கிறது. ஆதாரம் இல்லாமல் வைரமுத்து எழுதி இருக்க மாட்டார்.

இதுவரை தாழ்த்தப்பட்டோர் வாழும் இடம் தான் ஊரை விட்டு ஒதுக்கிய இடத்தில்  அமைக்கப் பட்டு சேரி என்று அழைக்கப் பட்டது என்று கேள்விப்  பட்டிருக்கிறோம்.

பார்ப்பனர்கள் வாழ்ந்த இடமும் சேரி என்று தான் அழைக்கப் பட்டது என்றால் அது அக்கிரகாரம் ஆனது எப்போது? எப்படி?

தமிழர்கள் வரலாறு மறைக்கப் பட்ட வரலாறாகவே இருக்கிறது. களப்பிரர் காலம்  ஏன் இருண்ட காலம் என்று அழைக்கப் படுகிறது?. அவர்கள் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தை ஏற்காததாலா ?

தூய தமிழ் யார் காலத்தில் சமஸ்த்தமிழ் ஆயிற்று?

விடை தேடக் கூட முயற்சி இல்லையே?

எது எப்படியோ பார்ப்பனர்கள் தமிழர்களோடு வர்ண தர்மத்தையும் சமஸ்க்ரிததையும் திணிக்காமல் வாழ்ந்து தூய தமிழ்ப் புலவர்களாக சேரியில் வாழ்ந்து தமிழர்களோடு இணைந்து வாழ்ந்த காலமும் ஒன்று  இருந்திருக்கிறதே என்று நினைக்கையிலே எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகிறது.

அந்த நாள் மீண்டும் வருமா என்ற  கேள்வியும் உடன் வருகிறதா இல்லையா?

ரத்த தானம் மூலம் எச்.ஐ.வி பரப்பிய அரசு மருத்துவமனை?!

எச்.ஐ.வி பரப்பிய அரசு மருத்துவமனை

சாத்தூரில் அரசு மருத்துவமனை கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் செலுத்தி எச்.ஐ.வி நோயை பரப்பியது கொடுமையிலும் கொடுமை.

ரத்த தானம் வழங்கிய வாலிபர் எச்.ஐ.வி தொற்று தனக்கு இருப்பது தெரியாமலே கொடுத்திருக்கிறார். பின்பு அவரே மறு பரிசோதனையில் தனக்கு எச்.ஐ.வி இருப்பது தெரிந்து மனசாட்சியுடன் மருத்துவமனைக்கு தெரிவித்து யாருக்கும் தந்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்ள அதற்குள் அவரது ரத்தம் கர்ப்பிணி பென்னுக்குதரப்பட்ட செய்தி அப்போதுதான் வெளியாகிறது.

தவறு எங்கே நிகழ்ந்தது என்று அறிய அரசு ஆறு பேர் கொண்ட குழுவை அமைத் திருக் கிறது.  உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

என்ன செய்து என்ன? அந்த பெண் தனக்கும் மட்டுமல்லாது தனது குழந்தைக்கும் எச்.ஐ.வி நோய்தொற்று சிகிச்சையை வாழ்நாள் முழுதும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு பெரிய தண்டனை. எந்த குற்றமும் செய்யாமலே இப்படி  ஒரு தண்டனையா?

அரசு மருத்துவ மனைகளில் ரத்த வங்கிகள் எப்படி இயங்குகின்றன எனபதற்கு சான்றாகவே இந்த சம்பவம் பார்க்கப்படும்.

இதேபோல் சென்னை பெண் ஒருவருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் எச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தம் கொடுக்கப்பட்டதாக இப்போது புது புகார் வந்திருக்கிறது.

அரசு விசாரணை முடிவு வரட்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்படட்டும். இனி இதுபோல் தவறு மீண்டும் நிகழாமல் அரசு யந்திரம் உறுதி செய்யட்டும்.

அதற்கும் மேல் உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, சமுதாயத்தால் ஒதுக்கி  வைக்கப்படும் வாய்ப்புள்ள அந்த பெண்ணுக்கும் குழந்தைக்கும் போதுமான இழப்பீடை அரசு வழங்க வேண்டும்.

இதை விபத்து என்று சொல்ல முடியாது. சாதாரண அலட்சியமும் அல்ல. அதற்கும் மேலே கொடிய குற்றம்.

குறைந்தது ரூபாய் ஒரு கோடிக்கும் குறையாமல் அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு உடனடியாக வழங்குவதுடன் நோய் பாதிப்பில் இருந்து காப்பாற்ற ஆகும் முழு செலவையும் அரசே ஏற்றுக்  கொள்ளவேண்டும்.

நீதிமன்றம் சொல்லித்தான் எல்லாவற்றையும் அரசு செய்ய வேண்டும் என்று இல்லை.  தன் அறிவைக்  கொண்டும் செய்யலாம்.   மனம்தான் வேண்டும்.

வள்ளலாரின் இறுதிப்பார்வை..!!

வள்ளலாரின் இறுதிப்பார்வை

வள்ளுவர், திருமூலர் வள்ளலார் மூவரும் – தமிழர்களின் ஆன்மிக குருமார்கள். உலக மக்கள் அனைவருமே பின் பற்றத் தக்க கொள்கை பரப்பியவர்கள்.

நான் இன்று பேச வேண்டியது வள்ளலாரின் இறுதிப் பார்வை என்ன என்பது பற்றி.  .  எனவே முதல் பார்வை இடைப்பார்வை என்ன என்பதற்கு ஒன்று முதல் ஐந்து வரையிலான திருமுறைகளையும் இறுதிப் பார்வை என்ன என்பதற்கு ஆறாம் திருமுறையையும் எடுத்துக் கொள்ளலாம்.

இறை உணர்வில் முழுவதும் பக்குவப்படாத நிலையில் உள்ளவர்களுக்கும் அரைகுறையான இறை அனுபவம் உள்ளவர்களுக்கும் முதல் ஐந்து திருமுறைகளும், இறை உணர்வில் போதுமான அளவு அனுபவப்பட்டவர்களுக்கு ஆறாம் திருமுறையும் என மூன்று நிலையில் உள்ளவர்களுக்கும் வள்ளலார் பாடி இருக்கிறார்.

05.10.1823-ல் வள்ளல் பெருமான் அவதரித்தார்.. அவர் வாழ்ந்த 51 ஆண்டுகளை மூன்று கட்டமாக பிரிக்கலாம்..

1823-1850— பள்ளியில் பயிலாமல் கற்க வேண்டியவற்றை இறைவனிடத்தே பெற்றார். அவர் பாடி வழிபட்ட முதல் தலம் கந்த கோட்டம். ஒன்பதாம் அகவையில் இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று முருகப் பெருமானை வழிபடு கடவுளாகவும் திருஞானசம்பந்தரை வழிபடு குருவாகவும் திருவாசகத்தை வழிபடு நூலாகவும் கொண்டவர். இவரது 26  வது வயதில் 17 வயது வேலாயுத முதலியார் மாணாக்கரானார். திருவொற்றியூர் தியாகப் பெருமானையும் வடிவுடையம்மனையும்  வழிபட்ட காலத்தில் தான் முதல் மூன்று திருமுறைகளையும் பாடியிருக்கிறார்.

vallalar
vallalar

1851-1869 – தனது 28- வது வயதில் ஒழிவிலொடுக்கம் என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். அதன் பின், மனுமுறை கண்ட வாசகம், தொண்ட மண்டல சதகம் (தொண்டை மண்டலம் என்பதை மறுத்து), சின்மய தீபிகை, போன்ற நூல்களை பதிப்பித்து, 1857-ல்

சென்னை வாழ்வை நீத்து கருங்குழியில் வசிக்கத் தொடங்கிய காலத்தில் சிதம்பரம் சென்று வழிபடுவதை வாடிக்கை ஆக்கிக் கொண்டிருக்கிறார். இக்கால கட்டத்தில் தான் நான்காம் ஐந்தாம் திருமுறைகள் பாடப் பெற்றிருக்கின்றன. 1865ல் சன்மார்க்க சங்கம்  தோற்றுவிக்கிறார். கடவுள் ஒருவரே என்பதும் அவரை உண்மை அன்பால் ஒளி வடிவில் வழிபட வேண்டும் என்பதும், சிறுதெய்வ வழிபாடு கூடாது, உயிப்பலி கூடாது, சாதி சமய எவ்வகை வேறுபாடும் கூடாது, எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைக் கைக்கொள்ள வேண்டும், புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையை தெரிவிக்க மாட்டா எனவும் எரிக்காதே புதை எனவும் திதி கருமாதி வேண்டா எனவும் பற்பல கொள்கைகளை வகுத்து அவற்றை பரப்ப ஒரு சங்கத்தையும் நிறுவினார்கள். 1867-ல் முதல் நான்கு திருமுறைகள் அடிகள் காலத்திலேயே வெளிவந்தது. அதாவது எவற்றை நிராகரிக்க வேண்டும் என்று ஆறாம் திருமுறையில் சொன்னாரோ அவை அடிகள் காலத்திலேயே வெளியிடப்பட்டது வரலாற்றை பதிவு செய்வதற்காகவே என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1870-1874 – வடலூர் அருகே மேட்டுக்குப்பம் சென்று சித்தி வளாகத்தில் அடிகள்  உறையத் தொடங்கினார்கள். வடலூரில் ஒளி வழிபாட்டிற்கென சத்திய ஞான சபையை அமைக்கிறார்கள். ஏழு திரை விலக்கி ஆன்ம ஒளியாகிய அருட்பெருஞ்சோதியை தரிசிக்கலாம் என்ற கருத்தை நிலை நாட்டினார்கள். ஆக வழிபடு தெய்வம் ஒளியானது..  தம் கொள்கைக்கு மேலே மஞ்சள் அடியில் வெள்ளை ஆகிய இருநிறம் கொண்ட தனிக்கொடி கண்டவர் வள்ளலார். மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் ஒளி வழிபாட்டு முறை தொடங்கியது. 30.01.1874-ல் சித்தி வளாகத்தில் அருட்பெருஞ்சோதி ஆண்டவராய் நிறைந்தார் வள்ளல் பெருமான்.

அடிகளின் 1849 முதல் 1874  வரையான 25  ஆண்டுப்பணிகளில்,

1871 ல் சத்திய ஞான சபை அமைத்து, 1872-ல்  அருட்பெருஞ்சோதி அகவல் எழுதி , ஞானசபை வழிபாட்டு விதி வகுத்து சன்மார்க்க கொடி கட்டி பேருபதேசம் செய்து    1874  ல் மறைந்து நிறைந்தது வரையிலான மூன்று ஆண்டு வாழ்க்கையில் அவர் எதையெல்லாம் உபதேசித்தாரோ கடைப்பிடித்தாரோ  அதுதானே வள்ளலாரின் இறுதிப் பார்வையாக இருக்க முடியும்.

என்றும் எங்கும் இருக்கும் பரம்பொருள் ஒன்றுதான். அந்த ஒரே பரம்பொருளாகிய இறைவன்தான் அருட்பெரும்ஜோதி என்பதுதான் வள்ளல் பெருமானின் இறுதிப் பார்வை.

முதல் நான்கு திருமுறைகளும் 1867-ல் தொழுவூர் வேலாயுதனார் வெளியிட 1880-ல்  அடிகளின் மறைவிற்குப்பின் ஐந்தாம் திருமுறையும் 1885-ல் ஆறாம் திருமுறையும் வெளிவந்திருக்கின்றன.

முதல் திருமுறை 570 பாடல்களை கொண்டது.

இரண்டாம் திருமுறை 1388 பாடல்களை கொண்டது.

மூன்றாம் திருமுறை 612 பாடல்களை கொண்டது.

நான்காம் திருமுறை 458 பாடல்களை கொண்டது.

ஐந்தாம் திருமுறை 238 பாடல்களை கொண்டது. மொத்தம் 3266 பாடல்கள்.

இவை அனைத்திலும் விநாயகர், முருகப் பெருமான், சிவபெருமான், நடராசர், அம்மன்கள், திருமால், இராமர், திருமகள் கலைமகள் போன்ற தெய்வங்கள் அடிகளால் பாடப்பெற்றவர்கள். சமயகுரவர் நால்வர், திருவோத்தூர் சிவஞான தேசிக சுவாமிகள் போன்ற ஞானிகளும் பாடப் பெற்றிருக்கிறார்கள்.

அடிகள் சித்தி பெற்ற 6 ஆண்டுகளுக்குப் பின் 1880-ம் ஆண்டில் ஐந்தாம் திருமுறையை வெளியிட்ட தொழுவூர் வேலாயுதனார் ஆறாம் திருமுறையை வெளியிடும் முயற்சியில் ஈடுபடவில்லை.. அவர் மட்டுமல்ல இறுக்கம் இரத்தின முதலியார், புதுவை வேலு முதலியார், சிவானந்தபுரம் செல்வராய முதலியார், மயிலை சிக்கிட்டி சோமசுந்தர செட்டியார் ஆகியோரும் ஆறாம் திருமுறையை அச்சிட்டு வெளிப்படுத்த தலைப்படவில்லை.

vallalar12
vallalar

அடிகள் சித்தி பெற்று 11 ஆண்டுகள் கழிந்து இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்ற எண்ணத்தில் வேலூர் பத்மநாப முதலியார் முயற்சியில் 1885 ல் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் அவர்களால் ஆறாம் திருமுறை வெளியிடப்பட்டது. அடிகளின் அடியவர்களுக்குக் கூட அதை வெளியிட காலம் கனியவில்லை என்ற அச்சம். காரணம் ஐந்து திருமுறைகளிலும் பாடப் பெற்ற தெய்வங்கள் அடிகளால் ஒதுக்கி வைக்கப் பட்டு ஒரே இறைவனாக அருட்பெரும்ஜோதியை அவர் அறிவித்ததுதான்.

வள்ளலாரின் இறுதி போதனை அவர் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் அருளிய பேருபதேசம்தான். அதில் அவர் மிகவும் தெளிவாக

“இதற்கு மேற்பட நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம் இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்க்ஷியம் வைக்க  வேண்டாம்.”

“இதுபோல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்”.

“நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவு என்று அளவு சொல்ல முடியாது. அந்த லட்சியம் இப்போது எப்படி போய் விட்டது பார்த்தீர்களா? “‘

“ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலை மேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதனால் வந்த லாபம் இது. “

“நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே ஆண்டவர் முதற்சாதனமாக அருட் பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்

பெரும்கருணை அருட்பெரும்ஜோதி என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். “

ஆறாம் திருமுறையில் எண்ணற்ற இடங்களில் சாதியையும் மதத்தையும் சடங்குகளையும் குப்பைகள் என்றும் சழக்குகள் என்றும் பிணிகள் என்றும் பல்வேறு  வார்த்தைகளில் விமர்சிக்கிறார். தனது சங்க ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் பாருங்கள்;

“சன் மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது

தாள் வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினோடும் கேட்பீர்

என்மார்க்கத் தெனை நுமக்குள் ஒருவநெனக் கொள்வீர்

எல்லாம் செய் வல்லநம திறைவனையே தொழுவீர்

புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே

புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்

தன்மார்க்க மாய்விளங்கும் சுத்த சிவம் ஒன்றே

தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே   (  1734 )

ஆதியும்நடுவும் அந்தமும் இல்லா

அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே

நீதியில் கலந்து நிறைந்தது நானும்

நித்தியன் ஆயினேன் உலகீர்

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே

சத்தியச் சுத்தசன் மார்க்க

வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை

விளம்பினேன் வம்மினோ விரைந்தே                  ( 1735 )

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழகலவே  ( 1473 )

வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின்விளைவறியீர் – சூதாகச்

சொன்னவலால் உண்மை வெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை  ( 1512 )

வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே ( 186 )

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என் தனக்கே “  (187 )

இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

தெருட்சாறும் சுத்தசன் மார்க்கநன் நீதி

சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருட்ஜோதி வீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவர் நீரே.  (496)

சாதியும் மதமும் சமயமும் பொய் என

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி  ( 4 )

ஆக பாடல் மற்றும் பேருபதேசம் ஆகிய இரண்டையும் பொருந்திப்பார்த்து வள்ளலார் சாதி, மதம் , தவிர்த்த சன்மார்க்க சங்கத்தைத்தான் இறுதியாக தன் அன்பர்களுக்கு விட்டுச் சென்றார் என்பது பற்றி யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.

ஆனால்  வள்ளலார் நாத்திகர் அல்லர்.

“நாத்திகம் சொல்கின்றவர்தம்  நாக்குமுடை நாக்கு “ என்பதே அவர் முடிபு.

அதேநேரத்தில் ஒருபோதும் பிராமண. சத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தை உருவாக்கிய சனாதன தர்மத்தை ஏற்றுக்கொண்டவர் அல்ல வள்ளலார். வள்ளலார் தன் பாடல்கள் மற்றும் உரைகளின் எந்தப் பகுதியிலும் இந்து என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் அப்போது இந்து என்ற சொல்லே இல்லை. இந்து என்பது ஒரு மதமாக பார்க்கப்பட்டதும் இல்லை.

இந்தியா 1757 முதல் 1858 வரையிலும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிலும் 1858 முதல் 1947 வரை பிரிட்டிஷ் மகாராணி ஆட்சியிலும் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்குப்பின் தான், அவர்கள்தான், அறுவகை சமயங்களாக இருந்த சைவ, வைணவ, சாக்த, சௌர, சக்தி, கௌமார சமயங்களை இணைத்து இந்து மதம் என பெயர் சூட்டி உருவகம் கொடுத்தார்கள். இந்த அறுவகை சமயங்களுக்கும் மூலம் வேதம்.. வேதம் பார்ப்பனர்களுக்கு உரியது. அதனால்தான் மனிதன் தன் தொழிலுக்கு தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதற்கு அணியும் பூணூலை எல்லா தெய்வங்களுக்கும் அணிவிக்கிறார்கள் போலும்.

எனவே இந்து என்பது ஒரு  மதமே அல்ல. ஆங்கிலேயர் காலத்துக்குப் பின்னர் தான் இந்து என்ற சொல்லே நடைமுறைக்கு  வந்தது.

இந்துக்களுக்கு என்று சட்டங்கள் இயற்றியதும் ஆங்கிலேயர்கள்தான். உச்சநீதி மன்றமும் இந்து என்பது மதமல்ல வாழ்க்கை முறை என்று தீர்ப்பும் சொல்லி விட்டது. ஆனாலும் இந்து என்பது ஒரு மதமாக பாவிக்கப்படுவது மட்டுமல்ல யாரெல்லாம் சீக்கியர், பௌத்தர், ஜைனர் அல்லரோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று எதிர்மறை விளக்கத்தோடு சட்டங்களும் அமுலில் இருப்பது என்னவொரு விந்தை.

இந்தியா முழுவதும் இப்போது அமுலில் இருக்கும் இந்து மதம் என்பது உண்மையில் பார்ப்பனீய மதமே ஆகும். அதனால்தான் எல்லா பார்ப்பனீய எதிர்ப்பு சீர்திருத்த மதங்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு இந்து என்ற மாயப் பெயரில் இயங்கி வருகிறது. லிங்காயத்துக்கள், அய்யா வைகுண்டர் வழி நம்பிக்கையாளர்கள், போல சன்மார்க்கிகளும் தனி அடையாளத்தோடு இயங்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களும் இந்து என்ற வளையத்திற்குள்தான் அடங்கிக் கிடக்கிறார்கள்.

வள்ளலார் சீடர்கள் இந்து மத வளையத்துக்குள் இருந்து வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்.

தமிழர்கள் தங்கள் மூதாதையர்களை நடுகல் நாட்டி வழிபட்டு வந்தார்கள். எல்லா ஊர்களிலும் இருக்கும் அய்யனார்கள் அனைவரும் நம் மூதாதைகளே. அவர்களுக்கு வணக்கம் செய்தல் நம் கடமை. மாயோனும் முருகனும் தமிழர் கடவுளர் அல்லர் ..   முன்னோர்களே! ஆனால் வள்ளலார் சிறுதெய்வ வழிபாட்டை ஒதுக்கச்சொன்னார்.   ஏனென்றால் அங்குதான் ஆடு கோழி பலியிடல் நடக்கிறது. அது தவிர்த்து வணக்கஞ் செய்தல் தவறல்ல.

தான் அடிப்படையில் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன் என்று அறிவித்து சாதிக்கு அடிப்படையாக வர்ணாசிரம  மதம் இருப்பதால் நாத்திகர் ஆனவர் பெரியார்.  நாத்திகம் பேசிய தந்தை பெரியார் கூட வள்ளலார் போதனைகளை விமர்சிக்கவில்லை. 1935-ம் ஆண்டு திருவருட்பா நூலின் ஆறாம் திருமுறையின் நூறு பாடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியானது. இந்த நூலைத் தொகுத்தவர் சாமி.

சிதம்பரனார். குடியரசு பதிப்பகம்தான் இதை வெளியிட்டது.

ராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு என்ற பெயரில் குடியரசு வெளியீடாக பெரியார் வெளியிட்டார். மேலும், திருவருட்பாவின் இந்த வெளியீடு எல்லா மக்களையும் சென்று சேர வேண்டும் என்று எண்ணி மலிவு விலை பதிப்பாகவும், கட்டணச் சலுகை அளித்தும் விற்பனையை அதிகரித்து வியந்து விளம்பரமும் கொடுத்தார். ராமனை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தனது ராமசாமி என்ற பெயரை இறுதி வரை மாற்றிக்கொள்ள பெரியார் முன்வரவில்லை.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வள்ளல் பெருமான் போன்ற ஞானிகள் அடைந்த நிலை எத்தகையது என்பதை 1949 ஜுன் மாதம் 13 ம் தேதி மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு  சன்மார்க்க தொண்டர் மகாநாட்டில் நிகழ்த்திய பேருரை பின்னர் ‘அருள் மறை தந்த வள்ளலார் ‘ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது.

அண்ணாவும் திருமூலரை பின்பற்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே கொள்கை என்று அறிவித்தார்.

aringnar-anna
aringnar-anna

வள்ளலாரின் சத்திய ஞான சபையை பார்ப்பனர் கைப்பற்ற முயற்சித்தார்கள். அந்த முயற்சியை முறியடிக்க 135 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆம். 1874 முதல் 24.03.2010-ல் உயர் நீதி மன்ற தீர்ப்பு வரும்வரை சத்திய ஞான சபையில் லிங்க வழிபாடு இருந்தது. சபாநாத ஒளி சிவாச்சாரியார் என்பவர் தான் பரம்பரை அர்ச்சகர் என்று கூறிக்கொண்டு ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு பிரதோஷ காலங்களில் அர்ச்சனைகள் செய்து சிவாலயமாகவே மாற்ற முற்பட்டார்.. ஆறாம் திருமுறையை வெளியிடவே கூடாது என்று நீதிமன்றத்தில் கட்சி ஆடினார்கள்.  வள்ளலாரின் பக்தர்கள் விழித்தெழுந்து பல ஆண்டுகள் வழக்காடி அந்த சிவலிங்கத்தை அப்புறப்படுத்தி ஜோதி வழிபாட்டை மீண்டும் நிலை நிறுத்த வேண்டி இருந்தது. அந்த வழக்கில் என்னென்ன கட்சிகள் சொன்னார்களோ அத்தனைக்கும் வள்ளலார் தனது இறுதிப் பேருபதேசத்தில் பதில் கூறி இருந்தார். தனது ஆறாம் திருமுறையில் வள்ளலார் குறிப்பிடும் சிவம், சித்சபை போன்றவை சைவ சமய குறியீடுகள் அல்ல. எல்லாவற்றிற்கும் தத்துவ விளக்கம் சொன்னார் வள்ளலார்..

ஏசு கிறிஸ்து கிறிஸ்தவர் அல்ல. இறை தூதர். அவர் மறைந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின் கிறிஸ்துவ மதத்தை உருவாக்கினார்கள். அதுவும் பலப்பல  பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.

படிப்பறிவே இல்லாத முகம்மதுவை தூதராக தேர்ந்தெடுத்து  இறைவன் குரானை அருளினான். அன்பை போதிக்கும் இஸ்லாம் இன்று எத்தனை பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. புனித ரமலான் மாதத்தில்  மசூதிக்குள் புகுந்து வெடி குண்டு வைத்து கொத்துக் கொத்தாய் கொலை செய்கிறானே அவனும் முஸ்லிம் என்றுதானே சொல்லிக்கொள்கிறான். கிறிஸ்தவ இஸ்லாமிய வேதங்கள் பற்றி தெரியப் படுத்தப் படாதவர்களுக்கு  நிரந்தர நரகம் என்று இறைவன் விதித்திருப்பானா?

புத்தம் ஒரு மதமல்ல. கடவுளை ஏற்றுக் கொள்ளாதது. அது ஒரு தர்மம். சனாதனத்தை எதிர்த்து உருவானது. அதுவும் தெரவாட, மஹாயான, வஜ்ராயன என்றும் அதன் கிளைகளாக 12 பிரிவுகளும் வந்து விட்டன. புத்த பிட்சுக்கள் மாமிசம் சாப்பிடுவது மட்டுமல்ல மனிதர்களை கொல்லத்தூண்டுகிறார்களே அவர்கள் புத்தரின் பெயரைக் கூட உச்சரிக்க அருகதை அற்றவர்கள்.

ஜைனம் அல்லது சமணத்தின் 23 வது தீர்த்தங்கரர் மகாவீரர்.. கடவுளை ஏற்காமல் கர்ம விடுதலையை போதிக்கும் மார்க்கம் சமணம். அவர்களும் திகம்பரர் ச்வேதாம்பரர் என பிரிந்து விட்டார்கள்.

குருநானக் எல்லா மதங்களில் இருந்தும் கடவுளர்களை துதிக்கும் பாடல்களை குரு கிரந்த சாகிப் என தொகுத்து அளித்தது  சீக்கியர்களின் மத நூலானது. புத்த ஜைன சீக்கிய மதங்கள் வர்ண தர்மத்தை எதிர்த்து உருவானவை. இன்று  இந்து  மத போர்வையில் இயங்கும் வர்ண தர்மத்துக்குள் அடங்கி விட்டன.

வள்ளலார் அன்பர்கள் துணிவுடன் செயல்பட வேண்டிய தருணம் இது. நமக்கு ஓரிறைதான். அது அருட்பெருஞ்சோதி ஆண்டவர். ஏனைய தெய்வ வழிபாடுகளை தவிர்க்க வேண்டும்.

சாதியை விட வேண்டும். உடனடியாக முடியாவிட்டால் சாதி ஒழிப்பை இறுதி இலக்காக கொண்டு சிறிது சிறிதாக அதன் தாக்கத்தை குறைக்க

வேண்டும்.  சாதி மறுப்புத் திருமணம் சிறந்த மருந்து. சாதி ஒழிப்புச் சட்டம் கொண்டு வர பாடு பட வேண்டும்.

புலால் மறுத்தல் வேண்டும். இதில் சமரசம் கொள்வது கூடாது.

இந்து என்று சொல்லிக் கொள்ளக் கூடாது. இது உடனடி சாத்தியம்  இல்லை. ஏனென்றால் எவரும் பெரும்பான்மை மக்கள் திரளில் தானும் ஒருவன் என்ற வலுவான மனோ நிலையை விட்டு விட்டு தான்  ஒரு  சிறுபான்மை என்று  சொல்லிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். மதம் சட்ட பூர்வமாக தடை செயப் படும் வரை காத்திருக்க வேண்டியதுதான். அல்லது மதமற்ற கடவுள் நம்பிக்கையாளன் என்பதை குறிக்கும் ஒரு குறியீட்டை அரசு ஆவணங்களில் உருவாக்கிட வைத்து அதில் சேர்ந்து கொள்ள வேண்டும். எரியூட்ட வேண்டாம் புதைத்திடுங்கள் என்பது சாத்தியமானதே.

ஆக எப்படி பெரும்பான்மை மதங்களை பின்பற்றுகிறவர்கள் அந்த மதங்களின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணாக நடந்து கொண்டு ஆனாலும் தாங்கள் அந்தந்த மதங்களை சேர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்கிறார்களோ அப்படியே வள்ளலார் அன்பர்களும் இன்று அவரது கொள்கைகளுக்கு விரோதமாக நடந்து கொண்டே அவர் மீது வைத்திருக்கும் அபிமானத்தினால் நாங்களும் வள்ளலார் பக்தர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  கசப்பான உண்மைதான்.

மதம் வேண்டாம். கடவுளை ஒளி வடிவில் வழிபடுவோம் என்பதே கொள்கை. ஆனால் இன்று வள்ளலார் அன்பர்கள் தைப்பூச விழாவை சைவ சமய  சார்பாக கொண்டாடுவது எப்படி சரியாகும்? அதே நாளில் கொள்கைக்கு ஏற்ற வகையில் வழிபாட்டு முறையை மாற்றலாமே?

எந்த இறை உருவை பார்த்தாலும், அது ஒளி மயமான ஆண்டவரின் அம்சம் என்ற உணர்வு வரவேண்டும். தனிக்கடவுளர் அல்ல என்ற தெளிவு பிறக்க வேண்டும். புறச்சின்னங்களை அணிவதை தவிர்த்தல் வேண்டும்.  விபூதி குங்குமம் சந்தனம் ஆகியவை பிரசாதங்களாக வழங்கப் பட்டால் அவற்றை மரியாதைக்காக ஏற்றுக் கொண்டு பின்னர் அகற்றி விட வேண்டும்.

வீட்டில் வழிபடும் இடத்தில் மையமாக அகல் விளக்கு மட்டுமே இருத்தல் வேண்டும். சுற்றிலும் வேண்டுமானால் நம் முன்னோர்கள் படங்களை வைத்துக்  கொள்ளலாம் .. இறுதியாக, வள்ளலார் வாக்கின்படி,

சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியை பெற வேண்டுமென்பது சன்மார்க்கக் கொள்கை.  சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும் காமக்குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் கொலை புலால் தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள்தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்கு மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிசெய்வதால் அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. இப்படித்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

“பாதி இரவி லெழுந்தருளிப் பாவி யேனை யெழுப்பியருட்

சோதி யளித்தென் னுள்ளத்தேசூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்

நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான்பெற்ற நெடும்பேற்றை

ஓதி முடியா தென்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே ‘”

தமிழர்களுக்கு ஆன்மிக வழிகாட்ட வள்ளலார் அன்பர்களை ஒருங்கிணைத்து செயல்பட ஒரு மைய அமைப்பு வலுவாக அமைய அந்த அருட்பெருஞ்சோதி ஆண்டவர்தான் அருள்புரியவேண்டும். அமைப்பு வலுப்பெற்றால் அது உலகம் முழுமைக்கும் வழிகாட்டியாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.

27.12.2018 அன்று எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில் திருபுவனம் குரு.. ஆத்மநாதன் அவர்களின் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் நடந்த வள்ளலார் விழாவில் பேசியது.

தொடர்புக்கு; 7010484331 அல்லது vaithiyalingamv@gmail.com