Home Blog Page 55

சீக்கியர்களை கொன்ற வழக்கில் 34 வருடங்களுக்குப் பிறகு ஒருவருக்கு மரண தண்டனை??!!

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்

இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு ஏற்பட்ட கலவரத்தில் 1984 ல் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்ணாயிரத்துக்குக் குறையாது.

இதைப்பற்றி கேட்டவுடன்தான் காலஞ்சென்ற ராஜீவ் காந்தி ஒரு யானை நடந்தால் எறும்புகள் சாவது இயற்கைதானே என்றார். அப்படித்தான் காங்கிரஸ்காரர்கள் மனநிலை இருந்தது.

அப்போது மகிபால்பூர் என்ற இடத்தில் அவதார் சிங் ஹர்தேவ் சிங் என்று இருவர் வீட்டில் இருந்து இழுத்து வரப்பட்டு கொல்லப்பட்டனர்.

அவர்களை கொன்றதாக யாஷ்பால்சிங் நரேஷ் செஹ்ராவாத் என்று இரண்டு பேர் மீது வழக்கு.

அவர்களின் மீதான வழக்கை காவல்துறை சென்ற 1996 லேயே மூடிவிட்டது. அதற்குப் பின்னால் உச்சநீதிமன்றம் 2015-ல் அமைத்த சிறப்பு விசாரணை குழு இந்த வழக்குகளை எல்லாம் மீண்டும் கோப்பில் எடுத்து மறு விசாரணை  செய்து குற்றபத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடந்தது.

அதில்தான் யாச்பால்சிங் மரண தண்டனை யும் நரேஷ் ஆயுள் தண்டனையும் விதிக்கப் பட்டுள்ளனர்.

அவர்கள் நிச்சயம் மேன்முறையீடு செல்வார்கள்.   இதற்கே இத்தனை ஆண்டுகள் என்றால் மேன்முறையீடு முடிந்து நீதி நிலைநாட்டப் பட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

இப்போதாவது நீதி கிடைத்ததே என்று பாராட்டுவதா இதற்கே இத்தனை ஆண்டுகளா என்று  நிந்திப்பதா?

இது தாமதிக்கப்பட்ட நீதி என்பதில் சந்தேகம் இல்லை.

இலவச அரிசி இனி வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே!! உயர் நீதி மன்றம் அதிரடி!!!

ஏழைகளுக்கு உதவ தமிழ்நாடு அரசு கொண்டு வந்த இலவச அரிசி திட்டம் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் அது மக்களை சோம்பேறிகளாக்கி விட்டதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

இதனால் வேலைக்கு ஆள் கிடைப்பது கூட அரிதாகி விட்டது என்றும் வேலைக்கு வட நாட்டில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்யும் அளவுக்கு நிலைமை போய்விட்டது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிபதிகள் கிருபாகரன் அப்துல்  குத்தூஸ் கொண்ட அமர்வு வழக்கு விசாரணையை இம்மாதம் முப்பதாம் தேதிக்கு தள்ளிவைத்து விட்டு அதற்குள் இந்த திட்டத்தை அமுல் படுத்த வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் பற்றி கணக்கெடுப்பு எடுக்கப் பட்டதா என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் மூலமே இலவச அரிசி திட்டத்தின் கீழ் வழங்கப் பட இருந்த அரிசியை  கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்க போடப்பட்ட மனுவின் மீதான விசாரணையின் போதுதான் உருவானது.

தமிழக அரசு ஆண்டுக்கு ரூபாய் 2110 கோடி இந்த திட்டத்திற்கு செலவழிக்கிறது.  இது பொது மக்களின் வரிப்பணம். இதற்குப் பதில்  வேறு அவசியமான திட்டங்களுக்கு இந்த பணம் பயன்படுத்தப் படலாமே என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் இந்த கருத்தால் எப்படியும் எல்லாருக்கும் இலவச அரிசி திட்டம் இனி சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது .

ஒட்டு வாங்கும் ஒரு திட்டமாகவே இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல. கொடுப்பது கடினம் என்றால் நிறுத்துவது அதைவிட கடினம்.

நிறுத்தியவர்களை ஏழைகளுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்த முடியும்.

1,96,16,093 கோடி குடும்ப அட்டைகளுக்கு 5 விதமான வகைகளில் பொருட்கள் வழங்கப் பட்டு வருகின்றன.

சில இடங்களில் இலவச அரிசியை வசதி உள்ளவர்கள் பெற்று அதை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவதாகவும் விற்று விடுவதாகவும் புகார் வருகின்றன.  எந்த திட்டமாக இருந்தாலும் கால வரையறையில் ஆய்வு செய்யப் பட்டால் மட்டுமே தவறுகளை திருத்த முடியும்.

திட்டத்தின் மைய நோக்கத்தையே சிதைக்கும் அளவு முறைகேடுகள் நடைமுறையில் இருப்பது உண்மைதானே?

சரியான நேரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தவறுகள் தொடரா வண்ணம் கடிவாளம் போட இருக்கிறது.

திருத்தப்பட வேண்டிய நல்ல திட்டம்.

நீட்; தவறான கேள்விகளுக்கு உயர் நீதிமன்றம் அளித்த கருணை மதிப்பெண்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்??!!

நீட் தேர்வை தமிழில் எழுதியவர்களுக்கு தவறான தமிழ் மொழிபெயர்ப்பு கேள்வித்தாள் வழங்கப்பட்டது.

அதனால் பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கு 49 கேள்விகளுக்கு தலா 4 மார்க் வீதம் 196 கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் இப்போது அதை ரத்து செய்திருக்கிறது.

மூலக் கேள்வியான ஆங்கிலத்தில் கேள்வி சரியாக இருக்கும்போது அதன் தமிழ் மொழி பெயர்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆங்கில மொழியில் இருப்பதைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது விதி என்பதை சுட்டிக்  காட்டிய உச்ச நீதிமன்றம் அடிப்படை ஆங்கில அறிவு மாணவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் என்றும் அதனால் கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் சொன்னதோடு  இந்த ‘அறிவை பயன்படுத்தாமல் கண்ணை மூடிக்கொண்டு கருணை மதிப்பெண்கள் வழங்கப் பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தை குறை கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பில் முக்கியமாக சுட்டிக் காட்டப் படுகிறது. ” blind allocaion of 19 grace marks was ordered without application of mind’

ஒரு குறையை களைய வேண்டும் என்ற அக்கரையில் உயர் நீதிமன்றம் இன்னும் சற்று கவனமாக  இதை அணுகி இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

இதனால் மக்களுக்கு நீதிமன்றங்கள் மீதான மரியாதை குறையத்தான் செய்யும்.

பொன் ராதாகிருஷ்ணன் செய்த சபரிமலை அரசியல்??!!

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி சபரி மலை யாத்திரை சென்றார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து நடந்து வரும் பிரச்னைகளால் காவல் துறை பல கட்டுப்பாடுகளை விதித்து சட்ட ஒழுங்கை பாதுகாத்து வருகிறார்கள்.

ஒரு இடத்தில் அவரது காரை மட்டும் அனுமதித்து அவருடன் வந்தவர்கள் கார்களை காவல் துறை அனுமதிக்க மறுத்திருக்கிறது .

அதை பொன்னார் பிரச்னை ஆக்கி இருக்கிறார். அவருடன் விவாதித்த காவல் துறை அதிகாரி தன் உடல் மொழியால் தனக்கு உரிய மரியாதை அளிக்க வில்லை என்ற குறை இருந்திருக்கலாம்.

அவர் திரும்பி வந்தபோதும் இதே பிரச்னை வந்திருக்கிறது. போலிஸ் அத்துமீறி  நடக்கிறது என்பது பாஜக-வின் குற்றச்சாட்டு.

கேரள இடது சாரி அரசை குற்றம் சுமத்துவதே பாஜக வின் நோக்கமாக இருக்கிறது.

முத்தாய்ப்பாக கேரள அரசை  கண்டித்து கன்னியாகுமரி  மாவட்டத்தில் இன்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது பாஜக.

ஆக அரசியல் செய்யத்தான் இத்தனையும்.

தனக்கிருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார் பொன்னார்.

விவசாயிகள் கடன் ரூ 4 கோடியை வங்கியில் செலுத்திய அமிதாப் பச்சன் !!

விளம்பரத்திற்காக நன்கொடை கொடுப்போர்கள் மத்தியில் ஓசைப் படாமல் உத்தர பிரதேச மாநில விவசாயிகள் 1398 பேர் வாங்கியிருந்த ரூபாய் 4 கோடி வேளாண் கடனை அந்த வங்கிகளில் செலுத்தி இருக்கிறார் அமிதாப் பச்சன்.

இதற்கு முன்பு மராட்டிய மாநில விவசாயிகள் 350 பேர் வாங்கி இருந்த வேளாண் கடன்களை வங்கிகளில் செலுத்தி அவர்களை தற்கொலை முடிவில்  இருந்து மீட்டிருக்கிறார்.

மராட்டியத்திலும் உபி-யிலும் விவசாயிகள் வேளாண் கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது.

உத்தர பிரதேச விவசாயிகளை மும்பைக்கு வரவழைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்திருக்கிறார்.

காந்திஜி சொன்னார் பணக்காரர்கள் கையில் இருக்கும் பணம் ஏழைகளுக்கானது என்று.

எல்லா பணக்காரர்களும் சமுதாய நோக்க உள்ளவர்களாக இருந்தால் பணக்கார்கள் மீது யாருக்கும் கோபம் வராது. தேவை ஏற்படும்போது கொடுக்கப்  போகிறார்கள்.   யாரிடம் இருந்தால் என்ன?

அமிதாப் அரசியலில் இல்லை. அவரது மனைவி சமாஜ்வாதி கட்சியீன் சார்பில் பாராளுமன்ற மேலவைக்கு தேர்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தீவிர அரசியலில் இல்லை.

இங்கேயும் கொடுக்கிறார்கள். அதில் அரசியல் இருக்கும். அரசியல் இல்லாமல் கொடுப்போரும் இருக்கிறார்கள் .

நம்மூர் நடிகர்களுக்கு மட்டுமல்ல எந்த வகையிலோ சொத்து சேர்த்து வைத்திருப்போர் மனதில் இந்த நற்சிந்தனை வளர்ந்தால் நல்லது.

குரு நானக் பிறந்த நாள் சிந்தனைகள்; போதனைகளுக்கும் நடைமுறைக்கும் தொடர்பு அற்றுப் போன கதை.??!!

இன்று குரு நானக் பிறந்த நாள். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர்.

சீக்கிய மக்களுக்கு மூன்று நாள் கொண்டாட்டம்.

அவர் இந்து சமய சீர்திருத்தவாதி. ஆனால் அவரது வழிமுறை தனி மதமாகிப் போனது தான் துயரம்.

நானக் தனி கடவுளை கற்பிக்க வில்லை. எல்லா மதங்களும் உபதேசிக்கும் அன்பு , அறம், கருணை, போன்ற நல்ல குணங்கள்தான் சீக்கிய மதத்திற்கும் அடிப்படை.

எல்லா மதங்களில் இருந்தும் துதிப் பாடல்களை தொகுத்து அதுதான் குரு கிரந்த சாஹிப் என்று பெயரிட்டு அதையே மத நூல் ஆக்கினார்.

இந்து மத சம்பிரதாயங்களை ஒழிக்க விரும்பி தானே புது சம்பிரதாயங்களை உருவாக்கி விட்டார்.

ஐந்து காரியங்கள் சீக்கியர்களுக்கு கடமையாக்கப் பட்டன.

தாடி வளர்த்து தலைமுடியை டர்பன் கொண்டு கட்டிக் கொள்ளுதல், சீப்பு  வைத்துக் கொள்ளுதல், கைகளில் இரண்டு காப்புக் கட்டிக் கொள்ளுதல், இடையில் கிர்பன் என்ற குறுவாள் வைத்துக் கொள்ளுதல், இடையில் பாதுகாப்பான முடிந்து கொள்கிற அணிந்து கொள்ளுதல்  இவை ஐந்தும் கடமைகள்.

ஆனால் இந்துக்களின் சாதி பாகுபாடு விடாப் பிடியாக சீக்கியர்களை பிடித்துக் கொண்டது.   அதில் இருந்து அவர்களால் வெளியே வர முடியவில்லை. ஆம்.   சாதியை அங்கீகரிக்காத மதத்தில் சாதி இருக்கிறது.

ஜாட் சாதி சீக்கியர்கள் உயர்ந்தவர்கள். செலவாக்கு வசதி மிக்கவர்கள். தலித் மற்றும் இதர சாதி சீக்கியர்கள் கொஞ்சம் கீழேதான்.

ஜியானி ஜெயில் சிங் ஜனாதிபதியானாலும் அவர் ஆசாரி சீக்கியர்தான். பூட்டா சிங் மந்திரியானாலும் அவர் தலித் சீக்கியர்தான். மதம் மாறினாலும் இந்து சாதி  அடையாளம் விட மாட்டேன் என்று துரத்துகிறது.

நானக் போதனைகளில் முக்கியமானவை;

1. குருவின் துணை இல்லாமல் கடவுளை அறியமுடியாது.

  1. மன்னனாக இருந்தாலும் அன்பு நிறைந்து எறும்புக்கு ஈடாக முடியாது.

3. தன் மீது நம்பிக்கை இல்லாதவன் கடவுள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது.

  1. எதைப் பேசினால் உனக்கு கௌரவம் கிடைக்குமோ அதை மட்டுமே பேசு.
  2. உண்மையை அறிவது மேலானது அதற்கும் மேலானது உண்மையாக வாழ்வது.
  3. உலக ஆசையை துறை.
  4. கனவில் நடக்கும் நாடகமே உலகம்.
  5. உண்மையாக இறப்பது எப்படி என்பதை அறிந்து கொண்டால் அதை கேட்டது என்று அழைக்க மாட்டீர்கள்.

9. உலகத்தில் மகிழ்ச்சியை கேட்டால் துன்பம் வரும்.

  1. உலகை பாதுகாக்கிறவன் என்னை எங்கே வைக்கிறானோ அந்த இடமே எனக்கு சொர்க்கம். .

நமது வள்ளலார் போதித்த பலவும் குரு நானக் போதனைகளோடு ஒத்துப் போகின்றன.

நானக்கின் சீடர்கள் தனி மதம் ஆகிப் போனார்கள். வள்ளலார் சீடர்கள் இந்து மத வளையத்துக்குள் இருந்து வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்.

இறை நாமத்தை ஜபிப்பது, கடமை ஆற்றுவது தொண்டு செய்வது இவைதான் சீக்கிய மதத்தின் சாரம்.

வடிவமில்லா இறைவன் தன் படைப்புகள் வழியே காட்சி யளிக்கிறான். இறைவனை ஆராதனை களாலும் பலிகளாலும் திருப்திப் படுத்த முடியாது. மூட நம்பிக்கைகள்  சிலை வழிபாடுகள் எல்லாம் பொருள் அற்றவை.

ஆனால் நடைமுறையில் சீக்கியர்கள் இந்து கடவுளர்களை வணங்க மறுப்பதில்லை.

பெரும்பாலும் இந்துக் கடவுளர் பெயர்களையே வைத்துக் கொள்கிறார்கள்.

நாங்கள் இந்துக்கள் இல்லை என்று ஒரு இயக்கம் தோன்றினாலும் அது வலுப்  பெறவில்லை.

இன்றும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே சீக்கிய மதம் பாவிக்கப்  படுகிறது.

போற்றத் தக்க குரு நானக் மக்களின் மனங்களில் நீடு  வாழ்வார்.

ரெயிலில் பிடிபட்டது ஆட்டுக்கறியே! நாய்க்கறி அல்ல??!! ஆய்வறிக்கை தெளிவுபடுத்தியது??!!

கெட்டுப் போன இறைச்சி ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு வருகிறது  என தகவல் வந்ததை அடுத்து ரயில்வே வாரியம் சார்பில் விசாரனை முடுக்கிவிடப்பட்டது .

மீன் இறைச்சி என ஏற்றுமிடத்தில் பதிந்திருக்க பறிமுதல் செய்யப்பட்டு ஆராய்ந்த போது  அது வால் நீண்டிருந்ததால் அது நாய்க்கறி என அதிர்ச்சியாக தகவல் பரவி பத்திரிகைகளில் செய்திகள் பரபரப்பாக வெளியாயின.

எல்லாரும் மீம்ஸ் தடபுடலாக வேடிக்கை காட்ட ரண களமானது இறைச்சி சாப்பிடுவோர் கூட்டம்.

அனுப்பியவர்  சென்று சேர வேண்டிய முகவரிகள்  தெளிவாக இல்லை என்பதால் ரெயில்வே பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இறைச்சி பெறுவதாக இருந்த முகவர் ஜெய்சங்கர் என்பவர் கைது செய்யப் பட்டார்.

ஆனால் அவர்கள் தொடக்கம்  தொட்டே நாங்கள் ஆட்டு இறைச்சிக்குத் தான் ஆர்டர் கொடுத்திருந்தோம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

இறைச்சி சென்னை எழும்பூர் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப் பட்டு ஆய்வுக்கூடத்தில் பரிசோதிக்கப் பட்டது.

இன்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் பறிமுதல் செய்யப் பட்ட இறைச்சி ஆட்டு இறைசியே என்றும் நாய் இறைச்சியல்ல என்றும் தெளிவு படுத்தப் பட்டிருக்கிறது.

இதுவறை  மட்டன் பிரியாணி  சாப்பிட்டவர்கள் நிம்மதி அடைந்திருக்கலாம்.  ஆனால் இறைச்சியை அனுப்பிய பார்சல் அதிகாரிகள் ஜோத்புரில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

அவர்களால் தான் இத்தனை களேபரங்கள் !

இனிமேல் ஆவது இதுபோன்ற செய்திகளை வெளியிடும்போது மக்களின் உணர்வுகள் பாதிக்கப் படும் என்பதால் உண்மையை உறுதி செய்து கொண்டு வெளியிடுவது நல்லது.

ராஜஸ்தானின் செம்மறி வகை ஆடுகளுக்கு நீண்ட வால் இருக்கும் என்பதுதான் இத்தனை சந்தேகங்களுக்கும் அடிப்படையாக இருந்திருக்கிறது.

ரெயில்வே காவல்துறை விழித்துக் கொள்ளட்டும்.

சட்ட மன்றத்தை கலைத்த பாஜக முடிவால் மேலும் சிக்கலானது காஷ்மீர் பிரச்னை??!!

2020 ஆண்டு அக்டோபர் மாதம் வரை இருக்கும் காஷ்மீர் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் திடீர்  என்று பாஜக-வால் முடித்து வைக்கப் பட்டிருக்கிறது.

யாரவது இதை எதிர்த்து நீதிமன்றம் போகக் கூடும். நீதிமன்றம் முடிவை நிறுத்தி வைக்க அதிகம் வாய்ப்பும் உள்ளது.

ஏன் இந்த முடிவு.? எதிரிக் கட்சிகளான மெகபூபா முக்தியின் கட்சியும் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரசும் ஒன்று சேரும் என்று  பாஜக எதிர்பார்த்திருக்கவே முடியாது. இந்த மூன்று கட்சிகளுக்கும் பெரும்பான்மை உள்ளது. ஆட்சி அமைக்கும் உரிமையை கோரி மெகபூபா கொடுத்த செய்தி பேக்ஸ் மெஷின் வேலை  செய்யாததால் தெரியவில்லை என்று ஆளுநர் கூறியிருப்பது நகைப்புக் குரியது.

பி டி பி – பாஜக கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுலாக்கப் பட்டு இருக்கிறது.

காஷ்மீரை அடித்தளமாக கொண்ட இரண்டு கட்சிகள் ஒன்று சேர்ந்து  விட்டால் நிலைமையை மோசம் ஆக்கும் என்று மத்திய அரசு நினைத்தால் மிகவும் தவறு.  இப்போது மீண்டும் அவர்கள் ஒன்றிணைந்து வேலை செய்வதை எப்படி தடுப்பீர்கள்?

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களின்போது பொதுமக்கள் பங்களிப்பு அதிகம் ஆவது நல்ல சமிக்ஞை ஆக பார்க்கப் பட்டது.

எப்போது தேர்தல் நடத்தினாலும் இதே கூட்டணி தொடர்ந்தால் அப்போது பாஜக என்ன செய்ய முடியும்?

இந்திய ராணுவத்தினர் மீது கல்லெறிந்து தாக்கும் பொதுமக்கள் மிக அதிகமாக இருக்கும் இடம் காஷ்மீர்.

ஒரு ராணுவ வீரன் ஆயுதங்களுடன் தெருவில் நடந்து  செல்லும் போது பொதுமக்கள் கூடி நின்று கேலி பேசுவதும் சில இளைஞர்கள் அந்த ராணுவ வீரனை கையால் தள்ளி  சீண்டுவதும் சகிக்க முடியாத காட்சிகள். அந்த ராணுவ வீரன் மனம் என்ன பாடு பட்டிருக்கும்.? நாடு காக்க உயிரை பணயம் வைத்து ஆயுத போராட்டம் நடத்தும் அந்த வீரன் யாருக்காக போராடுகிரானோ அவர்களே அவனை அவமதிப்பது சகிக்க முடியாதது.

ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களை தன் வசம் கொண்டு வரும் நடவடிக்கைகளில் இறங்காமல் மக்களை தனிமைப் படுத்தும் முயற்சியிலேயே இறங்குவது சரியல்ல.

எத்தனை காலத்துக்கு இப்படி ராணுவத்தை குவித்து வைத்துக் கொண்டு அவர்களை கட்டுப் படுத்த முடியும்?

இந்த முடிவு மக்களை இன்னும் பிளவுபடுத்தவே உதவும்.

யார் சேர்ந்தாலும் ஆட்சி அமைக்கும் உரிமையை அவர்களுக்கு ஆளுநர் வழங்கி இருக்க  வேண்டும் .

மெகபூபா-பாஜக கூட்டணி ஏற்பாடே ஒரு பொருந்தாக்  கூட்டணி தான். அவர்களும் இரண்டு ஆண்டுகளுக்கு  மேலாக ஆட்சியில் இருந்து விட்டார்களே?

நீதிமன்றம் தலையிட்டு ஆளுநர் முடிவின் மீது ஒரு குட்டு வைத்துத்தான் மாற்று அரசு   அமைய  வேண்டும் என்றால் அதை யார் தடுக்க முடியும்?

மீலாது நபி திருநாள் சிந்தனைகள்!!!!

இன்று மீலாது திருநாள். அதாவது நபிகள் நாயகம் பிறந்த நாள்.

ஏசு கிறிஸ்து பிறந்து 571 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவர்.

முகம்மது பிறந்த மதம் இஸ்லாம் இல்லை.

ஆதாம், இப்ராஹீம், மோசஸ், ஜீசஸ், வழியில் முகம்மதுவும் ஒரு தூதர். ஆனால் இஸ்லாமியர்களுக்கு இறுதித் தூதர்.

முரட்டு அரபு குரைஷி வம்சத்தை சேர்ந்தவர்.  அந்த மக்களுக்கு நல்வழி காட்ட இறைவனால் அனுப்பப்  பட்ட இறுதி  தூதர்.

நாற்பது வயது வரையில் கல்வி கற்காமல் இருந்தவரை இறைவன் தூதராக தேர்ந்தெடுத்து அவருக்கு மறையை  ஓதியது அவன் கருணை.

எந்த மதமும் மக்களை வாழ வைக்கத்தான் பிறந்தன. ஆனால் பிறந்த பின் அந்த மதங்கள் மக்களை வாழ வைக்கிறதா? அழிக்கிறதா?

அன்பையும், அறத்தையும் போதித்த இறைவன் வன்முறையை அறிவுறுத்தி இருப்பானா?

இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்காத ஒன்றை அவன் பெயராலேயே செய்கிறார்களே அவர்கள் அந்த இறைவனின் பெயரை சொல்ல தகுதி படைத்தவர்களா?

எந்த முஸ்லிமும் ஐம்பெருங் கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதி பூண்டால் மட்டும் போதாது.

இஸ்லாத்துக்கு எதிரான எதை செய்தாலும் இறைவன் அவர்களுக்கு தண்டனை கொடுப்பான்.  அதுவும் இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?

இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் செய்யும் கொலைகளை, அழிவுகளை , கொடுமைகளை நினைத்ததுதான் இந்த சிந்தனை.

ரமலான் மாதத்தில்  போரிடுகிறார்கள், மசூதிக்குள் வெடிகுண்டு வைத்து கொல்கிறார்கள், முஸ்லிம்கள் ஒருவர்க்கொருவர் கொன்று குவித்துக்கொள்கிரார்கள் இதெல்லாம் இஸ்லாத்துக்கு ஒப்புமை  உடையதா?

ஏக இறைவனை நம்புகிறவர்கள் அவர்களுக்குள்  புகுந்து  விட்ட பல பிரிவுகள் தங்களுக்குள் சண்டை இடாமல் வாழவே முடியாதா?

முஸ்லிம்கள் சுய  பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நாள் இந்த நன்னாள்.

இறைவன் அவர்களுக்கு நற்சிந்தனையை அருள்வானாக!!!!

கஜா புயல் விளைத்தது சோகம்; மாநில அரசு விதைத்தது அவலம்; மத்தியஅரசு காட்டியது அலட்சியம்??!!

இயற்கைப் பேரிடர் களங்களில் அரசியல் செய்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

ஆனால் அதற்காக அதிகாரத்தை கையில்  வைத்திருப்பவர்கள் காட்டும் அலட்சியத்தையும் அவலத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?

பத்து மாவட்ட மக்களின் துயரங்கள் எப்போது தீரும் எனத் தெரியவில்லை. தொடக்கத்தில் யாரும் அரசியல் செய்யாமல் அதிகாரிகளின் முயற்சிகளை பாராட்டவே செய்தார்கள்.

ஆனால் அடுத்தடுத்து அமைச்சர்களும் முதல் அமைச்சரும் நடந்து கொள்ளும் முறை விமர்சனத்தை தவிர்க்க முடியாததாக்கி விட்டது.

மூன்று நாள் கழித்து முதல் அமைச்சர் சில அமைச்சர்கள் புடை சூழ விமானத்திலும் ஹெலிகாப்டரிலும் சென்று குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் யந்திரத்தனமாக நிவாரணங்கள் வழங்கி விட்டு திரும்ப வருகிறார்.

அங்கேயே முகாமிட்டு இருக்கும் அமைச்சர்களுக்கு  உள்ளூர் மக்கள் எந்த மரியாதையையும் தர மறுக்கிறார்கள்.  ஓ.எஸ்.மணியன் சுவர் ஏறிக்குதித்து ,,காவலரின் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்புகிறார். திண்டுக்கல் சீனிவாசன் இன்னும் நான்கு புயல் வந்தால் நல்லது. ஏன் என்றால் அப்போதுதான் ஏறி குளங்கள் நிரம்பும் என்கிறார். உதயகுமார் மக்கள் போராட்டங்கள் தூண்டி விடப்பட்டவை என்கிறார். மக்களை இவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்களா?

துயரத்தில் இருப்பவர்கள் போராடத்தான் செய்வார்கள். அதை பொறுத்துக் கொள்ள வேண்டாமா? உள்ளூர் அமைச்சர் ஒரத்தநாடு வைத்திலிங்கம் மக்களால் கேள்வி கேட்கப் பட்டு ஆத்திரமடைந்து சத்தம் போடுகிறார்.

இதெல்லாம் மக்களால் நேசிக்கப் படும் அரசில் நடக்குமா?

விபத்தால் பதவிக்கு வந்தவர்கள் விபத்துக்களை பேரிடர்களை துடைக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.

ஒரு லட்சம்  மின் கம்பங்கள் சாய்ந்து விட்டன, ஒரு கோடி தென்னைகள்  விழுந்து விட்டன, பல லட்சக்கணக்கில் வாழைகள் சாய்ந்தன,   வீடுகள் உடைமைகளுடன் நாசம், குடிநீர் தட்டுப் பாடு, உடுத்த உடைகள் இல்லை, பல நூறு கிராமங்களில் பத்து மாவட்ட மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடுகின்றனர். அவர்கள் பட்டினி கிடந்து அரசின் கவனத்தை ஈர்க்க ரோட்டுக்குவந்தால் அவர்கள் எதிர்க் கட்சிகளால் தூண்டி விடப் படுகிறார்கள் என்று  குற்றச்சாட்டு.

மொத்தமாக எவ்வளவு இழப்பு என்பதை இனிதான் கணக்கு பார்க்க வேண்டும்.  மாநில அரசின் நிதி ஆதாரத்தில் மட்டுமே இந்த இழப்பை ஈடு கட்ட முடியாது.

தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து துயர் துடைக்க அரசின் பக்கம் நிற்கின்றன.

திமுக முதல் முதலாக கட்சி சார்பில் ஒரு கோடியும் சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர் சம்பள வகையில் ஒரு கோடியும் ஆக இரண்டு கொடி அளவில் நிதி அளித் திருகிறது.   நடிகர்கள் சிவகுமார் குடும்பம் ஐம்பது லட்சம், விஜய்சேதுபதி இருபது ஐந்துலட்சம் ஊடகங்கள் உதவிப் பொருட்கள் சேகரித்து அனுப்புவது என்று உதவிக் கரங்கள் நீளுகின்றன .

ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த அறிவிப்பையும் செய்ய வில்லை.   எல்லாம் முடிந்து சாககாசமாக வந்து  பார்த்து இழப்பில் இரண்டு சதம் ஈடுகட்டுவார்கள்    . முந்தைய அனுபவம் பார்த்தோமே!

நாளை பிரதமரை பார்த்தபின் முதல்வர் என்ன அறிவிப்பு  வெளியிடுகிறார் என்று பார்ப்போம்.

ஆனால் தனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பை முதல்வர் பழனிசாமி பயன்படுத்திக் கொள்ள தவறி  விட்டார் என்பதே பொது மக்களின் கணிப்பு.

ஒரு சில அமைச்சர்கள் கடுமையாக உழைத்தார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவர்களிடம் என்ன அதிகாரம் இருக்கிறது?

இழப்பீடு கொடுப்பதற்கு கணக்கீடு செய்ய கால அவகாசம் வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால் பசியால் துடிப்பவர்களுக்கு உணவு கொடுப்பதற்கு அவகாசம் கேட்பவர்கள் அதிகாரத்தில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள்.