Home Blog Page 56

3 மாணவிகளை எரித்துக் கொலை செய்த 3 அதிமுக-வினர் விடுதலை??!! 7 பேர் விடுதலையில் அரசு காட்டும் அலட்சியம்.??!!

2000 ஆண்டில் செல்வி ஜெயலலிதாவுக்கு பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் சிறை தண்டனை வழங்கப் பட்டது.

அதை எதிர்த்து தர்மபுரியில் அதிமுகவினர் வேளாண் பல்கலைக்கு சொந்தமான பேருந்தை எரித்தனர். அப்போது அதில் இருந்த மாணவிகள் மூன்று பேர் ஹேமலதா காயத்ரி கோகிலவாணி தீயில்  கருகி மாண்டனர்.

அவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த மரண தண்டனை உச்ச நீதி மன்றத்தில் ஆயுள் தண்டனை ஆக குறைக்கப் பட்டது.

இப்போது அவர்களின் எஞ்சிய தண்டனை காலம் முடியும் முன்பே தமிழக அரசு எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்து  ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போர்க்கு விடுதலை அளித்துள்ளது.   அதற்கு முதலில்  அனுமதி மறுத்த ஆளுனர் பின்னர் என்ன நடந்ததோ அனுமதி அளித்தவுடன் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்  பட்டிருக்கிறார்கள்.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இதே கடமை உணர்ச்சியை ராஜீவ் கொலை வழக்கு  குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசு காட்டாதது ஏன்?

இன்று கூட வேல்முருகன் ஓர் சைக்கிள் பேரணி ஒன்று நடத்தி இருகிறார்.

உச்ச நீதிமன்றம் ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்ட பின்னும் ஏன் தாமதிக்க வேண்டும்.?

அதுவும் மாநில அரசு பரிந்துரையை அரசியல் சட்ட பிரிவு 161 ன் கீழ்   ஆளுநர்  ஏற்றுக்  கொண்டுதான் ஆகவேண்டும்.

இதற்கிடையில் மத்திய அரசு ஆளுநர் அனுப்பிய ஏழு பேர் விடுதலை பற்றிய  கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலேயே அனுமதி மறுத்து விட்டதாக தகவல் வருகிறது.  எது உண்மை.?

ஏழு பேர் விடுதலை ஒரு புறம்.   மற்றொரு புறம் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு ஆளுநர் மூலமாக தலையிட முடியுமா என்ற கேள்வி .

விடை  விரைவில் தெரிந்தே ஆக வேண்டும்.!!!

ஏசுவையும் அல்லாவையும் பாடினால் கர்நாடக இசை தீட்டுப்பட்டு விடுமா? இந்து அமைப்புகள் எதிர்ப்பு ஏன் ?

கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தனது இசைக்கச்சேரிகளில் ஏசுவையும் அல்லாவையும் போற்றி சில பாடல்களை பாடுவதை வழக்கமாக வைத்திருந்தாராம்.

அதற்கு இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

டெல்லியில் இந்திய விமான போக்குவரத்து அமைப்பு ஆதரவில் நடைபெற இருந்த டி.எம்.கிருஷ்ணாவின் இசைக்கச்சேரியை எதிர்த்து இந்து அமைப்புகள் வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்க அவரது நிகழ்ச்சி அல்ப காரணங்களை சொல்லி நிறுத்தப்பட்டது.

பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலையிட்டு அரசின் ஆதரவோடு  அவரது நிகழ்ச்சி நடை பெற்றிருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் ஏசுவைப்பற்றி  ஒரு மலையாளப் பாடலையும் அல்லாவைப் பற்றி ஒரு தமிழ்ப் பாடலையும் காந்திஜியின் பஜனைப்  பாடல், துக்காராம் பாடல், கன்னட தத்துவ அறிஞர் பசவா, பெருமாள் முருகனின் எழுத்துக்கள் போன்ற கருத்து சுதந்திரம் பற்றி எல்லாம் பாடியிருக்கிறார்.

ஏன் கர்நாடக இசையில் ஏசுவையும் அல்லாவையும் பாடினால் இசை தீட்டுப் பட்டு  விடுமா?

ஏதோ கர்நாடக இசை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போலவும் மற்ற மதங்களின் கடவுளர்களை  பாடினால் அது இந்து மதத்துக்கு செய்யும் துரோகம் என்பது போலவும் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தங்களுக்கு பிடிக்காதவர்களை தேச துரோகிகள் என்று குற்றம் சாட்டுவது அவர்களின் வழக்கமாகவே உள்ளது.

டி.எம்.கிருஷ்ணாவின் இந்த சர்வ மத பாடல் பாடும் உரிமையை இந்து என் ராம் அவரது சகோதரர் மியுசிக் அகாடெமி தலைவர் என் என் முரளி போன்றோரும் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் போன்றோரும் ஆதரவு  அளித்திருக்கின்றனர்.

பொதுவாகவே பார்ப்பனர்கள்  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த வகையில் இல்லாமல் இந்து ராம் போன்றோர் சில சமயங்களில் மனித உரிமைகள் காப்பாற்ற குரல் கொடுத்திருக்கிறார்கள் .

டி.எம்.கிருஷ்ணா விஷயத்திலும் நியாயத்திற்காக குரல் கொடுத்திருக்கும் அனைவரையும் பொதுமேடை பாராட்டுகிறது.

அன்புமணி ராமதாசின் பல்டி; ஏதாவது ஒரு அணியில் சேருவோம்??!!

இரண்டு திராவிட கட்சிகளோடும் இனி இந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று மருத்துவர் ராமதாஸ் கூறி வந்தார்.

அதையே அன்புமணியும் வழிமொழிந்து கூறிவந்தார்.

எல்லா துன்பங்களுக்கும் இரண்டு திராவிட கட்சிகளே காரணம் என்பது அவர்களின் கண்டுபிடிப்பு.

கடந்த காலத்தில் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் பதவிகளை அடைந்தார்கள் பா ம க வினர். தனித்து நின்று எந்த வெற்றியையும் பெற அவர்களால் முடியவில்லை.

இந்த உண்மை இப்போதுதான் அவர்களுக்கு உறைத்து இருக்கிறது.

‘ அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று மற்ற கட்சிகள் நினைக்கலாம். நாங்கள் தமிழ் நாட்டின் இழந்த பெருமையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் பணி. இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள்  ஏதாவது ஒரு அணியில்  இருப்போம். ஆனால் எந்த கட்சியுடன் கூட்டணி அமையும் என்பது பாராளுமன்ற தேர்தலின் போதோ அல்லது அதனுடன் இணைந்த சட்ட மன்ற தேர்தலின் போதோ தெரியும். தேர்தல் அறிவிக்கப் பட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப் படும் ‘ என்று அன்புமணி ராமதாஸ் ஓர் ஆங்கில பத்திரிகையின் சிறப்பு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இப்பொது மருத்துவர் ராமதாஸ் அன்புமணியின் கருத்தை ஏற்றுத் தானே ஆக வேண்டும்.

தினகரனுடன் பாஜக-வுடனும் கூட்டணி பற்றி பாமக பேசி வருவதாக முன்பே செய்திகள் கசிந்தன.

இன்று வரை திமுக அல்லது அதிமுக என்பதுதான் பொது மக்கள் கருத்தாக இருந்திருக்கிறது. அதை மாற்ற முடியாது.

கருத்துக் கணிப்புகளிலும் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் மு.க.ஸ்டாலின் அதிக வாக்குகள் பெற்று முன்னணியில்  இருக்கிறார்.

தனித்து நின்று எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது என்பது அன்புமணியின் கருத்து. இதுதான் பல்லாண்டுகளாக நிலவி வரும் பொதுக் கருத்தாயிற்றே.

பிடிவாதமாக தனிக்கச்சேரி தான் நடத்துவோம் என்று நிற்காமல் நடைமுறை சாத்தியம் பற்றி சிந்திக்கத் தொடங்கியது நல்லதே.

வெற்றியைத் தராமல் இனி கட்சி நடத்த முடியாது என்பதை இரண்டு மருத்துவர்களும் புரிந்து கொண்டால் சரி.

எதிர்க்கட்சிகளை மிரட்ட இனி சிபிஐ உதவாது?! ஆந்திர, மே.வங்க அரசுகள் முடிவால் அதிர்ச்சி?! வாழ்க மாநில சுயாட்சி!!

சிபிஐ என்ற விசாரணை அமைப்பு டெல்லி சிறப்பு காவல் துறை சட்டம்  1946 ல் உருவாகப்பட்டது.

அது அந்த யூனியன் பிரதேச எல்லைக்குள் தான் அதிகார வரம்பு படைத்தது. மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்கள் அதிகாரங்கள் வழங்கினால் மட்டுமே சிபிஐ விசாரிக்க முடியும்.

ஆனால் இதுநாள் வரை எல்லா மாநிலங்களிலும் அந்த ஒப்புதலை பெற்றுத்தான் சிபிஐ  தன் அதிகார வரம்பை இந்தியா முழுமைக்கும் விரிவு படுத்தியுள்ளது.

மத்திய அரசு சிபிஐ அமைப்பை தன் கைப்பாவையாக பயன்படுத்தி தன் அரசியல் எதிரிகளை பந்தாடவும் மிரட்டவும் பயன் படுத்தி  வந்தது.

இந்த நிலையில் தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிபிஐ அமைப்பிற்கு கொடுத்திருந்த தடையில்லா ஒப்புதலை திரும்ப பெற்றிருக்கிறார். அதாவது இனி சிபிஐ ஆந்திராவில் விசாரணை செய்யவேண்டுமென்றால் ஒன்று மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது உயர் நீதி மன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ உத்தரவிடவேண்டும்.

தானாக முன்வந்து யார் மீதுவேண்டுமானாலும் வழக்கு போடும் வேலையை இனி  சிபிஐ செய்ய முடியாது.

சிபிஐ அமைப்பிற்குள் நடக்கும் பதவி சண்டை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வருகிறது. இயக்குனரும் துணை இயக்கனரும் ஒருவருக்கொருவர் கோடிகளில் லஞ்சம் வாங்கி விட்டார்கள் என்று குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள்.

இதில் மத்திய அரசு பஞ்சாயத்து செய்ய முயற்சித்தும் பலன் இல்லை. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது சிபிஐ இன் யோக்கியதை.

முதலில் உங்கள் பிரச்னையை தீர்த்துக்  கொண்டு வாருங்கள் பிறகு  மற்ற மாநிலங்களை பார்க்கலாம் என்று சொல்லி விட்டார் நாயுடு. அவரைப் பின்பற்றி மமதா பானர்ஜியும் மே வங்க மாநிலத்திலும் கொடுக்கப்பட்டிருந்த பொது அனுமதியை திரும்ப பெற்றுக்  கொண்டு  விட்டார். சிபிஐ தன் நம்பிக்கைத் தன்மையை இழந்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நடப்பில் இருக்கும் விசாரணைகள் மட்டும் தொடரலாம்.

இரு மாநிலங்களும் ஊழல் வழக்குகளுக்கு பயந்து சிபிஐ-யை தடுக்கிறார்கள் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டுகிறார். தெலுகு தேச முக்கியப் புள்ளிகள் மீது சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு மூன்றும் விசாரணைத் தாக்குதல் தொடங்க இருப்பதை தெலுகு தேசம் மோப்பம் பிடித்திருக்கலாம். மோடி  மட்டும் அரசியல் செய்யலாமோ ?

ஏற்கெனெவே 1998-ல் கர்நாடக முதல்வர் ஜெ எச் பாட்டில் சிபிஐ க்கு கொடுத்திருந்த அனுமதியை ரத்து  செய்திருக்கிறார். அது இன்றளவும் தொடர்கிறது.

ஆந்திர அரசின் முடிவைப் பொறுத்த வரையில் அது சிபிஐ மட்டுமல்ல பிற துறைகள் தொடர்பாகவும் நடக்கும் விசாரணைகளையும் பாதிக்கும் எனத் தெரிகிறது. அதாவது ஆட்கடத்தல், ஆயுதங்கள், அணுசக்தி, கலைப்பொருட்கள், கலால், பினாமி செயல்பாடுகள், நிறுவனங்கள், காப்பீடு, போன்ற பல துறைகளிலும் எந்த மத்திய அமைப்பும் மாநில அரசின் ஒப்புதல் இன்றி நடவடிக்கை எடுக்க முடியாது.

சரியான சட்ட ஆலோசனை பெற்ற பிறகே இந்த முடிவை நாயுடு எடுத்துள்ளார்.

வேறொரு கோணத்தில் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

திமுக-வின் கொள்கை மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி.

அது அகில இந்தியாவுக்கும் பரவும் நல்ல நேரமாக இது இருக்கிறது.

மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் இது ஜனநாயக நாடுதானா என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

மத்திய மாநில அதிகாரப் பங்கீடுகள் இங்கே சரிவர வரையறை செய்யப்படவில்லை.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மாநில அரசின் அதிகாரங்களை பிடிங்கி தன் வசம் வைக்கவே மத்திய அரசு விரும்புகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொடங்கப் படும் ஒரு மாநில சுயாட்சி இயக்கமாகவே நாம் ஆந்திர, மே வங்க அரசுகளின் நடவடிக்கைகளை நாம்  பார்க்கிறோம்.

மாநிலங்கள் இது போன்று சுயாட்சித் தன்மையுடன் இயங்கும் ஒரு அமைப்பை செயல் படுத்த முடியுமா ?  ஒரு மாநில  தேர்தல் கமிஷனை கூட சுயாட்சி பெற்ற அமைப்பாக செயல் படுத்த நம்மால் முடியவில்லையே? உண்மைதான். ஆனால் முயற்சியை விட்டு  விட முடியுமா?

மற்ற மாநிலங்களும் இந்தப் போக்கைத் தொடர வேண்டும்.

வெல்க மாநில சுயாட்சி கோரிக்கைகள்!!!

குட்கா ஊழல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் பெயர்கள் இல்லை.??!!

பெரிதாக பேசப்பட்ட குட்கா ஊழல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் , டிஜிபி.ராஜேந்திரன் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்  துணை கண்காணிப்பாளர் மன்னர் மன்னன் ஆகியோர் பெயர் இடம் பெறவில்லை.

நாற்பது இடங்களில் சோதனை நடந்தது. மாநில காவல் துறையான டிவிஏசி  விசாரணை நடத்தினால் உண்மை வெளி வராது என்றுதான் உயர்நீதி மன்றம் சி பி ஐ விசாரனைக்கு உத்தரவிட்டது.

இப்போது குட்கா வியாபாரி மாதவராவ், சீனிவாசராவ் ,உமாசங்கர்குப்தா ,கலால் வரித்துறை  அதிகாரி பாண்டியன் , உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன் ,சிவகுமார் ஆகிய ஆறு பேர் மட்டும் கைது செய்யப் பட்டு ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளனர்.

கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யப் பட்ட ஊழல் புகாரில் கைப்பற்றப் பட்ட டைரியில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப் பட்டது என்று குறிக்கப் பட்டு விசாரணை துவங்கியது. அதில் கண்ட பெரிய மனிதர்களின் பெயர்கள் தான் அப்போது மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிறகு என்ன நடந்தது? சிபிஐ தலைமையிலேயே பெரிய அதிகாரப் போட்டி நடந்து வருகிறது.  அதனால் இன்று இருக்கும் சிபி ஐ தலைவரால் எந்த முக்கிய முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்.

அதற்குள் இப்படி அரைகுறையாக முதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதுதான் இறுதியானது என்கிறார்களா? அப்படி இருந்தால் இது மிகப்பெரிய ஏமாற்றம்.

சாட்சியங்கள் அடிப்படையில் தான் வழக்குப்புனைய முடியும். அந்த வகையில் சி பி ஐ எவரையும் தப்ப விடாது என்று நம்புவோம். நீதிமன்ற தலையீட்டில் நடைபெறும் வழக்கு இது என்பதால் தவறு நிகழ இடம் தர மாட்டார்கள் எனவும் நம்புவோம்.

ஆனால் நடப்பவைகள் அந்த நம்பிக்கையை தோற்றுவிப்பவையாக தோன்றவில்லை.

நிர்மலாதேவிக்கு பிணை வழங்க மறுப்பதன் பின்னணி?! வாய் திறப்பார் என்ற பயமா?

கொலை வழக்குகளில் கூட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டால் அல்லது மூன்று மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யா விட்டால் பிணையில் விடுவது வழக்கமாக இருக்கிறது.

ஆனால் அருப்புகோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி  , துணை பேராசிரியர் முருகன், பிஎச்டி மாணவர் கருப்பசாமி ஆகிய மூவருக்கும் மட்டும் தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு அவர்கள் சிறையில் இருந்து கொண்டே வழக்கு விசாரணையை சந்திக்கட்டும் என்று நீதிமன்றமே கருதுகிறது என்பது சற்று நெருடலாக இருக்கிறது .

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள்  370 (1) (3) ,120(b) 354A, மற்றும் விபசார ஒழிப்பு சட்டம்  போன்ற பல சட்டப் பிரிவுகளில் குற்றப்  பத்திரிகை தாக்கல் ஆகி இருக்கிறது.

அவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றம் பிணை மறுத்து விட்டதால் அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு பிணை கேட்டு செல்ல விருப்பதாக தகவல்.

விருதுநகர் மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற இருக்கிறது.

மாணவிகளை தவறாக வழி நடத்த முயற்சித்த குற்றம் சாதாரணமானதல்ல என்பதும் குற்றம் நிருபிக்கப் பட்டால் அவர்கள் கடுமையாக தண்டிக்கத் தக்கவர்கள் என்பதும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியாயம்தான்.

ஆனால் இதில் மாநில ஆளுநர் பந்வாரிலால் புரோஹித் சம்பந்தப் பட்டிருப்பதுதான் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அவசர அவசரமாக அவர் சந்தானம் தலைமையில்  ஒரு நபர் கமிட்டியை நியமித்து ஒரு அறிக்கையை பெற்று வெளியிட முயற்சித்ததுதான் சந்தேகத்தின் முதல் விதை. அதை நீதிமன்றமே ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை.

உச்சநீதி மன்றம் நிச்சயம் பிணை வழங்கும் என நம்பப் படுகிறது.  கொடுத்தால் சென்னை உயர் நீதிமன்றம் பிணை தர மறுத்தது தவறு என்றாகி விடும்.

எல்லாருக்கும் ஒரு நீதி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நீதியா என்ற கேள்விக்கு நீதித்துறை என்ன பதில் சொல்லும்?

எதையோ மறைக்க முயற்சிக்கிறார்கள் என்ற கேள்வியை அப்படியே விட்டு விடுவார்களா?

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அவர்களுக்கு பிணை மறுப்பது சட்டத்தின் படியும் வேறு வழக்குகளில் கடைப்பிடிக்கப் படும் நடைமுறைகளின் படியும் தவறு என்றே தோன்றுகிறது.

விசாரணைக்கு பிறகு குற்றம் நிரூபணம் ஆனால் அவர்களை தூக்கில் வேண்டுமானாலும்  போடுங்கள்.  அதுவரை எல்லா வழக்குகளிலும் என்ன நடைமுறை பின்பற்றப் படுகிறதோ அதையே அவர்களுக்கும் பின் பற்றி பிணை வழங்குவதை  பொறுத்து மட்டும் கடைப்  பிடிப்பதுதான் சரி என்பதே நமது கருத்து.

உச்ச நீதி மன்றம் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்?!

20 தொகுதிகளில் இடைத்தேர்தல் ஏன் இல்லை? -தினகரனும் தேர்தல் கமிஷனும் நடத்தும் அரசியல்??!

20 தொகுதிகளை காலியாக வைத்துகொண்டு இங்கு ஒரு ஆட்சி நடக்கிறது. இது எப்படி  மக்களாட்சி ஆகும்.?

எல்லாருக்கும் தெரிந்தே ஒரு மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. யாரும் எதுவும் செய்ய முடியவில்லை.

மோடியின் மத்திய அரசு எப்போது விரும்புகிறதோ அப்போதுதான் தேர்தல் வரும் .

என்ன விசித்திரங்கள்?! காரணம் சட்டமோ நீதிமன்றமோ நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் இன்று ஆட்சியில் பங்குதாரர்கள். அப்படி வாக்களிக்காதவர்கள் சட்ட மன்றத்துக்கு வெளியே.

குறை ஒன்று சட்டத்தில். அல்லது நீதி மன்றத்தில். பாதிப்புக்கு உள்ளாவது மக்களாட்சி.

ஒரே ஒரு நாடாளுமன்ற கூட்டத்தில்தான் கலந்து கொள்ள முடியும் இப்போது கர்நாடகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் தேர்தெடுக்கப்பட்டிருக்கிற மூன்று உறுப்பினர்கள். ஏன் இடைதேர்தல்  நடத்தினார்கள்?  நான்கு மாத காலத்திற்கு ஒரு எம்.பி யா?

ஆர்.கே.நகர் திருப்பரங்குன்றம் தொகுதிகள் பற்றி வழக்கு இருக்கிறது. அதை எப்போது நடத்துவீர்கள் என்று உயர்நீதி  மன்றம் கேள்வி எழுப்பியிருகிறது.

மற்ற  18  தொகுதிகள்  பற்றி நீதிமன்றம் கேட்க முடியாது.  ஏன் என்றால் தகுதி நீக்கம் செய்யப் பட்ட தினகரன் அணியை சேர்ந்த  18 பேரின்  தகுதி இழப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றம் போகப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்களே தவிர அதை தேர்தல் கமிஷன் கருத்தில்  எடுத்துக்  கொள்ளுமா  என்பதில் தெளிவில்லை.

அவர்கள் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார்களே தவிர  தேர்தல் கமிஷனுக்கு தகவல் கொடுத்தார்களா என்பதும் தெரியவில்லை.  18 பெரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனிடம் கடிதம் கொடுத்தால் தவிர பத்திரிகை செய்திகளை அடிப்படியாக வைத்து அவர்கள் ஒரு  முடிவு எடுக்க மாட்டார்கள். ஏன் என்றால் தேர்தல் கமிஷன் அப்பீல் காலக்கெடு இன்னும்  90  நாட்கள் என்றால் அதுவரை பொறுத்திருப்போம் என்பார்கள். ஏன் தினகரன் அப்படி தகவல் கொடுக்காமல் இருக்கிறார்?  அவருக்கும் இடைதேர்தலில் தீவிர அக்கறை இல்லை. வந்தால் வெற்றி பெறுவோம் என்று சொல்லிக்கொண்டே தொண்டர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் அல்லவா?

யாராவது ஒரு தகுதி இழப்பு செய்யப் பட்ட எம்.எல்.ஏ உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தால் இடைத்தேர்தல் வராது.

எடப்பாடி பழனிசாமி அரசு நிம்மதியாக மிச்ச காலத்தை ஒட்டி விடும்.

நாடாளுமன்ற தேர்தலில் தான் பாஜக அரசுக்கு கவலை. இங்கே எடப்பாடி ஆண்டால் என்ன வேறு யார்  வந்தால் என்ன? இன்றைய நிலையில் அரசு கவிழ்ந்தால் திமுக வந்து விடும் மு.க.ஸ்டாலின் வந்து விடுவார் என்றால் எப்படி இடைத்தேர்தலை நடத்துவார்கள்?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் நாங்கள் பாஜக வோடு கூட்டணி வைத்தால் என்ன தவறு என்று கேட்கிறார். விதை போட்டாகி விட்டது அல்லவா?

ரஜினி பாஜக-வை பலசாலி கட்சி  என்கிறார். கூட்டணி  சேருவீர்களா என்றால் வரட்டும் பார்க்கலாம்  என்கிறார். இல்லை என்று சொல்ல நா வரவில்லை. ஏன் என்றால் மனதில் காவி இருக்கிறதே?!

ஆக எடப்பாடி-ரஜினி- பாஜக  கூட்டை உறுதி செய்தபின் தான் தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல்களை நடத்த மோடி – அமித்ஷா அனுமதிப்பார்கள் .

என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ன? ஏன் என்றால் சதிகள் என்றும் வெற்றி பெற்றதில்லை.

சந்தேகமில்லாமல் ரஜினி மோடி அடிமையே??!! வெளிக்காட்டிய ரஜினியின் பேட்டி!!!

ரஜினி அரசியலுக்கு  வருவாரா வரமாட்டாரா என்பது இருக்கட்டும்.

வரவே மாட்டார்!     வந்தால் அவர்  மோடி அடிமையாகத்தான் இருப்பார் என்று நேற்று அவர் அளித்த பேட்டியிலேயே தெரிந்து விட்டது.

7  பேர் விடுதலை என்றாலே அது ராஜீவ் கொலை வழக்கு கைதிகள்தான்   என்பதைக்கூட ஊகிக்காமல்      எந்த    7 பேர் என்று அவர் கேட்ட உடனேயே  அவர் எந்த அளவு தமிழக அரசியலில் அக்கறையாக இருக்கிறார் என்பது தெரிந்து விட்டது.

பா ஜ க ஆபத்தான் கட்சியா என்றால் எதிர்க்கிற கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி என்கிறார்.    மக்களுக்கு  ஆபத்தான கட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்கிறார். உங்கள் கருத்து என்ன என்றால் அதை இப்போது சொல்ல முடியாது. என் கருத்தை இப்போது சொல்ல முடியாது. நான் இன்னும் முழுவதுமாக அரசியலில் இறங்கவில்லை  என்கிறார்.

அன்றாடம் நடக்கும் கூட்டங்கள் பற்றி நான் வெளியே சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன் . முழுவதுமாக நான் அரசியலில் இறங்கும்போது தெளிவாக சொல்கிறேன் என்கிறார்.

எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கிறார்களே என்றால் பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்து போராடுகிறார்கள் என்றால் யார் பலசாலி ஒருவரா பத்து பேரா என்று கேள்வி கேட்கிறார்.   அயோக்கியன் பலசாலியாக இருந்தால் பலசாலி என்பதற்காக அவனோடு  சேருவீர்களா?     எதிர்ப்பவர்கள் பலவீனமான  பத்து பேர் என்பதற்காக அவர்களோடு சேர மாட்டீர்களா?

யார் வர வேண்டும் என்பது முக்கியமா?  யார் பலசாலி என்பது முக்கியமா?

பா ஜ க வோடு கூட்டணி வைத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு அதை அப்போது பார்த்துக் கொள்வோம் என்று சொல்லி தான் பா ஜ க விற்கு எதிரானவன் என்று சொல்ல மறுக்கிறார்.

சர்கார் பட பிரச்னை பற்றிகூட ரஜினியின் கருத்து குழப்பம்.   ‘எடுத்த எடுப்பிலேயே தியேட்டரை உடைப்பது பேனரை கிழிப்பது படத்தை நிறுத்துவது சரியல்ல என்றவர் பேச்சு வார்த்தைக்கு பிறகு அப்படி செய்யலாம் என்கிறார்.   பேச்சு வார்த்தை முறிந்தால் அதையெல்லாம் செய்யலாமா?

மொத்தத்தில் தன் மிகச்சிறந்த குழப்ப வாதி  என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார் ரஜினிகாந்த் .

அதைவிட ஒரு வார்த்தை கூட மோடி அரசை விமர்சிக்காமல் தான் என்றுமே மோடியின் அடிமைதான் என்பதை வெளிச்சம் போட்டு  காட்டி விட்டார் ரஜினி.

இனி தமிழ் மக்கள்தான் விழிப்பாக இருக்க வேண்டும்.

தூங்கும் தமிழக அரசு- பாலாறு தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசு??!!

கர்நாடகத்தில் துவங்கி ஆந்திரா வழியாக தமிழ்நாட்டில்  கடலில் கலக்கும் நதி பாலாறு.

கர்நாடகத்தில் 93  கி. மீட்டரும் , ஆந்திராவில் 33  கி.மீட்டரும் ,  தமிழகத்தில்   222  கி.மீட்டரும் அதன் ஓட்டங்கள்.

கர்நாடகா அதன் பகுதிகளில் பெத்தமங்களா , விஷ்ணுசாகர்,  ராம்சாகர்  என்று அணைகளையும் தடுப்பணைகளையும் கட்டி விட்டது.

ஆந்திர அரசோ அதன் பகுதிகளில்  29  தடுப்பணைகளை கட்டி விட்டது. இப்போது  21 தடுப்பணைகளில்     2 அடி முதல்    5 அடி வரை உயரம்  அதிகரிக்கவும் புதிய மூன்று தடுப்பணைகள் கட்டவும்     ரூபாய்  41.70  நிதி ஒதுக்கீடு  செய்திருக்கிறது.

கேட்டால் இருக்கும் அணைகளைத்தானே பழுது பார்க்கிறோம் என்று சொல்வார்கள்.   ஆனால் செய்வதை  யார் கண்காணிப்பது? உயரத்தை அதிகரிக்கவும் புதிய அணைகளை கட்டவும் தமிழ் நாட்டிடம் அனுமதி பெற்றார்களா?

வேலை முடிந்து விட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழக பகுதிகளில்  இருக்கும் பாலாற்றிற்கு வராது.  மிச்சம் இருக்கும் மணலை விற்று கொள்ளைக்காரர்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு விவசாயிகளையும் பொதுமக்களையும்  தவிக்க விட வேண்டியதுதான்.

தமிழக அரசு உடனடியாக செயல் பட்டு அந்தப் பணிகளை நீதிமன்றம் மூலமாக கண்காணிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் சென்னை உட்பட ஐந்து மாவட்டங்கள் குடிநீர் ஆதாரம் பறிக்கப் பட்டு பாதிக்கப் படும் சூழ்நிலை தான் இன்று  இருக்கிறது.

ஆந்திரா  செயல்படுகிறது. தமிழ் நாடு  தூங்குகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்??!!

பழ.நெடுமாறனின் விடுதலை புலிகள் ஆதரவு புத்தகங்களை அழிக்க உத்தரவிட்ட தவறான தீர்ப்பு??!

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதோ எழுதுவதோ சட்டப்படி குற்றமல்ல என்று முன்பே பல தீர்ப்புகளில் தெளிவு படுத்தப் பட்டிருக்கிறது.

வைகோ கூட அதனால்தான் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம்.

விடுதலை புலிகள் இயக்கமே இல்லாத நிலையில் அதை தடை செய்வது என்பது நகைப்புக் கிடமானது. செயல் படாத ஒரு இயக்கத்தை ஏன் தடை செய்ய வேண்டும்?

விடுதலை சித்தாந்தத்தை தடை செய்ய முடியுமா? விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை தடை செய்யலாம். அற வழியில் கூட போராடக் கூடாது என்று தடை செய்ய முடியும் என்றால் இந்தியாவுக்கு சுதந்திரமே கிடைத்திருக்காது.

இலங்கையில் சிங்களர்களோடு இனி சம உரிமை பெற்று வாழ முடியும் என்ற நம்பிக்கையை இழந்தவர்கள் விடுதலை கேட்கிறார்கள்.     அந்த நம்பிக்கையை விதைத்து வளர்த்து அதன் அடிப்படையில் இலங்கையில்  ஒற்றுமையை உறுதி செய்ய வேண்டியவர்கள் சிங்களர்கள்.

இலங்கையிலிருந்து விடுதலை பெறுவதா அல்லது ஒன்று பட்ட இலங்கையில் சம உரிமையுடன் வாழ அற வழியில் போராடுவதா என்பதெல்லாம் இலங்கையில்  வாழும் தமிழினம் எடுக்க வேண்டிய முடிவுகள்.

இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் ஆகிய நாம் நம் தொப்புள் கொடி உறவுகளான தமிழர்களின் நலன் காக்க குரல் கொடுப்பதும் தார்மீக ஆதரவு அளிப்பதும் நமது சட்ட பூர்வமான உரிமை. இது எந்த வகையிலும்  இந்தியாவுக்கு எதிரானது அல்ல.

பழ.நெடுமாறன் பழுத்த தேசியவாதி. இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல. அதே நேரம் ஈழத் தமிழர்கள் தன்னுரிமை பெற வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்.

அவர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய பேச்சுக்களின் தொகுப்பு  ‘தமிழீழம் சிவக்கும்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

அதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. ஆனால்  2006 ல் அரசு அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது. அவர் 18.10.2006 விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி பறிமுதல் செய்யப் பட்ட 1709 புத்தக படிகளை திருப்பி கொடுக்க மறுத்து விட்டார். மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதி மன்றமும் இப்போது அந்த படிகளை அழிக்க உத்தரவிட்டிருகிறது.

இது சரியான தீர்ப்பல்ல. மேன்முறையீடு சென்று மாற்றப்பட வேண்டிய தீர்ப்பு.

தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக பேசுவதும் தமிழ் மக்கள் அதற்கு ஆதரவு அளிக்க  வேண்டும் என்று கோருவதும் எப்படி குற்றம் ஆகும்? பிரச்சாரம் ஒரு ஜனநாயக வழிமுறைதானே?

விடுதலி புலிகள் அழிக்கப்படும் வரை இந்திய அரசும் இலங்கை பிரச்னை தீர அரசியல் தீர்வு மட்டுமே சாத்தியம் என்று தானே சொல்லி வந்தது. இப்போது யாருமே அரசியல் தீர்வைப் பற்றியே பேச மறுக்கிறீர்களே ஏன்?

மாண்புமிகு நீதிபதி முரளிதரன் அவர்கள் இந்த புத்தகங்களை திருப்பி கொடுத்தால் அவர் மக்களிடம் விநியோகிப்பார் என்று கூறுகிறார். அவர் பேசியது குற்றமல்ல என்றுதானே அவர் மீதான வழக்கை வாபஸ் பெற்றார்கள். பின் எப்படி அதை புத்தகமாக போட்டது மட்டும் குற்றம் ஆகும்?

வன்முறைக்கு தூண்டாத எந்த கருத்தும் புத்தகமும் தடை செய்யப் படக் கூடாது.  பிறகு எந்த புதிய கருத்தும் புத்தகமும் வெளிவரவே முடியாது.

இந்திய அரசியல் சட்டம் நமக்கு தந்திருக்கும் அடிப்படை உரிமையை இந்த தீர்ப்பு பாதுகாக்க வில்லை என்பதால் மேன்முறையீடு செய்து மாற்றப் பட வேண்டிய தீர்ப்பு இது என்பதே நமது கருத்து.