Home Blog Page 57

சபரிமலை; பெண்களும் பஞ்சமர்களும் அசுத்தமானவர்கள் எனவே தரிசனம் செய்ய முடியாது என்கிறது தந்திரியின் நூல் ??!!

அனைத்து வயது பெண்களும் அய்யப்பனை தரிசிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் 49 சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு வந்து அது எதிர்வரும் ஜனவரி மாதம் 22-ம் தேதிக்கு விசாரணைக்கு மாற்றப் பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம் எல்லா வயது பெண்களையும் அனுமதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.

அதனால் வருகிற மகர சங்கராந்தி வரை எல்லா வயது பெண்களும் அய்யப்பனை தரிசிக்கலாம் என்பதுதான் இப்போதைய நிலை.

இதுவரை ஏறத்தாழ அறுநூறு பெண்கள் அய்யப்பனை தரிசிக்க பதிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பத்து  முதல் ஐம்பது வயது வரையில் ஆன பெண்கள். அவர்களுக்கு அரசு போதிய பாதுகாப்பு கொடுத்து தரிசனம் செய்ய வைக்க வேண்டும்.

அரசு என்ன செய்யப் போகிறது அரசை பணிய வைக்க சங்க பரிவாரம் என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இடையில் உச்சநீதி மன்ற விசாரணையின் போது கோவில் தந்திரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலத்தில் சொல்லப் பட்ட விபரங்கள் அதிர்ச்சியானவை. சென்னஸ் நாராயணன் நம்பூதிபாத் எழுதிய கேரள தந்திர சமுசாயம்  பகுதி 10, வரி IIள் சொல்லப் பட்டதை அதில் குறிப்பிட்டிருந்தார்கள்.

அதில் மாதவிலக்கு என்பது அசுத்தமானது. அந்த காலத்தில் பெண்கள் கோவிலுக்கு வரமாட்டார்கள் எந்த மதம் சார்ந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது

அது மட்டுமல்ல அடுத்த வரியில் சொல்லப் பட்டிருந்ததுதான் முக்கியம். அதாவது’   ‘ கோவிலுக்குள் கீழ்சாதி மக்கள் அதாவது சூத்திரர்களுக்கு கீழே உள்ள பஞ்சமர்கள் கூட நுழைவது கூட அசுத்தமானதுதான் ‘.

ஆனால் இந்த விதி இப்போது கடைப்பிடிக்கப் படுவது இல்லை. காலப் போக்கில் இது மறைந்து விட்டது என்றால் பெண்கள் நுழைந்தால் அசுத்தம் என்ற விதியும் காலப் போக்கில் மறைய வேண்டியதுதானே.

கீழ்சாதி மக்கள் கோவிலுக்கு வருவது கோவிலை அசுத்தம் செய்வதாகும் என்ற விதியை எப்படி தைரியமாக உச்சநீதி மன்றத்தில் வாக்குமூலமாக தாக்கல் செய்தார்கள்?

இந்த லட்சணத்தில் தலித் மக்களை எப்படி ஈர்ப்பது என்று சங்க பரிவாரங்கள் திட்டம் தீட்டி வருகிறார்கள்.

அந்த நூல் கோவிலை எப்படி சுத்தி செய்வது என்றும் சொல்கிறது. அதாவது அப்படி ஏதாவது அசுத்தம் ஏற்பட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஒரு சுத்திகரிப்பு; பிராமண பாத தீர்த்தம் – அதாவது பிராமணன் கால் கழுவும் தண்ணீரை தெளிப்பது. மற்றொன்று பிராமணனுக்கு உணவளித்து அவன் சாப்பிட்ட மிச்சத்தை அசுத்தம் பட்ட இடத்தில் வைப்பது.

ஏமாந்தால் இதையும் செய்ய பார்ப்பான் செய்ய தயாராகவே இருப்பான்.

தர்மபுரியில் மலை சாதி மாணவி கற்பழித்துக் கொலை??!!

தர்மபுரி அருகில் ஒரு மலை சாதி மாணவி, வயது 17, இயற்கை கடன் கழிக்கச் சென்ற இடத்தில் அதே சாதியை சேர்ந்த இரண்டு வாலிபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதில் காணப்படும் சமுதாய கொடுமைகள்;

நூற்றைம்பது குடும்பங்கள் வாழும் கிராமத்தில் சுமார் நாற்பது வீடுகளில்தான் கழிப்பறை வசதி உள்ளது. மற்றவர்கள் திறந்த வெளியில்தான் போக வேண்டும்.

கற்பழித்தவர்கள் மிகவும் கொடுமையான முறையில் அரக்கத் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். வாயில் துணியை திணித்து மூச்சு விடாமல் செய்து அந்த தவறை செய்திருக்கிறார்கள். நிர்பயா வழக்கில் இருந்த அத்துணை கொடுமைகளும் இதிலும் நடந்திருக்கிறது.

காவல் துறை மிகவும் கேவலமாக நடந்திருக்கிறது. தாமதமாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் இருந்து   கற்பழிப்பை வெளியில் சொல்லாதே என்று புகார் கொடுத்தவரை மிரட்டியது, அவர்களிடம் செலவுக்கு என்று ரூபாய் ஆறாயிரம் பெற்றது, குற்றவாளி ஒருவனின் தாய் சாராய வியாபாரம் செய்து வந்ததில் காவல் துறையிடம் இருந்த செல்வாக்கை வைத்து அவனை கைது செய்வதில் மெத்தனம் காட்டியது, உடனே மருத்துவமனை கொண்டு செல்லாமல் காப்பகம் கொண்டு சென்று தாமதம் செய்தது என்று காவல் துறை செய்த அக்கிரமங்கள்தான் அதிகம்.  ஆய்வாளரை மாற்றினால் மட்டும் போதுமா?

எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் விசாரணை கேட்டிருக்கிறார்கள்.

விசாரணை நடந்து இனிமேலாவது இத்தகைய கொடுமைகள் நிகழா வண்ணம் அரசு உறுதி செய்ய வேண்டும்.

ரஜினியை எதிர்த்து போட்டியிட கட்சி தொடங்கும் கவுதமன்; காமெடிகளுக்கு பஞ்சமில்லாத தமிழக அரசியல்??!

இயக்குனர் கவுதமன் தமிழ் உணர்வாளர்.

இப்போது படம் ஏதும் செய்வதாக தெரியவில்லை.

போராட்ட குணம் உள்ளவர். சக தமிழ் இயக்கங்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

அவர் நேற்று ரஜினி எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும் அதை நாங்களே நிரப்புவோம் என்றும்  அறிவித்தவர் அதற்காக புதிய அரசியல் கட்சியை தொடங்க போவதாகவும் அறிவித்தார்.

கட்சி பெயர் கொடி எல்லாம் மாநாட்டில் அறிவிக்கப்படுமாம்.

அரசியல் கட்சி தொடங்குவது அவ்வளவு மலிவாக போய் விட்டது.

தமிழர்களை அவமானப்படுத்தியே தீருவது வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் தமிழ் இன விரோதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது. ?

ரஜினியே அரசியலுக்கு வருவது இன்னும் நிச்சயமாகவில்லை.

வந்து என்ன சொல்லப் போகிறார் என்பதும் தெரியவில்லை.

ரஜினி கமல் இருவருமே என்னப்பா உங்கள் கொள்கைகள் என்றால் தலை தெறிக்க ஓடுகிறார்கள்.

இவர் வந்து புதிதாக என்ன சொல்லப் போகிறார்.? எல்லா தமிழ் உணர்வாளர்களும் இப்போது சொல்லிக் கொண்டிருப்பதைதானே இவரும் சொல்லப் போகிறார். அதற்கு ஏன் புதிய கட்சி?

என்று நிற்கும் இந்த காமெடிகள்??!!

ஜெயலலிதாவை விஷம் வைத்து கொன்று விட்டனர்; திண்டுக்கல் சீனிவாசனின் சர்ச்சை பேச்சு??!

ஜெயலலிதா மரணம் குறித்து  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் நடை பெற்று வருகிறது.

அதில் சாட்சிகள் விசாரிக்கப் பட்டு  குறுக்கு விசாரணை செய்யப்பட்டு இன்னும் சில மாதங்களில் தீர்ப்பு  வர இருக்கிறது.

அப்போதும் கூட அதை மட்டும் வைத்தே ஒருவரை சிறைக்கு  அனுப்பி விட முடியாது.

கமிஷன் ஒருவரை குற்றவாளி என்று கூற வேண்டும் அந்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்   ஏற்றுக்கொண்டு அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு  தொடுக்க வேண்டும் அந்த வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் தான் என்று மீண்டும் தீர்ப்பு வர வேண்டும் அதற்குப் பிறகுதான் அவர்கள் குற்றவாளிகள் ஆவார்கள்..

இந்த நிலையில் கமிஷன் விசாரணை நிலுவையில் இருக்கும் போதே அமைச்சர் பொறுப்பில் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா சர்க்கரை நோயாளி அவருக்கு எதை கொடுக்க கூடாதோ அதை வேண்டுமென்றே கொடுத்து ஸ்லோ பாய்சன் கொடுப்பது போல் அவரை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர் என்று நிலக்கோட்டை தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாக மாலை மலர் செய்தி வெளியிட்டிருக்கிறது.

கமிஷன் போட்டது நீங்கள். அதன் முடிவு வரும் முன்னரே நீங்களே தீர்ப்பு சொல்வதாக இருந்தால் ஏன் கமிஷன் அமைக்க வேண்டும்.? நேராக வழக்கு போட்டிருக்க வேண்டியதுதானே?

மறைமுகமாக கமிஷன் இப்படித்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை சொல்வதாகவோ மிரட்டுவதாகவோ ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?

ஏற்கெனெவே பல சர்ச்சை பேச்சுக்களை பேசி கெட்ட பெயர் வாங்கியவர்தான் சீனிவாசன்.

இத்தகையவர்களிடம் தமிழகம் மாட்டிக் கொண்டு இருப்பதுதான் வேதனை  அளிக்கிறது.

வகிக்கும் அமைச்சர் பொறுப்புக்காவது மரியாதை பெற்றுத் தர வேண்டாமா?

பொறுப்பற்றுப் பேசுவதுதான் அமைச்சராவதற்கு தகுதியா?

இப்படி பொறுப்பற்றுப் பேசுபவர்களுக்கு என்ன தண்டனை?    யார் கொடுப்பது?

எம்.ஏ பாடத்திட்டத்தில் இருந்து அண்ணாவின் ‘நீதிதேவன் மயக்கம்’ நீக்கம்?

திராவிட இயக்கத்தின் மீதான மறைமுக தாக்குதல்கள் தொடர்கின்றன என்பதற்கு சாட்சியாக அரசு நடத்தும் அழகப்பா பல்கலை கழகத்தின் எம் ஏ தமிழ் முதுகலை பாடத்திட்டத்தில் இருந்து அண்ணாவின் புகழ் பெற்ற ‘ நீதிதேவன் மயக்கம்’ நாடகம் நீக்கப் பட்டிருக்கிறது.

அந்தப் பல்கலை கழகத்துடன் இணைந்த ஏறத்தாழ  40  கல்லூரிகளில் இருந்து அண்ணாவின் நாடகத்துக்கு பதிலாக அரு.  ராமநாதன் எழுதிய ‘ ராஜ ராஜ சோழன் ‘ இடம் பெரும் என்று அதன் தலைவர் /கல்லூரி வளர்ச்சி குழு , எஸ் ராஜமோகன் அறிவித்துள்ளார்.    அதாவது இந்த முடிவு  Board of Studies ‘  பாடத்திட்ட குழுவின் பரிந்துரையால் எடுக்கப் பட்டதாக அவர் கூறினார்.

இந்த முடிவு எடுக்கப்பட அந்தக் குழு கூறும் காரணம்தான் வியக்கத் தக்கது.    தகுதியானவர்கள் தான் குழுவில் இருக்கிறார்களா என்ற ஐயத்தை அது ஏற்படுத்துகிறது.

அதாவது மாணவர்கள் அண்ணாவின் நாடகத்தை விளக்க போதுமான விளக்க ஏடுகள் ( guides ) கிடைக்காமல் சிரமம் அடைகிறார்கள் என்பதுதான் அந்த காரணம். அவற்றை பெற மாணவர்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறதாம்.

1940 களில் வெளிவந்த இந்த நாடகம் ராமாயண மகாபாரத படிப்பினைகள் குறித்து ஒரு நீதிபதியுடன் உரையாடுவது. இதற்கு ராமாயணம் மகாபாரதம் தெரிந்தால் போதுமே.  அதுதான் நாடு முழுதும் அறியப் பட்டதாயிற்றே? ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பற்றி கேள்விகள் கேட்கப் படக் கூடாது என்று நினைப்பவர்கள் தான் திட்டமிட்டு இந்த நூலை அகற்றி இருக்கிறார்கள்.

பாமரரும் அறியும் வண்ணம் அண்ணா இயற்றிய அந்த நாடகம் எதிர்கால சந்ததியினருக்கு போய் சேரக் கூடாது என்று கயவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள் .

எதிர்ப்பு கிளம்பிய பின் டீன் ராஜமோகன் நாங்கள் மீண்டும் அண்ணாவின் நாடகத்தை பாடப் புத்தகத்தில் வைக்கத் தயார் என்றும் முன்பு அனுப்பிய சுற்றறிக்கையை செல்லாது என்று அறிவிக்க இருப்பதாகவும் கூறுகிறார்.

மீண்டும் வைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்பதை ஊகித்து இப்போதைக்கு அவர்கள் பின்னால் சென்றாலும் மீண்டும் வரலாற்றை மறைக்க முயற்சிப்பார்கள் என்பது உறுதி.

அண்ணாவின் வேலைக்காரி  , ஓரிரவு,  கம்பரசம் போன்ற  படைப்புகள் திராவிட இயக்க வளர்ச்சியில் மகத்தான பங்காற்றியவை.

இந்த சூழ்ச்சியாளர்கள் , மத்திய அரசின் ஊது குழலாக ஆட்சி செய்யும் அதிமுக அரசு ஆட்சியில் இருப்பதை பயன்படுத்தி இந்த கேவலமான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

வரலாற்றை மறைக்க முற்படுவோர்  தோல்வியே காண்பர்.

பெரியாரை இழிவு படுத்த இ.வெ.ராமசாமி நாயக்கர் என்று சாதிபெயருடன் பிழையான வினாத்தாள்?!

பெரியாரை இழிவு படுத்த என்றே ஒரு கூட்டம் அலைகிறது.

தமிழ்நாடு  அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தப் பட்ட குரூப் 2 தேர்வுத் தாளில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்று ஒரு கேள்வி.

அதற்கு 1. இ.வெ.ராமசாமி நாயக்கர் 2. ராஜாஜி  3. காந்திஜி  4. சி.என் அண்ணாதுரை என்று பதில் தயாரித்திருக்கிறது ஆணையம்.

ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்பதுதான் ஈ.வெ.ரா. என்பது கூட தெரியாமல் கேள்வித்தாள் தயாரித்திருப்பார்கள் என்று யாரும் நம்ப மாட்டார்கள்.

தெரிந்தே தான் இழிவு படுத்தியிருக்கிறார்கள். வாழ்நாள் முழுவதையும் சாதி ஒழிப்பையே லட்சியமாக கொண்டு வாழ்ந்தவர் பெரியார். சாதிக்கு மூலமாக மதம் இருப்பதால்தான் மதத்தையும் அதற்கு மூலமாக இருக்கும் கடவுளையும் நிராகரித்தார். தன்னை சாதி ஒழிப்பு கிளர்ச்சிக்காரன் என்றே அடையாளப்படுத்திகொண்டார்.

அப்படிபட்டவரும் சாதி உணர்வாளர்தான் என்று நிலை நாட்ட முயற்சிக்கிறார்கள்.  இதைவிட அயோக்கியத்தனம் என்ன இருக்க முடியும்?

அதிலும் ராஜகோபாலாச்சாரியை ராஜாஜி என்றும் மகாத்மா காந்தியை காந்திஜி என்றும் குறிப்பிட்டவர்கள் அண்ணாவை சி என் அண்ணாதுரை என்றும் பெரியாரை ராமசாமி நாயக்கர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றால் கேள்வி தயாரித்தவர்கள் மனதில் எத்தனை வன்மம் இருந்திருக்க வேண்டும்.?

அண்ணா என்று குறிப்பிடவும் பெரியார் என்று எழுதவும் அவர்களுக்கு மனமில்லை.

இதற்கு ஆணையத்தின் செயலாளர் நந்தகுமார் வருத்தம் தெரிவித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்  படும் என அறிவித்திருக்கிறார்.    வினாத்தாள் தயாரிக்கும் பணி அனுபவம் மிக்க பேராசிரியர்களால் தயாரிக்கப் பட்டு மேலும் பலரால் சரி பார்க்கப் பட்டு பின்னால்தான் இறுதி  செய்யப் படுகிறது. அதில் எப்படி  இந்த தவறு தெரியாமல் நடந்திருக்க முடியும்?

மேல்சாதி வெறியர்கள் யார் இந்த பணியில் இருந்தார்கள் என்று ஆய்ந்து கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் எதிர்காலத்தில் இது போன்று செய்ய முடியும் என்ற எண்ணமே எழாமல் செய்ய முடியும்.

தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்திருக்கிறார் .

இதுபற்றி அமைச்சர்கள் யாரும் வாய் திறக்க வில்லையே ஏன்?

கமலின் தேவர் மகன் 2 விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி??!!

கமல்ஹாசன்  சிவாஜி கணேசன் நடித்த தேவர் மகன் பெரிய வெற்றியை பெற்றது.

அதற்கடுத்து கமல் ஹாசன் சண்டியர் என்ற தலைப்பில் படம் எடுக்க முனைந்தபோது அப்போதும் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.   படத்தின் பெயர் விருமாண்டி என மாற்றப் பட்டு வெளியாகி வெற்றி பெற்றது.

கமல் ஒரு சினிமா வியாபாரி. எந்த   சாதியையும்  தூக்கி பிடிப்பது அவரது வேலையல்ல.   எதை சொன்னால் யாரிடம் வெற்றி பெரும் என்ற கணக்கே சினிமாவை தீர்மானிக்கிறது.   எல்லா சாதிகளையும் தனக்கு உழைக்க வைப்பதே அவரது இலக்கு.

இப்போது மார்கெட் இழந்த நிலையில் எதையாவது செய்து மீண்டும் வெளிச்சத்தில் நிற்க பணம் சம்பாதிக்க பார்ப்பது அவரது நோக்கம்.  அதில் விளைந்ததுதான் தேவர் மகன் 2  திரைப்படம்.

அதையும் எதிர்த்து விளம்பரம் தேடவும் முக்கியத்துவம் பெறவும் டாக்டர் கிருஸ்ணசாமி முயற்சித்திருக்கிறார்.

தனது அறிக்கையில் ——மகன் 2 திரைப்படம் எடுக்கப் போவதாக அறிவித்து இருக்கிறீர்கள் என்று கமலுக்கு கடிதம் எழுதுகிறார். தேவர் என்ற பெயரை தவிர்த்து எழுதுகிறார்.

இதே கிருஷ்ணசாமி சபாஷ் நாயுடு என்ற பெயரில் படம் எடுக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆக அவர் சாதிக்கு  எதிராக இல்லை.    குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே தான் எதிரி என அறிவித்துக் கொள்கிறார். இது நல்லதா நல்ல விளைவுகளை ஏற்படுத்துமா என்பதை அவர்தான் சிந்திக்க வேண்டும்.

தேவேந்திரர் மகன் என்று படம் எடுங்கள் என்றும் கோருகிறார். எடுத்தால் படம் நன்றாக ஓடும் என்றும் கூறுகிறார். யாரையும் இப்படி கட்டாயப் படுத்த முடியும் என்று பேசுவதும் எழுதுவதும் சட்டப்படி சரியா என்பது கேள்விக்குறி.

பார்வர்டு ப்ளாக் தலைவர் கதிரவன் ஆட்சேபணை தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சாதி ஒழிய வேண்டும் என்று நோக்கம் கொண்டவராக இருந்தால் முதலின் அவர் தேவேந்திரர் சாதி அமைப்பிலிருந்து வெளி வர வேண்டும். சாதியை சட்ட பூர்வமாக ஒழிப்பது பற்றி ஒத்த கருத்துக் கொண்டவர்களோடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் சாதியை சட்ட பூர்வமாக ஒழிக்க முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. ஆனால் அரசியல் தலைவர்கள் சாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சாதி மோதலுக்கு வழி ஏற்படுத்தி  விடக்கூடாது.

கனன்று கொண்டிருக்கும் ஏரி  தழலைப் போன்றது சாதிய உணர்வுகள்.   அதை அணைக்க முயற்சிக்க வேண்டுமே தவிர ஊதி பெரிதாக்க எந்த வகையிலும் முயற்சிக்க கூடாது.

யாரும் தங்களை உயர்த்தி பெருமை பேசுவது கூட தவறில்லை.   தேவேந்திரர் சாதிப் பெருமையை மட்டுமே அவர் முன்னிருத்தினால் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.    பிறரை தாழ்த்திப் பேசும்போது பிரச்னை எழும்.

இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருக்கும் அவருக்கு இது தெரியாதா.   நிச்சயம் தெரியும்  . தெரிந்தே அரசியல் ஆதாயம் அடைய சாதியை  பயன் படுத்துகிறார் .

பொதுவாகவே சாதிப் பெயரில் சினிமா எடுப்பதை பொது மேடை எதிர்த்தே வந்திருக்கிறது.    சபாஷ் நாயுடு விளம்பரம் வந்தபோது நாம் கண்டித்தே எழுதினோம்.

அந்த வகையில் கமல் எந்த சாதியை வைத்தும் சினிமா எடுக்க வேண்டாம்.   அதேநேரம் டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்கள் சாதிப் பூசலை ஊதிப் பெரிதாக்கும் முயற்சியிலும் இறங்க வேண்டாம்.

பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இது போன்ற பிரச்னைகள் .   சாதாரணமானவர்கள் தயாரிக்கும் எந்த படமும் பிரச்னைக்கு உள்ளாவதில்லை.

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஒரு வேண்டுகோள்;  தேவர்-தேவேந்திரர் இடையே நல்லிணக்கத்தை , ஒற்றுமையை   நிலைப்படுத்த உறுதி பூணுங்கள்.    உங்களைப் போன்ற படித்தவர்கள் இதைசெய்யத் தவறினால் காலம் உங்களை மன்னிக்காது.

இத்தனை சோதனைகளுக்கு இடையிலும் இருவரும் இணைந்து தான் வாழ்கிறார்கள்.  இனியும் வாழ்வார்கள்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இன்றில்லை.   இன்றிக்கும் ஒருசில பிணக்குகளும் நாளை இருக்காது.

தாழ்த்தப் பட்ட பிரிவினரில் அருந்ததியருக்கு தனி ஒதுக்கீட்டை எதிர்த்து தனது பெரிய மனதை வெளிக் காட்டியவர்தான் டாக்டர் கிருஷ்ணசாமி.

டாக்டர் கிருஷ்ணசாமிகள் நல்லது பேசட்டும்.    அல்லது பிரச்னைகளை உருவாக்காமல் செயல்படட்டும் .

 

அரபு நாடுகளில் தினமும் 10 இந்தியர்கள் சாகிறார்கள் ?! என்ன செய்கிறது இந்திய வெளி உறவுத் துறை?

அதிர்ச்சி. ஆனால் உண்மை.

பக்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, அரபு எமிரேட்ஸ்  ஆகிய 6  அரபு நாடுகளில் பணி புரியும் இந்தியர்களில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சராசரியாக தினமும் 10 பேர் இறந்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி செய்தியை ஆர் டி ஐ என்ற தன்னார்வ அமைப்பை சேர்ந்த வெங்கடேஷ் நாயக் என்பவர் மத்திய  மனித உரிமைகள் மற்றும் பொது நல அமைப்பில் புகாராக தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்த புள்ளி விபரப்படி 2012 ம் ஆண்டு முதல் இதுவரை அரேபிய நாடுகளில் 24570  இந்தியர்கள் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவர் ராமதாஸ் இது பற்றி ஒரு அறிக்கை வெளியுட்டுள்ளார்.   வளைகுடா நாடுகளின் மொத்த மக்கள் தொகையான 5.49  கோடியில் 25,000 பேர் இறந்தது சாதாரணமானதல்ல.

கத்தார் அரசு வெளியுட்டுள்ள அறிக்கையில்  80%   இயற்கை மரணங்கள் 14 %    விபத்துக்கள்  6% தற்கொலைகள் என்றும் குறிப்பிடுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளமுடியாது.

இந்த ஆறு நாடுகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் கோடிக்கும் மேலாக இந்தியாவுக்கு வருமானம் வந்திருக்கிறது என்பதற்காகவாவது அவர்களில் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டாமா?

மருத்துவர் ராமதாஸ் கூறியதுபோல் வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக ஒரு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி யாக வேண்டும்.

நல்ல உடல் நலத்துடன் தான் ஒருவர் வெளிநாடு பயணம் மேற் கொள்ள முடியும்.  அவர்கள் திடீர் என்று  இயற்கை  மரணம் எய்தினர் என்று எப்படி ஏற்றுகொள்ள முடியும்?.

கேரளம் தமிழ்நாடு தெலுங்கானா,  ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கிறார்கள்.

மிகவும் கவலை  அளிக்கக் கூடிய தகவல்கள் இவை. இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு தேடும் இந்தியர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி!!!

விஜயின் ‘சர்காரை’ மிரட்டும் அமைச்சர் கடம்பூர் ராஜு??!!

விஜயின் ‘சர்கார் ‘ படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி  சமரசம் ஆகி ஒரு வழியாக வெளியாகி  விட்டது.

ஆனால் புது சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளது. அதாவது படம்  அதிமுக ஆட்சியையும் அதன் இலவச திட்டங்களையும் தவறாக சித்தரிப்பதாகவும் அவைகளை நீக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் முதல் அமைச்சரை கலந்து கொண்டு தேவையான நடவடிக்கை களை எடுக்க இருப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

படம் மொத்தமும் அதிமுக வை சுற்றியே வருகிறது. ‘அனைத்து இந்திய ‘ அடைமொழியுடன் கூடிய கட்சி பெயர், இலவசங்களை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவது, சிகிச்சையில் இருக்கும்  தலைவருக்கு மகளே அதிக மாத்திரைகளை கொடுத்து இறப்புக்கு காரணமாக இருப்பது, தலைவரின் சமாதி கடற்கரையில் இருப்பது அங்கே மனைவி செல்வது, கொலைக்கு  சாட்சியாக மனைவியே வாக்குமூலம் தருவது, ஆட்சிக்கு வந்தபின் தலைவரின் இறப்புக்கு காரணமான மகளை சிறைக்கு அனுப்புவது  என்று ஏறத்தாழ அதிமுக கட்சியின் நிகழ்வுகளை போன்றே சம்பவங்கள் கட்டி எழுப்பப் பட்டிருக்கின்றன. வரலட்சுமியின் தோற்றம் சசிகலாவை ஒத்தது என்கிறார்கள்.

பொது மக்களை எப்படி இந்த படம் ஈர்க்கப் போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எந்த படமும் இரண்டு மூன்று வாரங்களுக்கு மேல் ஒருவது இல்லை. அதற்குள் வசூலை எடுத்து விட வேண்டும்.

அரசியல் நேர்மை பற்றி பேசும் படம்  திரையில் காட்டப்படுவதில் எத்தனை ஊழல்?  ரசிகர் மன்றங்கள்  டிக்கெட் விலையை ஏற்றி விற்பது மட்டுமல்ல தியேட்டரே அதிக விலைக்கு விற்க கட்டாயப்படுத்தப்படுகிறதே அது என்ன வகை நேர்மை?

என்ன வகையான அரசு அமைய வேண்டும் என்பதை சொல்லாமலேயே படம் முடிகிறது. எல்லாரும் சொல்லும் மக்கள் நல அரசு அமைய நல்லவர்களை தேடி கொண்டுவருவோம் என்கிறார்களே அவர்கள் எப்படி கிடைப்பார்கள்?

மக்கள் அத்தகையவர்களை தேர்ந்து எடுக்கத்தான் தேர்தல். அதற்குத்தான் போட்டி? மக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்கக்  கூடாது என்ற குரல் ஏன் அழுத்தம் தந்து கூறப் படவில்லை?

எது எப்படியானால் என்ன? வசூல் தானே ‘சர்காரின்’ இலக்கு!

ரிசர்வ் வங்கியில் ஆதிக்கம் செலுத்த திட்டமிடும் மோடி அரசு – துணை போகும் ஆர் எஸ் எஸ்?!

ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் மத்திய அரசு  ஆதிக்கம் செலுத்த நினைப்பது விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று வங்கியின் துணை இயக்குனர் விரால் ஆச்சார்யா பேசியது புயலை கிளப்பி  விட்டு விட்டது.

அதற்குப் பிறகு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி  2008 முதல் 2014 வரை வங்கிகள் வரையறை இன்றி கடன் கொடுத்து நாட்டின் நிதி நிலைமையை மோசமாக்கி விட்டதாக குற்றம் சாட்ட பிரச்னை எரிய தொடங்கியது.

ரிசரவ் வங்கியின் சட்டப் பிரிவு 7 ன் கீழ் மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் பேச்சு வார்த்தை நடத்தி தாக்கீதுகள் கொடுக்க வகை செய்கிறது. ஆனாலும் இதுவரை இந்த சட்ட பிரிவை எந்த மத்திய அரசும் பயன்படுத்தியதில்லை.

ஏனென்றால் அந்த பிரிவின் முதல் பகுதியில் ஆலோசனை செய்யும் உரிமையை பயன்படுத்த அந்த பிரிவை பயன்படுத்தி தான் பேச வேண்டும் என்று இல்லை.

இதுவரை எல்லா அரசுகளும் பேசித்தான் வந்திருக்கின்றன. ஆனாலும் சட்டப்படி பேசுவோம் என்று அழைத்ததில்லை. ஏனென்றால் அந்தப் பிரிவில் ஏதேனும் தாக்கீது தர வேண்டும் என்றால் தான் அந்த பிரிவை பயன்படுத்தி கட்டாயப்படுத்தவேண்டும். அதற்கு அவசியமே இல்லாமல் கலந்து பேசி முடிவுகளை மேற்கொள்வதுதான்  நல்லது. அந்தப் படியான சுமுக உறவு இதுவரை பேணி வந்திருக்கிறார்கள்.

நேரு காலத்திலேயே இந்த பிரச்னை வந்தபோது மத்திய அரசோடு கலந்து உரையாடி  முடிவுகளை மேற்கொள்ளும்போது மட்டும்  ரிசர்வ் வங்கி தன்னாட்சி பெற்ற அமைப்பாக இயங்க  வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது. மத்திய அரசு  ஒருபக்கமும் ரிசர்வ் வங்கி ஒரு பக்கமுமாக பயணிக்க முடியாது அல்லவா என்று  விளக்க வேறு  தரப் பட்டது.

இப்போது பாஜக அரசுக்கு  ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள நிதி மத்திய அரசின் திட்டங்களுக்கு  தேவை.  அந்த  தேவை வங்கித்துறை அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ( Non banking Finance Companies )  உரியது. ஆம். அவை வாராக் கடன்களின் தாக்கத்தால் நிலை குலைந்து போய் கிடக்கின்றன.

அவைகளை தூக்கி நிறுத்து துடிக்கிறது மத்திய அரசு. அதற்கான நிதியைப் பெறத்தான் ரிசர்வ் வங்கி தனது கட்டுப் பாடுகளை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.

ஏதோ சிறு குறு மத்திய நிதி நிறுவனங்களுக்கு உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்கு ரிசர்வ் வங்கி முட்டுக்கட்டை போடுவது போலவும் ஒரு பிம்பத்தை உருவாக்க மோடி  அரசு விரும்புகிறது. ஆனால் உண்மை அதுவல்ல என்கிறார்கள். ரிசர்வ் வங்கியின் கையிருப்பு நிதியில் கை வைத்தால் அது விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று அஞ்சுகிறார்கள் ரிசர்வ் வங்கி இயக்குனர்கள்.

வருகிற  19 /11/2018  ல் நடைபெற இருக்கும் வங்கியின் நிர்வாக குழு கூட்டத்தில் இது பற்றி பொறி பறக்கலாம். வங்கியின் மத்திய குழுவில் இடம் பெற்றிருக்கும் ஆர் எஸ் எஸ் சார்புள்ள ஆடிட்டர் குருமூர்த்தி சதீஷ் மராத்தே போன்றவர்கள் இதற்கான அழுத்தத்தை கொடுக்க முயற்சிக்கலாம்.

எட்டப்படப் போகும் முடிவு நாட்டின் நிதிநிலையை பாதுகாக்கும் விதத்தில் அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.