Home Blog Page 58

காற்றில் பரந்த உச்ச நீதிமன்ற தடை; ஓயாமல் வெடித்த பட்டாசுகள்??!!

காலையில் ஒரு மணி நேரம் இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்த ஆண்டு ஏட்டில் தான் இருந்தது.

இன்று சென்னை மாநகரில் மாலை ஆறு மணிக்கு வெடிக்க தொடங்கிய பட்டாசு வெடி சத்தங்கள் குறையவே இல்லை.

நெல்லை போன்ற சில இடங்களில் சிலர் காவல் துறையினர் நேரம் தாண்டி பட்டாசு வெடித்ததாக கைது செய்து பிறகு எச்சரித்து அனுப்பி இருக்கின்றனர். நீதிமன்றம் கேட்டால் அல்லது ஊடகங்கள் கேள்வி எழுப்பினால் நாங்களும் நடவடிக்கை எடுத்தோம் என்று சொல்லலாம் அல்லவா?

அடுத்த ஆண்டு சிறு குறு பட்டாசு ஆலைகள் இருக்குமா என்பது சந்தேகமே. ஏன் என்றால் மத்தாப்பு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் வேதிப் பொருளான பேரியம் பயன் படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதற்கு மாற்றான ரசாயன பொருள் என்னவென்று ஆராய்ச்சி நிறுவனங்கள் தான் சொல்ல வேண்டும்.

பெரிய முதலீட்டில் இயங்கும் ஆலைகள் மட்டுமே இனி கட்டுபபாடுகளை மதித்து பட்டாசு உற்பத்தி செய்ய முடியும். சிறிய ஆலைகள் இயங்கவே முடியாது.

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் 900 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இனி எப்படி இயங்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழக அரசு இதுவரை எந்த முன் முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை .

உச்ச நீதிமன்றம் இது போன்ற உத்தரவுகளை இடும்போது அமுல்படுத்தப்படும் சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து அதன் பின் உத்தரவிட்டால் தான் அவற்றிற்கு மதிப்பிருக்கும்.

தீப ஒளித்திருநாள் மதம் சார்ந்தது அல்ல !!!

தீபாவளியை கொண்டாடுகிறவர்கள் பெரும்பாலானவர்கள் எதை மனதில் வைத்து கொண்டாடுகிறார்கள்?

தீமை என்ற இருள் அகன்று  அனைவரது வாழ்விலும் ஒளி தோன்ற வேண்டும் என்பதே அனைவரும் விருப்பமும் வேண்டுதலும்.

மனிதர்கள் வாழ்வில் சந்திக்கும் எண்ணிலடங்கா பிரச்னைகளை ஒருநாளேனும் மறந்து குடும்பத்தாருடன் சுற்றத்தாருடன் நட்புகளுடன் கொண்டாடி மகிழ்வதே தீப ஒளித்திருநாள் .

இதற்கு எதற்கு மதச்சாயம்?  தொடக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.  எத்தனை பேர் மதம் சார்ந்த சிந்தனைகளை இன்று பாராட்டுகிறார்கள்?

புராணக் கதைகளை இன்று நினைவு கூர்வோர் மிகச் சிலபேர்தான். மகாவிஷ்ணுவுக்கும் பூமாதேவிக்க்கும் பிறந்த நரகாசூரனை அவனது தாயின் அம்சமான சத்தியபாமா கொல்வதுதான் புராணக் கதை. அதாவது தாயே மகனைக் கொன்றதுதான் தீபாவளி பண்டிகை. அவன் இறந்த நாளை கொண்டாட அவனே கேட்டுக்கொண்டனாம்.

இதையே வட மாநில மக்கள் ராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நாளை வீடு தோறும்  தீபங்களை ஏற்றி தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.  வங்காளத்தில்  காளி பூஜை செய்யும் நாளாகவும் குரு கோவிந்த் சிங் சீக்கிய அமைப்பான கால்சாவை அமைத்த தினமாகவும் புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற தினமாகவும் மாவலி சக்கரவர்த்தி முடிசூடிய தினமாகவும் இன்னும் பல்வேறு நிகழ்வுகளை முன்னிறுத்தியும் தீப ஒளித்திருநாள் கொண்டாடப் படுகிறது. எனவே இதற்கு மத சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை. இந்த புராணக்கதைகளை தீபாவளி கொண்டாடுவோர் நினைவு கூறுகிறார்களா என்றால் இல்லை என்று உறுதியாக  கூறலாம்.

அதை அங்கீகரிக்காதவர்கள் தான் பெரும்பான்மை. ஆனால் அவர்கள்தான் தீபாவளிதிருநாளை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

பழக்கப் பட்டு விட்டார்கள்.  வெந்நீரில்  எண்ணெய்குளியல், புத்தாடை,  இனிப்புகள் பண்டிகையுடன் இரண்டற கலந்து விட்டன. பாரம்பரியமாக கொண்டாடுவதை ஏன் நிறுத்த வேண்டும்? அந்த மகிழ்ச்சி குடும்பத்துக்கு சொந்தமானது. ஏன் அதை தவிர்க்க வேண்டும்.?

பட்டாசுகள் தீபாவளியின் ஒரு அங்கமாக சில நூற்றாண்டுகளாக உருவாகி இருக்க வேண்டும். சீனாவில்  தோன்றிய பட்டாசு இந்தவுக்கு இறக்குமதி ஆகி சில பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும்.  அதற்கும் பூர்விக பண்டிகைக்கும் சம்பந்தமே இல்லை.  அதிலும் இப்போது உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கே பிறகு பட்டாசின் மகத்துவம் சிறிது சிறிதாக குறையும்.

தீபாவளி வாழ்த்து சொல்லும் அரசியல் தலைவர்கள் கூட புராண சம்பவங்களை மேற்கொள் காட்டுவதில்லை.  அறியாமை இருள் அகல, துன்பம் நீங்க  , மகிழ்ச்சி  பொங்க என்று பொதுவாகத்தான் குறிப்பிடுவார்கள்.  அதிலும் திமுக, கம்யுனிஸ்டு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து சொல்வதில். அதில் பார்ப்பனீய மதத்தின் புராண கதைகள் தொடர்பிருப்பதால் வாழ்த்து சொல்வது அங்கீகரிப்பது ஆகிவிடும் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏனைய மதம் சார்ந்த விழாக்களுக்கும் தீபாவளிக்கும் இருக்கும் வேற்றுமைகள் ஏராளம்.

அவற்றை மனதில் கொண்டு  தீபாவளியை மதம் சாராத பண்டிகையாக மற்றும் ஒரு பொங்கல் விழாவாக கொண்டாடுவதே தமிழர்களுக்கு சிறப்பு .

எந்த குறிப்பிட்ட இறைவனையும் வணங்க வேண்டியதில்லை. தீபத்தை ஏற்றி   ஒளியை மட்டுமே வணங்கினால் கூட போதுமே.

தமிழில் கேள்வித்தாள் தயாரிக்க முடியாத அரசுப் பணியாளர் தேர்வாணையம் ?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசுத் துறைகளில் உள்ள பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என்று அறிவித்திருப்பது அவமானகரமானதாகும் .

தமிழில் கேள்வித்தாள் தயாரிக்கப்படாததை காரணமாக கூறியிருப்பது ஒழுங்கு நடவடிக்கை  எடுக்கத்  தக்க தவறுதல். ஆங்கிலத்தில் தீர்வு நடக்கும் என்றால் அதையே தமிழில் மொழிமாற்றம் செய்ய என்ன பிரச்னை? இதை செய்ய தவறிய அதிகாரி மீது என்ன நடவடிக்கை? இது தவறுதலா அல்லது திட்டமிட்ட சதியா?

தமிழ்நாட்டில் தமிழில் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாது என்று கூறுவது அவமானமில்லையா?

இதை மிகவும் சாதரணமாக கூற தேர்வாணையம் தயங்கவில்லை.

ஏன் சில வாரங்கள் கழித்து தமிழில் கேள்வித்தாள் தயாரித்து தேர்வு நடத்தக் கூடாது?

தேர்வாணையம் தவறை திருத்திக்கொள்ளாவிட்டால் போராட்டம் அறிவித்திருக்கிற மருத்துவர் ராமதாஸ் பாராட்டுக்குரியவர்.

தமிழக அரசில் ஒளிந்திருக்கும் இந்த தவறுக்கு காரணம் ஆன கறுப்பாடுகள் களைஎடுக்கப்படவேண்டும் !!

சமஸ்கிருதத்துக்கு பல்கலைக்கழகங்களில் முக்கியத்துவம் தரும் பாஜக அரசு???!!!

சமஸ்க்ரிதத்தை எப்படியாவது எல்லா பல்கலைக்கழகங்களிலும் திணித்து விட மத்திய பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது.

மத்திய மனிதவள அமைச்சகம் இதற்கு செயல்வடிவம் கொடுத்துள்ளது.

ராஷ்ட்ரிய சமஸ்க்ரித சந்ஸ்தான் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய வித்யா பீடம் இரண்டும் இணைந்து தேசிய அளவில் சமஸ்க்ரிதத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் கீழ் வரும் 41 பல்கலை கழகங்களில் இந்த செயல் திட்டத்தை உடனடியாக நடைமுறைபடுத்த நாடாளுமன்ற சிறப்பு சட்டம் ஒன்றை கொண்டு வரவும் திட்டம் இடப்பட்டுள்ளது.

இங்கெல்லாம் சமஸ்க்ரித இளங்கலை முதுகலை வகுப்புகள் துவங்கவும் மாணவர்களுக்குக் சிறப்பு சலுகைகள் தர வழி வகுக்கும்.

2014-ல் முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் சமஸ்க்ரித மேம்பாட்டு திட்டத்தை அவர் கொடுத்திருந்தார். அவர் பரிந்துரைகள் இப்போது அமுல் படுத்தப் பட போகின்றன.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிக்கு பதிலாக அண்ட் இடத்தில் சமஸ்க்ரிதத்தை கட்டாய மொழியாக ஆக்கினர்.

ஸ்மிருதி இரானி மனிதவள துறை அமைச்சராக இருந்தபோது ஐஐடி-க்களில் சமஸ்க்ரித ஆய்வேடுகள் குறித்து புதிய பிரிவு ஒன்றை துவக்க ஆணை இட்டிருந்தார். அதை இப்போது அமுல்படுத்த மத்திய அரசு திட்டம் இட்டுள்ளது.

அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  இது ஒன்றும் பிற மொழிகளுக்கு எதிரான நடவடிக்கை  அல்ல என்று கூறியிருந்தார். சில மத்திய பல்கலைகழகங்கள் உருது மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று தற்போது சம்ஸ்க்ருததுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினாலும் ஏன் இதே போன்ற முக்கியத்துவம் பிற மொழிகளுக்கு கொடுக்க கூடாது என்பதற்கு விளக்கம் ஏதும் அவர் தரவில்லை.

41 பல்கலை கழகங்களில் சமஸ்கிருதம் வளர்க்கப்பட மட்டும் அல்ல டெல்லி ராஷ்ட்ரிய சம்ஸ்க்ருத சந்ஸ்தான் இந்தியா முழுதும் 60 க்கும் மேற்பட்ட கல்வி  நிலையங்களை நடத்தி வருகிறது. இது மத்திய அரசின் கீழ் வரும் நிறுவனம்.        2015-லேயே பல்வேறு கல்வி நிறுவனங்களில் சமஸ்க்ரித வகுப்புகள் துவங்க மத்திய அரசு வலியுறுத்தியதும் குறிப்பிடத் தக்கது.

எல்லாம் சரி. சமஸ்க்ரிதம் படித்த எல்லா சாதி மாணவர் களுக்கும் இதனால் வேலை  வாய்ப்பு அதிகரிக்குமா? அல்லது அவர்களை வர்ணாசிரம தர்ம அடிமைகளாக உருவாக்க மட்டுமே இது பயன்படுமா?

மத்திய அரசின் மொழி வளர்ச்சி நிதி எல்லா மொழிகளுக்கும் சரி சமமாக வழங்கப் படுகிறதா?

பட்டாசுத் தொழிலும் நடைமுறைப் படுத்தவே முடியாத உச்ச நீதிமன்ற தீர்ப்பும்?

இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி அமுல் படுத்தப்படப் போகிறது என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது .

பட்டாசுகள் எழுப்பும் ஒலி 120 டெசிபலுக்கு கீழாகத்தான் இருக்க வேண்டும் என்பது நியாயமான கட்டுப்பாடு .

ஒரே ஒருநாள் பட்டாசுகள் வெடிப்பதால் மாசு ஏற்பட்டு விடும் என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

லட்சக்கணக்கான ஆலைகளும்  கோடிக்கணக்கான மோட்டார் வாகனங்களும் ஏற்படுத்தாத  மாசை ஒருநாள் வெடிகள் ஏற்படுத்தி விடும் என்பது ஏற்றுக் கொள்ளக் முடியாத ஒன்று.

பசுமை பட்டாசுகள் தான் இனி வரும் ஆண்டுகளில் இருக்கும் என்பதும் அதை அமுல் படுத்த பட்டாசுத் தொழில் இருக்குமா என்பதும் அடுத்த கேள்விக்குறி. பசுமை பட்டாசுகளை வியாபார ரீதியில் லாபகரமாக தயாரித்து நடத்த முடியுமா என்பதும் சந்தேகம்தான். முடிந்தால் நல்லதே!!!

தீபாவளி தவிர ஏனைய பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள் வருமா அல்லது இந்த வரையறையே அவற்றிற்கும் பொருந்துமா என்பதும் தெரியவில்லை.

காலை 4 மணி முதல் 5 வரையிலும் அதன் பின் இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் வெடிக்கலாம் என்ற உத்தரவு எப்படி அமுல்படுத்தப் படும் என்பதுதான் மிகப் பெரிய சவால்.

இதை அமுல்படுத்த காவல் துறைக்கு போதிய பலம இருக்கிறதா?

யார் மணியை கண்காணிப்பது? மீறி வெடிப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் படும். எடுத்தால் குழந்தைகள் மீதுதான் எடுக்க வேண்டும். அடு சாத்தியமா? ஏனென்றால் வெடிகள் வெடிப்பது பெரும்பாலும் குழந்தைகள்தான். இதையெல்லாம் சிந்திக்காமலா உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கும்!

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளுக்கு மூடு விழா நடத்த அரசும் நீதிமன்றங்களும் தீர்மானித்து விட்டனவா என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இந்த கட்டுப்பாடுகள் ஏனைய நாடுகளில் இருக்கின்றனவா? அங்கெல்லாம் இல்லாத புதிய கட்டுப்பாடுகள் இங்கு மட்டும் எதற்கு?

நம்மை பொறுத்தவரை தீபாவளி பண்டிகையே கொண்டாடப்பட வேண்டிய ஒன்றா என்பதில் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன.

இருந்தாலும் கொண்டாடுபவர்கள் உரிமை பற்றித்தான் நாம் பேசுகிறோம்.

அமுல்படுத்தப்படும் என்ற எந்த நம்பிக்கையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது?

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது இந்த பட்டாசுத் தீர்ப்பு??!!

ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்த வல்லபாய் படேலுக்கு உலகின் உயரமான சிலை; மோடி திறந்தார்!!!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் பல சிறப்புகளுக்கு உரியவர்.

அப்போது  550 க்கும் மேற்பட்ட குறுநில அரசுகள் அதாவது சமஸ்தானங்கள் இருந்தன. அத்தனையையும் தனது சாதுர்யத்தால் பேசியே இணைத்தவர். அதாவது அதுவரை இந்தியா ஒன்றாக இல்லை. இணைய மறுத்த ஹைதராபாத் நிஜாம் ஜுனாகத் நிஜாம் ஆகியோரை வல்லமையால் இணைய வைத்தவர். அதிலும் ஹைதராபாத் குறுநில அரசை இணைக்கும் போரில் ஏறத்தாழ 40,000-க்கும் அதிகமானோர் கொல்லப் பட்டனர். ஜுனகத் குறுநில அரசை மக்களின் வாக்குப்படி இணைய வைத்தார்.    ஜுனாகத் அரசின் பெரும்பாலான மக்கள் இந்துக்கள். மன்னர் முஸ்லிம். அங்கே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அரசு இணைக்கப்பட்டது. காஷ்மீர் மன்னர் இந்து. பெரும்பாலான மக்கள்  முஸ்லிம். வாக்கெடுப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டு  இன்னும் முழுமையாக தீர்க்கப் படாத பிரச்னையாக காஷ்மீர் நீடிக்கிறது.

நேரு குடும்பம் படேலுக்கு தகுந்த மரியாதை தரவில்லை என்ற குறை இருந்தது.  எல்லா அரசின் திட்டங்களுக்கும் அவர்கள் குடும்ப பெயரையே வைத்துக்கொண்டார்கள் .

அதேபோல் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் தகுந்த மரியாதை தரப்படவில்லை என்ற குறை பரவலாக இருக்கிறது.

அவருக்கு நர்மதை நதிக்கரை ஓரம் 597 அடி ( 182 மீட்டர் ) உயரத்தில் உலகின் மிக உயரமான சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

விவசாய குடும்பத்தில் பிறந்த சாதாரண மனிதர் இரும்பு மனிதராக விளங்கி புகழ் பெற்றது பெருமைதான்.

இன்னொரு பெருமையும் அவருக்கு  உண்டு. மகாத்மா காந்தி சுடப்பட்டு இறந்தவுடன் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தடை செய்யப் பட்டது. அதைசெய்தவர் வல்லபாய் படேல்தான்.

தடையை நீக்க கோரி சங்கம் படேலுடன் கடித போக்குவரத்து நடத்தியது. கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றது.

பதில் எழுதினாராம் வல்லபாய் படேல்’ கொலையில் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். அதற்காக மகாத்மா இறந்தவுடன் இனிப்பு வழங்கி இருக்கக்கூடாது  அல்லவா”?

பிறகு ஆர்.எஸ்.எஸ் மீதான் தடை நீக்கப் பட்டது என்பது வேறு. ஆனால் களங்கம் அகற்றப்பட்டதா என்றால் நிச்சயமாக சொல்ல முடியாது.

அத்தகைய இரும்பு மனிதர் வல்லபாய் படேலுக்கு சங்கத்தின் சேவகர் ஆன நரேந்திர மோடி சிலை வைத்து திறந்திருப்பது நல்ல முன்மாதிரி.

தினகரன் முடிவால் 20 தொகுதிகளின் இடைதேர்தல் வருமா? எடப்பாடி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன!!

நீதிபதி சத்யநாராயணா தீர்ப்புக்கு மேல் உச்சநீதி மன்றத்துக்கு மேன்முறையீடு செல்வார்கள் என்று  எதிர் பார்க்கப் பட்ட நிலையில் மேன்முறையீடு இல்லை தேர்தலை சந்திப்போம் என்ற தினகரனின் அறிவிப்பு தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

துணிச்சலான முடிவுதான். ஆட்சிக்கு மட்டுமல்ல. பல கட்சிகளின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் முடிவு இது.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி எப்படி அமையும் என்பதையும் இது தீர்மானிக்கும்.

மேன்முறையீடு சென்றால் ஆட்சிக்கு ஆபத்தில்லை என்று நிம்மதியாக இருந்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த நிம்மதி போயேபோச்சு.

18 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகளோடு திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளும் இடைத்தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

தேர்தல் கமிஷன் இப்போது என்ன செய்யும் என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பு. எதை சொல்லி தேர்தலை தள்ளி வைக்க முடியும் ?

பாஜக தனது பாராளுமன்ற தேர்தல் கூட்டணியை இப்போதே தீர்மானிக்கும் கட்டாயத்துக்கு ஆளாகும்.

பாராளுமன்ற தேர்தலோடு இந்த இருபது தொகுதிகளின் தேர்தலையும் நடத்துவார்கள் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு.

ஆனால் அதற்கு முன்பே வேறு இடங்களில் தேர்தல் நடத்தினால் இங்கும் நடத்தியாக வேண்டும். ஜனவரி அல்லது பிப்ருவரியில் நடத்தலாம். ஏப்ரலில் தான் பாராளுமன்ற  தேர்தல் வரும்.

பத்து இடங்களில் அதிமுக தோற்றாலே அரசு விழுந்து விடும்.

எப்படியோ எடப்பாடி அரசின் நாட்களின் எண்ணிக்கை தொடங்கி விட்டது.

ராஜாஜி, ஜெயலலிதாவுக்கு அடுத்து இந்த தலைமுறையின் பார்ப்பனீய பிரதிநிதி கமல்ஹாசன் ??

பார்ப்பனர்கள் எல்லா துறைகளிலும் கோலோச்ச திட்டமிட்டு வெற்றியும் பெற்று வந்தவர்கள்.

எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் பார்ப்பனர்கள்தான் முன்னணியில் இருப்பார்கள்.

மற்ற துறைகளில் எப்படி இருந்தாலும் அரசியல் துறையில் மட்டும் எடுத்துக் கொண்டால் கடந்த நூறாண்டு அரசியலில் பார்ப்பனர்கள் முன்னணி வகித்தே வந்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் அரசியலில் ராஜாஜி பார்பனர்களின் பிரிதிநிதியாகவே செயல்பட்டார்.  ஒருபோதும் அவர் அதை ஒப்புகொள்ள மாட்டார். ஆனால் எல்லா பார்பனர்களும் அவர் பின்னே நின்றார்கள்.

காங்கிரசில் காமராஜர் கை ஓங்கிய பிறகு சுதந்திரா கட்சி தொடங்கினார்.

அவருக்குப் பிறகு திராவிட இயக்கத்தில் எம்.ஜி.ஆரின் தயவால் தன்னை இணைத்துக் கொண்ட செல்வி ஜெயலலிதா தன் செகுலர் இமேஜை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு பட்டார்.

தன்னை சட்டமன்றத்திலேயே ‘ஆமாம் நான் பாப்பாத்திதான்’ என்று பெருமையுடன் சொல்லிக்கொண்ட ஜெயலலிதா மிக கவனமுடன் திராவிட இயக்க கொள்கைகளுக்கு எதிரானவராக தன்னை வெளிப் படுத்திக்கொண்டதே இல்லை.

தனிப்பட்ட வாழ்வில் மிகவும் ஆச்சாரமானவராக தன்னை காட்டிக் கொள்ளவும் அவர் தவறவில்லை.

நெற்றி செந்தூரம் அவரை அய்யங்கார் என அடையாளம் காட்டியது. கவலைப் படவில்லை. கோவில் கோவிலாய் சுற்றி வந்து பார்ப்பனர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியது முதல் வேட்பாளர் தேர்வில் ஜாதக குறிப்புகளை இணைப்பது வரை சனாதன தர்மத்தின் பிரதிநிதியாகவே தன்னை வெளிப் படுத்திக் கொண்டார். பார்பனர்கள் அவர் பின்னே அணி வகுத்தார்கள்.

எம்ஜியார் மூகாம்பிகை கோவிலுக்கு நகை காணிக்கை செலுத்தியதை தவிர தன்னை சனாதன தர்ம ஆதரவாளராக காட்டிக் கொண்டதே இல்லை.

எம்ஜியார் காலத்தில் பெரியார் அண்ணா கலைஞர் திராவிட இயக்க தலைவர்களாக உச்சத்தில் இருந்தது மட்டுமல்ல அவர்களோடு தத்துவார்த்த ரீதியாகவும் ஒத்த கருத்தில் இருந்தார். எனவே எம்ஜிஆர் அவர்களுக்கு எதிராக எத்தகைய முரண்பட்ட செயல் களையும் செய்ததில்லை. எம்ஜிஆர் திராவிட இயக்கத்தின் கொள்கை வழி தலைவர்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் பார்ப்பனீய எதிர்ப்பு மூடநம்பிக்கை எதிர்ப்பு சாதி ஒழிப்பு போன்றவைகளை அவர்கள் அளவுக்கு உயர்த்தி பிடிக்காவிட்டாலும் எதிர் திசையில் சென்றதில்லை. இதுவே ஓரளவு மென்மையான போக்காக கருதப் பட்டது.

ஆனால் ஜெயலலிதாவை அப்படி சொல்ல முடியுமா? அவர் பார்ப்பனீய பிரதிநிதி என்பதில் அஇஅதிமுக வினருக்கு ஆட்சேபம் இருக்கலாம். அதில் உண்மையிருக்கிறதா?

ஜெயலலிதா பெரியார் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்தார். அண்ணா பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்தார் என்பது எல்லாம் அவர்களின் கொள்கைகளில் அவருக்கு உடன்பாடு என்பதின் அடையாளமாக கொள்ள முடியாது.  மரியாதை செய்யாமல் திராவிட இயக்க தலைவராக நீடிக்க முடியாது என்பது அவருக்கு தெரியாதா?

சாதி அமைப்புக்கு எதிராக என்றாவது பேசியிருக்கிறாரா? சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட முனைப்பு காட்டியிருக்கிறாரா?

அதைப்போலவே ஜெயலலிதா மறைவு பார்ப்பன பிரதிநிதி இடத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. அந்த இடத்தை பூர்த்தி செய்ய வந்தவர்தான் கமல்ஹாசன்.

இரண்டு திராவிட இயக்கங்களோடும் உறவில்லை என்று கமல்ஹாசன் சொன்னது தத்துவார்த்த ரீதியில்தான்.

பாஜக வை எதிர்த்து எப்போதாவது கமல்ஹாசன் கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறாரா ?

ஸ்ருதி என்பது வேதத்தின் பெயர். வேதத்தை ஏற்றுக் கொள்ளாத எவரும் வேதத்தின் பெயரான ஸ்ருதியை தன் மகளுக்கு பெயராக வைப்பாரா?

கமல்ஹாசன் என்ற தனி நபருக்கு அரசியலுக்கு வரவும் கொள்கைகளை பிரச்சாரம் செய்யவும் எல்லா வகையான உரிமையும் உண்டு. பார்ப்பனர் என்பதால் அவருக்கு எந்த உரிமையும் இல்லாமல் போய் விடாது.

ஆனால் அவரை ஏதோ எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவரைப் போலவும் சாதி மதங்களுக்கு எதிரி போலவும் சிலர் சித்தரிக்க முயல்வதை தவறு என்று சொல்வதே நமது நோக்கம்.

தமிழர்களை  எந்த வேடம் பூண்டு வந்தாலும் ஏமாற்ற முடியாது. அது தமிழர் என்ற வேடமானாலும் கூட.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் இயற்ற ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல் ??

அயோத்தி ராமர் கோயில் – பாபர் மசூதி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறைஈட்டில் உள்ளது.

அலஹாபாத் உயர் நீதிமன்றம் தாவா இடமான ஏக்கர் 2.77 இடத்தை மூன்று பங்காக பிரித்து ஒரு பங்கை நிர்மொஹி அஹாரா என்ற இந்து அமைப்பிற்கும் இரண்டாவது பங்கை ராம் லல்லா விராஜ்மன் என்ற ராமர் விக்ரஹத்துக்கும் மூன்றாவது பங்கை சன்னி வக்பு போர்டுக்கும் தந்து தீர்ப்பளித்தது .

இந்த தீர்ப்பை எதிர்த்துதான் இப்போது உச்சநீதி மன்றத்தில் மேன்முறையீடு.      சாதாரண சிவில் வழக்கு அல்ல இது. ஆனால் உச்சநீதிமன்றம் இதை சாதாரண சிவில் வழக்காக பாவித்து மூன்று நபர் அமர்வு விசாரித்தால் போதும் என்று நினைகிறது .

ஆனால் இந்து அமைப்புகள் குறைந்தது ஏழு அல்லது ஒன்பது நபர் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கோருகின்றன.

தீர்ப்பு எப்படி வரும் என்பதில் குழப்பம் இருப்பதால் இந்து அமைப்புகள் பொறுமை இழந்து வருகின்றன.

ஏதாவது ஒரு அவசர சட்டம் இயற்றி அதன் மூலம் ராமர் கோவில் காட்ட ஆர் எஸ் எஸ் ஆதாரவளிக்கிறது.. சமீபத்தில் அதன் தலைவர் மோகன் பகவத் கோவில் கட்ட சட்டம் இயற்றுவதை ஆதரித்து பேசியிருப்பது சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் அருண் குமார் நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு தர வேண்டும் அரசு கோவில் கட்ட ஏதேனும் தடைகள் இருந்தால் அவற்றை நீக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் சொல்லிவிட்டால் அதன் அத்தனை துணை அமைப்புகளும் சேர்ந்து குரல் கொடுப்பார்கள்.

முஸ்லிம் தரப்பு சட்டம் இயற்ற படுவதை விரும்பவில்லை. கொண்டு வந்தாலும் அதுவும் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டே தீர வேண்டும்.

இதற்கிடையில் விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவர் சாத்வி ப்ராச்சி என்பவர் உச்சநீதிமன்றம் எந்த வகையில் தீர்ப்பளித்தாலும் கோவில் கட்டியே தீருவோம் என்கிறார். இவர்தான் இஸ்லாம் ஒரு ஆபத்தான மதம் என்றும் முஸ்லிம் பெண்கள் மதம் மாறி இந்து இளைஞர்களை மணந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியவர்.

நரேந்திர மோடியின் ஆட்சிக்  காலத்தில் ராமர் கோவில் கட்ட முடிய வில்லை என்றால் இனி யார் காலத்தில் இது முடியும் என்பது சங்கத்தின் கவலை.

எப்படியானாலும் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ராமர் கோவில் பிரச்னையை ஆதாயம் அடையும் பாஜக-வின் திட்டம் நிறைவேறாது என்றே தெரிகிறது.

ஏனென்றால் ஜனவரி 2019-ல் உச்சநீதி மன்றத்தில் விசாரணை தொடங்கினாலும் தேர்தல் நடைபெற வாய்ப்பிருக்கும் ஏப்ரல் மாதத்திற்குள் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வாய்ப்பு குறைவு.

உயர் நீதிமன்றத்தில் 90 நாட்கள் நடந்த வழக்கறிஞர்-களின் வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் அதற்கும் குறையாமல் நடக்கலாம் அல்லவா?

ஆக தேர்தலுக்கு பிறகுதான் தீர்ப்பு.

சபரிமலை; எல்லா மதத்தவரும் செல்லலாம்- கேரள உயர் நீதிமன்றம் கருத்து

சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய காவல் துறை பாதுகாப்பு கேட்டு மனு செய்த நான்கு பெண்களின் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கருத்து சொன்ன ராமச்சந்திர மேனன் தேவன் ராமச்சந்திரன் அடங்கிய அமர்வு இந்துக்கள் அல்லாதோரை சபரிமலைக்கு அனுமதிக்க மறுப்பது கேரளாவில் நிலவி வரும் சமய ஒற்றுமையை சீர் குலைக்கும் என்றனர்.

மேலும் கூறுகையில்  சபரிமலை மட்டுமே எல்லா மதத்தவரும் சென்று வழிபட உரிமை படைத்த கோவிலாக விளங்கி வருகிறது. அங்கேதான் பக்தர்கள் சபரிமலை பிரயாணத்தின் ஒரு பகுதியாக வாவர் மசூதிக்கும் சென்று வழிபடுகின்றனர் என்றனர்.

இந்து ஆலயத்தின் ஒரு பகுதியாக மாற்று மதத்தவர் வழிபாட்டிடம் இடம் பெறுவது  அரிது.

வாவர் ஒரு இஸ்லாமியர். ஐயப்பன் சுவாமி. இஸ்லாம் தோன்றி 1600 ஆண்டுகள்தான் ஆகின்றன. இஸ்லாம் இந்தியாவுக்கு வந்து அங்கே இருக்கும் ஒரு குடிமகன் இஸ்லாமியனாக மாற சில நூற்றாண்டுகள் பிடித்திருக்கும். அவர் சுவாமி அய்யப்பனின் நண்பராக விளங்கி இருக்கிறார். அதுவும் சுவாமி அய்யப்பன் ஆலயம் இருக்கும் இடத்திலேயே வாவருக்கும் ஒரு மசூதி எழுப்பி அவரையும் வணங்கி வரவும் அனுமதி வழங்கப் படுகிறது. அதிலும் குறிப்பாக மசூதியிலேயே விபூதி பிரசாதம் வழங்கப் படுவது ஆச்சரியம். இதெல்லாம் இஸ்லாத்தில் அனுமதிக்கப் படுவதில்லை என்றாலும் பல நூற்றாண்டுகளாக இந்த நடைமுறை அமுலில் இருந்து வருகிறது.

போகிற போக்கை பார்த்தால் வாவர் மசூதியை அங்கே இருக்கக் கூடாது என்று கூட குரல் எழுப்பலாம். அப்படி செய்தால் சுவாமி அய்யப்பனையே அவமதித்ததாக ஆகலாம்.

மாற்று மதத்தவர் இருமுடி கட்டாமல் பதினெட்டாம்படி ஏற முடியாது. இருமுடி கட்டாதவர்கள் வேறு வழியில் சுவாமி  அய்யப்பனை தரிசிக்கலாம். இதுதான் நடைமுறை.

இந்து இயக்கங்கள் எதைச் செய்தாவது பாஜக வெற்றி பெற ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்கள் வழிபடும் உரிமை பிரச்னையை பெரிதாக்கி வருகிறார்கள்.

நீதிமன்றங்கள் இருக்கும் வரை அவர்கள் எண்ணங்கள் ஈடேற போவதில்லை.