Home Blog Page 63

ஊழல் ஆட்சி என்று சொன்னால் நாக்கை அறுப்பேன் ; அமைச்சர் துரைக்கண்ணு சொல்லிவிட்டு பின்வாங்கினார்??!!

நான்காம் தர பேச்சாளர்களை கேள்விப்பட்டிருக்கிறோம்

பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு

கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்து பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

சமீபத்திய உதாரணம் கருணாஸ்-சட்ட மன்ற உறுப்பினர்

முறைகேடாக பேசி  இப்போது சிறையில் இருக்கிறார்

எப்போது பிணையில் வருவாரோ அவருக்கே தெரியாது?

 

திடீரென்று ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு  எதிராக

பொதுக்கூட்டங்களை அறிவித்தது

எதிர்க்கட்சி ஆளுங்கட்சிக்கு  எதிராகப் போராடலாம்

ஆளுங்கட்சி  போராடுவது தமிழ்நாட்டில்தான் .

அந்த அதிசயம் நடந்தது .   

அத்தகைய கூட்டம் ஒன்றில் பேசும் போது தஞ்சையில்

அமைச்சர் துரைக்கண்ணு பேசுகிறார். என்ன ஊழல் ஆட்சி ஊழல் ஆட்சி என்று சொல்லிகிட்டே இருக்கே ? இனிமே அப்படி பேசினா நாக்கை அறுத்துப்போடுவேன் “

இப்படி பேசுபவர்களை நாம் அமைச்சர்களாக கொண்டிருக்கிறோம்.

எப்படி உருப்படும் தமிழ்நாடு?

 

அமைச்சர் மீது என்ன நடவடிக்கை யார் எடுப்பார்கள்?

இவர்களுக்கு மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க

 என்ன தார்மீக உரிமை இருக்கும்?

ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, திண்டுக்கல்  சீனி வாசன்

வீரமணி ,   ஓ எஸ் மணியன்    விஜயபாஸ்கர் போன்ற

காமெடி அமைச்சர்கள் பட்டியலில்

இப்போது  சேர்ந்து கொண்டார்  துரைக்கண்ணு .

குறிப்பு; விமர்சனங்கள் வலுத்ததும் ‘ நாக்கு அழுகிவிடும் ‘  என்ற கிராமத்து

அடைமொழியை வாய் தவறி ‘ அறுத்துவிடுவேன்’ என்று தவறாக

பேசிவிட்டதாக அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம் அளித்திருக்கிறார்.

இனிமேல் பேசாமல் இருந்தால் சரி.

அதிர்ச்சியளிக்கும் குழந்தை கடத்தல் குற்றங்கள்!

சென்னை உயர் காவல்துறை துணைத்தலைவர் கொடுத்த அறிக்கையின் படி 2016-2018 ஆகிய  ஆண்டுகளில் காணாமல் போன  குழந்தைகளின் எண்ணிக்கை 9882. இதைக் கண்டுபிடிப்பதற்கு என்று anti child trafficking யூனிட் செயல்படுகிறது மாநிலத்தில் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. அவைகளைப் பற்றி அறிக்கை உயர் நீதிமன்றம் கேட்டு இருக்கிறது, கொடுமை என்னவென்றால் 874 வழக்குகள் குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைக்க முயற்சித்ததாக விசாரணையில் நிலுவையில் இருக்கிறது.

இரண்டு வழக்குகளில்தான் தண்டனை. பத்தில் விடுதலை. 532 வழக்குகள் மூடப்பட்டு விட்டன. காவல்துறை அளித்திருக்கும் இந்த புள்ளிவிவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. சென்னை நகர போக்குவரத்து காவலர் இருக்கும்போதே வயதானவர்கள், குழந்தைகள் தெரு முனைகளில் பிச்சை  எடுப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் புகார் தெரிவிப்பது இல்லை? ஏன் வழக்கு பதிவு செய்வது இல்லை?

பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படம் சமூகத்தில் நிலவும் இந்த அவலங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. ஆனால் காவல் முறையாக செய்திருந்தால் இந்த தொடரும் அவலங்களை களைவதற்கு காவல்துறையின் நடவடிக்கைகள், கண்காணிப்புகள் போதாது. மனிதத்தை மரத்துப் போகச் செய்யும் இந்த குழந்தை கடத்தல்  குற்றவாளிகளுக்கு கடுமையான   தண்டனை தரப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் கரூரில் ஒரு 17 வயது சிறுவனை செல்போன் திருடினான் என்று குற்றம் சுமத்தி கட்டி வைத்து அடித்து கொன்று இருக்கிறார்களே? அங்கேயும் மனிதம் மரித்துப் போனதுதானே? தண்டனை கொடுக்க  காவல் துறையும் நீதி  மன்றமும் இருக்கையில்  சட்டத்தை கையிலெடுத்து தண்டித்த அந்த மிருக கூட்டத்திற்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். காவல்துறையே விரைந்து செயல்படு!

 

சாதி ரீதியில் இயங்குகின்றனவா பத்திரிகைகள்?

கருணாஸ் மீது சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டுகளில் ஒன்று பார்ப்பனர், நாடார் சாதி ஆதிக்கத்தில் பத்திரிகைகள் இருக்கின்றன என்பது. எல்லோருக்கும் தெரிந்த உண்மைதானே இது இருப்பதில் என்ன தவறு என்றுதானே கேட்கவேண்டும்? யார் பத்திரிகை தொடங்குவதை யார்  எதிர்த்தார்கள்? சி. பா.ஆதித்தனார் உழைப்பால் உயர்ந்தவர். தினத்தந்தி ஆரம்பித்தபோது அது முதல் தமிழர் நாளிதழ். கூடவே நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கினார்.

நெடுங்காலமாக இருந்த பார்ப்பனர் ஆதிக்கத்தை ஊடகத்தில் இருந்து ஒதுக்கி வைத்து தமிழர்களுக்கும்  இடம் தேடிய முயற்சி அது. தினத்தந்தியை எல்லா தமிழ்ச் சாதிகளின் கொண்டாடின. நீதிக்கட்சி திராவிடர் கழகம் திமுக  போன்ற மக்கள் இயக்க செய்திகளை பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்த இந்து , தினமணி போன்ற பத்திரிகைகள் நான்காம் தர செய்திகளாக வெளியிட்டன.

அந்தக் காலகட்டத்தில் தமிழ் இன, மொழி  எழுச்சி செய்திகளை பரப்பியது தினத்தந்தி. எனவே அது எல்லா சாதிகளுக்குமான பத்திரிகை தான். உரிமையாளர் நாடார் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தார். இன்றைக்கும் தினத்தந்தி நம்பர் 1 இடத்தில் இருப்பதற்கு எல்லா சாதி தமிழர்களும்தான் காரணம். எல்லோருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் அது முதலிடத்தில் நீடிக்க முடியாது. பாரபட்சமின்றி எல்லா தரப்பு நியாயங்களையும் அது முன்னிறுத்துகிறது. தமிழர்களின் வாழ்வோடு இணைந்து விட்ட உறுப்பினர் தினத்தந்தி.

இன்றைக்கும் தினத்தந்தி மெருகு குறையாமல் தமிழர் உரிமைக்  குரலை ஒலிக்கும் வாகனமாக பயணம் செய்கிறது அதன் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. அதேபோல மாலை முரசு,  மாலை மலர், ராணி போன்ற பத்திரிகைகளும் எல்லா தரப்பினரையும் தான் வசீகரித்திருக்கிறது. அதன் நிறுவனர்  பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்கு  முக்கியத்துவம் அளிப்பதினாலேயே அது  ஒரு சாதி பத்திரிகை ஆகிவிடாது. தினத்தந்தியின் செல்வாக்கை குறைக்க இந்து தமிழ் செய்தி வருகிறது. தினமலர் தோற்றுப்  போன இடம் அது. தினமணி வைத்தியநாதய்யர் ஆண்டாள் பற்றிய வைரமுத்து கட்டுரையை பிரசுரித்தற்காக சங்கர மடத்தில் சென்று  மன்னிப்பு கேட்பாரா இல்லையா? அன்றே நடுநிலை என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை தினமணி இழந்துவிட்டது.

எத்தனை பெரிய மக்கள் திரளாக  இருந்தாலும் அதை நான்கு வரி செய்தியாக போடுவது  இந்து பத்திரிகைவழக்கம். மகாத்மா காந்தி இறந்த செய்தியை இரண்டாம் பக்க செய்தியாக வெளியிட்ட பத்திரிகை அது. காரணம் சொன்னார்கள். அப்போது முதல் பக்கம் முழுதும் விளம்பரம் போட்டோம் என்று. அடப்பாவிகளா,  ஒரு தேசத்தின் தந்தை சுட்டுக் கொல்லப்  பட்ட செய்தியை விட உனக்கு விளம்பரம் முக்கியமாக போய் விட்டதா? கேட்க ஆளில்லை.

வேறு வழியில்லாமல்தான் இவைகளை வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள். ஜல்லிக்கட்டை வரலாற்றின் கடந்த காலமாக கருதி மறந்து போக வேண்டியதுதான் என்று தலையங்கம் எழுதியது இந்து. பாரபட்சமாக செய்திகளை வெளியிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை அவர்களே சொல்லட்டும்! அதனால்தான் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை கொண்டு செல்ல கட்சி பத்திரிகைகள் நடத்துகிறார்கள் .

முரசொலி , நமது எம்ஜிஆர், நமது அம்மா, விடுதலை, தீக்கதிர் ,  இன்னும் எண்ணிலடங்கா கட்சிப் பத்திரிகைகளின் தேவை அதனால் தான். இன்று ஆங்கில பத்திரிகைகளில் இந்து, இந்தியன்  எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, எல்லாம் அவர்களால் நடத்தப்படுகின்றன. அவர்களோடு போட்டி போட்டு ஆங்கில பத்திரிகைகளை நடத்தி விட முடி முடியுமா?

தினத்தந்தி யின் DT next  ஆங்கில இதழ் முன்னேறவில்லையே. எனவேதான் பத்திரிகை தர்மம் கடைப்பிடிக்க அனைவரையும் வலியுறுத்துகிறோம் பத்திரிகை என்பது எல்லாருக்குமான பத்திரிகைகளாக உலா வர வேண்டும் அதை வலியுறுத்தும் சக்தி வாசகர்களுக்கு இருக்கவேண்டும். அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம்.

உரிமையாளரை வைத்து சாதி ரீதியாக குறை சொல்வது சமூக மோதல்களை வளர்க்கவே உதவும்.. கருணாஸ் பேச்சும் சரி  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடுக்கப்படும் ஒருசில  நாடார் சங்க நடவடிக்கைகளும் சரி அனைத்தும் இதைத்தான் நமக்கு போதிக்கின்றன. எல்லாரும் சேர்ந்து தமிழர் ஒற்றுமைக்கு உலை வைக்காதீர்கள்.

பெரியார் சிலை அவமதிப்பு தொடர்கிறது!! காவல்துறை என்ன செய்யப்போகிறது?

பெரியார் சிலை அவமதிப்பு தொடர்கிறது, காவல்துறை என்ன  செய்யப்போகிறது ? பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா காவல்துறையை மிக கேவலமாக திட்டி பேசிய பிறகும் கூட நடவடிக்கை ஏதும் இல்லாமல் பொதுக் கூட்டங்கள் பேசி வருகிறார். அதன் விளைவு தொடங்கிவிட்டது. ஏனென்றால் அவர்தான் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று பேசியவர். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் பெரியார் சிலைகள் அவமதிப்பு செய்யப்படுவது தொடர்கதையாகி விட்டது.

ஒரத்தநாடு காவராப்பட்டு  கிராமத்தில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து இருக்கிறார்கள். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறை பஸ் நிறுத்தத்தில் பெரியார் சிலையின் 5 அடி உயர கைத்தடி சிலையிலிருந்து  உடைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் தஞ்சாவூரிலும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டிருகிறது. வழக்கம்போல காவல்துறை தேடி வருகிறது.

பெரியாரியத்தை தமிழக மண்ணில் இருந்து அகற்றாத வரை தாங்கள் இங்கே காலூன்ற முடியாது என்ற நிலையில் இருப்போர் யாரோ அவரே இந்த கோழைத்தனமான காரியங்களில் ஈடுபட்டிருக்க முடியும். இதனால் எல்லாம் பெரியார் செல்வாக்கு கூடுமே தவிர குறையாது ஆனால் எதிரிகளை அடையாளம் காண இந்த சம்பவங்கள் தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

என்ன செய்வது? மத்தியில் ஆட்சி செய்வோருக்கு அடங்கி நடப்போர், இங்கே  ஆட்சியில் இருக்கிறார்களே?

ராஜீவ் காந்திக்கு ஒரு போபர்ஸ்!! நரேந்திர  மோடிக்கு ஒரு  ரஃபேல்??!!

போபர்ஸ் பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தி பெயர் அடிபட்டு

அதன்  காரணமாகவே  தேர்தலில் தோல்வியை சந்தித்தார்

கடைசி வரை அந்த ஊழல் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டாமலேயே போனது

ஆனால்  அதன் தாக்கம் கடைசி வரையில் இருந்தது

இன்றுவரை காங்கிரசால் போபர்ஸ் பீரங்கி ஊழல் கறையில்  இருந்து தப்ப முடியவில்லை

 

இன்று பிரதமர் நரேந்திர மோடி  அரசு ரபேல் போர் விமானங்கள்

கொள்முதல்விவகாரத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது

ஊழலற்ற அரசு என்று மோடி அரசு இனி மார்தட்டிக் கொள்ள முடியாது

பிரதமர் இது குறித்து   வாய் திறக்க மறுக்கிறார்.

 

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு

2012ல்   126 விமானங்களுக்கு ஒப்பந்தம் போட்டது

ஒரு விமானத்தின் விலை 526 கோடி

2015ல் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்ற போது

தானாக முடிவெடுத்து 36 ரபேல் விமானங்கள்  வாங்க

ஒப்பந்தம் செய்கிறார்

ஒரு விமானத்தின் விலை 1670 கோடி

 

இதுதான் இப்போது பிரச்சினை ஆகி இருக்கிறது

இந்த  விலை உயர்வு காரணம் யார்?

வெறும் 36 ரபேல் விமானங்களாக  குறைக்கப்பட்டது ஏன்?

இதில் பிரச்சனை ஆகி இருப்பது அனில் அம்பானியின்

ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் உற்பத்தி கம்பெனிக்கு

 வணிக கூட்டாளியாக   ஆனதுதான்

 

முன்னாள்  பிரான்ஸ் பிரதமர்  ஹாலண்டே

ரிலையன்ஸ் நிறுவனம்  சேர்க்கப்பட்டது இந்தியா சொல்லித்தான் என்கிறார்

இந்திய அரசு தனக்கு தொடர்பு இல்லை என்கிறது

எது உண்மை?

கடனில் தவிக்கும் அனில் அம்பானி யின் ரிலையன்ஸ் கம்பெனிக்கு

உதவும் நோக்கத்தில்  பிரதமர் மோடி செய்த மாற்றம் இது என்று

 காங்கிரசும்  ராகுல் காந்தியும்  குற்றம் சுமத்துகிறார்கள்

 

பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்கிறது காங்கிரஸ்

தேவை இல்லை என்கிறது  மோடி அரசு

மக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்

நீதிமன்றம்  தலையிட்டால் மட்டும் தான் உண்மை வெளிவருமா ?

வெளிப்படைத்தன்மை இல்லை என்பதில் சந்தேகமில்லை

ராணுவ ரகசியம்  இதில் என்ன இருக்கிறது?

 

இதே நிறுவனம் வேறு நாடுகளுக்கும் இதே விமானத்தை விற்பனை செய்திருக்கிறது

அந்த நாடுகள் கொடுக்கும்  விலையைவிட

நாம் ஏன் அதிக விலை தர  வேண்டும்?

எந்த காரணம் கொண்டும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம்

என்று  பிடிவாதம் செய்கிறது மோடி அரசு

 

விமானத்தின் தரம் தேவை பற்றியெல்லாம் எந்த கேள்வியும் எழவில்லை ஏனென்றால் உலக நாடுகள் பலவும் ஒப்புக்கொண்ட தரம் அது

கேள்வி ஒன்றுதான்

டசால்ட் ஏவியேஷன்நிறுவனம்  தனது தொழில் கூட்டாளியாக

ரிலையன்ஸ் நிறுவனத்தை  தானாக சேர்த்துகொண்டதா ?

அல்லது இந்திய அரசு சொல்லி சேர்த்துக் கொண்டதா ?

 இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம்

30,000 கோடி ரூபாய்  ஆதாயம் அடைய யார் காரணம்?

 

Offset contract  ல் ( உள் ஒப்பந்தந்தில் ) இந்திய அரசின் தலையீடு இல்லை

என்பது உண்மை என்றால் பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஏன்

இந்திய அரசு முடிவு செய்தபின் எங்களுக்கு வேறு வழி இல்லை

என்று சொல்ல வேண்டும்?

எனவே விசாரிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் இதில்

நிறையவே இருக்கின்றன. .

மோடி அரசின் இன்னொரு முகம் இதில் வெளிப்பட்டிருக்கின்றது .

இது தேர்தலின் நிச்சயம் பிரதிபலிக்கும்.

எச்.ராஜா மீது வழக்கை ரத்து செய்ய கோருகிறது பிராமண சங்கம்; மனுநீதியை ஏற்கிறதா எடப்பாடி அரசு?

மனுநீதியை ஏற்கிறதா எடப்பாடி அரசு?

எச் ராஜா எஸ்வி சேகர் இருவருக்கும் ஒரு நீதி

கருணாசுக்கு  ஒரு நீதி-

எடப்பாடிஅரசின் நடவடிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன

 

எஸ் வி சேகர் மீது வழக்கு பதியப்பட்டு பல நாட்களாக

கைது செய்யப்படாமல் வலம் வந்து கொண்டிருந்தார்

தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால்

அரசு பேசாமல் இருக்கிறதா என்ற கேள்வி அதிகரித்தது

உச்சநீதிமன்றம் வரை சென்ற சேகரை கைது செய்ய

தடை விதிக்க மறுத்தது நீதிமன்றம்

வேறு வழி இல்லாமல் ஒரு நல்ல நாள் பார்த்து

காவல் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜராகி

உடனே பிணையில் விடுதலையானார் சேகர்

 

எச் ராஜா கதை வேறு அவர் மீது வழக்கு பதியப் பட்டிருக்கிறது

2 தனிப்படை அமைத்து  தேடிக்கொண்டிருக்கிறது காவல்துறை

அதே காவல் துறை பாதுகாப்புடன்  நான் சுதந்திரமாக இருக்கிறேன்

என  அறிவித்து விட்டு  வலம் வந்து கொண்டிருக்கிறார் எச் ராஜா

 

சட்டமன்ற உறுப்பினர்  கருணாஸ் மீது வழக்கு பதிவானது

உடன் காவல்துறை சுறுசுறுப்பாகி  அதிகாலை நேரத்தில்

கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது

அவரது பேச்சு நியாயமானதா  என்பது விவாதத்துக்கு உரியது

 பேச்சின் சில பகுதிகள் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை

ஒரு சட்ட மன்ற  உறுப்பினர் என்ற தகுதிக்கு தகாதவை

 

 இப்போது பிரச்சனை  அதுவல்ல

ஏன் இதே நடவடிக்கை  எச் ராஜா மீது பாயவில்லை என்பதுதான் கேள்வி?

மனு நீதியில்தான்  பிராமணன் கொலை செய்தால்

தலை முடியை சிரைத்து  நாடுகடத்து

 மற்றவன் செய்தால் தலையை வெட்டு   என எழுதி வைத்தார்கள்

இந்த இரட்டை நீதி எடப்பாடி ஆட்சியில்  தொடர்கிறதா?

 

கருணாசுக்கு  பரிந்து எந்த முக்குலத்தோர் அமைப்பும்  அறிக்கை விடவில்லை

ஆனால் தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் நாராயணன்

தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசிய அதன்  தலைவர் பேசுகிறார்

”  பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மீது வழக்குகள் பதிவு செய்ததற்கு

சங்கம் சார்பில் கண்டனம்  தெரிவிக்கப்படுகிறது . மேலும்

அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சங்கம் சார்பில்

வலியுறுத்தப் படுகிறது”  என்று பேசியிருக்கிறார்.

 

வழக்கின் தன்மை பற்றி எதுவும்  சொல்லாமல் எப்படி

வாபஸ் பெறுங்கள் என்று சொல்கிறார்?

இதுதான் சாதி வெறி.

சாதியத்தை  தமிழக ஊக்குவிக்கிறதா?

இதற்கும் நீதிமன்றம் செல்ல வேண்டுமா? பொறுத்திருப்போம்?

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமதம்?

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமதம்?

என்ன செய்கிறது தமிழக அரசு?
உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைப் போல
பேசி வருகிறார்கள் அதிமுக அமைச்சர்கள் ?
ஜெயலலிதாவுக்கு செய்யப்படும் மரியாதைகள் அத்தனைக்கும்
தகுதி படைத்தவரா அவர்?

முதல் குற்றவாளி ஜெயலலிதா. 2 முதல் 4 வரை யிலான குற்றவாளிகள்தான் சசிகலாவும் இளவரசி சுதாகரனும்
அவர்கள் அத்தனை சிறையில்.
ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால்
அவரும் சிறையில் இருந்து இருப்பார்.
உச்ச நீதிமன்றம் அவருக்கு விதித்த அபராதம் ரூபாய் நூறு கோடியை
பறிமுதல் செய்யும் படி உத்தரவிட்டது.

மற்றவர்களுக்கு அபராதம் தலா ரூபாய் பத்து கோடி மட்டுமே

அதைக்கூட அவர்கள் இன்னும் செலுத்தவில்லை.
2017 மே மாதம் இறுதியில் தமிழக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு
வழக்கு மற்றும் உச்ச நீதி மன்ற தீர்ப்பு விபரங்கள் உள்ளடக்கி
சொத்துகளை கையகப்படுத்த
வேண்டிய கடிதங்களை சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர்
திருவாரூர், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்ட ஆட்சியர்களுக்கும்
அனுப்பி இருப்பதாக தெரிகிறது.
ஆனால் தொடர்ந்து நடவடிக்கை இருப்பதாக தெரிய வில்லை..
அம்மா அரசு என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த அரசு
அம்மா சொத்துக்களை எப்படி கையகப்படுத்தும் ?

இறுதித் தீர்ப்பு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில்
இந்த அபராத வசூல் வசூலிக்கும் நடவடிக்கைகள் ஏன் முடிவடையவில்லை?
ஜெயலலிதா சொத்து அரசுடமை ஆனால் தான்
இவருக்கு எப்படி அரசு மரியாதை செய்ய முடியும் என்ற கேள்வி எழும்!
எனவே தான் தாமதம் செய்கிறது எடப்பாடி அரசு.
நக்கீரன் இதழ் மட்டுமே இதுபற்றி கேள்வி எழுப்பியிருக்கிறது?
பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் நடவடிக்கை இது.

பொது மக்கள் தான் குரல் கொடுக்க வேண்டும்.
அரசே ! முதல் குற்றவாளி ஜெயலலிதாவின் சொத்துக்களை
உச்சநீதிமன்ற தீர்ப்புபடி உடனே கையகப்படுத்து!
என்ற குரல் உரத்து எழ வேண்டும்.
அப்போதுதான் இந்த ஆட்சியாளர்கள் யார் என்பது தெரிய வரும்.
நீதிமன்ற தீர்ப்பை அமுல் படுத்தி சட்டத்தின் முன் எல்லோரும் சமமே
என்று நிலைநாட்டுகிறார்களா அல்லது
அம்மா பெயரில் ஆட்சி நடத்திக் கொண்டு எப்படி அவர் சொத்துக்களை
பறிமுதல் செய்வது எப்படி அதன்பின் எப்படி யார் பேரைச் சொல்லி
கட்சி நடத்துவது என்று குழம்பிப் போய்
சொத்து பறிமுதல் நடவடிக்கைகளை வேண்டும் என்றே
தள்ளிப் போடுகிறார்களா என்று பார்க்கலாம்?!

சாதிக் கட்சிகளுக்கு தடை விதித்தால் எதுவெல்லாம் மிஞ்சும் ?!

இந்து சாதிகள்தான் சமுதாய மோதல் களுக்கெல்லாம் காரணமாக இருக்கின்றன.
சங்கம் வைத்து எங்கள் பொருளாதார உயர்வை வலுப்படுத்துகிறோம் என்றால் தப்பே இல்லை ஆனால் கட்சி நடத்தி சமுதாய பிளவை அதிகப் படுத்துவேன் என்றால் அது சரியா? சங்கம் நடத்த உரிமை உண்டு ! கட்சி நடத்த உரிமை உண்டா?
அப்படி தடை விதித்தால் இப்போது இருக்கும் கட்சிகளில் யார் யாரெல்லாம் மிஞ்சுவார்கள்?

தி மு க – அ தி மு க – காங்கிரஸ் – இந்திய கம்யுனிஸ்டுகள் – மார்க்சிஸ்டுகள் – நாம் தமிழர் கட்சி-பாரதிய ஜனதா கட்சி ,

ம தி மு க – தே மு தி க – ( இரண்டிலும் பெருமளவில் தெலுங்கு பேசும் மக்கள்
இருந்தாலும் , வைகோவின் திராவிட இயக்க பூர்விகம், விஜயகாந்தின் சினிமா ரசிகர்கள் எல்லா சாதிகளிலும் இருப்பது நிஜமே என்பதால் சாதிக் கட்சி முத்திரையில்
இவர்கள் தப்புகிறார்கள்) – –
இவர்கள் மீது சாதி சாயம் பூச முடியாது

பா ம க – மருத்துவர் ராமதாஸ் முடிந்த வரை அந்த கட்சியை
எல்லாருக்குமான கட்சியாக உருவகப்படுத்த பாடுபடுகிறார்
தாழ்த்தப் பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை கட்சியின் உயர் பொறுப்பில்
அமர வைக்கிறார் – எல்லா சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் கட்சி
பொறுப்பில் சேர்க்கிறார். எல்லா சமுதாய மக்களின் பிரச்னைகளுக்கும்
குரல் கொடுக்கிறார். . மருத்துவர் அன்புமணியும் தந்தை வழியில்
அயராது பாடுபடுகிறார். இன்றைக்கு எல்லா அரசியல் தலைவர்களும்
மருத்துவர் அறிக்கை வந்தபின் தான் எந்த பிரச்னை தொடர்பாகவும் நிலை
எடுக்கிறார்கள். எல்லாம் சரி. பா ம க என்றால் அது வன்னியர் கட்சி
என்ற முத்திரையை அதனால் அழிக்க முடிகிறதா?

பிற சமுதாய மக்களை தன் புகழ் பாட வைக்கும் முயற்சியாகத்தான்
கட்சியில் இருக்கும் மற்றவர்களை பார்க்கிறார்களே தவிர
கட்சி எல்லாருக்குமான கட்சியா?
நீங்கள் சித்திரை திருவிழாவில் வன்னிய சொந்தங்களை மட்டும் தானே
அழைக்கிறீர்கள் . பிற சமுதாயத்தவர் எப்படி உங்களை தங்கள்
தலைவராக ஏற்பார்கள்? கட்சியில் ஜனநாயகம் இருக்கிறதா?
இருந்தால் கட்சியே இருக்காது . உடைத்து விடுவார்கள்.

விடுதலை சிறுத்தைகள்;
தொல். திருமாவளவன் சிறந்த சிந்தனையாளர்.
ஒடுக்கப் பட்ட சமுதாயங்களின் உரிமைக்குப் போராடும் போராளி
விடுதலை என்பது தாழ்த்தப் பட்டவர்களுக்கு மட்டும் அல்ல
எல்லா ஒடுக்கப் பட்டவர்களுக்கும்தான் என்பதே அவரது குரல்
கொண்ட லட்சியத்திற்காக வாழ்க்கையே அர்ப்பணித்து வாழ்பவர்
தனிப்பட்ட முறையில் எந்த குறையும் காண முடியாத பண்பாளர்
ஆனால் கட்சி; தாழ்த்தப் பட்டவர்களிலேயே பறையர் மற்றும் கிறிஸ்தவர்
சமுதாய மக்களின் கட்சியாகதானே பார்க்கிறார்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ்
பெயரில்தான் காங்கிரஸ் . உடையார் மூப்பனார் நைனார்
மக்களின் கட்சிதான் அது. அதில்லாமல் முன்பு காங்கிரஸ்
கட்சியில் இருந்தபோது இருந்த செல்வாக்கு மிக்க பிற சாதியினர்
வாசனின் பண பலத்தை நம்பி கூட இருக்கிறார்கள்

புதிய தமிழகம்
டாக்டர் கிருஷ்ணசாமி எல்லா பிரச்னைகளையும் பற்றி பேசும் வல்லமை
படைத்தவர் . சிந்தனையாளர். தன்னை மற்றவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்
என்ற சிந்தனையில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் மட்டும் ஆதரித்தால் போதும்
என்று தீர்மானித்து கட்சி நடத்துபவர். தான் எல்லாருக்குமான தலைவர்
என்று அவரே சொல்ல மாட்டார். பள்ளர் என்று அழைப்பதை தவிர்த்து
தேவேந்திரர் என்று மரியாதையாக அழைக்க வைக்கப் படுவதை சாதனையாக நினைப்பவர்..
அதற்கான சட்ட போராட்டத்தை கையில் எடுப்பவர். இந்த சமுதாய மக்கள்
கடந்த காலத்தில் எதிர்கொண்ட அடக்கு முறைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால்
அவரது முயற்சியில் தவறே இல்லை.
ஆனாலும் சாதிக் கட்சி முத்திரையில் இருந்து தப்ப முடியாதே ?

பிற கட்சிகளை தலைவர்களை கொண்டுதான் அடையாளம் காண வேண்டும்.
பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் ; இந்திய ஜனநாயக கட்சி என்றாலும் அது
உடையார் கட்சிதான்.
ஏ சி சண்முகம் ; புதிய நீதி கட்சி என்றாலும் அது முதலியார்
கடசிதான்
டாக்டர் சேதுராமன் ஸ்ரீதர் வாண்டையார் நடிகர் கார்த்திக் எல்லாரும்
முக்குலத்தோரை தளமாக கொண்டு இயங்குபவர்கள் . விஸ்வகர்மா ,
குலாலர் குல மக்கள் ஒரு அரசியல் அமைப்பை வைத்திருக்கிறார்கள்

ஜான் பாண்டியன் தேவேந்திர குல வேளாளர் கட்சி தான்
விடுபட்டுப் போன பலரும் சாதிக் கட்சி நடத்துபவர்கள் எவருக்கும்
அந்த உரிமை உண்டா? அதை பறித்தால் என்ன?
ஆம் . எவருக்கும் சாதி அடிப்படையில் கட்சி நடத்த உரிமை கூடாது.

எல்லா சமுதாய மக்களையும் நிர்வாகிகளாக வைத்திருந்தால்தான்
தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
சாதிக் கட்சிகள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும்.
சங்கம் வைக்கலாம் . கட்சி கூடாது என்பது சட்டமாக வேண்டும்.
தமிழ் மக்கள் சிந்திப்பார்களாக !

முஸ்லிம் கள் தனியாக மத ரீதியில் கட்சி நடத்துபவர்கள்
அப்படியே கிறிஸ்தவர்களும்
அவர்களுக்கே வேண்டுமானால் விதிவிலக்கு தரலாம்.
குறைந்த பட்சம் சாதியை சாதி சார்ந்த அரசியலை ஒழிப்போமே!!!!.

( கருணாஸ் என்ற நடிகர்  முக்குலத்தோர் புலிப்படை வைத்துக் கொண்டு

ஒரு சட்ட மன்ற உறுப்பினருக்கு உரிய எந்த அடையாளமும் இல்லாமல்

ஒரு நான்காந்தர மேடை பேச்சாளரைப் போல் பேசி தன் மீது வழக்குகளை

வரவழைத்து கொண்டு கைதாகும் நிலையில் இருப்பதை பார்த்தபின்

எழுந்த சிந்தனை இது)

9 கோடி ஊழலுக்கு ஆதாரம் கொடுத்த மு க ஸ்டாலின்! தடுமாறும் அமைச்சர் தங்கமணி!!

உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில்
Rs.9,17,03,379/- ஒன்பது கோடியே பதினேழு லட்சத்து மூவாயிரத்து முன்னூற்று எழுபத்து ஒன்பது ருபாய்
மதிப்புள்ள காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக
போலி ஒதுக்கீடு கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள
திருநெல்வேலி மண்டல ஆடிட் உதவி அதிகாரி
தனது அறிக்கையில் சொல்லியிருப்பதை ஆதாரமாக காட்டி
திமுக தலைவர் மு க ஸ்டாலின் இந்த ஊழல் குறித்து
குற்றம் சுமத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதே அதிகாரி இந்த ஒன்பது கோடி ரூபாயை வட்டியுடன்
உடனடியாக வசூல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பதில் கூறிய அமைச்சர் தங்கமணி கூடுதலாக கூறியது
‘ இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம்’
‘ மின்சார வாரியத்தில் இருந்து இந்த பணமும் கொடுக்க வில்லை’ என்பது. பின்னர் ஏன் தனியார் கம்பெனிகளுக்கு ஒன்பது கோடி வட்டியுடன் கேட்டு
அறிவிப்பு கொடுத்தீர்கள்? அவர்கள் ஏன் நீதிமன்ற தடை வாங்கினார்கள்?
அனல் மின் நிலையத்தில் உற்பத்தியான மின்சாரத்தை
தனியார் கம்பெனிகள் வாங்கியதில் நடந்த தவறை
மின்சார வாரியத்துடன் இணைக்க பார்க்கிறார்கள் என்பதுதான்
அமைச்சர் தங்கமணியின் வாதம்.

அடுத்த வரியிலேயே மின்சார வாரியத்துக்கு வரவேண்டிய தொகையை
செலுத்துமாறு நோட்டிஸ்தான் அனுப்பியிருக்கிறோம் என்றால்
நோட்டிஸ் சரியா தவறா?
சரி என்றால் ஊழல் உண்மை.
இல்லை என்றால் ஏன் அப்படி பொய் நோட்டிஸ் அனுப்ப வேண்டும்?
வழக்கு தொடருவோம் என அமைச்சர் கூற,
தொடர வில்லையென்றால் நான் வழக்கு தொடர்வேன் என ஸ்டாலின் பதில் கொடுக்க
தங்கமணி என்ன செய்ய போகிறார் என்று நாடே எதிர்பார்க்கிறது.

முத்தலாக் தடை அவசர சட்டம்; மோடி அரசின் மோசடித் திட்டம்??!!

ஆடுகள் நனைகின்றனவே என வருத்தப் பட்டு
ஒரு ஓநாய் சிந்திய கண்ணீர்தான்
மோடி அரசு கொண்டு வந்திருக்கும்
முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம்
என்கிற முத்தலாக் தடை அவசர சட்டம்
முத்தலாக் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று
ஆனால் நடைமுறையில் இருந்ததால் முஸ்லிம் நாடுகள்
பலவும் முத்தலாக் தடை சட்டம் இயற்றி உள்ளன.

ஒரே நேரத்தில் தலாக் மூன்று முறை சொல்லி
விவாகரத்து செய்யும் வழக்கம் தான் தடை செய்யப் பட்டதே தவிர
கால இடைவெளி விட்டு முறைப்படி செய்யப்படும் தலாக்
செல்லுபடியாகும் என்பதே உண்மை
இந்நிலையில் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்றி விட்டு
மேலவையில் நிறைவேற்ற பெரும்பான்மை இல்லாததால்
அப்படியே விட்டு விட்டு திடீர் என்று கொல்லைபுற வழியாக
பா ஜ க அரசு இந்த அவசர சட்டம் கொண்டு வந்ததன் நோக்கம் என்ன?
இப்படி செய்வது தவறு என்று உச்சநீதி மன்றம் ஜனவரி 2017 ல்
தீர்ப்பு சொன்னது. அப்படி செய்வது அரசியல் சட்டத்தின் பேரால்
நிகழ்த்தப் படும் ஒரு மோசடி என்றும் அது விமர்சித்தது
இந்தக் அவசர சட்டம் கூட ஆறு மாதத்தில் சட்டம் ஆக்கப் படவில்லை
என்றால் காலாவதி ஆகிவிடும். ஆறு மாதம் மார்ச் 2019 ல் வரும் .
அப்போது தேர்தல் நடைமுறை தீவிரத்தில் இருக்கும் .

தானாகவே அவசர சட்டம் காலாவதி ஆகிவிடும் . பிறகு
அமைய இருக்கும் புது அரசு மீண்டும் இதை கொண்டுவரவேண்டும் .
அதற்குள் ஏன் இந்த அவசரம் மோடிக்கு?
பிரச்சாரம் செய்ய வேண்டும். முஸ்லிம் பெண்களின் பாதுகாப்பில்
எங்களுக்கு தான் அதிக அக்கறை . மற்றவர்கள் எல்லாம்
பேசுவார்கள். நாங்கள்தான் பாதுகாக்கிறோம் என்று கொஞ்சம்
பேரையாவது இழுக்க முடிந்தால் வெற்றிதானே!
அகில இந்த முஸ்லிம் தனி சட்ட வாரியம் பிரதமருக்கு
கடிதம் எழுதுகிறது . ஐயா நாங்கள் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம்
ஆனால் அதில் உள்ள சில குறைகளை களைந்து திருத்துங்கள் என்று.
பிரதமர் இடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

உண்மையில் ஒரு முஸ்லிம் இரண்டாவது மூன்றாவது திருமணம் செய்ய
தலாக் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வேண்டும் என்றால்
இரண்டாவது திருமணம் செய்து கொண்டு விட்டால் முதல் மனைவி
அதற்காக குற்றம் என நடவடிக்கை எடுக்க முடியாது. தனக்கு தேவையான
ஜீவனாம்ச துகையை மட்டும் கோரிப் பெறலாம்.
மனைவியும் குலா சொல்லி விவாக ரத்து செய்ய முடியும்.
கணவனை மூன்றாண்டு தண்டனைக்கு உள்ளாக்கி விட்டு மனைவி
தன் குழந்தைகளுடன் எப்படி நிம்மதியாக வாழ முடியும்?
நீதிபதியிடம் முறையிட்டு ஜாமீன் பெறலாம் என்ற திருத்தம்
மனைவியின் கருத்தை கேட்டு என்ற அம்சத்தில் அடிபட்டு போகிறது.
எந்த கோணத்தில் பார்த்தாலும் அவசர சட்டம் கொண்டு வருகிற
அவசியம் கண்ணுக்குத் தெரியவில்லை.

பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்கு ஒரு கருவியாக இது விளங்க வேண்டும்
என்ற பா ஜ க வின் எதிர்பார்ப்பு எதிர்வினையை தான் ஏற்படுத்தும்.
மீண்டும் இந்து வாக்கு வங்கியை வலுப்படுத்தி முஸ்லிம் வாக்கு
வங்கியிலும் ஒரு பிளவை ஏற்படுத்தும் முயற்சியே இது
பழுதுபட்ட நோக்கம் கொண்ட எந்த சூழ்ச்சியும் வெற்றியை தராது.