Home Blog Page 66

டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தாவிற்கு மத்திய அரசு அனுமதி??!!

ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்பாக தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்து
13 பேர் இறந்த நிலையிலும்,
ஆலையை மூடி உத்தரவிட்ட நிலையிலும் ,
மீண்டும் திறக்க அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம்
தன் முயற்சிகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் ஹைட்ரோ கார்பன் எடுக்க
டெல்டா பகுதியில்
வேதாந்தா நிறுவனத்திற்கு மரக்காணம்- கடலூர் மற்றும் பரங்கிபேட்டை-வேளாங்கண்ணி
என்று இரண்டு பகுதிகளிலும்
குள்ளஞ்சாவடி – தரங்கம்பாடி என்ற பகுதியில்
ஓ ன் ஜி சி நிறுவனத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளித்து
உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மொத்தம் 40 எண்ணெய் வள பகுதிகளை
வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு கொடுக்க இருக்கிறதாம்.
மத்திய அரசின் எண்ணெய் வளத்தை சுரண்டும் கொள்கை
நாட்டை எங்கே கொண்டு விடப் போகிறதோ தெரியவில்லை.
1993 ல் தொடங்கப் பட்ட ஹைட்ரோ கார்பன் இயக்ககம்
( Directorate General of Hydrocarbons)
நாட்டில் இன்னும் தோண்டப் படாமல் இருக்கும் எண்ணெய் வளங்களை எல்லாம்
சுரண்டி எடுப்பதில் தீவிரமாக இருக்கிறது.
எண்ணெய் தேவைதான் . அத்தியாவசியப் பொருள்தான்.
தற்போது இந்திய தனது எண்ணெய் தேவைகளில்
81 % த்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. .

அதை நரேந்திர மோடியின் அரசு
67 % ஆக 2022 ம் ஆண்டுக்குள்ளும்
50 % ஆக 2030 ம் ஆண்டுக்குள்ளும்
ஆக குறைக்க திட்டமிடுகிறது.
எல்லாம் சரி. இந்த திட்டத்தில் பெரும்பங்கு
ஆற்றப் போகிறவர்கள் தனியார் முதலாளிகள்.
ஓ ன் ஜி சி நிறுவனமே குறிப்பிட்ட பங்குதான் ஆற்றப் போகிறது.
தனியார் நாட்டு நன்மையை முன்னிறுத்துவார்களா ?
தங்கள் லாபத்தை பெருக்குவார்களா?
இந்த திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் படும்போது
அதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுமா என்று ஆய்வு செய்ய
விவசாயிகள் பாதிக்கப் படுவார்களா என்பதை ஆய்வு செய்ய
சட்டத்தில் இடம் இருந்தாலும் மீறித்தான் செயல் படுகிறார்கள்.
சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்கும்
அவசியம் இல்லை என்று
சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கிறதே .

எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் அவசியம் என்ன
என்பதை ஏன் இந்திய அரசு ஆராயவில்லை.
லாபத்தை விட நட்டம்தான் தான் அதிகம் இருக்கும்.
அதிலும் குறிப்பாக நம் நாட்டு விவசாயிகள் பொதுமக்கள் தான்
அதிகம் பாதிக்கப் படுவார்கள்.
நம் மக்களை பாதிக்க வைத்து ஒரு திட்டத்தை ஏன் அமுல் படத்த வேண்டும்?
பாலைவனப் பகுதிகளில் எண்ணெய் எடுப்பதற்கும்
விவசாயம் செழிக்கும் பகுதிகளில் எண்ணெய் எடுப்பதற்கும்
வேறுபாடு இல்லையா?
தூத்துக்குடிப் பகுதிகளில் மக்கள் அச்சம் அடைந்தது பாதுகாப்பு கருதி
டெல்டா பகுதியின் அச்சம் வாழ்வாதாரம் போய் விடுமே என்பது
நமக்கும் ஒரு அரசு இருக்கிறது. அது நமது அரசுதான் .

விழிப்புணர்வு ஊட்ட மக்களை திரட்ட ஏன் அனுமதி மறுக்கிறார்கள்?
சொல்வது தவறு என்றால் நீங்கள் நியாயப் படுத்துங்கள்
இந்த அடக்குமுறைதான் மக்களின் அச்சத்தை அதிகமாக்குகிறது.
மாநில அரசு உறுதியாக நின்றால் மத்திய அரசு அடக்க முடியாது
நம் காவல் துறை நம் மக்களை அடக்குவதா?
தவறான உத்தரவுக்கு கட்டுப் பட மாட்டோம் என்ற
ஜெயப்பிரகாஷ் நாராயணின் முழுப்புரட்சி
உதிக்கும் நாளே நன்னாள் !!!

தன் பாலின உறவு குற்றமல்ல ; உச்சநீதி மன்றம் வரலாற்றைத் திருத்தியது !!!

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377
இயற்கைக்கு முரணாக ஆணுடனோ பெண்ணுடனோ மிருகத்துடனோ
பாலுறவு கொண்டால் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வழி செய்கிறது.
இதற்கு எதிராக உலகளாவிய அளவில் எல் ஜி பி டி என்று சொல்லக்கூடிய
lesbian பெண்ணோடு பெண்
gay ஆணோடு ஆண்
bisexual இரு தரப்பு உறவு
transgender பாலின மாற்றியோர் ஆகிய
சமுதாயத்தினர் தங்கள் பாலின வாழ்க்கை தனிப்பட்ட உரிமை சம்பந்தப் பட்டது என்றும் அதற்கு வேறு யாரும் ஆட்சேபிக்க முடியாது என்றும் எனவே அதற்கான
சட்ட பாதுகாப்பு வேண்டும் எனவும் போராடி வந்தனர்.

அவர்களின் கோரிக்கையில் இருந்த நியாயத்தை ஏற்றுக்கொண்டு
ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பெல்ஜியம் கனடா , கொலம்பியா, இங்கிலாந்து ,
பின்லாந்து ,பிரான்ஸ்,ஜெர்மனி,நார்வே,போர்ச்சுகல்,ஸ்காட்லாந்து,
தென் ஆப்ரிக்கா ,ஸ்பெயின,அமேரிக்கா,ஸ்வீடன்
உள்ளிட்ட 24 நாடுகளுக்கும் மேல்
இவர்கள் திருமணமே செய்து கொள்ள அனுமதித்து விட்டன.

இன்னும் 74 நாடுகளில் தன் பாலின உறவு குற்றம்தான்
குறிப்பாக இஸ்லாமும் கிறித்தவமும் தன்பாலின உறவை ஏற்கவில்லை
13 இஸ்லாமிய நாடுகளில் அது மரண தண்டனைக்கு உரிய குற்றம்
இவை எல்லாவற்றையும் மீறி தனி மனித உரிமை தான் இப்போது பிரச்னை
என் படுக்கை அறைக்குள் நானும் விரும்புகிற ஆணோ பெண்ணோ
எப்படி வாழ்ந்தாலும் மற்றவர்களுக்கு அதை ஆட்சேபிக்க உரிமையில்லை
இதுதான் இன்று உச்ச நீதிமன்றம் தந்திருக்கும் ஆணை
அரசியல் சாசன அமர்வின் ஐந்து நீதிபதிகளும்
ஒருமித்த தீர்ப்பினை வழங்கி வரலாற்றையே மாற்றியிருகிறார்கள்
இந்த தீர்ப்பும் சாதாரணமாக வரவில்லை.

இதே உச்சநீதிமன்றம் தன் பாலின உறவு குற்றம் என்றது
குற்றமில்லை என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பை மாற்றியது
பின்னால் 2017 ல் உச்ச நீதி மன்றம் 9 நீதிபதிகள் கொண்ட
அரசியல் சாசன அமர்வில் தனி நபரின் அடிப்படை உரிமை
பாதுகாக்கப் படவேண்டும் என்ற தீர்ப்பின் அடிப்படையில்
இந்த ஐந்து நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி
வரலாற்றை மாற்றியிருகிறது.

பாராளுமன்றம் இதை பரிசீலிக்கட்டும் என்ற வாதத்தையும் அது ஏற்கவில்லை
சட்டம் இயற்றப் பட்டால் கூட அதையும் உச்சநீதி மன்றம் பரிசீலிக்குமே
தீபக் மிஸ்ரா, நாரிமன், கன்வில்கர், சந்திரசூட் ,இந்து மல்ஹோத்ரா
ஆகிய ஐவரும் போற்றப் படுவார்கள்.
தீர்ப்பில் முக்கியமாக, தன் பாலின உறவு
குற்றமல்ல ( not immoral ) என்றும்
கட்டுப்பாடு அவர்களை விலங்கிடுவதற்கு சமம் என்றும்
இதுவரை ஒடுக்கி வைத்ததற்கு சமுதாயம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும்
தடை அறிவுக்கு பொருந்தாதது ,தான்தோன்றித்தனமானது ,
புரிந்து கொள்ள முடியாதது என்றும் கடுமையான
வார்த்தைகளால் சாடியிருக்கிறது.

அதே நேரத்தில் அந்தப் பிரிவில் மிருகங்களுடன் உறவு கொள்வது
தண்டிக்கப்படும் குற்றமாக நீடிக்கும் என்றும் தெளிவு படுத்தியிருக்கிறது .
அவர்களையும் மனிதர்களாக மதிக்க வேண்டும் என்ற அளவில்
இந்த தீர்ப்பு போற்றப் பட வேண்டியதே
திருநங்கைகளாய் பிறந்தோர் என்ன குற்றம் செய்தார்கள் ?
அவர்களை ஒதுக்கி வைப்பதோ இழிவு படுத்துவதோ என்ன நியாயம்?
முன்னேறிய நாடுகள் எல்லாம் எடுத்த முடிவுகள்
மற்றவர்களுக்கு முன் உதாரணம்தான்
மனிதம் காப்போம் மதிப்போம் என்பதே தீர்ப்பு.

7 பேர் விடுதலை; இன்று உச்சநீதிமன்றம் சொன்னதைத்தானே இத்தனை ஆண்டுகளாய் கேட்டோம்?!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும்
அரசியல் சட்டம் மாநில ஆளுநருக்கு வழங்கியிருக்கிற
பிரிவு 161 ன் படி விடுதலை செய்யுங்கள் என்றுதான்
இத்தனை நாளும் திமுக பாமக ,விடுதலை சிறுத்தைகள்,
மதிமுக நாம் தமிழர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட
அத்தனை பேரும் கேட்டுக் கொண்டிருந்தோம்.
ஜெயலலிதா தேவையில்லாமல் சட்ட மன்றத்தில்
மத்திய அரசின் அனுமதியோடோ அனுமதி இல்லாமலோ
ஏழு பேரையும் விடுதலை செய்வோம் என்று அறிவித்து
மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி தடை பெற வழி செய்தார்.

அதற்குப் பிறகும் தேவையில்லாமல்
குற்ற விசாரணை சட்ட பிரிவுகள் 432 433, மற்றும் 435 ன் படி
மத்திய அரசின் ஒப்புதல் வேண்டுமா தகவல் தெரிவித்தால் போதுமா
என்ற விவாதத்திலேயே இத்தனை ஆண்டுகளாய் இந்த பிரச்னை
உச்ச நீதிமன்ற பரிசீலனையில் இருந்து வந்து
இன்று ஒரு முடிவை எட்டியிருக்கிறது.
உச்சநீதி மன்றம் இன்று தமிழக ஆளுநர்
தன்னிடம் அளிக்கப் பட்டிருக்கும் கருணை மனு மீது
முடிவெடுக்க உத்தரவிட்டிருக்கிறது.

தமிழக அரசு உடனே அமைச்சரவையை கூட்டி
விடுதலை செய்ய தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு
அனுப்பினால் அவர் அனுமதி அளித்து தான் ஆக வேண்டும்.
மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் அவர்களை விடுவித்தால்
‘ மிகவும் மோசமான முன் உதாரணம் ஆகிவிடும்’ என்றும்
‘ சர்வதேச பின்விளைவுகள் ‘ ஏற்படும் என்றெல்லாம் கூறி
விடுதலையை எதிர்த்தது.

இப்போதும் ஆளுநர் தன் முடிவை எடுக்க மத்திய அரசு
தன் அதிகாரத்தை செலுத்த முடியாது என்றாலும்
புற வழிகளில் தாமத படுத்த முனையலாம்.
அதற்கு இடம் கொடுக்காமல் உடனடியாக தமிழக அரசு
அமைச்சரவையை கூட்டி தீர்மானம் இயற்றி
ஆளுநருக்கு அனுப்ப வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும்.
குட்கா விவகாரத்தில் சிக்கி தவிக்கும் தமிழக அரசுக்கு
இதற்கு நேரம் இருக்க வேண்டுமே?!
அல்லது இதற்கும் மத்திய அரசின் அனுமதியை
எதிர்நோக்கி காத்திருப்பார்களா ?

சாயம் வெளுத்த அழகிரி ? 1 லட்சம் 12000 ஆனது!

சிலர் பேசியே காணமல் போவார்கள்.
அந்த பட்டியலில் சேர்ந்து கொண்டார் அழகிரி.
ஒரு லட்சம் பேரை கூட்டி அமைதி ஊர்வலம் என்று அறிவித்து
இன்று கூடிய கூட்டம் 12000 என்று சத்தியம் தொலைக்காட்சி
வந்திருந்த வாகனங்கள் மக்கள் ஆகியோரை நேரில் அனுப்பி
ஆய்வு செய்து கணக்கு காட்டியது
பதினோரு மணிக்கு தொடங்கிய ஊர்வலத்தை அழகிரி
நடத்திய விதம் விநோதமானது.

பின்னால் நெருக்கிய தொண்டரை திரும்பி கையை ஓங்கித் தள்ளுகிறார்.
பிறகு ஒரு ஜீப்பில் தன் குடும்ப உறவுகளோடு
ஒரு சில பெயர் தெரிந்த நபர்களோடு
எந்த கட்டுப்பாடும் இன்றி விசில் அடித்துக் கொண்டு வந்தது கூட்டம்
கலைஞருக்கு இப்படியா மௌன அஞ்சலி செலுத்த வேண்டும்.
ஏதோ அறிவிப்பு வெளியிடுவார் என்று
எதிர்பார்த்த நிலையில் – கடைசியில்
இங்கே வந்திருக்கும் ஒன்றரை லட்சம் பேர் மீதும்
நடவடிக்கை எடுப்பார்களா என்று அங்கே சென்று கேளுங்கள் என்றார்.

வந்தவர்கள் திமுக தொண்டர்களா கூட்டி வரப்பட்ட கூலிகளா
என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
எதற்காக இந்த மௌன அஞ்சலி கூட்டம்
யாரை மிரட்ட – மிரட்டியா கட்சிப் பணி செய்ய முடியும்
உண்மையிலேயே கட்சிப்பணி செய்யும் எண்ணம் இருந்தால்
மௌனம் காக்க வேண்டும்.
ஒரு பெயர் தெரிந்த தலைவர் கூட கூட இல்லை
எல்லாரும் எதிர்பார்ப்பது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று
யார் அவர்கள் தெரியுமா திமுக தோற்க வேண்டும் என்று
அனுதினமும் அங்கப் பிரஷ்டம் செய்பவர்கள்
அவ்வளவு அக்கறை? இவர் நுழைய வேண்டும்
குடைச்சல் கொடுக்க வேண்டும்-

ஸ்டாலின் மனஅமைதி இழக்க வேண்டும்
எத்தனையோ சோதனைகளை தாண்டிய திமுக
இதையும் தாண்டும். அழகிரியின் தொண்டாற்றும்
ஆசையை பொறுத்த வரை
மற்றவர்கள் சொல்ல வேண்டும் இவர் சேவை தேவை என்று
அன்று வரை இவர் காத்திருந்தால்
ஒருவேளை அந்த வாய்ப்பு வரலாம்

குட்கா ஊழல் – சிபிஐ விசாரணையில் சினிமாவை மிஞ்சும் அதிரடி திருப்பங்கள்?

குட்கா ஊழல் தொடர்பாக சிபி ஐ மேற்கொண்டு வரும் விசாரணையில்
சினிமாவை மிஞ்சும் அதிரடி காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
இன்று 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சி பி ஐ அதிரடி சோதனை
நடத்தி வருகிறது.

காவல் துறை தலைவர் – தமிழக டிஜிபி டி கே ராஜேந்திரன் வீட்டில்
அவரை அலுவலகம் செல்ல விடாமல் விசாரணை நடத்தி வருகிறது.
அதேபோல் முன்னாள் சென்னை காவல் துறை கமிஷனர் ஜார்ஜ் வீட்டில்-
தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் என்று
சோதனைகள் நீள்கின்றன.

இந்த வழக்கில் தொடக்க முதலே குற்றவாளிகளை பாதுகாக்க
எல்லா வேலைகளையும் செய்து வந்த தமிழக அரசு
இப்போது மட்டும் எப்படி காட்டிக் கொடுக்கும்
அல்லது பதவி நீக்கும். ?

திமுக தலைவர் ஸ்டாலின் -மருத்துவர் ராமதாஸ் கம்யுனிஸ்டு தலைவர்கள்
எல்லாம் கேட்டுக்கொண்டபடி எடப்பாடி விஜயபாஸ்கரை நீக்கிவிடுவாரா?
முதல்வர் பிழைப்பு 18 எம் எல் ஏ வழக்கு தீர்ப்பில் தொங்கிக்கொண்டிருகிறது.!
இதில் அவராவது நடவடிக்கை எடுப்பதாவது.?

என்னென்ன செய்து விசாரணையை தடுக்க முயற்சித்தார்கள்?
வருமான வரித்துறை கடிதம் பற்றி விசாரிக்க நினைத்த
டி ஜி பி அசோக்குமாரை பதவி விலக்கினார்கள.
அந்தக் கடிதத்தை காணமல் அடித்த ராம்மோகன் ராவை காப்பாற்றினார்கள்.
கடிதம் காணோம் என்று கிரிஜா வைத்தியநாதனை
உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வைத்தார்கள்.

வருமான வரித்துறை கடிதம் காரணமாக நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தால்
விஜயபாஸ்கர், ஜார்ஜ் ,ராஜேந்திரன் எல்லாம்
விசாரணை வளையத்துக்குள் வருவார்கள்
என்பதற்காக ஜார்ஜை விட்டு கீழ் மட்ட அதிகாரிகளை குற்றம்
சுமத்தி கடிதம் எழுத வைத்து மேலே உள்ளவர்கள் மீது
நடவடிக்கை போகாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள்.
திமுக நடவடிக்கையால் உயர் நீதிமன்றம் சி பி ஐ விசாரணைக்கு
உத்தரவிட்டதும் – அதை எதிர்த்து ஒரு கடைநிலை ஊழியரை வைத்து
உச்ச நீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்ய வைத்தார்கள்.
அதை உச்சநீதி மன்றம் நிராகரித்ததால்இப்போது சிபிஐ
குடோன் அதிபர் மாதவராவை விசாரித்து
இப்போது எல்லார் வீடுகளிலும் ரைடு நடத்தி வருகிறது.

வருமான வரி துறை கடிதத்தின் அடிப்படையில்தான்
நடவடிக்கைகள் தொடங்கப் பட்டிருக்க வேண்டும்- அது கடைசியில்
போயஸ் கார்டன் வீட்டில் சசிகலா அறையில் கிடைத்தது ?!
சி பி ஐ விசாரணை தொடரட்டும் – உண்மை வெளிவரட்டும்!
ஆனால் குற்றம் சாட்டப் பட்ட டிஜிபி ராஜேந்திரனுக்கு
பதவி நீட்டிப்பு வழங்கியதன் மூலம்
இந்த ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
அவர்கள் எங்கள் ஆசி பெற்றவர்கள்தான்
எனவே நாங்கள் பாதுகாப்போம் !

இவர்களாவது அரசியல்வாதிகள்- டி ஜி பி அவர்களே
உங்களுக்காவது காவல் துறையின் மதிப்பை காக்க வேண்டும்
என்ற உணர்வு வரவில்லையா?
அதெப்படி குற்றச்சாட்டை சுமந்து கொண்டே
காவல் துறை தலைவர் பொறுப்பில் தொடர்கிறீர்கள்?
அது காவல் துறைக்கே களங்கம் என்பது புரியாதவரா நீங்கள்?
நீதிமன்றம் தலையில் குட்டும் வரையில்
காத்திருக்கப் போகிறீர்களாக்கும் ?!

கச்சா எண்ணெய் வாங்கும் விலை பாதியாக குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை உயர யார் காரணம்?

2014 ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை 145 டாலர்
பெட்ரோல் விலை ரூபாய் 60
டீசல் ரூபாய் 45
பால் ரூபாய் 40
2018 ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை 70 டாலர்
பெட்ரோல் விலை ரூபாய் 80
டீசல் ரூபாய் 72
பால் ரூபாய் 52
ஏன் இப்படி நடக்கிறது? யார் காரணம்?
நமது மத்திய மாநில அரசுகள்தான் காரணம்.

இவர்கள் தங்கள் வருமானத்தை இழக்க மாட்டார்களாம் .
பொதுமக்கள் இந்த உயர்வை தாங்கிக் கொள்ள வேண்டுமாம்!
அதாவது மத்திய மாநில அரசுகள் தங்கள் வருவாயை
உயர்த்திக் கொண்டே போகிறார்கள்.
2014 ல் மத்திய மாநில அரசுகள் வசூலித்த வரிவிகிதத்தை
2018 ல் வசூலிக்கும் வரிவிகிதத்தோடு ஒப்பிட்டு பார்த்தால்
இந்த அநியாயம் விளங்கும்.
நான்கு அம்சங்கள் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கின்றன.
டீலர் விலை
மத்திய அரசின் கலால் வரி
டீலர் கமிஷன்
மாநில அரசின் வாட் வரி
இந்த நான்கும் சேர்ந்து விற்கும் விலையாக மாறுகிறது.

தற்போது மத்திய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூபாய் 21.48 வசூலிக்கிறது.
மத்திய அரசுக்கு மொத்த வரிவருவாயில் 23 % கலால் வரியில் கிடைக்கிறது.
மாநில அரசுகளுக்கு மொத்த வரிவருவாயில் வாட் மூலம்
சராசரியாக 10% முதல் 14 % வரை கிடைக்கிறது.
மாநில அரசுகள் தங்களுக்கு கிடைக்கும்
வாட் வரி வருவாய் குறைந்து விடும்
என்றுதான் ஜி எஸ் டி யை எதிர்க்கிறார்கள்
அதாவது இருவரும் தங்கள் வருவாயை குறைத்துக் கொள்ளமாட்டார்கள்
பொதுமக்கள் மீது வரியை அதிகரிக்க தயங்க மாட்டார்கள்.
சில மாநில அரசுகள் தங்கள் விகிதத்தை குறைத்துக் கொண்டு
நல்ல பெயர் வாங்கின.

அதெல்லாம் சரி மத்திய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூபாய் 34 வீதம் 15 நாடுகளுக்கும் டீசலுக்கு லிட்டருக்கு ரூபாய் 37 வீதம் 29 நாடுகளுக்கும்
ஏற்றுமதி செய்வது ஏன்? தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த இந்த செய்தி
அதிர்ச்சி அளிக்கிறதல்லவா ? லாபமே இல்லாமல் நல்ல பெயர் வாங்கவோ ஒப்பந்தம் காரணமோ வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க தயங்காத மத்திய அரசு
சொந்த நாட்டு மக்களுக்கு விலையை உயர்த்தி
விலைவாசி உயர காரணமாக இருக்கலாமா?
நியாயப் படுத்தவே முடியாத அக்கிரமங்கள் இவை??!!

ஆராய்ச்சி மாணவி சோபியா கைது; தமிழிசையின் சகிப்பின்மையும் ஆணவமும்???!!!

கனடாவில் பயிற்சி பெரும் ஆராய்ச்சி மாணவி சோபியா
தூத்துக்குடிக்கு விமானத்தில் வரும்போது தமிழிசையும் வந்திருக்கிறார்
‘ பாசிச பாஜக ஆட்சி ஒழிக ‘ என்று முழக்கம் எழுப்பிருக்கிறார்
விமானத்தில் வேறு எந்த பயணியும் ஆட்சேபிக்க வில்லை
விமான பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை
தமிழிசை தமிழக பா ஜ க தலைவர்- குமரி அனந்தன் மகள்
வசந்த குமாரின் அண்ணன் மகள் – இவர்கள் எல்லாம் காங்கிரஸ்
மாணவி சோபியா முழக்கத்தை தவிர்த்திருக்கலாம் – அது வேறு
இவருக்கு சகிப்புத்தன்மை வேண்டாமா ?

மத்தியில் ஆட்சி புரியும் மமதை தலையில் ஏறி விட்டதா? புகார் கொடுக்கிறார்
எடப்பாடியின் காவல் துறை மாணவியை கைது செய்து
சிறையில் அடைக்கிறது- அவர் பிணையில் வெளியில் வருகிறார்
தமிழிசை மீது சொபியாவின் தந்தை தங்கள் மீது தாக்குதல்
என புகார் கொடுக்கிரார் – நடவடிக்கை ஏதும் இல்லை ?!
சோபியா தலித் என்பதால் பிரச்னை வெடிக்கிறது
மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். வலைத்தளங்கள்
தமிழிசைக்கு எதிரான பதிவுகளால் நிறைகின்றன
இதெல்லாம் தேவையா தமிழிசை?
உங்களுக்கு பெருமை சேர்க்க கூடியவையா நடப்பவை?
அறிவுரை கூற கூட யாரும் இல்லையா?

பா ஜ க வில் இருக்கும் பார்ப்பனர் அல்லாதாரை
சுயநலத்திற்காக காட்டிக் கொடுப்பவர்கள் என்றுதான்
தமிழ்ச்சமூகம் பட்டம் கட்டி வைத்திருக்கிறது.
அல்லது தவறாக வழி தவறி சென்றவர்கள்
அல்லது இந்து என்ற சொல்லின் கவர்ச்சியால்
இன உணர்வு மறந்தவர்கள்
எல்லாவற்றுக்கும் மேலாக எதிரியின் சுயரூபத்தை
அறியாதவர்கள் உணராதவர்கள் தெரிந்தே தவறான இடத்தில் இருப்போரும்
தெரியாமல் அங்கே இருப்போரும் இப்போது மத்தியில் ஆட்சியில் இருப்பதால் கொஞ்சம் அகங்காரம் தலையில் ஏறியிருக்கலாம் அன்புச்சோதரி தமிழிசை உடனே புகாரை திரும்பப் பெற்று தமிழர்கள் ஒருவர்க்கொருவர்
விட்டுக் கொடுத்துக் கொள்வார்கள் என்று நிரூபி.

ஏதோ இயக்கம் பின்புலத்தில் இருப்பதாக தமிழிசை
சந்தேகிப்பதில் உண்மை இருந்தால் காவல் துறை
விசாரிக்கட்டும்- ஆனால் பா ஜ க தலித்துகளை
அடக்கி வைத்துக் கொண்டே பல கட்சிகளில்
இருந்து அவர்களை வளைக்க முயற்சிப்பது
உண்மைதானே?? அடக்குவது நாங்கள் அல்ல
இதர பிற்பட்டோரே என்று பார்ப்பனர்கள்
பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது.

ஏனென்றால் இந்த சாதி முறையை உருவாக்கி
எல்லாரையும் பிரித்து வைத்திருப்பது யார்?
தான் மட்டும் மேலே அமர்ந்து கொள்கிறேன்
கீழே இருக்கும் மூவரும் எப்படி வேண்டுமானாலும்
அடித்துக் கொள்ளுங்கள் – இதுதானே சூத்திரம்
பிரச்னை பெரிதாகக் கூடாது
அதற்கு ஒரே வழி தமிழிசை சோபியா மீதான
புகாரை திரும்பப் பெறுவதுதான்??!!
நானும் சொல்கிறேன் ‘ பாசிச பாஜக ஆட்சி ஒழிக’
என்று திமுக தலைவர் ஸ்டாலினும் சொல்லியிருக்கிறார்.
எத்தனை லட்சம் பேர் மீது வழக்குப் போடுவீர்கள்??

கொள்முதல் நிலையங்களை மூடி டெல்டா விவசாயிகளை பழி வாங்குகிறதா மத்திய அரசு?

2022 க்குள் விவசாய விளைபொருட்களின் கொள்முதல்
விலையை இரட்டிப்பாக்குவதாக மோடியின் அறிவிப்பு இருந்தது.
இடையில் பெயரளவுக்கு கொள்முதல் விலையை உயர்த்தியது
அதிருப்தியை ஏற்படுத்தினாலும் தேர்தல் வரும்போதாவது
ஏதாவது உருப்படியாக செய்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
ஆனால் டெல்டா பகுதியை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து
விவசாயிகளை மறைமுகமாக விவசாயத்தில் இருந்து
வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய அரசு தொடர்ந்தது.

இந்நிலையில் இப்போது தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல்
நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக
தகவல் வெளியானது அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது.
கடந்த ஆகஸ்டு 31ம் தேதி வரை கொள்முதல் செய்த நெல்லை அரைத்து
அரிசியாக தந்து விட்டு நெல் கொள்முதலை நிறுத்துமாறு மத்திய அரசு
அறிவுறுத்தி இருப்பதாக கூறப்பட்டது.

திடீர் என்று தஞ்சை மாவட்டத்தில் 59 கடலூர் மாவட்டத்தில் 49
விழுப்புரம் மாவட்டத்தில் 15 கொள்முதல் நிலையங்களும் மூடப்பட்டன.
தமிழகம் முழுவதும் 1500 கொள்முதல் நிலையங்களும்
டெல்டாவில் மட்டும் 600 கொள்முதல் நிலையங்களும் இயங்கி வருகின்றன.
கொடுமை என்னவென்றால் நெல்கொள்முதல் குவிண்டாலுக்கு ரூபாய் 1750 என்று
அறிவிக்கப் பட்டாலும் கொள்முதல் செய்வது என்னவோ
பழைய விலையான ரூபாய் 1550 க்குத்தான்.

இந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்புகள் ஏமாற்றமளிப்பதாக இருக்கின்றன.
இவர்கள் மத்திய அரசின் முகவராகத்தான் செயல் படுகிறார்களாம் . இதில் சில
விதிமுறைகளை ஒட்டித்தான் இந்த மூடல்கள்.
அதாவது பராமரிப்பு பணிக்காக இந்த மூடல்கள் என்று
அமைச்சர் காமராஜ் விளக்கம் தருகிறார்.
கொள்முதல் செய்வதே குறிப்பிட்ட காலத்தில்தான்.
இடையில் உள்ள காலத்தில் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாதா?
எங்கெல்லாம் நெல் வரத்து இருக்கிறதோ எங்கெல்லாம்
நேரடி கொள்முதல் நிலையங்கள் தோடர்ந்து செயல்படும்
என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கேள்வி ஏன் இருக்கும் நிலையங்களை மூடவேண்டும் என்பதுதான்.
ஏற்கெனெவே பல பிரச்னைகளால் நொடித்துப் போயிருக்கும் விவசாயிகளை
மீண்டும் சோதனைக்கு உள்ளாவது அரசுக்குக் நல்லதல்ல.
மாநில சுயாட்சியை வலியுறுத்தி ஆட்சி செய்பவர்கள்
மத்திய ஆட்சியை மட்டுமே நம்பி திட்டங்களை வகுப்பது சரியல்ல.
மத்திய அரசின் பங்கும் இருக்கட்டும்.
நீங்கள் சுயமாக விருத்தி செய்வதை அவர்கள் தடுக்க வில்லையே .
விவசாயிகளிடம் இருந்து எல்லாக் காலத்திலும்
சாகுபடி விளைபொருட்கள் கொள்முதல் செய்யப் படும்
என்று தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும்.
எதற்கும் மத்திய அரசை சாக்கு சொல்லும் போக்கை
கைவிடவேண்டும்.

செம்மரம் வெட்டியதாக ஆந்திராவில் மேலும் ஒரு தமிழ்த் தொழிலாளி காவல் துறையால் சுட்டுக் கொலை?

ஆந்திர காவல் துறையின் ரத்த தாகம்
இன்னும் அடங்க வில்லை போல் தெரிகிறது.
முன்பே 23 தமிழ் த் தொழிலாளிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
அந்த விசாரணையே இன்னும் முற்றுப் பெறவில்லை.
நேற்று மீண்டும் ஒரு தமிழ்த் தொழிலாளி – காமராஜ்
செம்மரம் வெட்டியதாக சுட்டுக் கொல்லப் பட்டார்
எத்தனை எச்சரிக்கை களும் பலன் அளிக்க வில்லை.

ஏன் என்றால் வேலையில்லாதவர்கள் மத்தியில்
ஒரு நாளைக்கு சில ஆயிரங்கள் கூலி கொடுக்கிறோம்
என்று கூவி அழைக்கும் போது சபலத்துக்கு
அடிமையாகி இன்று சடலமாக கிடக்கிறார்கள்.
சம்பவம் நடத்து இரவில் என்பதால்
காவல் துறை சொல்வதுதான் எடுபடும்.
ஏன் காலுக்கு கீழே சுட வில்லை என்று கேட்பதா?
ஏன் வேலைக்கு அழைத்து வந்தவர்கள் மீது வழக்கில்லை
என்று கேட்பதா?

ஆயிரக்கணக்கானவர்கள் விசாரணையின்றி ஆந்திராவில்
சிறையில் வாடுகிறார்களே?
அவர்களை மீட்க ஜெயலலிதா
முன்பு ஒரு திட்டம் அறிவித்தார்.
திமுக தனது வழக்கறிஞர் அணியையே அனுப்பியது .
தொடர்கிறதே காவல் கொலைகள் ?
தமிழக அரசு மௌனம் காக்கிறதே?
அவர்களுக்கு ஒரு பங்கும் இல்லையா?
இது தமிழ்-தெலுங்கர் பிரச்னையாக உருமாறும்
அபாயமும் இருக்கிறது இல்லையா?
அதனை தடுக்க இரு அரசுகளுக்கும் கடமை உண்டு.
பக்கத்து மாநிலங்களில் வசிக்கும்
தமிழர் நலன் காக்க ஒரு துறையே வேண்டும் போல் இருக்கிறது.

அதிர்ச்சியளிக்கும் மோடி தந்த வாராக் கடன் விபரங்கள் – குற்றவாளிகள் யார்?!

பிரதமர் மோடி அஞ்சலக வங்கி சேவையை தொடங்கி வைத்து பேசும்போது

அதிர்ச்சியளிக்கும் வங்கி கடன்களில் வாராக்கடன் பற்றிய விபரங்களை கூறினார்.

“ சுதந்திரம் அடைந்தது முதல் 2008 வரை வழங்கப் பட்ட வங்கிக்கடன்கள்
ரூபாய் 18 லட்சம் கோடி.
ஆனால் அடுத்த 6 ஆண்டுகளில் விண்ணைதொடுகின்ற அளவுக்கு
ரூபாய் 52 லட்சம் கோடி வங்கி கடன் தரப் பட்டு உள்ளன.
தொலைபேசி வாயிலாக அழைத்தே கூட சில கடன்கள் வழங்கப் பட்டன.

ஒரு குடும்பத்தின் உத்தரவின் பேரில்
குறிப்பிட்ட சிலருக்கு கடன்கள் வழங்கப் பட்டன.
திருப்பி செலுத்தாத பொது அவைகள் மறுசீரமைப்பு செய்ய
வங்கிகள் கட்டாயப் படுத்தப் பட்டன.
வாராக் கடன்களின் பின்னால் முந்தைய காங்கிரஸ் அரசு மறந்து கொண்டது.
1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் கடன்
வெறும் 12 பேருக்கு மட்டுமே வழங்கப் பட்டது.
மேலும் 27 பேர் 1 லட்சம் கோடி ரூபாய் கடனை வாங்கி கொண்டு
திரும்ப செலுத்த வில்லை. “

பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டு காங்கிரசை மையப் படுத்தி இருக்கிறது.
இதற்கு பதில் கூறும் வகையில் ப. சிதம்பரம்
தனது ட்விட்டரில் ” நாங்கள் கொடுத்ததாகவே இருக்கட்டும் .
அதில் எத்தனை கடன்களை வசூலிக்க தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. ?
எத்தனை கடன்களை மீண்டும் கொடுத்தது ஏன்?
அவர்களுக்கு இந்த அரசு சலுகைகளை நீட்டித்தது ?”
என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக் கிறார்.
இவைகளில் இருந்து ஒரு உண்மை மட்டும் வெளிவருகிறது.
யார் ஆட்சியில் இருந்தாலும் அதில் பலன் பெறுபவர்கள்
பெரு முதலாளிகள் மட்டுமே என்பதுதான் அந்த உண்மை.

சாதாரண விவசாயி ஒரு டிராக்டர் கடன் வாங்கி
ஒரு தவணை பாக்கி வைத்தால் ஜப்தி செய்யும் வங்கிகள்
ஏன் இந்த பெரு முதலாளி மோசடிக்காரர்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்க வில்லை என்பதை விளக்குவார்களா?
எத்தனை சட்டங்கள் இருக்கின்றன வங்கி நிதி ஒழுங்கு படுத்த
அத்தனையும் ஒரு சிலரின் கொள்ளைக்குத்தானா?
சட்டங்களையும் மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
வங்கி நடவடிக்கைகள் பொது வெளியில்
பகிரங்கமாக வெளியிடப் பட்டால்தான்
இந்த மோசடிகள் முடிவுக்கு வரும்.