Home Blog Page 67

பேரூர் ஆதீனம் மறைவு தமிழ் மறுமலர்ச்சிக்கு ஏற்பட்ட இழப்பு??!!

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார்
93 வயதில் மறைந்திருக்கிறார்.
மு க ஸ்டாலின், மருத்துவர் ராமதாஸ் , கி. வீரமணி ,
போன்றவர்களுடன் இராம. கோபாலனும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
கோவில் குடமுழுக்குகளையும் திருமணங்களையும்
தமிழ் முறைப்படி நடத்தி மாற்றத்தை ஏற்படுத்தியவர்.
அறநெறியும் சமய நெறியும் மாறாமல் வாழ்ந்த அவர்
தீண்டாமை ஒழிப்புக்காக குரல் கொடுத்தவர் என்பதிலிருந்தே
சமயம் சார்ந்திருந்தும் சீர்திருத்தக் கொள்கைகளில்
நம்பிக்கை கொண்டவர் என்பது புலனாகும்.

மதம் பேசினார் என்பதற்காக மட்டுமே ராம கோபாலன்
போன்றவர்கள் ஏற்றுக் கொண்டார்களே தவிர
அவரது சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல.
தமிழ்க் கல்லூரி நடத்தி தமிழ் பரப்பினார் என்பது
கூடுதல் முக்கிய நினைவுப் பணி.
தமிழ் திருமணம் நடத்துவோர் குறைந்து கொண்டிருப்பது
கவலை அளிக்கிறது.

சீர்திருத்த திருமணம் என்ற பெயரில்
கடவுள் மறுப்பு திருமணம் நடப்பதில்லை.
அரசியல் தலைவர்களை முன்னிறுத்தும் திருமணங்கள் தான்
நடை பெற்று வருகின்றன.
திராவிட இயக்கங்கள் உண்மையான சீர்திருத்த திருமணங்களை
நடத்த வலியுறுத்த தொடங்கினால் மட்டுமே உண்மையான திருப்பம் ஏற்படும்.
கடவுள் மறுப்பு திருமணம் மட்டும் முக்கியமில்லை.
சாதி மறுப்பு திருமணங்கள் தான் மிகவும் முக்கியம் .

இட ஒதுக்கீடால் சமுதாயம் முன்னேற முடியாதாம்??!! டாக்டர் கிருஷ்ணசாமியின் பிதற்றல்??!!

இட ஒதுக்கீடு வந்திராவிட்டால் இன்றைக்கு தாழ்த்தப்பட்டோராகவும்,
பிற்பட்டோராகவும், மிக பிற்பட்டோராகவும் இருப்பவர்கள் முன்னேறி இருக்கவே
முடியாது. இந்த அடிப்படை அறிவு எல்லாருக்கும் இருக்கிறது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு
இல்லாமல் போனதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது.
இட ஒதுக்கீட்டை ஒழிக்கத்தானே பார்ப்பனர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் .
அவர்களுக்கு துணை போவதுபோல் இருக்கிறது கிருஷ்ணசாமியின் பேச்சு.

சமூக நீதியை தவறாக புரிந்து கொள்கிறோமாம்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு சமுதாயம்
மேலாதிக்கம் செய்தது என்று ஒப்புக் கொள்ளும் கிருஷ்ணசாமி
ஒட்டு மொத்த சமுதாய முன்னேற்றத்துக்கு
அந்த ஒரு பார்முலாவை மட்டும் பயன் படுத்துவது சரியல்ல என்கிறார்.
ஏதோ ஒரு ஏற்பாடு அவரை இப்படி பேச வைத்திருக்கிறது என்று மட்டும் புரிகிறது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பலர்
எப்படியெல்லாம் பேசப் போகிறார்களோ?

முன்பே அவர் பா ஜ க வுடன் நெருங்குகிறார் என்று செய்தகள் வந்தன.
இப்போது உறுதி பட்டு விட்டது
இடஒதுக்கீடு வருவதற்கு முன் – பின் என்று புள்ளி விபரங்களை
அவர் ஆராய்ந்தாரா என்று தெரிய வில்லை.
ஆதிக்க சக்தியிடம் ஆட்பட்டு விட்டார் என்று மட்டும் தெரிகிறது.
இரண்டு கருத்துக்களை அவர் கூறியிருக்கிறார்.
அதில் இட ஒதுக்கீடு குறித்து அவர் கூறிய கருத்துக்கள் தான்
நமக்கு சரி என்று படவில்லை
காட்டிக்கொடுக்கும் வேலையை இதைவிட சிறப்பாக செய்யமுடியாது.
எல்லாரும் இட ஒதுக்கீடுக்காக போராடிக்கொண்டிருக்கும்போது
இவர் மட்டும் வேண்டாம் என்றால் அதற்கு என்ன பெயர்?
திருமாவளவனும் ஜான் பாண்டியனும் இதர தலித் தலைவர்களும்
ஒப்புக் கொள்வார்களா?

இன்றைக்கும் கூட இட ஒதுக்கீடு எந்த அளவு சாதித்திருக்கிறது
என்பதற்கு புள்ளி விபரம் வேண்டுமா வேண்டாமா?
சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் சராசரியாக
ஐம்பது சதம் அளவுக்கு முன்னேறி சமமாகத்தான்
வாழ்கிறார்கள் என்றால் இட ஒதுக்கீடு தேவையில்லைதான்!
அந்த நிலை வந்து விட்டது என்று எதை வைத்து சொல்கிறார்?
கடுமையான கண்டனத்துக்கு உரிய கருத்து இது.

அடுத்து பள்ளன், காலாடி, கடையன் , குடும்பன், பண்ணாடி, தேவேந்திர குலத்தான்
ஆகிய ஆறு பேரையும் தேவேந்திர குல வேளாளர் என்று வகைப்படுத்தி
பட்டியல் வகுப்பிலிருந்து அவர்களை நீக்க வேண்டும் என்பது
அவரது அடுத்த கோரிக்கை.

இதில் ஜான் பாண்டியனும் இவரும் ஒரே கருத்தில் இருக்கிறார்கள்.
பொருளாதார ரீதியிலும் , சமுதாய ரீதியிலும், கல்வி ரீதியிலும்
இவர்கள் முன்னேறி விட்டார்கள் என்று இவர்களே ஒப்புகொண்டால்
பட்டியல் வகுப்பிலிருந்து நீக்க யாருக்கும் ஆட்சேபணை இருக்காது.
எஸ் சி என்ற முத்திரை முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாக
இருக்கிறது என்ற இவர் கருத்தும் ஆராய்ச்சிக்குரியது.
அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கலைஞர் தந்த போது
இவர் எதிர்த்தது ஏன்? அவர்கள் மீது இவருக்கு அக்கறை இல்லையா?
அவர்கள் பங்கை அவர்களுக்கு கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை?

ஒட்டு மொத்தமாக் சாதி ஒழிப்பு இலட்சியமாக இருக்க வேண்டும்
என்று சாதித் தலைவர்கள் ஒவ்வொரு முறையும் சொல்லிக்
கொண்டே இருக்கிறார்களோ அன்றுதான் அவரகள் மதிக்கப் படுவார்கள்.
தமிழர் என்று அனைவரும் இணைவோம் என்பதே இறுதி இலட்சியம்
என்பதை இவர்கள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.!
இல்லைஎன்றால் சாதியை வைத்து தங்கள் இருப்பை செல்வாக்கை
தக்க வைக்க முயற்சிக்கிறார்கள் என்ற பழி உங்கள் மீது தங்கி விடும்.

ஒரே நாடு ஒரே தேர்தல்; மோடி , அமித்ஷாவின் சர்வாதிகார கனவு ?!

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பா ஜ க வின் கனவு.
பிரதமர் மோடி அடிக்கடி இந்தக் கனவுக்கு உருவம் கொடுத்துக்கொண்டே இருப்பார்.
ஆனால் நடக்கவே முடியாத கனவு இது.
அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தலோடு
29 மாநிலங்களுக்கும் தேர்தல் கொண்டு வர இருவருக்கும் ஆசை.

வாஜ்பாய் வெல்வோம் என்று நம்பி – 2004 ல்
தேர்தலை முன்கூட்டியே நடத்தினார்- தோற்றார்
எனவே இவர்கள் நம்புவது நடக்குமா என்பது வேறு
மோடியின் செல்வாக்கில் பல மாநிலங்களில் ஆட்சியை
பிடிக்கவும் தக்க வைக்கவும் ஆசை.

சட்ட கமிஷனின் தலைவர் பதவி முடியும் முன்
அதன் தலைவர் சௌஹன் எல்லோரையும்
கலந்து கொண்டு ஒரே தேர்தலாக நடத்த
அழைப்பு விடுத்திருக்கிறார்
மத்திய அரசின் விருப்பத்தின் படிதான் இந்த அழைப்பா?
எல்லா கட்சிகளும் ஒப்புக் கொள்ள வேண்டும்
அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்
சில சட்ட மன்ற ஆயுளை கூட்ட வேண்டும்
சில வற்றின் ஆயுளை குறைக்க வேண்டும்
இவையெல்லாம் நடக்க கூடியதா?

ஐந்து வருடம் தேர்ந்தெடுக்கப்படும்
மாநில அரசோ மத்திய அரசோ
முழுக்காலத்தையும் நிறைவு செய்யும்
என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இடைப்பட்ட காலங்களில் மத்திய அரசு
அதிகாரத்தை கைப்பற்றும் வாய்ப்புகள் தான் அதிகம்.
அது ஜனநாயகத்துக்கு நல்லதா?
1967 க்குப் பிறகு ஒரே தேர்தலாக நடத்த முடியவில்லையே ஏன்?
செலவு மிச்சம் என்றால் மக்களின் குரலுக்கு மதிப்பு ?

மோடியின் நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாக
ஒரே நாடு ஒரே தேர்தல் சேரப்போகிறது.
ஒரே தேர்தல் ஒரே கல்வி ஒரே மொழி
ஒரே மதம் ஒரே மருத்துவம் கடைசியில்
ஒரே கல்லறை – இதுதானா உங்கள் ஆசை மோடி அவர்களே?!
நூறு பூக்கள் பூக்கட்டும் என்றார் மாவோ
பன்மையில் ஒருமைத்தன்மை ( Unity in Diversity)
அதுதான் இந்தியாவின் அழகு முகம்
பன்மைத்தன்மையை போற்றுவோம்
இந்தியாவுக்கு வலிவும் வளமையும் தரும்
மந்திரம் அது ஒன்றே ?!

மிரட்டி நுழையப் பார்க்கும் அழகிரி! தப்புக் கணக்கு போடுகிறார்?!

திமுகவில் அனுமதித்தால் ஸ்டாலின் தலைமையை ஏற்க அழகிரி தயாராம் . கலைஞர் இருக்கும் வரை ஏதும் செய்யாமல் மறைந்த பின் கட்சியை காப்பாற்ற வருகிறேன் என்று வரும் அழகிரி செய்யும் காரியங்கள் நல்லதற்கல்ல. வெளியில் இருந்து கொண்டே இப்படி மிரட்டுகிறாரே, உள்ளே விட்டால்? அவரிடம் இருக்கும் அத்தனை பேரும் தி மு க வின் தொண்டர்கள் தான். எல்லாரும் அவர் திமுக வை விட்டு விலகினால்கூட நாங்கள் கூட போகமாட்டோம் என்பவர்கள்தான்.

செப்டம்பர் ஐந்தாம் தேதி அழகிரி கூட்டும் அமைதிப் பேரணி எந்த நோக்கத்திற்காக ? பதவி வேண்டாமாம். கட்சியில் அனுமதித்தால் போதுமாம். இன்று திமுக வில் கருப்பசாமி பாண்டியனும் , முல்லைவேந்தனும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்திருக்கிறார்கள். கட்சியில் சேருவது என்றால் அதற்கு முறை இல்லையா? கடமை கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் கட்சியில் நுழைபவர்களுக்கு வேண்டாமா? அதெல்லாம் தெரியாதவரா அழகிரி? கட்சியில் அனுமதிக்கும் முன்பே திமுக ட்ரஸ்ட்டில் ஸ்டாலின் மனைவிக்கும் மருமகனுக்கும் என்ன வேலை என்று கேட்கும் அழகிரி உள்ளே வரும் நோக்கம் எல்லாருக்கும் தெரியும்.

கட்டுச் சோற்றில் பூனையை சேர்த்துக் கட்டினால் என்ன ஆகும்? சோதனைகளை வெற்றிகரமாக சந்தித்து வரும் திமுக அடுத்த சோதனையையும் தாண்டி செல்லும் . எந்த அளவுகோளிலும் அடங்காத அழகிரி அதிக பட்சம் செய்யப் போவது துரோகம். அதை செய்யாதவர்கள் தான் குறைவு. ஏராளமான துரோகங்களை சந்தித்து தான் இன்று திமுக வலிவுடன் முன்னேறுகிறது. சேருவது வலிவு சேர்க்கத்தான் என்றால் யாரும் வரவேற்கத்தான் செய்வார்கள். அதுவே பலவீனமாக்கும் என்றால் ? எதையும் தாங்கும் வலிமை கொண்டு திமுக தலைமை இயங்கி வருகிற நேரத்தில் இதையும் தலைமை வலிவோடு எதிர்கொள்ளும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பு.

செல்லாத நோட்டு அறிவிப்பால் மத்திய அரசுக்கு நட்டம் ரூபாய் 2000 கோடி?

கறுப்புப் பணத்தை மீட்கப் போகிறோம் என்று சொல்லித்தான்
மோடி அரசு ஆயிரம் ஐநூறு நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது.
சொல்லி மாளாத இழப்புகளை சந்தித்த அந்த நடவடிக்கையின் முடிவு என்ன?
ரூபாய் 15.31 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டன.

ரூபாய் 10720 கோடி மதிப்புள்ள நோட்டுகள் தான் வராமல் தங்கி விட்டன.
ரூபாய் 12877 கோடி புதிய நோட்டுகள் அச்சடிக்க மத்திய அரசு செலவு செய்துள்ளது.
ஆக கடைசியில் நோட்டு அச்சடித்த செலவு கூட தேறாத நிலையில்தான்
மோடியின் ரூபாய் நோட்டு புரட்சி சாதித்திருக்கிறது.
3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கருப்பு பணம் கிடைக்கும் என்று திட்டமிட்ட
மோடிக்கு முக்காடு போட்டுக் கொண்ட நிலைதான் .

கறுப்புப் பணம் என்பது நோட்டுக்களால் மட்டும் ஆனது அல்ல என்பதை புரிந்து கொள்ள மத்திய அரசுக்கு வக்கில்லை.. அதிகாரிகளை மட்டும் நம்பி ஆட்சி நடத்துபவர்கள் இப்படித்தான் ஏமாறுவார்கள்.

அடக்குமுறையை கையில் எடுக்கும் மோடி அரசு வெற்றி பெற முடியுமா?

இடது சாரி சிந்தனையாளர் வக்கீல் சுதா பரத்வாஜ் ,
மாவோயிஸ்ட் ஆதரவாளர் வெர்ணன் கோன்சால்வாஸ் ,
பத்திரிகையாளர் கௌதம் நவ்லகா
அருண் பெரைரா, எழுத்தாளர் கவிஞர் வரவரராவ் இவர்களெல்லாம் பயங்கரவாதிகளாம் .

அரசு நினைத்தால் எப்படி எல்லாம் எவரை எல்லாம் வழக்குப் போட்டு
அலைக்கழிக்கலாம் என்பதற்கு இவர்கள் மீது மகாராஷ்டிரா அரசு எடுத்திருக்கும் கைது நடவடிக்கை உதாரணம்.
கிட்டத் தட்ட அவசர நிலையை நினைவூட்டும் நடவடிக்கைகள்.
என்ன குற்றம் செய்தார்கள் இவர்கள் என்பதற்கு
அரசு வைத்திருக்கும் ஆதாரங்கள் நகைப்புக்குரியவை.

உச்ச நீதி மன்றமே இவர்களை சிறைக்கு அனுப்ப கூடாதென
வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது.
அறிவுஜீவிகளுக்கு சிறைக்கூடம் தான் தண்டனையா?
மாவோயிஸ்டுகளுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த வில்லையா?
இடது சாரி – தலித் செயற்பாட்டாளர்கள் தேச துரோகிகள்
என்று முத்திரை குத்த பார்க்கிறது மத்திய அரசு.

பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க
இன்னும் என்னென்ன ஆயுதங்களை எடுப்பார்களோ தெரியவில்லை.
அவசர நிலை பிரகடனத்தால் அவதிப் பட்டவர்கள் ஜனசங்கத்தினர்
ஆட்சிக்கு வந்தவுடன் இவர்களே அறிவிக்கப் படாத அவசர நிலையை
உருவாக்கலாமா? ‘ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு இருந்தால்தான் அது
சரியான பாதையில் செல்வதாக இருக்கும்.

எதிர்ப்பு என்பது
குக்கரில் உள்ள சேப்டி வால்வ் போன்றது. வால்வ் இல்லையென்றால்
குக்கர் வெடித்து விடும் . எதிர்ப்பு குரல் கொடுப்பவர்களை ஒடுக்கினால்
அது ஜனநாயகத்துக்கு ஆபத்து ஆகிவிடும்.’ –
நீதிபதி தீபக் மிஸ்ரா சொன்ன வார்த்தைகள் இவை.
ஹிட்லர், முசோலினி , என்று எண்ணற்றோர்
சர்வாதிகார போக்கில் சென்று தோற்கவே செய்தார்கள்.
வென்றதாக வரலாறு இல்லை.
மோடி மட்டும் அதற்கு விதிவிலக்கு ஆகிவிடமுடியாது.
ஆனால் சர்வாதிகாரிகள் திருந்தியதாகவும் வரலாறு இல்லை.
மோடி வரலாறு படைப்பாரா? திருத்திக் கொள்வாரா?

வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் இந்தி பதிப்பிற்கு பரிசு!!!

வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது.

அந்த நூல்  23 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு வருகிறது  என்பது வரவேற்கத் தக்க செய்தி.

கூடுதலாக சாஹித்ய அகாடெமிக்கு  அதன் இந்தி மொழிபெயர்ப்பில் உருவான கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக இந்த ஆண்டின் சிறந்த இந்தி புத்தக விருது  கிடைத்திருக்கிறது .

Nagaphani Van Ka Itihaas –  என்பது இந்திப் புத்தகத்தின் பெயர்.

இந்த விருதை இந்திய வர்த்தக தொழில் கழகம் வழங்கி உள்ளது.

நமது சிந்தனை தமிழ் கூறும் நல்லுலகத்தின் உள்ளே மட்டும் நின்று விடாமல் பல மொழிகளுக்கும் பரவுவதுதான் சிறப்பு.

அந்த வகையில்  தமிழ் சிந்தனையை பல மொழிகளுக்கும் கொண்டு சென்ற  வைரமுத்து பெருமைக்குரியவர்.

வாழ்த்துக்கள்.

பாதையை தெளிய வைத்த ஸ்டாலின் – மகிழ்ச்சியில் தொண்டர்கள்!!!

தி மு க – பா ஜ க கூட்டு வந்து விடுமோ என்ற அச்சம் பல சம்பவங்களால் தோற்றுவிக்கப் பட்டிருந்தது.

பிரதமர் மோடி வந்தது அஞ்சலி செலுத்தியது பா ஜ க தலைவர்கள் உறவாடியது எல்லாம் விவாதத்துக்கு இட்டு சென்றது.

கலைஞர் நினைவாஞ்சலி நிகழ்ச்சிக்கு அமித்ஷா வராமல் நிதின் கட்கரியை அனுப்பி வைத்தது முக்கியத்துவம்ஆனது.

வாஜ்பாய் நினைவாஞ்சலி நிகழ்ச்சிக்கு கனிமொழி சென்று வந்தது அரசியல் நாகரிகம் தமிழகத்தில் அரும்பி வருவதன் அடையாளமாக அமைந்தது.

கடைசியில்,   மாநில உரிமைகளை பறித்து மதவெறியை திணித்து இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மத்திய பா ஜ க அரசை வீழ்த்திக் காட்டுவதும் கொள்ளையடிக்கும் அ தி மு க அரசை விரட்டி அடிப்பதும் தனது இரு இலக்குகள் என்று சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டதன் மூலம் ஸ்டாலின் திமுக –பாஜக உறவு என்ற வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

இப்போது அணிகள் அடையாளம் காணப் பட்டு விட்டன.

திமுக தலைமையில் ஒரு அணி உறுதி.    அடுத்த அணிக்கு யார் தலைமை என்பதில் மட்டுமே குழப்பம். .

கொள்கை சார்ந்த கட்சிகள் இடையே இணக்கம் ஏற்படுவது இயற்கை. கொள்கையே இல்லாமல் தனி நபர் சார்ந்து கட்சிகள் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது நல்லதல்ல.

வந்த தண்ணீர் சென்றது கடலுக்குள்? வெட்கப்படாத ஆட்சியாளர்கள்??!!

காவிரி நீருக்கு சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது சாதனை என்றால் வந்த தண்ணீரை பயன் படுத்த வழி இல்லாமல் கடலுக்குள் விட்டதை என்ன சொல்லி அழைப்பது?

அன்றே சொன்னார் குமாரசாமி – உங்களுக்கு தண்ணீர் கொடுத்து

என்ன செய்யப் போகிறீர்கள் ? கடலுக்குள் விடப் போகிறீர்கள் என்றாரே?!

உண்மையாகிவிட்டதே!

ஆண்டுதோறும் செய்ய வேண்டிய குடி மராமத்து பணிகள் தொடர்ந்து

நடந்திருந்தால் இந்த அவலம் ஏற்பட்டிருக்குமா?

இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பியது. –

கடை மடைக்கு தண்ணீர் போய் சேரவில்லை !

என்ன கொடுமை இது – யார் காரணம் ?

சமவெளியில் தடுப்பணை எப்படி கட்டுவது என்று கேட்கும்

ஒருவர் தமிழக முதல்வர் ? ! முக்கொம்பும்  அணைக்கரையும் ஏன்

கல்லணையும் சமவெளியில் தானே இருக்கின்றன என்பதை

யாராவது அவருக்கு சொல்லி இருக்கக் கூடாதா?

பின் எப்படி 292  கோடி செலவில்   62  தடுப்பணைகள் கட்டுவோம்

என்று அறிவிக்கிறார்?    இந்த அறிவு முன்பு இல்லாமல் போனது ஏன்?

2014   ம் ஆண்டே ஜெயலலிதா பிரிவு   110  ன் கீழ் சட்ட மன்றத்தில்

அறிவித்ததாம் இந்த திட்டம்.   என்ன செய்தீர்கள் எத்தனை ஆண்டுகளாய்?

மணல் கொள்ளையை தடுக்க எத்தனை உத்தரவுகளை நீதிமன்றங்கள்

இட்டிருக்கின்றன . அவற்றின் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

கட்சிக்காரர்கள் அடிக்கும் கொள்ளையை தடுக்க முடியாத ஒரு அரசு

இருந்தால் என்ன வீழ்ந்தால் என்ன.

முக்கொம்பில் உடைந்த மதகுகள் மீண்டும் உயிர் பெற எத்தனை

ஆண்டுகள் ஆகுமோ? ஆண்டு தோறும் அறிவிக்கப்பட்ட  திட்டங்கள் நடை முறைப் படுத்தப் பட்டிருந்தால் இந்த அவலம் நிகழ்ந்திருக்காது .

எந்த திட்டமும் இங்கே முறையாக நடைமுறைக்கு வருவதில்லை.

நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல் எல்லாவற்றையும்

இல்லாமல் ஆக்கி விடுகிறது.    இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு

கர்நாடக அரசை குற்றம் சொல்வீர்கள் ?

கேரளாவிற்கும் ஆந்திராவுக்கும் கர்நாடகத்துக்கும் இங்கிருந்து

ஆற்று மணல் செல்வது அவமானமாக உங்களுக்கு படவில்லையா?

இயற்கை அள்ளிக் கொடுக்கிறது.  சிந்திக்காதவர்கள் , ஊழல் பெருச்சாளிகள்

கையில் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டு எல்லாவற்றையும்

வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள்-அதிகாரிகள் ஊழல் கூட்டணி முறிக்கப் பட்டால்தான்

இனி எந்த முன்னேற்றமும் இங்கே சாத்தியம். !

கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொள்வாரா?

கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் பா ஜ க காங்கிரஸ், பா ம க, கம்யுனிஸ்டு கட்சிகள் , முஸ்லிம் லீக் , போன்ற முற்றிலும் கருத்து வேறுபாடு உள்ள கட்சிகள் எல்லாம் கலந்து கொள்கின்றன.

இது ஒரு பண்பாடு .   இதற்கு என்ன அரசியல் முக்கியத்துவம் ?

மாநில ரீதியில் தலைவர் என்ற முறையில்  வேறு  ஒரு ஊரில் தமிழிசை கலந்துகொள்கிறார்.

அகில இந்திய அளவில் தலைவர்கள் கலந்து கொள்ளும்  நிகழ்ச்சியில் அமித்ஷா அழைக்கப் பட்டு அவரும் வர ஒப்புதல் தந்ததால் தான் அவர் பெயர் அழைப்பிதழில் இடம் பெற்றிருக்கிறது.

வந்து சாதிக்கலாம் என்று தேதி கொடுத்திருக்கலாம் . பயன் இருக்காது என்று தெளிந்து வேறு யாரையாவது அனுப்பி வைக்கலாம்.

வழக்கம்போல , அமித் ஷா கலந்துகொள்ள மாட்டார் என தெரிய வருவதாக சுப்ரமணிய சாமி ட்வீட் செய்கிறார்.

பா ஜ க அணிக்கு திமுக செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பா ஜ க அனைத்து சித்து வேலைகளையும் அரங்கேற்றும்.

எதுவும் இங்கு எடுபடாது.