Home Blog Page 68

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு சி பி ஐ க்கு மாற்றம்?! 4 மாதத்தில் அறிக்கை?!

100  நாட்கள் அமைதியாக நடந்த போராட்ட முடிவில்  13   பேர் அநியாயமாக சுட்டுக் கொல்லப் பட்டனர் தூத்துக்குடியில்.

யார் துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது என்ற கேள்விக்கு

நேரடியான பதில் கிடைக்க வில்லை உடனேயே!

ஒரு சம்பவத்திற்கு இருநூறுக்கும் மேலான வழக்குகள்

நீதிமன்றம் தலையிட்டு ஒரு வழக்காக்கியது

போராடியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்

நீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்திருக்கிறது

மாநில அரசின் மீதான குற்றச்சாட்டை அதுவே

விசாரித்துக் கொள்ளுமா?  எனவேதான் சிபி ஐ

காவல் துறை மக்களுக்கு எதிரான ஏவல் துறையானது

எப்படி ஏன் யாரால்?  எல்லாவற்றுக்கும் பதில் வேண்டும்

மூடிவிட்டோம் என்கிறது தமிழக அரசு

பசுமை தீர்ப்பாயம் நிர்வாகம் செய்ய அனுமதி அளிக்கிறது

செயல்பட முடியாதவர்கள் எதை நிர்வகிக்க போகிறார்கள்?

முழு அனுமதிக்கான முன்னேற்பாடா என்ற ஐயம் தீர்க்க

அப்பீல் போயிருக்கிறது தமிழக அரசு -பாராட்டுவோம்

உச்சநீதி மன்றம் என்ன செய்யுமோ என்ற கவலையும்

தமிழ் மக்களை வதைக்கிறது!  அனில் அகர்வால்

அப்படிப்பட்டவர் ஆயிற்றே ?   ஆமாம்

துப்பாக்கி சூட்டில் இத்தனை பேர் இறந்தபிறகும்

அப்பீல் போனால் அவனெல்லாம் என்ன மனிதனா

என்று கேட்ட ரஜினி இப்போது எங்கே?

அழகிரியின் பேட்டி சொல்லும் செய்தி என்ன?

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான்

கொல் எனும் சொல்

வள்ளுவம் வகுத்த நெறிக்கு புதிய உரை எழுத விரும்புகிறார் கலைஞரின் மகன் அழகிரி.

பின்னணியில் யார் என்பதுதான் மிகபெரிய கேள்வி.

பின்னணி இல்லாமல் பேசியிருக்க துணிவு வந்திருக்காது!

தந்தை எதை தன் உயிருக்கும் மேலாக மதித்து வாழ்ந்தாரோ அதற்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தில் செயல் படும் மகனுக்கு என்ன பெயர் சூட்டுவது?

ஊழல் ஆட்சியில் இருந்து மாநில சுயாட்சிக்கு உயிர் கொடுக்கும்  வகையில்  திமுக  ஆட்சிக்கு வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திமுகவுக்குள் குழப்பம் எனும் சூழ்நிலையை யார்

தோற்றுவித்தாலும் அவர்களை கலைஞர் மன்னிக்க மாட்டார்.

திமுக தொண்டர்கள் விபரமானவர்கள்.   அவர்களை யாரும் குழப்ப முடியாது என்பது வேறு.

ஆனால் எதிரிகள் இதை எப்படி எல்லாம் பயன் படுத்த முனைவார்கள்.?   அதுவும் மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் தமிழகத்தை திராவிட சித்தாந்த ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க எதையும் செய்ய காத்திருக்கிறார்கள்.   எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

அப்படி இருக்கும்போது கட்சி எத்தனை கட்டுகோப்புடன் இருக்க வேண்டும்?

கலைஞர் உயிருடன் இருந்த போதே 2014 ன் ஆண்டு ஜனவரி மாதம் 24 ம் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து  பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் நிரந்தரமாவும் நீக்கப் பட்டார அழகிரி.

இப்போது அவர் திமுக வில் இல்லை. திடீர் என்று

கலைஞர் நினைவிடத்தில் நின்று கலைஞரின்

உண்மை விசுவாசிகள் என் பக்கம்தான்  என்று

சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

தனி கட்சி தொடங்க போவதில்லையாம்

ஒரு மாதம் கழித்து தன் திட்டத்தை சொல்வாராம்

அதுவரை மக்கள் காத்திருக்க வேண்டுமாம்.

தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி இதுதானா?

குடும்பத்தை விட கட்சியை நேசித்த

கலைஞர் எங்கே? இவர் எங்கே?

கலைஞர் பெயரை சொல்லுகிற உரிமைகூட

இவருக்கு இருக்கிறதா?

கட்சிக்கு கடமை ஆற்றுங்கள் என்று அறிவுரை

கூறிய வீரமணியை -சோறுக்கு அலைகிறவர்

என்று விமர்சிக்கிறார் அழகிரி மகன்!

இவரால் ஒன்றும் ஆகாது என்றாலும் குழப்பத்தை

உண்டாக்க முடியுமே?   அதுதான் தொண்டர்களின் கவலை.

ஊடகங்கள் எத்தனை உற்சாகத்துடன் விவாதிக்கின்றன ?

நோக்கம் எப்போது எப்படி உடையும் விளைவென்ன

என்பதுதானே? நல்லதற்கா விவாதிக்கிறார்கள்?

எதிரிகள் முழு மூச்சுடன் சதி திட்டங்களை

நிறைவேற்ற தொடங்கி விட்டார்கள் என்பதுதான் செய்தி !

எத்தனையோ சோதனைகளை வெற்றிகரமாக சந்தித்த

திமுக இதையும் சந்தித்து வெல்லும்!!!

சுந்தரம் ஐயங்கார் பேரன் சிலை திருட்டு வழக்கில் முன் ஜாமீன் கோரலாமா?

டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசன் சுந்தரம் ஐயங்காரின் பேரன்.

பல ஆலயப் பணிகளின் தர்மகர்த்தா.    அவரே சொல்லுகிறபடி ஸ்ரீரங்கம் கோவில் திருப்பணிகளுக்கு மட்டும் தன் சொந்த செலவாக  25 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்.   அவர்தான் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர்.

அவர் மயிலை கபாலீஸ்வரர் கோவில் திருப்பணி கமிட்டி உறுப்பினராக இருந்த காலத்தில் சுமார் எழுபது லட்ச ரூபாய் கோவிலுக்கு செலவு செய்திருக்கிறார்.

ஆனால் அந்த கோவிலில் இருந்த ஒரு மயில் சிலை ஒன்று சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம் .

அதன் வாயில் ஒரு இலை இருக்குமாம்.   அது பழுது அடைந்தது என்று புதுப்பிக்க முடிவு செய்து புதிய சிலை ஒன்று செய்திருக்கிறார்கள்.  அந்த புதிய சிலையின் வாயில் பாம்பு இருந்திருக்கிறது.  எனவே அது பழைய சிலை அல்ல என்ற புகார் எழுந்து விசாரணைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.

அந்த புகார் தான் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பதிவாகி பின்னர் சிலை கடத்தல் பிரிவுக்கு மாற்றி இருக்கிறார்கள். அதில் வேணு சீனிவாசன் பெயரும் இருக்கிறதாம்.

தான் கபாலீஸ்வரர் கோவில் பக்தன் . தான் குற்றமற்றவன் எனும் சீனிவாசன் செய்திருக்கும் காரியம்தான் நம்மை திகைக்க வைக்கிறது.

இதுவரையில் அவர் மீது எந்த குற்றமும் சுமத்தப் பட்டதில்லை.

அவர் குற்றம் செய்திருப்பார் என்று நாமும் நினைக்க வில்லை.

ஆனால் அவர் எதற்காக முன் ஜாமீன் கோர வேண்டும் என்பதுதான் நமக்கு புரியவில்லை.

எந்த வழக்காக இருந்தாலும் விசாரிக்கட்டுமே!    விசாரணையில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப் பட்டால் தானே நடவடிக்கை இருக்கும்.   நிரூபிக்க முகாந்திரம் இல்லை என்றால் ஏன் அவர் கைது பற்றி அச்சப் பட வேண்டும்?

அதுதான் நமக்கு புரியவில்லை.

பொன் மாணிக்கவேல் விசாரிக்கிறார் என்றால் பலருக்கு பயம் வந்து விடுகிறது.   அதில் வேணு சீனிவாசனும் சேருவது வியப்பு.

அவர்க்கு ஆதரவாக வைகோ அறிக்கை கொடுத்திருக்கிறார்.

குற்றம் பற்றியோ விசாரணை பற்றியோ முன்கூட்டியே எதையும் சொல்வதற்கில்லை.

ஆனால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில்  இருப்பவர்கள் பாமரர்கள் போல் நடந்து கொள்ளக் கூடாது என்பது தான் நமது விருப்பம்.

விசாரணை விரைவில் முடிவடைந்து உண்மை வெளிப்படும் என நம்புவோம்.

திருமுருகன் காந்தி கைது ஒரு ஜனநாயக படுகொலை??!!

குற்றம் செய்திருந்தால் யாராக இருந்தாலும் கைது செய்யப் பட்டு விசாரணை செய்வதில் தவறு இல்லை.   அது கடமையும் கூட.

ஆனால் குற்றங்களை தடுக்கிறோம் என்று மனித உரிமைகளுக்கு கல்லறை கட்டுவதை ஏற்க முடியுமா?

மே 17  இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி  பல பிரச்னைகளை கையாளுகிறவர்.

அவர் மீது 22 வழக்குகள் பதியப் பட்டுள்ளனவாம்.

அவர் என்ன அவ்வளவு பயங்கரவாதியா?  அரசுக்கு எதிரான  பல கருத்துக்களை கொண்டிருப்பவர் என்றால் பரப்புரை செய்வது அவர் கடமை. அதில் அரசுக்கு ஆட்சேபணை இருக்க முடியாது.

அரசை, அரசின் கொள்கைகளை விமர்சிக்கவே கூடாதா?

சமீபத்தில் ஜெனீவாவில் மனித உரிமை சம்பந்தப் பட்ட உரை ஒன்றை அவர் ஐ நா வின் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

அதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அதில் 13பேர் இறந்தது பற்றியெல்லாம் பேசினாராம்.  அதற்காக அவர் இந்தியா திரும்பி பெங்களூரில் வந்திறங்கியபோது கைது  செய்யப் பட்டிருக்கிறார்.  தேச துரோக குற்றமாம்.

நீதிமன்றம் அவரை ரிமாண்ட் செய்ய மறுத்து காவல் துறை விசாரணைக்காக அனுப்பி இருக்கிறது.  ஐநா வில் பேசியது எப்படி தேச விரோத மாகும் என்று கேள்வியும் எழுப்பி இருக்கிறது.

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப் பட்ட அவரை விசாரணைக்குப் பின் மீண்டும் வேறு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள்.   புழல் சிறையில் இருந்தால் வந்து பார்ப்பார்கள் என்று வேலூர் சிறைக்கு மாற்றி இருக்கிறார்கள்.

இப்படியா ஒரு ஜனநாயக நாட்டில் கருத்துரிமை நசுக்கப் படும்?

நீதி மன்றத்தில் வெளியே வரும் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்துச் செல்வதை கண்டு ஏன் எந்த பத்திரிகையும் கண்டித்து எழுதவில்லை. ?

தமிழ் நாட்டில் ஊடகங்கள் எப்படி செயல் படுகின்றன என்பதற்கு இதுவே சான்று.

எதிர்க் கருத்து சொல்பவர்களை எல்லாம் தேச விரோத வழக்கில் சிக்க வைப்பது மிகவும் ஆபத்தான போக்கு.

ரிமாண்ட் செய்ய மறுத்த நடுவர் தன் கடமையை செய்திருக்கிறார்.   ஆனால் அவரது முடிவை  காவல் துறை ஏற்றுக் கொள்ளவில்லை.

சம்மன் அனுப்பி ஆஜராக தவறினால் மட்டுமே கைது போன்ற நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

காவல் துறையின் மதிப்பை இம்மாதிரி நடவடிக்கைகள் சீர்குலைத்து விடும்.

மெரினாவில் அண்ணாவுக்கருகில் இடம் பிடித்தார் கலைஞர் !

கடைசியில் தொண்டர்களின் நம்பிக்கையை தகர்த்து விட்டு ஆகஸ்டு 7 ம் தேதி மாலை   6.10 க்கு கலைஞர் மறைந்தார் என்ற செய்தியை காவேரி மருத்துவமனை வெளியிட்டது.

தமிழகம் அடுத்த நொடி அசைவற்றுப் போனது.

மறுநாள் காலை முதல் ராஜாஜி ஹாலை நோக்கி தொண்டர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர்.

லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிய ஆரம்பித்தாலும் எந்த அசம்பாவிதமும் நடக்க வில்லை.

மாநில முதல்வர்கள் முதற்கொண்டு பிரதமர் வரை அனைத்துக் கட்சித் தலைவர்களும் அகில இந்திய அளவில் கலைஞரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு தங்கள் மரியாதையை செலுத்தினார்கள்.

நானும் அவருக்கு எனது அஞ்சலியை  ராஜாஜி ஹால் சென்று செலுத்தி விட்டு வந்தேன்.

எடப்பாடியின் அரசு  மெரினாவில் இடம்  கொடுக்க முடியாது என்றும் காந்தி மண்டபம் அருகே இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும் செய்தி வெளியிட பிரச்னையை நீதிமன்றம் கொண்டு என்றது திமுக.

பா ஜ க சொல்லி இந்த மறுப்பை அ தி மு க அரசு தெரிவித்ததா அல்லது தானே முடிவெடுத்ததா என்பது ஒருபுறம் இருக்க இந்த பிரச்னையில் எடப்பாடி அரசு பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு இருக்கலாம் என்பதுதான் பொது மக்கள் கருத்து.

பகுத்தறிவு வாதிகள் இங்கே கோலோச்சுவது பா ஜ க வுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.   ஆனால் தங்களை திராவிட இயக்க கட்சி என்று கூறிக் கொண்டு பெரியாரையும் அண்ணாவையும் படம் போட்டு காட்டுகிறவர்கள் கொஞ்சமாவது பகுத்தறிவு கொள்கைக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டாமா?   ஆம்.  கலைஞருக்கு  மெரினாவில் இடம் கொடுக்க ஆதரவு அளிப்பதே  அவர்கள் பகுத்தறிவு கொள்கைக்கு ஆதரவாளர்கள் என்பதற்கு ஆதாரமாக இருந்திருக்கும்.

ஜெயலலிதா சமாதியை எதிர்த்து வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் அந்த வழக்குகள் திரும்ப பெறப் பட்டன.

நீதிமன்றம் அனுமதி  அளிக்க பிரச்னை தீர்க்கப் பட்டு கலைஞருக்கு அண்ணா சமாதி அருகேயே இடம் ஒதுக்கப் பட்டு அங்கே வைக்கப் பட்டார் கலைஞர்.

நீதிமன்றம் தலையிட்டு இருக்கா விட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டிருக்குமோ?

‘    ஓய்வறியாமல் உழைத்தவன் இதோ இங்கே  ஓய்வெடுக்கிறான் ‘ என்ற வாசகங்கள் பொறிக்கப் பட்ட சந்தன பேழையில் ஓய்வெடுக்கப் பட்டார் கலைஞர்.

ஆக அண்ணாவுக்குப் பின்புறம் கலைஞர்   எம்ஜியாருக்கு பின்னால் ஜெயலலிதா என்று நான்கு பேரும்  இப்போது மெரினாவில் உறங்குகிறார்கள்.

கலைஞர் இல்லாமல் இனி தி முக இயங்கினாலும் அவரது தாக்கம் இல்லாமல் இயங்க முடியாது.

6863   நாட்கள் கலைஞரும்

5239  நாட்கள் ஜெயலலிதாவும்

3634  நாட்கள் எம்ஜியாரும்

3432  நாட்கள் காமராஜரும்

முதல் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்கள்.    ஆக அதிக நாட்கள் முதல் அமைச்சர் ஆக பணி புரிந்தவர் கலைஞர்தான்.

ஒன்று மட்டும் உறுதி.

மறைந்தும் அவர்தான்  உந்து சக்தியாக நின்று

திமுகவை ஆட்டுவிக்கப் போகிறார்.

எதிரிகளே இல்லாமல் ஆன கலைஞர்!! போராட்டமே வாழ்க்கை என்பதை உணர்த்தும் கலைஞர்!!!

கலைஞர் கருணாநிதி  என்ற ஒற்றை மனிதரை சுற்றி கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக  தமிழக அரசியல் சுற்றி சுழன்று கொண்டே இருக்கிறது.

அவர் மட்டும் வெற்றியானாலும் தொல்வியானாலும் துவளுவதே இல்லை.

சாமானியர்களின் குரலாகவே அவரது குரலும் எழுத்தும் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது.

சாதனைகளின் பட்டியல் நீண்ட நெடியது.

அவர் எதிர் கொண்ட எதிரிகளின் பட்டியலும் மிக நீண்டது.

எல்லாக் காலத்திலும் அவரை யாராவது விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள்.

இப்போதுதான் அவரை யாரும் விமர்சிப்பது இல்லை.   இது ஏதோ ஒரு அரசியல் நாகரிகம் கருதி மட்டும் இல்லை.

அவரது உழைப்பின் விளைவுகளை எல்லாரும் நினைத்துப் பார்த்து அவர் ஒரு கட்சிக்கு மட்டும் தலைவர் அல்ல தமிழ் நாட்டவர் அனைவருக்கும் தலைவர் என்ற உணர்வு தான் அவரை விமர்சிப்பதை தடுக்கிறது.

கடவுள் நம்பிக்கை இல்லாத கலைஞருக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறார்கள்.   அதுவும் எல்லா மத சாமிகளையும்.

தமிழ் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்ததில் கலைஞரின் பங்களிப்பு மிக  அதிகம்.

வசனகர்த்தா , பாடலாசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி , எழுத்தாளர்,  இலக்கியவாதி , 13 முறை தோல்வியே சந்திக்காத சட்ட மன்ற உறுப்பினர்,  ஐம்பதாண்டுகளாக ஒரு கட்சியின் தலைவர்,  ஐந்து முறை முதல் அமைச்சர் என்று பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கலைஞரைப் போல் யாரும் இல்லை.    இனி தோன்றப் போவதும் இல்லை.

தமிழ்த்தாய் வாழ்த்தும் , செம்மொழி சிறப்பும் , வள்ளுவர் கோட்டமும் , திருவள்ளுவர்  சிலையும் , சென்னையும், சமத்துவபுரங்களும் , சத்துணவு திட்டமும், அவசரநிலையின்போது அவர் காட்டிய எதிர்ப்பும், பிற்பட்டோர் மிக பிற்பட்டோர் அருந்ததியர் இட ஒதுக்கீடும், இந்தி திணிப்பு எதிர்ப்பும், தொய்வில்லாத வர்ணாசிரம எதிர்ப்பும், பார்ப்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆன வரலாறும், சாதி மறுப்பு திருமணங்களும், சுயமரியாதை திருமணம் சட்டப்படியானதும் இன்னும் எண்ணற்ற சாதனைகளும் கலைஞரின் புகழை உயர்த்திப் பிடித்துக் கொண்டே இருக்கும்.

காவேரி மருத்துவனை வெளியே இருந்து ‘   எழுந்து வா தலைவா ‘ என்று தினமும் எழும்பும் தொண்டர்களின் குரல் அவரது காதில் கேட்காமலா போகும்?

இளவயதில் தொடங்கிய போராட்டத்தை இப்போது மருத்துவ மனையில் தொடர்கின்றார் கலைஞர் .

மீண்டு மீண்டும் வருவார்!!!

தலித் அர்ச்சகரை ஏற்றுக் கொண்ட திருச்சி புத்தூர் கிராமம் !!!

கலைஞர் கொண்டு வந்த அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் வெற்றி பெறத் துவங்கி விட்டது.

திருச்சி புத்தூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் நாற்பதாண்டுகளாக பூட்டிக் கிடக்கிறது.    நாயுடு , வெள்ளாளர், முத்தரையர் ரெட்டி சாதி மக்களை அதிகமாக கொண்ட ஊரில் ய யார் இந்த கோவிலை நிர்வகிப்பது என்பதில் தகராறு.

அறநிலையத்துறை  யின்  கீழ் இந்த கோவில் இருக்கிறது.

கலைஞர் திட்டத்தில் ஓராண்டு சான்றிதழ்  பயிற்சி பெற்ற  206  பேரில் கரியமாணிக்கம் ஊரை சேர்ந்த தலித் இளைஞர் சிவசங்கரனும் ஒருவர்.    பட்டதாரி யான இவர் வேலையில்லாமல் இருந்து வந்தார்.

திருவரங்கம் கோவில் இணை ஆணையர் இவரை அழைத்து இந்த கோவிலில் மாதம் ரூபாய் முப்பதுக்கு வேலையில் அமர்த்தியிருக்கிறார் .

ஆறே மாதத்தில் உள்ளூர் இளைஞர்களையும் பெரியவர்களையும் சேர்த்துக் கொண்டு கோவிலை புதுப்பித்துக் கட்டியதுடன் நில்லாமல் குடமுழுக்கும் செய்திருக்கிறார்.

இடையில் இவர் தலித் என்று தெரிந்தவுடன் சிலர் இவரை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர்.   ஆனால் ஊரில் பெரும்பாலானவர்கள் இவர்க்கு ஆதரவு அளித்த துடன் அக்கம் பக்கத்து கிராம மக்களும் பெருமளவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டனர்.

பயிற்சி பெற்ற இதர 204  பேரையும்  தமிழக அரசு உடனே  அர்ச்சகர்கள் ஆக பணி அமர்த்துவதுடன்   தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும்.    அதில் தமிழ் அர்ச்சனைகள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்திய புத்தூர் இதர கிராமங்களுக்கும் பரவ வேண்டும்.

கோவிலில் தமிழ் பாசுரங்களை பாடுகிரார்களா என்று தெரிய வில்லை.

மாற்றங்கள் சிறிது சிறிதாக வாவது பரவட்டுமே!!

வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குற்றமா? ஹீலர் பாஸ்கர் கைது ஏன்?

வீட்டிலேயே யு டியூபை பார்த்து பிரசவம் பார்க்க முயற்சித்த திருப்பூர் கிருத்திகா பலியானார்.   குழந்தை நலமுடன் இருக்கிறது.   ஆனால் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு தாய் பலியானார்.  கணவர் மீதும் உடந்தையாக இருந்த இருவர் மீதும் வழக்கு பாய்ந்திருக்கிறது.

ஆனால் தேனீ அருகே ஒரு என்ஜினியர் கண்ணன் என்பவர் தன் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பிறந்தது . தாயும் சேயும் நலம்.

ஆனால் கண்ணன் தன் மனைவி தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்டதாகவும் இயற்கை வழி பிரசவம் ஆக உணவு பயிற்சி போன்ற வழிமுறைகளை பின்பற்றியதுடன் ஸ்கேன் போன்ற மருத்துவ சோதனைகளையும் மேற்கொண்டு பாதுகாப்பாக இருந்திருக்கிறார்.

ஆனால் அவரது தந்தை மீது தகாத வார்த்தைகள் பேசியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே ஹீலர் பாஸ்கர் என்பவர் கோவையில் இயற்கை பிரசவம் ஒரு வரம் என்று பொதுமக்களுக்கு பிரச்சாரம் செய்வதற்காக ஆகஸ்டு மாதம்  26 ம் தேதி ஒரு முகாம் இலவசமாக நடத்த விளம்பரம் செய்திருந்தார்.

காவல்துறையினர் அவரை ஏமாற்ற முயற்சித்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது  செய்திருக்கிறார்கள்.

இயற்கை  மருத்துவம் பிரச்சாரம் செய்வது தவறா?    என்ன சொல்லி மக்களை ஏமாற்றினார்?    என்ன பயன் அடைந்தார்?   மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு இருக்கிறது.

நாட்டில் எழுபது சதம் பிரசவம்  அரசு மருத்துவ மனைகளில் தான் நடக்கின்றன.

முப்பது சதம் மட்டுமே தனியார் மருத்துவ மனைகளில்  நடக்கின்றன.

எதற்கெடுத்தாலும் உடனே அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.   வருவாய்க்காக இதை செய்கிறார்களாம்.

மாற்று முறை மருத்துவத்தை ஆதரிக்க வேண்டிய அரசு மிரட்டல் வழிமுறைகளை மேற்கொள்வது கண்டிக்கத் தக்கது.

ஹீலர் பாஸ்கர் தவறு ஏதும் செய்யாத பட்சத்தில் உடனே அவரை  விடுதலை செய்ய வேண்டும்.

மக்களுக்கு நலம் போதிக்கும் பல வாழ்க்கை வழிமுறைகளை அவர் நீண்ட வருடங்களாக பிரச்சாரம் செய்துவருகிறார்.

அதில் உடன்பாடு இல்லாதவர்கள் அதை பின்பற்ற வேண்டியதில்லை.   ஆனால் அதற்காக பிரச்சாரம் செய்யவே கூடாது  என்பது கருத்து சுதந்திரத்தை முடக்கும் செயல் ஆகும்.

தி.மு.க கூட்டணியை உடைக்க தினகரன் முயற்சி?!

மக்களிடம் மதிப்பிழந்து நிற்கிறது இ பி எஸ் – ஓ பி எஸ் அரசு.

இவர்களால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது.

திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் இவர்களின் பலம் வெளிறிவிடும்!

அதற்கு முன் உள்ளாட்சி தேர்தல் கட்டியம் கூறிவிடும்

உயர்நீதி மன்றம் கெடு விதித்து விட்டதே தேர்தல் நடத்த?

திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக வளர்ந்து வருகிறது

பேர் சொல்லும் கட்சிகள் எல்லாம் ஸ்டாலின் தலைமையில்

இந்நிலையில் திமுக கூட்டணி யை விட்டு விட்டு வந்தால்

காங்கிரசுடன் கூட்டு சேர தயார் என்று தினகரன்

பெங்களூரில் ஊதிப் பார்த்திருக்கிறார்.

ராகுலை திருமாவளவன் சென்று பார்த்தது

அடுத்த பிரதமர் ராகுலா என்றதற்கு  தேர்தல் வரட்டும்

என்று ஸ்டாலின் பதில் சொன்னது

என்று சிலபல கணக்குகளை  வைத்து தினகரன்

சித்து விளையாடி பார்த்திருக்கிறார்.

காங்கிரசோ கம்யூனிஸ்டுகளோ யாரும் மயங்கப் போவதில்லை

இது சூழ்ச்சிகளின் காலம்.

யாரையாவது வீழ்த்த வேண்டும் என்றால்

அவர்களது எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பது

காலங்காலமாக பார்க்கும் நடைமுறை

சென்ற முறை திமுக ஆட்சிக்கு வர முடியாமல்

போனது  திமுக அதிமுக இல்லாத அணி

என்ற பெயரில் உருவான மக்கள்நல கூட்டணி

அது பிரித்த அதிமுக எதிர்ப்பு வாக்குகள்

இம்முறையும் அதே சூழ்ச்சி வேறு உருவத்தில் வரலாம்

மீண்டும் ஒருமுறை  பா ஜ க வந்தால் இனி

ஜனநாயகம் கடந்த காலம்தான் என்ற பயம்

எல்லாருக்கும் இருக்கும் வரையில்

தி மு க கூட்டணியை யாரும் உடைக்க முடியாது.

சிலை திருட்டை கண்டுபிடிக்கும் பொன்.மாணிக்கவேலை விரட்ட ஏன் எடப்பாடி அரசு முயற்சிக்கிறது?

சிலை கடத்தல் வழக்குகளை சி பி ஐ வசம் ஒப்படைக்க எடப்பாடியின் அரசு அரசாணை பிறப்பித்திருப்பது ஆச்சரியமில்லை.

தொடர்ந்து அவரை இந்த துறையிலிருந்து விரட்ட அரசு முயற்சித்து உச்ச நீதி மன்றத்தின் தலையீட்டால் அவர் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வருகிறார்.

திடீரென்று அவர் அறநிலையத்துறை துணை ஆணையர் கவிதாவை காஞ்சிபுரம் கோவில் சிலையில் தங்கம் கலக்காமல் மோசடி செய்த வழக்கில் கைது செய்ததும் பிரச்னை சூடு பிடித்தது.

பதவி ஏற்றதும் காணாமல் போன  250  கோவில் சிலைகளை மாணிக்கவேல் மீட்டிருக்கிறார்.

உயர்நீதி மன்றம் 21.07.2017  அன்று பல உத்தரவுகளை பிறப்பித்து விசாரணை நடைபெற கோரிய நேரத்தில் அவைகளில் பெரும்பான்மை உத்தரவுகளை அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவது பற்றி எந்த விளக்கமும் இல்லை.

கவிதா தான் கமிஷனர் சொன்னதை தான் செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வருகின்றன.

அடுத்து அடுத்து  எந்த அதிகாரி அல்லது அரசியல்வாதி மாட்டுவாரோ என்ற நிலையில் அரசு ஏன் இந்த திடீர் முடிவை எடுக்க வேண்டும்?

எதிர்காலத்தில் வரும் வழக்குகளையும் சி பி ஐ விசாரிக்கும் என்றால் சிலை தடுப்பு பிரிவே தேவையில்லையா?

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கும் குட்கா வழக்கிற்கும் சி பி ஐ விசாரணை வேண்டும் என்றால் மறுக்கும் எடப்பாடியின்  அரசு சிலை கடத்தல் வழக்குகளை மட்டும் மாற்றத் துடிப்பது ஏன்?

பொன். மாணிக்கவேல் வரும் நவம்பர் மாதத்தில் ஒய்வு பெறுகிறார்.   அதுவரை விசாரணையை கிடப்பில் போட்டால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற திட்டமே காரணம் என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

ஏனென்றால் சி பி ஐ உடனே எடுத்து விசாரிக்க முடியாது.    சி பி ஐ ஏற்கனெவே ஆட்கள் பற்றாக் குறையால் தத்தளித்து வருகிறது.

மொத்தம 7274  அதிகாரிகள்.   அதில்    1594   காலியிடங்கள் நிரப்பப் படவில்லை.     வருடத்திற்கு  700 – 1000  கிரிமினல் வழக்குகளையே சி  பி  ஐ ஆல் கையாள முடியும்.

கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட்டதால் நீதி மன்றம் தலையிடாது என்று திட்டமிட்டு இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது.

ஆனால் முன்பே நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடை  பெறுவதால் இந்த வழக்கு விசாரணையை சி பி ஐ க்கு நீதிமன்றம் மாற்றும் வாய்ப்புகள் குறைவு.

அரசு பல்டி அடித்து நடப்பு வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவே விசாரிக்கட்டும் என்று சொல்லலாம் .

எது நடந்தாலும் இந்த அரசு யாரையோ காப்பாற்ற முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டில் இருந்து மீள முடியாது.

ராம கோபாலன் சி பி ஐ வேண்டாம் என்கிறார்.   ஆனால் கி வீரமணி சி பி ஐ வேண்டும்  என்கிறார்.

அரசை , அறநிலையத்துறை யை ஆலயத்தை விட்டு விரட்ட நினைப்பவர்கள் பார்ப்பனர்கள்.

ஏனென்றால் அப்போதுதான் அவர்கள் ஆட்சி ஆலயத்துக்குள் முழுமையாகும்.                                             இதுவரை அதற்கு இடம் கொடாமல் இருந்த ஆட்சியாளர்கள்

சிலை  கடத்தல் வழக்குகளை வெற்றிகரமாக நடத்தா விட்டால்

அதையே சாக்காக  வைத்து அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு

என்ற கூச்சலை மீண்டும் எழுப்புவார்கள்  பார்ப்பனர்கள்

போராடி பெற்ற உரிமைகளை  இந்த ஊழல் ஆட்சியாளர்களால்

இழந்து விடுவோமோ என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

நீதிமன்றம் அதற்கு இடம் தராது என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்!!