Home Blog Page 7

மணிப்பூரில் கடுமை காட்டிய உச்சநீதி மன்றம் ஒபிஎஸ் விடயத்தில் மென்மை காட்டுகிறதா ?!

மணிப்பூரில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஷ்யாம் குமார் பாஜகவில் சேர்ந்து அமைச்சராகிறார்.

தகுதி நீக்கம் செய்ய கொடுக்கப் பட்ட மனுவை  சபாநாயகர் கிடப்பில்  போடுகிறார்  மூன்று ஆண்டுகளாக.  தமிழ்நாட்டில் ஓபிஎஸ் மற்றும் பத்து பேர் மீது இருக்கும் அதே நடவடிக்கை..விசாரணையில் சபாநாயகர் மூன்று மாதத் துக்குள் முடிவு எடுக்க உச்சநீதி மன்றம் உத்தரவிடுகிறது. அதற்குப் பிறகும் முடிவு எடுக்காததால் அமைச்சர் பதவியில்  இருந்து ஷ்யாம் குமாரை நீக்கி உத்தரவிட்டு இருக்கிறது உச்ச நீதி மன்றம்.

கட்சி தாவல் தடுப்பு சட்டத்தையே கேலிக்கூத்தாக்கி வருகிறார்கள் சபாநாயகர்கள். ஒன்று ஆளும்கட்சிக்கு  சாதகமாக முடிவெடுக்கிறார்கள். அல்லது  எந்த முடிவும் எடுக்காமல் காலம் கடத்துகிறார்கள்.

இவர்கள் முடிவு எடுப்பதற்குள் அமைச்சரவையில் ஆயுள் முடிந்து  விடும். ஒரு வழக்கில் சபாநாயகரின் அதிகாரத்தை சுயாதிகாரம் கொண்ட தீர்ப்பாயத்திடம் கொடுத்தால் என்ன என்றும் உச்சநீதி  மன்றம் கேட்டிருக்கிறது.

இன்று மத்திய பிரதேசத்தில் நடந்து வருவது ஜனநாயகப் படுகொலை. நிகழ்த்திக் கொண்டிருப்பது  பாஜக. கட்சி தாவல் தடை சட்டத்தை ஏமாற்ற ராஜினாமா  செய்து வருகிறார்கள். ராஜினாமாவின் முடிவில் பின்னால் கட்சி தாவல் இருக்கிறது.

குஜராத்தில் காங்கிரஸ் ஒரு பாராளுமன்ற மேலவை இடத்தை பெறக்கூடாது என்பதற்காக நான்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜினாமா செய்கிறார்கள். இதற்காக ஒரு உறுப்பினர்க்கு இருபது கோடி முதல் அறுபது கோடி வரை பேரம் பேசி இருக்கிறார்களாம். இப்படி கட்சி மாறுபவர்களை தெருவில்  நிறுத்தி செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஹர்டிக் பட்டேல் பேசியிருக்கிறார்.

உச்சநீதிமன்றம் தமிழ்நாடு சபாநாயகருக்கு  ஏன் காலக்கெடு எதுவும் விதிக்க வில்லை.?

 

 

 

சங்கர மடத்தில் பாஜக தமிழக தலவர் எப்படி நடத்தப்பட்டார் ??!

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட எல் முருகன் முதன் முதலில் சென்ற இடம் காஞ்சியில் உள்ள சங்கர மாதம்.

அருந்ததியர் ஒருவரை மாநில தலைவராக நியமித்ததன் நோக்கமே நாங்கள் சாதி பார்க்க மாட்டோம் என்று உலகுக்கு சொல்லிக் கொள்ளத்தான் .

அங்கே நடந்தது என்ன? விஜயேந்திரர் நாற்காலியை எடுக்கச் சொல்லி விட்டு தரையில் உட்கார்ந்து கொண்டாராம். இல்லையென்றால் முருகனையும் உட்கார சொல்ல வேண்டுமே?

உள்ளே வந்த முருகனை நிற்க வைத்தே ஆசீர்வாதம் தந்து அனுப்பி விட்டாராம் .

சுப்பிரமணியசாமி பார்ப்பனர் என்பதால் ஜெயந்திரர் சமமாக உட்கார வைத்து பேசி அனுப்பிய படங்கள் வெளி  வந்தன.

எல் .முருகன் ஏன் சங்கர மேடம் மட்டும் போக வேண்டும்?

திராவிட இயக்கங்களில் பதவி  வந்தால் பெரியார்  அண்ணா சமாதிகளுக்கு  சென்று வணக்கம் செலுத்துவார்கள். பாஜக மாநிலத்தலைவர் பார்ப்பனர்களுக்கு தலைவராக உள்ள விஜயேந்திரரை சென்று பார்த்து  வந்தால் என்ன பொருள்? இவர் பார்ப்பனீயத்தை  ஏற்றுக்  கொண்டவர் என்பதுதானே ?

பார்ப்பனீயத்தை ஏற்றுக்  கொண்ட ஒருவர் எப்படி சமத்துவத்துக்கு போராடுவார்?

எப்படி வளரும் இங்கே பாஜக?

 

 

நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை தகற்கும் நியமனம் ?!

ஓய்வு  பெற்ற பின்  அரசு தரும் பதவிகளை பெற்றுக் கொள்வது நீதிபதிகளுக்கு பெருமை தருமா என்பது கேள்விக்குறியே.?!

முன்பு நீதிபதி சதாசிவம்  ஓய்வு பெற்ற பின் கேரள ஆளுனராக நியமிக்கப் பட்ட போதும் இப்படிப்பட்ட விமர்சனம் எழுந்தது.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் குடியரசுத் தலைவரால் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப் பட்டிருக்கின்றார்.

அயோத்தியா வழக்கில்  , ரபேல் விமான கொள்முதல் வழக்கில் என பல முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி ரஞ்சன் கோகாய்.

முன்னாள் முதல்வரின் மகன். செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.அயோத்யா வழக்கில்  எப்படி தீர்ப்பு வருமோ என்று அகில உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில் தீர்வை வழங்கியவர். அது சட்டப்படியானது அல்ல தீர்வை இலக்காக கொண்டது என்று விமர்சிக்கப்பட்டது.

எப்படியானாலும் ஒரு நீதிபதி அரசு தரும் பதவியை வாங்கினால் அதற்கு பலரும் பல விமர்சனங்களை முன் வைப்பார்கள். அதற்கு இடங்கொடுத்து விட்டாரே ரஞ்சன் கோகோய் என்ற ஆதங்கம் நீதித்துறையை சேர்ந்த பலருக்கும் இருக்கிறது என்பது  மட்டும் உண்மை .

பாஜக வின் முன்னாள் அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி நீதிபதிகள் ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளுக்குள் பதவி  பெறுவது தவிர்க்கப் பட வேண்டும் என்றார் .    மோடி ஜெட்லி சொன்னதை நினைவு கூற வில்லையா என்று காங்கிரசின் அபிஷேக் சிங்வி கேட்கிறார்.

இதே கோகோய்தான் மேலும் மூன்று  உச்ச நீதி மன்ற நீதிபதிகளான சலமேஸ்வர் , மதன் பி லோகுர் , குரியன் ஜோசப் உடன் சேர்ந்து பத்திரிகை யாளர்களை  சந்தித்து அரசிடம் இருந்து முக்கிய வழக்குகளில் குறிப்பிட்ட அமர்வை நியமிக்க அழுத்தம் தரப் படுகிறது என்று கூறி  இதை சொல்ல வேண்டியது  நாங்கள் நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமை  என்றும் கூறினார்கள்.    இப்போது அதே கோகாய் ஆறு மாதத்திற்குள் பதவியை ஏற்றுக் கொள்கிறார் என்றால் என்ன சொல்வது?

நாளை பதவே ஏற்றபின் விளக்கம் சொல்கிறேன் என்று சொல்கிறார் கோகாய் .   ஏதோ ஒரு இடத்தில் அரசும் நீதிதுறையும் சந்தித்து தானே ஆக வேண்டும் என்பது அவர் கருத்து.    அவர்  தான் மேலவையில் சட்ட பூர்வமாக ஆலோசனைதானே சொல்லப்  போகிறேன் என்று சொல்லலாம். அதை அரசு கேட்கும் என்பது என்ன உத்தரவாதம்?   மேலவை உறுப்பினர்க்கு உரிய  சலுகைகளை பெற தனது தீர்ப்பில் குறை காணலாம் என்று  கோகோய் அச்சப்  பட வேண்டாமா?

இந்தியாவில் நீதித்துறை நெருக்குதலுக்கு உள்ளாக்கப் படுகிறது என்று  குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில் இந்த நியமனம் தேவையா?

சாமானிய மக்கள் நீதித்துறையின் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையை தகர்க்கும் செயல் இது என்ற குற்றச்சாட்டை  எப்படி எதிர்கொள்வீர்கள் ?

தவிர்த்திருக்கலாம்.

 

தமிழில் கேள்வி கேட்க அனுமதி மறுத்தால் இது எந்த நாட்டு பாராளுமன்றம் ?!

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் தமிழக உறுப்பினர்கள்  துணக்  கேள்விகளை  தமிழில் கேட்க சபாநாயகர் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

தமிழக மக்களின் உரிமைகளை  பறிக்கும் இந்த நடவடிக்கைக்கு ராகுல் காந்தி தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

இந்திய நாட்டு பாராளுமன்றத்கில் இந்த நாட்டு  மொழியான தமிழில் கேள்வி  கேட்க உரிமை இல்லையென்றால் இது எந்த நாட்டு பாராளுமன்றம் என்ற கேள்வி எழுகிறதா இல்லையா ? 

பாஜக  உறுப்பினர் அரவிந்த் குமார் சர்மா இந்தி இந்த நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்கப் பட வேண்டும் என்று பேசியதுதான் இந்த குழப்பத்திற்கு காரணம். பாஜக வின் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்ன?

இதை எதிர்த்து பேச மற்ற மொழி உறுப்பினர்களுக்கு உரிமை இல்லையா?

அதே நேரத்தில்   மத்திய சமஸ்கிரித பல்கலைகழக மசோதா மூலம் மூன்று சமஸ்கிரித பல்கலைகழகங்களுக்கு  மத்திய பல்கலை கழகங்களாக தகுதி  அளித்து சட்டம் நிறைவேற்றப்  பட்டிருக்கிறது. முன்பே மக்களவையிலும் இப்போது மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றப் பட்டு விட்டதால் இனி  சட்டமாகிவிடும். இதர செம்மொழிகளுக்கு ஏன் இந்த சலுகை அளிக்கப்படவில்லை?

இனி இந்தி அல்லாத மாநில உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தாய் மொழியில் மட்டுமே பேச வேண்டும் அதை பிற மொழிகளில் மொழிபெயர்த்து  தர வேண்டும் என்று முடிவெடுத்தால் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வாய்ப்பிருக்கிறது.

மத நம்பிக்கைகளை தகர்த்த கொரானா ?!

கொரானா உயிர்களை மட்டும் கொல்லவில்லை.

மத நம்பிக்கை களையும்  தகர்த்து வருகிறது.

கை குலுக்குவதை கைவிட்டு உலகமே இன்று கைகூப்பி வணக்கம் சொல்கிறது.

உடனே இந்து மதவாதிகள் புளகாங்கிதம் அடைகிறார்கள்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன?

இந்து கோவில்களுக்கு கூட்டமாக   வர வேண்டாம் என்கிறார்கள்.  திருவிழாக்கள் ரத்து செய்யப்  படுகின்றன.  திருப்பதிக்கு கூட்டம் குறைந்து விட்டது.

குவைத் கூட்டமாக நமாஸ் செய்வதை தடை செய்திருக்கிறது. மசூதிகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்கிறார்கள்.

சர்ச்சுகளில் கூட்டம் குறைகிறது.

மொத்தத்தில்   கொரானா பாதிப்பில் இருந்து தப்பிக்க கடவுள் நம்பிக்கை போதாது என்ற மனநிலைக்கு மக்கள்  வந்து விட்டார்கள்.   எல்லா  மதங்களுக்கும் இது பொருந்தும்.

பாவம் கொரானா ! கடவுள்  நம்பிக்கையில் பார பட்சம் பார்க்காமல் எல்லாரையும் காவு கொள்கிறது.

கொரானாவை எந்த கடவுள் அனுப்பினார் என்பதில் மட்டும் போட்டி இல்லை.

மதசார்பின்மையை  கொள்கையாக கொண்டிருக்கும்   கொரானாவை கட்டுப்படுத்தி ஒழிப்பதில் மட்டும் எல்லா மதங்களும் ஒன்று பட்டிருக்கின்றன.

ஒழிக கொரானா ?!

ரஜினி விலகினாலும் அல்லக்கை மணியன் விட மாட்டார் போலிருக்கே?!

ரஜினி காந்த் வெளிப்படையாக தனது எண்ணங்களை வெளிப்படுத்தி விட்டார்.

மக்களிடம் எழுச்சி வரட்டும். அது எனக்கு தெரியட்டும். அப்போ வர்றேன்  . என்பதுதான் இறுதி செய்தி.

முதல்வர் கனவு தனக்கு என்றுமே இருந்ததில்லை என்றும் சொல்லி விட்டார்.

இளைஞர்களையும் அறிவில் சிறந்த  ஓய்வு பெற்ற அதிகாரிகளையும்  பதவியில்  அமர வைப்பாராம்.  உழைப்பதற்கு மட்டுமே ரசிகர் மன்றத்தினர்.

சிலர் மட்டும் சந்தேகம் கிளப்பினார்கள். எல்லாம் ஸ்கிரிப்ட் படி தான் நடக்கும் என்றார்கள்.

அதாவது  தனக்கு கிடைத்த தகவல்கள் படி  மக்கள் எழுச்சி இருக்கிறது  என்று சொல்லி அரசியல் கட்சி ஆரம்பித்து ஒரு 10 – 15 %  வாக்குகளை   வாங்கி  திமுகவின் வெற்றியை தடுத்து விடுவதுதான் அது.   

நான் இருக்கும்வரை முகஸ்டாலின் முதல்வராக முடியாது  என்று சவால் விட்டிருக்கிறாரே  பாஜகவின் முரளிதர்ராவ் . பாவம் அது அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் .

மேற்கண்ட கருத்தைத்தான் எதிரொலித்திருக்கிறார் தமிழருவி மணியன்.

வைகோ , , விஜயகாந்த் என்று  இருவரையும் முதல்வர் கனவில்  மிதக்க விட்ட மாமனிதர் மணியன்.     இப்போது  ரஜினியின் அல்லக்கையாக  மாறிவிட்டார். ரஜினி வேண்டாம்  என்றாலும் விடமாட்டார் போல.

விரைவில் ரஜினிகாந்த் சுற்றுப் பயணம் செய்து கட்சி ஆரம்பிப்பார் என்கிறார் மணியன்.

அந்த முதல்வர்  தானாக ஏன்  இருக்கக் கூடாது என்ற எண்ணம் வந்து விட்டதோ  என்னவோ. ?

கடந்த ஐம்பது ஆண்டுகளாக திராவிட கடசிகள் தமிழ்நாட்டை  சுரண்டி  விட்டன என்ற  ரஜினியின் கருத்து    சமூகநீதிக்கு எதிரானவர்களின் நஞ்சு  தோய்ந்த கருத்து.    சங்கிகளின் கருத்து.

குருமூர்த்திகளும்  மணியன் களும்  எப்படியாவது ரஜினியை பயன்படுத்தி தங்கள் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறார்கள்.

மாட்ட மாட்டேன்  என்று  அறிவித்து விட்டு பல்டி  அடித்து திரும்பினால்  மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது ரஜினிக்கு தெரியாதா என்ன ?

ஓயட்டும் அல்லக்கைகள் ?!

 

இந்தியர் என்பதை மறுக்க மாட்டோம்! திராவிடத் தமிழர் என்பதை மறக்கவும் மாட்டோம்!!

இந்தியர் என்பதை மறுக்க மாட்டோம்! திராவிடத் தமிழர் என்பதை மறக்கவும் மாட்டோம்.

இதை சொல்ல வேண்டிய அவசியம்  ஏற்பட்டிருக்கிறது.

ஏனென்றால் இந்தியத்தில் தமிழனை அமிழ்ந்து போகச் செய்ய சூழ்ச்சிகள் நடை பெற்று  வருகின்றன.

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது நடைமுறையில் இருந்தால் இந்த பிரச்னை எழ வாய்ப்பே இல்லை.

மாநில உரிமைகளை சிதைத்து மத்தியில்  அதிகாரங்களை குவித்து ஒற்றை உரிமை அரசாக    ,    Unitary state in place of a Federal state, மாற்ற  நடைபெறும் முயற்சிகள்  தான் இந்த முழக்கத்துக்கு காரணிகளாக அமைகின்றன.

வெறும் 73 ஆண்டுகளாகத்தான் நாம் இந்தியர்.

அதற்கு முன் 250 ஆண்டுகளாக நாம் கிழக்கிந்திய கம்பெனியாலும் பிரிட்டிஷ் அரசாளும் ஆளப்  பட்டு  வந்தோம்.

அதற்கு முன் 10000 ஆண்டுகளாக நாம் திராவிடத் தமிழராகத்தான் வாழ்ந்தோம்.

வரலாற்றை மறப்பவன் மனிதனாக  வாழ முடியாது.

மாக்களாக மந்தை போல் வேண்டுமானால் வாழலாம்.

மத்திய மாநில அரசுகளின் அதிகாரங்கள்  பட்டியலை மறு பரிசீலனை

செய்ய வேண்டிய  நேரம் இது.

நினைவிடம் அமையுங்கள், ஆனால் ஜெயலலிதா குற்றவாளியே?

ஜெயலலிதா நினைவிடம் அமைத்தல் அவசர சட்டம்  2019க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்  அளித்துள்ளார்.

அதாவது சொத்துக் குவிப்பு வழக்கில் மற்ற மூன்று பேர்தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறியது . ஆனால் ஜெயலலிதா குற்றவாளி என்று கோர்ட்டு சொல்ல வில்லை . எனவே நினைவிடம் அமைப்பதற்கு ஆட்சேபனை செய்ய முடியாது என்பது தமிழக அரசின் நிலைப்பாடு.

இது சரியா? சொத்துக் குவிப்பு வழக்கின் ஆணிவேறே ஜெயலலிதாதான் . அவர்தான் முதல்  எதிரி..மற்றவர்கள் அந்த குற்றத்தை செய்வதற்கு  அவருக்கு துணை நின்றவர்கள

குற்றம் இழைத்தவர்க்கு  துணை நின்றவர்கள் குற்றவாளிகள் என்றால் குற்றம் இழைத்தவர் எப்படி நிரபராதி ஆவார்.?

பிரச்னை ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கலாமா அமைக்க கூடாதா என்பதல்ல.

மூன்று முறை முதல்வராக இருந்தவர் . அவருக்கு நினைவிடம்  அமைப்பது அவரது தொண்டர்களின் தனி உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. தொண்டர்கள் செய்யும் காரியத்தில் குற்றவாளியா இல்லையா என்ற பிரச்னையே எழாது.

ஆனால் அரசு பணத்தில் நினைவிடம் அமைக்க  முயன்றால் அது சட்டப்படி சரியா என்ற கேள்வி நிச்சயம் எழத்தான் செய்யும்.

குற்றவாளி என்றாலும் மக்கள் பிரதிநிதிகள் முடிவெடுத்து அரசு பணத்தை செலவு செய்யும் உரிமை உள்ளது என்று சொல்லட்டும். அதை நீதிமன்றம் அங்கீகரிக்கட்டும்.  அது வேறு.

ஆனால் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லவில்லை .  எனவே  அரசு செலவு செய்வதை ஆட்சேபிக்க முடியாது என்று  சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பட்டப்  பகலில்  இத்தகைய அக்கிரமங்கள் அரங்கேற்றப் படுகின்றன. எல்லாம் சட்டத்தின் பேரால்.

இறந்து விட்டதால் தண்டனையை அனுபவிக்க முடியாத நிலைமையில் அவர்மீதான வழக்கு  அற்றுப் போனது என்பதுதானே உண்மை.

அதாவது குற்றவாளிதான். ஆனால் தண்டனையை அனுபவிக்க அவர் இல்லை. எனவே வழக்கு  அற்றுப்  போகிறது.

அதாவது உயிரோடு இருந்திருந்தால் சசிகலாவோடும் இlளவரசியோடும்  சுதாகரனோடும் ஜெயலலிதா சிறையில் நான்காண்டு காலம் கழித்திருப்பார்.  

ஜெயலலிதாவுக்கு நூறு கோடி அபராதம். மற்றவர்களுக்கு தலா பத்து கோடி அபராதம் விதிக்கப்  பட்டது உண்மையா இல்லையா?

வாதங்கள் முடிந்து உடனே  தீர்ப்பு வந்திருந்தால் தமிழக அரசியலே திசை மாறியிருக்கும். காலம் கடத்தியது உச்சநீதி மன்றம். யாரும் உள்நோக்கம் கற்பிக்க முடியாது.  சசிகலா முதல்வராக உரிமை  கோரியதும் உடனே வருகிறது தீர்ப்பு..

நொந்து கொள்வதை தவிர என்ன செய்ய முடியும் சாமானியனால் .

இப்போது வந்திருப்பது அவசர சட்டம் சட்டமானால் அது நீதி மன்ற பரிசீலனைக்கு போகும்.  அதில் தீர்ப்பு வருவதற்குள் நினைவிடம் அமுலில் இருக்கும்.   யார் இடிப்பது.?  போகட்டும் என்று விட்டு விடுவார்கள். ஆக ஒரு அநீதி சட்ட பூர்வமாக்கப் பட்டுவிடும்.

பொதுவாகவே இறந்தவர் தொடர்பாக  நினைவிடம் அமைப்பதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதை நாகரீக சமுதாயம் விரும்பாது.       

ஆனால் ஒரு  குற்றவாளிக்கு  அரசு அங்கீகாரம்  அளித்து நினைவிடம் அமைப்பது என்பது குற்றத்தை நியாயப் படுத்துவதாக அமையாதா என்பதற்கும் நீதிமன்றம் தான் விடை கூற வேண்டும். 

ஒரு தவறான முன்னுதாரணமாக இது அமைந்து விடக் கூடாதே என்பதே  பொதுமேடையின் கவலை.

 

மனிதன் காப்பாற்ற வேண்டிய நிலையில் கடவுள் இல்லை; விஜய் சேதுபதி சாட்டையடி?

மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதியும் விஜயும் பேசிய பேச்சுகள் மத வெறியர்களுக்கு சாட்டையடி கொடுப்பதாக அமைந்து இருந்தது.

மனிதன் காப்பாற்ற வேண்டிய நிலையில் கடவுள் இல்லை என்று விஜய் சேதுபதி பேசியதுதான் ஹைலைட் .

இன்று நாட்டில் நடக்கும் கலவரம் பெரும்பாலும் கடவுள் மதம் சார்ந்த தாகவே இருக்கிறது.

அதிலும் கடவுளை காப்பாற்ற முனையும் மனிதர்கள் கடவுளின் பெயரால் செய்யும்  அட்டூழியங்கள் அந்த கடவுளுக்கே அடுக்காது.

மதம் கடவுள் எல்லாம் தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்தது. அதை பொது பிரச்னையாக்க முயலும் எவரும் அதில் இருந்து ஆதாயம் அடைய முயற்சிக்கிறார் என்றுதான் பொருள்.

முன்பே நீங்கள் கிறிஸ்தவத்தை பரப்புகிறீர்களா என்று கேட்டதற்கு போய் வேற வேல இருந்தால் பாருங்கடா என்று காட்டமாக பதில் கொடுத்து அவர்கள் வாயை அடைத்தவர்தான் விஜய் சேதுபதி.

அதேபோல் விஜயும் தன் பங்குக்கு தன் மீது மலரையும்  இலைகளையும் கற்களையும் போடுவதை பற்றி கவலைப்படாமல் தன் போக்கில் போகிற நதியை போல் தான் பயணிக்க விரும்புவதாக சொல்லி  சமீபத்தில் நடந்த வருமான வரி ரைடை சுட்டிக் காட்டி பேசி தன் மன வலிமையை  காட்டினார்.

மொத்தத்தில்  மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழா பல ஊகங்களுக்கு  வித்திட்டு விட்டது.

பெட்ரோல் விலையை குறைக்காமல் கலால் வரியை உயர்த்தும் கொடுமை ?!

சர்வதேச  சந்தையில் கச்சா எண்ணை விலை பாதியாக குறைந்தும் எண்ணை நிறுவனங்கள்  பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுக்கின்றன.

அதாவது ஒரு பீப்பாய் 52.39 டாலராக இருந்த விலை 33.38 டாலராக குறைந்த போதும் தினந்தோறும் விலை நிர்ணயிக்கும் எண்ணை நிறுவனங்கள் விலையை குறைக்க மறுக்கின்றன. காரணம் மத்திய மாநில அரசுகள் இந்த விலை குறைவின் காரணமாக கிடைக்கும் லாபத்தை கலால்  வரியை உயர்த்தி அடைய நினைப்பதுதான்.

யாரை குற்றம் சொல்வது? கலால் வரியை உயர்த்திய மத்திய அரசையா? எண்ணை நிறுவனங்களையா?

இந்த விலை குறைவு எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது தெரியாது.

தினந்தோறும் விலையை உயர்த்தும்போது தினந்தோறும் விலையை குறைப்பதில் என்ன சிரமம்?

பொதுமக்கள் அதிக விலைக்கு பழகி விட்டார்கள். ஏன் அவர்களுக்கு விலையை குறைக்க வேண்டும்?

இந்த சிந்தனை பொது மக்கள் மீது  அரசுக்கு இருக்கும் அலட்சியத்தை காட்டுகிறது.

அரசின் மீது மக்களுக்கு எழும் வெறுப்பு அதிகமாவதை பொருட்படுத்தவில்லை என்றால் மக்களும் உங்களை பொருட் படுத்தப் போவதில்லை. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மமதை வெகுநாள் நீடிக்காது.