Home Blog Page 71

பல்லாயிரம் கோடிக்கணக்கில் மதிப்புள்ள சிலைகளை பாதுகாக்காத இந்து அறநிலையத்துறை?

தஞ்சைக்கு பக்கத்தில் அருள்மிகு சுந்தரேஸ்வரர் கோவிலில் சுமார் 30 பஞ்சலோக சிலைகள்  சுமார்   ரூ  700  கோடி மதிப்புள்ளவை.    அவைகள் ஒரு சாதாரண அறையில்   150  ருபாய் மதிப்புள்ள பூட்டு ஒன்றினால் பாதுகாக்கப் படுகின்றன.  70  வயது பாட்டி பாதுகாவலர்.   இந்த தகவல்கள் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட ஒரு வழக்கில்  தெரிவிக்கப் பட்டவை.

அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் விலை மதிப்பற்ற கதவுகளும் சிலைகளும் காணவில்லை என்று ரங்கராஜன் நரசிம்மன்  என்ற பக்தர் தெரிவிக்கிறார்.

அதேபோல் நாகை மாவட்டம் கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் ஆலயத்திலும்  பல கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றன என்று யானை   ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் நீதி மன்றத்தில்  தெரிவிக்கிறார் .

விசாரிக்கும் நீதிபதி திரு ஆர் மகாதேவன் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில் ஒன்பது அங்குல திரிசூலத்தையும்  15 அங்குல  தண்டபாணி சிலையையும்  காணவில்லை என்ற பத்திரிகை செய்தியை குறிப்பிட்டு இந்து அறநிலையத்துறை தகுந்த முறையில் பாதுகாக்க முடியாவிட்டால் அதற்கென தனி துறையை உருவாக்க வேண்டியதுதான் என்று குறிப்பிட்டி ருக்கிறார்.    கோவிலில் உள்ள 164  சிலைகளில்   112  சிலைகள்  தொன்மை மதிப்பு மிக்கவை என்பதால் தனி அறையில் வைத்து பாதுகாக்கப் படுகின்றன.    இந்த சிலைகள் பற்றிய குறிப்புகள்  1954  ல் தான் ஆவணப் படுத்தப் பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.  இவைகள் இன்னும்கூட மதிப்பிடப் படவில்லை என்பது இன்னும் அதிர்ச்சி அளிக்கக் கூடியது.

இந்த சிலை காணாமல் போனதுகூட கணக்குத் தணிக்கையில் தான் தெரிய வந்திருக்கிறது.

ஆக கோவில்களை விலை மதிப்பற்ற சிலைகளையும் ஆபரணங்களையும் பதுக்கி வைக்கும் இடங்களாக கருதினார்களா?     எப்போது வேண்டுமானாலும்  நாமோ நமது வாரிசுகளோ எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருந்திருக்கலாம்.

கோவில் சிலைகளும் சொத்துக்களும் காணாமல் போவது ஒன்றும் புதிதல்ல.

ஆனால் இத்தனை புகார்களுக்குப் பிறகும் தக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப் படாததற்கு யார் காரணம்?

எல்லாவற்றையும் சி பி ஐ தான் விசாரிக்க வேண்டும் என்றால் மற்ற காவல் துறைகள் எதற்கு?

அறநிலையத் துறையிடம் தமிழகம் முழுதும் உள்ள கோவில் சிலைகள் பற்றிய முழு விபரங்களும் உள்ளனவா?   அவைகள் ஒன்றிணைக்கப் பட்டு தகுந்த முறையில் பாதுகாக்கப் படுகின்றனவா?

கோவை பயணியர் நகர் கோவிலில் மூன்று சிலைகள் திருடப் பட்டு காவல் துறையில்  புகார் செய்யப் பட்டிருக்கிறது.   வெறும்   30000 மதிப்புள்ள சிலைகள் அவை.   சிறிய உண்டியலை கூட திருடர்கள் விட்டு வைக்க வில்லை.

கோவில் சிலைகள் பாதுகாக்கப் பட தனி துறை  ஏற்படுத்தப் பட வேண்டும் .  அதுவும் கால தாமதம் இன்றி.

முட்டை விநியோகத்தில் ரூ5000 கோடி ஊழல் – விசாரணை வருமா அல்லது வெற்று மிரட்டலா?

ஐ டி ரெய்டு என்றாலே மத்திய அரசின் மிரட்டல் என்றாகி விட்டது.

அன்புநாதன் , சேகர் ரெட்டி விடயத்தில் அப்படித்தானே ஆனது.

இப்போது சத்து மாவு  முட்டை விநியோகத்தில் கிறிஸ்டி நிறுவனம் ரூ ஐந்தாயிரம் கோடிக்கு  மேல் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை 72 இடங்களுக்கு மேல் சோதனை நடத்தி இருபது கோடி பணம் பதினைந்து கிலோ தங்கம் கணக்கிட முடியாத அளவு ஆவணங்களை கைப்பற்றியதாக செய்திகள் வருகின்றன.

இவையெல்லாம் வெறும் வருமான வரி ஏய்ப்புக்குத்தானா அல்லது தமிழக அரசை நடத்தும் முதல்வர் பழனிச்சாமியை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியா என்ற ஐயம எழுகின்றது.

பாராளுமன்ற தேர்தல் வரும் சமயம் நெருங்க நெருங்க இன்னும்  எத்தனை சோதனைகள் நடை பெறுமோ என்ற எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக சி பி ஐ   , ஐ டி , அமுலாக்க த்துறை போன்றவை பயன் படுத்தப் படுவதாக வரும் குற்றச்சாட்டுகளை தவறு என்று நிரூபிக்க அந்த அமைப்புகளுக்கு கடமை இருக்கிறது.

இவ்வளவு பெரிய ஊழலை தனி ஒருவர் செய்து விட முடியாது.

அரசில் பொறுப்பில் இருப்பவர்கள் சம்பத்தப் படாமல் எப்படி ஒரு நிறுவனம் ஊழல் செய்து விட முடியும். ?

இந்த அடிப்படை உண்மையை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் விசாரணை நடத்தப் பட  வேண்டும்.

லோக் ஆயுக்தா சட்டம் வேறு நிறைவேற்றப் பட்ட நிலையில் இந்த ஊழல் குற்ற சாட்டுகளை எப்படி விசாரிக்கப் போகிறார்கள். ?

இதை வெறும் வருமான வரி பிரச்னையைப் போல் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது  இந்த  அரசுக்கு  ஊழலில் சம்பந்தம் இல்லை என்பது போல் இவரே சான்றிதழ் அளிப்பது போல் இருக்கிறது.

அதுவும் நுகர் பொருள் வாணிப கழக இயக்குனர் ஐ ஏ எஸ் அதிகாரி சுதா தேவியும் இதில் சம்பத்தப் பட்டிருப்பதால் அரசுக்கு தொடர்பு இல்லை என்று சொல்லவே முடியாது.

முட்டை ஊழல் சம்பந்தமான விசாரணையும் முட்டையாகி விடக்கூடாது.

லோக் ஆயுக்தா சட்டத்தை அவசர அவசரமாக ஒரே நாளில் நிறைவேற்றிய மர்மம் என்ன?

உச்ச நீதி மன்றம் சொல்லி விட்டதே என்று தமிழக அரசு அவசர அவசரமாக சட்ட மன்ற கூட்டத்தின் கடைசி நாளன்று லோக் ஆயுக்தா சட்டத்தை இன்று நிறைவேற்றி உள்ளது.

அதில் உள்ள குறைகளை சட்ட மன்றத்தில் முழுவதுமாக விவாதிக்க வில்லை.

சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு  என்னதான் வேலை. ?

ஒரு சட்டத்தை  யாவது ஒழுங்காக விவாதிக்க தயாராக இல்லை என்றால் சட்ட மன்றம் எதற்கு?

வெற்றுச் சடங்காக ஒரு சட்டத்தை நிறைவேற்றி விட்டால் உச்ச நீதி மன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற ஒன்றைத் தவிர நாம் இதில் மகிழ்ச்சி கொள்ள ஒன்றுமில்லை.

தேர்தல் முறைகேடுகள் , ஒப்பந்த முறைகேடுகள், நியமன முறைகேடுகள் இவற்றை விசாரிக்க சத்தத்தில் இடம் இல்லை.  பெரும் ஊழல் நடப்பதே இவற்றில்தான்.

எதிர்க்கட்சித் தலைவர்  என்ற முறையில் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு விடை தராமலே சட்டம் நிறைவேற்றப் பட்டு விட்டது.

ஏதோ ஒரு சட்டம் இருக்கிறது என்பதில் பெருமைகொள்ள என்ன இருக்கிறது?

தாங்கள் செய்ய இருக்கிற ஊழல்கள் இந்த சட்டத்தால் விசாரிக்க முடியாது என்று இந்த அரசு உறுதி செய்து இருக்கிறது.

நாட்டில் பல மாநிலங்களில் இந்த சட்டம் ஒரே மாதிரி இல்லை.

லோக்பால் சட்டத்தில் உள்ள பல நல்ல அம்சங்கள் இந்த சட்டத்தில் விடுபட்டிருக்கின்றன .

இதற்கும் உச்ச நீதி மன்றம் சென்றுதான் அவைகளை சேர்க்க வேண்டும் என்ற நிலை வருந்தத் தக்கது.

அரசு காட்டிய அவசரம் இவர்கள் ஊழல் வாதிகள் என்ற கருத்தை மக்களிடம் ஊன்றி விட்டது.

சட்ட மன்ற நடவடிக்கைகள் வெளிப்படையாக ஒளிபரப்பப் பட்டால்தான் இவர்களின் முகத்திரை கிழியும்.

தங்கள்  பிரதிநிதிகள் எப்படி பணியாற்று கிறார்கள் என்று நேரடியாக பார்க்க மக்களுக்கு உள்ள உரிமை நிலை நாட்டப் பட்டாக வேண்டும்.

மழை வேண்டி மரங்களுக்கு திருமணம் செய்யும் தமிழர்கள் இருக்கிறார்களே?!

பக்திக்கும் நம்பிக்கைக்கும் எல்லை இல்லை.

ஆனால் அது அறிவு பூர்வமாக இருக்க வேண்டும்.

வேம்பு அரச மரங்களுக்கு திருமணம் செய்வித்தால் மழை பொழியும் என்ற நம்பிக்கையின் அடிப்படை அந்த மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான்.

அதற்காக அவைகளுக்கு பத்திரிகை அடித்து திருமணம் செய்விக்க முடிவு செய்த திருவாரூர் மாவட்டம் தில்லை விளாகம் கிராமத்தில் தமிழர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.

அதிர்ச்சி தரும் வகையில் இரண்டு மரங்களும் ஒரு சேர பட்டுப் போனதால் திருமணத்தை நிறுத்தி விட்டார்கள்.

பட்டுப் போக நீர் பற்றாகுறை உள்ளிட்ட இயற்கை காரணங்கள் இருக்கலாம்.   ஆனால் அதற்காக மக்களின் மழை வேண்டி பிரார்த்தனை செய்யும் நம்பிக்கை இத்தனை தூரம் போக வேண்டுமா என்பதை அம்மக்கள் சிந்திக்க வேண்டும்.

பெரியாரின் சீர்திருத்த இயக்கம் இன்னும் வேரூன்ற வில்லை என்பதை இது காட்டுகிறதா என்று தெரியவில்லை.

அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி தொண்டர்களை சீர்திருத்த பாதைக்கு ஓரளவு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியத்தை இந்த நிகழ்வு காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை.

மோடி கூட்டத்திற்கு அரசு செலவு ரூ 7 கோடி ?!

ராஜஸ்தான் அரசு பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு அரசு செலவில் ரூ 7 கோடி  செலவிட்டிருப்பது எல்லாரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

5600 பேருந்துகள் மூன்று லட்சம் பேரை ஜெய்ப்பூர் அழைத்து வருகின்றன.

பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் சுமார் இரண்டரை லட்சம் பேர் பயன் அடைந்திருப்பதாக வசுந்தரா ராஜே சிந்தியா அரசு அறிவித்திருக்கிறது.

ஒரு மக்களின் அரசு இப்படி விரயம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தேர்தல் வர இருக்கும் நிலையில் இப்படி அரசு பணத்தில் மக்களை மயக்க திட்டமிடுவது ஒருவகையில் ஊழல் நடவடிக்கை என்றே கூறலாம்.

சமீபத்தில் எந்த அரசும் இப்படி அரசு செலவில் கட்சியை பலப் படுத்திக் கொள்ள முயன்றது இல்லை.

மோடியின் பிம்பம் சரியும் நிலையில் இந்த ஆடம்பாம் மேலும் அதை மேலும் வீழ்ச்சி அடையவே செய்யும்.

ஆளுநருக்கு ஆள அதிகாரமில்லை; உச்ச நீதிமன்றம் அதிரடி? பன்வாரிலால் திருந்துவாரா?

டெல்லி அரசு தொடுத்த மேன்முறைஈட்டில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு அளித்தது.

டெல்லி உயர் நீதி மன்றம் துணை நிலை  ஆளுநர் தான் அதிகார தலைவர் என்று தீர்ப்பு அளித்தது வரலாற்றுப் பிழை. அதை எதிர்த்துத்தான் டெல்லி  அரசு மேன்முறையீடு செய்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கு எந்த வகையிலும் ஆளுநர் இடையூறு செய்யக் கூடாது.

மத்திய அரசு ஆளுநர்களை வைத்துக் கொண்டு மறைமுகமாக தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுகளை மிரட்டுவது என்ற போக்கு இனி நீடிக்காது.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல்வர் கேஜ்ரிவால் ஆளுனரை சந்திக்க முடியாமல் அவரது அலுவலகத்திலேயே தர்ணா செய்தார்.

எத்தனை ஊடகங்கள் இதனை பெரிது படுத்தின. ?

எட்டு நாட்கள் ஒரு முதல் அமைச்சர் ஒரு ஆளுனரை சந்தித்து முறையிட வாய்ப்புக் கிடைக்காமல் அங்கேயே தர்ணா செய்ய வேண்டிய அவலம் நடந்ததே?

நீதிமன்றம் ஏன் அங்கே தர்ணா செய்ய வேண்டும் என்று கேட்டது வேறு விடயம்..   வேறு வழி தெரியாமல் தர்ணா செய்தார்கள்.

வீடு தோறும் மளிகை  பொருட்களை அரசே கொண்டு சேர்க்கும் திட்டம் அமுல்படுத்தப் பட ஏன் வேண்டும் ஆளுநர்  அனுமதி?

தோற்றுப் போன அரசியல் வாதிகளின் கடைசிப் புகலிடம் ஆளுநர் மாளிகைகள் ஆகிவிட்டன என்பது உண்மைதானே?

ஆள முடியாத இடங்களில் ஆளுநர் மூலமாக காலூன்ற முடியாதா என்று  மத்திய ஆளும் கட்சி திட்டம் இடுவது என்ன நியாயம்?

புதுவையில் கிரண் பேடி செய்வதும் டெல்லியில் துணை நிலை ஆளுநர் செய்வதும் ஏறத்தாழ ஒன்றுதான்.

தமிழகத்தில் வந்திருக்கும் புரோஹித் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

நிர்மலாதேவி விவகாரத்தை விட்டு விடுவோம்.

மாவட்டம் தோறும்  ஆய்வு செய்ய போகிறேன் என்று புது விதியை உருவாக்க திட்டமிடும் இவருக்கு யார் பின்னால் இருக்கிறார்கள்?  மத்திய அரசு இருக்கிறது.

நிலம் , காவல்  , சட்ட ஒழுங்கு  மூன்றைதவிர வேறு  எதிலும் ஆளுநர் தலையிடக் கூடாது  என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பின் முக்கிய அம்சம்கள் இவைதான்;

           ‘ஆளுநர் ஒரு தடுப்பு சக்தியாக செயல் படக் கூடாது . ‘

                       ‘ ஏதாவது மாற்றுக் கருத்து வந்தால் விவாதிக்கலாமே தவிர தடை செய்யக்  கூடாது. ‘

             ‘  அரசு ஆளுநருக்கு தன் முடிவுகளை தெரிவிக்க வேண்டும். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ‘

                     ‘ மாற்றுக் கருத்து இருந்தால் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விளக்கம் கேட்கலாம். ‘

இந்த தீர்ப்பு இனிமேலாவது மத்திய அரசுக்கு ஆளுநர்களை வைத்து அரசியல்  செய்யக் கூடாது என்ற படிப்பினையை கொடுக்குமா?

ஏற்கெனவே பல  தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம்  ஆளுனர்களின் அதிகார வரம்புகள் குறித்து வரையறை செய்திருக்கின்றன.

ஆட்சியில் இருப்போர் அவைகளை திருத்த முயற்சிப்பதுதான் வேதனை.

மோடி அரசு திருந்தும் என்று எதிர்பார்ப்பதும் நாய் வாலை நிமிர்த்த முடியும் என எதிர்பார்ப்பதும் ஒன்றுதான்.

அதன் அதன் இயல்புகளை திருத்த முடியாதுதானே!

மோடி அரசு தெரியாமல் தவறு செய்தால் திருத்திக் கொள்ளும்.   அவர்கள் செய்வது எல்லாமே  தெரிந்தே செய்பவைகள். எப்படி திருத்திக் கொள்வார்கள்?

மக்கள் விழிப்புணர்வு ஒன்று மட்டுமே மக்களாட்சி தத்துவத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

18 எம்.எல்.ஏ தகுதியிழப்பு வழக்கு 3 வது நீதிபதி இறுதி விசாரணை ஜூலை 23- 27 தேதிகளில்?

ஒருவழியாக இம்மாதத்தில் மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வந்து விடும் .

18  எம் எல் ஏக்களின் பதவி தப்புமா என்பதை விட இந்த அரசின் பதவிக்காலம் தப்புமா என்பதே எதிர்பார்ப்பு.

நீதிபதி  சத்யநாராயணா ஜூலை 23  முதல்  27  வரை தினந்தோறும் இந்த வழக்கை  முதல் வழக்காக  எடுத்து விசாரிப்பதாக சொல்லி இருந்தாலும் அதற்கு முன்பே  வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒதுக்கப்  படும் வாய்ப்பு அதிகம்.

தகுதியிழப்பு செல்லும் என்றாலும் செல்லாது என்றாலும் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பே இங்கு  இறுதியானது.

பாதிக்கப் படும் தரப்பு உடனடியாக உச்சநீதி மன்றம் சென்றாலும் அங்கு இங்கு போல் பல மாதங்கள் இல்லாமல் சில மாதங்களில் தீர்ப்பு வந்து விடும்.  எனவே இன்னும் சில மாதங்களுக்கு எடப்பாடி  அரசுக்கு ஆயுள் உண்டு.

அதற்குள் வேறு பிரச்னைகள் குறுக்கிடாமல் இருக்க வேண்டும்.

முதல் பெஞ்சில் வழக்கு விசாரணையில் வாதப் பிரதி வாதங்கள் சுமார் நான்கு மாதங்கள் நீடித்தது அநியாயம்.  இதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

இந்த வழக்கில்  மட்டுமல்ல.    பல அரசியல் வழக்குகளில் தாமதங்கள் வழக்கறிஞர்கள் வாதங்கள் வைப்பதில் ஏற்படுகிறது.  இதை அவர்களில் சங்கம்தான் பரிசீலிக்க வேண்டும்.

நீதி தேவதை  கால தாமதத்தை கண் கொண்டு பார்க்க மாட்டேன்  என்றா சொல்லுவாள்?

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைகிறது!! அன்புமணி-தமிழிசை சண்டை தேவையா?

இந்தியாவில் அறிவிக்கப் பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளில் எத்தனை செயல்  பாட்டுக்கு வந்திருக்கிறது?

இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கு முன் தமிழ் நாட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது  பா ஜ க வாலா பா ம கா வாலா என்ற வாதம் தொடங்கி விட்டது.

தான்   2008 லேயே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உத்தரவிட்டு நிதி ஒதுக்கியதாகவும் அதன் பின் பதவி விலகியதால் மேற்கொண்டு தொடர முடியவில்லை என்றாலும் தன்னால்தான் மதுரையில் எய்ம்ஸ் வந்தது என்றும் அன்புமணி  ராமதாஸ் உரிமை கோர , பின் எதற்காக நீங்கள் எய்ம்ஸ் தர்மபுரியில் அமைய வேண்டும் என்று மனு கொடுத்தீர்கள் என்றும் தமிழிசை கேள்வி கேட்க , முன்னால் நாம் சொன்ன எப்போது எய்ம்ஸ் அமுலுக்கு வரும் என்ற கேள்வி பின்னுக்கு போய் விட்டது.

வரும் முன் தமிழ்நாட்டில் மதுரை , செங்கிப்பட்டி, வேலூர், தர்மபுரி , திருச்சி என்று போட்டி இருக்கலாம்.  வந்தபின் அதன் நடைமுறை பற்றி சிந்திப்பதே நல்லது.

தென் மாவட்டங்களை பா ஜ க குறி வைக்கிறது .

தேவேந்திர குல வேளாளர் , வன்னியர் என்று  சாதி ரீதியாக வளைத்துப் போடப்  பார்க்கிறது.   அதுவே பா ஜ க – பா ம க இடையே உரசல் ஏற்பட காரணம்.

இதில் பா ஜ க வெற்றி பெறுமா என்பது வேறு.

என்ன காரணங்களுக்காக எய்ம்ஸ் வந்திருந்தாலும் வந்ததை வரவேற்போம்.

நிதிப்பற்றாக்குறை ரூ 40,530 கோடி; எடப்பாடி அரசின் மோசமான நிதி நிர்வாகம்?!

2017-18 ம்  ஆண்டில்  தமிழக அரசின் நிதிப் பற்றாகுறை ரூ   40,530 கோடி என்றும் தமிழ்நாடு மூன்றாவது பெரிய பற்றாக் குறை மாநிலம்  ரிசர்வ் வங்கி வெளியிட்ட வெளியீட்டில் இருந்து தெரிய வருகிறது.

அரசியல் நிலைத்தன்மை இல்லாதது அரசு  எந்திரம் முழு அளவில் செயல்படாதது புதிய தொழில் வரத்து இல்லாதது போன்றவை காரணம் என்கிறார்கள்.

Fiscal Responsibility and Budget Management Act ன் படி நிதிபற்றாக்குறை வட்டி செலவு மொத்தக்கடன் ஆகியன     3% அளவில் இருக்க வேண்டும் என்ற வரையறையை தமிழக அரசு எட்டிவிட்டதாகவும் அதனால்  14 வது நிதிக்கமிஷனின் பரிந்துரைகள் ஏற்கப் படுவதில் சிரமங்கள் ஏற்படலாம் எனவும் டெல்லி தேசிய பொது  நிதி மற்றும் கொள்கை இன்ஸ்டிட்யூட் பேராசிரியர் என் ஆர் பானுமூர்த்தி சொல்கிறார்.

இதற்கெல்லாம் தமிழ்நாடு உதய் திட்டத்தில் சேர்ந்ததுதான் காரணம் என்ற தமிழக அரசின் வாதம் தவறு என்றும் மகாராஷ்டிரா  குஜராத் மாநிலங்கள் எல்லாம் உதய் திட்டத்தில் சேர்ந்தும் அதனால் இழப்பை சந்திக்க வில்லைஎன்பதும் சுட்டி காட்டப் படுகிறது.

அரசின் வருவாய் உயராததுதான் காரணம்.   அதை அரசு  ஒப்புக்  கொள்ள வேண்டும்.

அடுத்து தொழிற்சாலைகள் அதன் முழு உற்பத்தி திறனில் செயல்பட்டால் மட்டுமே அரசிற்கு வருவாய் உயரும் எனவும் அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கவனிக்கத் தக்கது.

அரசும் தன் செலவினங்களை குறைக்க திட்டமிட வேண்டும்.  அதை அரசு செய்கிரதாப் இன்றால் இல்லை என்பதே பதில் .

ஆக அரசின் தவறான நிதி க் கொள்கையினால் பாதிக்கப் படப் போவது என்னவோ பொதுமக்களே??!!

கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வாளரை அமெரிக்காவில் உரையாற்ற அனுமதி மறுத்த மத்திய அரசு??!!

அமர்நாத் ராமகிருஷ்ணன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சியில் முதலாவது இரண்டாவது சுற்று ஆராய்ச்சியை முடித்தவுடன் திடீரென்று குவாஹாத்திக்கு மாறுதல் செய்யப் பட்டார்.

அப்போதே ஆட்சேபனைக் குரல்கள் எழுந்தன.

இப்போது அமெரிக்காவில் உள்ள தமிழ்க் கூட்டமைப்பு இவரது ஆராய்ச்சியை பற்றி உரையாற்ற அழைத்த போது மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

சங்க காலத்து நாகரிகம் பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் வெளி உலகத்துக்கு தெரியக் கூடாது என்று மத்திய அரசு விரும்புகிறதா?

மறுக்க எந்த காரணமும் தெரிவிக்கப் படவில்லையாம்.

மத சார்பற்ற சமுதாயம் இங்கே வாழ்ந்த அடையாளம் தெரியக் கூடாது என்பதே நோக்கம் என சந்தேகிக்க இடமிருக்கிறது.

எல்லாம் சரி.  கண்டுபிடிப்புகளை அப்போதைக்கப் போது வெளியிடுவதில் அதிகாரிகளுக்கு என்ன சிரமம்?

வடிகட்டி வெளியிடுவதில் காட்டும் உள்நோக்கம் என்ன?

வரலாற்றை திரிக்க முயற்சி நடக்கிறது.    தடுக்க தமிழ்நாடு அரசு செய்யும் முயற்சிகள் என்ன?

3345 பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் சட்ட மன்றத்தில் அறிவிக்கிறார்.    என்னென்ன பொருட்கள் என்பதை உடனே அறிவிக்க வேண்டும்.

மேலும் ஆராய்ச்சி தேவை இல்லை என தற்போதைய அதிகாரி ஸ்ரீராமன் தெரிவிப்பது கேள்விக்குறிகளை எழுப்புகிறது.

ஆனால் அமைச்சர் ஆராய்ச்சி தொடரும் என்கிறார்.

ஒரு கோடி செலவில் அகழ் வைப்பகம் அமைக்க இருப்பது ஆறுதல் செய்தி.

முன்பு கண்டுபிடிக்கப் பட்டவைகளை மைசூருக்கு கொண்டு சென்றார்களே எதற்காக?

வரலாறு பாதுகாக்கப் படவேண்டும்.   அதாவது உண்மை  வரலாறு.