Home Blog Page 74

மேட்டூரில் நீரில்லை என்று சொல்ல ஒரு முதலமைச்சர் எதற்கு? ஊழல் செய்யவா ஒரு குறுவை தொகுப்பு?

மேட்டூர் அணையில்  39.5 அடி தண்ணீர் தான் இருக்கிறது.    90  அடி இருந்தால்தான்  ஜூன்    12  ல்  குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க முடியும் .  எனவே இந்த ஆண்டு குறுவைக்கு நீர் திறக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதற்கு ஒரு முதல் அமைச்சர் எதற்கு?

இங்கே இல்லை நீர்.  கர்நாடகாவில் எவ்வளவு இருக்கிறது?   அதுதானே வழக்கு.

அதை அளவிடத்தான் ஒழுங்காற்றுக் குழு.  அதுவும்பத்து நாளைக்கு ஒருமுறை.

அதைப்பற்றியெல்லாம் முதலமைச்சர் அறிக்கையில் ஒரு வார்த்தை இல்லை.

கர்நாடக அணைகளில் இருக்கும் மொத்த தண்ணீர் எவ்வளவு?    ஏரிகளிலும் தடுப்பு அணைகளிலும் பதுக்கி வைக்கபட்டிருக்கும் நீர் எவ்வளவு?

அங்கே போதிய நீர் இல்லாத காலத்தில் இருக்கும்  நீரை எப்படி பகிர்ந்து கொள்வது ( distress sharing )  என்பதுதான் வழக்கின் சாரம்.

இருக்கும் காலத்தில் கழிவு நீரைப்போல் திறந்து விடுவதற்கு ஏன் இத்தனை போராட்டம்?

அதை தெரிந்து கொள்ள முதல்வர் எடுத்த நடவடிக்கை என்ன?

மேலாண்மை ஆணையம் உடனடியாக அமுலுக்கு வர மத்திய அரசை எப்படி இந்த அரசு வலியுறுத்தியது?

இதையெல்லாம் சொல்லாமல் குறுவை தொகுப்பை அறிவிக்கிறாரே முதல்வர்?

இந்த தொகுப்பு நடப்பு பருவ குறுவைக்கு பயன் படுமா முதல்வரே?

நான்கு மாதத்தில் முடிவடையும் ஒரு சாகுபடிக்கு உங்கள் அறிவிப்பு எப்படி பலன் தரும்?

ஆழ்குழாய் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே பலன் தரும் இந்த திட்டம் ஆளும் கட்சி காரர்களுக்கு மட்டுமே பயன் தரும்.

பயனாளிகளை தெரிந்தெடுக்க என்ன விதிமுறை?     வெளிப்படைத் தன்மை உண்டா?

குறுவை தொகுப்பு என்ற பெயரை மாற்றுங்கள்.

கொஞ்சம் நாணயம்  இருக்கட்டுமே?

 

 

குமாரசாமியை கமல் சந்தித்தது ஏன்?

இத்தனை ஆண்டுகளாக வழக்கு நடத்தியவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்கிறார் கமல் ஹாசன் .

ஐம்பது ஆண்டு  பிரச்னையை பல காலம் பேசித்தீராமல் கடைசி ;முயற்சியாகத்தான் நடுவர் மன்றம் அமைத்து வழக்கு நடத்தி ஏதோ ஒரு வழியாக இறுதி தீர்ப்பு வந்து அதுவும் பல இழப்பு களை சந்தித்து வாரியம் கேட்டுகிடைக்காமல் ஆணையம் வந்து அதுவும் பெயரளவிலா அமுலுக்கு வருமா என்பது தெரியாமல் திண்டாடிக் கொண்டு இருக்கும் விவசாயிகளுக்கு தீர்ப்பு அமுலுக்கு வரும் என்பது ஒன்றே நல்ல சேதி.

என்றும் கர்நாடகத்துக்கு தண்ணீர் கூடாது என்பது தமிழகத்தின் நிலை அல்ல.    அவர்கள்தான் தீர்ப்பை அமுல் படுத்த மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள்.

அவர்களிடம் நாம் எதிர்ப்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்.   தீர்ப்பு அமுல் படுத்தப் படும் என்ற உறுதி ஒன்றே.

இப்போது போய் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கமலும் பேசுகிறார்.   அதை குமாரசாமியும் ஒத்து ஊதுகிறார்.    ரஜினியும் அதை ஆமோதிக்கிறார்.

தீர்ப்பை என்ன செய்ய வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.?

அப்படியே விட்டு விடலாமா?    என்றென்றும் கையேந்தி நிற்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கருத்தா?

தீர்ப்பை எப்படி அமுல் படுத்த வேண்டும் என்பதை மட்டும் பேசலாம்   என்றாவது சொல்கிறார்களா?

ஏதோ தான் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி என்று கமலஹாசன் நிரூபிக்க விரும்பினால்  உருப்படியாக ஏதாவது செய்யட்டும்.

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க  விரும்பி , குட்டையை குழப்பும் வீண்  வேலையை கமலஹாசன் நிறுத்திக் கொள்ளட்டும்.

தமிழ்த் தேசியம் பேசினால் தேசத் துரோக வழக்கா? வேல்முருகன் மீதான அடக்குமுறை எதைக் காட்டுகிறது?

பொய் வழக்கு போடுவது ஆட்சியாளர்களுக்கு கைவந்த கலை.

அதை எதிர்கொள்வது எதிர்கட்சிகளுக்கு பேரும் சவால்.  எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை.

அவர்தானே மாட்டிக் கொண்டிருக்கிறார்.   தானாகவே வெளியே வரட்டும் என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் மற்றவர்கள்.

இந்த ஒற்றுமை இன்மை ஆட்சியாளர்களுக்கு வசதியாகப் போய்விடும்.   அதுதான் எதிர்ப்பாளர்கள் மீதான அடக்குமுறை தொடர் கதை ஆகி வருகிறது.

இன்றைக்கு வேல்முருகன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது.     பா ம க இதை எதிர்த்து குரல் கொடுக்காது.     எதிரியை விட பங்காளியை ஆபத்தானவனாக பார்க்கும் பார்வை கோளாறு.

அதேபோல் சீமான் மீது ஏதாவது வழக்கு பதியப் பட்டால் இதர தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து போராடாது.    ஏன் என்று கேட்டால் அவர் எங்களோடு பயணிக்கிறாரா என்று திரும்பக் கேட்பார்கள்.

அதனால்தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு காவலர்கள் மீதான தாக்குதல் தொடங்கிய பிறகுதான் நடந்தது என்று ரஜினி ஆதாரமில்லாமல் பேசியது நடந்தது.  போராட்டம் நடத்தியவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டும். அதற்காக அவர் யார் சொன்னதையாவது கேட்டுக் கொண்டு பேசத் தயாராகி விட்டார்.   மத்திய  ஆளுங்கட்சி கையாள் என்று தன்னை நிருபித்து கொண்டார் ரஜினி.

பொய் வழக்குப்  போட்டால் எதிர்த்து போராட தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு ஏற்பாட்டை செய்ய அவசரமாக முன்வர வேண்டும்.

சீமான், வேல்முருகன்,  பாரதிராஜா, அமீர், வைகோ , பழ. நெடுமாறன், கௌதமன், திருமுருகன் காந்தி, கோவன், என்று நீளும் பட்டியல் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்.

ஆதாரம் இருந்து நடவடிக்கை எடுக்கப்  பட்டால் யாரும் ஏன் என்று கேட்கப் போவதில்லை.

எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் வழக்கு  புனைவதுதான் கேள்வி.

எது தேச துரோகம் என்பது முதலில் நிர்ணயிக்கப் படவேண்டும்.

உரிமை  கேட்டால், ஆபத்தை எதிர்த்தால் தேச துரோகமா?

வெள்ளையர் ஆட்சி போய் இந்திக்கார்கள் ஆட்சி வந்து  விட்டது என்ற குற்றச்சாட்டிற்கு என்ன பதில். ?

மீட்கப்பட்ட ராஜராஜன்-உலகமாதேவி சிலைகள் -பின்னணி ரகசியங்கள்??!!

மூவேந்தர் வரலாறுகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப் பட்டன.

ஏனென்றால் தமிழர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் நெறியையும் கொண்டிருந்தார்கள் என்பதுதான்.    அதை தமிழர்கள் உணர்ந்து கொண்டால் தங்களது ஆதிக்கம் பிற்காலத்தில் உருவானது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்களே என்று பார்ப்பன சக்திகள் அஞ்சியது காரணம்.

அதன் ஒரு பகுதிதான் ராஜராஜன்-உலகமாதேவி சிலைகள் , மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கட்டுப் பாட்டில் இருக்கும்போதே  , ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், சருக்கை ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி மூலமாக கோவில் அதிகாரிகளால் கடத்தப் பட்டு சென்னை கௌதம் சாராபாய் என்பவருக்கு விற்கப் பட்டு  , இப்போது   சிலை கடத்தல் பிரிவு ஐ ஜி பொன் மாணிக்கவேல் குழுவினரால் குஜராத் அகமதாபாத் நகரில் காலிகோ மியூசியத்தில் இருந்து மீட்கப் பட்டு மீண்டும் தஞ்சை பெரிய கோவிலில் வைக்கப் பட இருக்கும் செய்தி.

ராஜராஜன் சிலை நூறு கோடியும் உலகமாதேவி சிலை ஐம்பது கோடியும் சர்வதேச மார்க்கெட்டில் விலை போகும் என்பது கூடுதல் செய்தி.  இரண்டும் ஐம்பொன் சிலைகள்.

வெறும் பணத்திற்காக மட்டும் இந்த சிலை கடத்தல் நடைபெற்றிருக்குமா?

குந்தவை பிராட்டியார் அளித்த இரண்டு உமா பரமேஸ்வரி சிலைகள்- ராஜராஜனின் தந்தை பொன் மாளிகை துஞ்சின தேவர் சிலை,  தாயார் வானவன்மாதேவி சிலை, போன்றவையும் திருடப் பட்டிருக்கின்றன.   தந்தை தாயார் சிலைகளுக்கு ராஜராஜ சோழன் கட்டளைப்படி தினமும் பெரிய கோவிலில் அபிஷேகம் நடந்து வந்திருக்கிறது.

இவைகளை நிறுத்துவதற்கு இந்த கடத்தல்கள் நடைபெற்றிருக்குமோ என்ற ஐயம் எழுகின்றது.    பணத்திற்காக திருடப் பட்டது என்ற பெயர் கட்டுவதற்காக மேலும் அங்கிருந்த பல சிலைகளை கடத்தி இருக்கின்றனர்.

தங்கத்தால் செய்த கொல்கைதேவர் சிலை காணவில்லை.  நான்கு வசுதேவர் சிலைகளும் சேத்திர பாலர் சிலையும் திருடப் பட்டிருக்கின்றன. சீனிவாச கோபாலாசாரி  சிலைகள் விற்ற பணத்தில் வேப்பேரியில் ஏழு கிரௌண்டு நிலம் வாங்கியிருக்கிறார்.   அதையெல்லாம் விசாரிக்கப் போகிறார்கள்.   இவையெல்லாம் பொன். மாணிக்கவேல் கொடுத்த பேட்டியில் கண்ட விபரங்கள்.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உள்ளிட்ட ஒரு குழுவினர் இதில் பங்கேற்று இந்த முறைகேட்டை வெளிக் கொணர்ந்துள்ளனர்.  பாராட்டுக்குரியவர்கள்.

இன்னும் பதினோரு சிலைகளை கண்டுபிடிக்க வேண்டுமாம்.

தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் கட்டுப் பாட்டில் இருக்கும் கொவில்களுக்கே இந்தக் கதி என்றால் பாதுகாப்பு இன்றி இருக்கும் மற்ற கோவில்களில் என்னென்ன நடக்கும்?

இந்த செய்தி வரும் இன்றே இன்னொரு செய்தியும் வெளியானது.    திருவள்ளூர் ஊத்துகோட்டை அக்னீஸ்வரர் கோவிலில் சிவ-பார்வதி ஐம்பொன் சிலைகளை களவாடி இருக்கிறார்கள்.

கோவில்கள் இறைவனின் குடில்களா?     பொக்கிஷ அறைகளா?

பெரிய கோவிலில்  இருந்து திருடப்பட்ட சிலைகள் மீண்டும் கோவிலுக்குள் வைக்கப் பட்டு தகுந்த மரியாதைகள் செய்யப் பட வேண்டும்.  பல சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப் பட்டிருக்கலாம் என சந்தேகிக் கிறார்கள்.

தமிழக அரசின்    இந்து அறநிலையத்துறை வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியுமா?

போராட்டம் நடத்தினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்கிறார் ரஜினி??!!

ஸ்டெர்லைட்  ஆலையை மூட சொல்லி நூறு நாள் போராட்டம் நடத்திய போது அரசும் ரஜினியும் கண்டு கொள்ளவில்லை.

நூறாவது நாள் முடிவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை என போராட்டம் நடத்தியபோது கூட அரசு விழித்துக் கொள்ளவில்லை.

பேச்சு வார்த்தை நடத்தவில்லை.

ஆனால் திட்டமிட்டு 13 பேரை சுட்டுக் கொன்றிருக்கிறது காவல் துறை.

இறந்தவர்களுக்கு நிவாரணம் அளித்து விட்டு துப்பாக்கி சூட்டையும் நியாயப் படுத்துகிறது எடப்பாடி  பழனிசாமியின்  அரசு.

எல்லாரும் கண்டித்து ஆன பிறகு அங்கே சென்ற ரஜினிகாந்த் ஒரு நடிகனாக அங்கே சென்றால் மக்கள் மகிழ்வார்கள் என்று  சொல்லி விட்டு திரும்பி வரும்போது அசட்டுத் தனமான கருத்துக்களை உதிர்த்து விட்டு கொஞ்ச நஞ்சம் இருந்த அனுதாபத்தையும் இழந்து நிற்கிறார்.

போலிசை அடித்த பிறகுதான் போலிஸ் சுட்டது.

போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டார்கள்.

இந்த விஷக் கிருமிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

போராட்டம் நடந்தால் இங்கு தொழில் வராது. வியாபாரிகள் வர மாட்டார்கள். வேலை வாய்ப்பு கிடைக்காது.

எல்லாத்துக்கும் போராட்டம் போராட்டம் என்றால் நாடே சுடுகாடாகி விடும். ”

ரஜினி  ஒரு முட்டாள் என்றார் சு. சாமி.-   அது  உண்மைதானோ         என்ற சந்தேகம் பலருக்கும் வந்து விட்டது.

போராடாமல் எந்த உரிமை இதுவரை காக்கப் பட்டிருக்கிறது.?

தகுதியுள்ளது பிழைத்துக் கொள்ளும் என்பது டார்வின் விதி.  போராடாதது அழியும்.

நன்றாகக் கேட்டான் ஒருவன் ரஜினியை பார்த்து.  ‘ நீங்கள் யார்’ ?  ‘ நான் ரஜினிகாந்த் ‘ என்று சொல்ல வைத்தான்.  அவன் ஒரு ரஜினி ரசிகன்.

இத்தனை நாள் வராமல் இருந்ததை விட போராடியவர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி சாடியது அவனை புண் படுத்தி இருக்க வேண்டும்.

யார் சமூக விரோதிகள் என்பதை காவல் துறையை கையில் வைத்திருப்பவர்கள் அல்லவா கண்டுபிடிக்க வேண்டும்.   அவர்கள் மீது நடவடிக்கை  எடுப்பதை யார் தடுத்தார்கள்.?

அடித்தவனை விட அடித்ததை நியாயப் படுத்துகிறவன் கொடுமையாளன்.

ரஜினி சொன்னதை பாஜக வரவேற்கிறது.  அதிமுக நாளேடு வரவேற்கிறது.   ஆக இருவருக்கும் யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள்.

மருத்துவர் ராமதாஸ் சொன்னதுபோல் நல்லவேளையாக சூழ்நிலை சிலரை அடையாளம் காட்டிவிடுகிறது.   அதற்காக காலத்திற்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

காலா படத்தில் வரும் பாட்டுக்களில் எல்லாம் போராட்டத்தை நியாயப் படுத்தி நல்ல பேர் வாங்க பார்க்கும் ரஜினி நிஜத்தில் அதற்கு எதிரானவர் என்பது முரண் தான்.

எம்ஜியாரையும்  விஎன்ஜானகியையும் ஜெயலலிதாவையும் முதல் அமைச்சர் ஆக விடாமல் தடுக்க தமிழர்களால் முடியவில்லை.    அந்த தகுதி அவர்களுக்கு இல்லாமல் போய் விட்டது.   அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போய் விட்டது.

இப்போதும் அந்த அவலம் நடந்து விடுமோ என்ற பயமும் எழுவதை தடுக்க முடியவில்லை.  ஏமாறுவது தமிழன் குணம் என்று எழுதியிருக்கிறதே ?

பத்திரிகையாளர்களிடம் எரிந்து விழுந்திருக்கிறார்.  ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய குணம் எதுவும் அவரிடம் இல்லை.

இறந்தவர்களை பார்த்து ஆறுதல் சொல்ல வந்தவர் அங்கிருந்தவர்களை பார்த்து கைகளை ஆட்டி உற்சாகப் படுத்துகிறார்.   கொண்டாடவா வந்திருக்கிறாய்?

முதலில் காவல் துறையின் அத்து மீறலை கண்டித்து பேட்டி  கொடுத்தவர் பின்பு எதனால் மாறிப் போனார்?    யார் போதனை செய்தார்கள்?

ரஜினி இயல்பில் வலது சாரி சிந்தனையாளர்.   சோ இருந்திருந்தால் எனக்கு ஆயிரம் யானை பலம் வந்திருக்கும் என்பவர் எப்படி இருப்பார்?    சோ வே அரசியலில் தீண்டத் தகாதவராக ஒதுக்கி  வைக்கப் பட்டவர்.  அவர் வழியில் இப்போது துக்ளக் நடத்தும் குருமூர்த்தி இவருக்கு ஆலோசகராக இருந்தால் இவரை யார்தான் காப்பாற்ற முடியும்?

காங்கிரசில் இருந்து கொண்டே ரஜினிக்கு கால் பிடிக்கும் கராத்தே தியாகராஜனை போன்றோர் சிலர் இருக்கத்தான் செய்வார்கள்.

காட்டிக் கொடுப்போர், வஞ்சகம் செய்வோர் , என்று எத்தனை துரோகங்கனை தமிழ் சமுதாயம் தாங்கும்?

ஹிட்லரைப்போல் மோடி ரொம்பவும் நல்லவர் ?! 4 ஆண்டுகள் ஆட்சி சொன்ன சேதி ?!

மோடி ரொம்பவும் நல்லவர்.

வெற்றி ஒன்றையே இலக்காக கொண்ட செயல்படும் அரசியல்வாதி.

அதற்காக எதையும் செய்வார்.   குடும்பத்தை இழப்பார்.    தாம்பத்திய சுகத்தை நாடார்.  உணவுச் சுவையை  தவிர்ப்பார்.   சிற்றின்பங்களை துறப்பார்.  சொத்து சேர்க்கும் ஆசையை அறவே விலக்குவார்.   ரத்த உறவு  குடும்ப ஆட்சி குற்ற சாட்டிற்கு இடமே இல்லை.  ( ஆர் எஸ் எஸ் குடும்பம் விதிவிலக்கு)

ஒன்றில் மட்டும் குறியாக வாழ்கிறார்.   பதவி.   பதவி.  பதவி. அதில் உச்சத்தை தொட்டும் விட்டார்.

அதை அடைய உதவியது பெரு முதலாளிகள்.    எனவே தக்க வைக்கவும் அவர்கள் தயவு தேவை என்பதால் அவர்கள் நலனை மையப் படுத்தி எதை வேண்டுமானாலும் செய்வார்.

மறுபக்கம் ஆர் எஸ் எஸ் – அவருக்கு முகவரி கொடுத்தது.    அந்த சித்தாந்தம் வெற்றி பெற தன்னையே ஒப்புக் கொடுத்தவர் அவர்.  அவர்களுக்கு இவரும் இவருக்கு அவர்களும் முட்டு தாங்கிகள்.

அவர்களுக்கு இவர் பாரமாகும்போது கழற்றி விடப் படுவார்.  அதுவரை இவர் கொண்டாடப் படுவார்.

ஹிட்லர் ஒன்றும் கெட்டவர் அல்லவே.    தன் இனம் ஆள ஆசைப் பட்ட பாசக்காரர். அதற்காக  வெறும் அறுபது லட்சம் யூதர்களை கொல்ல நேர்ந்தது .    அவ்வளவுதான்.

போர் செய்து வெற்றி பெற பல லட்சம் பேர்களை பலி கொடுக்க நேர்ந்தால் அது தான் சிறந்த ஆட்சி.

இன்று மேல் தட்டு மக்கள் ஆட்சியை நிலைப்படுத்த யார் உரிமையை வேண்டுமானாலும்  காவு கொடுப்பது தவறல்ல.

இந்த நான்கு ஆண்டுகளில் ,   மோடி என்றால் நினைவுக்கு வருவது பண மதிப்பிழப்பு நடவடிக்கை.    இரண்டாயிரம் நோட்டுகள் காணாமல் போய் விட்டன.  எங்கே மோடி கொண்டு வருவதாக சொன்ன கறுப்புப் பணம். ?

வெளிநாடுகளில் பதுங்கிய கறுப்புப் பணம் எங்கே?

எல்லாம் போய் டிஜிட்டல் பரிவர்த்தனை சாதனையாகி விட்டது.

ஆறு கோடி கழிப்பறைகளும்  இந்தி சமஸ்க்ரித திணிப்பும் வெற்றி என்றால் மோடி வெற்றியாளர்தான்.

போட்டி போட சரியான எதிர்க் கட்சி இல்லை என்பது உணரப் படுகிறது.

ராகுல் போதவில்லை.   எல்லா எதிர்க்கட்சிகளும் குமாரசாமியின் பதவியேற்பில் கலந்து கொண்டது கொஞ்சம் நம்பிக்கையை விதைத் திருக்கிறது.    மரமாக வளர்கிறதா என்பதை இனிமேல்தான் பார்க்கவேண்டும்.  ஜனதா பரிசோதனை எதனால் தோற்றது என்பதை இவர்கள் ஆராய்ந்தால் மீண்டும் அந்த தோல்வியை தவிர்க்கலாம்.

எது நடந்தாலும், தமிழ்நாட்டில் , விவசாயிகளை அழிக்க ஒன்ஜிசி முயற்சிக்கும் அத்துணை கிணறுகளும் மூடப் பட வேண்டும்.   மீனவர்களை அழிக்கும் அத்தனை திட்டங்களும் கைவிடப் பட வேண்டும்.      இந்தி சமஸ்க்ரித திணிப்பு நிறுத்தப் பட வேண்டும்.     நீட் மறுக்கப் படவேண்டும்.  இதற்கெல்லாம் காரணம் ஆன பா ஜ க நுழைய அனுமதிக்க முடியாது.

எங்கு வெற்றி பெற்றாலும்  இங்கு மோடி  தோற்பார்.

தமிழர் குல சாமி பிரபாகரன் !!! நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு தடை போடலாமா???

இன விடுதலைக்காக போராடிய உலகத் தலைவர்களில் பிரபாகரனோடு ஒப்பீடு செய்யத் தக்கவர் வெகு சிலரே.

தான் மட்டும் இல்லாமல் தன் குடும்பத்தையே விடுதலைப் போரில் ஈடுபடுத்தியவர்.

போராளிகளின் தாகம் விடுதலையே தவிர எவரையும் அழிக்க அல்ல என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்தவர்.   சிங்களர் உடன் ஆன போரிலும் யுத்த தர்மத்தை மீறாதவர்.

கட்டுப்பாடுகள் நிறைந்த போராளிகள் வாழ்க்கை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாதது.

சுயநலம் தவிர்த்த  போராட்டம் உலகத்தையே திரும்பிப்  பார்க்க  வைத்தது.

இந்தியாவின் துரோகம் , ஆதிக்க நாடுகளின் வணிகக் கணக்கு , ஐ நாவின் பாராமுகம், விலைபோன இன துரோகிகள் என்று பல சக்திகள் புலிகளின் தோல்விக்கு காரணமாயின.

இன்றைக்கும் சிறிசேன புலிகள் வீழ்த்தப் பட்டாலும் இன்னமும் அவர்களின் குரல் உலகமெங்கும் உயிர்ப்போடு இருக்கிறது என்று அச்சம் கொண்டு பேசுகிறார்.

மாவீரர் தின உரையை கேட்க உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும்.

லட்சக்கணக்கான தமிழர்கள் இனப் படுகொலை செய்யப் பட்ட நாளில் அந்த மாவீரர் களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.

குறைந்த பட்சம் வீட்டில் இருந்தாவது மௌன அஞ்சலி செலுத்துவோம்.

மெரினாவில் அஞ்சலி செலுத்த தடை விதித்த தமிழக அரசு பெரிய தவறை செய்து  விட்டது.

யாருக்கோ பிடிக்காது என்பதற்காக நமது முன்னோரை நாம் வழிபடுவதை நிறுத்தி விடுவோமா??

நமது எல்லா குல தெய்வங்களும் நமது முன்னோர்களே. அவர்களை வணங்குவது என்பது மரியாதை செய்வதற்குத்தான்.

குலதெய்வ படங்கள் வரிசையில் பிரபகரன் படமும் இடம் பெறட்டும்.

பிரபாகரன் நமது முன்னோர்களின் பட்டியலில் இடம் பெற்று வணங்கத் தக்க தமிழர் குல சாமி என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.

எடியூரப்பா வாக்கெடுப்பை சந்திக்காமலேயே ராஜினாமா?

சமீப காலத்தில் எந்த ஆளுநரும் இப்படி மோசமாக நடந்திருக்க முடியாது.

பெரும்பான்மை காட்டிய காங்கிரஸ் – ம ஜ த கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்காமல் பெரும்பான்மை இல்லாத எடியூரப்பாவை முதல்வர் ஆக்கியது- உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்பும் மூத்த உறுப்பினரை சபாநாயகர் ஆக்காமல் பா ஜ க உறுப்பினரை சபாநாயகர்  ஆக்கியது என்று வெறுக்கத் தக்க முறையில் பார பட்சமாக நடந்துகொண்டார் வாஜ்பாய் வாலா.

கடைசியில் உச்சநீதிமன்றம் விதித்த ஒரு நாள் கெடுவில் ஆட்களை விலைக்கு வாங்க முடியாமலும் , சபை நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பில் இருந்ததால் முறைகேடுகளில்  ஈடுபட முடியாமலும் வாக்கெடுப்பில் தோல்வியை சந்திக்க  விரும்பாமல் ராஜினாமா முடிவுக்கு வந்தார் எடியூரப்பா.

உச்சநீதி மன்றம் தக்க நேரத்தில் தலையிட்டிருக்காவிட்டால் கர்நாடகத்தில் ஜனநாயகம் பா ஜ க கைகளில் சிக்கி மாண்டிருக்கும் .

தர்ம நியாயத்தை பற்றி பேச இனி பா ஜ க வுக்கு என்ன  தகுதி மிச்சம் இருக்கிறது.

மோடி வெல்ல முடியாதவர் என்ற பிம்பமும் சாய்க்கப் பட்டிருக்கிறது.

ஆளுநர் என்பவர்  தேவையா என்பதை பற்றியும் அவர்களை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றியும் வரையறை செய்ய நேரம் வந்து  விட்டது.

பிரச்னையை தீர்க்க வேண்டியவர்கள் பிரச்னையை உருவாக்கி விடுகிறார்கள்.

தென்னாட்டில் பா ஜ க தலை தூக்க முடியாது என்று  மீண்டும் நிருபிக்கப் பட்டிருக்கிறது.

ஜனநாயகப் படுகொலை இதுதான்! பெரும்பான்மை இல்லாமல் பதவி??!!

கர்நாடகத்தில் நடந்த ஜனநாயக படுகொலை பா ஜ க என்ற பாசிச கட்சி அதிகாரத்தை தக்க வைக்க எத்தகைய மூர்க்கத் தனமான தாக்குதல்களை யும் நடத்தும் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.

மோடி என்ற தர்மத்தலைவராக உருவகப் படுத்தப் படும் தலைவர் உண்மையில் இந்தியாவின் ஹிட்லர் என்று உருவகப் படுத்தப் பட வேண்டியவர் என்பதையும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

104  உறுப்பினர்களை கொண்ட பாஜக  பெரும்பான்மைக்கு தேவையான  111  உறுப்பினர்கள் ஆதரவு இல்லாமலேயே  ஆளுநரின் பா ஜ க ஆதரவுப் போக்கினால் அழைக்கப் பெற்று எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதில் விவசாயிகள் கடன் ஒரு லட்சம் இருந்தால் தள்ளுபடி என்ற அறிவிப்பு வேறு??

118 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தும் காங்கிரஸ் -மத சார்பற்ற ஜனதா தள கட்சிகள் ஆதரவு பெற்ற குமாரசாமி முதல்வராகாமல் தடுக்கப் பெற்றிக்கிறார்.

பல தீர்ப்புகள் ,  தொங்கு சட்டமன்றம் அமையும் பட்சத்தில் ,  முதலில்  தேர்தலுக்கு முன்பான கூட்டணி , பிறகு தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சி, அடுத்து தேர்தலுக்கு பிறகான கூட்டணி என்ற வரிசையில் அமைச்சரவை அழைக்க வாய்ப்பு  கொடுக்கப் படலாம் என்று வரையறுத்தாலும்  கோவா  மணிப்பூர் . மேகாலயா போன்ற மாநிலங்களில் இதே பா ஜ க ,,தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தாலும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றிக் கொண்டது.

அதே  முறையில்  இப்போது காங்கிரசும் ம ஜ க வும் கூட்டணி வைத்து பெரும்பான்மை பலத்தை வைத்திருக்கும்போது  தனிப்பெரும் கட்சி என்ற போர்வையில் ஆட்சியை பிடித்து கட்சி தாவலை ஊக்குவித்து ஆட்சியை தக்க வைக்க பா ஜ க முயற்சிப்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிப்பது ஆகும்.

உச்சநீதிமன்றம் இரவில் வழக்கை எடுத்துக் கொண்டு நாளை வரை அவகாசம் கொடுத்து இருக்கிறது.    எடியூரப்ப கொடுத்த கடிதத்தை கேட்டிருக்கிறது.   அதில் அவர் தனக்கு 104  உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது என்றுதான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.   எங்கே பெரும்பான்மைக்கு தேவையான மீதி உறுப்பினர்கள் என்று நீதிமன்றம் கேட்டால் அவர்கள் காங்கிரசிலும் மஜாகவிலும்  இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

நூறு கோடியாம், அமைச்சர் பதவியாம்- கூறு போட்டு விற்கிறார்கள் பதவிகளை.

கட்சி தாவல் சட்டம் காற்றில் பறக்கிறது.    குறுக்கு வழிகள் ஆராயப் பட்டு ராஜினாமா செய்ய வைக்கலாமா  வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வைக்கலாமா என்றெல்லாம் திட்டமிடுகிறார்கள்.

பதவியை தக்க வைக்க இப்படி பட்டப் பகலில் பேரம் பேசுபவர்கள் எப்படி ஆட்சிக்கு வந்தபின் நியாயமாக நடந்து கொள்வார்கள். ?

மக்கள்  எழுச்சியினால் பதற்றம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு குலையுமானால் யார் பொறுப்பு?

விலைக்கு வாங்க பதினைந்து நாட்கள் அவகாசம் கொடுத்தது எப்படி சரியாகும்?

இரண்டு மூன்று நாளில் பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று உத்தரவு இட்டிருந்தால் மன்னிக்கலாம்.   பதினைந்து நாட்கள் அவகாசம் தந்து தனது விசுவாசத்தை நிரூபித்திருக்கிறார் ஆளுநர்.

உச்சநீதி மன்றம் இந்த அவகாசத்தை குறைத்து இரண்டு மூன்று நாளில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றாவது உத்தரவு இடுமா என்ற கேள்விதான் எல்லார்  மனதிலும்.

இடையில் யாராவது விலை போனால் அதற்கு ஆளுநரே காரணம்??!!

குற்றவாளி ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் மணிமண்டபம் சட்டப்படி சரியா??!!

சட்ட மன்றத்தில் குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை திறப்பதை தடுக்க முடியாத தற்கு அது சபாநாயகரின் தனியுரிமை என்றும் அதில் தலையிட முடியாதென்றும் உயர் நீதி மன்றம் சொன்னது.

இப்போது அரசு செலவில் கடற்கரையில் ரூபாய் 50.8  கோடி மதிப்பீட்டில் அவருக்கு மனிபண்டபம் கட்ட முதல் அமைச்சர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ பி எஸ் ம் கலந்து கொண்டு  அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள்.

திராவிட இயக்கத்தின் தலைவிக்கு பிராமணர்கள்  பூமி பூஜை செய்ய பய பக்தியுடன் முதல்வரும் துணை முதல்வரும் மாலையை போட்டுக் கொண்டு சடங்குகள் செய்ய  , அதைக் காண கண் கோடி வேண்டும்??!!

சுயமரியாதை இயக்கம் தலை கவிழ்ந்து நின்றது.

அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப் பட்டு விட்டதாகவும் தகவல்கள் சொல்கின்றன.

பீனிக்ஸ் பறவை வடிவத்தில் மண்டபம் அமையுமாம்.

இப்போது உயர் நீதி மன்றம் என்ன சொல்லும்?

சசிகலா சிறையில் இருந்து கொண்டே மகிழ்வார்.

குற்றவாளிகள் அரசியல் கட்சிகளுக்கு தலைமை வகிப்பதை தடை செய்ய சட்டம் ஒன்றும் இல்லை என்று சமீபத்தில் ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதே போல் குற்றவாளிகளுக்கு அரசு செலவில் நினைவு மண்டபம் அமைப்பதையும் தடை செய்ய சட்டம் ஒன்றும் இல்லை என்று தீர்ப்பு வருமோ?