Home Blog Page 76

உச்ச நீதி மன்றமே அநீதி இழைத்தால் யாரிடம் முறையிடுவது??!!

எப்படியும் ஒன்பதாம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் அமைய உச்ச நீதி மன்றம் வழி வகுத்து விடும் என்று நம்பியிருந்த வேளையில் ஈயத்தை காய்ச்சி ஊற்றினால் போல் அடுத்த மாதம்    மூன்றாம் தேதி ஒரு திட்ட மாதிரியை கொடுங்கள் என்று  மத்திய அரசுக்கு வாய்தா கொடுத்து தமிழர்களுக்கு அல்வா கொடுத்து விட்டது உச்ச நீதிமன்றம்??!!!

தனது தீர்ப்பையே தானே திருத்தி எழுதிக் கொண்டது உச்ச நீதி மன்றம்.

இது என்ன வகை நீதி ??

அளவைத்தான் குறைத்தார்கள் .    அதையாவது உறுதி செய்வார்கள் என்று பார்த்தால் அதையும் தொங்கலில் வைத்து விட்டார்கள்.

இனி யாரை எதிர்த்து போராடுவது?

ஆறு வாரம் கெடு விதித்த போது ஏன் கெடு  முடிந்து மேலும் மூன்று மாதம் கேட்டு மனு போட்டீர்கள் என்று கேட்கவில்லை.

திட்டம் என்பதின் பொருள் தெரியாமாலா பெரிய வழக்கறிஞர் களை வைத்து வழக்கு நடத்தினீர்கள் என்று கேட்கவில்லை.

கர்நாடக தேர்தலை காரணம் காட்டுகிறீர்களே தவறில்லையா என்று கேட்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக    2007 ல் இறுதி தீர்ப்பு சொல்லப்பட்டு      2013 ல் அரசிதழில் வெளியிடப் பட்ட நடுவர் மன்ற தீர்ப்பு எல்லா வகையிலும் செல்லும் என்று  சொல்லிவிட்டு இப்போது அது திட்டமா ஆணையமா என்று கேட்டால் முதலில் திட்டத்தை தாக்கல் செய்யுங்கள் பிறகு அதை எப்படி அமுல் படுத்துவது என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம் என்று புது தீர்ப்பை இன்று  சொல்கிறார் தலைமை நீதிபதி   தீபக் மிஸ்ரா  .

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் சொல்லப்  பட்ட மேலாண்மை ஆணையமே உச்ச நீதி மன்றத்தால் உறுதி செய்யப்  பட்டது என்று எல்லாரும் நம்பியிருந்த வேளையில் நடுவர் மன்ற தீர்ப்பில் சொல்லப் பட்டவை எல்லாம் தங்கள் தீர்ப்பில் அடங்கி விட்டன என்றும் அதைப்பற்றி கவலைப் படாமல் நீங்கள் ஸ்கீம் என்ற திட்ட வரைவை தாக்கல் செய்யுங்கள் என்று தீபக் மிஸ்ரா சொல்லியதன் மூலம் தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சி விட்டார்  அவர்.

இனிமேல் திட்ட வரைவு என்னென்ன மாற்றங்களை எல்லாம் பெறுமோ யார் கண்டது.?

எல்லாவற்றுக்கும் மேலாக எந்த திட்டமாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் அதிகாரம் யார் கையில் இருக்கும் என்பதுதான் பிரச்னை முடியுமா முடியாதா என்பதை தீர்மானிக்கும்.

அதைப்பற்றி எந்த தெளிவும் இல்லை.

எந்த திட்டமாக  இருந்தாலும் கட்டுப்பாடு கர்நாடகத்திடம் இருந்தால் மீண்டும் பழைய பல்லவியை பாடி மிச்சமிருந்தால் தான் திறப்போம் என்று மகுடி ஊதுவார்கள்.    மீண்டும் உச்சநீதி மன்றம்  விளக்க வேண்டும்.   உச்ச நீதி மன்றம் தான் எப்படி விளக்கும் என்பதை பார்த்து விட்டோமே?

தீர்ப்பு சொல்கிறவர்கள் சட்டத்தையும் நியாயத்தையும் மட்டுமே பார்க்காமல் ,  தேர்தல் , இரு மாநில மக்களின் உணர்வுகள்,  அதனால் ஏற்படும் சட்ட ஒழுங்குபிரச்னைகள் ,  மத்திய அரசின் அணுகுமுறை  என்று எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சமன் செய்ய நினைத்து தீர்ப்பு சொன்னால் இப்படித்தான் ஒருதலைப் பட்சமாக அது முடியும்.

நீங்கள் என்ன நல்ல நோக்கம் கொண்டிருந்தாலும் இது அநீதியேதான்.

ஆக தமிழகம் கொந்தளிப்பு நிலையில் இருக்கும் போது அதை அடக்க வேண்டிய உச்ச நீதி மன்றம் கொதிப்பை அதிகப் படுத்தி இருக்கிறது.

ஆக பிரச்னை திட்டமா ஆணையமா என்பதை உச்ச நீதி மன்றம் தீர்மானிப் பதற்குள் கர்நாடக தேர்தல் முடிந்து விடும்.

உச்சநீதி மன்றத்திற்கு நாம் உள்நோக்கம் கற்பிக்க வில்லை.   ஆனால் அதன் செயல்பாடுகள் அந்த மாதிரி சிந்திக்க தூண்டுகிறது.

இங்கே நமக்குள் நிலவும் பகை தான் முதல் கேடு.     பிரதமர் வரும்போது நாங்கள் கருப்பு கொடி காட்டுவோம் எதிர்ப்பை பதிவு செய்வோம் என்றால் நாங்கள் பச்சை கொடி காட்டுவோம் என்று ஆளும் கட்சியே துணிந்து விட்டது.   ஒரு கட்டத்தில் இந்த ஐந்தாம் படையின் ஒரு பகுதி  பா  ஜ க வில் இணைந்தாலும் ஆச்சரியம் இல்லை.

வயிறு காயும்போது ஐ பி எல் விளையாட்டு ஒரு கேடா என்றால் காவல் துறை வலிமை காட்டி நடத்தியே தீருவோம் என்று கொக்கரிக்கிறார்கள்.

நமக்குள் அடித்துக் கொண்டு வீழ்வதா?

கேவலம் கூட்டுறவு சங்க தேர்தல்களை கூட நமக்குள் சண்டை  போடாமல் நடத்திக் கொள்ள முடியவில்லை.

ஜனநாயகத்திற்கே நாம் தகுதி யானவர்கள் தானா?

தமிழகத்திற்கு எதிராக கச்சை கட்டி நிற்கும் மோடியின் மத்திய அரசு;      தன் தீர்ப்பையே தானே மாற்றி எழுதி வஞ்சிக்கும் உச்ச நீதி மன்றம்;    யார் சொன்னாலும் நாங்கள் கேட்க மாட்டோம் என்று கொக்கரிக்கும் கர்நாடக அரசு;

இப்படி தொடர் வஞ்சனையில் சிக்கி இருக்கும் தமிழகம் காக்கப் படுமா?

இல்லை வஞ்சிக்கப் பட்டே மடிவதுதான் தமிழனின் தலை விதியா?

இவர்களுடன் ஒன்றிணைந்து வாழவே முடியாதா?

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஏன் தீர்ப்பு சொல்லவில்லை? இறந்தபின் சொல்லி என்ன பயன் விளைந்தது? உச்சநீதி மன்ற நீதிபதி கேள்வி?

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது ஏன் தீர்ப்பு சொல்லவில்லை?.  அவர் இறந்தபின் சொல்லி என்ன பயன்  விளைந்தது என்று உச்ச நீதி மன்ற மூத்த நீதிபதி சலமேச்வர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அவர் இன்னும் சில மாதங்களில் ஒய்வு பெற போகிறவர்.

தலைமை நீதிபதி மிஸ்ரா தன்னிச்சையாக வழக்குகளை ஒதுக்குகிறார் என்று நான்கு மூத்த நீதிபதிகள் செய்தியாளர்களை கூட்டி குறைகளை பட்டியல் இட்டதில் இவர் பங்கு அதிகம்.

ஜெயலலிதா விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து செய்யபட்ட மேன்முறையீடு முதலில் பி  கே கோஷ்  மற்றும் ஆர் கே அகர்வால் அமர்வில் தான் இருந்தது.    திடீர் என்று அகர்வால் மாற்றப் பட்டு அவருக்கு பதிலாக அமிதாவா ராய் நியமிக்கப்  பட்டார்.    இவர்தான் சசிகலாவுக்கு எதிராக பலமான தீர்ப்பை எழுதியவர்.

07.06.2016  தேதியில் உச்ச நீதிமன்றத்தில்  வாதங்கள் முடிவுற்று தீர்ப்புக்கு என்று வழக்கு ஒத்தி வைக்கப் படுகிறது.

05.12.2016 ல் ஜெயலலிதா மரணம் அடைகிறார்.   அதுவரையில்  தீர்ப்பு சொல்லப் பட வில்லை.

14.02.2017  ல் திடீர் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்கிறது.    அதுவும் சசிகலா தான் முதல்வர் பதவியை கோரி ஆளுனரை சந்தித்த பின் ஆளுநர் மும்பாயில் இருந்து வர மறுத்து  உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்தபின் வருகிறார்.

பொதுவாக தீர்ப்புக்கு என்று வழக்கு ஒத்தி வைத்து விட்டால் குற்றவாளி உயிருடன் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவருடைய குற்றத் தன்மை பற்றிய முடிவு பாதிக்காது.    உயிருடன் இல்லை என்பதால்   சிறை  தண்டணை வழங்க முடியாதே தவிர வேறு எந்த வகையிலும் வழக்கின் முடிவு பாதிக்காது.

ஆனால் ஜெயலலிதாவை பொறுத்த வரை அவருக்கு விதிக்கப் பட்ட நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை அவர் அனுபவிக்க முடியாதே தவிர அவருக்கு விதிக்கப் பட்ட அபராதம் நூறு கோடி மாற்றப் படவில்லை.    எனவே அவரது சொத்துக்கள் ஏலம் விடப் பட்டு அந்த அபராதம் வசூலிக்கப் பட வேண்டும்.       அந்த நடவடிக்கை கள் என்ன வாகின?    ஏன் தொடரவில்லை?

அந்த வழக்கின் நீதிபதி மாற்றப் பட்டது ; தீர்ப்பு சொல்லப் படாதது  பற்றியெல்லாம் கேள்வி எழுப்புவது நாம் அல்ல.    உச்ச நீதி மன்ற மூத்த நீதிபதி.    எனவே சந்தேகம் வலுக்கிறது.

தண்டிக்கப்  பட்ட குற்றவாளிகளில் மூவர் சிறையில்.   முதலாமானவர் பெயரில் அரசு மரியாதைகள் என்றால் எங்கே இருக்கிறது நீதி?     இதை விட கோமாளித்தனம் இருக்க முடியுமா?

குற்றவாளிகள் அரசியல் கட்சிகளுக்கு தலைமை தாங்குவதை தடுக்க முடியாது என்று சமீபத்தில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

லாலு பிரசாத் சிறையில் இருக்கிறார்.   அவரது கட்சி பா ஜ க வை தோற்கடித்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுகிறது.   அது வேறு.

ஜெயலலிதா வழக்கு வேறு.  இதில்    எங்கோ தவறு நடந்திருக்கிறது.

அவர்களுக்கு என்றால் சட்டம் தானாக வளைந்து கொடுக்கும் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.  எழுப்பியவர் நீதிபதி  என்பதால்,

தீர்க்க வேண்டிய இடத்தில் இருப்பது உச்ச நீதி  மன்றமே தான்.

கொதி நிலையில் தமிழகம்; இங்கே ஏன் ஐ பி எல் கிரிக்கெட் போட்டி??

பொதுவாக விளையாட்டிற்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்க கூடாதுதான்.

காவிரி தண்ணீர் பிரச்னை மக்களில் உயிர் பிரச்னை.     விவசாயிகளின் பிரச்னை மட்டும் அல்ல. அதனால் தான் அனைத்து தரப்பு மக்களும் போராடுகிறார்கள்.

கர்நாடக தேர்தலை மனதில் வைத்து தமிழகத்தை மோடி வஞ்சிக்கிறார் என்பதே பெரும்பான்மை முடிவு.

அது மட்டும் அல்ல.   வெளி மாநிலங்களில் இருந்து  தமிழகத்து பல் கலை கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்வது;    நீட் தேர்வில் விலக்கு அளித்து தமிழக அரசு இயற்றிய சட்டத்தை குடி அரசு தலைவருக்கு அனுப்பாமல் மோசடி செய்து வருவது;    மீனவர்களை மீன் பிடி தொழிலில் இருந்து விரட்ட என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்வது ; விவசாய தொழிலில் இருந்து விவசாயிகளை விரட்ட டெல்டா பகுதிகளை பெட்ரோலிய மண்டலங்களாக அறிவித்தது என்று தமிழர் விரோத அரசாகவே மோடியின் மத்திய அரசு பார்க்கப் படுகிறது.

வருமான வரித் துறையை வைத்து இரண்டு கைத்தடிகளை வைத்து மறைமுகமாக தமிழகத்தில் மோடிதான் ஆட்சி  செய்து வருகிறார்.

வரும் ஒன்பதாம் தேதி உச்ச நீதி மன்றம் மேலாண்மை ஆணையம் அமைக்குமா இல்லை வழக்கம் போல் போக்கு காட்டுமா என்பது தெரிய வரும்.

இன்னிலையில் சென்னையில் ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகள் நடப்பது  போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யுமா செய்யாதா?

விளையாடுங்கள்;   அமைதி நிலவும் மாநிலங்களில்; வாழ்த்துகிறோம்!!!

நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்!    இங்கே உங்களுக்கு விளையாட்டு ஒரு கேடா????    எங்கள் வாழ்வோடு விளையாடாதீர்கள்?!

மீறி நடத்தப் பட்டால்??  மைதானம் காலியாக இருக்க வேண்டும்.!!!

 

அண்ணா பல்கலை துணை வேந்தராக கன்னட சூரப்பா நியமனம்! அடிமைகள் மௌனம் ??!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்திருக்கும் வேளையில் யார் என்ன சொன்னால் என்ன நான் செய்வதைத்தான் செய்வேன் என்று அண்ணா பல்கலை கழக துணை வேந்தராக கன்னடர் கே பி சூரப்பாவை நியமித்து ஆளுநர் பந்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

வேற்று மாநிலத்தவர் இப்படி நியமிக்கப் படுவது தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கிறது.

வேறு எந்த மாநிலத்தில் இப்படி நடக்கிறது?

அம்பேத்கார் சட்டப்  பல்கலை கழக துணை வேந்தராக பட்டியலில் இல்லாத சூரிய  நாராயண சாஸ்திரியை ஆந்திராவிலிருந்து இறக்குமதி செய்தார் புரோஹித்.

நுண்கலை இசை பல் கலை கழக துணைவேந்தராக பிரமீளாவை கேரளாவில் இருந்து இறக்குமதி செய்தார்.

இப்போது அண்ணா பல்கலைக்கு கன்னடர்.

இவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்ததால் தான் பணி நீட்டிப்பு செய்யப் படவில்லை  என்று புகார்கள் உள்ளன.

நூற்றுக்கும் மேலான தமிழர்கள் மனு செய்திருக்கும் போது வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்தது ஆகப் பெரிய அவமானம்.

தமிழர்களை ஒரு வழி ஆக்காமல் இருக்க மாட்டார்கள் போல் இருக்கிறது.

அடிமைகள் ஆட்சியில் இருப்பதால் இவர்களை நம்பி பயன் இல்லை என்று முடிவு செய்து ஓராண்டில் குடி அரசு தலைவர் ஆட்சியை அமுல் செய்து அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தொடு சட்ட மன்ற தேர்தலை நடத்தி எப்படியும் காலூன்றி விட முடிவு செய்து விட்டார் மோடி என்றுதான் தோன்றுகிறது.

காவிரி போராட்டத்தை கூட ஒற்றுமையாக நடத்த கட்சிகள் ஒன்று கூட வில்லை.

ஆளும்கட்சி உண்ணாவிரதம் இருந்து அதில் முதல்வரும் துணை முதல்வரும் ஒரு வார்த்தை கூட மத்திய அரசை கண்டித்து பேசாதது வெட்கக் கேடாக முடிந்தது.

சட்டத்தை அமுல்படுத்த இங்கே போராட்டம்.

அமுல் படுத்த மாட்டோம் என்று கர்நாடகாவில் போராட்டம்.

மோடி அரசின் போக்கு தென்னகத்தில் ஒரு காஷ்மீரை உருவாக்காமல் இருக்க மாட்டார்கள் போல்தான் தெரிகிறது.

நவநீதகிருஷ்ணனின் தற்கொலை பேச்சு ஒரு தேசிய அவமானம்; நாடகமாடும் பா ஜ க அரசு துணை போகும் அதிமுக?!

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் கொடுத்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.

அதுவரை பொறுத்திருப்போம் என்று ஓ பி  எஸ் சொன்னதே ஒரு ஏமாற்று வேலை.

மேலாண்மை வாரியத்துக்கு பதில் மேற்பார்வை ஆணையம் அமைப்போம் என்ற ஏமாற்று திட்டத்தை முன்வைத்து அவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

அதுகூட உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு வந்தால் சமாளிப்பதற்குத்தான்.

ஒரு பக்கம் கர்னாடக தேர்தலுக்கு முன்பாக மேலாண்மை ஆணையம் அமைப்பதில்லை என்ற முடிவில் பா ஜ க உறுதியாக இருக்கிறது.

முடிந்தாலும் அமைப்பார்களா என்பது சந்தேகமே?

மறுபக்கம் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கியதன் மூலம் தெலுகு தேசம் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக் கொண்டு விவாதிக்க விடாமல் பா ஜ க வுக்கு அதிமுக உதவிக் கொண்டு இருக்கிறது.

இதை விட மோசமான அயோக்கியத்தனம் இருக்க முடியாது.

கெடு முடியும் தருவாயில்   அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் மேலாண்மை ஆணையம் அமைக்க வில்லை என்றால் அதிமுக உறுப்பினர்கள்  தற்கொலை செய்து கொள்வோம் என்று பாராளுமன்றத்தில் பேசுகிறார்.

தமிழகத்திற்கே தலைகுனிவு.    வெட்கக் கேடு!

ஒரு அதிமுக உறுப்பினரும் விளக்கம் கொடுக்க கூட தயாராக இல்லை.

இதற்கா அனுப்பினார்கள்? .   பாராளுமன்ற உறுப்பினர்கள் கடமை தற்கொலை செய்வதா?

இதனால் பாஜக பயந்து விடுமா?   கேலிக்கு ஆளாவோம் என்ற அச்சம் கூட இல்லாமல் எதை வேண்டுமானாலும் பேசி பிரபலமானால் போதும் என்ற கொள்கையா?

அதிமுக இதற்கு விளக்கம் தர வேண்டும்.    அது அவர் தனிப்பட்ட கருத்து என்று தள்ளிப் போகக் கூடாது.

இ பி எஸ் – ஒபீஎஸ் கூட்டணி  பாஜக அடிமைக் கூட்டணி என்பதை தெள்ளத் தெளிவாக காட்டி  விட்டார்கள்.

இந்த நாடகமாடிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 

லிங்காயத்துக்கள் தனி மத மாகினர் கர்நாடகத்தில்; சித்தராமையாவின் தெளிவு பரவட்டும்??!

பசவன்னர் பனிரெண்டாம் நூற்றாண்டில் உருவாக்கிய  லிங்காயத்து தர்மம் சனாதன தர்மத்தில் இருந்து வேறுபட்டது.

அன்பை வளர்க்கவும் வெறுப்பை தவிர்க்கவும் உபதேசித்த பசவர் பிராமணிய , ஜைன, பூர்விக வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டு புதிய வழிபாட்டு முறையை உருவாக்கினார்.

சைவம் உணவுமுறை; அவர்களே சமுதாய சடங்குகளை செய்து கொள்வது; இறந்தவர்களை அடக்கம் செய்வது என்று தனித்த கொள்கைகள் ஏறத்தாழ வள்ளலாரின் கொள்கைகளை ஒத்தது.    குமரி மாவட்ட வைகுண்டரும் இதே பணியைத்தான் தொடங்கினார்.

இதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி வழிபாட்டு சித்தாந்தங்கள் இருக்கின்றன.    இவைகள் எல்லாம் பார்ப்பனிய சனாதன தர்மத்தில் இருந்து வேறுபட்டவை.

எங்களை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பலகாலம் பல அரசுகள் தவிர்த்து வந்த நிலையில் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா திடீர் என்று லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகரித்து , இதற்கென அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில், அறிவித்திருக்கிறார்.

இனிமேல் இவர்கள் இந்துக்கள் அல்ல.   மதம் என்ற பிரிவில் லிங்காயத்துக்கள் என்றே குறிப்பிட முடியும்.    சிறுபான்மை தகுதியும் வந்து விடும்.  அதன் மூலம் அரசின் சிறப்பு சலுகைகள் கிடைக்கவும் வழி இருக்கிறது.

லிங்காயத்துக்களின் மற்றும் ஒரு பிரிவான வீர சைவர்கள் பத்து சதம் இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களில் இருந்து மாறுபட்டு வேதங்களை ஏற்று வேத சடங்குகளை செய்கிறார்கள்.

அவர்கள் ரேனுகாச்சாரியாரைபின்பற்றுபவர்களாம்.    பார்ப்பனர்கள் தான் எந்த அமைப்பையும் பிரித்து விடுவார்களே?

எடியூரப்பாவை முதல்வராக வர விடாமல் செய்வதற்காக செய்யப் பட்ட அறிவிப்பு என்றாலும் வரவேற்க வேண்டிய அறிவிப்பு  இது.

சனாதன பார்ப்பன தர்மத்தை ஏற்றுக் கொள்ளாத பல மதங்களை ஒன்றிணைத்து இந்து என்று அழைப்பதன் மூலம் எல்லாருமே பார்ப்பன மதத்தை சேர்ந்தவர்கள் என்ற பொருள் நிலைத்து விட்டது.    இது மகாத் தவறு.

இந்து  என்ற மதமே இல்லை  என்கிற போது ஏன் அந்தப் பெயரில் அழைக்க வேண்டும்?

சைவர்களும் வைணவர்களும் கூட இந்துக்கள் என்று அழைத்துக் கொள்வது தேவையில்லை.    எல்லாரையும் சேர்த்துக் கொள்வதால் பெரும்பான்மை நாம் என்ற உணர்வு கிடைக்கிறது என்பதற்காகவே இந்துக்கள் என்று அழைத்துக் கொள்வதை பெருமையாக கருதுவது பேதைமை.

இந்துக்கள் என்று அழைத்துக் கொள்வதால் பார்ப்பநீயம்தான் வெல்கிறது.

பண்டாரம் பூசை செய்யும் மாரியம்மன் கோயிலை வசப்படுத்த பார்ப்பனர்களுக்கு உதவும் துணை சபாநாயகர் ??!!

பூசாரிகளும் பண்டாரங்களும்    தமிழில்  பூசை செய்து வந்த பல கோவில்கள் இன்று பார்ப்பனர்கள் வசம் சென்றதால் அவர்கள் சமஸ்க்ரிதத்தில்  அர்ச்சனை செய்து வருகிறார்கள்.

கோவில்களில் தமிழ் ஒதுக்கப் பட்டதில் இந்த பார்ப்பனர்களுக்கு அதிகம் பங்கு உண்டு.

கிராமப்  புறத்தில் இருக்கும் அய்யனார் , மாரியம்மன்   , பிடாரி அம்மன் கோவில்களில் பூசாரிகள் , பண்டாரங்கள் தான் தமிழில் அர்ச்சனை செய்து வருகிறார்கள்.

பல இடங்களில் கிராமத்தில் செல்வாக்கு உள்ளவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு பார்ப்பனர்கள் உள்ளே புகுந்து அவர்களை விரட்டி விட்டு இவர்கள் சமச்க்ரிதத்தில் அர்ச்சனை செய்து வருகிறார்கள்.

தமிழன்தான் எதையும் கண்டு கொள்ள மாட்டானே ?

அந்த வகையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சூலக்கல் மாரியம்ம்மன் கோவில் இதுவரை பண்டாரங்கள் பூசாரிகளாக இருந்து பூசை செய்து வருகிறார்கள்.

ஜமின் நிர்வாகத்தில் இருந்து இப்போது அறநிலைய துறை வசம் சென்ற வுடன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சின்னம்மா மகன் மணிகண்ட ராஜு கோவில் பூசாரிகளை அதிகாரம் செய்ய முயற்சித்த போது அவர்கள் எதிர்த்த தால் அர்ச்சனை செய்ய பார்ப்பனர்களை நியமிக்க ஏற்பாடு செய்து விட்டதாக அவர்களிடமே சொல்லி இருக்கிறார்கள்.

இப்படி காட்டிக் கொடுக்கும் வேலையை தமிழர்களே செய்யும் போதுதான் கோவில்களில் தமிழ் தன் இடத்தை இழக்கிறது.

திராவிட இயக்கம் ஆட்சியில் இருக்கும்போது இப்படி நடக்கிறதே என்ற கேள்வி எழுகிறது.   ஆனால் இவர்கள் திராவிட இயக்க ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்களா?   விலை போய் விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையா?

அந்தக் கோவிலின் பக்தர்கள் துணிந்து இந்த அக்கிரம ஆதிக்கத்தை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டியது அவசியம்.

பல கோவில்களில் நடந்த இந்த அத்து மீறல் இனி தொடரக் கூடாது.

ஆளுநரின் சங் பரிவார் பாசம்; சட்ட பல்கலை கழக துணை வேந்தர் நியமனத்தில் அத்துமீறல் ?!!

ஆளுநரின் அத்துமீறலை ஆளும் அடிமை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதால் அவரது அத்துமீறல் தொடர்கிறது.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாவட்டம் தோறும் ஆய்வு நடத்த சென்றார்.    மாநில அரசு கண்டு கொள்ள வில்லை.

வரப்போகும் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு இப்போதே ஆளுநர் ஒத்திகை பார்க்கிறாரா என்ற குற்றச்சாட்டு எழுந்த போதும் கூட மாநில அரசு மௌனியாக இருந்தது.

விளைவு.  இப்போது டாக்டர் அம்பேத்கர் சட்டப்  பல்கலைக்  கழக துணை வேந்தர் பதவிக்கு தேர்வுக்குழு பரிந்துரைத்த நபர்களை புறந்தள்ளி ஆந்திராவை சேர்ந்த தம்மா சூரிய நாராயண சாஸ்திரியை துணை வேந்தராக ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித்  நியமனம் செய்துள்ளார்.

இவர் முன்பு இதே பல்கலை கழகத்தில் பணி  புரிந்த போதே ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்.    இப்போது துணை வேந்தர்.      ஆக அதிகாரம் இருந்தால் இவர்கள் எப்படி எல்லாம் மற்றவர்களை உதாசீனப் படுத்தி விட்டு ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

தமிழகத்தில் தகுதி உள்ள பலர் மனுச் செய்திருக்கும் போது வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இத்தகைய முறைகேடுகளும் ஒரு வகையில் ஊழல்தான்.

மத்திய அரசின் தமிழர் விரோத போக்கின் மற்றும் ஒரு சான்று  இது.

39இந்தியர்கள் ஐ எஸ் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை ; அறிவிக்க 4 ஆண்டுகளா ?

ஐ எஸ் அமைப்பு இஸ்லாமிய அரசை நிர்மாணிக்க இராக்கிலும் சிரியாவிலும் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் அமெரிக்காவும் ரஷியாவும் இடையில் புகுந்து எண்ணெய்க்காக இரு தரப்பினரையும் காவு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் இந்தியாவுக்கு எந்த பங்கும் இல்லை.

ஆனால் பிழைப்புக்காக தொழிலாளர்களாக சென்ற  இந்தியர்களை ஐ  எஸ் தீவிரவாதிகள் சென்ற  2014 ம் ஆண்டு பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.    இந்தியாவுக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை  என்பதால் அவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என எதிர் பார்க்கப் பட்ட நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து அவர்கள் கொல்லப் பட்டு விட்டார்கள்  என்று வெளி உறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தி ருக்கிறார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள்.  அவர்கள் குடும்பத்தினருக்கு இந்திய அரசு தகுந்த இழப்பீடு தர வேண்டும் என்ற குரல்கள் எழுந்திருக்கி ன்றன.

இத்தனை ஆண்டுகளாக அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று  இந்திய அரசு சொல்லி வந்தது.

உறுதிப் படுத்தும் வரை  அவர்கள் இறப்பை எப்படி  நாங்கள் சொல்ல முடியும் என்று அமைச்சர் கூறுவது பொறுப்பில்லாத பதில்.

ஐ எஸ் தீவிரவாதிகள் எவ்வளவு  கொடூரமானவர்கள் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

அதை விட இந்திய அரசு எவ்வளவு பலவீனமான  உளவுத் துறையை கொண்டிருக்கிறது என்பதையும் இந்த சம்பவம் காட்டுகிறது.

ம.நடராசன் மறைவு; தமிழர் பண்பாட்டை காலில் போட்டு மிதித்து அஞ்சலி செலுத்த மறுத்த இ பி எஸ் – ஓ பி எஸ் கும்பல்?!

எம் என் . என அழைக்கப் பட்ட எம் நடராசன் சசிகலாவின் கணவர்.

தஞ்சையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன் நின்றவர்- தமிழரசி-புதிய பார்வை இதழ்களின் ஆசிரியர்- திராவிட இயக்க பார்வை கொண்டவர்- ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்து பின் சசிகலாவின் பின்னால் இருந்து இயக்கியவர்-   ஈழப் போராளிகளின் ஆதரவாளர் – முள்ளி வாய்க்கால் முற்றம் அமைக்க பழ. நெடுமாறனுக்கு உதவியவர் என்று  பல முகங்கள் கொண்டவர்.

எனக்கு தனிப்பட்ட முறையில் நாற்பதாண்டு நட்புடையவர்.    அவருக்காக   ஷா  விசாரணை கமிஷனில்  வழக்கறிஞர் என்ற முறையில் ஆஜராகியவன் நான்.    எண்ணற்ற திருமண விழாக்களிலும் அவருடன் கலந்து கொண்டிருக்கிறேன்.   ஈழப் போராளிகளுக்காக உயிராயுதம் ஏந்திய முத்துக்குமார் மற்றும் அவரைத்தொடர்ந்து தீயில் கருகிய தியாகிகள் பலரது இரங்கல் நிகழ்ச்சிகளில் பழ. நெடுமாறனுடன் நான் கலந்து கொண்டபோது எல்லாம் நடராசன் வர தவறியது இல்லை.

அவருக்கு எனது இதயம் நிறைந்த அஞ்சலி.  அவரது ஆன்மா இறைவனில் சங்கமிக்க பிரார்த்திக்கிறேன்.

திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து   கட்சி தலைவர்களும் கட்சி அரசியல் தாண்டி தமிழர் பண்பாட்டு அடிப்படையில் அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் இவரால் பதவி பெற்றவர்கள்   , ஆட்சியில் இருப்பவர்கள், இ பி எஸ் -ஓ பி எஸ் கம்பெனியில் இருந்து ஒரு இரங்கல் செய்தி கூட இல்லை.   கொடுமை என்னவென்றால் அதன் குரலாக செயல்படும் ஜெயக்குமார்  தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று சொன்னதுதான்.     எந்த தொண்டன் தமிழர் பண்பாட்டை கடைப் பிடிக்க வேண்டாம் என்று சொல்லுவான்?      இவர்கள் எல்லாம் அமைச்சர்கள்?

சீமான் சொன்னது போல் இவர்கள் கீழே வாழ்வதே அச்சமாக இருக்கிறது.

விலங்குகள் கூட  குறைந்த பட்ச தர்மத்தை கடைப் பிடிக்கும்.      மனித உருவில்     வாழும் இவர்கள்?