Home Blog Page 78

மோடியை காட்டிக் கொடுத்த ஓ பி எஸ் ?!! நோக்கம் என்ன?

துணை முதல்வராக உள்ள  ஓ பன்னீர்செல்வம் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் தான் தான் துணைமுதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட தாக பேசினார்.

ஏற்கனெவே மோடியின் பா ஜ க தான் இந்த அரசை இயக்கி  வருவதாக எல்லாரும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பா ஜ க – அ தி மு க இருவருமே அதை மறுத்து வந்திருக்கிறார்கள்.

இன்று இப்படி பேசினால் அது  மோடிக்கும் சரி அ தி மு க அரசுக்கும் சரி பிரச்னையை உருவாக்கும் என்பதை அறியாதவரா ஓ பி எஸ்.

ஆக தெரிந்தே தான் பேசியிருக்க வேண்டும்.     வேறு வழியில்லை என்ற நிலையில் தான் பேசியிருக்க வேண்டும்.   அந்த சூழ்நிலை என்ன?      மறைவில் செய்த ஒப்பந்தங்கள் அமுலுக்கு வரவில்லையே  என்ற ஆதங்கமா?   அந்த நிறைவேற்றப் படாத வாக்குறுதிகள் என்ன?

ஓ பி எஸ்- இ பி எஸ் க்கும் இடையே பா ஜ க தான் பஞ்சாயத்து செய்தது என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

இவர்கள் எப்படி மத்திய அரசை   மாநில  உரிமைகளுக்காக எதிர்த்து பேசுவார்கள்?     இவர்களிடம் எப்படி மாநில சுயாட்சியை பாதுகாக்கும் தன்மையை எதிர்ப்பார்க்க முடியும்?

அதனால்தான் ஆர் கே நகர் தொகுதி மக்கள் இவர்களை புரிந்து கொண்டு இந்த அடிமைகளுக்கு எதற்கு வாக்கு என்று தோற்கடித்தார்கள்.

ஓ பி எஸ் ன் இந்த வாக்குமூலத்திற்கு முதல்வரோ மற்ற அமைச்சர்களோ எந்த விளக்கமும் தர முன்வரவில்லை.

தமிழக பா ஜ க மட்டும் தயக்கத்தோடு மறுத்து பேசியது.

பேசியது ஒரு துணை முதல்வர்.    அது தவறென்று பொறுப்புள்ள முதல்வர் மறுத்திருக்க வேண்டும்.    தவறு என்றால் துணை முதல்வராக நீடிப்பது எப்படி?

இந்த மத்திய அரசின் அடிமைகள் ஆட்சியில் தொடர்வது  ஒவ்வொரு நாளும் அனைத்து தமிழர்களின் உணர்வுகளை காயப் படுத்திக் கொண்டே இருக்கும்.

மாநில அரசின் உரிமைகளை பறித்துக் கொண்டு எல்லா அதிகாரங்களையும் குவித்துக் கொண்டு மற்றவர்களை அடிமைப் படுத்தும் நோக்கத்தோடு செயல்படும் மோடியின் பா ஜ க காலூன்ற இவர்கள் கைத்தடிகளாக பயன் படப்  போகிறார்கள் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.

மக்கள் விழித்துக் கொண்டார்கள்.    உங்கள் சூழ்ச்சி இங்கே எடுபடாது.

மழை நீரை சேமித்தால் தண்ணீர் சண்டை வராது??!! ஆய்வு சொல்வது உண்மையா?

ஆண்டுக்கு சராசரியாக நம் நாட்டில் 1,41,258   டிஎம்சி மழை பொழிவதாவும் அதில் நாம் தண்ணீரை தேக்கி வைக்கும் அளவு   7062 டிஎம்சி தான் என்றும் ஒரு செய்தி சொல்கிறது.

பிராந்திய ரீதியில் முதலில் நதிகளை இணைப்பது பின்னர் அனைத்திந்திய ரீதியில் இணைப்பது என்பது நீண்ட கால திட்டம்.    ஏனெனில் அதற்கு பல லட்சம் கோடிகள் செலவாகும்.

ஆக,  வாய்ப்புள்ள பகுதிகளில் எல்லாம் நதிகள் இணைப்பு , அதிகபட்ச மழைநீர் சேமிப்பு என்ற இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றினாலே நாட்டில் தண்ணீர் பஞ்சம்  இருக்காது  என்பது தெரிகிறது.

ஆனால், மத்திய மாநில அரசுகள் இதில் எவ்வளவு அக்கறை காட்டுகின்றன  முன்னுரிமை தருகின்றன மக்களுக்கு எவ்விதம் எல்லாம் கற்பிக்கிறார்கள் என்பதை கணக்கிட்டால் அவர்களின்  ஆளும் திறமை கேள்விக்குரியதாகவே  இருக்கிறது.

தகுதில்லாதவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.    அவர்கள் ஊழல் செய்கிறார்கள்.  அவர்கள் தரும் பணத்தை மக்கள் வாங்கி வாக்குப் போடுகிறார்கள்.    இந்த சுழற்சி எப்போது மாறும்?

அகில இந்தியாவில் மோடி திட்டமிட்டிருக்கும்  60 நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ஐந்தரை லட்சம் கோடிகள் செலவாகும் என்பதால் இப்போதைக்கு அது அமுலுக்கு வரும் சாத்தியமே இல்லை.

தமிழகத்தை பொறுத்த வரையில் மட்டுமாவது நாம் மழை நீர் சேமிப்பில் அதிக கவனம்  செலுத்தினால் காவிரி நீரை பதினைந்து டிஎம்சி நீரை குறைத்து கொடுத்ததை பற்றி  கவலை படாமல் விவசாயிகள் தங்கள் பிழைப்பை தொடர்வார்கள்.

எனவே நமக்கு தேவை திட்டமிட்டு ஆளும் ஒரு அரசு.    ஊழலில் திளைக்காத அரசு.

நான் மட்டுமே நல்லவன் என்று யார் வந்தாலும் எதையுமே ஆராயாமல் முடி சூட்டி விட்டு பின்னால் ஏமாறாது இருக்க தமிழ் சமூகம் உறுதி எடுக்க வேண்டும்.

ஆள்பவர் தமிழராகவும் இருக்க வேண்டும்.   அவர் நல்லவராகவும் இருக்க வேண்டும்.  அவர் தனி மனிதராகவும் இருக்க கூடாது.    அவருடன் இணைத்து பணி செய்ய அதிகாரம் படைத்த கூட்டு தலைமை இருக்க வேண்டும்.

எனவே தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு மழை நீர் செமிப்பும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆறுகளின் இணைப்பும்தான் என்பதை உணர்ந்து செயல் படுத்தும் அரசை அமைக்க உறுதி பூணுவோம்.

புஷ்பவனம் குப்புசாமிக்கு இசைப் பல்கலை துணை வேந்தர் பதவி மறுக்கப் பட்ட மர்மம் என்ன?

தமிழ்நாடு  நுண்கலை மற்றும் இசை பல்கலை கழகத்திற்கு துணை வேந்தராக  வீணை காயத்ரியை ஜெயலலிதா நியமித்திருந்தார்.

அவர் பட்டம் பெற்றவர் அல்ல.   நுழைப்பதற்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்கள்.    அது செல்லாது என்று தீர்ப்பு வந்ததாக சொல்கிறார்கள்.

அவரது காலத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை அவரால் தீர்க்க முடியவில்லை.   அவரது பதவி காலம் முடிந்தபின்  யாரையும் நியமிக்கவில்லை.

இந்நிலையில் அதிமுக வை சேர்ந்த அனிதா குப்புசாமியின் கணவர் புஷ்பவனம் குப்புசாமிக்கு பல்வேறு காரணங்களால் அந்த பதவி மறுக்கப் பட்டிருக்கிறது.

விண்ணப்ப காலம் முடிந்தபின் கேட்டுபெற்று பிரமிளா குருமூர்த்தி  அந்த பொறுப்பில் அமர்த்தப் பட்டிருக்கிறார்.

புஷ்பவனம் குப்புசாமி விண்ணப்பத்தை நிராகரிக்கவே புதிதாக பத்தாண்டுகளுக்கு இசை பயிற்று வித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை புதிதாக சேர்க்கப் பட்டதாம்.

பிற்பட்டவர்கள் கர்நாடக இசை உலகில் நுழையவே முடியாது.   நுழைந்தாலும் அங்கீகாரம் கிடைக்காது. அவமானப் படுத்தப் பட்டு வெளியேற்றப் படுவார்கள்.

பல தடைகளை மீறித்தான் குப்புசாமி கர்நாடக இசையை பயின்றி ருக்கிறார்..

உண்மையில் கர்நாடக  இசை என்பது தமிழிசையே என்பது அவரது நிலைப்பாடு.

சிலப்பதிகாரம் தொல்காப்பியம்  காலத்திலிருந்தே நிலவி வந்த ஆதி தமிழ் இசையை தான் கர்நாடக இசை என்று சொல்ல வேண்டும்.

மாறாக மிகவும் பிற்பட்ட காலத்தில் தோன்றிய சம்ஸ்கிருத தெலுகு இசை எப்படி கர்நாடக இசையாகும்.?

தமிழ் இசையை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்த்து அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

தமிழர்களுக்கு சொந்தமான இசையை களவாண்டு கர்நாடக இசை என்று சொல்லிக்கொண்டு தமிழர்களை அவமானப் படுத்துவதை சகிக்க முடியாது.

கொடுமை  என்னவென்றால்   ஒரு தமிழருக்கு கிடைக்க வேண்டிய பதவி தமிழர் ஆட்சிக் காலத்தில் கிடைக்க வில்லையே?

தமிழன் ஆட்சியில் இருந்தால் மட்டும் போதாது.   அவன் தமிழ் உணர்வு உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டால் ஒருவேளை இன்னும் பல சதிகள் வெளி வரலாம்.

மக்கள் நீதி மய்யம்-கமல்ஹாசனின் அரசியல் படம் முதல் நாளே தோல்வி ??!!

கமலின் படம் குறைந்த பட்ச வசூலை படம் வெளியான முதல் வாரத்தில் எடுத்து விடும் என்பது உண்மைதான்.

ஆனால்  நேற்றைய தினம் வெளியான  அவரது அரசியல் படம் அரைகுறை ஆடையோடு வெளியானதில் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது பற்றி  இன்னும் தெளிவான கருத்து இல்லை.

கொடியில் ஆறு மாநிலங்களை குறிக்கும் ஆறு கரங்கள் என்றால் வட மாநிலங்களை பற்றி கவலைப்படாமல் என்ன இந்திய தேசியம் ?     மீண்டும் திராவிட நாடு கோரிக்கையை முன்வைக்கிறாரா கமல்?

கொள்கை என்ன என்றால் எல்லாருக்கும் என்ன கொள்கையோ அதுதான் என் கொள்கை என்கிறார்.   பின் ஏன் தனி கட்சி?

அறிவிக்கப் பட்டிருக்கும் உயர் மட்ட குழு உறுப்பினர்களில் தெளிந்த அரசியல்வாதிகள் யாரும் இல்லை. நடிகை ஸ்ரீ பிரியாவும்  நாசர் மனைவி கமீலாவும் எப்போது அரசியல் பேசினார்கள்.>?

எல்லாம் நிர்வாக மயமாக்கப் பட்ட ஏற்பாடுகள்.      கட்சி நிர்வாகிகளுக்கே தெரியாமல் நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள்?

நீதிக் கட்சி யின் சாயல் வேண்டும்.    எதையும் விளக்கமாக சொல்ல தயாராக இல்லை.   தேவையும் இல்லை என்று தெளிவாகவே சொல்கிறார்.  திராவிட இயக்க அரசியலை முன்னெடுப்பதை போன்ற தோற்றத்தை காட்டி யாரை வசப்படுத்த முனைகிறார்.

அடுத்த நிலையில் உள்ள நிர்வாகிகள் யார் என்பதும் அடையாளம் காட்டப் பட வில்லை.

அரவிந்த் கேஜ்ரிவால் கட்சியே இங்கு எடுபட வில்லை.    அவர் முன்னிலை வகித்ததால் மட்டும் என்ன விளைவு ஏற்பட்டு விடும். ?

ஊழலை இனி வேடிக்கை பார்க்க மாட்டாராம்.     என்ன செய்து தடுப்பீர்கள்?

எல்லாருக்கும் தரமான உயர் கல்வியை தருவாராம்.      எல்லா தனியார் பள்ளிகளும் தனித்தனி பாடத் திட்டங்களோடு இயங்குகின்றன.     எல்லாவற்றையும் அரசு மயமாக்கி விட  முடியுமா?

காவிரி பிரச்னையை முறையான உரையாடல் நடந்தால் தீர்வு காண முடியும் என்கிறார்.      காவிரி தாவா சட்டமும் நீதிமன்றங்களும் தீர்ப்புகளும் தேவையே இல்லையே?

தீர்ப்பையே மதிக்காமல் அமுல் படுத்தும் ஆணையத்தை அமைக்க விட மாட்டோம் என்கிறார்கள்.     என்ன முறையான  உரையாடல் நடத்தி தீர்வு காணப் போகிறார்?

சாதி மத விளையாட்டுகள் போதும் என்று சொல்லி தான் ஏதோ சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று நிலை நாட்ட விரும்புகிறார்.

இதுவரை அடிமைப்படுத்தி வந்த எல்லா பார்ப்பனர்களும் இதையேதான் சொல்லி வந்தார்கள்.

சாதி மத அடிப்படையில் எப்படியெல்லாம் மக்களை அடிமைபடுத்தி வருகிறார்கள் என்பதை அடிமைப்பட்டவர்களே உணராத வண்ணம் அடிமைப்படுத்தி வருகிறார்களே இது என்ன மாயம்?

இன்னும் என்ன வேடங்களில் எல்லாம் வருவீர்கள் என்பதை அனுமானிக்க முடியவில்லையே.

திமுகவையும் ஸ்டாலினையும் அடுத்து ஆட்சியை பிடிப்பதில் இருந்து தடுக்க எடுக்கப் படும் பன்முக முயற்சிகளில் ஒன்றுதான் இதுவும் என்பதே பெரும்பாலான கருத்து.

 

மீண்டும் வஞ்சிக்கப் பட்ட தமிழக விவசாயிகள்; உச்சநீதிமன்ற தீர்ப்பு பிரச்னையை தீர்க்குமா??!!

ஒரு வழியாக உச்சநீதி மன்றம் காவிரிப் பிரச்னையில் இறுதி தீர்ப்பை வெளியிட்டு  விட்டது.

கர்நாடகத்தில் தேர்தல் வரும் நேரத்தில் தீர்ப்பை தர முன் வந்தது நல்லதே.     ஒரு நீதிபதி ஒய்வு பெற இருக்கும் நிலையில் உடனடியாக தீர்ப்பு வந்தது என்றும் சொல்கிறார்கள்.

தமிழ் நாட்டுக்கு கிடைத்து வந்த காவிரி நீர்  கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக இடைக்கால தீர்ப்பில்  கர்நாடகம் தர வேண்டிய நீர்  205  டி எம் சி யி  லிருந்து   இறுதி தீர்ப்பில்    192

டி எம் சி ஆக குறைந்து தற்போது 177.25    டி எம் சியில் வந்து நின்று      14.75  டிஎம்சி  நீரை குறைத்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்சநீதி மன்றம்.   கேரளாவுக்கும் புதுச்சேரிக்கும் தலா   30   ,   7   டி எம் சி யில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

தமிழ்நாட்டில் இருக்கும் இருபது டி எம் சி நிலத்தடி நீரையும் பெங்களூருக்கு தேவையான குடிநீர்  தேவையையும் தீர்ப்பாயம் கருத்தில் கொள்ள வில்லை என்று காரணம் கூறி அதை இப்போது நிவர்த்தி செய்வதாக உச்சநீதி  மன்றம் கூறுகிறது.

கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது இதுவரை உச்சநீதி மன்றத்தின்  உத்தரவுகளை நிறைவேற்ற கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வந்ததை.

ஆறு வாரத்திற்குள் மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு  உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.     அது உங்கள் வேலையல்ல மத்திய அரசின் வேலை என்று முன்பே மத்திய அரசு நிலை எடுத்து இருந்தது.

வரவேற்று கொண்டாடி  இருக்கிறார்கள் கர்நாடகத்தில்.     இங்கே அதிருப்தி இருந்தாலும் அதை தெருவுக்கு கொண்டு வர தமிழர்கள் தயாராக இல்லை.

இந்தியாவில் இணைந்திருப்பதன் காரணமாக இன்னும் எத்தனை உரிமைகளை தமிழ்நாடு  இழக்க வேண்டும் என்று தெரியவில்லை.

மாதாமாதம் விடுவிக்க வேண்டிய நீரை தடை இன்றி விடுவிக்க என்ன வழிமுறை?

மீண்டும் மீண்டும் எங்களுக்கு போகத்தான் மீதி நீரை எங்கள் விருப்பப் படி விடுவிப்போம் என்ற கர்நாடகத்தின் அடாவடி நிலைப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படுமா?

நடப்பு பசலியில் கூட கர்நாடகம் தர வேண்டிய நீரில் ஐம்பது டி எம் சி நீருக்கு மேலாக நிலுவையில் இருக்கிறது.

சம்பா பயிர்கள் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கொண்டு இருக்கின்றன.     ஏறத்தாழ ஏழு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப் படும் .    தீர்ப்பை வரவேற்கும் கர்நாடகா இப்போதாவது நீரை விடுவிக்குமா?

இதை வைத்து தேர்தலில் வெற்றி  பெற  பா ஜ க முயற்சிப்பது எதை குறிக்கிறது?

தீர்ப்புக்கு மத்திய அரசு காரணம் என்று அல்லவா அர்த்தம் ஆகிறது.

பொறுப்பை மத்திய அரசிடம் தட்டிக் கழிக்காமல் தானே தீர்ப்பை நடைமுறைப் படுத்தும் அமைப்பை உருவாக்கி ஆணை இட்டிருந்தால் அர்த்தம் இருந்திருக்கும்.

இதுவரை மாதாமாதம் தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை கர்நாடகா  விடுவிக்காததுதான் பிரச்னை என்பதை மறந்து விடக் கூடாது.

நீரைத் திறந்து விட உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட போது நாற்பது தமிழக பேருந்துகள் எரிக்கப் பட்டன.   லட்சக் கணக்கான தமிழர்கள் விரட்டி யடிக்கப் பட்டார்கள். என்ன நிவாரணம் தந்தார்கள்?     எத்தனை பேர் தண்டிக்கப் பட்டார்கள்?

நதிநீர் யாருக்கும் சொந்தமல்ல என்று தீர்ப்பு வழங்கி விட்டால் உரிமை கோராமல் இருக்கப் போகிறார்களா?

கர்நாடக அரசின் கட்டுப் பாட்டில்  இல்லாமல் , சுயேச்சையாக இயங்கும் அதிகாரம் பெற்ற , தீர்ப்பை அமுல் படுத்தும் அமைப்பை,  உருவாக்கி இயங்க வைக்க  மத்திய அரசால் முடியுமா?

முடிந்தால் மட்டுமே இந்த தீர்ப்புக்கும்  மரியாதை இருக்கும்.

இல்லையேல் குப்பைக் கூடைக்குள் கிடக்கும் கிழிந்த தாளுக்கு இருக்கும் மரியாதை கூட  உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு இருக்காது.

ஜெயலலிதா படம் திறந்து தன்னை அவமதித்துக் கொண்ட சட்டமன்றம்??!! யார் காரணம்?? களங்கம் தீருமா?

பார்ப்புக்கு ஒரு நீதி என்று பாரதி பாடியது உண்மையாகிவிட்டது.

பதினெட்டு வருடம் குற்ற வழக்கை இழுத்தடித்து தண்டனை பெற்ற பின்னும் சட்டம் இயற்றும் அதிகாரங்களை பயன்படுத்தி வாழ்ந்து கடைசி வரை குற்றத்திற்கான இறுதி தண்டனையை அனுபவிக்காமலேயே மறைந்து  விட்டார்.

ஆனால் குற்றம் இழைத்த முதல் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்த மற்ற மூன்று  பேர் இன்று சிறையில்.    முதல் குற்றவாளி இறந்ததால் தியாகி போல சட்ட மன்றத்தில் மந்தகாச சிரிப்போடு படமாக காட்சியளிக்கிறார்.

மகாத்மா காந்தி, ராஜகோபாலாச்சாரி , திருவள்ளுவர், அண்ணா, காமராஜ், பெரியார், அம்பேத்கர்,  பசும்பொன் தேவர், முகம்மது இஸ்மாயில், எம் ஜி யார்    போன்ற பத்து தலைவர்களும் ஜெயலலிதாவோடு அங்கு இடம் பெற்று இருப்பது அவர்களுக்கு அவமானம்.   அவைகளை எடுத்து விடலாம்.

உச்சநீதி மன்ற தீர்ப்பு எங்களை கட்டுப் படுத்தாது என்று தமிழக அமைச்சரவை தீர்மானித்து  சட்ட  மன்ற நிர்வாகியான சபாநாயகர் அதை ஏற்றுக் கொண்டு படத்தை திறந்து வைத்திருக்கிறார்.

இதை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் இனி நீதிமன்றம்  என்ன தீர்ப்பு சொல்லும்.?

வைத்ததை எடுங்கள் என்று தீர்ப்பு சொல்லுமா?    குற்றவாளியை மதிப்போம் என்று நீங்களே முடிவு செய்யும்போது நாங்கள் யார் அதை தடுக்க என்று கேட்குமா?     நல்ல மரபு அல்ல என்று  மட்டும் சொல்லிவிட்டு கழன்று கொள்ளுமா?     வழக்கு  நிலுவையில் இருந்தபோதே ஏன் அதை இடைக்கால ஆணை போட்டு தடுக்க முயலவில்லை.?

இனி எந்த அரசு அதிகாரிக்கும்  தைரியம் அதிகரிக்கும்.     ஊழல் செய்வது குற்றமே அல்ல என்று கூட இனி வாதிடுவார்கள்?

விபசாரம் செய்வதை   பல மாநிலங்களில் குற்றம் என்னும் சட்டம் சில மாநிலங்களில் மட்டும் அதை அனுமதித்து ஒழுங்கு படுத்துகிறதே?

தியாகத் தலைவி சின்னம்மா என்று இனி தைரியமாக பேசி வாக்கும் வாங்குவார்கள்.   தங்களுக்கும் படம் வைத்துக் கொள்வார்கள்? !!

ஊழல் ஒன்றும் தண்டிக்கப் படத் தக்க குற்றம் அல்ல அன்று சொல்லாமல் சொல்லி விட்டார்கள்.    அதை ஒழுங்கு படுத்துங்கள் என்று கோருவதை எதிர்பார்க்கலாம் .

மக்கள் நலத் திட்டங்களை அரசு செலவில் நிறைவேற்றினார் என்பது மட்டுமே ஊழல் குற்றங்களை  மறைத்து விடுமா?

ஓட்டுக்கு தேர்தலில் பணம் கொடுப்பதற்கு பதிலாக அரசு செலவில் பொருள்களாக கொடுத்து வாக்குகளை பெறும் முயற்சி என்பதில் என்ன சாதனை.?   எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது மட்டும்தான் இலக்கா?

அது அல்லாமல் இன்னும் பல சிறப்புகள் ஜெயலலிதாவிற்கு இருக்கலாம்.   எதுவாக இருந்தாலும் அவை உச்ச நீதிமன்றம் சொன்ன குற்றவாளி என்ற தீர்ப்பை நீக்குமா?

ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் சமாதி , நினைவு இல்லம் , அரசு செலவில் பராமரிப்பு , அரசு செலவில் மணிமண்டபம் அமைக்க முயற்சிப்பது எல்லாம் தமிழர்கள் ஈனர்கள் என்றுதான் இனி வரலாறு சொல்லும் .

உயர்நீதி மன்றமும் அதன் பின் உச்ச நீதி மன்றமும் என்னதான்  சொல்லப் போகின்றன என்பதை அறிய நாடு காத்துக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால்  ஓம் பிரகாஷ்  சவுதாலா,   லாலு பிரசாத் யாதவ் , மதுகோடா போன்ற முதல்மந்திரிகள்    சிறை தண்டனை அனுபவித்து  வருகிறார்கள்.   அவர்களும் மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள்தான்.     அவர்களுக்கும் இனி அரசு மரியாதை செய்ய வேண்டாமா?

மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் சுக்ராம் ஊழல் வழக்கில் கட்டுக் கட்டாக பணத்துடன் பிடிபட்டார்.      பாஜக வுக்குப் போய் சௌகரியமாக இருக்கிறார்.      அவர் மகன் இமாச்சல அரசின் அமைச்சராம்.        மருத்துவ கவுன்சில் தலைவர் கேதான் தேசாய்   டன் கணக்கில் தங்கத்துடனும் பல ஆயிரம் கோடி பணத்துடனும் பிடிபட்டார்    .    இப்போது அவர் எந்த சிறையில் இருக்கிறார்?     மேல்தட்டு மக்களுக்கு தனி நீதி  இன்னும் தொடருகிறதே?

எல்லாம் சரி.   தமிழ்நாட்டிற்கு   ஏற்பட்டிருக்கும்

இந்தக் களங்கம் எப்படி என்று தீரும்???!!!

 

மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ; சதி என திசை திருப்பும் பா ஜ க ?!!

மீனாட்சி அம்மன் கோவிலின் வசந்தராயர் மண்டபத்தில் உள்ள  36  கடைகள் தீ விபத்தில் சேதம் அடைந்து விட்டன.

தீ தடுப்பு உபகரணங்கள் தயாராக இல்லை  என்பது வெளிச்சத்துக்கு வந்தது.    தீயணைப்பு இயந்திரங்கள் உள்ளே சென்று  வேலை செய்ய முடியவில்லை.       கோவில் பரிகாரத்துக்கு உள்ளே கடைகள் இருக்க கூடாது என்று  2006 ம் ஆண்டே தமிழக சுற்றுலா துறை பரிந்துரைத்து தகுந்த மாற்று இடமும் தேர்ந்து எடுக்கப்பட்டு முறையாக பணிகள் தொடங்கப் படாமல் தாமதம் ஆனதால் இந்த இழப்பு ஏற்பட்டு இருக்கிறது..

நிர்வாக அதிகாரியின் செயல் திறன் குறையா அல்லது கடைக்காரர்கள் திருஷ்டி பரிகாரத்துக்கு கொளுத்திய சூடத்தில் இருந்து  எழுந்த தீ தான் விபத்துக்கு காரணமா என்பது விசாரணையில் தான் தெரியும்.

விசாரணை தேவை என்பதிலும் தொடர் நடவடிக்கை தேவை என்பதிலும் யாருக்கும் எந்த  ஆட்சேபணையும் இருக்க முடியாது.

ஆனால் எதெற்கெடுத்தாலும் அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வைப்பதை பா ஜ க வும் இந்து முன்னணி பார்ப்பனர்களும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.     ஆம்.   பாஜகவின்  எச்  ராஜாவும் இந்து முன்னணியின் ராம கோபாலனும் இந்த கோரிக்கையை எழுப்பி இருக்கிறார்கள்.

இப்போது இந்து ஆலயங்கள் இந்துக்கள் கையில்தானே இருக்கிறது.    வேறு எந்த இந்துக்கள் கையில் ஒப்படைக்க வேண்டும்?     திமுக ஆனாலும் அ தி மு க ஆனாலும் இந்துக்கள் தானே.    பார்ப்பனீய எதிர்ப்பு கொள்கை உடையவர்கள் இந்துக்கள் அல்ல என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது?

பார்ப்பநீய ஆதரவு ஆட்கள் மட்டுமே இந்துக்கள் என சான்றிதழ் தரும் உரிமை பா ஜ க வுக்கும் இல்லை. வேறு யாருக்கும் இல்லை.

உங்களை நன்றாக புரிந்தவர்கள் தான் தமிழ் இந்துக்கள்.

எனவே அரசை ஆலயத்தை விட்டு வெளியேறும் கோரிக்கையை இனி எவரும் எழுப்பக்  கூடாது.    அப்படி எழுப்புபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்ற நிலைமையை ஆட்சியாளர்கள் உருவாக்க வேண்டும்.

அப்போது மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்.

அதிமுக எம்பிக்கள் ஆடு மாடுகள்; காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு கிடைக்காது; சு.சாமி??!! அடிமைகள் மௌனம்??!!

அறிவு ஜீவியா  பைத்தியக்காரனா?    சுப்பிரமணியசாமியை எப்படி வர்ணிப்பது?

பறையர்  என்று  யாரையோ திட்டப்போக  எதிர்ப்பு கிளம்பவும்  அது ஆங்கில அகராதியில் இருக்கிறது என்று  பதில் சொன்னார்.     எதிர்பவர்களை பொறுக்கிகள் என்று வர்ணிப்பது அவரது  வாடிக்கை.    சொல்பவர் அப்படித்தான் என்று யாரும் அதை பொருட் படுத்துவதில்லை.

ஆனால் அளவு  மீறிக்கொண்டிற்குகிறார் சு. சாமி.

இந்த அத்துமீறல்களை ஏன் பொறுப்புள்ள ஊடகங்கள் கண்டிப்பதில்லை.    அவர் பார்ப்பனர் என்பதாலா?      ஊடகங்கள் பெரும்பாலும் அவர்கள் வசம்தானே!

ஆனால் அவர் பா ஜ க வின் அகில இந்திய தலைவர்களில் ஒருவர்.       அவர் சொல்வதற்கும் பா ஜ க வுக்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்று தமிழிசை சொல்கிறார்.      பின் ஏன் பா ஜ க வில் வைத்திருக்கிறீர்கள்?

சங்கராசாரியுடன் சமமாக நாற்காலி போட்டு  உட்கார அவரால் முடிகிறது.    பொன். ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தாலும் கீழேதான் உட்கார வேண்டும்.    தன்மானம் இருந்தால் வெளியே வந்திருக்க வேண்டாமா?

பலகுரல் பா ஜ க தரப்பில் இருந்து கேட்கும்.    எது உண்மையான பா ஜ க வின் குரல் என்று வெகு சிலருக்குத்தான் தெரியும்.

பா ஜ க எம்பிக்கள் எத்தனை முறை தீவிர இந்துத்துவ கருத்துக்களை வெளியிட்டிருக் கிரார்கள்.    யார் மீதாவது நடவடிக்கை உண்டா?     எனவே திட்டமுடன் தான் பேசுகிறார்கள்.

அப்படித்தான் சுப்பிரமணியசாமியும் பேசுகிறார்.

என்ன தைரியத்தில் அதிமுக எம்பிக்களை ஆடு மாடுகள் என்று விமர்சிக்கிறார்.    ஒபீஸ் சிடம் கேட்கிறார்கள் என்ன இப்படி சொல்கிறாரே என்று?     அவருக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா என்று பதில் சொல்கிறார்.     இவர்களுக்கெல்லாம்  தன்மான உணர்வு என்று ஒன்று உண்டா இல்லையா?

அதைப்போல் காவிரித் தண்ணீர் தமிழ்நாட்டுக்கு கிடையாது என்று சொல்கிறார்.

பிறகு எதற்கு நடுவர் நீதிமன்றம்?   இறுதி தீர்ப்பு எதற்கு?    அரசிதழ் வெளியீடு எதற்கு?    உச்சநீதி மன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க இருக்கிறதே அது எதற்கு?      உலகில் அமுலில் இருக்கும் பன்னாட்டு நதிநீர் பங்கீட்டு உரிமை இரு மாநிலங்களுக்கு இடையே கிடையாதா?    இதெல்லாம் தெரியாமல் சுப்பிரமணியசாமி பேசியிருப்பார் என்று சொல்ல முடியுமா?

தெரிந்தே தான் ஏதோ  ஒரு செய்தியை சொல்ல வருகிறார்.    அது தமிழ்நாடு காவிரி நீரை கர்நாடகத்திடம் இருந்து எதிர்பார்க்க வேண்டாம்.   அதற்கு பா ஜ க துணை  செய்யாது .   வேறு வழிகளை பார்த்துக் கொள்ளுங்கள் .  எங்களுக்கு கர்நாடகா ஆட்சிக்கு வர வேண்டும்.   தமிழ்நாட்டில்  அதற்கு வாய்ப்பு இல்லை.    எனவே பா ஜ க விடம்  எதிர் பார்க்காதீர்கள்.     வெங்கையா நாயுடுவும் நிர்மலா சீதாராமனும் கூட இப்படித்தானே தமிழ் நாட்டு நலன்களுக்கு எதிராக பேசினார்கள்.

இஸ்ரேல் நாட்டிடம் இருந்து எந்திரம் கொண்டு வந்து தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னையை தீர்த்து விடுவாராம்.   அதுவும் நான்கு மாதத்துக்குள் இந்த திட்டத்தை  முடிக்க முடியுமாம்?     அது முடியும் என்றால் நாட்டில் மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்னை எதுவுமே இருக்காதே?

சென்னை மீஞ்சூரிலும் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டு வருகிறது.    ஆனால் அதற்கு ஆகும் செலவு?      குடிநீருக்கே பஞ்சம் என்றால் சாகுபடிக்கு எப்படி போதும்?

அதிமுகவை இதைவிட யாரும் அவமானப் படுத்த முடியாது.   ஆனால்  எந்த அதிமுக தலைவரும் இதை ஒரு பொருட்டாக கூட எடுத்துக் கொள்ள தயாராக இல்லை.    பயம்.   வருமான வரித்துறை மீதும் அமுலாக்கதுறை மீதும் சி  பி ஐ மீதும் பயம்.      கொள்ளையடித்தவர்கள் பயந்துதான் ஆக வேண்டும்.

ஏதாவது பொறுப்புள்ள ஊடகம் இதைப்பற்றி எழுதி பிரச்னை எழுப்பி அதை  மக்கள் போராட்டமாக மாற்றினால்தான் இது போன்று பொறுப்பில்லாமல் பேசி குழப்பத்தை  ஏற்படுத்த முயற்சிப்பவர்களின்  முகமூடி கிழியும்.

 

நாகாலாந்தில் தேர்தல் நடக்குமா? மோடி செய்த ரகசிய உடன்பாடு நிலைக்குமா?

இம்மாதம் நடக்க இருக்கும் நாகாலாந்து மாநில தேர்தலை புறக்கணிக்க அனைத்துக் கட்சிகளும் முடிவெடுத்து இருக்கின்றன.

அகண்ட நாகாலாந்து அமைப்பது நாகா இயக்கங்களின் நீண்ட கால கோரிக்கை.

பக்கத்து மாநிலங்கள் ஆன அசாம் , அருணாச்சல் பிரதேசம் மணிப்பூர் போன்ற வற்றில்இருந்து நாகா மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை நாகாலாந்து மாநிலத்தில் இணைக்க வேண்டும் என்பதே கோரிக்கை.

ஏறத்தாழ மாநில பிரிவினையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் .   அதற்கு மற்ற மாநிலங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லவா?

இதே கோரிக்கையை எல்லா மாநிலங்களும் எழுப்பினால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஆயுதம் ஏந்தி போராடியவர்களை பேச்சு வார்த்தைக்கு இழுக்க மோடி அரசு  2015 ம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது.

வேடிக்கை என்னவென்றால் அந்த ஒப்பந்தத்தில் என்ன இருந்தது என்பது வெளியில் சொல்லப் பட வில்லை.

இப்படி ரகசியமாக ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?   அது நிலைக்குமா?     மற்ற மாநிலங்களிலும் இது போன்ற கோரிக்கைகள் எழலாம் என்பதே அச்சம்.

எதுவாக இருந்தாலும் பகிரங்கமாக விவாதித்து எடுக்கப் படும் முடிவுகளே நிலைக்கும்.

அசாம் மாநிலத்தின் தீமா ஹசாவோ பகுதி விரைவில் நாகாலந்துடன் இணைக்கப் படும் என்ற ஒரு ஆர் எஸ் எஸ் தலைவரின் பேச்சால் எழுந்த வன்முறையில் இருவர் உயிர் இழந்திருக்கி றார்கள்.     இது தேவையா?

சென்ற முறை அனைத்து கட்சிகளும் தேர்தல் புறக்கணிப்பு முடிவு செய்தபோது காங்கிரஸ் மட்டும் போட்டியிட்டு வென்று ஆட்சியை பிடித்தது.   இப்போதும் அதே முறையை பா ஜ க வும் கடைபிடித்து ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யலாம்.    அப்படி செய்தால் மீண்டும் வன்முறை வெடிக்கும் ஆபத்து உள்ளது என்பது மறுக்க முடியாது.

பா ஜ க அரசு செய்வது ஆரோக்கியமான அரசியல் அல்ல.

துணை வேந்தர் கைது சுட்டிக் காட்டும் ஊழல் சாம்ராஜ்யம்??!!

பாரதியார் பல்கலை கழக துணைவேந்தர் கணபதி முப்பது லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்  பட்டிருக்கிறார்.

துணை வேந்தர் நியமனங்களில் கோடிகளில்  லஞ்சம் கொடுத்து பதவி பெருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ஆனாலும் யாரும் இதை  தடுத்து நிறுத்த முனைந்ததில்லை.    ஏன்?     எல்லாருக்கும் இதில் பங்கு இருந்திருக்கிறது.

இத்தனை கோடி லஞ்சம் கொடுத்து வந்தவன் எந்த நம்பிக்கையில் கொடுக்கிறான்?    அதை விட பல மடங்கு சம்பாதிக்க  முடியும் என்ற நம்பிக்கையில் தானே?

அதை நிறுத்த என்ன செய்திருக்கிறார்கள்.?

துணைவேந்தர் களுக்கு இருக்கும் நியமன அதிகாரம் தான் இதற்கு அடிப்படை.   தமிழ் நாட்டில் இருக்கும்  19  அரசு பல்கலை கழகங்களிலும் இதே நிலவரம்தான்.

பதவி நியமனம், பணி  இட மாறுதல் , போன்றவற்றில்  ஒவ்வொரு காரியத்திற்கும் லட்சங்களில் பேசப்படும் பேரம்தான் ஊற்று .

அனைத்திலும் வெளிப்படையான நடைமுறை அமுலில் இருந்தால் இந்த பேரத்திற் கெல்லாம் தேவை இருக்காதே?

ஆக இந்த ஊழல் என்பது எல்லா மட்டத்திலும் நிலை பெற்றிருக்கிறது.

இந்த ஊழல் ஒருமட்டத்தில் மட்டும் நிலை பெற்றிருக்க முடியாது.

அமைச்சரவைக்கு இதில் எந்த பங்கும் இல்லையா?   அமைச்சருக்கு என்ன பொறுப்பு?   செயலாளர் தரும் வழிகாட்டுதல் களையும் மீறி துணை வேந்தர் செயல் பட்டிருக்கிறார் என்றால் அதில்  யார் யாருக்கு  பங்கு இருக்கிறது. ?  கல்வித்துறை செயலாளர் தான் இதில் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இதில் முழுமையான விசாரணை இல்லாமல் ஒரு துணை வேந்தர் மீது மட்டும் நடவடிக்கை என்றால் அதில் எந்த அர்த்தமும் இல்லை.

எந்த பல்கலையிலும் இனி இத்தகைய ஊழல் நடை பெற கூடாது.

அதற்கான வழிமுறைகளை உடனடியாக வகுப்பதுதான் உடனடி தேவையே  தவிர   ஒரு குற்றவாளியை மட்டும் தண்டிப்பது அல்ல.

கல்வித்துறையில் நிலவும் இந்த ஊழல் ஒழிக்கப் படும்வரை எந்த சீர்திருத்தமும் செய்ய முடியாது.