Home Blog Page 80

நீட் தேர்வு எழுதும்போது தாலி அணியக் கூடாது என்று தடை விதிப்பது எதற்காக ?

நீட் தேர்வு என்பதே சூது மதியாளர்களின் தந்திரம்.      நடுத்தர மக்கள் உயர் நிலைக்கு வந்து  விடாமல்  எப்படியாவது தடுப்பதே நோக்கம்.

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வுமையங்களில் தங்கம் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப் பட்டதால் தாலியை கழற்றி விட்டு பெண் டாக்டர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.

நீட் தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் , ப்ளுடூத் , நோட்புக் ,பேனா ,கைப்பை  உள்ளிட்ட எதையும் எடுத்து வரக்கூடாது. கம்மல், வாட்ச், பிரேஸ்லெட் ,பெல்ட் அணிந்து வரக்கூடாது என்ற கட்டுப் பாடுகள் எதற்காக என்பது புரியவில்லை.

காப்பி அடிக்கக் கூடாது என்பதற்காக என்றால் எதில் சாத்தியம் இருக்கிறதோ அதை தடை செய்தால் தவறில்லை. கம்மல், தாலி போன்றவற்றில் என்ன காப்பி அடிக்க சாத்தியம் இருக்கிறது. ?

தேர்வு எழுத வருபவர்களின் மனநிலையை தடுமாற செய்து அவர்களை நிலை குலைய வைக்க வேண்டும். அதனால் அவர்கள் மதிப்பெண்கள்  குறைவாக எடுக்க வேண்டும் என்ற திட்டம் அதில் இருப்பதாக சந்தேகம் வலுவடைகிறதே?

சென்ற ஆண்டு ஆட்சேபித்த போது  இனி தாலி அணிய தடை  இருக்காது  என்றவர்கள் இந்த ஆண்டும் மீண்டும் தடை விதிக்கிறார்கள் .

இப்படி அலைக்கழிக்கிறவர்களுக்கு என்ன தண்டணை?

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அடுத்து வருகிறார் பார்ப்பனீயத்தின் பிரதிநிதி ரஜினி!!

வென்று வருகிறது பார்ப்பனீயம் !

அலையென வந்த திராவிட சுயமரியாதை  இயக்க வெற்றிகளுக்குப் பின் கலைஞர் ஒருவர்தான் கொள்கைகளை அடகு வைக்காமல் அரசியல் வெற்றிகளை பெற்று வந்தார்.

அவருக்கும் எம்ஜியாருக்கும் வந்த தனிப்பட்ட போட்டியில் எம்ஜியாருக்கு பார்ப்பனீயம் வெண்சாமரம் வீசியது.      கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று வந்தாரே  தவிர பெரியாரையோ சுயமரியாதை கருத்துக்களையோ புறந்தள்ளி அவர் அரசியல் செய்யவில்லை.      ஆனால் சுயமரியாதை கருத்துகளை அதிகம் வலியுறுத்தாமல் பார்ப்பனர்களின் நம்பிக்கையை பெற்றவர் அவர்.

அவருக்கு அடுத்து வந்த ஜெயலலிதா தான் பாப்பாத்தி என்று சட்ட மன்றத்திலேயே தன் அடையாளத்தை வெளிப்படுத்தியவர்.    பஞ்சாங்கம் பார்த்து அரசியல் செய்த அவர் பார்ப்பனீயத்தின் பிரதிநிதியாகவே நடந்து  கொண்டார்.   ஆனால் அதே சமயம் தான் பெரியாரின் பிறந்த நாளுக்கு மாலை இடுவதை மட்டும் நிறுத்த வில்லை.   அதாவது சுமரியாதை இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்தால் போதும் எதிர்த்தால் எதிர்ப்பு உருவாகும் என்று பயந்தார்.

ஆக கலைஞருக்குப் பின் எம்ஜியாரையும் ஜெயலலிதாவையும் வைத்து தங்கள் கொள்கைகளை நிறைவேற்றிக்  கொண்ட பார்ப்பனீயம் அடுத்து யாரை கொண்டு வருவது என்று திட்டமிட்டு தேர்ந்தெடுத்தது கமல் அல்லது ரஜினி .

எப்பாடு பட்டாவது ஸ்டாலின் வருவதை தடுப்பது.  அன்புமணி, சீமான் , தினகரன்   போன்றவர்கள் வரமுடியாது.   ஓ பி எஸ் -இ பி எஸ் இருவரும் காகிதப் புலிகள்.   ஆண்மையற்ற தலைவர்கள் என்று குருமூர்த்தி அவர்களை இழிவு படுத்தியதை கண்டு மற்றவர்கள் கொதித்தார்களே தவிர அவர்களுக்கு சொரணையே இல்லை.

வெற்றிடம் உள்ளது.   அதை தங்கள் பிரதிநிதி நிரப்ப வேண்டும் என்ற பார்ப்பனீயத்தின் வெளிப்பாடே ரஜினியின் அரசியல் அறிவிப்பு.

கமல் அறிவிப்புகள் அவ்வளவாக போது மக்களை ஈர்க்க வில்லை.  இருவரும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

மன்றத்தை மட்டும்  பலப்படுத்த தனி கணினி வசதி.

ரஜினிக்கு அடுத்த ஆள் யாரும் அடையாள படுத்தப் படவில்லை.

புல்லுருவி மணியன், அர்ஜுன் சம்பத் போன்ற பெயர் தெரிந்த சிலர் ஆதரவு அளித்து இருக்கிறார்கள்.

ஒரு தனி மனிதனை நம்பி , அதாவது தன்னை மட்டும் நம்பி , ஆட்சியை கொடுங்கள் என்று கேட்கிறார்.

ஆன்மிக அரசியல் என்கிறார்.   அதே சமயம் சாதி மத வேறுபாடு பார்க்க மாட்டேன் என்கிறார்.     பாராளுமன்ற தேர்தலில்  அப்போது சொல்வாராம்.   சட்ட மன்ற தேர்தலில்    234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியாம்.

பகவத் கீதையை மேற்கொள் காட்டியவருக்கு திருக்குறள்  தெரியவில்லை.

நல்லதையே நினைத்து நல்லதையே சிந்தித்து நல்லதையே திட்டமிட்டு செயல்பட்டால் நல்லதே நடக்கும்.    அதுதான் இவர் கொள்கையாம்.  எல்லா சாமியார்களும் சொல்லும் வாக்கியம் தானே.

மூன்று ஆண்டுகள் கழித்து வரப்போகும் சட்ட மன்ற தேர்தல் முன்கூட்டியே வராது என்பது இவருக்குதெரியுமா?        பெரும்பான்மை இல்லாமல் நடக்கும் ஆட்சிக்கு எந்த பங்கமும் வராது என்ற உத்தரவாதத்தை யார் இவருக்கு அளித்தார்கள்?

எந்த காரணத்தை கொண்டும் பா ஜ க வுடன் ஓட்டோ உறவோ கொள்ள மாட்டேன் என்று அறிவிக்க தயாரா?

சீமான் சொல்வது போல் மராட்டியர்கள் முன்பு படை எடுத்து வந்து வெற்றி பெற்று நம்மை ஆண்டார்கள்.   இப்போது படம் எடுத்து புகழ் பெற்று ஆள திட்டம் இடுகிறார்கள்.   அதற்கு பார்ப்பனீயம் தூபம் காட்டுகிறது.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.  அந்த உரிமை ரஜினிக்கும் இருக்கிறது.    ஆனால் அது சுயநலம் இல்லாமல் இருக்க வேண்டும்.    யாருடைய அம்பாகவோ செயல் பட கூடாது.

மூன்று ஆண்டுகள் இவர் எந்த பிரச்னை குறித்தும் எதுவும் பேச மாட்டார்.   பேசினால்தான் யார் என்று தெரிந்து விடுமே.

இதுவரை எல்லாராலும் நேசிக்கப்  பட்ட ரஜினி இனி எதிரிகளையே சந்திப்பார்.

அதாவது இவர் யார் பக்கம் என்று தெரியும் வரை.   நோட்டாவுக்கு குறைவாக வாக்குகள் வாங்கிய கட்சியுடன் வெளிப்படையாக உறவு வைத்து தன் சுய ரூபத்தை காட்ட மாட்டார்.      மாறாக மறைந்திருந்து தாக்குவார்.

தமிழர்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தீபாவும் மாதவனும் கட்சி ஆரம்பித்த போது  கூட எல்லா ஊர்களிலும் பிளக்ஸ் போர்டு வைத்து ஆராதித்த தமிழர்கள் ஏராளமானவர்கள்  இருந்தார்களே!

சிஸ்டம் சரியில்லை என்று இவர் எதை சொல்கிறார் என்பதே யாருக்கும் புரியவில்லை.

ஓ பி எஸ் – இ பி எஸ் மற்றும் பா ஜ க கட்சிகளுடன் இவர் உடன்பாடு  செய்து  கொள்வார் என்பதே இப்போதைய அனுமானம்.

ரசிகர் மன்றங்களுக்கு இடம் கொடுத்த தவறுக்கு தமிழகம் இன்னும் எத்தனை விலை கொடுக்க வேண்டி இருக்கும். ?

வருகிறவன் எல்லாம் ஆளத்தான் விரும்புகிறான்.

நல்லது செய்ய விரும்புகிறவன் வேறு வகையில் செய்யவே முடியாதா?      நல்லதை சொல்லு நல்லவனை தேர்ந்தெடு நல்லவனுக்கு ஆதரவு கொடு அவனை ஆய்வு செய்யும் உரிமையை நீயே வைத்துக் கொள். இப்படி சிந்தித்தால் நீ நல்லவன்.

நான் மட்டுமே நல்லவன் என் பின்னால் எல்லாரும் வாருங்கள் என்பவன் அயோக்கியன்.

ரஜினி நல்லவரா? அயோக்கியரா?

2G வழக்கின் தீர்ப்பில் கிழிந்த சி பி ஐ ன் முகத்திரை ??!!

ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி  இழப்பு ஏற்படுத்தியதாக ஆ ராசா  மற்றும் கனிமொழி உள்ளிட்ட 19  பேரின் மீதான மூன்று வழக்குகளிலும் சி பி ஐ தனி நீதிமன்றம்  அனைவரையும் விடுதலை செய்தது.

வழக்கமாக ஒரு வழக்கில் விசாரணைக்கு முன்பே தண்டிக்கப் படுவது இதிலும் நடந்திருக்கிறது.     ராசா ஒரு வருடமும் கனிமொழி ஆறு மாதங்களும் சிறையில் இருந்திருக்கிறார்கள்.     இன்று அவர்கள் நிரபராதிகள் என்று தீர்ப்பு.      அனுபவித்த தண்டனைக்கு என்ன ஈடு?

இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு 122  உரிமங்களை ரத்து செய்ததுடன் கோடிக்கணக்கில்  பலருக்கு அபராதமும் விதித்தது.  போதிய விசாரணைக்கு இத்தகைய தண்டனையை உச்சநீதி மன்றம் தந்தது சரியா தவறா என்பதும் இன்று விவாதத்துக்கு உள்ளாகிறது.

இதில் ஆதாயம் அடைத்து பா ஜ க வும் அதி மு க வும் தான்.      தேர்தல் பிரசாரங்களில் 2G கொள்ளையர்கள் என்பதுதான் பிரச்சாரமாக இருந்தது.   அது தி மு க வின் வெற்றி வாய்ப்பை தமிழகத்திலும் காங்கிரசுக்கு மற்ற மாநிலங்களிலும் பறித்தது.

பல வகைகளில் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.      1553  பக்க தீர்ப்பில் நீதிபதி  ஓ பி சைனி தான் உரிய சாட்சி ஆவணங்களுக்காக ஏழு ஆண்டுகள் காத்திருந்ததாகவும் ஏமாற்றமே மிஞ்சியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.     சாட்சியங்களை  அடிப்படையாக வைத்து ஆவணங்களை புறந்தள்ளி குற்றப் பத்திரிகை புனையப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகளின் மீது தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விமர்சனங்கள் கவலைக்குரியவை. இப்படியுமா இருப்பார்கள் அதிகாரிகள்?

கலைஞர் தொலைக்காட்சிக்கு தரப்பட்ட 200  கோடி ரூபாய் உரிமம் தொடர்புடைய ஊழல் என்று ஏன் ஒரு கேள்வி கூட எந்த சாட்சியிடமும் கேட்கப் படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

வெறும் முப்பதாயிரம் கோடிக்கு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து விட்டு அதற்கும் ஆவண அடிப்படை இல்லாமல் எப்படி குற்றபத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது?.    அதுவும் உச்சநீதி மன்றத்தின்  மேற்பார்வையில்.

மத்திய கணக்காயர் அறிக்கையில் ஆண்டுதோறும் பல துறைகளின் மீது இழப்பு ஏற்படுத்தியதாக அறிக்கை வெளியிடுவது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான ஒன்று.    அதை அடுத்து நிகழாமல் பார்த்து சரி செய்து கொள்ளட்டும் என்பதே எதிர்பார்ப்பு.

 வரலாற்றில் கணக்காயர் அறிக்கையின் அடிப்படையில் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட ஒரே வழக்கு 2G அலைவரிசை வழக்குதான். 

அதிலும் ஆ ரா சா குற்றவாளியாக இருந்து கொண்டே தானும் ஒரு சாட்சியாக விசாரித்துக் கொண்டது வழக்கத்தில் இல்லாதது.    பதினைந்து நாட்கள் அவரை குறுக்கு விசாரணை செய்தார்கள்.     என்னென்ன தவறுகள் அவர் செய்தார் என்பதை குறுக்கு விசாரணையில் நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டது.      வழக்கமாக குற்றவாளிகள் தங்களை சாட்சியாக விசாரித்துக் கொள்வது இல்லை.   அசைக்க முடியாத நம்பிக்கை தன்னிடம் இருந்ததால்தான் ராசா தன்னை சாட்சியாக விசாரித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

தங்களுக்குள்  ஒரு குழுவை அமைத்துக் கொண்டு ஒரு சிலரிடம் இருந்த உரிமையை 122 பேருக்கு பிரித்துக் கொடுத்ததின் மூலம் அழைப்புக் கட்டணம் பாதியாக குறைந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டு இருந்தாலும் மோடி அரசு வந்தபின் தானே விசாரணை நடந்தது.     ஏன் முறையாக நடத்தவில்லை ?

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இது சி பி ஐ என்ற நிறுவனத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதித்திருக்கிறது.

சி பி ஐ யோ அமலாக்கத் துறையோ மேன்முறையீடு செய்தாலும்கூட இனிமேல் குற்ற பத்திரிகையை மாற்ற முடியுமா என்ன?

அரசியல் அரங்க விளையாட்டுகளை கட்சிகள் செய்யலாம்.

அதற்கு அரசு நிறுவனங்கள் , குறிப்பாக சி பி ஐ ,  அமலாக்கத்துறை , வருமான வரித்துறை  போன்றவை பகடைக் காய்களாக செயல் படுகின்றன என்ற குற்றச்சாட்டு வலுவாகி வருகிறது.     இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா வீடியோ??!!

அப்போல்லோவில் சிகிச்சையில் இருந்தபோது சசிகலா எடுத்த ஜெயலலிதாவின் வீடியோ பதிவை தினகரன் அணியை சேர்ந்த எம் எல் ஏ வெற்றிவேல்  நேற்று வெளியிட்டார்.

அதில் ஜெயலலிதா படுக்கையில் இருந்தபடி இடது கையால் ஜூஸ் சாப்பிடுகிறார்.   வலது கையில் மருத்துவர்கள் பொருத்திய சாதனம் சுற்றப் பட்டிருக்கிறது.   டெலிவிஷன் பார்க்கிறார்.        கால்கள் இரண்டும் தெரிகின்றன.

தீவிர சிகிச்சை பிரிவில்  இருந்து மாற்றப் பட்டு சாதாரண அறையில் இருந்தபோது எடுத்தது என்றால் அவர் நல்ல நிலையில் தான் இருந்தார் என்பது வெளிச்சமாகிறது

இதை ஏன் சசிகலா இத்தனை நாள் மறைக்க வேண்டும் என்பதுதான் புரியவில்லை.

இது ஒன்றும் ஜெயலலிதாவின் கௌரவத்தை குலைப்பதாக அமையவில்லை.     எல்லாருக்கும் வரும் சிகிச்சை நேர தோற்றம்தான் தெரிகிறதே தவிர இதில் என்ன தவறு இருக்கிறது.

ஒப்பனையுடன் மட்டுமே வெளியில் தெரிந்த ஜெயலலிதாவின் சிகிச்சை தோற்றம் மக்களுக்கு தெரியக் கூடாது என்று சசிகலா நினைத்திருந்தால் அது தவறு.

எத்தனை வதந்திகளை அது தவிர்த்திருக்கும்.     இன்னும் சொல்லப் போனால் கட்சி உடைவதற்கே அது ஒரு காரணமாக இருந்திருக்க முடியாது.

மறைக்க மறைக்கத்தான் அதில் ஏதோ இன்னும் இருக்கிறது என்ற சந்தேகம் அதிகரிக்கும்.

இன்னும் பல விடியோக்கள் இருக்கின்றன என்கிறார்கள்.   அவைகளை அவர்கள் தாமாகவே முன்வந்து விசாரணை  கமிஷன் முன் சமர்ப்பித்து அவைகளை ஆவணப் படுத்துவதே முறையானது.

ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை இரட்டை இலையை பெறுவதற்கு  பயன்படுத்தப பட்டது இன்னும் நிலைமையை சிக்கலாகி இருக்கிறது.    ஒத்துப் போகாவிட்டால் அது பல ஊகங்களுக்கு இடம் கொடுக்கும்.    பலரும் தண்டனை  பெரும் நிலையும் உருவாகும்.

சாட்சி சொன்ன டாக்டர் பாலாஜி மாட்டலாம்.

தேர்தல் ஆணையம் இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு தகவல் கொடுத்தது.     தேர்தல் விதியை மீறிய செயலாம்.       நூறு  கோடிக்கு மேல் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப் பட்டதை தடுக்க முடியவில்லை    இந்த  தேர்தல் ஆணையத்தால்.

இதற்கிடையே இளவரசியின் மகள் கிரிஷ்ணபிரியா வெற்றிவேல் செய்தது தவறு என்கிறார்.   குடும்பத்துக்குள்ளே கருத்து வேறுபாடு.

வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறதாம்.   இதற்கும் இடைத் தேர்தலுக்கும் என்ன தொடர்பு இருக்கும்?    இது எப்படி ஒரு பிரச்சாரம் ஆகும்?    தேர்தல் ஆணைய நீதியே தனி??!!

எப்படி இருந்தாலும் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ ஜெயலலிதா சிகிச்சை பற்றிய ஒரு புதிய உண்மையை மக்களுக்கு தெரியப் படுத்திவிட்டது என்பது மட்டும் உண்மை.

இன்னும் முழு உண்மைகளையும் மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டியது அதை வைத்திருப்பவர்களின் கடமை.

ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலையில் ராஜஸ்தான் போலீஸ் குழப்படி செய்கிறதா?

கொளத்தூர் நகை கடையில் கொள்ளையடித்து சென்ற ராஜஸ்தான் நாதுராம் கும்பலை பிடிக்க தமிழ் நாட்டு காவல் துறையின் ஐந்து நபர் குழு அவர்களை நள்ளிரவு இரண்டு மணிக்கு பிடிக்க முற்பட்டபோது துப்பாக்கியால் சுடப் பட்டு ஆய்வாளர் பெரியபாண்டியன் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்திருக்கிறார் .

பெரிய பாண்டியன் அல்லது ஆய்வாளர்  முனிசேகர் ஆகிய இருவரது துப்பாக்கி களில் ஒன்றில் இருந்த குண்டுதான் பெரிய பாண்டியனின் உயிரை பறித்துள்ளது .

தவறி விழுந்த துப்பாக்கியை எடுத்து கொள்ளையர்கள் தான் பெரியபாண்டியனை சுட்டார்கள் என்றுதான் முதல் தகவல்கள் தெரிவித்தன.

முதல் முறை சென்று  சிலரை கைது செய்து அழைத்து வந்த தமிழ்நாட்டு போலீஸ்  உள்ளூர் போலீசின் உதவியை நாடிபெற்று  செயல் பட்டிருந்தது.       என்ன நினைத்தார்களோ இரண்டாம் முறை சென்றபோது உள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுக்காமலேயே நாதுராமை பிடிக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.     உள்ளூர் போலீஸ் தகவல் கொடுத்து விடும் என்ற சந்தேகமா?

இப்போது திடுக்கிடும் வகையில் ராஜஸ்தான் போலீஸ் பெரிய பாண்டியனை கொன்றது முனி சேகர் துப்பாக்கியில் இருந்த குண்டுதான் என்று சொல்லி முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த திடுக்கிடும் தகவலை ராஜஸ்தான் மாநில போலீஸ் கண்காணிப்பாளர் தீபக் பார்கவா தெரிவிக்கிறார்.

ஆனால் இதுபற்றி தமிழக போலீஸ் ஏன் இதுவரை அறிக்கை எதையும் தாக்கல் செய்ய வில்லை.?

எதிர்பாராமல் நடைபெற்ற விபத்து என்ற அடிப்படையில் விசாரணை சென்றால் கொலைக்குற்றத்தில் இருந்து நாதுராம் தப்பிக்க வழி ஏற்பட்டு விடும்.

இரண்டு மாநிலம் சம்பந்தப் பட்ட வழக்கில் இரு மாநில காவல் துறையினர் இடையே இருக்க வேண்டிய இணக்கம் இருந்திருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக எழுந்திருப்பது கவலைக்குரியது.

அதாவது தப்பிக்கும்போது முனி சேகர் நாதுராமை நோக்கி சுட்ட போது குறி தவறி பெரிய பாண்டியனை குண்டு தாக்கி இறந்தார் என்றால் இதில் நாதுராம் தப்பிக்க வழி இருக்கிறதா இல்லையா?

ஒரு காவல் ஆய்வாளர் துணிச்சலுடன் கொள்ளையன் ஒருவனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல் பட்ட போது எல்லாரும் ஒன்றிணைந்து செயல் பட்டிருக்க வேண்டும்.     போதிய ஆயுதங்களும் போதிய ஆட்களும் இல்லாமல் வெளி மாநிலம் ஒன்றில் இரவு நேரத்தில் தமிழக போலீசை இயக்கியது யார்?

நடந்து விட்ட குளறுபடிக்கு தமிழக காவல் துறையும் ஒரு வகையில் பொறுப்பாகிறது.

பெரிய பாண்டியன் குடும்பத்திற்கு அரசு அளித்திருக்கும் உதவித்துகை இரண்டு கோடி.    பொதுமக்களும் உதவ வங்கி கணக்கு துவங்க அனுமதி அளித்திருக்கிறார்கள் .

என்ன செய்தாலும் ஈடு கட்ட முடியாத இழப்பு அவரது மரணம்.

நாதுராம் தங்கியிருந்த இடம் ராஜஸ்தான் போலீசுக்கு தெரிந்த பின் அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். ?

வடநாட்டு கொள்ளைக்காரர்கள் தான் இங்கு வந்து அக்கிரமம் செய்கிறார்கள் என்றால் அங்குள்ள காவல் துறையுமா பொறுப்பற்று இருக்கும்?

தவறு எங்கு நிகழ்ந்தது  யார் அதற்கு காரணம் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்க தமிழக காவல் துறைக்கு கடமை இருக்கிறது.

உண்மையை மறைத்தோம் ; அப்போல்லோ பிரதாப் ரெட்டி -மருத்துவர்கள் பொய் சொன்னால் என்ன தண்டனை ?

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் புதிய பரிணாமங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது.

இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் சொன்னார்.

ஜெயலலிதாவின் கை ரேகைகளில் ரேகைகளை காணோம் வெறும் புள்ளிகளாக இருக்கின்றன என்று மருத்துவர் சரவணன் குற்றம் சாட்டி ஜெயிலில் வைத்த ரேகை யை ஒப்பிட முயன்றபோது உச்ச நீதி மன்றம் தடை விதிக்கிறது.  இறந்தவர் ரேகைகளில் தான் ரேகை இருக்காது என்கிறார்கள்.

அரசு அமைத்த மருத்துவர் குழு ஐந்து பேர்.   அவர்கள் பார்த்தார்களா இல்லையா?   பார்க்க வில்லை என்று இப்போது அவர்கள் சொன்னால் அவர்களுக்கு என்ன தண்டணை?

விசாரணை கமிஷன் எல்லா கேள்விகளுக்கும் விடை தந்து விடும் என்று எதிர் பார்க்க முடியாது.

ஆனால் குற்றம் நடந்திருக்கிறதா இல்லையா என்று சொல்ல முடியும்.

யார் யார் குற்றவாளிகள் என்று அடையாளம் காட்ட முடியும்.

அதன் பிறகு குற்ற விசாரணை நடந்து குற்றவாளிகள் மீது குற்ற பத்திரிகை தாக்கல்  செய்து விசாரணை  நடந்து அதன் பிறகுதான் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள்.

அதற்காக நாம் கமிஷனின் அறிக்கைகாக காத்திருக்க வேண்டியதுதான்.

அதற்குள் அப்போல்லோவின் தலைவர் பிரதாப் ரெட்டி இன்று அளித்திருக்கும் பேட்டி அதிர்ச்சி தரக் கூடியது.

”   ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை மருத்துவ மனைக்கு கொண்டு வந்தார்கள். அன்று வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு காய்ச்சல் என்று குறிப்பிட்டிருந்தோம் . மக்கள் அச்சப் படக்கூடாது என்பதற்காகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டும் உண்மை நிலையை தெரிவிக்க வில்லை ”   இதுதான் ரெட்டியின் பேட்டி.

அப்படி செய்வதற்கு எந்த மருத்துவ மனை நிர்வாகிக்காவது உரிமை இருக்கிறதா?

சட்ட ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை.    அரசிடம் உண்மையை கூறி அவர்கள் சொல்லியபடி உண்மையை மறைத்தாரா?     அன்றைய முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.

அவரிடம் உண்மையை சொன்னாரா இல்லையா?

இவரும் சசிகலா சொல்லித்தான் அப்படி  நடந்து  கொண்டோம் என்று சொல்லப் போகிறாரா?

இன்னும் எத்தனை மருத்துவர்கள் தான் அப்படி சொல்லப் போகிறார்கள்.?

வெளிநாட்டு மருத்துவர்களும் ஏய்ம்ஸ் மருத்துவர்களும் என்ன சொல்லப் போகிறார்கள்?

மருத்துவர்கள் பொய் சொன்னால் தண்டனை  இல்லையா?

உண்மை தெரிந்தே ஆக வேண்டும்.

5 மாதங்களில் ரூ 8000 கோடி நன்கொடை பா ஜ க வுக்கு வந்தது எப்படி ? அன்னா ஹசாரே கேள்வி?

பா ஜ க வுக்கு கடந்த ஐந்து மாதங்களில் 8000 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்திருப்பதாக போபர்ஸ் பத்திரிகை ஆய்வு செய்து தகவல் வெளியிட்டதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஊழலில் இந்தியா முதல்  இடத்தில் இருக்கிறது.   மோடி அரசில் லஞ்சம் ஊழல் அதிகரித்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

லஞ்ச ஊழல்  அற்ற அரசை நடத்திக்  கொண்டு இருப்பதாக மோடி அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டு  இருக்கும் நிலையில் இப்படி  ஒரு குற்றச்சாட்டை பொறுப்பான தலைவர் ஒருவர் கூறுகிறார்.

ஒன்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது உண்மையை விளக்க வேண்டும்.

கார்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே மோடி அரசு  செயல் படுகிறது என்பதுதான் எல்லாருடைய குற்றச்சாட்டும்.

இந்த நிலையில் அவர்களிடம் நன்கொடை வாங்கி தேர்தல் செலவு செய்து வெற்றி பெறுவதற்கு திறமை தேவையில்லை.

விளக்கம் தர வேண்டும் பா ஜ க .

ஓட்டுக்கு ரூ 6000-வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்- ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கேலிக்கூத்தாகும் ஜனநாயகம்??!!

என்ன முயன்றும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை.

ஓட்டுக்கு ரூ 6000 இலக்கு வைத்து  இ பி எஸ் -ஒபீஎஸ் அணி ஆர் கே நகரில் காவல் துறையை வைத்தே விநியோகம் செய்து வருகிறது.

எத்தனை பார்வையாளர்கள் இருந்தென்ன?

இப்படி ஒரு தேர்தல் தேவைதானா?

என்ன செய்தால் இந்த அக்கிரமங்களை தடுக்க முடியும்?

காங்கிரஸ் , இரண்டு கம்யுனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம தி மு க , முஸ்லிம் லீக் , என்று எல்லா அரசியல் கட்சிகள் ஆதரவுடன் போட்டியிடும் திமுக சாதாரணமாக வெற்றி பெற வேண்டிய தேர்தல் இது.

45000    போலி வாக்காளர்களை நீக்கி இரண்டாயிரம் இரட்டை பதிவுகளை நீக்கி திமுக பெரிய தில்லுமுல்லு நடக்க இருந்ததை தடுத்து விட்டது என்று இருந்த நிலையில் யார் என்ன செய்தால் என்ன எங்களிடம் இருக்கும் பணத்தால் எல்லாவற்றையும் முறியடிப்போம் என்று மார் தட்டுகிறார்கள் ஆளும் கட்சியினர்.

தினகரன் ஆட்களை காவல் நிலையத்தில் வைத்து பிரச்சாரம் செய்ய விடாமல் செய்கிறார்கள்.

பா ஜ க போட்டியிடுவதைப்போல் நன்றாக நடிக்கிறது.

மீண்டும்  தேர்தலை தள்ளி வைத்தால் கூட நல்லது என்ற நிலையை ஆளும் கட்சி உருவாக்கி விட்டது.

நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தல் நடக்காது என்பது நிதர்சனமாக தெரிந்து  விட்டது.

இன்னும் மூன்று நாளில் எல்லாவற்றையும் தேர்தல் ஆணையம் சரி செய்து விடும் என்று எதிர்பார்ப்பது  அறிவீனம்.

சகித்துக் கொண்டு அடுத்த தீர்வை நோக்கி நகர்வது தான் யதார்த்தம்.

காந்தி ஒரு முறை சொன்னாராம்.     கற்பழிப்பை தடுக்க முடியவில்லை என்றால் விட்டு விடுங்கள் என்று.  உயிரையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று பொருள்.

இப்போது ஆர் கே நகரில் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.

விஷால், தீபா மனுக்கள் தள்ளுபடி தேர்தலை தள்ளி வைக்க சதியா?

தேர்தல் கமிஷன் நடிகர் விஷால் , ஜெ .தீபா ஆகிய இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.

படிவங்கள் முறையாக பூர்த்தி செய்ய வில்லை என்பது தீபாவின் தவறு என சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.   கடந்த தேர்தலில் முறையாக மனு செய்த தீபா இந்த தேர்தலில் ஏன் அப்படி செய்யவில்லை என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.  படிவம் சரியாக பூர்த்தி செய்யப் பட்டதா என்பதை தேர்தல் வழக்கில்தான் முடிவு செய்ய வேண்டுமா என்ன?

விஷால் மனுவில் முன் மொழிந்தவர்களில் மூன்று பேர் தாங்கள் அந்த மனுவை முன் மொழியவில்லை என்று முன்னுக்கு பின் முரணாக தேர்தல் அதிகாரி முன் சாட்சியம் அளிக்கிறார்கள்.    அவர்களை மதுசூதனன் ஆதரவாளர்கள் மிரட்டி வாக்குமூலம்  வாங்கியதாக ஒரு ஆடியோ பதிவை விஷால் தேர்தல் அதிகாரியிடம் கொடுக்க அவர் அதை முதலில் ஒப்புக்கொண்டு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கிறார்.    அதே அதிகாரி இரவு பத்தேகால் மணிக்கு விஷாலுக்கு தெரியாமல் அவர் முன்பு ஆஜராகி தாங்கள் அந்த மனுவை முன்  மொழியவில்லை என்று சொல்கிறார்கள்.   அதை ஏற்றுக்  கொண்டு விஷாலின் மனுவை அதிகாரி நிராகரிக்கிறார்.

தெலுங்கு பேசம் மக்களின் வாக்குகளை விஷால் பிரித்தால் தங்களுக்கு பாதகம் என்று அ தி மு க வின்  மதுசூதனன் ஆதரவாளர்கள் திட்டமிட்டு விஷாலின் மனுவை தள்ளுபடி செய்ய வைத்து விட்டார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.

இதற்கெல்லாம் தேர்தல் அதிகாரி துணை போனாரா என்பதெல்லாம் விசாரணையில்தான் தெரிய  வரும்.

நடக்கிற சம்பவங்களை பார்க்கிற யாருக்கும் தேர்தலை நடத்த விட மாட்டார்களோ என்ற சந்தேகம் வருவது இயல்பு.

சென்ற முறை யும் கூட சில நாட்களுக்கு முன்புதானே தேர்தலை ரத்து செய்தார்கள்.

அப்போது தினகரன் பணம் கொடுத்து வெற்றி பெற்று விடுவார் என்ற பயம் இருந்தது.    அதற்கு ஆதாரமும் இருந்தது.

இப்போதும் அது நடவாது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.

ஜனநாயகம் கேலிக்கூத்து ஆகிக் கொண்டிருக்கிறது.

2G வழக்கு தீர்ப்பும் ஆர் கே நகர் இடைத்தேர்தலும் ஒரே நாளில்??!!

2G  வழக்கிலும் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கிலும் டிசெம்பர் மாதம்  21 ம் தேதி காலை  10.30  மணிக்கு சொல்லப்படும் என்று சி பி ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ பி சைனி அறிவித்திருக்கிறார் .        அதாவது ஆ ராசா மற்றும் கனிமொழியின் அரசியல் வாழ்வு அந்த தீர்ப்பில் அடங்கி இருக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்ட தேதி ஏப்ரல்   26 ம் தேதி.   அதாவது ஏறத்தாழ ஏழு மாதங்களுக்கு பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப் படுகிறது.

தீர்ப்பு தேதி அறிவிக்கப் படும் முன்பே   ஆர் கே நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு விட்டது.

தீர்ப்பு யாரையாவது பாதிக்கும் என்றால் அது தி மு க வைத்தான்.

ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி நட்டம் என்று பிரசாரம் செய்து குற்றச்சாட்டு புனையப் பட்டது முப்பதாயிரம் கோடி இழப்பு என்று.

விடுதலை என்றால் அது நிச்சயம் தி மு க வுக்கு பெருத்த ஆறுதலை தரும்.   அதே நேரம் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக தீர்ப்பு வந்தால் அது ஓரளவுக்கு  பாதிப்பை  ஏற்படுத்தலாம் .

கனிமொழி விடுதலை செய்யப் பட்டு ராசா மட்டும் தண்டிக்கப் பட்டால் கூட பாதிப்பு கட்சிக்கு இருக்காது என்றே அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.

அரசியல் நிகழ்வுகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் ஒரு நீதிபதி தீர்ப்பு தேதியை நிர்ணயிக்க வேண்டுமென்று கட்டாயம் இல்லை.

ஆனாலும் அப்படி ஒரு கேள்வி எழுவதை தடுக்க முடியாது!!!