Home Blog Page 82

வைகோ கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாக லாசரஸ் சொன்னது உண்மையா ? வைகோ மறுப்பது உண்மையா?

கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் நாலுமாவடி ஜெபக்கூட்டத்தில் பேசியதாக ஒரு விடியோ உலவுகிறது.

அதில் அவர் ‘ வைகோ  மனைவி பிள்ளைங்க எல்லாம் ரட்சிக்கப்பட்டு அசெம்பிளி ஆப் சர்ச்சில் சேர்ந்து ஞானஸ்நானம் எடுத்துக்கிட்டாங்க. சர்ச்சுக்கு ஒழுங்கா போறாங்க. வைகோ அரசியலில் இருப்பதால் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால் அவர் என்னிடம் பிரதர் நான் காலையிலும் இரவிலும் பைபிள் வாசிப்பேன் என்றார் ‘ என்று                            பேசியிருப்பதாக தெரிகிறது. .

இரண்டு நாள் கழித்து வைகோ ‘ நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறவில்லை. இந்து மதத்திலேயே இருக்கிறேன்.” என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.  ‘ தன் மகள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தது உண்மைதான்.   ஆனால் என் குடும்பத்தவர் பற்றி லாசரஸ் கூறியுள்ளது உண்மைக்கு மாறானது”  அன்று மறுத்துள்ளார்.

சமீப காலமாக வைகோ மனைவி  நெற்றியில் பொட்டு இல்லை என்பதை வைத்து அவர் கட்சிக்காரர்களே அது தெரிந்த விஷயம்தானே என்று சொல்வதாக ரிப்போர்டர் பத்திரிகை சொல்கிறது.

லாசரஸ் தனிப்பட்ட கூட்டத்தில் பேசவில்லை. மக்கள் கூடி இருக்கும் ஜெபக் கூட்டத்தில் பேசி இருக்கிறார்..     அவர் அப்படி பொய் பேச  அவசியம் என்ன?

மறுத்த வைகோ தான் நாத்திகன் என்று சொல்லி இருக்கலாம்.   இந்து மதத்தில் நீடிக்கிறேன் என்கிறார்.    அதாவது பார்ப்பன மதத்தில் நீடிக்கிறேன் என்பது பெரியார் கொள்கையை ஏற்றவர் பேசும் பேச்சா?

மதம் ஒருவரது தனிப்பட்ட உரிமை.    வைகோவுக்கும் தாராளமாக அந்த உரிமை உண்டு.    ஆனால் மக்களுக்கு அரசியலில் இருக்கும் ஒருவர் உண்மையை சொல்ல வேண்டும்.

நடிகர்   விஜயை ஜோசப் விஜய் என்று பா ஜ கவின் எச் ராஜா குறிப்பிட்டபோது தன் லெட்டர் பேடிலேயே ஜோசப் விஜய் என்று விஜய் விளக்க  அறிக்கை விடவில்லையா?

எல்லா மதங்களிலும் சொல்லப் படும் அறிவுரைகளை மதிப்பது என்பது வேறு.    தான் அந்த மதத்தை ஏற்றுக் கொண்டேன் என்பது வேறு.     இந்த வேறுபாடு வைகோவுக்கு    தெரியாதா?

கிறிஸ்தவ சர்ச்சை வைகோவுக்கு நல்ல பெயரைத் தரவில்லை.

தொண்டமான் பெயர் நீக்கம் சிங்களர்களிடம் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதன் அடையாளம்??!!

இலங்கையில் உள்ள தொண்டைமான் தொழிற்பயிற்சி மையம் , தொண்டமான் கலாச்சார மையம்  , தொண்டைமான் மைதானம் போன்ற அரசு நிறுவனங்களின் பெயர்களில் இருந்து சவுமிய மூர்த்தி தொண்டைமான் பெயரை சிங்கள அரசு நீக்கியிருக்கிறது.

தமிழக அரசியல் தலைவர்கள் ஸ்டாலின் வைகோ, திருமாவளவன்  அன்புமணி  போன்ற பலரும் கண்டித்திருக்கிறார்கள்.

சிலோன் இந்திய காங்கிரஸ் கட்சியை துவக்கி மலையக தமிழர்களின் உரிமைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சவுமிய மூர்த்தி தொண்டமானின் பங்களிப்புக்காக அவரது பெயரை சூட்டிய சிங்கள அரசு இப்போது மனம் மாறி அவரது பெயரை நீக்க வேண்டிய அவசியம் என்ன.?    அதுவும் சிறிசேன தமிழர்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்தவர்.

ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா சிங்கள அரசியல்வாதிகளும் தமிழர்களை ஒடுக்குவதில் ஒன்றுபட்டு விடுவார்கள்.

இதைத்தான் தான் ஏன் ஆயுத போராளியாக மாறினேன் என்பதற்கு காரணமாக மேதகு பிரபாகரன் கூறி வந்தார்.

எல்லா ஒப்பந்தங்களையும் காலடியில் போட்டு மிதித்தவர்கள் ஆயிற்றே?

இன்றைக்கு மீண்டும் ஜனநாயக வழியில்  போராடி தங்கள் உரிமைகளை மீட்டு எடுப்பது என்ற முடிவிற்கு எல்லா தமிழ் அமைப்புகளும் வந்து விட்டன.

ஆனால் எந்த சூழ்நிலையிலும் நாங்கள் மாற மாட்டோம் என்று சிங்களர்கள் அவ்வப்போது காட்டி கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் இந்திய அரசு தலையிட்டு சிங்கள அரசின் இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று  கோரிக்கை விடும் தமிழக தலைவர்கள் இன்னமும் இந்திய அரசை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

நமக்கு வேறு வழி இல்லை என்பதும் உண்மைதானே?

என்று உணரும் அகில உலகம் என்று காத்திருக்க வேண்டியதுதான்!!!

தினகரன் – சசிகலா உறவினர்கள் மீது ரெய்டு அரசியல் நடத்த வெட்கப் படாத மோடி அரசு?

பா ஜ க போட்டது தப்புக் கணக்காகி விட்டது.

சசிகலா சிறையில்.    இரட்டை இலை முடக்கம்.  ஓ பி எஸ் -இ பி எஸ் இணைப்பு.  ஐ டி நடவடிக்கைகளில் சம்பத்தப் பட்ட வர்கள் தலைமையில் அதிமுக பா ஜ க வின் கைத்தடி அமைப்பாக மாறி விடும்.

இந்தக் கணக்கை தினகரன் பொய்யாக்கி விடுவார் என பா ஜ க எதிர்பார்க்க வில்லை.

நீதிமன்றம் தேர்தல் கமிஷன் என்று வழக்குகளை நீட்டித்து   பா ஜ க வின் அரசியல் கனவுகளை   தகர்த்து விட்டார்.

அ தி மு க வில் தினகரன் செல்வாக்கு அதிகரித்து வருவதை யாரும் எதிர்பார்க்கவில்லை. .

1800  அதிகாரிகள்    187    சசிகலா தினகரன் உறவினர்களின் கட்சிக்காரர்களின் வீடுகள் அலுவலகங்கள்   300  பாஸ்ட் டிராக் நிறுவன கார்கள் என இந்தியாவில் இதுவரை வேறு எங்குமே நடந்திராத வகையில் வருமான வரித்துறையின் சோதனைகள் நடந்து வருகின்றன.    பாஸ்ட் டிராக் நிறுவனம் ஓ பி எஸ் ஆதரவாளர் ரெட்சன் அம்பிகாபதிக்கு சொந்தமானதாம்.

இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை .   சாதாரண சோதனை அல்ல என  பா ஜ க   தவிர்த்த எல்லா அரசியல் கட்சிகளும் கருத்து சொல்லி இருக்கின்றன.

எதைப்பற்றியும்  வெட்கப் பட பா ஜ க தயாராக  இல்லை.

கரூர் அன்புநாதன் வீட்டில்    கைப்பற்றிய   புத்தம் புதிய இரண்டாயிரம் நோட்டுகள் முப்பதுகோடி எந்த வங்கியில் இருந்து அனுப்பப் பட்டது என்பது தெரியவில்லை  என்று ரிசர்வ் வங்கி சொன்னதே !!

சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்ற பட்ட கோடிகள் தங்கம் எல்லாம் என்ன வாயிற்று?

முன்னாள்  தலைமை செயலாளர் ராம் மோகன ராவின் வீட்டில் கைப்பற்ற பட்ட கோடிகள் தங்கம் என்ன ஆயிற்று?

அமைச்சர் விஜய பாஸ்கர் ஆர் கே நகர் தேர்தலில்  89  கோடி ரூபாயை இன்றைய முதல்வர் உள்பட அமைச்சர்கள் பலரிடம் கொடுத்து அவர்கள் மீது  வழக்கு பதிய தேர்தல் கமிஷனும் கோர்ட்டும் உத்தரவிட்டும் ஏன் நடவடிக்கை  இல்லை ?

அந்த ரெய்டுகளின் மீது என்ன நடவடிக்கை என்பதை வருமானத்துறை மக்களுக்கு அறிவிக்க வேண்டுமா இல்லையா?

இந்தக் கேள்விகளை எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் கேட்டு விட்டார்கள்.    பதில் சொல்லத்தான்  வருமான வரித்துறை  தயாராக இல்லை.

இரட்டை இலை சின்னம்  உள்பட எல்லாவற்றையும் மோடி பார்த்துக் கொள்வார் என்று வெட்கமில்லாமல் ராஜேந்திர பாலாஜி பேசுகிறார்.

இந்தப் பின்னணியில்தான் சசிகலா உறவினர்கள் மீதான வருமானத் துறை சோதனை நடவடிக்கையை ஆராய வேண்டும்.

சசிகலாவையும் தினகரனையும் அரசியலை விட்டு விரட்ட முடியாது எனத் தெரிந்து கொண்டு மிரட்டல் அரசியலை கையில் எடுத்திருக்கிறது மோடி அரசு என்ற உண்மை எல்லா தரப்பு மக்களையும் சென்று அடைந்து விட்டது.

சோதனையில் என்ன கிடைத்தது என்ன நடவடிக்கை என்பதை மக்களுக்கு வெளிப்படையாக வருமான வரித்துறை தெரிவிக்க வேண்டும்.    சம்பந்தப் பட்டவர்கள் தங்கள் உரிமைகளை நீதிமன்றங்களில் நிலைநாட்டிக்  கொள்ளட்டும்.

1500 கோடி சொத்துக்கள் பற்றி ஆவணங்கள் சிக்கின. தங்கம் கிலோ கணக்கில் சிக்கின. என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. அவை உண்மையா என்பதை அந்த துறைதான் விளக்க வேண்டும்.

தப்பு செய்திருந்தாலுமே அவர்களை தியாகிகள் ஆக்கியே தீருவது என்று பா ஜ க அரசு முடிவு கட்டி விட்டது போல் தெரிகிறது.

ஆட்களுக்கு தகுந்தாற்போல் நீதி மாறும் என்ற நிலை இருப்பது மிகவும் ஆபத்தானது.

ஆளும் கட்சியின் கைப்பாவையாக வருமான வரித்துரையும் இதர நிறுவனங்களும் இயங்குகின்றன என்ற இழிநிலை என்று மாறும்?

பா ஜ க வின் மீதான ஆத்திரம் மக்களுக்கு அதிகரிக்கும் என்பது வேறு.

பொதுவாகவே மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு,

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் அடைந்திருக்கும் எரிச்சல்

ஜி எஸ் டி நடவடிக்கையால் உருவான பொருளாதார வீழ்ச்சி, சாமானியர்களின் இழப்புகள் ,               இவைகளுடன் சேர்ந்து அரசியலிலும் பா ஜ க மேல்தட்டு வர்க்கத்தின் பிரதிநிதி ,

நான்காம் தர அரசியல் செய்யும் மலிவான அரசியல் கட்சி

என்ற பெயரையும் சம்பாதிப்பது மட்டும்தான்

இந்த ரெய்டு அரசியலில் பா ஜ க வுக்கு மிச்சமாக இருக்கும்.

கட்சி ஆரம்பிக்க ரசிகர்களிடம் 30 கோடி கேட்கும் கமல்ஹாசன் ??!!

கமல்ஹாசன் அரசியலில் இறங்கி கட்சி தொடங்குவது முடிவாகிவிட்ட ஒன்று.

ஜெயலலிதா இடத்தை நிரப்ப தகுந்த தகுதியான நபர் இவர்தான் என்று தீர்மானித்து முடிவெடுத்து அவர்கள் காரியத்தில் இறங்கி விட்டார்கள்.

37  வருடம் ஒதுங்கி இருந்து விட்டேன். இனி இருக்க முடியாது என்கிறார்.  ஏன் ஒதுங்கி இருந்தார் என்பதற்காக காரணத்தை மட்டும் சொல்ல வில்லை. சொல்ல மாட்டார்.     ஜெயலலிதா இருக்கும்போது நான்  எப்படி இறங்குவது என்பதை வெளிப்படையாக் சொல்ல முடியாது அல்லவா?

இவர்  ஏதோ இந்து மதத்தை இழிவு படுத்தி விட்டதாக போலியாக குற்றச்சாட்டு எழுப்பி விளம்பரம் தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேலையை தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று திடீர் பல்டி அடித்து நான் ஒன்றும் இந்து மதத்துக்கு எதிரானவன் அல்ல.    என் குடும்பத்தவர் சாமி கும்பிடுகிறார்கள்.    கோவிலை இடிக்க வேண்டும் என்று நான் சொல்ல வில்லை. நான் அங்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும்   என்றெல்லாம் பேசி விட்டு என்னை பிராமணர்களும் ஆதரிக்க வேண்டும் பிராமணர் அல்லாதவர்களும் ஆதரிக்க வேண்டும் என்றும் பேசுகிறார்.

நான் நாத்திகன் அல்ல என்றும் இன்று சொல்லி விட்டார்.

இப்படி எல்லா வகையிலும் குழப்பிக் கொண்டு யாரையும் பகைத்துக் கொள்ளாமல் எல்லாருடைய ஆதரவையும் பெற்று விட வேண்டும் என்று மகா பல்டி அடித்துக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்.

கடைசி குண்டுதான் முப்பது கோடி.

இன்னும் கட்சிக்கு கொள்கையை சொல்ல வில்லை.    பெயர் வைக்க வில்லை.   உறுப்பினர் சேர்க்க வில்லை. அமைப்பை உருவாக்கவில்லை.  அதற்குள் பண முதலீட்டு  தேவையை முன்வைக்கிறார்.

கட்சி  என்பதை ஏதோ சினிமா தயாரிப்பு என்பதைப்போல்  கதை ,வசனம், இசை, காமிரா, நடிகர்கள், இயக்கம் என்றெல்லாம் பட்ஜெட் போட்டு தயாரிப்பதைப்போல் கட்சிக்கும் என்னென்ன வெல்லாம் தேவை என்பதை கணக்கிட்டு முப்பது கோடி தேவை என்று கணக்கிட்டு அதை ரசிகர்களிடம் முதலீடாக பெற்று கட்சி தொடங்க இருக்கிறார் கமல்ஹாசன்.

சினிமா தயாரிப்பு எப்படி கலைத்தொண்டு என்பதோடு காசு பார்க்கும் தொழிலோ அதைப்போல கட்சியும் முதல் போட்டு லாபம் பார்க்கும் தொழிலாக கமல்ஹாசன் பார்க்கிறார் என்றுதானே பொருள்.

கருப்பு  பணத்தை வெள்ளையாக்கும் காரியத்துக்காக பலர்  லெட்டர் பேடு கட்சி நடத்துகிறார்கள்.    அவர்களில் ஒருவராக நிச்சயம் கமல்ஹாசன் இருக்க மாட்டார்.    ஏன் என்றால் வருவாயில் வரிபோக வெள்ளையாக பணம் வாங்குபவர் அவர் என்பது சொல்லக் கேள்வி.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.    கட்சி ஆரம்பிக்க  பணம் தேவைதான்.   ஆனால்  பணம் மட்டுமே போதாது.

பிரபலமானவர் ,பணம்  உள்ளவர் இந்த இரண்டுமே கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க போதும் என்பது ஒருபோதும் நடவாது.

நீ யார் என்பதை சொல்.    உனது கொள்கை என்ன சொல்.    மற்றவர்களிடம் இருந்து நீ எவ்விதத்தில் மாறுபடுகிறாய் என்பதை சொல்.    எல்லாவற்றுக்கும் மேலாக தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றுவேன் என்று சொல்.

வாழிய செந்தமிழ்

வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித்திரு நாடு

என்ற பாரதியின் வரிகளுக்கு உருவம் கொடுக்க பாடுபடுவேன் என்று சொல்.

தமிழுக்கும் தமிழருக்கும் விசுவாசமாக இல்லாத எவரும் இங்கு ஆளும் வாய்ப்பை இனி பெறவே முடியாது.

பத்து நல்ல காரியங்களை நடத்தி விட்டு நான் நல்லவன் என்று பறை  சாற்ற இந்த முப்பது கோடி முதலீடு போதும் என்று தப்பு  கணக்கு போட வேண்டாம்.

முகமூடி போட்டு க் கொண்டு மக்களை ஏமாற்றிய காலம் மலையேறி விட்டது என்பதை யாராவது கமல்ஹாசனுக்கு சொல்லுங்களேன். ??!!

டிராக்டர் கடனுக்கு ஜப்தி – வங்கி ஏஜெண்டுகள் தாக்கியதில் விவசாயி மரணம்?

திருவண்ணாமலை விவசாயி ஞானசேகரன்.    டிராக்டர் வாங்க ஐந்து லட்ச ரூபாய் கடன் பெற்று அதில் ஒன்றரை லட்சம் திருப்பி கட்டிவிட்டு பாக்கி வைத்திருக்கிறார்.

அதை வசூலிக்க வங்கி மேலாளர்  தனியார் ஏஜென்சியை நியமித்து ஆட்களை அனுப்பி உள்ளார்.

இரண்டு மாதங்களில் அறுவடை முடிந்ததும் செலுத்துவதாக கூறிய விவசாயியின் உறுதி மொழியை ஏற்காமல் ஜப்தி செய்ய முயன்றதால் அதை ஞானசேகரன் தடுத்திருக்கிறார்.    அவரை  ஏஜெண்டுகள் தாக்கியதால் மயக்க  மடைந்த ஞானசேகரனை மருத்துவ மனையில் சேர்த்தும் பயனில்லாமல் மரணித்திருக்கிறார் அவர்.

கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டிய சம்பவம் இது.

எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள் .

எவ்வளவு இழப்பீடு தந்தாலும் அந்த குடும்பத்தின் சோகத்தை ஈடு செய்ய முடியுமா?

அத்து மீறிய ஏஜெண்டுகளுக்கும் அவர்களை ஏவிய மேலாளருக்கும் என்ன தண்டணை?

பினாமி அரசு என்ன செய்ய போகிறது?

மோடி கருணாநிதியை சந்தித்தது பண்பாடா அரசியலா?

தினத்தந்தி பவள விழாவிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று கலைஞரை சந்திக்க விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் கலைஞர் வீட்டிற்கே சென்று நலம் விசாரித்து திரும்பி இருக்கிறார்.

மோடி கலைஞரை சந்தித்தபோது மற்றவர்களுக்கு இருந்த மகிழ்ச்சி கலைஞருக்கு இருந்ததாக தெரியவில்லை.    ஏனென்றால் அவர் மோடி சென்ற பின் வீட்டிற்கு வெளியில் வந்து தொண்டர்களை சந்தித்து சிரிப்புடன் கைகளை அசைத்து வெளிப்படுத்திய மகிழ்ச்சி மோடியை சந்தித்தபோது இல்லையே ஏன்?

எட்டாம் தேதி மோடி   அரசின் செல்லாத நோட்டு  பிரச்னையில் கருப்பு நாளாக திமுக அனுசரிக்கிறது.     அதுவும் அகில இந்திய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து.        இந்த நேரத்தில் பிரதமர் கலைஞரை சந்தித்தால் மட்டும் அரசியல் மாற்றம் வந்துவிடும் என்று சிலர் ஆரூடம் சொல்வது நகைப்புக் குரியது.

அதிமுக பொம்மை அரசை வழி நடத்தி செல்லும்  பா ஜ க அதனுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் காலூன்ற திட்டமிடும்  வேளையில் மடை மாற்றம் செய்து அணி மாற்றம் கொண்டு வருவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது.

தன்னை ஒரு பண்பாடான பிரதமராக காட்டிக் கொள்ள விரும்பி இருக்கிறார் மோடி என்பதே உண்மை.     அது பாராட்டத் தக்க பண்புதான் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஏழாம் தேதி  2 G  வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப் பட இருக்கிறது.        அதில் என்ன வருகிறதோ அது மாற்றங்களை ஏற்படுத்தும் என்றால் அதை ஒப்புக் கொள்ளலாம்.

முன்பு இதேபோல்  தீர்ப்புக்கு முன் அருண் ஜைட்லி ஜெயலலிதாவை வந்து பார்த்து சென்ற போது  அதன் பின் வந்த தீர்ப்பு அவருக்கு எதிராகத்தான் இருந்தது.

ஏன் ஜெயலலிதாவை வீடு தேடி சென்று சந்திக்க வில்லையா மோடி?

வெறும் சந்திப்பின் மூலமே அரசியல் மாற்றங்கள் வரும் என்பது  வெறும் ஊகமே.

பண்பாடு வளரட்டும் !   அரசியல் தொடரட்டும்!!!

 

கமலை தூக்கில் போடு அல்லது சுட்டுக்கொல் ! பேசிய இந்து மகாசபை தலைவர் மீது என்ன நடவடிக்கை? அங்கேதான் இருக்கிறது சூட்சுமம் ?

இந்து தீவிரவாதம் இல்லை என இனியும் கூற முடியாது என்று கமல்ஹாசன் ஒரு கருத்து கூறியிருந்தார்.

ஆனந்த விகடன் சமீப காலமாக கமல் ஹாசனின் கருத்துக்களை மிகப் பெரிய அளவில் விளம்பரப் படுத்தி வருகிறது.    அவரை ஒரு சமுதாய விஞ்ஞானி போல் காட்ட மிகவும் மெனக்கெடுகிறார்கள் .

இதற்காக உ பி யில் வாரனாசி   காவல்  நிலையத்தில் மூன்று பிரிவுகளில் புகார் பதிவாகியுள்ளது.   தமிழ் நாட்டிலும் சில இடங்களில் புகார்கள் தரப் பட்டுள்ளன.

அதற்கு இந்து மகா சபை தலைவர் அசோக் சர்மா ‘ கமல்ஹாசன் போன்றவர்களை கையாளுவதற்கு வேறு வழியே இல்லை. அவர்களை தூக்கில் போட வேண்டும் அல்லது சுட்டுக் கொல்ல வேண்டும் ‘ என்று காட்டமாக கருத்து தெரிவித்தார்.

அதற்கு கமல் சிறையில் இடம் இல்லையென்றால் சுட்டுக்கொல்ல வேண்டியதுதானே என்று பதிலும் கொடுத்தார்.

அதாவது கமல் காசனை  தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவகப் படுத்தும் வேலைகள் மிக நன்றாக நடக்கின்றன.

நாடகம் மிக நன்றாக நடக்கிறது.  மற்றவர்கள் இப்படி பேசி இருந்தால் காவல் துறை சும்மா இருக்குமா?

சர்மா பேசியது தவறு  என்றும் மகாத்மா காந்தி, கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டி காட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் கூட கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நாம் இதில் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி அவர்கள் எது வேண்டுமானாலும் பேசுவார்கள்.  ஆனால் எந்த நடவடிக்கையும் இருக்காது என்றால் அவர்கள் பேசுவது கமலுக்கு முக்கியத்துவத்தை உயர்த்த முனைகிறார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியும் என்பதுதான்.

அதைப்போலத்தான் சுப்பிரமணிய சாமி கமலை பொறுக்கி என்பதும் ஆமாம் நான் நல்லவற்றை பொறுக்குகிறேன் என்று இவர் விளக்கம் சொல்வதும்.

அசோக் சர்மா மீது வழக்கு பதியட்டும் . நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளட்டும். அப்போது பார்க்கலாம் இவர்கள் செய்வது  பேசுவது எல்லாம் உண்மையா அல்லது நாடகமா என்பதை??

கார்ட்டூன் போட்டால் கைதா? எல்லை மீறுகிறது எடப்பாடி அரசு?

நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் கணவன் மனைவி இரண்டு குழந்தைகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே உலுக்கியது.

நெஞ்சம் பொறுக்காமல் கார்ட்டூனிஸ்ட்  பாலா ஒரு கேலிச்சித்திரம்  கருத்துப்படம் என்கிற கார்ட்டூன் வரைந்திருக்கிறார்.

அதில் மாவட்ட ஆட்சியர் , காவல் துறை கண்காணிப்பாளர் முதல்வர்  மூவரையும் மாவட்ட ஆட்சியர் புகாரின்  பேரில் கைது செய்திருக்கிறார்கள்.

நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்திருக்கிறது.

மூவரும் நிர்வாணமாக இருந்து கொண்டு பணத்தால் தங்கள் மறைவிடத்தை மூடிக்கொள்கிறது போலவும் எதிரில் ஒரு குழந்தை தீயில் மாள்வது போலவும் அந்த படம் இருக்கிறதாம்.

ஆமாம் இந்த கார்ட்டூனை ஆத்திரத்தின் உச்சத்தில்தான் வரைந்தேன் என்றும் அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.      ஒரு கொடுமையை காண சகிக்காமல் சமுதாய உணர்வுடைய சாமானிய மனிதனின் உணர்வுகளைத்தான் அந்த சித்திரம் பிரதி பலிக்கிறது.

இதில் எவரையும் தனிப்பட்ட முறையில் இழிவு படுத்தும் எண்ணம் எங்கே எழுகிறது?

ஆட்சியாளர்களுக்கும் இதில் பங்கில்லையா?      பலமுறை புகார் கொடுத்தும் தக்க நடவடிக்கை இல்லாததால் தான் இந்த கொடுமை நிகழ்ந்தது என்பது உண்மைதானே?

துயரத்தில் பங்கேற்று  இனி இவ்வாறு நடவாமல் பார்த்துக் கொள்வோம் என்று உறுதி அளித்திருந்தால் அரசின் கௌரவம் என்ன குறைந்தா விடும்?

மாறாக கார்ட்டூன் போட்டவரை கைது செய்து தண்டிக்க முயல்வது என்ன நியாயம்?

எல்லாரும் கண்டித்திருக்கிறார்கள்.     அரசு உடனடியாக வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டு வழக்கை முடித்துக் கொள்ள வேண்டும்.

உணர்வுள்ள அரசாக இருந்தால் அதைத்தான் செய்யும்.   இவர்களுக்கு  அது இருக்கிறதா?

வெள்ளத்தில் மக்களை மூழ்கடித்த அரசு ??!! தண்ணீர் வந்தபின் எப்படி தூர் வாருவது?

2015 ம் ஆண்டு அனுபவித்த வேதனைகளை சென்னை வாசிகள் மீண்டும் அனுபவித்து வருகிறார்கள்.

பட்ட பின்பும் புத்தி வரவில்லையே?

வட கிழக்கு பருவ மழை வரும் என்று தெரியும்.    வந்தால் வடிகால்கள் சரியான முறையில் பராமரிக்கப் படாமல் இருந்தால் தன்ணீர் ஊருக்குள் பாயும் என்றும் தெரியும்.

இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்டு வரை தூர் வாரும் பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப் பட்டிருந்தால் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் கடலுக்குள் சென்று இருக்கும்.

அப்படி ஏதாவது பணிகள் நடந்ததாக தமிழக அரசால் சொல்ல முடியுமா?

இரண்டு நாள் மழையில் தெருக்கள் ஆறுகள் ஆகி விட்டன.     கீழ் பாலங்கள் எல்லாம் குளங்கள் ஆகி விட்டன.

வடசென்னை , தாம்பரம் முடிச்சூர் பகுதிகள் சென்னையின் முக்கிய பகுதிகள் எல்லாம் மழை நீரில் தத்தளித்து நிற்கிறது.

இரண்டு குழந்தைகள் மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கிறார்கள்.

ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை விட்டு விட்டு குடி பெயர்ந்திருக்கிறார்கள்.

இன்னும் மூன்று நாள் மழை நீடிக்கும் என்றால் நிலைமை கட்டுக்குள் இருக்காது.

இதில் புயல் வரும் என்று வேறு எச்சரிக்கை . !        அடையாறு, கூவம் ஆறு  பக்கிங்காம் கால்வாய் மூன்றும் சரியான நேரத்தில் தூர் வாரி இருந்தால் பெருமளவு சேதத்தை தவிர்த்து இருக்கலாம்.

தூர் வார    நானூறு கோடி ரூபாய் செலவிடப் பட்டதாக முதல்வர் கூறியதா செய்திகள்.   ஆனால் எங்கு எப்போது யாரால் இந்த வேலைகள் செய்யப் பட்டன என்ற விபரங்கள் இல்லை.

தகவல்கள் கேட்டு வெள்ளை அறிக்கை கேட்டிருக்கிறார் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின்.

குறிப்பிட்டு வெள்ளத்துக்கு ஒதுக்கப் பட்ட துகையில் தூர் வாரி விட்டார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.     அதற்கும் இந்த அரசு அசைய வில்லை என்றால்  யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் நாங்கள் ஊழல் செய்வதை நிறுத்த மாட்டோம் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது என்றுதான் மக்கள்  புரிந்து கொள்வார்கள்.

டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்திருக்கும் விவசாயிகள் அங்கும் வடிகால்கள் தூர்  வாரப் படாத நிலையில் நடப்பட்டிருக்கும் பயிர்களில் தண்ணீர் வடியாவிட்டால் நீர் தேங்கி பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி விடும் ஆபத்தில் இருக்கிறார்கள்.

சென்னையில்  ஏரிகள் குளங்கள் எல்லாம் விரைவாக நிரம்பி வருகின்றன.     நிரம்பி விட்டால் தண்ணீரை திறந்து விடுவதை தவிர வேறு வழி இல்லை.    அப்போது வடிகால் கள் வேலை செய்ய வில்லை என்றால் பாதிப்பேர் சென்னையை காலி செய்ய வேண்டியது வரும்.

கட்டுப்பாட்டு அறை அமைப்பது, அதிகாரிகளை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டால் மட்டும் போதாது.   தொடர்பு கொண்டால் செயல் பட போதுமான அதிகாரிகளும் அதற்கான திட்டங்களும் இல்லை என்றால் என்ன பயன்?

எந்த சட்ட மன்ற உறுப்பினரும் மக்களை சென்று சந்தித்ததாக செய்தி இல்லை.

அவலத்தின் உச்சிக்கு மக்களை தள்ளிக் கொண்டு இருக்கிறது இந்த பொம்மை அரசு.

போட்டி போட்டுக் கொண்டு தேவரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் ஓ பி எஸ் சும் தினகரனும் !!!

பசும்பொன் தேவரின் ஜெயந்தி விழாவுக்கு  வங்கியில் இருந்து தங்க கவசம் பெறும் உரிமை யாருக்கு என்பதில்  ஓ பி எஸ் சும் தினகரன் அணியினரும் போட்டுக் கொண்ட சண்டை தேவரின் புகழுக்கு களங்கம் என்பதை இருவரும் சட்டை செய்ய  வில்லை.

அப்போது ஓ பி எஸ்  பொருளாளர்.   இப்போது துணை  முதல் அமைச்சர்.   சசிகலாவால் நியமிக்கப்  பட்ட சீனிவாசன் பொருளாளர் ஆக தொடர்கிறார்.    தினகரன் புதிய பொருளாளர் ஆக மற்றொருவரை நியமித்திருக்கிறார்.    யார் உண்மையான அ இ அ திமு க என்பது இன்னமும் தேர்தல் கமிஷனின் பரிசீலனையில் இருக்கிறது.   இதில் பேசி ஒரு உடன்பாடு கொள்ள முடியாதவர்கள் உண்மையான தேவர் விசுவாசிகளா?

எது எப்படி  இருந்தாலும் தேவர் ஜெயந்தியில் பிரச்னை செய்வது  அவருக்கு செய்யும் அவமரியாதை என்பதை ஏன்  இருவரும் உணரவில்லை  என்பதுதான் கேள்வி.

இடையில் மாவட்ட ஆட்சியர் பெற்று விழாவை நடத்த வேண்டி வரலாம் என்ற சூழல்.

எல்லா சமூகத்தினரும் போற்றி புகழும் வண்ணம் வாழ்ந்த முத்துராமலிங்க தேவரை ஒரு சாதி தலைவராக உருவக படுத்த ஒரு தரப்பு முயற்சிப்பது முதல் யார் கட்டுப்பாட்டில் தங்க கவசம் இருப்பது என்பது வரை சம்பந்தப் பட்டவர்கள் அனைவரும் தகுதி இல்லாமல்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இதே மோதல் தேவர் ஜெயந்தி அன்றும் நடவாமல் இருந்தால் சரி.