Home Blog Page 83

ரிசர்வ் வங்கி தன்னிடம் தகவல் இல்லை என்பது மோசடிக்கு துணை போவது ஆகாதா ?

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்திய வருமான துறை   170    கொடி பணமும்  178 கிலோ தங்கமும் கைப்பற்றியதாக தகவல்கள் வந்தன.

அது தொடர்பான விசாரணையில் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றிய  33.6 கோடி மதிப்புள்ள  2000 ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து அவருக்கு தரப்பட்டது என்ற தகவல் தங்களிடம் இல்லை என்று ரிசர்வ் வங்கி  சி பி ஐ  க்கு தெரிவித்திருப்பது ஒட்டு மொத்த விசாரணையையே முடக்கி வைத்துள்ளது.

இந்த அதிசயம் எங்காவது உண்டா?     ஓ பி எஸ் சும் எடப்பாடியும்  சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்தனர் என்பதால் அவர்கள் மீதும் நடவடிக்கை தவிர்க்க முடியாது என்பதால்ரிசர்வ் வங்கி இந்த தகவலை சி பி ஐ இடம் இருந்து மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு வலுவாகிறது.

பா ஜ க  அரசு இந்த இவர்களையும் காப்பாற்ற ரிசர்வ் வங்கியை பயன் படுத்துகிறது அல்லது இவர்கள் ரிசர்வ் வங்கியில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது உண்மையாகிறது.

நம்பிக்கைக்குரிய  ரிசர்வ் வங்கி  தனது நம்பகத் தன்மையை நிலை நாட்டியாக வேண்டும்.

இதை ஏன் உச்ச நீதி மன்றம் தானாக முன் வந்து விசாரணைக்கு ஆட்படுத்தக் கூடாது?

 

தமிழிசைக்கு வாய் நீளம்! அதற்காக சிறுத்தைகள் செய்வதும் ஆரோக்கியமல்ல!

திருமாவளவன் கட்டபஞ்சாயத்து செய்கிறார் என்று பா ஜ க வின்  மாநிலத் தலைவராக உள்ள தமிழிசை பேசியது மிகப் பெரிய தவறு.

ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறாரா ?       அதை வெளியிட்டுவிட்டு குற்றம் சுமத்தி இருந்தால் நியாயம் என்று சொல்லலாம்.

மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற மமதையில் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும்  பேசலாம் என்ற தைரியம் எப்படி வந்தது?

மெர்சல் படத்தில் வந்த ஜி எஸ் டி – டிஜிட்டல் மணி போன்ற வசனங்கள்  உங்கள் தணிக்கை குழுவினரால் அனுமதிக்கப் பட்ட பிறகு நீங்கள் என்ன சூப்பர்  தணிக்கை குழுவா?

கண்டனம் தெரிவித்திருக்கலாம் .    தவறு  என்று சொல்லி  இருக்கலாம்.    அதற்காக சொத்தை அபகரிப்பவர் என்றெல்லாம் அவதூறு பரப்புவது அவருக்கு இப்போது அவமானத்தை தானே தந்திருக்கிறது .

யாகாவாராயினும் நா காக்க – தமிழிசை மறக்க கூடாத குறள்.

அதற்காக சிறுத்தைகள் பா ஜ க நடத்தும் செயற்குழுவிற்கே சென்று பிரச்னை  செய்வோம் என்று கிளம்பினால் தமிழக அரசியல் நாகரிகம் பலியாவது நிச்சயம்.

திமிறும் அகம்பாவமும் அரசியலுக்கு ஆகவே ஆகாது.

உயிருடன் இருப்பவர்களின் பேனர் வைக்க தடை? உயர் நீதி மன்றம் எல்லை மீறுகிறதா?

உயிருடன் இருப்பவர்கள் படத்துடன் பேனர் வைக்கவும் குடியிருப்பு பகுதிகளில் விளமரம் செய்து அழகை சீர் குலைக்க கூடாது  என்றும் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அதிகம் பாதிக்கப் படுவது திருமாவளவன் ஆகத்தான் இருக்க வேண்டும்.    கலைஞர்  மற்றும் தளபதி ஸ்டாலின்  நீண்ட காலமாக சுவர்களில் நிரந்தர இடம் பிடித்திருப்பவர்கள் .  , ஓ பி எஸ்  இ பி எஸ் தினகரன் போன்ற வர்கள் திடீர்த் தலைவர்கள் இடத்தில் இருக்கிறார்கள்.    பெரியார்,  அண்ணா, ஜெயலலிதா தப்பிப்பார்கள்.

Tamilnadu open places ( prevention of disfigurement ) Act 1959  ,  அதாவது தமிழ்நாடு திறந்த வெளி அழகை சீர்குலைப்பை தடுக்கும் சட்டம் என்று ஒன்று இருப்பது எப்போது நீதிமன்றத்துக்கு நினைவுக்கு வந்தது?      வழக்கு வந்தால்தான் பல சட்டங்கள் உயிருக்கு வருகின்றன.

இது தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கூடி பேசி ஒரு ஏற்பாட்டை செய்து கொள்ளட்டும் என்று விட்டிருக்கலாம்.

பொது மக்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க தேவை என்னவோ அதை செய்ய அரசு முனைப்பை காட்ட வேண்டும்.     கொடுமை என்னவென்றால் அதிகம் ஆதிக்கம் செய்து பொது மக்களை சிரமத்துக்கு உள்ளாக்குவது ஆளும் கட்சிதான்.     எனவே நீதி மன்றம் தலையிட்டு தான் ஆக வேண்டும்.

மூலைக்கு மூலை பேனர்களும் பதாகை களும் சுவரொட்டிகளும் கொடிகளும் கட்டி தங்கள் தங்கள் தலைவர்களுக்கு தாங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தை இனி எப்படி காண்பிப்பது?

இந்த அமைச்சரிடம் இந்த வேலை ஆக  வேண்டும் என்றால் இவரை பார்த்தால் போதும் என்று இனி எப்படி பொதுமக்களுக்கு புரிய வைப்பது?

இதை எப்படி காவல் துறை அமுல் படுத்தும்?

ஆளும் கட்சியின் பேனரை அப்புறப் படுத்தும் தைரியம் வருமா?    ஆளும் கட்சியை அனுமதித்து விட்டு எதிர்க்கட்சியை மட்டும் தடுக்க முடியுமா?

டிராபிக் ராமசாமி போராடி போராடி அகற்றப் படும் பேனர்கள் மீண்டும் மீண்டும் முளைக்கிறதே தடுக்க முடிகிறதா?

உயிருடன்   இருப்பவர்களின் படம் போட்டால் மட்டும்தான் அழகு சீர் குலையுமா?

மறைந்த தலைவர்களின் படங்களை போட்டால் சீர் குலையாதா?

பலரது பிழைப்பு பறி போய் விட்டது மட்டும் உண்மை.

அமுல் படுத்தப் படுகிறதா என்பதை பார்ப்போம்!   பிறகு பார்க்கலாம்!!

தேசிய கீதத்தை கேலிக்கூத்து ஆக்கும் உச்சநீதி மன்றமும் மத்திய அரசும்??!!

சினிமாவுக்குப் போகிறவன் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று முதலில் பிரச்னையை கிளப்பியது உச்ச நீதி மன்றம்தான்.

அரசியல் சட்டத்திலேயே அப்படி ஒரு பிரிவு இருப்பது உண்மைதான்.

இதுவரை அரசு விழாக்களில் தேசிய கீதம் இசைக்கப் படும் போது எல்லாரும் எழுந்து நின்று மரியாதை செய்வது ஒழுங்காக நடந்து கொண்டுதான் இருந்தது.

இதை பொழுது போக்கு இடங்களில் விரிவு படுத்தும் போதுதான் பிரச்னை எழுகிறது.

நிற்காதவனை மற்றவர்கள் திட்டுவது.   அடிக்க முயல்வது. எல்லாம் நடந்தது.

மாட்டுக் கறி தடை வந்தபோது மாடுகளை ஏற்றி வந்தவர்கள் தாக்கப் படுவது நடந்தது.        மாட்டுக் கறி வைத்திருந்ததாக அடித்துக் கொலை கூட செய்யப் பட்டார்கள்.

இது நீதி மன்றத்தின் வேலையல்ல.   மீண்டும் உச்சநீதி மன்றம்  இது பற்றி முடிவு செய்யவேண்டிய நேரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கட்டும் என்கிறார்கள்.

பொருள் புரிந்து மரியாதை செய்பவர்கள் மிகவும் குறைவு.     ஏதோ எல்லா மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு பாடப் படுவதால் நாட்டை உயர்த்தி பாடுகிறார்கள் என்று புரிந்து கொண்டு மரியாதை செய்பவர்கள் தான் அதிகம்.

எத்தனை பேருக்கு வங்காள மொழி தெரியும்?

போகிற போக்கை பார்த்தால் நூறு பேர் கூடி எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் தேசிய கீதம் பாடு என்று சட்டம் கொண்டு வந்தாலும் கொண்டு வருவார்கள் போல் தெரிகிறது.

வெறுப்பை நன்றாகவே வளர்க்கிறார்கள்.   எல்லாம் நன்மைக்கே!!!

கன்னடத்துக் காரன் ஏன் மெர்சல் படத்தை எதிர்க்கிறான்?

கன்னடத்துக்காரர்கள்  மெர்சல் படத்தை வெளியிடுவதை எதிர்த்து போராட்டம் நடத்தி தடுத்திருகிறார்கள் .

அந்த படத்தில் கர்நாடகத்துக்கு எதிராக என்ன இருக்கிறது?

தமிழன் ஆளப்போறான் என்ற பாடலா?   தமிழ் உணர்வை வலியுறுத்தும் காட்சிகளா?

விஜய், கார்த்தி , சூர்யா , அஜித் , ரஜினி  போன்ற தமிழ் நடிகர்களின் படங்கள் கர்நாடகத்தில் நல்ல வரவேற்பை பெறுகின்றன.    அதை தடுக்கும் நோக்கமா?

எதுவாக இருந்தாலும் ஆளும்  காங்கிரஸ் அரசு இந்த தடையை தடுக்க தவறிய குற்றத்தை இழைத்திருக்கிறது .

கலைக்கு மொழி தடை இல்லை என்கிறார்கள்.    அது எல்லாம் தமிழ் நாட்டுக்கு மட்டும் தானா?

தமிழ் படங்களில் தமிழ் கதாநாயகர்கள் கதா நாயகிகள் ஏன் முக்கியத்துவம் பெறுவதில்லை.?

பெரும்பாலும் வேற்று மொழி மாநிலங்களில் இருந்து தான் இறக்குமதி செய்கிறார்கள்.

ஏன் தமிழர்களுக்கு நடிக்கும் தகுதியும் திறமையும் இல்லை என்கிறார்களா?    அல்லது தமிழர்கள் சம்பாதிக்க உரிமை அற்றவர்கள் என்கிறார்களா?

தமிழ் ரசிகனின் பணம் வேற்று மொழி நடிகர்களுக்கு அல்லது கலைஞர் களுக்கு மட்டுமே போக வேண்டும் என்று திட்டமிட்டு செயல் படுகிறார்களோ என்ற ஐயம் எழுவது தவிர்க்க முடியாதது.

இந்த சிந்தனையை தூண்டி விட்டவர்கள் கன்னடர்கள்.    நன்றி!

மெர்சலில் கலங்கி நொறுங்கிய பா ஜ க !

விஜயின் மெர்சல்  படம்  இலவச கல்வி இலவச மருத்துவம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி எடுக்கப் பட்டது.

இடையில் பா ஜ க கொண்டு வந்த  டிஜிட்டல் பரிவர்த்தனை  ஜி எஸ் டி போன்ற பிரச்னைகளை நையாண்டி செய்துள்ளது.

கேள்வி. இப்படி  விமர்சிக்க ஒரு நடிகருக்கோ தயாரிப்பாளருக்கோ உரிமை இருக்கிறதா இல்லையா என்பதுதான்.

அந்த விமர்சனம் தவறா சரியா என்பது வேறு.     எல்லா பத்திரிகைகளிலும் செல்லாத நோட்டு பிரச்னையையும் ஜி எஸ் டி பிரச்னையையும் கழுவி கழுவி விமர்சனங்கள்  வந்து விட்டன.

இரண்டுமே படு தோல்வி என்று எதிர்க்கட்சிகள் முடிவு எடுத்து நவம்பர் எட்டாம் தேதி அன்று அகில இந்திய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார்கள் .

தமிழிசை சௌந்தர் ராஜன் தேவை இல்லாமல் விஜயை விமர்சித்து பிரச்னையை உருவாக்கினார்.

கருத்து உரிமையை நசுக்கும் அதிகாரத்தை பா ஜ க எப்போது தன் கையில் எடுத்துக் கொண்டது.?

கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த மரியாதையும் தமிழிசை இழந்திருக்க வேண்டியதில்லை.

படம் நூறு கோடியை தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கிறது.   பா ஜ க வுக்கு நன்றி.

தலித் ,பிற்பட்டோர் அர்ச்சகர் நியமனம் கேரளத்தில் !! தமிழகத்தில் தொடங்கிய புரட்சி கேரளத்தில் அமுலானது !!!

அனைத்து  தரப்பினரும் அர்ச்சராக லாம் என்று சட்டம் கொண்டு வந்தது கலைஞர்.

அதற்கென ஒரு அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடங்கி தலித் ,  பிற்பட்டோர் உட்பட பலரை அர்ச்சகர் பணி புரிவதற்கென தயார் படுத்தினார்கள்.      பயிற்சி பெற்று பணியில் சேர தயாராக இருந்த நிலையில் சில பார்ப்பனர்கள் தூண்டுதலில் உச்சநீதி மன்றம் தலையிட்டு பணியில் சேர விடாமல் தடை செய்து இருக்கிறது.

அதை உச்சநீதி மன்றம் வரை கொண்டு சென்று தடை பெற்றவர்கள் நோக்கம் என்னவென்றால் பிற வகுப்பினர் அர்ச்சகர் பணி செய்ய விடக் கூடாது  என்பதுதான்.

அவர்களை பொறுத்த வரை அர்ச்சகர் பணி என்பது இறைப்பணி மட்டுமல்ல.   அது ஒரு வாழ்வாதாரம் .   அதில் பிற   சமூகத்தவர் தங்களோடு  பணி  புரிவதை இழுக்காக நினைக்கிறார்கள்.

இன்று கேரளாவில் நியமிக்கப்பட்ட   62  அர்ச்சகர்களில்     6  பேர்  தலித்துகள்    36  பேர்  இதர வகுப்பினர்.

எல்லா மாநிலங்களிலும் கொண்டு வரப்பட வேண்டிய அவசர சீர்திருத்தம் இது.

தமிழகத்தில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் பல சாதிகளை சேர்ந்தவர்கள் வேலைக்காக  காத்திருக்கிறார்கள்.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்து தடையை உடைக்க வேண்டும்.

அது மட்டுமல்ல இறைவன் சந்நிதியில் தமிழ் கோலோச்ச வேண்டும்.     அர்ச்சனைகள் தமிழில் நடக்க வேண்டும்.

தமிழ் அர்ச்சனை தயாரிக்கிறோம் என்று சொல்லி தப்பு தப்பாக தயாரித்து சதி செய்வார்கள்.

எல்லாவற்றையும் தமிழர்கள் முறியடிக்க வேண்டும்.

சமஸ்க்ரிதம் வேண்டும் என்போர் கேட்டு பாடச் சொல்லலாம்.    இங்கு சமஸ்க்ரிததிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று போர்டு வேண்டுமானால் போட்டுக் கொள்ளட்டும்.

நமது கவலை எல்லாம் இதற்கும்  யாராவது  ஒரு பார்ப்பான் உச்சநீதி மன்றம் சென்று இதற்கும் தடை வாங்காதிருக்க வேண்டும்??

 

 

 

மதங்களைத் தடை செய்து கடவுளைக் காப்போம்!!!

மதம் என்றால் வெறி என்று ஒரு பொருள் தமிழில் உண்டு.

எல்லா மதங்களும் வெறியைத்தான் தூண்டுகின்றன.   அப்படித்தான் அந்தந்த மதங்களை சேர்ந்த மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள்.

அநேகமாக  உலகில் நடக்கும் பெரும்பான்மையான போர்கள் மதங்களை அடிப்படையாக கொண்டே நடக்கின்றன.

கடவுள் நம்பிக்கைக்கும் மதம் என்று சொல்லிக்கொள்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.?

ஏசுவை நம்பு . அவர் போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடி.  யாரும் தடுக்க முடியாது. எந்த சட்டமும் தடுக்காது.  பைபிள் உன் வாழ்க்கைக்கு துணையாக இருக்கட்டும்.   அதற்கு உன்னை நீ ஏன் கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்?    கிறிஸ்தவன் என்று சொல்லி கொள்ளாவிட்டால் நீ கிறிஸ்தவன் ஆக மாட்டாயா?

நீ அல்லாவை  நம்பு.  குரான் தந்திருக்கும் ஐம்பெரும் கட்டளைகளை தவறாமல் நிறைவேற்று. இறைவன் எவரையும் வெறுக்க கட்டளை இட்டிருக்க மாட்டார். அன்பையும் கருணையையும் வாழ்வில் கடைப்பிடிக்கும் எவரையும் அல்லா கைவிட மாட்டார்.  ஆனால் அதற்கு உன்னை நீ முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமா?    முஸ்லிம் என்று  சொல்லிக் கொள்ளாமல் குரான் காட்டும் வழியில் பிறழாது வாழும் எந்த மனிதனை அல்லா ஏற்றுக் கொள்ள மறுப்பார்?

இந்து என்பது மதமே இல்லை.   பின் ஏன் உன்னை இந்து என்று சொல்லி கொள்ள வேண்டும்?  வேதம், அதை விளக்க வந்த ஸ்மிருதிகள் , புராணங்கள் என்று சமஸ்க்ரிதத்தில் இருக்கும் ஆயிரமாயிரம் கதைகள்  நம்பிக்கைகள் ஆகட்டும் பிற மொழிகளில் வழங்கும் கடவுள்  சம்பந்தமான ஆயிரமாயிரம் நம்பிக்கைகள் கதைகள் ஆகட்டும் எதிலாவது இந்து என்ற சொல் இடம் பெற்றிருக்கிறதா?    நீ எந்தக் கடவுளை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வணங்கு ,பிரார்த்தி  , எந்த சடங்குகளை வேண்டுமானாலும் கடைப்பிடி  எவர் உன்னை தடுக்க முடியும்?      முஸ்லிம் கிறிஸ்தவன் அல்லாதவன் எல்லாம் இந்து என்று ஏன் கூட்டம் சேர்க்கிறாய்?   மற்றவர்களோடு சண்டை போடவா?

கடவுள் பாவம் எல்லாவற்றையும் கடந்தவர்.  அவரா அவளா அதுவா என்பது கூட புதிர்.   கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பதுதானே உண்மை.   எல்லா மதங்களின் அறிஞர்களையும் கூட்டி பல ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்தி எதிலும் முழு உண்மை இல்லை என்று கண்டறிந்து அறிவித்தாரா இல்லையா மாமன்னர் அக்பர். ?

எல்லா மதங்களும் ஒரே இறைவனையே இறுதியில் கொண்டு சேர்க்கின்றன என்பதை ஒப்புக் கொண்ட பின்  ஏன் தங்கள்  மதங்களில் ஆட்களை சேர்க்க அலைகிறீர்கள்?

யூதம், பௌத்தம் , சமணம் சீக்கியம் , இன்னும் சீனாவில் ஜப்பானில் ஆப்பிரிக்காவில் பின்பற்றப் படும் எல்லா மதங்களும் அநேகமாக ஒரே இறைவனையே அடைய வழி காட்டுகின்றன.

மதங்களை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள், மற்றவர்களை அடிமைகள் ஆக்கி அவர்களின் செல்வங்களை கொள்ளை அடிக்க நினைப்பவர்கள், வேலையே செய்யாமல்  பிழைக்க நினைப்பவர்கள் , இவர்கள்தான் மக்களை மடையர்கள் ஆக்கி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பத்து கடவுள் வாழ்த்து பாடிய வள்ளுவர் எந்த கடவுளின் பெயரையும்  சொல்ல  வில்லை.   ஏன் ராமனை கதாநாயகனாக வைத்து  ராமாயணம் இயற்றிய கம்பர் கூட கடவுள் வாழ்த்தில் கடவுள் பெயரை குறிப்பிட வில்லை.   தமிழன் கடவுளை நம்பினான்.   முன்னோர்களை மட்டுமே கடவுளின் வடிவமாக உருவகப் படுத்தி  மரியாதை செலுத்தினான்.

கடவுள் மனிதனிடம்  எதிர்பார்ப்பது எதையும் இல்லை.    எதை செய்தால் கடவுள் மகிழ்வாரோ அதை செய்வது மட்டுமே மனிதர்களின் கடமை.

சட்டத்தால் மதங்களை தடை செய்ய முடியாது.    மனிதர்களால் முடியும்.   உண்மையான கடவுள் நம்பிக்கை கொண்ட மனிதர்களால் மட்டுமே முடியும்.

அரசு , நிறுவனங்கள்,    உறவுகள் , என்று எதிலும் மதம் என்ன கேள்விக்கு மதத்தை  சொல்லாமல் நான் தமிழன்  நான் மலையாளி, நான் தெலுங்கன், நான் இந்திக்காரன், மராட்டியன் என்று மொழியை மட்டுமே யார் குறிப்பிடுகிறார்களோ அவர்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்ற புது மரபு உருவாகட்டுமே!!!

தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றால் எந்த மதமும் இல்லை என்று குறிப்பிட ஒரு இடம் கொடுக்கட்டுமே?   அவன் கடவுள் நம்பிக்கையாளன்.   ஆனால் மதத்தில் நம்பிக்கை இல்லாதவன் என்று பொருள் .

நாத்திகன் இல்லை என்பதையும் ஆனால் மதம் சாராதவன் என்பதையும் குறிக்கும் தகுந்த வேறு சொல் கிடைத்தால் அதையும் பயன் படுத்தலாம்.

எப்படியோ ,

மனிதர்களை மாய்க்கும் மதங்களை ஒதுக்குவோம்.

கடவுளைக் காப்போம்!!!

எந்த மாநிலத்தில் பிற மொழிக்காரன் முதல் அமைச்சராக வர முடிந்திருக்கிறது? ஏமாந்தவன் தமிழன்தானா???!!

தமிழை தாய் மொழியாக கொண்டோர் மட்டுமே தமிழ் நாட்டில் முதல் அமைச்சராக வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது?

மற்ற யாரும் வேறு எந்த பொறுப்புக்கும்  வரட்டும் . மக்கள் பணி புரியட்டும்.     முதல்வராக மட்டுமே வருவேன் என்று பிற மொழிக்காரார்கள் முயல்வது நியாயம்தானா?      ஏன் வேறு பொறுப்புகளில் அமர்ந்து பணி செய்யக் கூடாது?

பல மாநிலங்களில் பிற மொழிக்காரர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகி இருக்கிறார்கள்.

ஊராட்சி , நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.    ஏன் அமைச்சர்கள் கூட ஆகி இருக்கிறார்கள்.    முதல் அமைச்சர் ஆகி இருக்கிறார்களா?

ஏன் தமிழ் நாட்டில் மட்டும் ஆக முடியும் என்ற நம்பிக்கை வருகிறது?

அவர்கள் நடிகர்கள் ஆகட்டும்.    அரசியல்வாதிகள் ஆகட்டும்.   விஞ்ஞானிகள் ஆகட்டும்.   ஆகச்சிறந்த நிபுணர்கள் ஆகட்டும்.   தமிழர்களை  முதல்வராக ஆள்வதற்கு அந்த தகுதி மட்டும் போதுமா?

போதும் என்கிறது.    அரசியல் சட்டம்.     யாரும் அரசியலுக்கு வரலாம்.    மக்களின் நம்பிக்கையை பெறலாம்.  நம்பிக்கையைப் பெற்றால் ஆளலாம்.    ஆண்டு வந்திருக்கிறார்கள்.          எம்ஜியார்   ஜெயலலிதா தமிழர்களா இல்லையா என்ற விவாதத்தை தள்ளி வைப்போம்.    அவர்களால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது.    ஆண்டார்கள்.

எம்ஜியார் பெரியார் உருவாக்கிய திராவிட கொள்கையை நீர்த்துப் போக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

ஆனால் ஜெயலலிதா திராவிட இயக்கத்துக்கு தலைமை தாங்கிக் கொண்டே  அதன் கொள்கைகளை குழி தோண்டி புதைக்க அத்தனையும் செய்தார்.     கலைஞர் மீதான எதிர்ப்பு அதிகம் இருந்த அந்த தொண்டர்களுக்கு  தலைமை தாங்கி திராவிட இயக்க கொள்கைகளை மழுங்க செய்த அவரின் செயல்பாடுகளை விமர்சிக்க யாருக்கும் அங்கே தைரியம் இருக்க வில்லை.

வெற்றி தந்த ஆட்சி, ஆட்சி தந்த வசதிகள்  கொள்கைகளை மரத்துப் போகச் செய்து விட்டன.

மூட நம்பிக்கைகளை ஒழிக்க பிரச்சாரம் செய்யும் எந்த அதிமுக தொண்டரையாவது எங்காவது இன்று காண  முடியுமா?

திமுக தொண்டர்களே ஆன்மிக பாதைக்கு திரும்பி விட்டார்கள் என்ற பிரச்சாரம் இப்போது தீவிரமாகி விட்டது.    அதில் உண்மை இருக்கிறதா என்பது வேறு?

ரஜினியையும் கமலையும் எப்படி பயன் படுத்தி மீண்டும் திராவிட இயக்கத்தை பாழ் படுத்துவது என்று படு தீவிரமாக சதி திட்டம் உருவாகி வருகிறது.

தமிழர்  மட்டுமே ஆளவேண்டும் என்றே இருக்கட்டும்.     யார் தமிழர் என்பதில் அடுத்த விவாதத்தை எதிர்பார்த்து நாற்பது ஆண்டுகள் இங்கே வாழ்ந்து மக்களோடு ஒன்றி வாழ்ந்து புகழோடு இருப்பவர்கள்  தமிழர்கள் இல்லையா என்று கேட்பார்கள்?    கேட்டாரே  ரஜினி?    பச்சைத் தமிழன் என்றாரே?

தமிழ் பேசினால் மட்டும் போதாது.     நான் தமிழன் என்ற உணர்வு உனக்கு இருக்கிறதா?   தமிழின் தனித் தன்மையை கட்டிக்  காக்க வேண்டும் என்ற உணர்வு உன் ரத்தத்தில் ஊறி இருக்கிறதா ?   தமிழர் தன்மையை   கட்டிக் காக்க வேண்டும் என்ற கடமை இருப்பதாக உணர்கிறாயா?   தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு என்று உளமார நம்புகிறாயா?    நீ தமிழன். 

                         தமிழ் பேசுபவன் மட்டுமே தமிழன் என்றால் அதே அளவுகோல் எல்லா மாநிலங்களுக்கும் இருக்க வேண்டும் அல்லவா?

எந்த மாநிலத்தில் பிற மொழி பேசுபவர்கள் என்ன செல்வாக்கு இருந்தாலும் முதல் அமைச்சராக அனுமதிக்கிறார்கள் ?     சிந்திக்கக் கூட முடியுமா?

இந்தக் கேள்விக்கு பதில் காண்பதில் தமிழர் தலைவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தலைவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.     ஏன் அவர்கள் இந்த கேள்வியை கேட்பதும் இல்லை.    பதில் சொல்வதும் இல்லை.     அவர்கள் தகுதியில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதா?

எவரும் தமிழர் தலைவர்களாக இல்லை என்பதும் எல்லாரும் ஏதாவது ஒரு சாதி தலைவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை!

ஆக தமிழர்களாக ஒன்று படுவதில் அல்லது ஒன்று படுத்துவதில் சாதி குறுக்கே நிற்கிறது.

தமிழர்கள் ஒன்று படுவது எப்படி  , சாதி ஒழிப்பது அல்லது பேதம் ஒழிப்பது எப்படி , இடையில் வரலாற்று உண்மையாக உருவாகும் கோடரிக் காம்புகளை எதிர் கொள்வது எப்படி என்று உடனடியாக விடை கிடைக்க முடியாத பல கேள்விகள் வரிசை கட்டி நிற்கின்றன.

அவைகளுக்கெல்லாம் நிதானமாக  பதற்றமில்லாமல் பொறுமையாக பேசி முடிவு கண்டே ஆக வேண்டும்.

அதுவரை எந்தக் காரணம் கொண்டும்,

தமிழை தாய் மொழியாக கொண்டிராத எவரையும் ,

தமிழக முதல்வராக வர அனுமதிக்க மாட்டோம் ,

என்ற உறுதியை  உளமார உறுதி செய்வோம்.

அந்த நிலை உருவானால் தடுக்க எல்லா வகையிலும்

ஜனநாயக முறைப்படி போராடி தடுப்போம் ! வெல்வோம்!

 

 

நோட்டீஸ் விநியோகித்தால் கைது செய்யும் அரசை எப்படி தண்டிப்பது? பொய் வழக்குப் போடும் போலீசை எப்படி தண்டிப்பது?

சேலத்தில் நீட் தேர்வை எதிர்த்து நோட்டீஸ் விநியோகித்ததாக தினகரன் ஆதரவாளர்கள் மீது
வழக்குப் பதிவு செய்யப் பட்டு மூன்று பேர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.

நோட்டீஸில்கண்டது வன்முறையை தூண்டியதாக இருந்தால் நியாயப்படுத்தலாம். ஆனால் மத்திய பா ஜ க
அரசின் வஞ்சகத்தையும் மாநில அரசின் கையால் ஆகாத்தனத்தையும் மக்கள் மத்தியில் பரப்பினால்
எப்படி குற்றம் ஆகும்?
ஏற்கெனெவே நீட் தேர்வை கண்டித்து பொது கூட்டம் கூட்ட தடை போட்ட திருச்சி காவல் துறையின் உத்தரவை

நீதிமன்றம் மூலம் தகர்த்து கூட்டம் நடத்தினார்கl.

ஆக அரசை விமர்சித்து பொதுக்கூட்டம் போடக்கூட நீதிமன்றம் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டிய

அவல நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

மே பதினேழு இயக்க திருமுருகன் மத்திய பா ஜ க அரசை விமர்சிக்கிறார் என்பதற்காகவே அவர் மீது
காவல் துறை வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. குண்டர் சட்டம் பாய்கிறது . நீதிமன்றம் உடைக்கிறது.

காவல்துறை இப்படியெல்லாம் சட்டத்துக்கு புறம்பாக வன்முறையை ஜனநாயக முறையில் நடைபெறும்

போராட்டங்கள் மீது கட்டவிழ்த்து விட வேண்டிய அவசியம் என்ன?
போராட்டங்கள்தான் மக்களை உயிரோட்டத்துடன் வைத்திருக்கிறது.
மக்களை அடிமைகளாக நடத்த விரும்பும் அரசியல்வாதிகள்தான் காவல்துறை மூலம் போராட்டங்களை நசுக்க முயற்சிக்கிறார்கள்.
பொய் வழக்கு போட்டால் தண்டனை உண்டு என்ற நிலை உருவாக வேண்டும் .
முதல் தகவல் அறிக்கை பெற்று கைதுக்கு கொண்டு வரும்போதே நீதிபதிக்கு இது குற்றமா இல்லையா

என்பது தெரியாதா? பின் ஏன் ரிமாண்ட் செய்ய வேண்டும்? மேல் எழுந்த வாரியாக பார்க்கும் போதே இது குற்றம் அல்ல

என்றால் விடுதலை செய்வதுதானே முறை?

வேறு ஒரு கண்ணோட்டத்தில் இதில் அநேகமான எல்லா கட்சிகளும் பாதிக்கப் படுகிறார்கள். ஏன் அனைவரும் சேர்ந்து

இந்த சட்ட முறைகேட்டை , எதிர்த்து தக்க நடவடிக்கை எடுத்து வெற்றி பெற முடியவில்லை.
யார் ஆட்சிக்கு வந்தாலும் சட்டத்துக்கு முரணாக அடக்கு முறையை பயன் படுத்த முடியாத நிலையை உருவாக்குவதில்தான்

ஜனநாயகத்தின் வெற்றி இருக்கிறது.

சட்டத்துக்கு புறம்பான உத்தரவுகளுக்கு பணிய வேண்டிய அவசியம் அரசு ஊழியர்களுக்கு இல்லை என்ற ஜெயப்ரகாஷ் நாராயணன்

முன்னெடுத்த முழுப் புரட்சி அமுலுக்கு வந்தே ஆக வேண்டும்.

இல்லையென்றால் தகுதி இல்லாத சுயநல மிக்க அரசியல்வாதிகளிடமிருந்து ஜனநாயகத்தை பாதுகாக்கவே முடியாது.
அனைத்துக் கட்சிகளும் உடனடியாக கவனம் செலுத்தி முடிவு காண வேண்டிய அவசர பிரச்சினை இது.