Home Blog Page 90

உ பி யில் மோடியின் வெற்றி ஒரு அபாய அறிவிப்பு ??!!

முதல்வர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்காத நிலையில் ,

நான்கு கோடி  முஸ்லிம் களில் ஒருவரைக்கூட வேட்பாளராக அறிவிக்காமல் ,

மாயாவதியின் ஜாதவ் சமூக மக்களுக்கு எதிரான பட்டியல் வகுப்பினரை ஒன்று சேர்த்து

அகிலேஷ் யாதவின் யாதவ் மக்களுக்கு எதிரான இதர பிற்பட்ட மக்களை  ஒன்று சேர்த்து,

சாதியம் கோலோச்சும் இந்துத்துவா உணர்வுகளை தூண்டி விட்டு  ,

மத்திய அரசின்  அதிகார பலத்தை  பண பலத்தை பயன்படுத்தி,

மூன்றில் நான்கு பங்கு  இடங்களை பெற்று வரலாற்று வெற்றியை பெற்று விட்டார் பிரதமர் மோடி.

பாஜக வின் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாக இதை எடுத்துக் கொள்ள முடியாது.

தனிப்பட்ட மோடி என்ற மனிதர் புனிதராக சித்தரிக்கப்பட்டு அடுத்த பாராளுமன்ற  தேர்தல் எப்படி இருக்கும் என்பதற்கு முன்னோடியாக உ பி தேர்தல் நடத்தப் பட்டு இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற மாபெரும் தோல்வியை ஒரு பாடமாக எடுத்ததுக்  கொள்ளாமல் தந்தையும் மகனும் நடத்திய குடும்ப அரசியல் நாடகங்கள் மக்கள் மத்தியில் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதைக்கூட உணராமல் போனது சமாஜ்வாதியின் தோல்விக்கு ஒரே காரணம்.

மாயாவதியும் கூட நான்கில் ஒரு பங்கு இடங்களை முஸ்லிம்களுக்கு தந்தும் கூட வெற்றிபெற முடியாதது மட்டுமல்ல பாஜக வின் தந்திரங்களை எதிர்கொள்ள தயாராக இல்லாமல் மத சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க அவர் முனையவேயில்லை.

ஆக இப்படியே போனால் நாடு இந்துத்துவ சர்வாதிகாரத்திற்கு ஆட்பட்டுவிடும் என்ற அச்சம் வருவதை தவிர்க்க முடியாது.

அடுத்து , இதே தந்திரங்கள் தமிழ்நாட்டிலும் அரங்கேற்றப் படலாம் என்ற அச்சம்தான் நமக்கு.

ஏனென்றால் இங்குதான் தமிழன் ஏமாறத் தயாராக இருக்கிறான்.  காட்டிகொடுக்க தயாராக இருக்கிறான். மண்டியிட தயாராக இருக்கிறான். சாதியால் பிளவுபட்டு நிற்கிறான். பதவிப் பசி கொண்டு அலைகிறான்.    தாய்  மொழியை  காக்கும் திறனற்று இருக்கிறான்.

எல்லாவற்றுக்கும் மேலாக   ஒருபோதும் சக தமிழனை தலைவனாக ஏற்றுக் கொள்ளாத நல்ல உள்ளம இவனுக்கு.

இப்படியெல்லாம் தங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சக்தி எது என்பதுகூட இவனுக்கு தெரியாது.      அந்த சக்திதான் தனக்கு உற்ற நண்பன் என்ற மாய உணர்வில் மயங்கி கிடக்கிறான்.

இது  போதாதா வஞ்சக  வலை விரிப்போருக்கு .

ஆனால் வஞ்சகமும் பொய்மையும் என்றும் நிலையான வெற்றியை பெற முடியாது என்ற  வரலாற்று உண்மை ஒருபோதும் மாறாது.

மோடி பிராமணர் அல்ல என்ற பிரச்சாரம் இங்கு எடுபடாது.    ஏனென்றால் அவர் பிராமணியத்தின் பிரதிநிதி யாக செயல் படுவதால்தான் தலைமையில் நீடிக்க அனுமதிக்கப் படுகிரார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

இந்தியாவில் அவுரங்கசீப்  அசோகர், குப்தர்  சாம்ராஜ்யங்கள் கூட தக்காண பீடபூமி வரையில் தான் தங்கள் ஆட்சியை நீட்டிக்க முடிந்தது.      தமிழகத்தில் ஒருபோதும்  எந்த சாம்ராஜ்யமும் நுழையவில்லை.   அதை உடைத்தவர்கள் வெளிநாட்டு வெள்ளையர்கள்.     அதுபோல் ஒருபோதும் இந்துத்துவ சக்திகள் இந்தியாவின் எந்த  பகுதியில் வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் ஒரு போதும் வெற்றி பெற முடியாது.

வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம் என்ற  உறுதியைத்தான்      தமிழர்களுக்கு இந்த மதவாதத்தின் வெற்றி  அளிக்க வேண்டும்.

அளிக்கும்.

 

மணிப்பூரிலும் கோவாவிலும் பா ஜ க நடத்தும் ஜனநாயக படுகொலைகள் ??!!

மணிப்பூரில் மொத்தம் உள்ள  60  இடங்களில்   பா ஜ க பெற்றது     21.      காங்கிரஸ் பெற்றது       28.             தேசிய மக்கள் கட்சி நாகா மக்கள் முன்னணி    எல் ஜெ பி  உள்பட  மூன்று கட்சிகளும் பெற்றது  10.      சுயேச்சை  பெற்றது     1  இடம்.

பெரும்பான்மை பெறாவிட்டாலும் இதர பதினோரு இடங்களை  வைத்திருந்த மூன்று கட்சிகளையும் ஒரு சுயேச்சை யையும் சரிக்கட்டி முப்பத்தி  இரண்டு  பேர் ஆதரவை  திரட்டி ஆட்சி  அமைக்க உரிமை கோருகிறது  பா ஜ க.  தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரசால் ஆட்சி  அமைக்க முடியவில்லை.

அதேபோல் கோவாவிலும்    மொத்தம் உள்ள     40  இடங்களில்   காங்கிரஸ் பெற்றது   17 இடங்கள்.     பா ஜ க பெற்றது    13 இடங்களே .        ஆனால் மகாராஷ்டிரா கோமன்டக் கட்சியின்   4 ;    கி எப் பி யின்   3  மற்றும் சுயேச்சைகள்  3  ஆகிய பத்து பேற்றின் ஆதரவை பெற்று ஆட்சி மிக்க உரிமை கோருகிறது பா ஜ க.     இதற்காக மத்திய அமைச்சர் பாரிக்கர் ராஜினாமா செய்துவிட்டு கோவா முதல்வர் பதவில் அமர வருகிறார்.       தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

ஆறு மாதங்கள் சட்ட மன்ற உறுப்பினர் ஆக இல்லாமே முதல்வர் பணியாற்றலாம்.      மூன்று மாதத்தில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் மத்திய அமைச்சராகலாம்.    பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறாரா என்பதை பார்க்க வேண்டும்.

ஆக எதை செய்தாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிலைக்கு பா ஜ க வந்து விட்டது.

கோவாவில்   உச்சநீதிமன்றம் தலையிட வாய்ப்பிருக்கிறது.  தனிப்பெரும் கட்சி என்ற வகையில் முதல் வாய்ப்பை காங்கிரசுக்கு தந்திருந்தால் ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு வந்திருக்கலாம்.

பஞ்சாபில் பாடம் கற்றுக் கொள்ள தவறிய பா ஜ க  கோவாவிலும் மணிப்பூரிலும் புதிய முறைகேடுகளை அரங்கேற்றி  யுள்ளது.

இது  ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

 

90 வாக்குகள் பெற்று இரும்பு பெண்மணி இரோம்சர்மிளா தோல்வி??

பதினாறு  ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து புரட்சி செய்தவர்  மணிப்பூரின் இரோம் ஷர்மிளா.

ராணுவத்திற்கு வழங்கப் பட்ட சிறப்பு  சலுகை சட்டத்தை எதிர்த்து போராடியவர்.     ராணுவம் சுட்டுகொன்றால் விசாரணை இன்றி தண்டிக்க முடியும் என்பது சிறப்பு சலுகை.

கடைசியில் தேர்தல் வந்ததும் கட்சி ஆரம்பித்து போட்டியிட்டார்.       எதிர்த்து போட்டியிட்டதோ  முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து.      பெற்றதோ  90 வாக்குகள்.

ஏன் மக்கள் அவரை புறக்கணித்தார்கள். ?    இந்தக் கேள்விக்கு தக்க பதில் இல்லை.

பெண் என்பதால்  புறக்கணித்தார்களா ?   பண பலம இல்லை என்பதால் புறக்கணித்தார்களா ?

இனி தேர்தலில் நிற்க மாட்டேன் என்று அறிவித்துவிட்டார் ஷர்மிளா .

பத்து பெர்சென்ட் முதல்வர்  என்று இபோபி சிங்கை விமர்சித்தார் பிரதமர் மோடி.

அவர் வெற்றி பெறுகிறார்.     ஷர்மிளா தோற்கிறார்.

நல்லவர்களும் பெண்களும் அரசியலுக்கு வந்து சாதிக்கத் துடிக்கிறார்கள்.

மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக வில்லையே ?

 

நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தை அவமதித்தாரா ? நீதித்துறையில் அருவருப்பான காட்சிகள் ??!!!

நீதிபதி கர்ணன் உயர்நீதிமன்ற நீதிபதியாக சென்னையில் இருந்தபோதே பல சங்கடமான சூழ்நிலைகள் தோன்றின.

சக நீதிபதிகள் குறித்து பல குற்றச்சாட்டுகளை எழுப்பியவர் அவர்.    அவை சம்பந்தமான எந்த விசாரணையும் நடந்ததாக தெரியவில்லை.

அவரை கல்கத்தா  உயர்நீதிமன்றத்துக்கு மாற்றிய போதும் அது தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியவர் அவர்.     ஒருவழியாக கொல்கத்தா சென்ற பிறகும் மீண்டும் அதே குற்றச்சாட்டுகளை சுமத்தி  உச்ச நீதிமன்றத்துக்கு கடிதங்கள் அனுப்புவதை விடவில்லை.

இப்படி குற்றம்  சுமத்தி கடிதம் எழுதுவது நீதிமன்ற அவமதிப்பு என்று உச்ச நீதிமன்றம் கருதியது.

விசாரணைக்கு  அழைத்தும் வராததால் இப்போது பிடி வாரண்டு அனுப்பும் வரை பிரச்னை சென்றிருக் கிறது.

இப்போதும் தனக்கு வாரண்டு பிறப்பிக்க உச்சநீதிமன்றத்து நீதிபதிகளுக்கு உரிமை  இல்லை  என்ற நிலைப்பாடு எடுத்த நீதிபதி கர்ணன் அவர்களுக்கே  வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று அறிவிப்பு அனுப்ப உத்தரவிடுகிறார்.

தான் பிரதமருக்கு இருபத்து இரண்டு நீதிபதிகள் மீது ஊழல்  , கையாடல்,  கற்பழிப்பு  உள்பட பல குற்றச்சாட்டுகளை சுமத்தி விசாரணை கோரி கடிதம் எழுதியதாகவும் விசாரணைக்கு  உத்தரவிடாமல் தன் மீது அவமதிப்பு வழக்கு தொடுத்து இருப்பது வன்கொடுமை  என்றும் பேட்டியளித்திருக்கிறார் .

உண்மையில் கர்ணன் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை தேவைதானா என்பதை ஏன் உச்சநீதிமன்றம் அவரை வரவழைத்து உள் விசாரணை நடத்தி முடிவு    செய் திருக்க கூடாது. ?

பாராளுமன்றத்தில் தன்  மீது இம்பீச்மென்ட் என்ற நடவடிக்கையை வேண்டுமானால் எடுக்கலாமே தவிர உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தன் மீது இவ்விதமான நடவடிக்கை  எடுக்க முடியாது என்றும் கூறுகிறார்.

தான் தலித் என்பதாலேயே குறி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படுவதாக கூறுவது எப்படி பொருந்தும் என்பது தெரியவில்லை.

ஏனென்றால் அவர் தலித் ஆக இருப்பது அவர்  உயர் நீதிமன்ற நீதிபதி ஆவதற்கு தடையாக இருக்க வில்லையே? 

                       ஏழு நீதிபதிகள் முன்பு அவர் ஆஜராகி விளக்கம் தராவிட்டால் அவர் மீது பிணையில் வர முடியா பிடியாணை பிறப்பிக்கப்  படுவதும்   , ஆஜர் படுத்தப் பட்ட பின்பும் இதே நிலைப்பாட்டை அவர்  எடுத்தால் அவர் மீது தண்டணை  பிறப்பிக்கப் படுவதும் தவிர்க்க முடியாதது ஆகி விடும்.

மொத்தத்தில் நீதிபதிகளும் ,  நீதித்துறை நடைமுறைகளும்  பொதுமக்கள் விவாதத்துக்கும் விமர்சனத்துக்கும்  ஆளாகும்.

உண்மைகள் இதன் மூலம் வெளிவரும் என்பது நல்லதே என்றாலும் மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை தரைமட்டமாகிவிடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஏற்கனெவே நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் உரசிக்கொண்டு இரு தரப்பிலும் செல்வாக்கு எப்படியெல்லாம் பங்கு வகிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.

 இவர்களா நமது தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள் என்று பொதுமக்கள் நொந்து கொள்ளும் நிலைமை வராமல் இருக்க வேண்டும். 

                   

காஷ்மீர் – இந்திய தேசியத்தின் வெற்றி தோல்வியின் அளவுகோல்??!!

காஷ்மீர் – முடிவடையாத போராட்டங்களை சந்திதித் துக்கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் ஒருபுறம் பயங்கரவாதிகளை அனுப்பி அழிவு வேலைகளை செய்வதுடன் அப்பாவி காஷ்மிரி இளைஞர் களை வசப்படுத்தி இந்திய அரசுக்கு   எதிராக வன்முறையை தூண்டி விட்டு வருகிறது.

வயது முதிர்ந்த  பெரியவர்கள் கூட தாங்கள் எவ்வாறு சிறு வயதில் இந்திய அரசுப் படைகளை எதிர்த்து கல்லெறிந்து பழகினோம் என்பதை கதையாக சொல்வதை பார்த்தால் இந்த போராட்டம் என்பது புதிதல்ல என்பது புரியும்.

காஷ்மீரிகள் இந்தியத்தோடு கலக்கவில்லையா?      முஸ்லிம் என்ற மத அடையாளம் மட்டும்தான் பிரிவினைவாத உணர்விற்கு காரணமா?

வரலாற்று உண்மைகள் எதுவாக இருந்தாலும் கேள்வி  ஒன்றுதான்.

இந்தியாவின் ஒரு பகுதியில் அந்த பகுதி மக்கள் மத ரீதியாக பிற பகுதிகளில் சிறுபான்மையாக இருந்தாலும் அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்தால் அவர்கள் மற்ற பகுதி பெரும்பான்மை மக்களோடு இணைந்து வாழ முடியாதா?

அவர்களின் முஸ்லிம் அடையாளம் பாகிஸ்தானோடு உணர்வுபூர்வமாக ஒன்று பட்டதா ?

தேர்தல் நடந்து அங்கு பாஜ க  -பி  டி பி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தாலும் ஏன் அமைதி திரும்ப மறுக்கிறது.

பாகிஸ்தானை மட்டுமே காரணம் காட்டிக் கொண்டிருப்பது உண்மையல்ல.

என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது கடினம் .

தீர்வைச் சொன்னால் அது தவறாக பொருள் கொண்டு விடப் படலாம்.

தீர்வை காண்பது ஆள்வோர் கடமை.

ஒன்று மட்டும் உறுதி.     நீண்ட காலம் இந்தப் போராட்டம் நீடித்தால் அது இந்திய ஜனநாயகத்தின் வெற்றியை கேள்விக்குறியாக்கி விடும்.

அது பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கலாம்.    அந்நிலை வராமல் தடுப்பது ஆட்சியில் இருப்போர் கடமை.

எதெற்கெடுத்தாலும் குற்றம் சொல்வோரை தேச விரோதிகள் என்று சாடுவது சிலருக்கு வாடிக்கை  யாகி விட்டது.    அடிமைகளாக வாழ்ந்தால்தான் குற்றம் சொல்லாமல் வாழ  முடியும்.

மெகபூபா முப்தி சொல்லியதுபோல் உள்ளூர் இளைஞர்களின் தவறான புரிதல்கள் சரி செய்யப் பட வேண்டும்.   மாறாக அவர்களை பயங்கரவாதிகளை போல நடத்துவது தவறு.   பதவியில்  இருப்பதால் பொறுப்பாக பதில் சொல்கிறார்.     இதுவே எதிர்கட்சியில்  இருந்திருந்தால் குரல் வேறு விதமாக ஒலித்திருக்கும்.

பிற மாநிலங்கள் ஒற்றுமையை காஷ்மீர் குலைத்துவிடக்கூடாது.

புத்தியுள்ள தமிழன் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் என்ன செய்ய வேண்டும்?

பிரச்னைகளால் தமிழ்நாடே தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.

போதாது என்று வந்துவிட்டது ஆர் கே நகர் இடைதேர்தல்.

ஜெயலலிதாவின் மரணத்தால் வந்திருக்கும் இந்த தேர்தல் தமிழ் நாட்டின் அரசியல் போக்கையே மாற்றும் தன்மை கொண்டது.

சசிகலாவின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி –    ஓ பி எஸ் – தீபா என்று பல அணிகளாக பிரிந்திருக்கும் அ தி மு க அணிகள் எல்லாமே தூக்கி  பிடிப்பது யாரை?

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று உறுதி செய்யப் பட்டு மரணம் ஆனதால் தண்டிக்க இயலாமல் போன ஜெயலலிதாவை!

இம்மாதிரி நிலை இதற்கு முன் வந்ததில்லை.    எந்த முதல்வரும் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப் பட்டு சிறைக்கு சென்ற்தில்லை. .

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறதா என்பதில் தான்  இரு தரப்புக்கு இடையே  முட்டல்.

அதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

ஆனால் புத்தியுள்ள தமிழன்  என்ன செய்ய வேண்டும்?

ஊழல் குற்றவாளி ஜெயலலிதா பெயரை யார் சொல்கிறார்களோ அவர்களை நாங்கள் புறக்கணிப்போம் என்ற முடிவை ஆர்  கே நகர் தொகுதி மக்கள் எடுக்க வேண்டும்.

இடைதேர்தல் முடிவால்  புதிய ஆட்சி உருவாகவோ இருக்கும் ஆட்சி கவிழவோ போவதில்லை.

எனவே விளம்பரங்களுக்கு ஆக போட்டியிடுபவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.

அவர்களில் எந்த கட்சியினர் அல்லது  வேட்பாளர் ஆளும் கட்சியை எதிர்த்து நிற்பார் என்று தேர்வு செய்து தேர்ந்தெடுப்பது தான் வேட்பாளர் கடமை.

ஊழல் பணம் வெற்றியைத் தராது என்ற புதிய உண்மையை இந்த இடைதேர்தல் உருவாக்கி திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

மெரினாவில் ஏற்பட்ட விழிப்புணர்வு  மாற்றம் ஆர் கே நகர் இடைத்தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும்.

 

 

தொடரும் மீனவர் படுகொலையும் மோடி அரசின் வஞ்சகமும்???!!!

மீண்டும் ஒரு இந்தய தமிழ் மீனவர் , ப்ரிட்ஜோ  , சிங்கள கடற்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்  பட்டிருக்கிறார்.

இத்தனைக்கும் இந்தப்  படுகொலை இந்திய கடல் எல்லைக்குள் நடை பெற்றிருக்கிறது.

வழக்கம் போல தமிழக அரசியல் வாதிகளின் கண்டனங்களும் இந்திய அரசின் பொறுப்பான பதிலும் சிங்கள அரசின் மறுப்பும் பதிவாகி இருக்கிறது.

சுப்ரமணியசாமி என்று ஒரு பொறுக்கி வழக்கம் போல ‘ தமிழ்நாட்டில் இந்தப் பொறுக்கிகள் கட்டுமரத்தில் ஏறி சிங்கள கடற்படையுடன் சண்டை போட வேண்டியதுதானே .சாக்க்கடைக்குள் ஏன் ஒளிந்து கொள்கிறார்கள். ‘ என்று ட்விட்டரில் பதிவு செய்கிறான்.

அதை இங்கே எந்த உணர்வுள்ள மனிதன் எவனும் கண்டு கொள்வதில்லை.

கண் துடைப்பாக சிறையில் இருக்கும் இரு நாட்டு மீனவர்களையும் விடுதலை செய்வது என்று இரு நாட்டு அதிகாரிகளும் முடிவு செய்கிறார்கள்.

பறிமுதல் செய்யப் பட்டு கிடக்கும் நூற்றுக்கும் மேலான படகுகளை பற்றி யாருமே எதுவும் பேசுவதில்லை.

இலங்கை  கடற்படை சுட்டால் எங்கே போனது இந்திய  கடற்படை?

இந்திய மீனவன் எல்லை தாண்டுகிறான் என்றால் .  எல்லையை காட்டும் கருவி வைத்திருக்கிறாயா?

பாரம்பரிய மாக  எல்லை தாண்டி மீன் பிடிக்கும் உரிமை இரு நாட்டு மீனவர்களுக்கும் இருக்கிறதே.?

இழந்த உயிருக்கு யார் இழப்பீடு தருவது?    என்ன இழப்பீடு?    மீண்டும் நடை பெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.?

இலங்கை பகை நாடு என்று இந்தியா அறிவிக்க வில்லை என்றால் தமழ் நாட்டு அமைப்புகள் அறிவிக்கலாமே?

இந்திய  தமிழ் நிறுவனங்கள் இலங்கையில்  செயல்பட ஆட்சேபிக்கலாமே!

இந்திய தமிழர்கள் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க லாமே !

சட்டத்திற்கு உட்பட்டு இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை தமிழ் உணர்வாளர்கள் ஏன் சிந்திக்க வில்லை ?

போர் முடிந்து எட்டாண்டுகள் முடிந்தும் இன்னும் அரசியல் தீர்வு பற்றி சிங்களன் பேச மறுக்கிறான்..

நம் தலையீடு வேண்டாம்.    என்ன தீர்வு என்பதை அந்த நாட்டு தமிழர்களே தீர்மானிக்க வேண்டாமா?

குள்ளநரியும் சிங்களனும் ஒன்று.    அவனை சாதாரணமாக அணுகி  வெல்லவே முடியாது.

ஒரு சம்பவம் நடந்தால் போராட்டம்  நடத்தி ஓய்வதுதான் தமிழன் வழக்கம் .     இது  சிங்களனுக்கு தெரியும்.    அதனால்தான் துணிந்து சுட்டது நாங்கள் அல்ல என்று மறுத்திருக் கிறான்

அடுத்து இடைத்தேர்தலின் தமிழன் கவனம் திரும்பி விடும்.

சிங்கள எதிர்ப்புக் களம் நிரந்தரமாக செயல் பட வேண்டும்.  அது இலங்கை தமிழர் பகை நாடு என்ற முழக்கத்தோடு வெளிப்படையாக தொடர் திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.  இந்திய அரசு ஒருபோதும் இலங்கையை பகை நாடாக அறிவிக்காது.   தமிழர்களுக்கு அரசியல் தீர்வையும் பெற்றுத் தராது.

இந்தியாவில் இருந்து கொண்டே இந்திய அரசையும் மீறி இலங்கை பகை நாடு தமிழர்களுக்கு என்ற முழக்கத்தோடு  அறவழியில் தொடர் போராட்டத்தை தமிழகம் முன்னெடுத் தால்தான் சிங்களன் கொஞ்சமாவது அசைந்து கொடுப்பான்.

பிளவுண்டு கிடக்கும் தமிழன் இதை சாதிப்பானா ?

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் இருக்கலாமா?

ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு மரணமடைந்ததால் தண்டனை  காலத்தை சிறையில் கழிக்க வாய்ப்பில்லாமல் போனவர்.   ஆனால் அவருக்கு விதிக்கப்  பட்ட நூறு கோடி ரூபாய் அபராதத்தையும் அவரது சொத்துக்களில் இருந்து அரசு வசூலிக்கும்.

அவருக்குத் துணையாக இருந்தததற்காகத்தான் சசிகலாவும் இளவரசியும் ,சுதாகரனும் சிறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தலா பத்து கோடி அபராதம்.

உச்சநீதி மன்ற தீர்ப்பு  அனைவரையும் கட்டுப்படுத்தும்.   குறிப்பாக அரசைக் கட்டுப படுத்தும்.   இந்நிலையில் அவரது பிறந்த நாளை அரசு செலவில் கொண்டாடலாமா?

இதைத்தான் சட்ட மன்ற எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் சுட்டிக்  காட்டி ஆட்சேபித் திருக்கிறார்.

அதிமுக வினர் தங்கள் கட்சி நிகழ்ச்சியிலோ வீட்டு  நிகழச்சியிலோ ஜெயலலிதா படத்தை பயன்படுத்துவது அவர்கள் விருப்பம் உரிமை.   அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

ஓர் குற்றவாளியின் படத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் மக்களே நம்பாதீர்கள் என்று வேண்டுமானால் பிரச்சாரம் செய்யலாமே தவிர படத்தை பயன்படுத்துவதை ஆட்சேபிக்க முடியாது.

ஆனால் அரசு விழா  அப்படியல்ல.      அதேநேரம் ஜெயலலிதா என்பவர் முன்னாள் முதல்வர் என்பது வரலாற்று உண்மை.    அதை மறைக்கவோ மறக்கவோ  முடியாது.

நீதிமன்றம் சொல்லித்தான் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு வர வேண்டும் என்பதே தவறு.

ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி இனி  எப்படித்தான் அரசியல் செய்வார்கள் என்பதை நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது.

ஒருபக்கம் ஓ பன்னீர்செல்வம் நீதி கேட்டு பயணமாம்.      யாரிடமிருந்து என்பதை அவர் விளக்க வில்லை.       மறுபக்கம் தீபா ‘ எம்ஜியார் அம்மா தீபா பேரவை ஆரம்பித்து ஜெயலலிதா வழியில் அரசியல் பயணம் தொடங்கி விட்டார்.    முதல் நாளே தன் கார் டிரைவரை தலைவராக நியமித்த தற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா பேரவையினர் ஆர்பாட்டம் செய்திருக்கிறார்கள்  .   அவர் பொறுப்புகள் வாங்கித் தருவதாக பலரிடம் வசூல் செய்திருக்கிறார்.    முதல் கோணல் முற்றும்  கோணலாகும் வாய்ப்புகள் நிறையவே அதிகம்.

ஜெயலலிதா தன் ஆட்சிக்  காலத்தில் நல்ல பல திட்டங்களை நிறைவேற்றினார் என்பதை மறுக்க முடியாது.   அதை  கொண்டாடும் சாக்கில் அவரது தொண்டர்கள் அபிமானிகள்  தங்கள் கைகளில் அரசு இருக்கிறது என்பதற்காக அவரைக் கொண்டாடி அவரது  பேரைச்சொல்லி  மக்களிக்க வாக்குகளை வாங்கி விட முடியும் என்ற நிலை இனி வராது.                    .

ஜெயலலிதா பெயரை சொல்லி  இனி மக்களிடம்  வாக்கு வாங்கும் எண்ணமே இனி யாருக்கும் இருக்காது.

இருக்கக்  கூடாது.

 

அரசு செலவில் நேர்த்திக்கடன் செலுத்திய தெலுங்கானா முதல்வர்?!!!

தெலுங்கானா மாநிலம் அமைந்தால் நேர்த்திக்கடன் செலுத்துவ தாக சந்திரசேகர ராவ் வேண்டிகொண்டிருந்தார் .

திருப்பதி வேங்கடாச்சலபதி சுவாமி மீது நம்பிக்கை வைப்பதோ நேர்த்திக்கடன் செலுத்துவதோ அனைவரின் தனிப்பட்ட உரிமை.   அதில் தவறேதும் இல்லை.

ஆனால் முதல்வரானபின் அரசு  செலவில் ஐந்து கோடி செலவில் நகைகளை சுவாமிக்கு செலுத்தி நேர்த்திக்கடனை செலுத்தியிருக்கிறார் ராவ்.

சுவாமி தனக்கு சாலிகிராம ஹாரம் வேண்டும் என்றோ கண்டே ஹாரம் வேண்டும் என்றோ கேட்கவில்லை.     இவர் தன் கோரிக்கையை வைத்தார். தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

அதற்கு அரசு கஜானாவில் இருந்து செலவு செய்வது சரியா என்ற கேள்வியை முதல்வரின் செயல் எழுப்பி யிருக்கிறது.

இடது சாரிகளும் இந்த கேள்வியை  எழுப்பி இருக்கிறார்கள்.

சந்திரசேகர ராவ் முன்பே பல கோடி செலவில் யாகங்கள் செய்திருக்கிறார்.    கடவுள் கோடிகணக்கில் யாகங்களை செய்பவருகுத்தான் அருள் பாலிப்பார் என்றால் எத்தனை பேர் செய்ய முடியம்.?

அதேபோல் வீரபத்ர சுவாமிக்கு தங்க மீசையும் அர்ப்பணம் செய்திருக்கிறார்.    வாழ்க நம்பிக்கை.  இதேபோல் மக்களது நல்வாழ்விற்கும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்னைகளுக்கும் வேண்டிக்கொண்டால் நல்லது.   அப்படியாவது மக்கள்  பிரச்னைகள் தீரட்டுமே .

சொந்த நம்பிக்கைகளை அரசு நிர்வாகத்தில் புகுத்தும் போக்கு மிகவும் கண்டிக்கத் தக்கது.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்ட மோசடிக்கு மத்திய அரசு அனுமதி!!!

1993  ல் மத்திய அரசின் பெட்ரோலிய இயற்கை எரிவாயு அமைச்சரவையின் கீழ்  Directorate General of hydro Carbon என்ற அமைப்பு  ஏற்படுத்தப் பட்டது.

அது எண்ணெய் எரிவாயுவிற்கு மாற்றாக இதர காற்று எரிவாயு கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கத்தை கொண்டது.

முன்பே மீத்தேன் , ஷெல் வாயு திட்டங்களை அமுல் படுத்த திட்டமிட்ட போது போது மக்களின் எதிர்ப்பால் அந்த திட்டங்கள் கைவிடப் படுவதாக அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அறிவித்தார்.

இப்போது எதிர்ப்புகளை திசை திருப்பி  வேறு பெயர்களில் அதே திட்டத்தை அமுல் படுத்த மத்திய அரசு திட்டமிடுகிறது.

புதுக்கோட்டை நெடுவாசல் , காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இந்த விவசாயிகளை வேரறுக்கும் திட்டம் நடைமுறைப் படுத்த இருந்தது.

மண் எண்ணெய் எடுக்கிறோம் அதன் பின்  நிலம் உங்களுக்கே என்று  ஆசை வார்த்தை காட்டி ஏதுமறியா விவசாயிகளிடம் நிலங்களை கையகப் படுத்தி விட்டு இப்போது அதன் விளைவாக நிலங்கள் கருக ஆரம்பித்ததும் விவசாயிகள் விழித்துக் கொண்டு எதிர்ப்பை கையில் எடுத்திருக்கிறார்கள்.

2000 அடிக்கும் மேலே குழாய் தோண்டி நீரை உறிஞ்சி எடுத்ததன் விளைவாக நிலங்கள் காயத் தொடங்கின.     நீர் மட்டம் குறைந்தது.   முன்பு ஓ ஏன் ஜி  சி செய்த வேலையை இப்போது ரிலையன்ஸ் கம்பெனி செய்ய இருக்கிறது.

இதற்கான ஒப்பந்தம் கர்நாடகாவை சேர்ந்த பா ஜ க பிரமுகர் ஒருவருக்கு கொடுக்கப்  பட்டிருக்கிறதாம்.

இப்போது புதுக்கோட்டை மாவட்ட மக்கள் போராடத் தொடங்கி விட்டார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் எதிர்க்கின்றன.   மாநில அரசின் ஆட்சேபணையை மீறி  மத்திய அரசு செயல்பட முடியுமா என்ன?   ஆனால் காரைக்கால் பகுதியில் குழாய் தோண்ட புதுச்சேரி அரசின் அனுமதி பெறப பட வில்லை  என்று  அதன் முதல்வர் கூறுகிறார்.    என்ன நடக்கிறது இங்கே?

பெற்றோலிய எரிபொருட்கள் கிடைப்பது பாலைவன பகுதிகள் கொண்ட நாடுகளில்.   அங்கு விவசாயம்  பாதிக்கும் என்ற கேள்வியே எழவில்லை.    ஆனால் இங்கு அதுவா நிலைமை.

எந்த திட்டமாக இருந்தாலும் அது அந்த பகுதி  மக்களை எந்த வகையிலாவது பாதிப்பதாக இருந்தால் அமுல் படுத்தக் கூடாது.    ஆனால் மறைமுகமாகவும் ரகசியமாகவும் இந்த திட்டத்தை பெருமுதலாளிகள் லாபமடையும்வகையில்  செயல் படுத்த மத்திய அரசு முனைகிறது.

தமிழர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தவிர வாழ முடியாது என்ற நிலையை அரசே ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்.?

இது மட்டுமல்ல.   தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெறும் எண்ணெய் கிணறுகளின் செயல்பாடுகள் பற்றியும் மத்திய அரசு வெளிப்படையான புள்ளி விபரங்கள் அடங்கிய அறிக்கை வெளியிட வேண்டும்.

ஏற்கனவே கூடங்குளம் அணு மின் திட்டம் அந்த பகுதி மக்களின் ஒத்துழைப்பு இல்லாமலேயே மத்திய அரசு  கட்டாயமாக நடைமுறைப் படுத்தி கொண்டு இருக்கிறது.

அதேபோல் பல பகுதிகளில் ஓ ஏன் ஜி சி நிறுவனம் எண்ணெய் வளத்தை சுரண்டிக்கொண்டிருகிறது.

அதனால் விளையும் நீண்ட கால பாதிப்புகள் பற்றி விவசாயிகள் அறியாமல் இருக்கிறார்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டாலே தர மறுக்கிறார்கள்.    மக்களை அறியாமையில்  தள்ளி அவர்களுக்கு நல்லது  செய்கிறோம் என்று எந்த அரசு சொன்னாலும் அது மோசடிதான்.

உடனடியாக மத்திய அரசு தமிழகத்தில் எந்த இடத்திலும் நீர் கரிம வாயு எனப்படும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மாட்டோம் என்று அறிவித்து மக்கள் போராட்டங்களை தவிர்க்க உதவ வேண்டும்.

தவறினால்     ,போராட்டம் வெடித்தால்  அது மத்திய அரசின்  மீதான நிரந்தர வெறுப்பாக மாறிவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்தால் நல்லது.