Home Blog Page 94

உச்சநீதி மன்றத்தால் தியேட்டர்களில் திணிக்கப் படும் தேசிய கீத தேசபக்தி ??!!!

சினிமா பார்ப்பதற்கு முன்பு இனிமேல் ரசிகர்கள் எழுந்து நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தி தேச பக்தியை நிருபித்த பின்தான் படம் பார்க்க முடியும்.

அப்படிதான் உத்தரவு பிறப்பித்திருக்கிறது உச்சநீதி மன்றம்.

1960, 1970  களில் அப்படி ஒரு மரபு கடைபிடிக்கப் பட்டு வந்தது.      தியேட்டர் முதலாளிகள் அதை  அமுல் படுத்த முடியாமல் போனதால் நிறுத்தப் பட்டது.

2015 ல் சென்னை உயர்நீதி மன்றம்  சட்ட ஒழுங்கு கெடும் என்பதாலும் குழப்பம் விளையும் என்பதாலும்  தேசிய கீதம்  கட்டாயமாக ஒலிப்பதற்கு  எதிராக தீர்ப்பளித்தது .

பா ஜ க ஆட்சியில் இருப்பதால் இந்த உத்தரவா?    இயல்பாகவே அவர்கள் இதை வரவேற்பார்கள்.

அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப் பட்ட போது இப்படித்தான் தேசபக்தியை நிரூபிக்க புது புது வழிகளை ஆட்சியில் இருந்தோர் அறிமுகப் படுத்தினர்.

மொரார்ஜி தேசாய் , இந்திரா காந்தி ஆட்சிகாலத்தில் நடந்தவை எல்லாம் மோடி ஆட்சி காலத்தில் வேறு வேறு வடிவங்களில் அமுலாக்கம் பெறுகின்றன.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற உத்தரவிலும் தங்கத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்திலும்  அதுதான் தெரிந்தன.

இதை எப்படி அமுல் படுத்துவார்கள் என்பதுதான் தெரியவில்லை.

சொலி சொராப்ஜி , ராஜீவ் தவான் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் இதை கடுமையாக கண்டித்து கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

தேசிய கோடி தேசிய கீதம்  போன்ற அரசியல் சட்ட இலட்சியங்களுக்கு கட்டுபட வேண்டிய குடிமகனின் கடமையை அரசியல் சட்ட பிரிவு 51  விதிக்கிறது.

ஆனால் ,       இது நீதிமன்றத்தின் வேலையல்ல என்பது முதல் ஆட்சேபணை.

அரசு கொள்கை முடிவு எடுத்து அமுல் படுத்த வேண்டிய காரியத்தை நீதிமன்றம் முன்னெடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. ?            முன்பே சொல்லப் பட்ட தீர்ப்புகளை சரியாக பின்பற்றியிருக்கிறார்களா?

திரையில்   தேசிய கீதம் பாடப்பட்டு முடிந்தவுடன்  உள்ளே நுழைபவர்கள் எண்ணிக்கைதான் அதிகமாகும்.   கடைசியில் போட்டால் படம் முடியும் முன்பே வெளியே வந்து விடுவார்கள்.   அதைத்தானே முன்காலங்களில் பார்த்தோம்.

தேசிய கீதம் என்பது புனிதமானது.   மரியாதை தர வேண்டிய கடமையை கேளிக்கை கூடத்தில் அமுல் படுத்த முனைந்தால் அங்கே அவமரியாதை நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது?

தியேட்டர் முதலாளிகள் ரசிகர்களை கட்டுப் படுத்த முடியுமா?       நடவடிக்கை எடுப்பது  சாத்தியமா?  இதற்கென ஆட்களை நியமித்தால் அதன் செலவை யார் ஏற்பது?

முல்லிம்கள் இறைவனைத்தவிர யாருக்கும் தலை வணங்க மாட்டோம்  என்பார்கள்.    எழுந்து  நிற்பார்களே தவிர   தலை குனிய மாட்டார்கள்.      அதை அவமரியாதை என்று எடுத்துக் கொள்ள முடியுமா ?

ஏற்கனெவே வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக்க வேண்டும் என்று சிலர் கோரி வருகிறார்கள்.

தாகூர் எழுதிய வங்க மொழிப் பாடலை விட சமஸ்கிருதத்தில் இருக்கும் வந்தே மாதரம் பாடல் தான் தேசிய கீதம் ஆகும் தகுதி பெற்றது என்பவர்கள் அவர்கள்.

இந்திய ஜனநாயகம் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கோட்பாட்டில் வேரூன்றி இருக்கிறது என்பதை மறந்தால் ஆபத்து ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, ஒற்றுமைக்கும்தான்.

தேசபக்தி உள்ளத்தில் தானாக ஊற்றெடுக்க வேண்டும்.    இது என் நாடு  என்ற உணர்வு இயல்பாக வர வேண்டுமே தவிர பிறர் சொல்லிக் கொடுத்தோ கட்டாயப் படுத்தியோ வர வேண்டிய ஒன்றல்ல.

இந்த உண்மை உச்ச நீதிமன்றத்துக்கு தெரியாதா?     தனது எல்லை என்ன என்பதை அறியாததா உச்ச நீதி மன்றம். ?

மறுபரிசீலனை செய்யப்  பட வேண்டிய தீர்ப்பு இது.

 

சுரிதார் அணிந்து கோவிலுக்கு வரலாம்-நிர்வாக அதிகாரி; பிராமணர் எதிர்ப்பு??!!

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பெண்கள் சுரிதார் அணிந்து வரலாம் என்று கோவில் நிர்வாக அதிகாரி உத்தரவிட்டார்.

நிர்வாக கமிட்டி கூடி நிர்வாக அதிகாரியின் உத்தரவை  ரத்து செய்து உத்தரவிட்டது.

பெண்கள் சுரிதார்  அணிந்து வந்தால் அதன் மேலே ஒரு வேட்டியை சுற்றிக்கொண்டு கோவிலில் நுழைந்து வழிபடும் அவலம் நடந்து கொண்டு இருக்கிறது.

உலகம் எத்தனை மாறினாலும் உளுத்துப் போன சம்பிரதாயங்களை காரணம் காட்டி மாற்றங்களுக்கு தடை விதிக்கும் பத்தாம் பசலிகள் ஆட்சிதான் இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது.

ரியா ராஜி என்ற பெண் பக்தர் வக்கீல் இந்த உடை மாற்றம் கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

நிர்வாக அதிகாரியின் உத்தரவு  உயர் நீதி மன்ற உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டது.  இதற்கெல்லாமா நீதி மன்றம் செல்ல வேண்டும் என்றால் அதுதான் உண்மை.

தேவஸ்வம் அமைச்சர் நிர்வாக அதிகாரியின் உத்தரவு சரியே என்று சொன்னாலும் பிராமண சபாவை சேர்ந்தவர்களும் அவர்களால் தூண்டி விடப் பட்டவர்களும் சத்தம் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மற்றொரு வழியில் பெண்கள் சுரிதார் அணிந்து கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதை யாரும் தடுக்க வில்லை.

பக்தர்கள் எனப்படுவோர் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் சுய நலமிகளின் செல்லாத கட்டளைகளுக்கு பணியும் வரை இந்த பத்தாம் பசலிகளின் கோணங்கித்தனம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

கருணாவுக்கு சிறை !! துரோகத்துக்கு சிங்களர் பரிசு !!!???

ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது விடுதலை புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர்   விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா அம்மான் , துரோகியாக மாறி புலிகளை காட்டிக் கொடுத்து சிங்கள எஜமானர்களின் விசுவாச மிக்க   ஏஜெண்டாக மாறிப் போனார்.

அவரை எம்பியாகவும் அமைச்சராகவும் ஆக்கியது  ராஜபக்சேயின் ஆட்சி.

ஆட்சியும்  மாறியது. காட்சியும் மாறியது.

சிறிசேன அதிபராக வந்ததும்   பழைய தமிழ் துரோகிகளை வலுவாக வைத்திருக்க விரும்பாமல் அவர்களை முடக்கும் முடிவில் , விசாரணைக்கு அழைத்து கைது செய்து விட்டது .

அமைச்சராக இருந்தபோது வாகன பயன்பாட்டில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு.

கைது செய்ய  ஏதோ ஒரு சாக்கு.

துரோகிகளுக்கு லஞ்சப் பணம் கொடுத்தீர்களே அது எந்த சட்டத்தின் கீழ். ?

ஆக பயன்பாடு  முடிந்ததும் துரோகிகள் வலுவோடு இருப்பது என்றும் ஆபத்து என்பதால் அவர்களை முடக்கும் முடிவுக்கு  சிங்களர் அரசு வந்துள்ளது.

போர் முடிந்து ஏழாண்டுகள் ஆகியும் அரசியல் தீர்வு பற்றி துரோகிகள் பேசவில்லை என்பது  குறிப்பிடத் தக்கது.

துரோகிகளுக்கு எச்சரிக்கை.!!!

 

மாவீரர் தின வீர வணக்கம் !!!

இந்த நாளில் மேதகு பிரபாகரனின் வீர உரையைக் கேட்க உலகமே ஆவலுடன் காத்திருந்த காலமொன்று இருந்தது.

அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயங்கள் எல்லாம் எழுச்சி பெற காரணமாக இருந்த உரை அது.

ஆயுதங்கள் நாங்கள் எடுத்தவை அல்ல.  எங்கள்மீது திணிக்கப் பட்டது என்பதை அவர் அடிக்கடி நினைவூட்டுவார்.

அறப்போராட்டங்கள் எல்லாம் சிங்கள இனவாதிகள் முன்பு செயல் இழந்தன.   உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் சிங்களவர்கள்..

போர் முடிந்து ஏழாண்டுகள் ஆகியும் இன்னமும் அரசியல்  தீர்வைப் பற்றி பேசக் கூட அங்கு யாரும் தயாராக இல்லை.

மாவீரர் தினம் தடை செய்யப் பட்டிருக்கிறது.      அதையும் மீறி யாழ்ப்பாணத்தில் மக்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.

இலங்கைத்தீவு முழுதும் இன்று நிலவும் மயான அமைதி நிரந்தரமல்ல.     என்று தமிழர்கள் சம உரிமை பேச ஆரம்பிக்கிறார்களோ அன்று அவர்கள்மீது மீண்டும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படும்.

உலகம் தலையிட்டு  எந்த நாட்டிலும் விடுதலை கிடைத்ததில்லை.

போராடுபவ ர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பரிசு அது.

மீண்டும் அறவழிப் போராட்டத்தை துவங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஈழத் தமிழினம்.

போராட வேண்டிய மன நிலையை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய நாள் இது.

பிரபாகரனுக்கு தர வேண்டிய மரியாதையை தமிழினம் இன்னும் தரத் தொடங்க வில்லை.

அந்த நாள்தான் தமிழர் எழுச்சி பெற்றார் என்று உலகம் உணரத் தொடங்கும் நாள்.

80000 கோடி கடன்காரர்கள் பட்டியலை வெளியிட வேண்டாம்; உச்ச நீதி மன்றம்

ஒருசில லட்சங்கள் கடன் வைத்திருந்தாலே பத்திரிகைகளில் வெளியிட்டு அவமானப் படுத்துகிறது வங்கித் துறை.

ஆனால் 80000      கோடி ரூபாய் வாராக் கடன் வைத்திருப்போர்   57    பேர்.    அதாவது   சராசரியாக     ஒருவரின் பாக்கி       1403          கோடி .         பட்டியலை  ரகசியமாக உச்சநீதிமன்றத் திடம் கொடுத்த  ரிசர்வ் வங்கி அதை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது.

ஆரம்பத்தில் ஏன் பட்டியலை வெளியிட மறுக்கிறீர்கள் ஏன்  பொது மக்கள்  உண்மையை தெரிந்து கொள்ளக் கூடாது என்றெல்லாம்      கேள்விகள் கேட்ட நீதிபதிகள் திடீரென்று தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு , பட்டியலை வெளியிடுவதால் என்ன நடந்து விடும்  என்று கேள்வி கேட்டு விட்டு அதைவிட ஏன் இப்படி வாராக் கடன் உருவாகிறது என்று ஆராயுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டது .

இவர்கள்  பெயர்களை வெளியிடுவதால் பொதுமக்களுக்கு என்ன ஆகப போகிறது என்று வேறு கேள்வி  கேட்டது உச்ச நீதி மன்றம்.

பொதுமக்களுக்கு ஏன் தெரியக்கூடாது என்பதற்கு பதில் ஏதும் இல்லை.

ரிசர்வ் வங்கியும் சரி உச்ச நீதி மன்றமும் சரி எல்லாமும் பெரு முதலாளிகள் நலன்களை பாது காப்பதில் மிகவும் அக்கறை காட்டுகிறார்கள்.

எந்தப் பெரு முதலாளியும் கடன் காரணமாக வாழ்விழந்தார் என்று சொல்ல முடியாது.

வங்கி கடன் போக தனி வாழ்க்கைக்கு  தேவையான சொத்தும் வருவாயும் ஏற்பாடு செய்து கொள்கிறார்கள்.

ஒரு கடன் வாராக் கடன் ஆனால் அதை ஏன் இப்படி ஆனது என்று ஆய்வு செய்துதான் ஆக வேண்டும்.   அது வேறு.   ஆனால்   பெரு முதலாளிகள் கடன்  வேறு சிறு வணிகர்கள், விவசாயிகள் , கடன் வேறு என்று பாகு படுத்தி பார்க்க கூடாது.

இப்படி இருந்தால் மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் இருப்பது மேல் தட்டு வர்க்கத்தினர் நலனை பாதுகாக்கவே  என்பதாகிவிடும்.

உச்சநீதி மன்றத்தின் பார்வை மாற வேண்டும்.

 

வங்கிகள் பான் கார்டுகள் வழங்கட்டுமே ??!!

மலையைக் கிள்ளி எலியைப் பிடிப்பது போல் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாதது ஆக்கி கறுப்புப் பணத்தை கட்டுப்  படுத்த நினைக்கிறார் பிரதமர் மோடி.

ஜ ன்   தன் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் இருபத்தி ஐந்து கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு துவங்கியதை சாதனை என்றார்கள்.

இவர்கள்  அனைவரும்  சாமான்ய மக்கள். .  இவர்கள் பான் கார்டு பயன் பாடு பற்றி இதுவரை அறியாதவர்கள்.

அவர்கள் கணக்கில் இதுவரை பணம் இல்லாமல் இருந்து இப்போது பல லட்சக்கணக்கில் டிபாசிட் ஆவது யார்மூலம் என்று  விசாரிக்கப் போகிறார்களாம்.

வங்கி கணக்கை ஆரம்பிக்கும்  போது பெறும் எல்லா தகவல்களை வைத்து ஏன் வங்கிகளே தங்கள் பொறுப்பில் அவர்களுக்கு பான் கார்டுகளை வழங்க கூடாது?   அதற்கு ஒரு கட்டணம் பெற்றுக் கொள்ளட்டும்.

நோக்கம் குறிப்பிட்ட  தொகை களுக்கு மேல் வங்கிப் பரிவர்த்தனை விபரங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு   தெரிய  வேண்டும்.

ஏழைகளை கசக்கிப் பிழியாமல் அரசு தனக்கு வேண்டிய விபரங்களை அவர்களுக் கு   பான் கார்டுகளை வழங்கி  அதன் மூலம் தங்களுக்கு வேண்டிய விபரங்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?!!

 

 

ஓட்டுக்கு பணம் வாங்க ஏங்கிய மக்கள் !!!

ஒட்டுக்கு  விலை இப்போது இரண்டாயிரம்.

தஞ்சாவூர் , அரவாக்குறிச்சி, திருபரங்குன்றம் இடைத்தேர்தல்கள்  தற்கால அரசியல் இனி எப்படி மாறும் என்பதற்கு முன்னோட்டம்.

சகட்டு மேனிக்கு ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் விநியோகித்தது அ தி மு க.

மாற்று கட்சிக்காரன் என்று பார்க்கவில்லை.        கொடுக்கிறோம் முடிந்தால் போடு என்று கொடுத்து விட்டு போய்க்கொண்டே  இருந்தார்கள்.

எந்த இடங்களிலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை எதிர்த்து யாரும் குரல் எழுப்ப வில்லை.

இவர்கள் எந்த முகத்தோடு பணம் கொடுத்தவன் ஊழல் செய்தால் கண்டிக்க முடியும்?

ஜனநாயகத்துக்கு நம் மக்கள் தகுதி படைத்தவர்கள் தானா?

யார் குற்றவாளிகள்?   பணம் கொடுத்தவர்களா ?   வாங்கியவர்களா?

ஒரு மாதம் முன்பே பிரச்சாரம் என்ற பெயரில் வெளி மாநிலத்தவர்   டேரா போடுவதை தடுக்க  வேண்டும்.

ஊர் பார்க்க ஜனநாயகம்  நடுரோட்டில் பட்டப் பகலில் கற்பழிக்கப் படுகிறது.

மக்கள் என்று சொல்லப் படும்  நடமாடிகள் கண்டும் காணாதது போல கடந்து போய்க்கொண்டிருகிரார்கள்..              காவல்துறை உள்பட.

நல்ல ஜனஜாயகம்.

 

 

 

 

 

டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு திட்டம் நிரந்தர ரத்து!

டெல்டா பகுதியில் நிலக்கரி படுகை மீத்தேன் திட்டம் நிரந்தரமாக நிறுத்தப் படுவதாக பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

இதேபோல் ஷேல் காஸ் எடுக்கும் திட்டமும் கைவிடப் பட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

விவசாயிகளின் ஒப்புதல் பெற்று மீத்தேன் எடுக்கப் படும் என்று அறிவித்தவர்தான் இந்த பிரதான்.

விவசாயிகள் போராட்டம் அதிகமாகி  நிலங்களை கையகப் படுத்த முடியாது என்று தெரிந்த  பின் இப்போது கைவிடுகிறார்கள்.

அதேபோல் ஓ என் ஜி சி நிறுவனமும் தனது செயல் பாட்டை நிறுத்திக் கொண்டால்தான் விவசாயிகள் நிம்மதியாக வாழ முடியும்.

தமிழ்நாட்டில் சுமார் 35  ஆயில் மற்றும் காஸ் வயல்களில் இருந்து நாள் ஒன்றிற்கு  700    டன் ஆயிலும் , 3.8  மில்லியன் கியூபிக் மீட்டர் இயற்கை வாயுவும் இந்த நிறுவனம்  எடுக்கிறது.

இதில் எவ்வளவு தமிழ் நாட்டுக்கு கிடைக்கிறது ,தமிழர்களுக்கு என்ன நன்மை என்றால்  ஏமாற்றம்தான்.

இந்த நிறுவனம் வெளியில் சொல்லாமல் மீத்தேன் ஆய்வை நடத்தியது என்று செய்திகள் வெளியாயின.

போராட்டங்கள் வெடித்தபின் தானாகவே நிறுத்திக் கொண்டார்கள்.   எதையும் மக்களிடம் வெளிப்படையாக விபரங்களை தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துக் கொண்டு விவசாயிகள்  வாழ்வை  பாழடிப்பது என்ன நியாயம்.

பெட்ரோல் தேவைதான்.    அதை தடையின்றி கிடைக்கும் இடங்களில் இருந்து பெற்று பயன் படுத்த வேண்டுமே தவிர உள்நாட்டு விவசாயத்தை பாழடித்து யாரை வாழ வைக்கப் போகிறீர்கள்?

எத்தனை ஆண்டுகளுக்கு இந்த எண்ணை வயல்கள் பயன் பாட்டில் இருக்கும் அதன் பின் மேற்பரப்பில் உள்ள விவசாய நிலங்களின் தன்மை எவ்விதம் மாறும் என்பதைப்  பற்றி விவசாயிகளுக்கு தெரியப் படுத்த பட்டிருக்கிறதா?

விளைவுகளை அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமை அரசுக்கு  இருக்கிறதா இல்லையா?

தாங்களாகவே  தெரிந்து கொள்ள அவர்கள் விஞ்ஞானிகள் அல்லவே?

ஒ என் ஜி சி நிறுவனத்தின் செயல்பாடுகள்  விவசாயிகள் மத்தியில் விபரங்களோடு விவாதிக்கப் பட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

 

 

 

2000 ரூபாய் நோட்டில் இந்தி எண் அரசியல் சட்டத்துக்கு முரணானது!!!

அரசியல் சட்டத்தின் பிரிவு  343  மத்திய அரசின் அலுவல் மொழி பற்றியது.    அது  தெளிவாக அதிகாரபூர்வமாக சர்வதேச இந்திய எண்களைத் தான் பயன் படுத்த வேண்டும் என்று கூறுகிறது.     (The official language of the Union shall be Hindi in Devanagari script .   The form of numerals to be used for the official purposes of the Union shall be the international form of Indian numerals.   )

இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ரூபாய் நோட்டுகளில் அனைத்து நோட்டுகளிலும் சர்வதேச எண்களைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறது.

இப்போது மோடி வெளியிட்ட ஐநூறு ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் இந்துஸ்தானி எண் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதுவும் தவறாக அச்சிடப்பட்டுள்ளது வெட்கக் கேடானது. என்னதான் அவசரம் என்றாலும் இப்படியா ரூபாய் நாட்டிலேயே தவறு இடம் பெற அனுமதிப்பார்கள்?

பதினைந்து  மொழிகளில் எழுதப் பட்டுள்ளது. ஆறாவதாக இந்தி எழுத்தில் ” தோ ஹஜார் ருபயா ‘ என்று இருப்பதற்கு பதிலாக ‘ தோன் ஹஜார் ருபயா ” என எழுதப் பட்டிருக்கிறதாம்.

இந்த அவசரம் எதை க் காட்டுகிறது.     மற்ற பிரச்னைகளையும் ஆழமாக சிந்திக்க வில்லை என்பதைத்தானே ?         2000 ரூபாய் நோட்டுகளை வைக்க கூடிய அளவு ஏ டி எம் மையங்கள் வடிவமைக்கப் படவில்லையாம்.      போதிய அளவு நூறு ரூபாய் நோட்டுகள் இல்லையாம்.

எல்லா வாய்ப்புகளையும் அனுமானித்து மக்களுக்கு துன்பம் வரா வண்ணம் ஒரு திட்டத்தை அமுல் படுத்த  கடமைப் பட்டவர்கள் அதில் பெருமளவு தோல்வியடைந்து விட்டார்கள் என்பதே உண்மை.

தமிழ் உள்பட இந்திய மொழிகள்  பெரும்பாலானவற்றிற்கு தனி எண்கள் உண்டு.   அவை எல்லாவற்றையும் நோட்டில் கொண்டு வர முடியாது என்பதால்தான் சர்வதேச எண்ணை அரசியல் சட்டம் வகுத்துள்ளது.

அதே நேரத்தில் பதினைந்து மொழி வார்த்தைகளும் களும் இடம் பெற்றுள்ளன என்பதை மறந்து விடக் கூடாது.

தவறான இந்தி வார்த்தையை உள்ளடக்கிய இரண்டாயிரம் நோட்டு செல்லுமா என்பதே கேள்விக்குறி???

 

நடுத்தர மக்களை வதைத்த மோடி!!!???

வெளிநாடுகளில் பதுக்கி வைத்த கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வந்து எல்லா இந்தியர் கணக்கிலும் பதினைந்து லட்சம் போடுவேன் என்று உறுதியளித்து ஆட்சிக்கு வந்த மோடி அதை காற்றில் பறக்க விட்டு விட்டார்.

அரசு அனுமதி இல்லாமல் வெளி நாடுகளில் பணம் போடுவோரின் இந்திய குடியுரிமை பறிக்கப்  படும் என்ற அறிவிப்பு செய்தால் போதும் எவருக்கும் வெளி நாடுகளில் பணம் போடும் எண்ணமே வராது.    அதை விட்டு விட்டு இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் என்று சொல்லிக்கொண்டு  எந்த பணத்தையும் கொண்டு வந்த பாடில்லை.

ஆட்சிக்கு வந்து இரண்டாண்டு ஆகிவிட்டது.   உ பி   தேர்தல் வருகிறது.   ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு நடுத்தர மக்களின் வாழ்க்கையோடு விளையாட தொடங்கி விட்டார்.

500 , 1,000    ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து விட்டால் நாட்டில் உள்ள கருப்பு பணம் எல்லாம் வங்கியில் வந்து கொட்டி விடும் என்று நம்புகிறாரா?

1938,  1946 , 1978 ம் ஆண்டுகளில் பெரிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.   எதிர் பார்த்த பலன் கிட்டவில்லையே?

இப்போது என்ன திட்டத்திற்காக இந்த நடவடிக்கை?

  •             கறுப்புப் பணம்;     பணமாகவா மட்டும் இருக்கிறது கருப்பு பணம்.   நிலமாக , பங்கு சந்தை முதலீடாக, கார்பொரேட் கம்பனிகளில் பலவிதங்களில் முதலீடாக, தங்கமாக , வைரமாக, வெளிநாடுகளில் வங்கிகளில் டிபாசிட்டாக  என்று பல விதங்களில் முடங்கி கிடக்கிறது.   இன்று ஆயிரம் ரூபாய் நாடுகளை பதுக்கியவன் நாளை  இரண்டாயிரம் நோட்டுகளை பதுக்குவான்.       நாணயமாக வரி கட்ட வேண்டும் என்ற  எண்ணத்தை  எல்லார் மனத்திலும் விதைக்கும் விதத்தில் வரி விதிப்புக் கொள்கை இல்லாவிட்டால் ஒரு போதும் கருப்பு பணத்தை ஒழிக்கவே முடியாது.    வருமான வரி  விலக்கை ஐந்து லட்சமாக  உயர்த்துங்கள்.     எல்லாரும் வரி கட்டுவார்கள்..
  •                 கள்ள நோட்டுகள்  ;   பாகிஸ்தானில் இருந்து அச்சடித்து வருவதாக சொல்கிறார்கள்.    இப்போதும் பத்து சதம் கள்ளப் பணம் புழக்கத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.      அரசு கண்காணிப்புடன் இருந்து தடுக்க வேண்டிய வேலை இது.
  •                  வருமான   வரி கட்ட வைக்க;       ஜன் தன் திட்ட மூலம் இருபது கோடி  பேருக்கு வங்கி கணக்கு வந்து விட்டது. இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளவர்கள் வரி கட்டாமல் இருப்பதை தடுத்து அவர்களை வரி கட்ட வைக்கலாம்.    ஏனெனில்   ஐந்திலிருந்து பத்து இருபது லட்ச ரூபாய் சேமிப்பு வைத்திருப்போர் வங்கியில் கட்டியாவது வரி போக மிச்ச பணம் கிடைக்கட்டும் என்று டெப்பாசிட் செய்வார்கள்.    இது ஒன்றுதான் மோடி நடவடிக்கையின் பயனாக இருக்கலாம்.
  •                  ஹவாலா பண பரிமாற்றம் குறையலாம்;
  •                  இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள்  வெளி நாட்டு வாழ் இந்தியராக இருந்தால் அவர்கள் பணத்தை பி நோட்ஸ் என்ற ‘ Participatory Notes  ” மூலம் முதலீடு  செய்யலாம் .   ஆனால் அவருடைய பெயரை வெளியிட வேண்டும் என்ற அவசியம் கிடையாதாம்.       இந்த முறையை ஒழிக்க முன்வருவாரா மோடி ?                                                                                உச்சநீதி மன்றத்தில் கருப்பு பணத்தை மீட்க அரசுக்கு உத்தரவிடக்கோரி நிலுவையில் உள்ள வழக்கில் மத்திய அரசு ஏன் ஒத்துழையாமை கொள்கையை  கடைப் பிடிக்கிறது. ?.                                    லோக் பால் அமைப்பை கொண்டு வர வேண்டும்  என்று அன்னா ஹசாரே போராடி வருகிறார்.   ஏன்   அதைப்பற்றி மோடி கண்டு கொள்ளவில்லை.?                                                                                       இன்று  வங்கி முன் வரிசையில்  எந்த பணக்காரனும் நிற்கவில்லை.       எல்லாம் சரி.     கொண்டு வந்ததுதான்  கொண்டு வந்தீர்கள்.    ஏன் இத்தனை அவசரம்?                                                                                                  ஐம்பது நாள் அவகாசம் கொடுத்தீர்கள் பணத்தை வங்கியில் டிபாசிட் செய்ய.      அது வரைக்கும் மட்டும்தான் இவை செல்லும் என்றால்  என்ன கெட்டு விடும்.?                                                                   பணத்தை வைத்திருப்பவர்கள் வங்கியில் போட வேண்டும் என்பது மட்டும்தானே உங்கள்  நோக்கம்.      இல்லை அவர்களை வதைப்பதா?                                                                                                                அதுவும் இருநூறு சதம் அபராதம் வேறு?    வரி  வேறு?   பொது மக்களின்   எரிச்சலை வாரிக் கட்டி  கொண்டதைத் தவிர மோடி எதையும் சாதிக்க வில்லை                                                            நன்மைகள் பத்து சதம் என்றால்  தொண்ணுறு சதம்  நடுத்தர மக்களை வதைத்ததுதான்  மோடி அரசின் சாதனை  !!!
  •                                 பிரச்னை உச்சநீதி மன்றத்தில் இருக்கிறது.  அதுவாவது தலையிட்டு கால அவகாசம் நீட்டித்தால் அரசின் நடவடிக்கையால் ஏற்பட்ட குழப்பம் கொஞ்சம் தீரும்.