Home Blog Page 96

பெண்கள் பாதிரியார்களாக தடை நீடிக்கும்?  போப் அறிவிப்பு??!!

கத்தோலிக்கர்களின் மத குருவான போப் வாடிகனில் இருந்து ஆட்சி  செய்து வருகிறார்.

கிறித்துவத்தில் பல பிரிவுகள்.     சமீபத்தில் போப்  பிரான்சிஸ்  ஸ்வீடன் சென்றிருந்தார்.    அவரை வரவேற்றவர் அங்குள்ள லுத்தரன் சர்ச்சின் தலைவரான ஒரு பெண்தான்.  ஒரு நிருபர் போப்பை நோக்கி கேட்ட கேள்வி இதைப்போல் உங்கள் கத்தோலிக் சர்ச்சில் எப்போது பெண்களை அனுமதிக்கப் போகிறீர்கள் ?

அதற்கு பதில் அளித்த போப்  பிரான்சிஸ் 1994 ல் போப் ஜான் பால் சொன்னதே இறுதியானது என்றார்.   அதாவது போப்  ஜான் பால் அப்போது பெண்களுக்கு பாதிரியார்கள் ஆகும் வாய்ப்பு இல்லை என்றார்.

கிறித்துவத்தின் பிற பிரிவுகளில் பெண்கள் அனுமதிக்கப் படும்போது கத்தோலிக்கர்கள் மட்டும் என் மறுக்க வேண்டும்?

பின்னாளில் யாராவது ஒரு போப் வந்து  இதை மாற்றம் செய்தால் மட்டுமே கத்தோலிக்க பெண்களுக்கு பாதிரியார்கள் ஆகும் வாய்ப்பு திறக்கும்.

மாற்றங்கள் பிறக்கட்டும்,    காட்சிகள் மாறட்டும்.

கமல்ஹாசன் -கௌதமி வாழ்ந்ததும் பிரிந்ததும் சொல்லும் செய்திகள் !!!!

கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிகர்.    பிராமணர்.    ஆனால் அதை வெளிக் காட்டிக்  கொள்ளாதவர் .    தன்னை ஒரு  நாத்தியவாதியாக அடையாளப் படுத்திக் கொள்வதில்  பெருமை கொள்பவர்.  கலையுலகில் தனி முத்திரை பதித்துக் கொண்டிருப்பவர்.

கௌதமி நல்ல நடிகை.    சமீபத்தில் புற்று நோய் விழிப்புணர்வுப் பணிகளுக்காக பிரதமரையும் குடியரசுத் தலைவரையும் சந்தித்துப்  பேசி வந்தவர்.

இருவரும் பதிமூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இப்போது இருவரும் மனம்  விட்டுப் பேசி பிரிந்து விட்டதாக கௌதமி வெளியிட்ட செய்தி மூலம் கதறிய வந்திருகிறது.

இருவரது வாழ்க்கையும் சினிமா உலகில் வசதி படைத்த நட்ச்சத்திரங்கள் எப்படி தாங்கள் வாழ்வை  சுலபமாக அமைத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு உதாரணம்.

கமல் வாணியை மணந்து விவாகரத்து செய்து , பின் சரிகாவுடன் வாழ்ந்து இரண்டு பெண்களை பெற்றவுடன் திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்து செய்து பின் கௌதமியுடன் செர்நேது வாழ்ந்து வந்தவர்.

கௌதமி கணவரை விவாகரத்து செய்து பெண் குழந்தையை வளர்த்து பின் கமலுடன் வாழ்ந்து வந்தவர் மகளின் எதிர்காலத்துக்காக  பிரிந்த தாக தெரிகிறது.

பிரபலமானவர்கள்  ,   கோடிகளில் சொத்து வைத்துக்  கொண்டு வாழ்பவர்கள் எப்படி எந்த பிரச்னைக்கும் இடம் கொடாமல் தாங்கள் மனதிற்கு பிடித்த வாழ்க்கையை வாழ்கிறார்கள்  என்பதை மற்றவர்கள் பாடமாக கொள்ள வேண்டும்.

கமலின் இரண்டு பெண்களும் தங்கள் வாழ்க்கையை தாங்களே வாழ்ந்து கொள்ளும் அளவு சம்பாதிப்பவர்கள்.

மேல்தட்டு மக்கள் எப்படி வாழ்ந்தாலும் உலகம் ஏற்றுக் கொள்ளும்.

இருவரும் மக்களின் அன்பைப் பெற்றவர்கள்.    நல்லவர்கள் என்ற அடையாளத்துடன் வாழும் அவர்கள் வாழ்வில் நிம்மதி நிலவட்டும்.

சிபெட் தலைமையகத்தை சென்னையிலிருந்து டெல்லிக்கு கொண்டு சொல்லும் அனந்தகுமார்??!!

சிபெட் என்னும் ( Central Institute of Plastics Engineering and Technology)    பிளாஸ்டிக் ஆராய்ச்சி நிறுவனம்  சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல் பட்டு வருகிறது.

23   கிளைகளில்   44000  மாணவர்கள்  பயிற்சி பெற்று வரும் இந்த மையத்தில் தற்போது        39   கிளைகளாக மாற்றப்பட்டு      65000  மாணவர்களை கொண்டு இயக்க திட்டமிட்டு வருகிறது மைய அரசு.

கர்நாடகாவை சேர்ந்த அனந்த குமார் அமைச்சராக இருப்பதால் அவர் இதன் தலைமையிடத்தை டெல்லிக்கு மாற்றப் போவதாக வந்த செய்திகளை அடுத்து தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது .    கலைஞரும் தொழிலாளர்களும் ஏனைய கட்சித் தலைவர்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

அதை தொடர்ந்து அனந்த குமார் வேடிக்கையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதாவது தலைமையிடம் சென்னையில்தான் இருக்குமாம். அதேசமயம் டெல்லியில் மற்றொரு தலைமையகம் அமைப்பதற்கான   தேவை ஏற்பட்டு உள்ளதாம்.

மாற்று தலைமையகம் என்பது கேள்விப்பட்டத ஒன்று.      தேவை ஏற்படும்போது   ரீஜினல் என்ற வகையில் பிராந்திய தலைமையகங்களை அமைப்பதுவழக்கம்.

ஒரே தலைமையகம்தான் இருக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் ஓர்  அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள்.

தென் மாநிலம் ஒன்றில் ஒரு தேசிய அமைப்பின் தலைமையகம் இருக்கக்கூடாதா??

தேசிய கட்சியில் இருந்து கொண்டு தேசியத்துக்கு விரோதமாக சிந்திக்க எப்படித்தான் இவர்களால் முடிகிறதோ??

எத்தனை பிராந்திய அலுவலகங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்   ஆனால் ஒரே தலைமையகம்தான் இருக்க முடியும்.

இதைக்கூட புரிந்து கொள்ள முடியாமலா இருப்பார்கள் தமிழர்கள்?

கன்னடர் ஒருவர் சென்னையில் தன் துறை அமைச்சகத்தின் தலைமையிடம் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதால் ஏற்பட்ட மாற்றம்  என்பதே உண்மை.   அவர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.

வன்னியர் எதிர்ப்பை மீறி தலித்துகளுக்கு கோவிலை திறந்து விட்ட வருவாய் அதிகாரிகள் !!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஹரிஹரபாக்கம் கிராம வன்னியர்கள் அந்த ஊரின் அருள்மிகு துலுக்கானத்தம்மன் கோவிலில் பக்கத்து  நம்மண்டி காலனி தலித்துகளை வழிபட அனுமதித்ததே இல்லை.

காலனி இளைஞர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து பல பேச்சு வார்த்தையிலும் முடிவு எட்டாததால் வன்னியர்கள் கோவிலை  பூட்டி  விட்டார்கள்.

செய்யாறு சப் கலக்டர் ஏற்பாட்டில் பூட்டை உடைத்து தலித்துகளை உள்ளே அனுமதித்தது மட்டும் இல்லாமல் வன்னியர்களிடம் தாங்கள் எவ்விதத்திலும் தலித்துகளை தடை செய்யமாட்டோம் என்றும் எழுதி வாங்கி தற்காலிக அமைதி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

காவல் துறை சில காலம் பாதுகாப்பு தரும்..   அதன் பின் யாரோ ஒருவர் பிரச்னையை கிளப்பினால் அது மீண்டும் அமைதியை குலைக்கும்.

ஏறத்தாழ தொண்ணூறு சதவீத கிராமங்களில் இதுதான் நிலை.

சாதி ஒழிப்பு கொள்கையில் ஒப்புமை கொண்ட திராவிட இயக்கங்கள் கூட இந்த சாதி சார்ந்த பாகு பாடுகளை ஒழிக்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.

;ஒன்றே குலம் ஒருவனே தேவன்  கொள்கையில் நம்பிக்கை கொண்டோர் அதை வாழ்க்கையில் அமுல்படுத்த முடிகிறதா?

திமுக அதிமுக நிர்வாகிகள் தங்கள் தங்கள் கிராமங்களில் இந்த சீர்திருத்தங்களை அமுல்படுத்த முனைந்தால் செல்வாக்கு  இழக்க நேரிடும் என்றே அஞ்சுகிறார்கள்.

ஏன் பா ம க வே கூட இந்த சீர்திருத்தத்தை அமுல் படுத்த தயாராக இருக்குமா?

இதைப் பற்றியும் ஒரு விவாதம் தொடங்கி நடந்தால் ஒருவேளை எதாவது வழி பிறக்கலாம்.

விவாதிப்போம்!!!

வைகோவின் பிடியிலிருந்து நழுவும் திருமாவளவன்??!!

காவிரிப் பிரச்னையில் அனைத்துக் கட்சி  கூட்டத்தில் திருமாவின் விடுதலை சிறுத்தைகள் கலந்து கொள்ளாமல் போனாலும் திருமா வெளியிட்ட அறிக்கை அவர் வைகோவின் பிடியிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிறார் என்பதை நன்றாகவே காட்டியது.

திமுக அனைத்துக் கட்சி  கூட்டத்தை கூட்டியத்தை வரவேற்ற திருமா அந்த முயற்சிக்கு பாராட்டையும் தெரிவித்தார்.     தான் கலந்து கொள்ள விரும்பியதாகவும் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் வரும் சூழலில் தான் ம ந கூ வை  தான் உடைத்து விட்டதாக பழி வந்து  சேருமே என்பதற்காகத்தான் கலந்து கொள்ள வில்லை என்று திருமா சொன்னது அவரது உள்ளம் தி மு க வை நோக்கி திரும்பத்  தொடங்கி  விட்டதை காட்டியது.

‘ தங்களின் உள்ள நிலை -உண்மை நிலையை புரிந்து  கொண்டேன் – வரவேற்றதற்கு நன்றி’ என்று ஸ்டாலினும் தன் பங்குக்கு பதில் அனுப்பி அரவணைக்க தயார் என்பதை உணர்த்தி விட்டார்.

விவசாயிகள்  நடத்திய ரயில்  மறியல் போராட்டத்தில் திமுகவோடு கம்யுனிஸ்டுகள் கலந்து கொண்டார்கள்.

இப்போது திருமாவும் கழன்று வருகிறார்.     விடுதலை சிறுத்தைகள்  மக்கள் நல கூட்டணியில் நீடித்து தற்கொலை செய்து கொள்வதை எந்த தொண்டனும் அனுமதிக்க மாட்டான் என்பது   தெரிந்து  விட்டது.

இஸ்லாமியர்களின் ஒட்டு பெரிதாக எந்த தொகுதியிலும் சிறுத்தைகளுக்கு கிடைக்க வில்லை.

அவர்கள் அதிமுக திமுக என்றே பிரிந்து  நிற்கிறார்கள்.      தனித்து வெல்லும் வாய்ப்பு இல்லை என்பது தெரிந்த பின் அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அதுதான்.

மற்ற தோற்கும் கட்சிகளுக்கு கொள்கை என்று சொல்லிக்கொண்டு வாய்ப்புகளை இழக்க அவர்கள் தயாராக இல்லை.

இதற்கிடையே அவர் பா ஜ க பக்கம் சாய்கிறார் என்று ஒரு செய்தி சொல்கிறது.

எப்படியோ வைகோவின் பிடியிலிருந்து விடுபட்டால் சரி !!!

மேதகு ஆளுநர் மாண்புமிகு ஆனார் – வித்யாசாகர் ராவ் உத்தரவு!! முடியாட்சி முறை முடிவுக்கு வந்தது.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஆளுனர் மேதகு என்று   அழைக்கப் பட்டார்.

மன்னரின் பிரதிநிதி அல்லவா?      குடியாட்சிக்கு மாறி அறுபது ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல மன்னர் காலத்து பழக்கங்களை நம்மால் விட முடியவில்லை.

நீதிமன்றங்களில் மை லார்டு என்று அழைக்கும் வழக்கம் இன்னமும் தொடர்வது தெரிந்ததே.       நீதிபதிகளே எங்களை அப்படி அழைக்காதீர்கள்  என்று உத்தரவிட்டாலும் வழக்கறிஞர்கள் கேட்பதில்லை.

2012 ல் குடியரசுத் தலைவரை மாண்புமிகு என்றே அழைக்கலாம் என்று உத்தரவிட்ட பிறகும் அந்த வழக்கம் தொடர்கிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டு ஆளுநராக பொறுப்பேற்று இருக்கும் வித்யா சாகர் ராவ் அவர்கள் இனி மேதகு என்பதற்கு பதிலாக மாண்புமிகு என்றே அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

அடிமை மனப்பான்மை ஒழிய இன்னும் சீர்திருத்தங்கள் தேவை.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம்???!!!

ராணுவ முகாம்களின் மத்தியில் வசித்து வருபவர்கள் யாழ் தமிழர்கள்.

போர் முடிந்து ஏழாண்டுகள் ஆகியும் இன்னமும் எந்த விடுதலையும் கிடைக்காமல் தவித்து வருகிறது தமிழ்ச் சமூகம்.

மாநில அரசு என்று ஒன்று இருக்கிறது.     அதற்கு அரசிற்கான எந்த உரிமையும் கிடையாது.     நிலம், காவல் எல்லாம் சிங்கள மத்திய அரசின் கையில் . முதல் அமைச்சர் ஒரு ஒய்வு பெற்ற நீதிபதி.     காலத்தின் கட்டாயம் கருதி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்.

அதிகாரம் வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பது மட்டுமே அவரால் முடிந்த காரியம்.

உலக நாடுகள் எதுவும் எதையும் கண்டுகொள்வதில்லை.

உரிமைப் போரை அற வழியிலும் போர் வழியிலும் தொடர்ந்து போராடி  பேரழிவுகளை சந்தித்து மீண்டும் அறவழிப் போரை தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழ்ச்  சமூகம்.

இப்போது வாழக் கூட விடக் கூடாது என்று சுட்டுக் கொல்கிறார்கள் .

நடராஜ கஜன், பவுன்ராஜ் சுலக்சன் என்ற இரண்டு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும்போது நிறுத்தச் சொன்னதற்கு நிற்காமல் போனதால் சுட்டுக் கொன்றிருக் கிறார்கள்.

போராட்டம் நடத்தியதற்குப் பிறகு சிலரை கைது செய்வதாக அறிவிப்பு வெளியானது.

விசாரணை தண்டணை எதுவும் சிங்கள அரசின் கண் துடைப்பு வேலையாக அமையும்.

என்று முடியும் இந்த அரச பயங்கர வாதம்?

கபடியில் இந்தியாவுக்கு உலக கோப்பை!!இந்திய அணியில் இடம் பெற்று சாதனை படைத்த தஞ்சை சேரலாதன் !!!

கபடி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு.

அகமதாபாத்தில் நடைபெற்ற உலக  கோப்பை கபடித் தொடரில் இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருப்பது பாராட்டத் தக்கதாகும்.

அதிலும் இந்திய அணியில் இடம் பெற்ற ஒரே தமிழக வீரர் தஞ்சை மாவட்டம் திருச்சனம்பூண்டி கிராமம் சேரலாதன் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

தமிழக அரசு இன்னும் முயற்சி எடுத்து ஊக்குவித்திருந்தால் இன்னும் அதிக வீரர்களை அனுப்பியிருக்க முடியும்.

ஒலிம்பிக் போட்டிகளில் கபடி இன்னும் சேர்க்கப் படாமல் இருக்கிறது.   அதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பெரு முயற்சி  எடுக்க வேண்டும்.

கிரிக்கெட்டிற்கு இணையாக , ஏன் அதற்கும் மேலாக வளர்ச்சி அடையக் கூடிய அத்தனை அம்சங்களும் கபடி விளையாட்டில் உள்ளது.

அரசுகள் போதிய கவனம்  செலுத்தாததால் அதற்கு உரிய இடம் கிடைக்க வில்லை.

வென்ற உடனேயே அதில் இடம் பெற்ற தமிழக வீரருக்கு தமிழ் நாட்டு அரசு அவருக்கு ஊக்கத் தொகை அறிவித்திருக்க வேண்டும்.        கூட்டு விளையாட்டு என்பதால்  தனியாக பரிசு அளிப்பதில் பிரச்னை இருந்தால்  குழுவிற்குமே பரிசு அளிப்பது  அவசியம். .

மொத்தக் குழுவிற்கும் இந்திய அரசு ஒரு கோடி பரிசு அறிவித்துள்ளது .     இது போதாது.

அனுப் குமார் அணியின் கேப்டன்.    அரியானா மாநில காவல் துறையில் அவர் ஆய்வாளர் ஆக பணி புரிகிறார்.   அந்த அரசு அவருக்கு ஊக்கமளித்து வருகிறது.

தமிழகம்  கபடி விளையாட்டின் தாய்வீடு என்பதால் இங்கு அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டும்.

அரசு தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

ராஜ் தாக்கரே வின் மிரட்டல் அரசியல்? பணிந்த முதல் அமைச்சர் !!

உரி தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான்  இந்தியா  இடையே உரசல் அதிகமானதும் இந்தியா மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் பாகிஸ்தான் நிலை குலைந்து போய் அடுத்த தாக்குதலுக்கு தயாராவதும்  பாகிஸ்தானில் நடை பெற இருந்த சார்க் மாநாடு தள்ளிப் போனதும் நிலைமையை மேலும் மோசமாக்கி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் நடித்த ஏ தில் ஹை முஷ்கி  என்ற இந்திய தயாரிப்பாளர் தயாரித்த சினிமாவை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று ராஜ் தாக்கரே மிரட்டல் விடுத்தும் அம்மாநில முதல்வர் பட்னாவிஸ் தலையிட்டு மூன்று நிபந்தனைகளுடன் படத்தை வெளியிட சமரசம் பேசி உள்ளார்.

உரி தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி ஸ்லைடு, எதிர் காலத்தில் பாகிஸ்தான் நடிகர்களை வைத்து படம் தயாரிக்க மாட்டோம் என்று உறுதிமொழி ராணுவ நிதிக்கு ஐந்து கோடி என்பன நிபந்தனைகள்.

இப்படி மிரட்டி வாங்கப் படும் பணம் எங்களுக்கு வேண்டாம் என்று ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

ஒரு முதல்வரின் வேலை இதுவா?    மிரட்டி பணம் பிடுங்கியா தேச பக்தியை நிரூபிக்க வேண்டும்?

இருநாட்டு பிரச்னைகளுக்கு அப்பா ற்பட்டது களை.    பாகிஸ்தான் மக்களோடு இந்தியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

அங்கே ராணுவம், தீவிரவாதிகள் ,அரசு என்று மூன்று அதிகார மையங்கள் செயல் பட்டு வருகின்றன.

இன்னமும் இந்திய பாகிஸ்தான் இடையே வர்த்தகக உறவு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த  பனிரெண்டு  வருடங்களில் இரு நாடுகளுக்கு இடையே  எட்டு மடங்கு உயர்ந்திருக்கிறது.   அதாவது   345 மில்லியன் டாலரிலிருந்து   2.6  பில்லியன் டாலராக உயர்ந்திருகிறது .

வர்த்தக உறவை நிறுத்தினால் இந்தியாவுக்குத்தான் இழப்பு அதிகம்.  ஏனெனில் நாம் செய்யும் இறக்குமதியை விட ஏற்றுமதிதான் அதிகம்.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக பாகிஸ்தான் விளங்குவது  உண்மைதான் என்றாலும் அதை சமாளிக்க வேறு வகைகளில் வழி தேட   வேண்டுமே தவிர  உள்நாட்டு போலி தேசியவாதிகளின் மிரட்டலுக்கு ஒரு அரசு அடி பணிவது ஆபத்தானது.

ராஜ் தாக்கரே அரசியல் செய்வதற்கு தேசியம்தானா  கிடைத்தது??!

முத்தலாக் முறை விவாகரத்து அரசியல் சட்டப்படி செல்லுபடியாகுமா??

ஒரு முஸ்லிம் கணவன் தன் மனைவியை நோக்கி மூன்று முறை தலாக் தலாக் தலாக் என்று சொல்லிவிட்டால் அவன் தன் மனைவியை விவாக ரத்து செய்து விட்டான் என்று பொருள்.

அதைச் சொல்ல காரணம் எதையும் அவன் சொல்லத் தேவையில்லை.

ஏனெனில் அது குரான் அவனுக்கு கொடுத்திருக்கும் அதிகாரம்.

ஆனால் இதே உரிமையை மனைவி பயன் படுத்த முடியாது.

பல முஸ்லிம் பெண்கள் இந்த முறையை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தின் படிகளை தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

முதன் முறையாக மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் கடந்த அக்டோபர் ஏழாம்நாள் முத்தலாக் முறை பாலின சமத்துவத்திற்கும் மதச் சார்பின்மைக்கும் எதிரானது என்பதை விவாதிக்க வேண்டும் என்று சொன்னது.

வேறு  யாரும் இதை சொல்லியிருந்தால் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சொல்வது பா ஜ க அரசாயிற்றே?     பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கொள்கையில் உள்ள கட்சி சொல்லும்போது அதன் உள்நோக்கம் பற்றி சந்தேகம் வரத்தான் செய்யும்.

மத்திய அரசு தாக்கல் செய்த அவிடவிட்டில் பாலின சமத்துவம் , மதசார்பின்மை ,சர்வதேச உடன்படிக்கைகள் ,மத சம்பிரதாயங்கள்,  ஒப்பந்தங்கள் , பல இஸ்லாமிய நாடுகளில் நடைமுறையில் உள்ள முத்தலாக் முறை,  பல தார திருமண முறை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப் பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

மத்திய அரசின் இந்த முயற்சியை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் தனி சட்டத்தில் மத்திய அரசு தலையிடுவதை ஏற்க மாட்டோம் என்று கையெழுத்து இயக்கம் துவக்கி இருக்கிறார்கள்.

எந்த சீர்திருத்தமும் அந்தந்த மதத்தில் இருந்தே வர வேண்டும்.

இந்து மதத்தில் இருந்த  குழந்தை திருமணம் , தீண்டாமை  உடன்கட்டை ஏறுதல் , போன்ற பல கொடுமைகள்  இந்து சமுதாயத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக இறுதியில் சட்டத்தின் மூலமே தடுக்கப் பட்டு சட்டம் இயற்றப் பட்டன.

எனவே தவறுக்கு மதம் சார்ந்த உரிமைகள் துணை நிற்க கூடாது.

பொது சிவில் சட்டம் என்பதை தாண்டி முஸ்லிம் பெண்களின் உரிமை பாதுகாப்பு என்பதை மட்டுமே கணக்கில் கொண்டு சமுதாய நீதி காக்கும் நோக்கில் இதை அணுகுவதுதான் சரியாக இருக்கும்.

முஸ்லிம் அமைப்புகள் தங்களுக்குள் ஒரு பொது விவாதத்தை துவக்கி இது தொடர்பாக அரசுக்கு தகுந்த பரிந்துரையை அளித்தால் அதை அரசு ஏற்றுக்கொண்டு அமுல்படுத்த முன்வந்தால் உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக சரியான தீர்ப்பை அளிக்க வாய்ப்பாக அமையும்.

செய்வார்களா??!!

ஆனால் எந்தக் காரணம்  கொண்டும் கட்டாயப் படுத்தி சீர்திருத்தம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனெனில் அதன் விளைவுகள் சமுதாய ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாகவே அமையும்.