Home Blog Page 98

கோயில் யானையை கொடுமைபடுத்தும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் ?!

கோவில்கள் மடங்களுக்கு கொடுக்கப் படும் மாடுகள் யானைகள் உள்ளிட்ட விலங்குகளை பராமரிப்பது குறித்து ஒரு பொது நல வழக்கை ராதா ராஜன் என்ற ஒரு பெண்மணி வழக்கு தொடுத்திருந்தார்.

பராமரிக்க வசதியில்லாத திருவிடை மருதூர் மகாலிங்க சாமி கோயில் யானையை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்ட உயர் நீதி மன்றம் ஸ்ரீ ரங்கம் கோவிலில் உள்ள யானையை நடனமாட விட்டு கொடுமைப் படுத்தும் காட்சிகளை விடியோ காட்சிகளாக பார்த்து விட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது .

இந்த ராதா ராஜன் தான் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாதென்று  சர்வ தேச அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு உதவிகளைப் பெற்று போராடிக் கொண்டிருப்பவர்.

ஏன் இவர் கோவிலில் யானைகளை வைத்திருப்பதே கொடுமைப் படுத்துவதுதான் . அவைகளை அப்புறப் படுத்தி  காடுகளில் விட வேண்டும் என்று கோரிக்கை வைக்க வில்லை?

ஏனென்றால் அவை  கோவில் சம்பத்தப் பட்டவை.    அவர்கள் பிழைப்பு கெடக்  கூடாதல்லவா??!!

கொலம்பியாவில் அமைதி கொண்டு வந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இலங்கையில் தோற்றது ஏன்?

ஆர்ட் ஆப் லிவிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்.

இந்திய பிராமணர்.    உலகமெங்கும் ஆசிரமங்களை நிர்வகிப்பவர்.   உலக நாடுகளில் அவர் ஆன்மிகத்தை அறிமுகப் படுத்தும் முறை வேறு.     அங்கெல்லாம் தத்துவங்களாக மட்டுமே உபதேசம் இருக்கும்.

இந்திய ஆன்மிக குருமார்கள் யாரும் இங்கே பாமர இந்து கட்டி மாரடித்துக் கொண்டிருக்கும் புராண இதிகாச குப்பைக் கதைகளை உலக நாடுகளில் விநியோகிப்பதில்லை.

அந்தக்  கதைகளை அப்படியே ஆன்மிக கருத்து தத்துவ உவமைகளாக எடுத்து உதிர்ப்பார்கள்.

தர்மம் என்றும் வெல்லும் அல்லவா.   இவர்களும் ஜெயித்து கொண்டிருகிறார்கள்.

கொலம்பியாவில் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இடது சாரி  பார்க்  FARC கொரில்லாக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உள்நாட்டுப் போர் நடந்து வந்தது.

அவர்களை தனது கனடிய ஆசிரம தொண்டர்களை வைத்து தொடர்பு ஏற்படுத்தி கொலம்பியாவில் பல குணப்படுத்தும் மற்றும் மறுவாழ்வு மையங்களை தொடங்கி நடத்தி அந்த அரசின் விருதையும் பெறுகிறார்.

அதன் மூலம் அந்த நாட்டு போராளிகளையும் தொடர்பு கொண்டு பேசி அவர்களுக்கும் காந்திய சிந்தனைகளை அறிமுகப் படுத்தி அகிம்சை போராட்டத்துக்கு தயார்  படுத்துகிறார்.

இறுதியில் அரசிற்கும் போராளிகளுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வைக்கிறார்.

இந்த சமாதான முயற்சியில் ஈடுபட்ட அதன் அதிபர் ஜூவான் மானுவேல் சண்டோஸ் 2016 ம் ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெறுகிறார்.

பாராட்டுவோம்   மென்மேலும் பல நாடுகளில் இதேபோல் வெற்றியை பெற வாழ்த்துவோம்.

இதே போல் ஸ்ரீலங்கா கொசோவோ, மணிப்பூர், நேபாள்,காஷ்மீர் பீகார், ஈராக் மற்றும் சிரியா போன்ற இடங்களில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்தி ருக்கிறார்.

முன்பு பலமுறை இலங்கையில் முயன்று  தோல்வி அடைந்தவர் தான் இவர்.

எல்லாம் சரிதான்.ஒன்றே ஒன்று மட்டும்தான் இடிக்கிறது.இவரைப் போன்ற ஆன்மிக குருமார்கள் ஏன் பணக்காரர்களையே தேர்ந்தெடுத்து போதனை செய்கிறார்கள்.?

சிம்லாவில் ஒரு ஆன்மிக விழாவை ஏற்பாடு செய்து கோடிக்கணக்கில் செலவு செய்து வசதியான பக்தர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியவர் இவர்தான்.  அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்றபோது மறுத்து பின் நீதிமன்றம் உத்தரவிட்ட உடன் செலுத்தியவர்.

ஏழைகளுக்கு ஏன் இவர்களின் போதனைகள் சென்று  அடைவதில்லை.       அவர்களை ஆன்மிகப்  பாதைக்கு அழைத்து தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களில் இருந்து அவர்களை விடுவிக்க ஏன் பிரச்சாரம் செய்வதில்லை. ?

அமைதிக்கு ஆன்மிக தேடல் தொடர்பு அவசியம் என்னும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்களே கொஞ்சம் இந்தியாவிலும் ஆன்மிகத்தை பரப்புங்களேன்??!!    ஏழைகளை மூட நம்பிக்கைகளில் இருந்தும்  கை தூக்கி விடுங்களேன்.??!!

மீண்டும் ஓ பி எஸ் ! ஆளுநர் அறிக்கை தீர்வைத் தருமா?

முதல்வர் ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக நீடிப்பார்.

முதல்வரின் இலாகாக்கள் ஓ பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டு அமைச்சரவைக் கூட்டங்களுக்கு அவரே தலைமை வகிப்பார் .    இந்த ஏற்பாடு ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்கும் வரை நீடிக்கும்.    இதுதான் ஆளுநர் இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் சாரம்.

முக்கியமாக இந்த அறிவிப்பை அவர் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின் பேரிலேயே வெளியிட்டிருக்கிறார்.

இதில் பல செய்திகள் உள்ளடங்கியிருக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தும் நிலையில் இருக்கிறார்.    எந்த தேதியில் எந்த இடத்தில் எந்த நேரத்தில் ஆளுநர் இந்த அறிவுருத்தலைப் பெற்றார்  என்பதை ஆளுநர் அறிவிக்காவிட்டாலும்   அதைக் கேட்பது நாகரிகமில்லாத செயலாக பார்க்கப் படும்.

ஆட்சி நிர்வாகத்தை பொறுத்த வரையில் இனி யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.

பொறுப்பில்  உள்ளவர்கள் சமாளிக்க வேண்டிய பிரச்னைகள் ஏராளம்.

ஆனாலும் முதல்வர் பற்றிய வதந்திகள் பரவுவதை இந்த அறிவிப்பு தடுத்து நிறுத்துமா?

அதையும் தடுக்கும் விதத்தில் இதைப்போல்  ஏதாவது செய்யுங்களேன்??!!

 

ஜெயலலிதா பற்றிய வதந்திகள் பரவ அனுமதித்த குற்றவாளிகள் யார்?

பிரான்ஸ் தமிழச்சி என்பவர் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்திகள் பரவ காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டிருகிறார்.

அவரும் தான் விசாரணையை எதிர்நோக்க தயாராக இருப்பதாக அறிவித்திருபதாக தெரிகிறது.

இதற்கிடையே தமிழகத்தில் இருவர் மீது வதந்திகளை பரப்பியதாக வழக்கு பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.

அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஒரு நபர் பேசுவதாக குறிப்பிட்டு முதல்வர் உடல்நிலை பற்றிய  ஒரு ஆதாரமற்ற செய்தி வாட்ஸ் அப்பில் தமிழகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது.

வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பதை யாரும் குற்றம் சொல்லப் போவதில்லை.

அதுவும் சிகிச்சையில் இருக்கும்  முதல்வர் மீது குற்றம் காண்பதோ குறை சொல்வதோ மனிதாபிமானற்ற செயல்.     எனவே முதல்வர் மீது குறை காணும் பேச்சுக்கே இடமில்லை .

லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட  ஒரு தலைவர் மருத்துவ      மனையில் இருக்கும்போது அவரின் சிறப்புக்கு களங்கம் வராமல் பார்த்துக்கொள்ளும் கடமை எல்லாரையும் விட அவரது கட்சி நிர்வாகிகளுக்கும் அமைச்சரவை சகாக்களுக்கும்தான் அதிகம் இருக்கிறது. அடுத்த கடமை  அரசு அதிகாரிகளுக்கு .

இந்த மூவரும் தாங்கள் கடமையை  செய்திருக்கிறார்களா ?

கட்சி நிர்வாகிகள் கூடி இது பற்றி கூடி கலந்து பேசியதாகவோ பிரச்னையை கையாளுவது சமாளிப்பது பற்றிய கருத்துப் பரிமாற்றம் செய்ததாகவோ எந்த செய்தியும் இல்லை.

அமைச்சரவை  சகாக்கள் மருத்துவ மனையில் கூடி நின்று காத்திருப்பதிலும் மற்ற  சகாக்கள் கோயில் கோயிலாக போய் பிரார்த்தனை காவடி எடுத்தல் அங்கப்ரதட்சணம் யாகம் வளர்த்தல் என்று தங்கள் நம்பிக்கையையும்  விசுவாசத்தையும் விளம்பரப்படுத்துவதை தவிர வேறு என்ன வகையில் செயல்பட்டார்கள் ?

அமைச்சரவை சார்பில் எந்த அமைச்சராவது முதல்வர் உடல்நிலை  பற்றிய அறிக்கை  வெளியிட்டாரா?

எம்ஜியார் உடல் நலிவுற்றபோது அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் எச் வி ஹண்டே முதல்வரின்  உடல்நிலை பற்றிய அறிக்கை வெளியிட்டு வந்தாராம்.

இப்போது அப்போலோ மருத்துவமனை தரும் அறிக்கைகள் மட்டுமே மக்களுக்கு கிடைக்கிறது.

இங்கிலாந்தில் இருந்தும்   டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தும் சிறப்பு மருத்துவர்கள் வந்து கவனித்துக் கொள்கிறார்கள் என்பது ஆறுதல் தரும் செய்தி.

ஆனால் மருத்துவமனையே முதல்வர் இன்னும் நீண்ட காலம் கண்காணிப்பில்  இருக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்ட பிறகு அரசு அதிகாரிகளின் கடமை  என்ன?

ஒரு புகைப்படத்தை வெளியிடுங்கள் என்ற கலைஞரின் கோரிக்கை ஏற்கப் பட வில்லை.

உயர்நீதிமன்றமும் டிராபிக் ராமசாமியின்  முதல்வரின் மருத்துவ அறிக்கை பற்றிய கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

எதையும் யாரும் மறைக்க வில்லை என்னும்போது யார் என்ன வதந்தியை கிளப்பி விட  முடியும்?

அப்படி யாரும் வதந்தியை கிளப்ப முடியாத வகையில் அவர்களது வாயை அடைக்கும் வகையில் தகுந்த செய்தியை ஆதாரத்துடன் வெளியிட வேண்டிய கடமை யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தங்கள் கடமையை செய்திருக்கிறார்களா ?

அப்போலோ அறிக்கை மட்டுமே போதும் என்றால் வதந்தி பரவ நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்று  பொருள்!

யார்  வெளியிடவேண்டும் என்ன வெளியிட வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டியவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களே?!

வதந்தி பரவ அனுமதித்து விட்டு வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை என்றால் நாடு நகைக்கும்  என்பதை மறவாதீர்??!!

 

 

 

பொறுப்பு முதல்வர் வேண்டுமா வேண்டாமா?!

ஜெயலலிதா உடல்நலம் பெற்று மீள வேண்டும் என்பது எல்லாரது எதிர்பார்ப்பாக இருந்தாலும் அதுவரை நிர்வாகம் முடங்க வேண்டுமா என்ற கேள்விக்கு பலரும் பல கருத்துகளை சொல்லி வருகிறார்கள்.

சுப்ரமணியசாமி ஜனாதிபதி ஆட்சி வேண்டும் என்கிறார்.   வெங்கையா நாயுடு அதிமுக கட்சியே முடிவு செய்யவேண்டும் என்கிறார்.   ஸ்டாலின் பொறுப்பு முதல்வர் வேண்டும் என்கிறார்.   திருநாவுக்கரசர்  தேவையில்லை என்கிறார்.  கலைஞர் ஒரு புகைப்படத்தையாவது  வெளியிடுங்கள் என்று சொன்னார். திருமாவளவன் ஏதாவது ஒரு மாற்று ஏற்பாடு வேண்டும் என்றார்.   இப்படி ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லி வருகிறார்கள்.

அண்ணா , எம்ஜியார் போன்றவர்கள் உடல் நலம் குன்றியபோது செய்த ஏற்பாடுகளை ஒட்டியாவது ஏதாவது செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்துக் கொண்டிருக்கிறது.

அதிமுக கட்சி தலைவர்கள் கூடி முடிவு செய்ததாக செய்தி வந்தாலாவது கொஞ்ச நாள் பொறுத்திருக்கலாம்.      அப்பலோ மருத்துவமனை  நீண்டகாலம் முதல்வர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என  அறிக்கை வெளியிட்டபின் பொறுப்பான முடிவை எடுக்கத் தவறுவது அதிமுக கட்சி குழப்பத்தில் இருக்கிறது என்பதன் அடையாளம்..     முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது யார் எடுப்பார்கள்.    அவர்கள் பின்னால் கட்சி நிற்குமா?

இம்மாதிரியான பல கேள்விகளுக்கு  இடம்  கொடுக்காமல் முடிவுகள் எடுக்கபட்டிருந்தால்  கட்சி வலுவாக நீடிக்கும் என்று நம்பலாம்.

மாறாக இப்போதே குழப்பினால் சோதனை வரும்போது கட்சி கலகலத்து விடும் என்ற கருத்துதான் மேலோங்கும்.

ஸ்டாலின் சொல்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.   இதில்  என்ன அரசியல் இருக்கிறது?

வதந்திகளை பரப்புவதாக சிலர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.     ஏன்  இடம் கொடுக்கிறீர்கள்?

முதல்வர்  பேசும் நிலையில் இருந்தால் மாற்று ஏற்பாடு தேவையே இல்லை.    மாறாக நிலைமை இருந்தால் எம்ஜியார் காலத்தில் செய்ததுபோல் ஆளுநருடன் கலந்து பேசி ஐந்து பேர் கொண்ட சப் கமிட்டி ஒன்றை போட்டு அவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை தந்து அதன்பின் அவர்களது ஆலோசனையின் பேரில் அவர்கள் சொல்லும் ஒருவரை அமைச்சரவை கூட்டங்களுக்கு தலைமை ஏற்க அனுமதித்து அவருக்கு முதல்வரின் இலாகாக்களை ஒதுக்கி அறிக்கை வெளியிட்டால் மட்டுமே அமைச்சரவை இயங்க முடியும்.

இப்போது முதல்வரின் இலாகாக்களை யார் கவனிப்பது?   அதிகாரிகளிடம் விட்டு விடுவதா?

எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பது நீடித்தால் மத்திய அரசு தலையிடும் தலையிட வேண்டும் .

அப்போது மாநில சுயாட்சி  என்று கதறுவதில்  பயனில்லை.

 

உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக யார் காரணம்? ஆளப்போவது அதிகாரிகளா ? மக்கள் பிரதிநிதிகளா?

பல காரணங்களுக்காக உள்ளாட்சி தேர்தலை உயர் நீதி  மன்றம் தள்ளி வைத்து விட்டு டிசம்பருக்குள் மீண்டும் நடத்த உத்தரவிட்டிருக்கிறது.

விதிப்படி இரண்டு அறிவிக்கை களுக்கு பதிலாக ஒரு அறிக்கை மட்டுமே வெளியிட்டது தேர்தல் ஆணையம்.      முதல் நாள் நள்ளிரவில் அறிக்கை வெளியிட்ட பிறகு அடுத்த நாளே ஆளும் கட்சி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது.     எதிர்கட்சிகளுக்கு அந்த வாய்ப்பு இல்லை. மாவட்ட அரசிதழில் மட்டும் அறிக்கை வெளியிட்டு விட்டு தமிழ்நாடு அரசிதழில் ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தது நீதிமன்றம். குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களை  தவிர்க்க கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.     இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் என்ன பதில் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.    ஒன்று  மட்டும் நிச்சயம்.   அறிவித்த அறிவிப்பு ஆளும் கட்சியின் தாக்கீதில் வெளியிடப் பட்ட ஒன்று.

எஸ் டி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வில்லை என்று மட்டும்தான் திமு க மனுபோட்டது.    ஆனால் நீதிமன்றம் பல காரணங்களை ஆராய்ந்து தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

இருபது கோடி ரூபாய் தண்டச் செலவு என்பது மட்டுமின்றி எத்தனை குழப்பங்கள்.?

பொதுத் தேர்தலை விட உள்ளாட்சி தேர்தல்கள் மிகவும் அதிகார மிக்கவை யாக மாறி விட்டன.     கோடிக்கணக்கில் வரவு செலவு மட்டுமின்றி கட்டுமான அனுமதிகள் தடையில்லா சான்றிதழ்கள் வழங்குவதில் கோடிக்கணக்கில் நடக்கும் பேரங்கள் அதிகரித்து  விட்டதுதான் போட்டிகள் அதிகரித்த தற்கு காரணம்.

சென்னையை சுற்றி நடந்த பல கொலைகளுக்கு இந்த ரியல் எஸ்டேட் பேரங்கள் தான் காரணம் .

1991 ல் தாழ்த்தப்  பட்ட ஒருவர் கூட இல்லாத வார்டை தாழ்த்தப்பட்டோர் தொகுதியாக அறிவித்ததை எதிர்த்து திமுக தடை வாங்க அதை காரணம் காட்டியே ஐந்தாண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தலை அதிமுக நடத்தவில்லை.

2011 லும் திமுக நீதிமன்றம் சென்றபோது ஏன் முன்கூட்டியே ஆணையத்திடம் புகார் தெரிவிக்கவில்லை என்று தடை விதிக்க மறுத்து  விட்டதால்  இந்தாண்டு முன்கூட்டியே தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தது திமுக.   ஆனால் ஆணையம் கட்சிகளை கலந்து ஆலோசிக்க மறுத்து விட்டது.

எனவே இந்த தடைக்கு முற்று முழுதாக தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

முதல்வர்  உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கும் நேரத்தில் முடிவெடுப்பது யார்.?

இரண்டு மாதத்தில் தேர்தல் வருமா?   அதிகாரிகள் ஆட்சியே தொடரட்டும் என்று ஆளும் கட்சி விட்டு விடுமா ??

 

அப்போல்லோவை நோக்கி தவிப்பில் தமிழகம்??!! தத்தளிக்கும் நிர்வாகம் ??!!

சென்ற மாதம் 22 ம் தேதி அப்போல்லோவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா இன்றோடு 22 நாட்களாக சிகிச்சையில் தொடர்கிறார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி உமாபாரதி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா ” சொல்ல சொல்ல அதிகாரிகள் தயாரித்ததாக கூறப்பட்ட உரையை தலைமை செயலாளர் படித்தார்.

ஆனால் இதுநாள்வரை முதல்வர் சிகிச்சை பெறும் புகைப்படம் எதுவும் மருத்துவ மனை நிர்வாகமோ அதிகாரிகளோ கட்சிப் பொருப்பாளர்களோ வெளியிடவில்லை.

இந்த மௌனம் எத்தனை வதந்திகளுக்கு விட்டிருக்கிறது தெரியுமா>??    என்னென்னவோ செய்திகள் வாட்ஸ் அப் மூலம் பரவியது.    இதை மறுப்பார் யாருமில்லை.   நடவடிக்கை எடுப்பாரும் இல்லை.

அ திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் யார் என்று இன்னமும் தீர்மானம் ஆகாத நிலையில் இப்போது நடப்பது அதிகாரிகளின் ஆட்சியே!!

முதல்வர் இன்று எந்த கூட்டத்திற்கும் தலைமை ஏற்கும் நிலையில் இல்லை.     அவர் தலைமை ஏற்காத எந்தக் கூட்டமும் சட்ட பூர்வ அமைச்சரவைக் கூட்டம் ஆகாது.. எந்த முடிவையும் எடுக்க முடியாது.

பிரச்னையை சமாளிக்கக் கூடிய வகையில் எந்த அமைப்பும் இருக்க வேண்டும் . .   அது கட்சியோ அல்லது ஆட்சியோ எதுவாக இருந்தாலும் தவிர்க்க இயலாத சூழ் நிலையில் சமாளிக்க வேண்டும்.

அந்த நிலையில் அ திமுக இல்லையென்றால்  எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.

சுப்பிரமணியன் சுவாமி ஆளுநர் ஆளட்டும் என்கிறார்.    இந்த மௌனம் கலைய வேண்டும்.

ஜெயலலிதா குணம் பெற்று இல்லம் திரும்பி தனது வழமையான பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே எல்லாரின் விருப்பமும்.    அனைத்துக்  கட்சி தலைவர்களும் தங்களது பண்பாட்டை உணர்வை கண்ணியத்துடன் வெளியிட்டு வருவது ஆறுதல் அளிக்கிறது.

நாம் இன்னும் முழுமையாக கெட்டு விட வில்லை.    ஆனால் அரசியல் அதிகாரம் இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ என்ற அச்சமும் எல்லார் மனதிலும் இருக்கிறது.

நீண்ட நாள் முதல்வர் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவ மனை அறிக்கை வெளியிட்ட பிறகு மூத்த அமைச்சர்களின் கடமை என்ன.    ???

கட்சியின் தலைமை கூடி விவாதித்ததாக கூட செய்திகள் இல்லை.

என்ன நடக்கிறது என்பது வெளிப்படையாக இல்லாத வரையில் எல்லா வதந்திகளும் ரெக்கை கட்டி பறப்பதை யாரும் தடுக்க முடியாது.

ஒரு கட்டத்தில்  மத்திய அரசு கூட தலையிடும் சூழல் வரலாம்.   ரத்தபந்தங்களை ஆட்சி அதிகாரத்தின் பக்கத்தில் விடாமல் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தவர்  ஜெயலலிதா.

அவரது அண்ணன் மகள் கூட மருத்துவ  மனையில்  அவரை சந்திக்க முடியவில்லை.

எம்ஜியாருக்கு நடந்தது அவரது வாரிசுக்குமா  என்ற கேள்வி எல்லார மனதிலும் வாட்டுகிறது உண்மை.

அரசியல் முதிர்ச்சி தமிழர்களின்  அடையாளம் என்பது உலகுக்கு நாம்தர வேண்டிய செய்தி.

விலகட்டும் திரை.

 

 

 

அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு வாழ்கிறாராம்???!!! சொல்லிக் கொள்கிறார் ஜெயலலிதா!!!

அண்ணாவின் 108  வது பிறந்த நாளில் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா பல முரண்பாடுகளை  உதிர்த்து இருக்கிறார்.

அண்ணா வைப் பற்றி சொல்லும்போது ‘ பெரியாரது சமூக சீர்திருத்த கருத்துகளுக்கு செயல் வடிவம் தந்த தியாகச் செம்மல் , தமிழ்நாட்டில் பகுத்தறிவு தழைத்தோங்கவும் ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமத்துவ சமுதாயம் உருவாகிடவும் தமிழர் என்ற ஓர் அடையாளத்தின் கீழ் தமிழ்ச் சமூகம் வாழ்ந்திடவும் தன் வாழ்நாள் எல்லாம் உழைத்த ஒப்பற்ற தலைவர் ‘ என்று புகழாரம் சூட்டுகிறார்.

தீய சக்தி என்று அடிக்கடி கலைஞர் கருணாநிதியை மறைமுகமாக குறிப்பிடும் ஜெயலலிதா தன்னைப் பற்றி கூறும்போது ‘ மக்களுக்கு தொண்டு  செய்ய இந்த வாய்ப்பு எனக்கு அருளப் பட்ட ஒன்றாகவே ஏற்று அர்ப்பணிக்கப் பட்ட தவ வாழ்வினை நான் வாழ்ந்து வருகிறேன்.’ என்று முடிக்கிறார்.

மேலும் கடைசியில் ‘ தமிழ்நாட்டில் தனி மனித காட்டாட்சிக்கோ ஒரே குடும்பத்தின் வாரிசு ஆட்சிமுறைக்கோ ஜனநாயக விரோத செயல்களுக்கோ எப்போதும் இடமில்லை ‘ என்றும்   முடிக்கிறார்.

படிக்கும் எவருக்கும் இவர் எப்போது தமிழர் அடையாளம் காப்பாற்ற பாடுபட்டார்  இவருக்கு யார் தொண்டு செய்ய வாய்ப்பு அருளினார்கள்  இவர் வாழ்வது  தவ வாழ்வா  என்ற கேள்விகள் எழுவதை தவிர்க்கவே முடியாது .

தலைமைப் பதவியை கைப்பற்ற இவர் ஜானகியோடு போராடியது யார் தூண்டி? தலைமையை கைப்பற்றி எல்லாரையும் விரட்டி ஓரங்கட்டி அடிமைப் படுத்தி காட்டாட்சி நடத்தி வருகிறாரே அதுதான்  தவ வாழ்வா??

இவர் கட்சியில் ஜனநாயகம் இருப்பது யாருக்காவது தெரியுமா?    தனி மனித காட்டாட்சி என்று தன்னை தானே சொல்லிக் கொள்கிறாரா?

சொத்துக்  குவிப்பு வழக்கில் மாட்டி சிறைக்குச் சென்றது உச்ச நீதி மன்ற மேல்முறையீட்டில் பதவி தொக்கி நிற்பது எல்லாம் இவருக்கு தெரியாதா?   அல்லது யாருக்கும் நினைவிருக்காது  என்று நம்புகிறாரா?

அலிபாபாவும்  நாற்பது  திருடர்களும் என்று கேள்விபட்டிருக்கிறோம் .         இன்று ஊழல் செய்வதையே ஒரு கட்சியின் அடி மட்டம் முதல் மேல் மட்டம் வரை வரையறை செய்யப் பட்ட ஒரு நிறுவனமாக உருவாக்கி அதில் பங்கேற்போர்  அனைவரையும் பந்து போல் தூக்கிப் போட்டு விளையாடுவதுபோல் ஆடிக்கொண்டிருகிறாரே  அதற்குப் பெயர் ஆட்சியா??

அடிமைகளின் கூடாரம் என்று ஒரு முன்னாள் அடிமை சசிகலா புஷ்பா சொல்கிறாரே அதில் உண்மையில்லையா?

ஜெயலலிதாவின் அறிக்கை அவரையே சுட்டிக் காட்டும் என்பதை அறியாமலே அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.   சும்மா இருந்திருக்கலாம் .

தீக்குளித்த விக்னேஷுக்கு வீர வணக்கம்??!! தொடர வேண்டாம் இந்த கொடூரம்??!!!

கன்னட வெறியர்களை கண்டித்து நடந்த முழு அடைப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தொண்டர் விக்னேஷ் சென்னையில் தீக்குளித்து மாண்டிருக்கிறார் .

ஈழத் தமிழர்கள் படுகொலையின் போது உயிராயுதம் ஏந்தி மாண்ட முத்துக்குமார் அவருக்குப்பின் இருபது தமிழர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.   மாள்வதா தமிழர் பண்பு என்ற ஏக்கம் தவிர்க்க இயலவில்லை.

ஜெயலலிதா சிறைக்குப் போனபோது மாண்டார்களே இருநூறு பேர் அவர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது. ?

உச்சநீதி மன்றம் தந்த தீர்ப்பையே மதிக்காதவர்கள் எப்படி தீர்வை நோக்கி நகர்வார்கள்.?     ஆனாலும் ஒரு நூற்றாண்டைத் தாண்டிய பிரச்னை ஏதோ ஒரு முடிவுக்கு வந்துதானே தீரவேண்டும்.

விக்னேஷின் குடும்பம் அவரை நம்பியே இருந்திருக்கிறது.      தமிழக அரசு இதுபற்றி எந்த அறிக்கையும் தரவில்லை.    அவரது குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கியே ஆக வேண்டும்.     கர்நாடக அரசு துப்பாக்கி சூட்டில் இறந்தவரின் குடும்பத்துக்கு மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து உள்ளதே?

பொதுவேலை நிறுத்தம் போராட்டம் நடக்கும் போதே அ தி மு க வினர் இன்றே உள்ளாட்சி தேர்தலுக்கு மனு வாங்கும் வேலையை திருவிழா போல்  நடத்த வேண்டுமா?

அடுத்த நாள் தொடங்கினால் என்ன குடி முழுகி  விடும். ?

ஆளும் கட்சியின் இந்த இரட்டை வேடத்தையும் மீறி  பொது வேலை  நிறுத்தம் எல்லாக் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி  பெற்றது  நல்ல அறிகுறி.

விக்னேஷின் தியாகம் வீண் போகாது!!

பாராலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் !!!தமிழகத்தில் கொண்டாட்டம் !!!!!!

ஒலிம்பிக்கில் தங்கம் கிடைக்காத குறையை பாராலிம்பிக்கில் தமிழகத்தின் மாரியப்பன்  தங்கவேலு உயரம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று தமிழகத்திற்கு  பெருமை சேர்த்திருக்கிறார்.     தாண்டிய உயரம்    1.89 மீட்டர்.

விபத்தில் சிக்கி ஒரு காலின் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை இழந்த மாரியப்பன் ஐந்து வயது முதலே விளையாட்டில் ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்று வந்திருக்கிறார்.

சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில்  தந்தை ஆதரவு இல்லாமல் தாயின் அரவணைப்பில் வாடகை வீட்டில் வசித்து சகோதர சகோதரியின் பாச பிணைப்பில் வளர்ந்த மாரியப்பன் செய்திருக்கும் சாதனை , மாற்றுத் திறனாளிகளின் மத்தியில் பெருத்த உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம்  இல்லை.

தமிழக அரசு அறிவித்திருக்கும் இரண்டு கோடி மற்றும் மத்திய அரசு அறிவித்திருக்கும் எழுபத்தி ஐந்து லட்சம்  பரிசுகள் அவர்கள் குடும்பத்தின் எதிர் காலத்துக்கு உத்தரவாதம் அளிப்பதாக அமையும்.

தன்னம்பிக்கையும்  தளரா முயற்சியும் எப்போதும் வெற்றி பெறும் என்பதற்கு மாரியப்பன் மிகச் சிறந்த உதாரணம்.

மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்று  வரும் வீரர்களுக்கு அந்த மாநில அரசுகள் அளிக்கும் ஊக்க பரிசுகளோடு ஒப்பிட்டுப் பார்க்க நமக்கு சங்கடமாக இருக்கும்.    இன்னும் கொஞ்சம் உற்சாகப் படுத்தலாம்.

இன்னும் பல வெற்றிகளை அந்தத் தம்பி பெற வேண்டும்.