Home Blog Page 99

தமிழரை அடித்து உதைத்து முகநூலில் பதிவிட்ட கன்னட வெறியர்கள்??!! கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் அரசு??

உச்சநீதி மன்றம் காவிரியில் தண்ணீர் விடச் சொல்லி உத்தரவிட்டது .       கர்நாடகாவில் பந்த் நடத்துகிறார்கள்.    தமிழ்நாட்டு பேருந்துகள் தாக்கப் படுகின்றன.     பெங்களுரு செல்லும் பேருந்துகள் நிறுத்தப் படுகின்றன.   அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது.     ஆனால் பெங்களுருவிலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள் வந்து போகின்றன.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக பெங்களுருவில் இருந்து ஓர் தமிழர் முகநூலில் ஒரு க்பதிவு செய்கிறார்.     சென்னை அமைதியாக இருக்கிறது.   ஆனால் பெங்களுருவில் ஏன் அமைதி இல்லை என்று கேட்கிறார்.

அவரது முகவரியை தேடி ஆளைப் பிடித்து கூட்டமாக கூடி நின்று அடிக்கிறார்கள்.   காவிரி கர்நாடகத்துக்கே  சொந்தம் என்று சொல்ல வைக்கிறார்கள்.  அவர் கன்னடத்திலேயே பேசுகிறார்.   எல்லாவற்றையும் பதிவு செய்து வெளியிடுகிறார்கள்.    நோக்கம் என்ன ?    பிற கன்னடர்களுக்கு நீங்களும் இப்படி செய்யுங்கள் என்பதுதானே?

எத்தனை நாட்களுக்கு தமிழர்கள் அமைதி காக்க வேண்டும்?

பிரச்சினை வேறு திசையில் பயணிக்கிறது .

காங்கிரஸ் அரசு சட்ட ஒழுங்கை காக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

தமிழர் வெறுப்பு விதைக்கப் படுகிறது. வளர்க்கப் படுகிறது.  ஆனால்  வஞ்சிக்கப் பட்ட தமிழகம் அமைதி காக்கிறது.

தமிழக அரசு மௌனம் காக்கிறது.    உணர்வாளர்கள்  கொதிக்கிறார்கள் !

விரும்பத்தகாத விளைவுகளுக்கு இரண்டு மாநில அரசுகளே பொறுப்பு??!!

வருமுன் காப்பாளர்களா?    வந்தபின்னும் வஞ்சிப்பார்களா?

மருத்துவப் படிப்பிற்கு விளையாட்டு கோட்டா சட்ட விரோதம்??!! ஹைதராபாத் உயர் நீதி மன்றம் தீர்ப்பு ??!!

ஏற்கெனவே விளையாட்டில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம்.

விளையாட்டு கோட்டாவில்  டெண்னிகாயிட், நெட்பால், த்ரௌபால்  போன்றவற்றை சேர்க்க ஆந்திர அரசு முயற்சித்தது.

விளையாட்டு கோட்டாவில் தன்னை சேர்க்காததை எதிர்த்து போடப்பட்ட வழக்கில்  தீர்ப்பு சொன்ன நீதிமன்றம்   விளையாட்டு கோட்டா  என்பதே அரசியல் சாசன சட்டத்திற்கு முரணானது என்று தீர்பளித்தது. .

விளையாட்டு  கோட்டா என்பதே தாழ்த்தப் பட்டவர்களுக்கு அரசியல் சட்டம் தந்த உத்தரவாதத்தை நீர்த்துப்  போகச்செய்யும் உள் நோக்கம் கொண்டது என்றும்  குறிப்பிட்டது.

கோட்டா நிற்குமா  அல்லது உச்ச நீதி மன்றம் தலையிட்டு நீடிக்கவைக்குமா ?

உள்ளாட்சிகளுக்கு மீண்டும் மறைமுக தேர்தல் ஏன் ? ஜெயலலிதாவின் திடீர் முடிவுகள் ??!!

தமிழ்நாட்டில் பிரச்னைகளை  திசை திருப்ப ஜெயலலிதா  அடுத்தடுத்து பல பொருளற்ற சில்லறை காரியங்களை செய்து கொண்டிருப்பது வழக்க மாகி விட்டது.

அமைச்சர்கள் மாற்றம் , அதிகாரிகள் மாற்றம்  கட்சி நிர்வாகிகள் மாற்றம் என்று நாளுக்கொரு அறிவுப்புகள் தன்னை தூக்கி நிறுத்தும் என்றும் தன் மீதான அச்சத்தை அதிகரிக்கும் என்றும் ஜெயலலிதா நம்புகிறார்.

முன்பு உறுப்பினர்கள் சேர்ந்து தலைவரை உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுத்து வந்தார்கள்.   அதை மாற்றி தலைவரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க வகை செய்தவர் ஜெயலலிதா.

இப்போது மீண்டும் மேயரையும் நகராட்சி  பேரூராட்சி தலைவரையும் அந்தந்த மன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய ஜெயலலிதா முடிவெடுத்துள்ளார்.

தோல்வி பயமா?    அல்லது ஆட்சி அதிகாரத்தை வைத்து செலவைக் குறைத்து மீண்டும் அராஜக வழியில் எல்லாவற்றையும் கைப்பற்றி விட முடிவா?

பொதுத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் கண்ட குறைகளையே தேர்தல்  ஆணையம் சரி செய்ய வில்லை.       அப்பொழுதும் பணம் தான் வெற்றியை முடிவு செய்தது.     அந்த வாக்காளர் பட்டியலை வைத்து நடத்தப் படும் தேர்தலில் என்ன மாற்றத்தை கொண்டு வந்து விட முடியும்?

அகில இந்திய தேர்தல் ஆணையம் செய்ய முடியாததை மாநில அரசின் கட்டுபாட்டில் இருக்கும் மாநில தேர்தல் ஆணையம் என்ன செய்து விட முடியும்?

சட்ட மன்றத்திலேயே  ஒரு அமைச்சர் காலில் விழுகிறார்.    உறுப்பினர் நடராஜ் முதன் முதலில் பேசி முடிக்கும் போது கபாலி ஸ்டைலில்  ”  அம்மாடா ” என்று முடிக்கிறார்.  ஒரு அமைச்சர் ஆமாம் நாங்கள் எல்லாம் அடிமைகள்தான் என்று பெருமையுடன் பேசுகிறார்.     சட்ட மன்றம் தனது மாண்பை  இழந்து வெளிறி நிற்கிறது.

ஆண்கள் எல்லாம் அடிமைகள்தான் என்று குப்புற விழுந்து கிடக்கும்போது  ஒருபெண் மட்டும் தன்னால் எதிர்த்தும் நிற்க முடியும் என்று களத்தில் நிற்கிறார்.   அவர்தான் சசிகலா புஷ்பா.     பிணை கிடைக்குமா இன்னும் பின்னப்பட இருக்கும் சதி வலைகளில் இருந்து அவரால் மீண்டு வர முடியுமா என்பதை காலம் தான் நிர்ணயிக்க வேண்டும்.

மக்களின்கவனத்தை திசை திருப்ப இம்மாதிரி அறிவிப்புகள் உதவலாமே தவிர வேறு எந்த பலனையும் இந்த முடிவு யாருக்கும் அளிக்கப் போவதில்லை.

 

 

ஒலிம்பிக்கில் இந்தியா – ஏமாற்றம் ?? ஆறுதல் தந்த சிந்து ,சாக்க்ஷி மாலிக் !!!!

மக்கட்தொகை அடிப்படையில் இந்தியா ஒலிம்பிக்கில் பல தங்கங்கள் அல்லது  வெள்ளிகள் பெற்றிருக்க  வேண்டும்.

ஊக்க மருந்து உட்கொண்டதாக நர்சிங் யாதவ்  நான்கு ஆண்டுகள் தடை செய்யப் பட்ட பின்னணியில் நம் நாட்டிலேயே அவருக்கு எதிராக சதி செய்யப் பட்டதாக வந்த செய்திகளை ஆய்வு செய்யகூட நம்மால் முடிய வில்லை.

பெண்கள்தான் நாட்டின் மானத்தை காப்பாற்றி இருக்கிறார்கள்.      பெண் சிசுக்கொலை யை நாம்  தடுத்திரா விட்டால் சாக்ஷி மாலிக் போன்றவர்கள் என்னவாகி இருப்பார்கள் என்ற கேள்வியை எழுப்பி கிரிகெட் வீரர் ஷேவாக் அருமையாக விமர்சித்திருந்தார்.

தீபா கர்மாகர்  சானியா மிர்சா , சைய்னா நேவால்  லலிதா பாபர்  போன்ற பெண்மணிகள் முன்னணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பி வி சிந்து பெற்ற வெள்ளியும் சாக்ஷி பெற்ற வெண்கலமும் இந்தியாவின் மானத்தை காப்பாற்றி இருக்கின்றன.

தெலுன்கானாவும் அரியானாவும் மகிழ்ச்சி யடையலாம் .

தமிழ்நாட்டுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை.    நமக்கு நெறைய வேறு வேலைகள் இருக்கின்றன.   அரசியல் விளையாட்டுக்கே நேரம் போதவில்லை.

சிந்துவுக்கும் சாட்சி மாலிக்கிக்கும்  வாழ்த்துக்கள்.

 

நஞ்சூட்டி சாகடிக்கப் படும் மறுவாழ்வு மையங்களில் இருக்கும் விடுதலை புலிகள் ??!! இந்திய அரசு தலையிட வேண்டும்??!!

11600  விடுதலைப் புலிகள் போரின் முடிவில் சரண் அடைத்தார்கள்.    அவர்களை மறுவாழ்வு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது  சிங்கள அரசு.

அவர்களில் 104   பேர் தொடர்ச்சியாக புற்று நோய் தாக்கி உயிர் இழந்திருக்கிறார்கள்.

போலோனியம் என்ற மருந்தை செலுத்தி புற்று நோயை வரவழைத்து சாகடிக்க திட்டமிட்டு செயல்படுகிறது  இனவாத சிங்கள அரசு.

மிச்சமிருக்கும் புலிகளையும் மெல்ல மெல்ல கொன்று விடுவார்கள் என்ற அச்சம் வந்து விட்டது.     வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்ட மாட்டார்.

போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு  குறித்து

எந்த விதமான பேச்சு வார்த்தையும் ஆரம்பம் ஆக வில்லை. இன்னமும் மறுவாழ்வு சீரமைப்பு என்று  சொல்லிக் கொண்டே ராணுவத்தை விலக்காமல் கொடுங்கோல் ஆட்சி செய்து வருகிறது சிங்கள பேரினவாதம்.

இந்திய மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்காத இந்திய அரசு இலங்கை தமிழர்களின் உரிமைகளை எவ்வாறு மீட்டெடுக்கும் ?.

எதுவானாலும் ஒன்று பட்ட குரல் தமிழகத்தில் இருந்து எழ வேண்டும். அது மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளை தீர்க்கும்..

மத்திய அரசை தமிழர் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வைப்பதில்  எப்போது தமிழர் இயக்கங்கள்  வெற்றி பெருகின்றனவோ அன்றுதான் இறுதி வெற்றி கிடைக்கும்..

மோடி வந்தால் தீர்வு கிடைக்கும் என்று நம்பினோம்.  அறிகுறி தெரியவில்லையே ?

 

நீதிபதிகள் நியமனத்தில் மோதிக்கொள்ளும் உச்சநீதி மன்றமும் மத்திய அரசும் ???!!!

நீதிபதிகள் நியமனத்தில் தேசிய நீதித்துறை நியமனங்கள் கமிஷன் மூலம் கொண்டு வரப்பட்ட விதிமுறைகள் செல்லாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துவிட்டு தானே கொலிஜியம் என்ற ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு தேர்ந்தெடுத்த  75  உயர் நீதி மன்ற நீதிபதிகள் பட்டியலை மத்திய அரசின் ஒப்புதலுக்கு  அனுப்பி விட்டு   காத்திருக்கிறது .     எட்டு மாதங்களாக கிடப்பில் போட்டு விட்டது மத்திய அரசு.

கொலிஜியம் தேர்ந்தெடுக்கும் நபர்களை தாங்கள் மறுபரிசீலனை செய்யும் உரிமை வேண்டும் என்கிறது மத்திய அரசு.   கூடாது என்கிறது உச்சநீதிமன்றம்.

இந்த சண்டையில் 44.3 %  நீதிபதிகள் பதவிகள் காலியாக கிடக்கின்றன.

ஏற்கெனெவே செய்யப் பட்ட நியமனங்களில் நீதிபதிகளின் உறவுகள் நண்பர்கள் அதிகம் இடம் பெற்றது விமர்சனத்துக்கு ஆட்பட்டது.

வெளிப்படைத் தன்மை இல்லாத வகையில்தான் நீதிபதிகள் நியமிக்கப் படுகிறார்கள்.

கொலிஜியம் முறை பல தவறுகளுக்கு இடம் கொடுக்கிறது .    அதே சமயம் மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டிலும் கொண்டு வரக கூடாது.  வந்தால் அரசியல் நியமனங்கள் இடம்  பெறுவது தவிர்க்க முடியாது.

எனவே இரண்டிற்கும் பொதுவாக நியாயமான முறையில் அனத்து தரப்பினரும் பங்கு பெறும் ஒரு முறையை வகுத்து அதன் படி நீதிபதிகள் நியமனம் நடை பெற்றால்தான் நியாயம் கிடைக்கும்.

 

தமிழ்ச்செய்திகள் நிறுத்தம், நெய்வேலி சுரங்க பெயர் மாற்றம் – பா ஜ க வின் ஆதிக்க கோர முகத்தின் வெளிப்பாடுகள்??!!

தூர்தர்ஷனில் அனைத்து மாநில செய்திகள் வாசிப்பதை நிறுத்தப் போவதாக வந்திருக்கும் செய்தி ஒற்றுமைக்கு உலை வைப்பது என்பது தெரிந்தும் ஏன் செய்கிறார்கள். ?

இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் தூர்தர்ஷனில் செய்தி படித்தால் போதும் என்று மத்திய அரசு முடிவு செய்ய என்ன காரணம்?   மத்திய அரசு மாநில மொழிகளில் கருத்து பரிமாற்றம் செய்வதை குறைத்துக் கொள்ள விரும்புகிறது என்றுதானே பொருள் ?

மெல்ல மெல்ல அனைத்து இந்திய பயன்பாட்டில் மாநில மொழிகள் குறைக்கப் பட வேண்டும் என்றும் அதன் மூலம் இந்தியின் தேவை உணரப்பட்டு மாநில மக்கள் இந்தி மொழி  பயன்பாட்டுக்கு ஈர்க்கப் பட வேண்டும் என்பதும் தான் டெல்லியின் நோக்கம்.

பா ஜ க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சமஸ்கிருத மற்றும் இந்தியின் ஆதிக்கத்தில் ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறது.     அது இந்திய ஒற்றுமைக்கு உலை வைக்குமா என்பது  பற்றி அது கவலைப் படுவதாக  தெரியவில்லை.     அடக்கி ஆண்டவர்கள் அல்லவா?      இப்போதும் அடக்கி விடலாம் என்பதுவே அவர்களது எண்ணம.

அதேபோல் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் பெயரை இந்தியா லிமிடெட் என்று  சேர்த்திருக்கிறார் கள்.       ஏற்கனெவே மக்களிடன் இருந்து நிலம் கையகப் படுத்தும்போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை என்ற போராட்டம் நிலுவையில் உள்ளது.

நிலக்கரி எடுப்பது தமிழ் நாட்டில்  அதன் பலன் எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப் படுவதை நாம் பெரிதாக ஆட்செபிக்காத நிலையில் ஏன் இப்போது பெயர் மாற்றம்.?

இந்தியா என்பது இருந்தால்தான் நாளை அயல்நாட்டு  நிறுவனங்களை உள்ளே நுழைத்து பயன் பெற முடியும் என்ற திட்டம் உள்ளதா என்ற ஐயம் எழுவதை எப்படி தடுக்க முடியும். ?

மொத்தத்தில் பா ஜ க என்பது மாநிலங்கள் என்பன தனித்து எந்த அடையாளத்தையும் கொண்டிருக்கக் கூடாது தனி அதிகாரத்தையும் கொண்டிருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

அடக்கி ஆள முயற்சித்தவர்கள் வென்றதாக வரலாறே இல்லை என்பதை பா ஜ க உணரும் காலம் விரைவில் வரும்.

சட்டமன்றத்தில் காலில் விழுந்த அமைச்சர் துரைக்கண்ணு அங்கீகரித்த ஜெயலலிதா???!!! யாருக்கும் வெட்கமில்லையா???!!!

தமிழக சட்ட மன்றம் நடந்து வருகிறது.    மானியக் கோரிக்கைகள் மீது அமைச்சர்கள் பேசி வருகிறார்கள்.

முதல்வர் ஜெயலலிதாவை போற்றிப் புகழ்வது மட்டுமே பிரதான வேலையாக அமைச்சர்கள் செயல்படுவது வழக்க மாகிவிட்டது.

நேற்று முதல்வர் ஜெயலலிதா விதி 110 ன் கீழ் ஒரு அறிக்கையை படித்து விட்டு அமர்ந்த போது அமைச்சர்கள் காமராசும் செல்லூர்  ராசுவும் வாழ்த்தி  ஒலிகள எழுப்ப  அமைச்சர் துரைக்கன்னுவோ ஒரு படி மேலே போய் தங்கத்தாரகையே வருக வருகவே என்ற கட்சிப் பாடலைப் பாட உறுப்பினர்கள் மேஜையை தட்டி பின்னணி இசை எழுப்ப சட்ட மன்றமே ஜால்ரா

மன்றமானது. .

அப்போதுதான் அமைச்சர் துரைக்கண்ணு எழுந்து சென்ற ஜெயலலிதா அமர்ந்திருக்கும் இடம் சென்று அவரது காலில் விழுந்திருக்கிறார்.    அதை ஜெயலலிதாவும்  அங்கீகரித் திருக்கிறார். . இதை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு செய்தியாக வெளியிட்டிருக்கிறது.   (  Duraikkannu  then went to the chief minister’s seat in the assembly and fell at her feet which the CM acknowledged. )

சபாநாயகர் எதையும் கண்டு கொள்ள முடியாது.   எவரும் இதை பிரச்னை ஆக்கவும் இல்லை.

தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா வீட்டில் எவர் காலில் விழுந்தாலும் அது அவர்களது தனிப்பட்ட விருப்பம்.      ஜெயலலிதா  காலில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மனைவியோடு  விழுந்ததை பத்திரிகைகளில் வெளியிட்டது யார்?

அ தி மு க  ஒரு அடிமைகளின் கூடாரம் என்று ஜெயலலிதாவால் நீக்கப் பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறுகிறார்.

ஆமாம் நாங்கள் அடிமைகள் தான்  என்று ஒரு அமைச்சர் பெருமையுடன் கூறுகிறார்.

சட்டமன்றத்தில் இந்த இழிவை தமிழர்கள் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டுமா??!!

 

 

ஜக்கி வாசுதேவ் குறி வைக்கப்படுகிறாரா குற்றமிழைக்கிறாரா ??!!

உயர்சாதி அல்லாதவர்கள் ஆன்மிக உலகில் வெகு காலம் உயரத்தில் இருக்க முடியாது.

ஆதிக்கம் செலுத்தும் சில பல ஆண்டுகளுக்குபின் எப்படியாவது குறி வைக்கப் பட்டு வீழ்த்தப் ப டுவார்கள்.   அல்லது அவர்களே சூழ்ச்சிக்கு இரையாகி வீழ்ந்து விடுவார்கள்.

24 ஆண்டுகளாக ஜக்கி வாசுதேவ்வின் ஈஷா யோகா மையம் எந்த வித பிரச்னைக்கும் ஆளாகாமல் தப்பி பிழைத்து வந்தது.    சில சிறிய குற்றச்சாட்டுகளை சமாளித்து வந்தது மையம்.

ஆனால் லதா கீதா என்ற இரு  பெண்களின் பெற்றோர் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனுவில் அவர்கள் மூளைச் சலவை செய்யப் பட்டு அடைத்து வைக்கப் பட்டிருப்பதாக வும் தங்களை பார்க்கக் கூட அனுமதி வழங்க வில்லை என்றும் குற்றம்  சாட்டி ய பிறகு உயர்நீதி மன்றம் மாவட்ட நீதிபதியை அவர்களை பார்த்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு அவர்களும் விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

ஒருவர் மணமாகி விவாக ரத்து ஆனவர். மற்றவர் திருமணமாகா விட்டாலும்  34 மற்றும் 31  வயது ஆகி இருவரும்  பி டெக் படித்தவர் கள்.

சென்ற மாதம் தங்களுடன் தங்கி இருந்த பெற்றோர் யாரோ சொல்லி பொய் புகார் கொடுத்திருப்பதாக மகள்கள் இருவரும் பேட்டி கொடுக்கிறார்கள்.

எந்த  நீதிமன்றமும் சுய சிந்தனை உள்ள படித்த வயதானவர்களை அவர்களின் விருப்பத்துக்கு மாறாக எங்கும் அனுப்பி விட முடியாது.

அந்த வகையில்  அந்தப் பெண்கள் தங்கள் பெற்றோரை விட்டு விலகி  தாங்கள் விரும்பும் வகையில் பிரமச்சரியத்தை அனுட்டிக்கவோ தனியாக மையத்தில் வசிக்கவோ உரிமை

பெற்றவர்கள்.

ஆனால் இந்த வழக்கு ஈஷா மையத்தில் என்ன நடக்கிறது என்ற ஆர்வத்தை எல்லார மனதிலும் எழுப்பி விட்டது.        இதை வளர விடாமல் முடித்து வைக்க வேண்டிய கடமை மையத்தின் தலைவர் ஜக்கி வாசு தேவிற்கு நிச்சயம் உள்ளது.

பெற்றோரை ஒதுக்கி வைத்து திருமணம் சந்நியாசம் இரண்டுமே சரியா என்பதை இக்கால பிள்ளைகள் சிந்திக்க வேண்டும்.

ஆன்மிக மையம் நடத்துகி றவர்களும் பெற்றோரை ஒதுக்கி வைத்து ஆன்மிக விடுதலை தருவது தேவையா என்பதையும் விளக்க வேண்டும்.

மூன்றாவதாக இந்த குற்றச்சாட்டு சதியின் வெளிப்பாடு என்றால்  சதிகாரர்கள் அடையாளம் காட்டப் பட்டு தண்டிக்கப் பட வேண்டும்.

அரசுதான் இந்தக் கேள்விகளுக்குவிடைகளை சொல்ல வேண்டும்.

மூடநம்பிக்கை பில்லி, சூனிய ஒழிப்புச்சட்டம் இயற்ற வேண்டும் தமிழக அரசு ??!! மகாராஷ்ட்ர, கர்நாடக அரசுகளை தொடர்வோம் ??

திராவிட இயக்கம் நிலைபெற்று விட்ட தமிழகத்தில் மூடநம்பிக்கைகள் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட்டதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .

இந்தியாவிலேயே பீகார் ஜார்கண்ட் சத்தீஸ்கார் மாநிலங்களில்தான் பில்லி சூனிய ஒழிப்பு சட்டங்கள் இருந்தன.   ஆனால் அவைகள் வெற்றி பெற்றிருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய இயலாது.

ஆனால் மகாராஷ்டிரத்தில் நாத்திக சிந்தனையாளர் நரேந்திரா தபோல்கர் கொலை செய்யப்பட்ட பின்பு அந்த மாநில அரசு மகராஷ்டிரா பில்லிசூனியம் நரபலி தடுப்பு மற்றும் ஒழிப்புச்சட்டம் 2013  ( Maharaashtra Prevention and Eradication of Human Sacrifice and other Inhuman Evil and Aghori Practices and Black Magic Act 2013 )இயற்றியது.    சிவசேனாவும் பா ஜ க வும் கொண்டுவந்த பல திருத்தங்கள் ஏற்றுக்கொள்ள பட்டன.

அதே போல் கர்நாடகாவிலும் குல்புர்கி என்ற புகழ் பெற்ற நாத்திக சிந்தனையாளர் கொலை செய்யப் பட்ட பிறகு கர்நாடகா பில்லிசூனியம் நரபலி தடுப்பு மற்றும் ஒழிப்புச்சட்டம் தாக்கலாகி விவாதத்திற்குப் பின் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.    சில பல மாற்றங்களுடன் விரைவில் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் அதிகம்.

இந்தியா முழுவதும் நிறைவேற்றபட  வேண்டிய சட்டம் இது.

உடன்கட்டை  ஏறுவதையே சட்டம் கொண்டு வந்துதான் ஒழிக்க வேண்டி வந்தது .    இன்னமும் அதை போற்றுபவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

ஜோதிடத்தை பயிற்றுவிக்க பல்கலைகழக மானிய கமிஷன் நிதி ஒதுக்கியதை தடுக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டதே.

மத நம்பிக்கைகளை பாதுகாக்கும் இந்திய தண்டணை சட்டம் பிரிவு  295 A  வுக்கும் விஞ்ஞான  பார்வையை வளர்க்க வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் பிரிவு 51 A(h)  க்கும் உள்ள முரண்பாடு நீக்கப்  பட வேண்டும்.

எந்தெந்த செயல்கள் மூடநம்பிக்கைக்கு உட்பட்டவை தடுக்கப் பட வேண்டியவை என்பதை ஆராய்ந்து இறுதி செய்ய அனைத்து தரப்பினரையும் கொண்ட பரிந்துரைக்குழு ஒன்றை தமிழக அரசு உடனே அமைக்க வேண்டும்.

ஜெயலலிதா இந்துத்துவ தீவிர விசுவாசி.     ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் தலைவியாக கோலோச்சி வருகிறார்.   பக்திக்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளை அறியாதவரல்ல அவர் .

கலைஞர் சொன்னால் அது உள்நோக்கம் கொண்டதாக விமர்சிக்கப்படலாம் .     எனவே இந்த சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வருவது வரவேற்கப்படும்.

நரேந்திர தபோல்கர் போல் குல்பர்கி போல் தமிழ்நாட்டில் யாரும்  பலியாக  அனுமதிக்கக்  கூடாது.

வருமுன் காப்போம்??!!