Home தமிழக அரசியல் வடவர் பசப்பு பற்றி அன்றே சொன்னார் அண்ணா??!!

வடவர் பசப்பு பற்றி அன்றே சொன்னார் அண்ணா??!!

வடவர் பசப்பு பற்றி அன்றே சொன்னார் அண்ணா??!!
anna-dmk

தமிழ் மொழி உலகத்தின் மிக தொன்மையான மொழி! ஐநாவில் பேசும்போது கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழர் கொள்கையை பறை சாற்றியது! தமிழ் நாட்டுக்கு வந்தபோது சீன அதிபருடன் தோன்றும்போது வேட்டி சட்டையில் மிளிர்ந்தது! அவருக்கு தமிழிலேயே வரவேற்பு சொன்னது! நமது பிரதமர் தமிழின் மீது கொண்டிருக்கும் நேசத்துக்கு தமிழர் அவரைக் கொண்டாட வேண்டாமா என்று இங்கே ஒரு பொன்னார் பொங்கியது!

ஆகா! அடடா! நமது பிரதமர் தமிழின் மீதும் தமிழர் மீதும் அத்தனை பற்றா கொண்டிருக்கிறார் என்று சிலரின் மனம் சலனப்படும் அளவு பிரச்சாரம் செய்யப் படுகிறது.

19/06/1955ல் அண்ணா தம்பிக்கு எழுதிய  கடிதத்தில் ‘மானே! தேனே! சொன்னவர் பற்றி வடவர் பசப்பு’ என எழுதியதை பேராசிரியர் அ ராமசாமி நினைவூட்டுகிறார்.

அண்ணா சொல்கிறார்;

“இப்போது  பாரத நாட்டியம்  கருநாடக சங்கீதம், கதகளி, திராவிட மொழி, திராவிட சிற்பம் இவைகளை இன்னும் பதம் கெடாமல் பாதுகாத்திடும் வித்தகர்களின் திறமை, புலமை ஆகியவற்றை வடநாட்டவர் பாராட்டிப் பேசும்போது எனக்குத் தம்பி ரோம்நாட்டின் மாளிகையிலே கண்ணீரையும் கவிதையையும் சேர்த்து வடித்துக் கொடுத்த கிரேக்க அடிமையின் கவனம்தான் வருகிறது.

மிகப் பழங்காலம் முதற்கொண்டே வளமாக இருந்த திராவிடம் என்று அவர்கள் புகழ்கிறார்கள்; மிக உயர்ந்த மொழி திராவிடத்தில் இருக்கிறது என்று அவர்கள் பாராட்டுகிறார்கள்; பாராட்டிவிட்டு எனினும் இந்தி படித்தால்தான் வாழ்வு உங்களுக்கு என்று துணிந்து கூறுகிறார்கள்.

முறையை மாற்றினால் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் செய்துவிடலாம் என்ற நினைப்பில் வந்த வண்ணம் இருக்கிறார்கள் வட நாட்டுத் தலைவர்கள்.

அடிக்கடி செல்வோம்; அன்பாகப் பேசுவோம்; புகழ் பாடுவோம்; புன்னகைக் காட்டுவோம் அவர்கள் ஏமாந்து போவார்கள்; எடுபிடி ஆகி விடுவார்கள் என்று எண்ணுகிறார்கள்.

புகழுரை பொழிவதன் மூலம் மயங்கி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் வடநாட்டுத் தலைவர்களுக்கு நாம் ஏமாளிகள் அல்ல என்பதை  எடுத்துக் காட்ட வேண்டும். வழுக்கி விழுந்த வனிதாமணிகள் வந்தார்க்கு விருந்தளிக்கட்டும். தாயகத்தின் தளை ஓடித்திட  நாம் பணியாற்றுவோம்.”

இன்று அண்ணா இல்லையே என்ற ஏக்கம் பிறக்கிறதல்லவா ?

இருந்தாலும் அவர் ஊட்டிய அறிவாயுதம் இருக்கிறதே !

ஆறுதல் அடைவோம்! தெளிவு பெறுவோம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here