சட்ட மன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்தது சட்ட விரோதம் என திமுக சட்ட மன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாதாம்.
சட்டப் படியே நீதிமன்றம் தலையிட முடியாத ஒன்றாகவே இருக்கட்டும்.
அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அக்கிரமத்தை சட்ட பூர்வமாக்குவதா?
குற்றவாளி எண் ஒன்று ஜெயலலிதா. இரண்டு முதல் நான்கு குற்றவாளிகள் சிறையில். முதல் குற்றவாளி இறந்துவிட்டதால் அவருக்கு மணி மண்டபம் கட்டுவோம், சட்ட மன்றத்தில் படத்தை திறப்போம் என்று அதிகாரம் இருக்கிற மமதையில் ஆட்டம் போடுகிறவர்கள் உண்மையில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று மார் தட்டுகிறவர்கள்..
இதை நாடு ஏற்றுக் கொள்கிறதா?
உச்ச நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து சசிகலா சீராய்வு மனு போட்டிருக்கிறார்.
அதில் அனைவரும் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பு வந்தால் தாராளமாக எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்.
எதை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை என்றால் உயிருடன் இருப்பதால் சசிகலா வும் மற்றவர்களும் சிறையில் , இறந்ததால் ஜெயலலிதா அரசால் கொண்டாடப் பட வேண்டியவர் என்ற நிலைப்பாட்டைத்தான்.
இது அநீதியின் காலம்.